என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணியிடை நீக்கம்"

    • மருத்துவர் அறையில் வெளிநாட்டு மதுபாட்டில்கள், அருகில் அசைவ உணவுகள், நொறுக்கு தீனியுடன் மது விருந்து நடந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
    • இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை தலைமை மருத்துவர் மீனாட்சி விசாரணைக்கு உத்தரவிட்டார்.

    சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே செம்பனூர் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. கல்லல் மற்றும் அதனை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இங்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு, புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு என இரண்டு கட்டிடத்தில் இந்த மருத்துவமனை இயங்கி வருகிறது. வட்டார மருத்துவ அலுவலர் உட்பட நான்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில் புத்தாண்டு நள்ளிரவு நடந்த விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வந்த நபர் அவசர சிகிச்சை பகுதிக்கு சென்று பார்த்தபோது மருத்துவர் இல்லை என்றதும் உள்ளே மருத்துவர் அறையில் மருத்துவர் உள்ளாரா? என பார்க்கச் சென்றுள்ளார். அப்போது மருத்துவர் அறையில் வெளிநாட்டு மதுபாட்டில்கள், அருகில் அசைவ உணவுகள், நொறுக்கு தீனியுடன் மது விருந்து நடந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனை அந்த நபர் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.

    இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை தலைமை மருத்துவர் மீனாட்சி விசாரணைக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து விசாரணை முடிந்த நிலையில் செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 31-ந் தேதி பணியில் இருந்த மருத்துவர்கள் சசிகாந்த், கவுசிக், நவின்குமார், மணிரத்னம் ஆகிய நான்கு மருத்துவர்களும் மற்றும் மருந்தாளுநர் கமலக்கண்ணன் ஆகிய 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    அது மட்டும் அல்லாமல் அன்று பணியில் இருந்த செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தலைமை மருத்துவர் மீனாட்சி தெரிவித்துள்ளார்.

    ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு வரும் பெண்கள், குழந்தை பிறந்த பின்பு இந்த வளாகத்தில் தான் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சி.சி.டி.வி. கேமராக்கள் இயங்கவில்லை என்றால் பிறக்கும் குழந்தைகளை யாராவது திருடி சென்றால் கூட கண்டுபிடிக்க முடியாத சூழல் உள்ளது. எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    • வெள்ளரிக்குண்டு பகுதியில் துணை தாசில்தாராக பணிபுரிந்து வருபவர் பவித்ரன்.
    • ரஞ்சிதா குறித்து அவதூறாக பதிவிட்ட துணை தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    காசர்கோடு:

    காசர்கோடு மாவட்டம் வெள்ளரிக்குண்டு பகுதியில் துணை தாசில்தாராக பணிபுரிந்து வருபவர் பவித்ரன் (வயது 48). இவர், நேற்றுமுன்தினம் அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்த பயணிகளில் ஒருவரான கேரளாவைச் சேர்ந்த நர்சான ரஞ்சிதா நாயரின் சாதியின் பெயரை குறிப்பிட்டு தனது முகநூலில் பதிவிட்டு இருந்தார். இது அவதூறு பரப்பும் வகையில் இருந்தது.

    இதை பார்த்த பலரும் சமூக வலைத்தளத்தில் அவதூறாக பதிவிட்ட துணை தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அவர் தனது பதிவை முகநூலில் இருந்து நீக்கியதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து பவித்ரனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

    • சிவில் என்ஜினீயர் வருண் என்பவர் புதிதாக கட்டிடம் கட்டுவது தொடர்பாக சுப்பிரமணியனை சந்தித்துள்ளார்.
    • லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சுப்பிரமணியை கைது செய்தனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நகரமைப்பு பிரிவில் உதவியாளராக சுப்பிரமணியம் என்பவர் (வயது 48) பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த சிவில் என்ஜினீயர் வருண் என்பவர் புதிதாக கட்டிடம் கட்டுவது தொடர்பாக சுப்பிரமணியனை சந்தித்துள்ளார்.

    அப்போது புதிய கட்டிடம் கட்ட அனுமதி கொடுப்பதற்கு ரூ.40 ஆயிரம் வேண்டும் என சுப்பிரமணியம், என்ஜினீயர் வருணிடம் பேசி உள்ளார். பின்னர் முடிவில் ரூ.30 ஆயிரம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. எனினும் லஞ்ச பணம் கொடுக்க மனம் இல்லாத வருண் இது குறித்து ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.

    லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தல் படி வருண் கடந்த 25ம் தேதி கோபி செட்டிபாளையத்தில் உள்ள நகராட்சி அலுவலகத்திற்கு சென்றார். வருண் ரசாயனம் தடவிய பணத்தை சுப்பிரமணியிடம் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த ஈரோடு லஞ்ச ஒழிப்பு துறை ஏ.டி.எஸ்.பி ராஜேஷ், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சுப்பிரமணியை கையும் களவுமாக பிடித்தனர்.

    பின்னர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சுப்பிரமணியை கைது செய்தனர். இந்நிலையில் நகராட்சி மண்டல இயக்குனர் விசாரணை நடத்தி லஞ்ச வழக்கில் சிக்கிய உதவியாளர் சுப்பிரமணியத்தின் மீது நடவடிக்கை எடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் நகராட்சி உதவியாளர் சுப்ரமணியம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    • வியாபாரிகளிடமிருந்து முறைகேடாக அபராதம் வசூலித்ததால் நடவடிக்கை
    • நகராட்சி நிர்வாக இயக்குனர் உத்தரவு

    ஆம்பூர்:

    ஆம்பூர் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தில் தனியார் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பரப்புரையாளர் கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    அதில் 4 நபர்கள் தன்னிச்சையாக செயல்பட்டு ஆம்பூர் நகராட்சியின் பில் புத்தகத்தை பயன்படுத்தி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் வைத்திருந்த வியாபாரிகளிடமிருந்து முறைகேடாக அபராதம் வசூலித்துள்ளனர்.

    இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் ஷகிலாவிற்கு புகார் வந்தது. அதனடிப்படையில் அவர் இதுகுறித்து நகராட்சிக ளின் நிர்வாக மண்டல இயக்குநருக்கு தகவல் தெரிவித்தார்.

    நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குனர் ஆம்பூர் நக ராட்சிக்கு நேரடியாக வருகை தந்து இதுகுறித்து விசாரணை நடத்தி நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு அறிக்கை அனுப் பியதாக கூறப்படுகிறது.

    அதனடிப்படையில் தனியார் நிறுவ னத்தின் மூலம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்த 4 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அவர்களை சரிவர கண்கா ணிக்காத ஆம்பூர் நகராட்சி சுகாதார அலுவலர் ராமகிருஷ்ணனை பணியிடை நீக்கம் செய்து நகராட்சி நிர்வாக இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

    • தரமற்று கட்டுமான பணி செய்த ஒப்பந்ததாரரை கலெக்டர் ஆர்த்தி எச்சரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
    • ஊத்துக்காடு ஊராட்சியில் தரமற்ற முறையில் இருளர் குடியிருப்பு வீடுகளை கட்டிய விவகாரத்தில் 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே உள்ள ஊத்துக்காடு ஊராட்சியில் இருளர் பழங்குடியினருக்கு 76 குடியிருப்பு வீடுகள் கட்டும் பணி நடந்து வருகிறது.

    இதனை நேற்று முன் தினம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது குடியிருப்பு வீடுகள் தரமற்று கட்டப்படுவதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

    அங்கேயே கட்டுமான ஒப்பந்ததாரரை அழைத்து கடுமையாக கண்டித்தார். ஒதுக்கப்பட்ட நிதியில் தரத்துடன் குடியிருப்புகளை கட்டி முடிக்க வேண்டும். இல்லையெனில் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்தார்.

    தரமற்று கட்டுமான பணி செய்த ஒப்பந்ததாரரை கலெக்டர் ஆர்த்தி எச்சரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இந்த நிலையில் ஊத்துக்காடு ஊராட்சியில் தரமற்ற முறையில் இருளர் குடியிருப்பு வீடுகளை கட்டிய விவகாரத்தில் 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

    வாலாஜாபாத் ஒன்றிய உதவி பொறியாளர் சாருலதா, கள ஆய்வாளர் சுந்தரவதனம் ஆகியோரை சஸ்பெண்டு செய்து கலெக்டர் ஆர்த்தி அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

    கட்டுமானப்பணி செய்து வரும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    • புகையிலை பொருட்களை விற்பனை செய்தவழக்கில் கைது செய்யப்பட்டர்.
    • காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகை யில் குற்றச்செயல்களில் ஈடுபட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை அருகே பூ.மலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியராஜ். இவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தவழக்கில் கைது செய்யப்பட்டர். இந்நிலையில் இவரிட மிருந்து உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில்பணிபுரிந்து வந்த முதல்நிலை போலீசார் பிரபாகரன் ரூ.3,000 கையூட்டாக பெற்றதாக கூறப்படுகிறது.

    இதையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் புகையிலை பொருட்கள் விற்பனை செய்து கைது செய்யப்பட்ட நபரிடம், கையூட்டு பெற்ற போலீசார் பிரபாகரனை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான கஞ்சா, குட்கா, கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கடத்துதல் மற்றும் விற்பனை செய்தல்போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளி களிடம் தொடர்பில் இருந்துகாவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகை யில் குற்றச்செயல்களில் காவல்துறையினர் ஈடுபட்டாலோ அல்லது துணைபோனாலோ அவர்கள் மீது துறைரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
    • கஞ்சா கடத்திய வி.ஏ.ஓ. பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டையை அடுத்த கத்தக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஜெயரவிவர்மா. இவர் ஆலங்குடி வட்டத்தில் உள்ள கோவிலூரில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஜெயரவிவர்மா மற்றும் இருவர் பயணம் செய்த சொகுசுக்காரை வல்லத்திராக்கோட்டை பகுதியில் போலீசார் சோதனை யிட்டபோது அவரது காரில் 1.700 கிலோ கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக போலீசார் ஜெயரவிவர்மா உள்ளிட்ட மூவரையும் கைது செய்து விசாரணை செய்து வரும் சூழலில், துறை ரீதியான நடவடிக்கையாக, ஜெயரவிவர்மாவை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து புதுக்கோட்டை கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


    • ஜிஷா மோளுக்கு கடந்த பல ஆண்டுகளாக கள்ளநோட்டு மாற்றும் மாபியா கும்பல்களுடன் தொடர்பு இருந்து வந்துள்ளது
    • லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஜிஷாமோள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள ஒரு தேசியமாக்கப்பட்ட வங்கிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த ஒரு வியாபாரி ரூ.50 ஆயிரத்தை செலுத்த சென்றார். வங்கி அதிகாரிகள் அவர் கொடுத்த ரூபாய் நோட்டுக்களை பரிசோதனை செய்தபோது, அதில் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் 7 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுபற்றி வங்கி அதிகாரிகள் ஆலப்புழா தெற்கு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து அந்த வியாபாரியை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பணத்தை அவரிடம் கொடுத்தது எடத்துவா விவசாயத்துறை பெண் அதிகாரியான ஜிஷாமோள் (வயது 39) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    அதைதொடர்ந்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியானது. ஜிஷா மோளுக்கு கடந்த பல ஆண்டுகளாக கள்ளநோட்டு மாற்றும் மாபியா கும்பல்களுடன் தொடர்பு இருந்து வந்துள்ளது. ஆனால், கள்ள நோட்டுகள் எங்கிருந்து கிடைத்தது என்ற விவரத்தை அவர் போலீசாரிடம் தெரிவிக்கவில்லை. ஜிஷாமோள் இதற்கு முன்பு மாராரிக்குளம் பகுதியில் அதிகாரியாக பணியாற்றினார். அப்போது அங்கு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஜிஷாமோள் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதைதொடர்ந்தே அவர் எடத்துவாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது தெரிந்தது.

    இந்தநிலையில் கள்ளநோட்டு வழக்கில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஜிஷாமோள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து சிறையில் உள்ள அவரை காவலில் எடுத்து விசாரித்தால் பல தகவல்கள் வெளிவரும் என அதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் வழியில் குப்புசாமி இறந்தார்.
    • பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் சயனைடு கலந்த மதுவை வாங்கி குடித்ததால் இறந்தது தெரியவந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கீழவாசல் படைவெட்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 68) மீன் வியாபாரி. கீழவாசல் பூமால்ராவுத்தன் கோவில் தெருவை சேர்ந்தவர் விவேக் (36) கார் டிரைவர்.

    இவர்கள் நேற்று மதியம் கீழவாசல் தற்காலிக மீன் மார்க்கெட் எதிரே உள்ள டாஸ்மாக் மதுபான பாரில் மது வாங்கி குடித்தனர். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தனர். ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் வழியில் குப்புசாமி இறந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி விவேக் இறந்தார்.

    இவர்கள் இருவரது உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் சயனைடு கலந்த மதுவை வாங்கி குடித்ததால் இறந்தது தெரியவந்தது. இவர்கள் ஒருவர் குடித்த மதுவை மற்றொருவர் குடித்ததால் இரண்டு பேரும் பலியாகினர்.

    தற்கொலையா ? அல்லது கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே டாஸ்மாக் பார் உரிமையாளர் செந்தில் நா.பழனிவேல், ஊழியர் காமராஜ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையில் வேலை பார்த்த மேற்பார்வையாளர் முருகன், விற்பனையாளர்கள் 3 பேர் என மொத்தம் 4 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சவுந்தரபாண்டியன் உத்தரவிட்டார்.

    • மயக்கவியல் துறை துணை பேராசிரியர் செய்யது தாகிர் உசேன், தங்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதாக 41 பெண்கள் வாய்மொழியாக புகார் தெரிவித்தனர்.
    • விசாகா கமிட்டியின் அறிக்கை முடிவு மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பப்பட்டது.

    மதுரை:

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மயக்கவியல் துறை பேராசிரியராக பணியாற்றி வந்த செய்யது தாகிர் உசேன் என்பவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    இந்த நடவடிக்கை குறித்து, மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் ரத்தினவேல் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மயக்கவியல் துறை துணை பேராசிரியர் செய்யது தாகிர் உசேன், தங்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதாக 41 பெண்கள் வாய்மொழியாக புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக விசாகா கமிட்டி அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.

    ராஜாஜி அரசு மருத்துவமனை துணை முதல்வர் டாக்டர் தனலட்சுமி தலைமையிலான விசாகா குழுவினர், இந்த விசாரணையை நடத்தினர்.

    கடந்த 10-ந் தேதி விசாரணை தொடங்கி 12-ந் தேதி வரை நடந்தது. புகார் கூறியவர்களில் 21 மருத்துவ மாணவிகள், ஒரு செவிலியர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அவர்கள், விசாகா கமிட்டி முன்பாக விசாரணைக்கு ஆஜரானபோது, ஒருவித அச்சத்தோடு இருந்தனர். செய்யது தாகிர் உசேன் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்ததாகவும், கேலியான பெயரை கூறி அழைத்ததாகவும், ஆபரேசன் தியேட்டருக்கு செல்லவே தயக்கமாக இருந்ததாகவும் விசாரணையின்போது, பெரும்பாலானவர்கள் கூறினர்.

    விசாகா கமிட்டியின் அறிக்கை முடிவு மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பப்பட்டது.

    ராஜாஜி அரசு மருத்துவமனையில் 62 சதவீதம் பெண் பணியாளர்கள் உள்ளனர். செய்யது தாகிர் உசேன் மீது 2019-ம் ஆண்டு முதல் பல்வேறு புகார்கள் வந்தன. ஆனால் எழுத்துப்பூர்வமாக கிடைக்கவில்லை. ஆனால் தற்போது 23 மாணவிகள் கைப்பட எழுதி புகார் அளித்துள்ளனர்.

    அதன் அடிப்படையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். எங்களுக்கு பழிவாங்கும் நோக்கம் இல்லை. பழிவாங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக செய்யது தாகிர் உசேன் கூறும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. இதுவரை எழுத்துப்பூர்வமாக அளித்த அனைத்து புகார்கள் மீதும் விசாரணை நடத்தப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • செங்கல்பட்டு அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் பயிற்சி பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது.
    • பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்ட டாக்டர் போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி டாக்டர்களை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டிருந்தார்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் பயிற்சி பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நேற்று முன்தினம் பயிற்சி டாக்டர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கருப்பு பட்டை அணிந்து பணியை புறக்கணித்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பணியில் உள்ள பயிற்சி பெண் டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட கோரியும், பயிற்சி பெண் டாக்டருக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டர் மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மீது நடவடிக்கை வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்ட டாக்டர் போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி டாக்டர்களை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டிருந்தார்.

    இதன் தொடர்ச்சியாக பாலியல் தொல்லை அளித்தாக கூறப்பட்ட டாக்டர் ஜிதேந்திரனை பணியிடை நீக்கம் செய்து செங்கல்பட்டு மருத்துவகல்லூரி நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    • ஆலங்குடியில் மின்வாரிய ஊழியர் பணியிடை நீக்கம் செய்யபட்டார்
    • சரத்குமார் உயர்மின் அழுத்த கம்பியில் ஏற்பட்ட பழுதை சரி செய்தபோது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள குப்பக்குடியை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 27). ஆலங்குடி மின்வாரிய அலுவலக ஊழியரான இவர், கீழாத்தூர் பகுதியில் உயர்மின் அழுத்த கம்பியில் ஏற்பட்ட பழுதை சரி செய்தபோது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இந்நிலையில், பணியின் போது கவனக்குறைவாக செயல்பட்டதாக ஆலங்குடி மின்வாரியத்தில் போர்மேனாக பணிபுரிந்த கணேசனை, பணியிடை நீக்கம் செய்து ஆலங்குடி செயற்பொறியாளர் உத்தரவிட்டார்.

    ×