search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vishnu Statue"

    வந்தவாசியில் இருந்து புறப்பட்ட பெருமாள் சிலை கடந்த 6 மாதங்களுக்கு பிறகு இன்று கர்நாடக எல்லை பகுதிக்கு சென்றடைந்தது.
    ஓசூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே கெரகோட்டையில் செதுக்கப்பட்ட 350 டன் எடையுள்ள பிரமாண்ட கோதண்டராமர் சிலை ஓசூர் வழியாக கர்நாடக மாநிலம் ஈஜிபுராவிற்கு கொண்டு செல்லப்படுகிறது.

    இந்த பெருமாள் சிலை திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை, ஊத்தங்கரை, மத்தூர், போச்சம்பள்ளி ஆகிய ஊர்கள் வழியாக கிருஷ்ணகிரியை அடைந்தது.

    இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பேரண்டப்பள்ளிக்கு வந்தது. அந்த பகுதியில் ஓசூர்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே ஓடும் தென்பெண்ணையாற்றை பெருமாள் சிலை கடந்து செல்லமுடியாததால் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டது.

    பெருமாள் சிலை ஆற்றை கடந்து செல்வதற்காக அந்த பகுதியில் தற்காலிகமாக மண்சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்றது.

    இந்த நிலையில் கடந்த வாரம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்த மழையால் தென்பெண்ணையாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் மண்சாலை அமைக்கும் பணி தடைப்பட்டது.

    கெலவரப்பள்ளி அணையில் நீர்வரத்து குறைந்ததும், மீண்டும் மண்சாலை அமைக்கும் பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. நேற்று மண் சாலை அமைத்து ஆற்றில் இருந்து நீர்வரத்து குழாய் மூலம் செல்ல ஜே.சி.பி. எந்திரம் உதவியுடன் 4 ராட்சத குழாய்கள் பொருத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் மண்சாலை அமைக்கப்பட்டது. இரவு பேரண்டப்பள்ளியில் இருந்து பெருமாள் சிலை புறப்பட்டு மண்சாலையை கடந்து சென்றது.

    கடந்த 13 நாட்களுக்கு பிறகு மண்சாலை அமைக்கப்பட்டு பேரண்டபள்ளியில் இருந்து புறப்பட்ட பெருமாள் சிலை இன்று காலை ஓசூர் நகர பகுதி வழியாக வந்து ஓசூர் பஸ் நிலையம் அருகே வந்தது.

    இதைத்தொடர்ந்து ஓசூரை அடுத்த அத்திப்பள்ளி வழியாக தமிழக-கர்நாடக எல்லைப்பகுதியில் 350 டன் எடை கொண்ட பெருமாள் சிலை இன்று காலை 9 மணியளவில் சென்றடைந்தது.

    லாரியின் மூலம் 350 டன் எடை கொண்ட பெருமாள் சிலை திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து பெங்களூருவுக்கு புறப்பட்டு சென்றது. கடந்த 6 மாத காலமாக அந்த பெருமாள் சிலை பெங்களூருவுக்கு செல்வதற்குள் லாரியின் டயர்கள் பலமுறை பஞ்சராகியும், வண்டியின் உதிரிபாகங்கள் பழுதாகியும் தடைகள் ஏற்பட்டது.

    இதேபோன்று வழிநெடுக செல்வதற்கான உரிய பாதைகள் இல்லாததால் சில இடங்களில் வழித்தடத்தில் உள்ள வீடுகளின் மேற்கூரைகள் அகற்றப்பட்டும், சில இடங்களில் தற்காலிக பாலங்கள் அமைக்கப்பட்டும் வழித்தடம் ஏற்படுத்தப்பட்டு சிலை ஓசூர் அருகே பேரண்ட பள்ளி வந்ததது. அங்கு தென்பெண்ணையாற்றை கடக்க முடியாமல் மண் சாலை அமைப்பதற்கு கடந்த 13 நாட்களாக சிலை அங்கேயே நிறுத்தி வைத்து வழிதடங்கள் ஏற்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு பிறகு இன்று காலை தமிழக-கர்நாடக எல்லைக்குள் சென்று அடைந்தது. அப்போது வழிநெடுக பெருமாள் சிலையை பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
    அம்மாபாளையத்தில் இருந்து பெருமாள் சிலை புறப்படும்போது திடீரென 15 டயர்கள் பஞ்சரானது. இதனால் சிலையை பெங்களூரு கொண்டு செல்வதில் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது. #Vishnustatue
    செங்கம்:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கொரக்கோட்டையில் இருந்து ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பெருமாள் சிலை பெங்களூஐரு ஈஜிபுரா எனும் இடத்தில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. 64 அடி உயரம், 24 அடி அகலம் கொண்ட முழுமையாக செதுக்கி முடிக்கப்பட்டதாக பிரமாண்ட பெருமாள் சிலை 240 டயர்கள் கொண்ட ராட்சத லாரியில் பெங்களூரு கொண்டு செல்லப்படுகிறது.

    கொரக்கோட்டையில் இருந்து கடந்த மாதம் 7-ந்தேதி சிலையின் பயணம் தொடங்கியது. பல்வேறு இடையூறுகளுக்கு பிறகு திருவண்ணாமலை வந்த பெருமாள் சிலை நேற்று முன்தினம கிரிவலப் பாதையில் இருந்து திண்டிவனம், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக செங்கம் நோக்கி சென்றது.

    இரவு 7 மணியளவில் செங்கம் அருகே உள்ள அம்மாபாளையம் கிராமத்தில் சிலை வந்தடைந்தது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட பெருமாள் சிலையை சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    இந்நிலையில் நேற்று அம்மாபாளையத்தில் இருந்து சிலை புறப்படுவதற்கான ஏற்பாடுகள் நடந்தது.

    அப்போது லாரியில் பொருத்தப்பட்டுள்ள 240 டயர்களில் 15 டயர்கள் திடீரென பஞ்சரானது. இதற்கான மாற்று டயர்கள் அகமதாபாத்தில் இருந்து சென்னை வந்து அங்கிருந்து எடுத்துவர வேண்டி உள்ளது. எனவே இந்த டயர்கள் இன்று அம்மாபாளையம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றை லாரியில் பொருத்திய பிறகுதான் மீண்டும் சிலை பயணம் தொடரும்.

    இதையடுத்து இந்த சிலை கோணான்குட்டை கேட், கரியமங்கலம், கொட்டக்குளம், மண்மலை கிராமங்கள் வழியாக செங்கம் செல்ல வேண்டி உள்ளது.

    ஏற்கனவே வந்தவாசியில் இருந்து பெருமாள் சிலையுடன் புறப்பட்ட லாரியின் டயர்கள், திருவண்ணாமலை வருவதற்குள் பல்வேறு இடங்களில் பஞ்சரானது.

    தற்போது அம்மாபாளையத்தில் இருந்து செங்கம் இடையே உள்ள 18 கி.மீட்டர் சாலையானது குண்டும், குழியுமாகவும், மண் சாலையாகவும் உள்ளது. 3 இடங்களில் வேகத்தடை உள்ளது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த சாலையை அதிகாரிகள் பார்வையிட்டனர். ஆனால் சாலையை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பெருமாள் சிலை இந்த 18 கி.மீ தூரத்தை கடந்து செல்வது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தின் எல்லையான ஆனந்தவாடி கிராமம் வரை 30 கி.மீ தூரம், சாலை சேதமடைந்துள்ள நிலையில் உள்ளது. மேலும் 3 இடங்களில் பாலம் உள்ளது.

    இதனால் பெருமாள் சிலை திருவண்ணாமலை மாவட்டத்தின் எல்லையை கடந்து செல்லவே பல நாட்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டிய நிலை குறித்து சிலை கொண்டு செல்லும் குழுவினர் ஆலோசித்து வருகின்றனர். #Vishnustatue



    திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சுற்றி சென்ற பிரமாண்ட பெருமாள் சிலையை பார்க்க குவிந்த பொதுமக்கள் பக்தியில் பரவசமடைந்தனர்.
    திருவண்ணாமலை:

    பெங்களூரு ஈஜிபுரம் கோதண்டராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகில் உள்ள அசுரக்கோட்டை கிராமத்தில் 108 அடி உயரமும், 25 அடி அகலமும் கொண்ட பிரமாண்ட விஸ்வரூப கோதண்டராமர் சிலை வடிவமைக்கப்பட்டது. அந்த சிலை 240 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில் ஏற்றப்பட்டு பெங்களூருவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    பல்வேறு கிராமங்கள் வழியாக மக்களுக்கு அருள்பாலித்தவாறே லாரியில் சிலை பயணித்து வருகிறது. நேற்று முன்தினம் திருவண்ணாமலை- அவலூர்பேட்டை சாலையில் உள்ள புறவழிச்சாலை சந்திப்பு அருகே வடஆண்டாப்பட்டு கிராம எல்லையில் லாரி நிறுத்தப்பட்டிருந்தது.

    நேற்று மீண்டும் லாரி சிலையுடன் தனது பயணத்தை தொடர்ந்தது. இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சாலையின் நடுவே இருந்த சென்டர் மீடியன்கள் அகற்றப்பட்டன.

    சிலை கொண்டு செல்லப்படும் வழித்தடத்தில் உள்ள ரெயில்வே கேட் பெரியார் சிலை ஆகிய இடங்களில் சிக்கல் ஏற்படும் என்று போலீசார் கருதினர். இதனை தடுக்க அந்த இடங்களில் இருந்த வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. சென்டர் மீடியன் அகற்றப்பட்டது.

    ரெயில்வே கேட் அருகே வரும்போது சரக்கு ரெயிலுக்காக ரெயில்வே கேட் மூடப்பட்டது. இதனால் சிறிது நேரம் சிலை அங்கேயே நின்றது. கேட் மூடப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரெயில் சென்று சுமார் ½ மணிநேரம் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை. பின்னர் லாரி அங்கிருந்து மீண்டும் புறப்பட்டது. பெரியார் சிலை அருகே எளிதாக லாரி திரும்பியது.

    அதைத்தொடர்ந்து மத்தளாங்குளத் தெரு வழியாக புறப்பட்ட லாரி திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகே உள்ள ரவுண்டானா பகுதி வழியாக கிரிவலப்பாதையில் வந்தது. அப்போது அங்கிருந்த சென்டர்மீடியன் இடையூறாக இருந்ததால் அவை 2 பொக்லைன் எந்திரங்கள் மூலம் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது.

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிலையின் பின்னாலே ஊர்வலமாக வந்து வழிபட்டனர். பலர் காணிக்கைகளை செலுத்தினர். சிலர் பூக்கள், மாலைகள் வாங்கி சிலை மீது வீசினர். வழிநெடுகிலும் பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் சிலையை தொட்டு வணங்கினர். பலர் வீடுகள், மாடிகளில் இருந்து பார்த்து வழிபட்டனர். தங்களது செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    இதையடுத்து அங்கிருந்து கிளம்பிய போது சிலமீட்டர் தூரத்தில் லாரி சிக்கியது. மின்கம்பங்கள் இருந்ததாலும், மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததாலும் லாரி உடனடியாக செல்ல முடியவில்லை. பின்னர் அருகில் இருந்த சிக்னல் கம்பம் அகற்றப்பட்டது.

    அதைத்தொடர்ந்து சுமார் 3 மணிநேரம் கழித்து மீண்டும் லாரி புறப்பட்டது. போளூர் சாலை வழியாக அண்ணா நுழைவுவாயில் அருகே வந்து கிரிவலப்பாதை திருநேர்அண்ணாமலை கோவிலை கடந்து சென்றது.

    நிருதிலிங்கம் கோவில் அருகே சென்றபோது ஒரு புளியமரம் இடையூறாக இருந்தது. இதையடுத்து மரம் வெட்டி அகற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து சென்ற லாரி கிரிவலப்பாதை செங்கம் சாலை அருகே நிறுத்தப்பட்டது.

    கிரிவலப்பாதையில் சுமார் 10 கி.மீட்டர் தூரம் பெருமாள் சிலை பயணித்தது. சிலையை பார்க்க குவிந்த பொதுமக்கள் பக்தியில் பரவசமடைந்தனர். அந்தியந்தல், கோலாபாடி, கண்ணக்குருக்கை வழியாக செங்கம் செல்கிறது.


    வந்தவாசி அருகே 300 டன் விஷ்ணு சிலை பெங்களூர் கொண்டு செல்வதற்காக 240 டயர்கள் கொண்ட கார்கோ லாரிகள் மூலம் ஏற்பாடு செய்துள்ளனர்.
    வந்தவாசி:

    கர்நாடக மாநிலம், பெங்களூரு தெற்கு ஈஜிபுரா பகுதியில் ஸ்ரீகோதண்டராம சாமி கோவில் உள்ளது.

    சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தக் கோவிலில் மூலவர் ஸ்ரீகோதண்டராம சாமி, வீர ஆஞ்சநேயர், விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, வராகர், அய்யப்பன், அஷ்டலட்சுமி, தட்சணாமூர்த்தி, நவக்கிரகம் உள்ளிட்ட சந்நிதிகள் உள்ளன.

    இந்தக் கோவிலில் ஒரே கல்லினாலான சுமார் 64 அடி உயர, 11 முகங்கள் மற்றும் 22 கைகள் கொண்ட ஸ்ரீவிஸ்வரூப கோதண்டராம சுவாமி சிலை செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும், சாமி சிலை, ஆதிசே‌ஷன் சிலை (7 தலை பாம்பு) மற்றும் பீடத்துடன் சேர்த்து மொத்தம் 108 அடி உயரத்தில் அமைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

    இதற்கான கல் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்ட கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள பாறைக் குன்றில் இருப்பது செயற்கைக்கோள் மூலம் கண்டறியப்பட்டது.

    இதையடுத்து மத்திய, மாநில அரசுகளின் அனுமதியுடன் கோவில் அறக்கட்டளை சார்பில், கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள பாறைக்குன்றிலிருந்து பாறையை தோண்டி, வெட்டி எடுக்கும் பணி கடந்த 2014ஆம் ஆண்டு தொடங்கியது.

    சாமி சிலை செய்வதற்காக சுமார் 64 அடி நீளம், 26 அடி அகலம், 7 அடி உயரம் கொண்ட கல்லும், ஆதிசே‌ஷன் சிலை (7 தலை பாம்பு) செய்வதற்காக சுமார் 24 அடி நீளம், 30 அடி அகலம், 12 அடி உயரம் கொண்ட கல்லும் நவீன இயந்திரங்கள் மூலம் தோண்டி வெட்டி எடுக்கப்பட்டது.

    கடந்த 2016ம் ஆண்டு சாமி சிலை செய்வதற்காக தோண்டி வெட்டி எடுக்கப்பட்ட கல்லில் மட்டும் பெருமாளின் நடுமுகம், சங்கு, சக்கரம், கைகள் ஆகியவை செதுக்கப்பட்டன.

    மீதமுள்ள முகங்கள், கைகளை செதுக்கும் பணிகள் கற்பாறைகள் பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டவுடன் தொடங்கும் என தெரிவித்தனர்.

    இந்த 2 கற்களும் இரண்டு தனித்தனி கார்கோ லாரிகளில் எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்தனர். 160 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில் சாமி சிலை செய்வதற்கான கல்லும், 96 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில் ஆதிசே‌ஷன் சிலை செய்வதற்கான கல்லும் எடுத்துச் செல்ல பணிகள் நடந்தது.

    சாமி சிலை செய்வதற்கான கல் சுமார் 380 டன் எடை கொண்டதாக இருந்தது. இதனால் சாமி சிலையை லாரியில் ஏற்ற முடியவில்லை.

    இதனையடுத்து சாமி சிலையின் எடையை குறைக்க முடிவு செய்தனர். கடந்த 2 ஆண்டுகளாக இந்த பணிகள் நடந்தது. சாமி சிலையின் சுற்று பகுதியில் 80 டன் எடை குறைக்கப்பட்டது. தற்போது சிலை பணிகள் முழுவதும் நிறைவடைந்தது.

    சாமி சிலை லாரியில் ஏற்றப்பட்ட காட்சி.

    இதனை 240 டயர்கள் கொண்ட கார்கோ லாரிகள் மூலம் கொண்டு செல்ல ஏற்பாடு செய்துள்ளனர். நேற்று சாமி சிலை கிரேன்கள் உதவியுடன் லாரியில் ஏற்றப்பட்டது. வந்தவாசி பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக ஈரப்பதம் காணப்படுகிறது.

    இதனால் கொரக்கோட்டை மலை பகுதியில் இருந்து சாலைக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. லாரி செல்ல வழி ஏற்படுத்தி வருகின்றனர். பிரமாண்ட சிலை லாரியில் ஏற்றப்பட்டதை அப்பகுதி பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர்.
    ×