search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Baby care"

    • குழந்தைகளின் அழுகைக்கு பின்னால் பல காரணங்கள் உள்ளன.
    • குழந்தைகளுக்கு வாய்வு, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

    பொதுவாகவே குழந்தைகள் அழுவதற்கு முதன்மையான காரணமாக கூறப்படுவது பசி தான். இது பெரும்பாலும் சரியாக இருந்தாலும் எல்லா சந்தர்ப்பங்களிலும் இது உண்மையாக இருக்காது. குழந்தைகள் அழுவதற்கு உளவில் ரீதியாக பல்வேறு காரணங்கள் இருக்கின்றது.

    பசிக்கு அடுத்தபடியாக குழந்தைகள் பெற்றோரை அழைக்கவே அதிகமான சந்தர்ப்பங்களில் அழுகின்றன. குழந்தைகளால் தனக்கு என்ன பிரச்சினை என்பதை சொல்ல முடியாது. குழந்தைகளுக்கு ஏற்படும் எல்லா அசௌகரியங்களுக்கும் ஒரே விளக்கம் அழுகையாக தான் இருக்கும். இதனை சாதாரணமாக நாம் புரிந்துக்கொள்ள வேண்டும் என்றால் குழந்தைகளின் உளவியல் பற்றிய அடிப்படை அம்சங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். பொதுவாகவே குழந்தைகள் அழுவதற்கு என்னென்ன காரணங்கள் இருக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

    குழந்தைகளின் அழுகைக்கு பின்னால் பல காரணங்கள் இருப்பதாகவும் குழந்தைகளை சரியான முறையில் பராமரிக்க குழந்தைகளின் உளவியல் குறித்து பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டியது அவசியம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

    பொதுவாக பசியை தவிர்த்து குழந்தைகள் அழுவதற்கு பல நேரங்களில் குழந்தைகள் இறுக்கமான ஆடைகளை அணிந்திருப்பதால் அழ ஆரம்பிக்கிறார்கள். அதுமட்டுமன்றி, அவர்கள் இதனை சங்கடமாகவும் உணர்கிறார்கள். எனவே, குழந்தைகளுக்கு எப்போதுமே தளர்வான பருத்தி ஆடைகளை பயன்படுத்துவது அவர்களை சவுகரியமாக வைத்திருக்க துணைப்புரியும்.

    தாய் எதை சாப்பிட்டாலும், குழந்தைக்கு பால் கொடுப்பதன் மூலம் அது குழந்தைகளின் ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கிறது.

    மேலும் வறுத்த மற்றும் காரமான உணவுகளை தாய் அதிகமாக சாப்பிட்டால் அதன் தாக்கம் குழந்தைகளை பெரிதும் பாதிக்கும். இதனால் தான் குழந்தைகள் அழ தொடங்குகிறார்கள். உதாரணமாக, வயிற்று வலி அல்லது வாயு பிரச்சனை போன்றவை ஏற்படும்.

    பல நேரங்களில், தெரிந்தோ தெரியாமலோ, தாய் குழந்தைக்கு அதிக பால் கொடுப்பதுண்டு. அதேசமயம், சில சமயங்களில் அவசர அவசரமாக குழந்தைகளுக்கு உணவளிப்பதும் அதிகப்படியான உணவுக்கு வழிவகுக்கும். இதன் காரணமாக குழந்தைகளுக்கு வாய்வு, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதனால் குழந்தைகள் அழுவதுண்டு.

    மேலும் சிறு குழந்தைகளின் எலும்புகள் மிகவும் மென்மையானதாக இருக்கும். குழந்தைகளை பெற்றோர்கள் கையாளும் போது ஏற்படும் கவனக்குறைவால் அவர்களின் எலும்புகள் பாதிப்படையும் அபாயம் உள்ளது.

    ஒரு குழந்தையின் எலும்பு அதன் இடத்தில் இருந்து நழுவினால், குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருக்கும். அதனால் குழந்தைகளை கையாளும் போது கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.

    ஒரு குழந்தை தினமும் மாலையில் ஒரே நேரத்தில் அழுதால், அவர் கோலிக் நோயால் பாதிக்கப் பட்டிருக்கலாம். இந்த நோயினால் குழந்தைகளுக்கு வயிற்றுப் பிடிப்பு மற்றும் வலியை அனுபவிக்கிறார்கள்.

    அதனால் குழந்தைகள் தொடர்ச்சியாக அழுது கொண்டிருக் கின்றார்கள். பெரும்பாலும் குழந்தைகள் மூன்று மாதங்களுக்கு இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோயில், குழந்தைகள் பல மணி நேரம் அழுவார்கள். அதனை தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.

    • ஒருபுறம் வெயில் என்றால், மறுபுறம் வியர்க்குரு.
    • மக்கள் முடிந்த வரை வீட்டில் இருப்பது தான் நல்லது.

    பத்து நிமிடங்களுக்கு மேல் வெயிலில் நின்றாலே மழையில் நனைந்ததுபோல வதைக்கிறது வியர்வை. கொட்டும் வியர்வை, ஆடைகளையும் தொப்பலாக நனைத்துவிடுகிறது. வெயிலின் உக்கிரம் ஒவ்வொரு வருடமும் அதிகமாகிக்கொண்டே போய் தாங்கிக்கொள்ளவே முடியாததாக ஆகிவிடுகிறது. ஒருபுறம் வெயில் என்றால், மறுபுறம் வியர்க்குரு. தட்பவெப்பநிலைக்கு ஏற்ப உணவு முறைகள், நடைமுறை பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் வியர்க்குருவை எதிர்கொள்ளலாம்.

    தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். கோடைகாலமும் ஆரம்பிக்க உள்ளதால் மக்கள் முடிந்த வரை வீட்டில் இருப்பது தான் நல்லது. இந்நிலையில் வெப்பத்தால் வரும் வியர்க்குருவை தடுப்பதற்கு அனைவரும் பின்பற்ற வேண்டிய வைத்திய முறைகளை பார்க்கலாம்.

     வியர்க்குரு

    உடலின் வெப்பநிலையைப் பராமரிப்பவை வியர்வைச் சுரப்பிகள். உடல் வெப்பம் அதிகமாகும்போது, வியர்வைச் சுரப்பிகள் தேவைக்கு அதிகமாக உடலில் தேங்கும் உப்பு, கழிவுகளை வியர்வையாக வெளியேற்றும். இந்த வியர்வைச் சுரப்பிகளின் வாயிலில் தூசி, அழுக்கு படிந்து அடைத்துக்கொள்வதால் தோன்றுகிறது வியர்க்குரு.

    எப்படி தடுப்பது...?

    * உடலுக்கு குளுமை அளிக்கும் சந்தனத்தை கொஞ்சம் மஞ்சளும் தண்ணீருக்கு பதில் ரோஸ் வாட்டரும் கலந்து உடம்பு, கழுத்து என தடவினால் வியர்க்குரு வருவதை தடுக்கலாம்.

    * முல்தானி மெட்டியையும் ரோஸ் வாட்டரில் கலந்து வியர்குருவை விரட்ட பயன்படுத்தலாம்.

    * பருத்தித் துணியை குளிர்ந்த நீரில் நனைத்து உடலில் போர்த்தி ஈரம் காயும் வரை வைத்திருப்பதும் வியர்க்குரு வருவதை தடுக்கும்.

    * அறுகம்புல், மஞ்சள் இரண்டையும் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்துக் குளிக்கலாம். இது 'அறுகன் தைலம்', 'தூர்வாரி தைலம்' என்ற பெயர்களில் நாட்டு மருந்துக் கடைகளிலும், அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கிறது.

    * மஞ்சள், சந்தனம், வேப்பிலை மூன்றையும் சம அளவு எடுத்து, மைபோல் அரைக்கவும். வியர்க்குரு உள்ள இடங்களில் தடவி ஒரு மணி நேரத்துக்குப் பிறகு குளிக்கவும்.

    * பாசிப் பயறு, கடலைப்பருப்பு, வெந்தயம் கலந்த பொடியை தேய்த்துக் குளிக்கவும்.

    * கற்றாழையின் உள் பகுதியை எடுத்து சோப்புபோல தேய்த்துக் குளித்தால், வியர்வை பிரச்னை நீங்கும்.

    • அசைவ உணவுகளில் புரதங்கள், தாதுக்கள் அதிகமாக இருக்கிறது.
    • மீன் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்ற உணவு என்றே சொல்லலாம்.

    டாக்டர்கள் குழந்தைகளுக்கு அசைவ உணவை சாப்பிட கொடுக்கலாம், என்று கூறியவுடன் பெற்றோர்கள் கேட்கும் முதல் கேள்வி அசைவத்தில் எதை சாப்பிட கொடுப்பது.

    மீன், சிக்கன், மட்டன் இந்த மூன்றிலுமே நிறைய புரதங்கள், தாதுக்கள் வைட்டமின்கள் அதிகமாக இருக்கிறது. அதிலும், வளரும் குழந்தைகளுக்கு தேவையான ஹீமோகுளோபின், போஷாக்கு, முழுமையான புரதம் என்ற 9 முக்கியமான அமினோ அமிலங்கள் சிக்கன், மீன், மட்டன் மூன்றிலும் இருக்கிறது. அப்படியென்றால் குழந்தைக்கு சாப்பிட எதை கொடுக்கலாம் என்ற சந்தேகம் எல்லோருக்கும் வந்திருக்கும். அதை பற்றி விரிவாக பார்ப்போம்.

    மீன்

    மீன் உணவுகள், வளர்கிற குழந்தைகளுக்கு மிகவும் ஏற்ற உணவு என்றே சொல்லலாம். மீனில் அதிகமான புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் இருக்கிறது. முக்கியமாக மீனில், ஒமேகா 3 இருக்கிறது.

    ஒமேகா 3 இதயத்திற்கு மிகவும் நல்லது, கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவுகிறது. மீன் உணவுகள் குழந்தையின் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. மீனில் இருக்கின்ற ஒமேகா 3, வைட்டமின் கே குழந்தைகளின் மூளை வளர்சிக்கும், கண்ணிற்கும் மிகவும் நல்லது.

    குழந்தைகளின் கவனிக்கும் திறனும் அதிகரிக்கும். மன அழுத்தத்தை குறைப்பதற்கும் மீன் மிகவும் நல்லது. எலும்பு வலுபெறவும், மூட்டுகளில் வலுப்பெறவும், புற்றுநோயில் இருந்து பாதுகாக்கவும் மீன் உதவுகிறது. வாரத்துக்கு 3 முறை மீன் சாப்பிட்டு வந்தால் மார்பக புற்றுநோய், தொண்டை புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் எல்லாம் வராமல் பாதுகாக்கிறது.

    சிக்கன்

    சிக்கனில் அதிகப்படியான புரதங்கள் இருக்கிறது. குழந்தைகள் வலுவாக மற்றும் உயரமாக வளருவதற்கும் தேவையான அமினோ அமிலங்கள் சிக்கனில் இருக்கிறது. வளரும் குழந்தைகளுக்கு கொஞ்சம் சிக்கன் சாப்பிட்டாலே வயிறு நிறைந்து விடும். இதனால் தான் சிக்கன் சாப்பிட பிறகு குழந்தைகள் நொறுக்குத் தீனிகளை சாப்பிடமாட்டார்கள்.

    மட்டன்

    மட்டன் குறைந்த அளவு சாப்பிடுவது நல்லது. ஏனென்றால், மட்டனில் அதிகபடியான நிறைவுற்ற கொழுப்பு இருக்கிறது. இப்பொழுது இல்லை என்றாலும் பிற்காலத்தில் உடல்நல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    அசைவ உணவுகளில் நம் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. எனவே குழந்தைகளின் வயதிற்கு ஏற்ப அசைவ உணவுகளை தேர்ந்தெடுத்து கொடுக்கலாம்.

    • 24 மணி நேரமும், குழந்தைக்கு டயப்பர் அணிவிக்க தொடங்கி விட்டார்கள்.
    • சிறுநீர் பாதையில் நோய் தொற்றுகள் அதிகரிக்கும்.

    சவுகரியம் கருதி இன்று பலரும் குழந்தை பிறந்த முதல் நாளிலிருந்தே 24 மணி நேரமும், குழந்தைக்கு டயப்பர் அணிவிக்க தொடங்கி விட்டார்கள். அடிக்கடி மாற்ற தேவை இல்லை என்பதாலும், அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் குழந்தையின் தூக்கம் பாதிக்காமல் இருக்கும் என்றும், வெளியே செல்லும்போதும் அதனை உபயோகிக்கிறார்கள்.

    அதிக செயற்கை பொருட்களாலான டயப்பர்களை உபயோகப்படுத்துவது குழந்தைக்கும், சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கும். ஈரமான டயப்பர்கள், வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுக்களையும், சிறுநீர் பாதையில் நோய் தொற்றுகள் அதிகரிக்கவும் வழி வகுக்கின்றன. நாள் முழுவதும் டயபர்களை உபயோகப்படுத்துவதால், அவர்களுக்கு தோலில் அழற்சி, வெடிப்பு மற்றும் எரிச்சல் உண்டாக்கலாம்.

    தற்போது காட்டன் டயப்பர்கள் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றை துவைத்து திரும்பவும் உபயோகப்படுத்த முடியும். அது குழந்தைகளின் தோலுக்கும் எந்தவித கெடுதலும் செய்யாது. இதன் பயன்பாட்டை அதிகப்படுத்தலாம். துணியால் ஆன டயப்பர்கள் செலவை மிச்சப்படுத்தும்.

    இன்றைய அவசரமான உலகில் அனைத்து மாடர்ன் அம்மாக்களும் தங்கள் குழந்தைகளுக்கு டயாபர் அணிவிப்பது வழக்கமாகி விட்டது. அதில் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் விஷப்பொருள் கலந்துள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

    சிலர் ஒரு நாள் முழுவதும் கூட இதனை பயன்படுத்துவர். அவர்கள் துணியினை பயன்படுத்தினால் குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்படும் என்றும் சுத்தமாக இருக்காது என்றும் கருதுகின்றனர். ஆனால், இது போல் டயாபர்களை அணிவிப்பதால் குழந்தைகளுக்கு தீங்கு உண்டாகும் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த டயாபர்களில் விஷப்பொருள் கலந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    டெல்லியை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் இந்த ஆய்வினை மேற்கொண்டது. அவரகள் பல மாதிரிகளை எடுத்துள்ளனர். அதில் அவர்களுக்கு பல அதிர்ச்சிகரமான முடிவுகள் தெரியவந்துள்ளது. அவர்கள் ``குழந்தைகளுக்கு என்று பிரத்தியேகமாக விற்கப்படும் இந்த டயாபர்களில் ப்தலேட் எனப்படும் விஷப்பொருள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது."

    இவை குழந்தைகளின் உடல் நலனை பெரிதும் பாதிக்கும். சிறு வயதிலேயே ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இதனால் தாய்மார்கள் கொஞ்சம் கவனத்துடன் இருப்பது நல்லது" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    டயாபர்களில் இது போன்ற வேதிப்பொருளை பயன்படுத்த சீனா, தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் தடை விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

     டயப்பரை எப்போது மாற்ற வேண்டும்?

    ஈரம் கசிந்தால், அல்லது டயப்பர் கனமாக தெரிந்தால், குழந்தை மலம் கழித்து விட்டால், துர்நாற்றம் வருகையில், குழந்தை விடாத அழுது கொண்டிருந்தால் டயப்பர்களை உடனே மாற்ற வேண்டும். குறைந்தது 2 அல்லது 3 மணி நேரத்துக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.

    • சமச்சீரான உணவு கிடைக்காத போது மூளை வளர்ச்சியில் குறைபாடு ஏற்படும்.
    • குழந்தைகளுக்கு மிகவும் இன்றியமையாதது வைட்டமின் சி ஆகும்.

    குழந்தைகளின் வளர்ச்சிக்கு புரோட்டின், கார்போஹைட்ரேட், கால்சியம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் குழந்தைகளின் தசை வளர்ச்சிக்கும், எலும்புகளின் வளர்ச்சிக்கும் மற்றும் புத்திக் கூர்மைக்கும் தேவையானதாக இருக்கிறது.

    குழந்தைகள் டீன் ஏஜ் வயதிற்கு வரும் வரை அவர்களை சாப்பிட வைப்பதற்கு பெற்றோர்கள் படும் பாடு சொல்லில் அடங்காது. அதுவும் ஓடி, ஆடி விளையாடும் குழந்தை பருவத்தில், அவர்களின் உடல் வளர்ச்சியானது தினம்தோறும் அதிகமாகிக் கொண்டே இருக்கும். அந்த நேரத்தில் குழந்தைகளுக்கு புரோட்டின், கார்போஹைட்ரேட், கால்சியம் மற்றும் விட்டமின்கள் என நிறைய ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் தேவையாக இருக்கும். அவர்களின் தசை வளர்ச்சிக்கும், எலும்புகளின் வளர்ச்சிக்கும் மற்றும் மூளை வளர்ச்சியினால் கிடைக்கப்பெறும் புத்தி கூர்மைக்கும் தேவையானதாக இருக்கிறது.

    வளர்பருவம்:

    இந்த வளர்ச்சிதை மாற்றம் நடக்கும் பருவத்தில், அவர்கள் உணவு உண்பதற்கு கோபப்படுவதோ, மறுப்பு தெரிவிப்பதோ என்பது தவிர்க்க முடியாததாக இருக்கும். இந்த தருணங்களில் தாய்மார்கள் சத்து நிறைந்த உணவை தயார் படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாக இருக்கிறது.

    சமச்சீரான உணவு கிடைக்காத பொழுது மூளை வளர்ச்சியில் குறைபாடு, அடிக்கடி கோபப்படுவது, படபடப்பாவது, பெண் குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில், வயதுக்கு வந்த பிறகு மாதாந்திர சுழற்சியில் மாறுபாடு வருவது, ரத்த சோகை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவது என எதிர்காலத்தில் உடல் ரீதியான நிறைய தொந்தரவுகளை அனுபவிக்க வேண்டி இருக்கும்.

    ஆகையால் குழந்தைகளுக்கு, அவர்கள் வழியிலேயே சென்று, அவர்களுக்கு பிடித்தமான, அதே நேரத்தில் புரதம், தாது உப்புக்கள், விட்டமின்கள், கால்சியம் மற்றும் அத்தியாவசியமான கொழுப்புகளை எப்படியாவது அவர்கள் உணவில் சேர்க்க வேண்டியது பெற்றோர்களின் தலையாய கடமையாகும்.

     வைட்டமின் சி:

    குழந்தைகளுக்கு மிகவும் இன்றியமையாதது வைட்டமின் சி ஆகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை தருவதோடு, நோயை குணப்படுத்தவும் பெரிதும் உதவுகிறது. மேலும் வைட்டமின் சி சாப்பிடும் உணவுப் பொருளில் இருக்கும் இரும்புச்சத்தை உடலுக்கு எடுத்து தருவதில் பெரும்பங்காற்றுகிறது. இந்த வைட்டமின் சி யை பெற சிட்ரஸ் நிறைந்த பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சைப்பழம், கொய்யா, பப்பாளி, தக்காளி, மிளகு என உணவுகள் நிறைய இருக்கின்றன. இவற்றில், உங்கள் குழந்தை எதை விரும்புகிறதோ, அதை கொடுத்து, வைட்டமின் சி நிறைந்த உணவுகளை அவர்களை சாப்பிட வைக்கலாம்.

     இரும்புச்சத்து:

    குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது இரும்புச் சத்தாகும். இரும்புச்சத்து குறைவதனால் ரத்த சோகை உண்டாகிறது. ரத்த சிவப்பணுக்கள் தான் ஆக்சிஜனை கொண்டு செல்கின்றன. இதற்கு இரும்புச் சத்து இன்றியமையாததாக இருக்கிறது. காய்கறிகள் இறைச்சி, முட்டை, தானிய வகைகள் போன்றவற்றில் இரும்புச்சத்து நிறைந்து காணப்படுகிறது. மேலும் நிறைய காய்கறிகளை சாப்பிட கொடுப்பதன் மூலம் ஃபோலிக் ஆசிட் ஆனது உடலுக்கு கிடைக்கிறது. இதுவும் குழந்தைகள் வளர்ச்சிக்கு சிறப்பான ஒரு அமிலம் ஆகும்.

    வைட்டமின் டி:

    குழந்தைகளின் உறுதியான எலும்பு வளர்ச்சிக்கு வைட்டமின் டி அவசியமாகிறது. இது நேரடியாக சூரியனில் இருந்து நமக்கு கிடைக்கிறது. ஆகையால் உங்கள் குழந்தைகளை, காலையில் அல்லது மாலை வேலைகளில் விளையாட உற்சாகப்படுத்துங்கள். தேங்காய் பால், சோயா, மத்தி மீன் மற்றும் ஆரஞ்சு பழம் போன்றவற்றிலும் விட்டமின் டி நிறைந்து காணப்படுகிறது. எனவே அவர்களை காலையில் அல்லது மாலை வேலைகளில் கட்டாயமாக விளையாட, உற்சாகப்படுத்துவதோடு, மேற்கண்ட உணவு தேர்வில் ஏதாவது ஒன்றை உங்கள் குழந்தைகளுக்கு பிடிக்குமாறு செய்து கொடுங்கள் இதன் மூலம் வைட்டமின் டியை பெற முடியும்.

     புரதம்:

    வளர்ந்து வரும் குழந்தைகளின் தேக ஆரோக்கியத்திற்கும் திசுக்கள் மற்றும் சதை வளர்ச்சிக்கும் புரோட்டின் எனப்படும் புரதம் இன்றியமையாததாக இருக்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் இந்த புரதம் மிகவும் தேவையாக இருக்கிறது. மீன், கோழி, இறைச்சிகள், முட்டை,பால், தயிர், நெய், வெண்ணெய், கடலை பயிறு, பாசிப்பயறு, உளுந்து மற்றும் துவரம் பருப்பு, கம்பு, கேழ்வரகு போன்ற சிறு தானியங்கள், ஆகியவற்றிலும் இந்த புரதமானது நிறைந்து காணப்படுகிறது.

    ஆரோக்கியமான கொழுப்பு:

    சரியான அளவில் ஆரோக்கியமான கொழுப்பு உணவுகளை கொடுப்பது மூளை மற்றும் நரம்பு வளர்ச்சிக்கு நன்மை தரும். குறிப்பாக குழந்தைகளின் வளர்சிதை மாற்றத்தை பராமரிக்க உதவுகிறது. ரத்த உறைதல் மற்றும் வைட்டமின்களை உடலுக்கு எடுத்துக் கொள்வதற்கும் கொழுப்பானது தேவையாக இருக்கிறது. இறைச்சி, முட்டை, மஞ்சள் கரு, பால், தயிர், வெண்ணை மற்றும் நெய் போன்றவற்றில் நிறைந்து காணப்படுகிறது ஆகவே இந்த பொருட்களில் குழந்தைகளுக்கு பிடித்தமான ஒன்றை தேர்வு செய்து நீங்கள் தயாராக வைத்திருப்பது அவர்கள் உடலின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும்.

    • பருவ காலங்களில் விளையும் பழங்களை அவசியம் கொடுக்க வேண்டும்.
    • காலையில் வெறும் வயிற்றில் ஜூஸ் கொடுப்பது நல்லதல்ல.

    குழந்தைகளுக்கு அந்தந்த பருவ காலங்களில் விளையும் பழங்களை அவசியம் கொடுக்க வேண்டும். ஆனால் பல குழந்தைகள் பழங்கள் சாப்பிட ஆர்வம் காட்டமாட்டார்கள். பழத்துண்டுகளாக நறுக்கி கொடுத்தாலும் கூட சாப்பிட அடம்பிடிப்பார்கள்.

    எப்படியாவது சாப்பிட வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பெற்றோர் பலர் ஜூஸாக தயாரித்து கொடுப்பார்கள். பழங்களாக சாப்பிடுவதை விட ஜூஸாக பருகுவதற்கு குழந்தைகளும் விரும்புவார்கள். ஆனால் பழங்களுக்கு மாற்றாக எப்போதும் ஜூஸ் மட்டுமே கொடுக்கக்கூடாது. அதிலும் காலையில் வெறும் வயிற்றில் ஜூஸ் கொடுப்பது நல்லதல்ல.

    சாப்பிட்ட உடனேயும் ஜூஸ் கொடுப்பதும் தவறான பழக்கம். குழந்தைகள் ஜூஸ் பருகுவதற்கு சரியான நேரம் எது தெரியுமா?

    காலை உணவு மற்றும் மதிய உணவுக்கு இடைப்பட்ட நேரங்களில் ஜூஸ் கொடுப்பதுதான் சரியானது. குறிப்பாக காலை 11 மணி, பிற்பகல் 3 மணி அளவில் ஜூஸ் கொடுக்கலாம். தினமும் ஒரே வகையான பழ ஜூஸ்களை கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.

    சில வகை பழங்களை குழந்தைகள் சாப்பிட விரும்பாது. அவை சத்தானது என்பதற்காக கட்டாயப்படுத்தி சாப்பிடவைக்கக்கூடாது.

    அவர்களுக்கு பிடித்தமான மற்ற பழங்களுடன் பிடிக்காத பழங்களையும் சேர்த்து ஜூஸாக தயாரித்து கொடுக்கலாம். இரவில் ஜூஸ் கொடுப்பதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். குறிப்பாக எலுமிச்சை, திராட்சை, ஆரஞ்சு போன்ற பழ ஜூஸ்களை இரவு நேரங்களில் கொடுப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.

    அதிலும் சளித்தொல்லை, மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புள்ள குழந்தைகளுக்கு ஜூஸ் கொடுக்கக்கூடாது. அத்துடன் ஜூஸ் ரொம்ப குளிர்ச்சியாகவும் இருக்கக்கூடாது. குழந்தைகளுக்கு 10 மாதத்தில் இருந்தே ஜூஸ் கொடுக்கத் தொடங்கலாம். வயது அதிகரிக்க, அதிகரிக்க ஜூஸ் கொடுப்பதை படிப்படியாக குறைத்துவிட்டு பழங்களாக சாப்பிட பழக்கப்படுத்த வேண்டும்.

    • குடற்புழுக்கள் குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கிறது.
    • உடல் எடை குறைவது, அனீமியா போன்றவையும் உண்டாக்கிவிடும்.

    வயிற்றில் குடல் பகுதியில் உருவாகும் புழுக்களைத்தான் குடற்புழு என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இவை நம் உடல் நலனுக்கு கேடு விளைவிப்பவை. குடற்புழுக்கள் குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கிறது. சில சமயம் பெரியவர்களையும் பாதிக்கிறது.

    சுத்தமான உணவு, சுத்தமான தண்ணீர், சுத்தமான சூழ்நிலையில் நாம் வாழ வேண்டும். அப்படி இல்லையென்றால், நம் குடலில் குடற்புழு உருவாகி பிரச்சினை ஏற்படுத்திவிடும்.

     சிறுநீர் கழித்தல், மலம் கழித்தல், அசுத்தமான மண்ணை குழந்தைகள் கையால் அள்ளி விளையாடும்போதும், செருப்பில்லாமல் அசுத்தமான இடங்களில் நடக்கும்போது இந்த குடற்புழுக்கள் உடலை வந்தடைகிறது.

    புழுக்கள் பலவகைப்படும். அவை உருளைப்புழு, நாக்குப்பூச்சி, இதயப்புழு, நாடாப்புழு, கொக்கிப்புழு என்று பல வகைப்படும். இந்த புழுக்கள் நம் உடலுக்கு பல பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். கடுமையான வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், குமட்டல், சோர்வு, உடல் எடை குறைவது, அனீமியா போன்றவையும் உண்டாக்கிவிடும்.

    இயற்கை வழிமுறைகள்:

    1. தினமும் கிராம்மை மென்று தின்னால் குடற்புழுக்கள் அழிந்து மலம் மூலம் வெளியேறும்.

    2. தினமும் கேரட்டை சாப்பிட்டுவந்தால் குடற்புழு நீங்கும்.

    3. ஒரு கைப்பிடி புதினா சாற்றுடன், எலுமிச்சை சாறு, உப்பு கலந்து குடித்து வந்தால் குடற்புழு ஒழியும்.

    4. குடற்புழுக்களால் பிரச்சினை ஏற்பட்டால் கற்பூரவள்ளி எண்ணெயை, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்து வந்தால் குடற்புழு வெளியேறும்.

    5. சூடான பாலுடன் ஆமணக்கு எண்ணெய் 2 ஸ்பூன் கலந்து குடித்தால் வந்தால் குடற்புழுக்கள் மலம் மூலம் வெளியேறும்.

    6. தினமும் ஒரு பல் பூண்டை சாப்பிட்டு வந்தால் குடற்புழுக்கள் பிரச்சினை தீரும்.

    7. எலுமிச்சை விதை பொடியை நீருடன் கலந்து குடித்து வந்தால் குடற்புழு ஒழியும்.

    • 2 முதல் 3 மணி நேரம் வரை குழந்தை அழுவது இயல்பானது தான்.
    • கைக்குழந்தைகளுக்கு உணர்வுகளை வெளிப்படுத்த அழுகை மட்டுமே ஒரே வழி.

    பிறந்த குழந்தைகள் அடிக்கடி அழுவார்கள். அவர்களின் அழுகைக்கான காரணம் தெரியாமல் பெற்றோரும், குடும்பத்தினரும் திணறுவது உண்டு. பிறந்தது முதல் 6 வாரங்கள் வரை, ஒரு நாளுக்கு 2 முதல் 3 மணி நேரம் வரை குழந்தை அழுவது இயல்பானது தான்.

    பசி, சோர்வு, வயிற்றுவலி, வாயுத்தொல்லை, டயப்பர் ஈரமாவது, அதிக குளிர்ச்சியான அல்லது சூடான வெப்பநிலை ஆகியவற்றின் காரணமாக குழந்தைகள் அழுவார்கள். அவர்களின் அழுகைக்கான காரணத்தை கண்டுபிடித்து விட்டால், குழந்தைகளை எளிதாக சமாதானப்படுத்த முடியும். அது பற்றிய சில தகவல்கள்.

     கைக்குழந்தைகளுக்கு வலி போன்ற உணர்வுகளை வெளிப்படுத்த அழுகை மட்டுமே ஒரே வழி. குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் பிரச்சினைகளில் ஒன்று வயிற்றுவலி, இது சாதாரணமானது என்றாலும், வலி நீங்கும் வரை குழந்தைகளின் அழுகையை நிறுத்த முடியாது. குழந்தை தன்னுடைய தொடையை வயிற்றில் மடித்து வைத்தபடி அழுதால் அதற்கு வயிற்றுவலி ஏற்பட்டு இருக்கிறது என்று அர்த்தமாகும்.

     அளவுக்கு அதிகமாக (பால் அல்லது திட உணவுகளை குழந்தைக்கு கொடுக்கும் போது வயிற்று உப்புரத்தால் இது போன்று வலி ஏற்படக்கூடும். இதுதவிர, உணவுடன் அதிகப்படியான காற்று குழந்தையின் வயிற்றுக்குள் சென்றாலும் வலி ஏற்பட்டு குழந்தை அழும். எனவே பாலூட்டியவுடன் குழந்தையை தோளில் சாய்த்தவாறு அதன் முதுகை லேசாக தட்டிக் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு செய்வதால் குழந்தையின் வயிற்றுக்குள் சென்ற காற்று வெளியேறி வலி நீங்கும். சில நேரங்களில் சாப்பிட்ட உணவு ஏற்படுத்தும் ஒவ்வாமை காரணமாகவும் குழந்தை அழக்கூடும். இதையும் கவனிப்பது அவசியமாகும்.

    குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள், தாங்கள் சாப்பிடும் உணவிலும் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைக்கு நாம் வழங்கும் உணவு, விரைவாக செரிமானம் ஆகி சிறுநீராகவும், மலமாகவும் வெளியேறிவிடும். இதனால், மீண்டும் பசி எடுக்கக்கூடும்.

    குழந்தை அழும்போது தாய் தன் விரலை நன்றாக சுத்தம் செய்து, குழந்தையின் வாயில் வைக்க வேண்டும். குழந்தை விரலை சூப்பத்தொடங்கினால், பசியால் அழுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    குழந்தைகளுக்கு நாம் உடுத்தும் ஆடை, அவர்களின் சருமத்தை உறுத்தாத வகையில் இருக்க வேண்டும். இறுக்கமான ஆடைகள், சருமத்திற்கு ஒவ்வாத ஆடை ரகங்கள் குழந்தையின் சருமத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இது குழந்தைக்கு அசவுகரியத்தையும் ஏற்படுத்தும். இதன் காரணமாகவும் குழந்தை அழக்கூடும். முடிந்தவரை குழந்தைக்கு பருத்தி துணிகளை மட்டுமே அணிவிக்க வேண்டும்.

    குழந்தைக்கு அணிவித்த டயப்பர் முழுவதுமாக ஈரமாகும் வரை காத்திருக்காமல், குறிப்பிட்ட கால இடைவெளியில் அதை மாற்ற வேண்டும்.

    குழந்தைகளை படுக்க வைக்கும் இடம், அவர்களின் ஆடைகள், அவர்கள் இருக்கும் அறை என அனைத்து பகுதியையும் சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும். ஏனெனில், சிறு சிறு பூச்சிகள், எறும்புகள் போன்றவை கடிப்பதன் காரணமாகவும் குழந்தைகள் அழக்கூடும்.

    • 6-8 வது வாரத்திலேயே பால் பற்கள் தோன்றி விடுகின்றன.
    • சில குழந்தைகளுக்கு கடைசி கடைவாய்ப்பற்கள் முளைப்பதில்லை.

    பற்கள் குழந்தைகளுக்கு முளைக்கும் போதெல்லாம் காய்ச்சல் வரும். பற்கள் முளைக்கும் போது, குழந்தைகள் கொஞ்சம் அதிதீவிரமாகவும் செயல்படுவார்கள். அவர்களை நாம் சரியாகப் புரிந்துகொண்டு கையாள வேண்டும்.

    குழந்தைகள் தாயின் வயிற்றில் கருவாக இருக்கையிலே 6-8 வது வாரத்திலேயே பால் பற்கள் தோன்றி விடுகின்றன. கருவில் 14-வது வாரம் நிறைவடையும்போது, ஈறுகளும் பால் பற்களும் குழந்தைகளின் உடலுக்குள் தோன்றிவிடும்.

    சில குழந்தைகளுக்கு கடைசி கடைவாய்ப்பற்கள் முளைப்பதில்லை. இது சாதாரணமாகும். ஆனால், நடுத்தர வயதில் இந்த பற்கள் முளைக்கும். இருப்பினும் குழந்தைகளுக்கு கிருமித்தொற்று, டவுன் சின்ரோம், கிரவுசன் சின்ரோம் போன்ற நோய்களில் பற்கள் முளைப்பது தாமதமாகும்.

    குழந்தைக்கு பல் வளரும் வயது:

    தாயின் வயிற்றிலே தோன்றிவிடும் நிரந்தர பற்கள், பின் குழந்தையாக வெளிவந்ததும் 3 அல்லது 6 மாதங்களில் பற்கள் வெளியே முளைத்து வரத்தொடங்குகின்றன.

    அறிகுறிகள்:

    * வீங்கிய அல்லது சிவந்த ஈறுகள்.

    * திடமான பொருட்களை மெல்லுவதில் ஒரு ஆசை.

    * எச்சில் வடித்தல், முதற்பல் வெளியே தெரியத் தொடங்குவதற்கு 2 மாதங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கலாம்.

    * பரபரப்பு, எரிச்சலடைதல், அல்லது கோபம்.

    * வாயிலிருந்து உமிழ்நீர் வடிதல்.

    * வாயை நரநரவென்று கடித்துக் கொண்டிருத்தல்.

    பல் வளர்ச்சி உதவும் உணவுகள்:

    பற்கள் முளைக்கும்போது அதன் ஈறுகளில் அசைவுகள் ஏற்படுவதால், குழந்தைகளுக்கு கோபம் மற்றும் எரிச்சல் உண்டாகும். அந்தசமயத்தில் பெற்றோர் தங்களுடைய சுண்டு விரலைக் கொண்டு, குழந்தையின் ஈறுகளை மெதுவாகத் தேய்த்துவிட வேண்டும்.

    ஈறுகள் நன்கு அசைவு பெற, ரஸ்க், கேரட் போன்ற கடினமான உணவுகளை சாப்பிட கொடுக்கலாம். இவற்றைச் சாப்பிடுவதால் ஈறுகளின் அசைவு நன்றாக செயல்பட்டு, பற்கள் எளிதில் முளைக்கும்.

    குளிர் நேரங்களில் குழந்தையை வெளியே எடுத்து சென்றால், குளிர் குழந்தையின் ஈறுகளில் படும்போது அவை மிகுந்த வலியை ஏற்படுத்தும்.

    எப்படி பராமரிப்பது:

    இந்த பால் பற்கள் குழந்தைக்கு முளைக்கும்போது, ஈறில் உறுத்தல் இருக்கும், இதன் காரணமாக குழந்தைக்கு கையில் கிடைக்கும் எல்லாவற்றையும் வாயில் போட்டு கடிக்கும். அந்த நேரத்தில் குழந்தைக்கு கேரட், ஆப்பிள் போன்றவற்றை கொரிக்க கொடுக்கலாம்.

    பல் முளைக்கும் நேரத்தில் குழந்தையின் ஈறுகள் சிவந்தும், வீங்கியும் காணப்படும். சில குழந்தைகளுக்கு ஈறுகளில் வலி ஏற்பட்டு வலியின் காரணமாக காய்ச்சல் கூட ஏற்படலாம். இது பொதுவான பிரச்சனையாக இருந்தாலும் குழந்தை நல மருத்துவரிடம் சென்று ஆலோசிப்பது மிகவும் நல்லதாகும்.

    ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைக்கு மெல்லிய மஸ்லின் அல்லது மென்மையான துணியை தண்ணீரில் நனைத்து குழந்தையின் பற்களை சுத்தம் செய்யலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு அதிகளவு இனிப்பு வகைகளை கொடுப்பதை தவிர்த்து கொள்வது மிகவும் நல்லது. இதற்கு பதிலாக அதிகளவு காய்கறிகள், பழங்கள், கீரை போன்றவற்றை குழந்தைக்கு கொடுத்துப் பழக்கப்படுத்துவது, குழந்தையின் உடல் நலத்திற்கும் பற்களின் பாதுகாப்பிற்கும் மிகவும் நல்லது.

    குழந்தையின் டூத் பிரஷாக இருந்தாலும் சரி, பெரியவர்களின் டூத் பிரஷாக இருந்தாலும் சரி மூன்று மாதத்திற்கு ஒருமுறை டூத் பிரஷை மாற்ற வேண்டும்.

    ஆண்டுக்கு ஒரு முறையாவது, குழந்தைகளை பல் மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும். இவற்றில் பரிந்துரைக்கப்பட்டுள்ள டிப்ஸ்களை பயன்படுத்தி உங்கள் குழந்தையின் பற்களை பராமரிக்கவும்.

    • சீரான வெப்பநிலை இருக்க வேண்டியது அவசியமாகும்.
    • கதகதப்பாக இருக்குமாறு குழந்தைகளை படுக்க வைக்க வேண்டும்.

    பெண்களின் கர்ப்ப காலம் என்பது 37 வாரங்கள் கொண்டதாகும். இந்த காலம் முழுவதுமாக பூர்த்தியடைந்து பிரசவிக்கப்படும் குழந்தைகள், சீரான உடல் எடை மற்றும் ஆரோக்கியத்தோடு பிறக்கிறார்கள். ஆனால் பிரசவ தேதிக்கு சில மாதங்கள் முன்பாகவே பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு சில ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படும். அவற்றை தடுக்க அந்த குழந்தைகளுக்கு முறையான பராமரிப்பு வழங்குவது முக்கியமானதாகும்.

    குறைமாதத்தில் பிறந்த குழந்தையை மட்டுமில்லாமல், பிரசவித்த தாயின் ஆரோக்கியத்திலும் போதுமான கவனம் செலுத்த வேண்டும். குறைபிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு மருத்துவமனையில் தகுந்த பாதுகாப்பும். உரிய சிகிச்சையும் வழங்கப்படும். வீட்டிற்கு வந்த பின்பு அந்த குழந்தைகளை முறையாக கவனித்துக்கொள்வதற்கான சில வழிகள்.

     சீரான வெப்பநிலை:

    குறைமாதத்தில் பிறந்த குழந்தைகள் இருக்கும் அறையில், சீரான வெப்பநிலை இருக்க வேண்டியது அவசியமாகும். இதன் காரணமாகவே மருத்துவமனைகளில் குழந்தைகளை இன்குபேட்டரில் வைத்து பராமரிக்கின்றனர். எனவே வீட்டிற்கு வந்த பின்னும், குழந்தைக்கு சீரான வெப்பநிலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதன் மூலம், குழந்தைகளின் வளர்ச்சியும், ஆரோக்கியமும் சீராக இருக்கும்.

    வீட்டில். துணிகளை அடுக்கடுக்காக விரித்து அதன்மேல் கதகதப்பாக இருக்குமாறு குழந்தைகளை படுக்க வைக்க வேண்டும். முடிந்தவரை, கனமான போர்வைகளை தவிர்த்து காட்டன் புடவைகளை தேர்வு செய்யுங்கள். தெர்மாமீட்டர் கொண்டு, குழந்தையின் உடல் வெப்பநிலையை அவ்வப்போது பரிசோதிக்க வேண்டும். குழந்தையின் உடல் வெப்பநிலை 36.5 முதல் 37.4 டிகிரி செல்சியஸ் வரையும், அறையின் வெப்பநிலை 20 முதல் 24 டிகிரி செல்சியஸ் வரையும் இருக்க வேண்டும்.

     சீரான தூக்கம்:

    பிறந்த குழந்தைகளுக்கு சீரான தூக்கம் அவசியமானது. அதிலும், குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு எவ்வித தொந்தரவும் இன்றி சீராக உறங்க தேவையான சூழலை ஏற்படுத்தி தர வேண்டும். அவர்களை படுக்க வைக்கும் அறையில், சீரான வெப்பநிலையும், மங்கலான வெளிச்சமும் இருக்க வேண்டும். மற்ற குழந்தைகளை விட இவர்களுக்கு இரவு நேரத்தில் பசி அதிகமாக இருக்கும். எனவே, அடிக்கடி பாலூட்ட வேண்டும்.

     குளியல்:

    குறைமாத குழந்தைகளை குளிக்க வைக்கும்போது உபயோகிக்கும் தண்ணீர், சோப்பு, லோஷன் ஆகிய அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டும். தண்ணிரின் வெப்பநிலை குறைந்தபட்சம் 100 டிகிரி பாரன் ஹீட்டாக இருக்க வேண்டும். குழந்தையின் தலையை சுத்தம் செய்ய, தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு எந்த ரசாயனம் நிறைந்த பொருட்களையும் பயன்படுத்தக்கூடாது.

    குழந்தையின் எடை 2.5 கிலோ அளவுக்கு வரும் வரை கடற்பாசி கொண்டு குளிக்க வைக்கலாம். குழந்தை பிறந்த ஒரு மாதம் வரை கடைகளில் கிடைக்கும் லோஷன் பவுடர், எண்ணெய் உட்பட எந்த பொருளையும் பயன்படுத்தாமல் தவிர்ப்பது சிறந்தது.

    பயணத்தை தவிர்க்கவும்:

    குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு சுற்றுச் சூழல் காரணமாக எளிதில் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அவர்களின் நுரையீரல் வளர்ச்சி குறைவாக இருக்கும் என்பதால், காற்று மாசு காரணமாக எளிதில் மூச்சுத்திணறல் பிரச்சினை ஏற்படலாம். எனவே, குறைந்தபட்சம் ஓராண்டு வரை பயணங்களை தவிர்ப்பது சிறந்தது.

    • குழந்தைகளுக்கு காது இகுத்தும் வழக்கம் பரவலாக உள்ளது.
    • அழகுக்காகவோ, பழக்கவழக்கத்துக்காகவோ செய்யப்படுவது அல்ல.

    இந்திய கலாசாரத்தில் குழந்தைகளுக்கு காது இகுத்தும் வழக்கம் பரவலாக உள்ளது. இது அழகுக்காகவோ, பழக்கவழக்கத்துக்காகவோ செய்யப்படுவது அல்ல. காது குத்துவதற்கு பின்னால் நிரூபிக்கப்பட்ட அறிவியல் மற்றும் மருத்துவம் சார்ந்த நன்மைகள் உள்ளன.

    குழந்தைப் பருவத்திலேயே காது குத்துவது. மூளையின் ஆரோக்கியமான மற்றும் விரைவான வளர்ச்சிக்கு உதவும். அவ்வாறு காது குத்துவதற்கு முன்பு பெற்றோர் தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள் பற்றி இங்கே பார்ப்போம்.

    குழந்தைகளுக்கு டெட்டனஸ் தடுப்பூசிகள் முழுவதுமாக போட்ட பிறகுதான் காதுகுத்த வேண்டும். எனவே 1 முதல் 10 வயதுக்குள் குழந்தைகளுக்கு காது குத்துவது சரியானது. அதிக எடை கொண்ட காதணிகளைக் காட்டிலும், மெல்லிய, லேசான காதணிகளைத் தேர்வு செய்ய வேண்டும்.

    காது குத்துவதற்கு முன்பு குழந்தையின் உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்துகொள்ள வேண்டும். உடல்நிலை சரியில்லாதபோது காதுகளில் துளையிட வேண்டாம். காது குத்தும்போது. குழந்தையின் கவனத்தை திசைதிருப்ப குழந்தைக்கு பிடித்த பொம்மைகளைத் தேர்வு செய்து எடுத்துச் செல்லவும். காது குத்துவதற்கு முன்னர் துளையிடும் இடத்தை ஆல்கஹால் அல்லது வேறு ஏதேனும் தோல் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

    இதன்மூலம் கிருமித்தொற்று ஏற்படுவதை தடுக்க முடியும். காது குத்தும் நபர் கையுறைகளை அணிந்து கொண்டு துளையிடுவது நல்லது, துளையிட பயன்படுத்தும் ஊசி அல்லது எந்திரத்தின் சுகாதாரத்தை உறுதி செய்த பிறகே காதில் துளையிட வேண்டும்.

    காது குத்திய உடன் தங்கம் மற்றும் ஸ்டெர்லிங் வெள்ளி காதணிகளை அணிவிப்பது நல்லது.

    இந்த வகை உலோகங்கள் சருமத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தாது. தங்கம் ஒவ்வாமை உள்ள குழந்தைகளுக்கு. அதற்கு மாற்றாக தங்க முலாம் பூசப்பட்ட, நிக்கல் கலக்காத உலோக காதணிகளை அணிவிக்கலாம். தொங்கும் வகையிலான காதணிகளை அணிவிப்பதைவிட, காதோடு ஒட்டி இருக்கும்படியான காதணிகளை அணிவித்தால் குழந்தைகள் இலகுவாக உணருவார்கள்.

    இறுக்கமான காதணிகள் அணிவிப் பதையும் தவிர்க்க வேண்டும். காது குத்திய பின்பு ஒருசில நாட்கள் வரை, துளையிட்ட பகுதி சிவந்து காணப்படும். துளையிடப்பட்ட இடத்தில் இருந்து சீழ் அல்லது திரவம் வெளியேறினால். தொற்று ஏற்பட்டு இருக்கக்கூடும். இதன் காரணமாக சிறிய கொப்புளங்கள் அல்லது துளையிடப்பட்ட பகுதிக்கு அருகில் பெரிய கொப்புளம் ஏற்படும்.

    குழந்தைகளுக்கு காய்ச்சல் வருவதன் மூலமும் தொற்று வெளிப்படும். காது குத்தப்பட்ட சில மணி நேரங்கள் அல்லது சில நாட்களுக்குப் பிறகு காய்ச்சல் ஏற்படும். அவ்வாறு காய்ச்சலோ, நோய்த்தொற்றோ இருந்தால், குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

    காது குத்திய பிறகு துளையிட்ட பகுதியில் ஒரு நாளுக்கு இரண்டு முறை கிருமிநாசினியைப் பூசவும். பாக்டீரியா எதிர்ப்பு தன்மை உள்ள சோப்பு கொண்டு காதுகளைச் சுற்றியுள்ள பகுதியைக் கழுவவும். காயம் குணமாகும் வரை குழந்தைகளுக்கு பொத்தான்கள் கொண்ட ஆடைகளை பயன்படுத்துங்கள். இதனால் ஆடையை தலைக்கு மேல் இழுக்காமல் கழற்ற முடியும். ஆடை காதுகளில் பட்டு குழந்தைக்கு வலி உண்டாவதை தடுக்கவும் முடியும்.

    • குழந்தையை தூங்க வைப்பதற்கு தலாலாட்டு பாடல்கள் பாடினார்கள்.
    • தூங்க வைப்பதற்கு டிஸ்ஸு பேப்பரை பயன்படுத்தலாம்.

    பொதுவாக தாய்மார்கள் கஸ்டப்படுகின்ற விஷயம் என்னவென்றால் குழந்தையை தூங்க வைப்பது தான். நம் தாத்தா, பாட்டி எல்லாம் குழந்தையை தூங்க வைப்பதற்கு தலாலாட்டு பாடல்கள் பாடினார்கள். இதனை கேட்டவுடன் பிள்ளைகள் தூங்கிவிடும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் மொபைல் போனில் பாட்டை போட்டு குழந்தைகளை தூங்க வைக்கிறார்கள். இதனால் குழந்தைகள் அழுதுகொண்டே இருக்கின்றது. நாம் இந்த பதிவில் குழந்தைகளை எப்படி தூங்க வைப்பது என்பதைப்பற்றி தெரிந்துகொள்ளலாம்.

    குழந்தையை சீக்கிரம் தூங்க வைப்பதற்கு டிஸ்ஸு பேப்பரை பயன்படுத்தலாம். இதனை முகத்தில் தடவ வேண்டும். அதன்பிறகு டிஸ்ஸுவை கண்களில் முன் எடுத்துவந்து கண்களை சிமிட்டுவது போல செய்ய வேண்டும். இதுபோல செய்வதால் குழந்தைகள் சீக்கிரம் தூங்கிவிடும்.

    குழந்தைகள் நீரின் சத்தத்திற்கு அமைதியாகிவிடும். அதனால் குழாய்க்கு பக்கத்தில் நிற்க வேண்டும் என்று இல்லை. தண்ணீன் சத்தத்தை மொபைல் போனில் பிளே செய்யலாம். இதனால் குழந்தைகள் இதை கேட்டவுடன் சீக்கிரம் தூங்கிவிடும்.

    அதன்பிறகு அறையின் விளைக்கை அனைத்துவிட்டு குழந்தைகளை தூங்க வைக்க வேண்டும். வெளிச்சம் சிறிதளவு இருந்தால் மட்டும் போதும்.

    குழந்தைகளின் தலையை தடவி கொடுக்க வேண்டும். நெற்றியிலும் முதுகிலும் தடவி கொடுக்கலாம். இதன்மூலம் குழந்தைகள் அமைதியாகுவது மட்டுமில்லாமல் தூக்கத்தையும் வர வைக்க உதவுகிறது.

    தொட்டிலில் போட்டு குழந்தையை தூங்கவைக்க வேண்டும். அவ்வாறு தூங்க வைக்கும்போது இருபுறமும் துணி வைக்க வேண்டும். அதன் நடுவில் குழந்தையை போட்டு அணைத்தப்படி போட வேண்டும்.

    ×