என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விசாகா கமிட்டி"

    • பொம்மை முதலமைச்சரின் நிர்வாக சீர்கேட்டிற்கு மற்றுமொரு உதாரணம் சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி.
    • திமுக-வின் அவல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பெண்கள் மரியாதையுடனும், கௌரவத்துடனும், பாதுகாப்புடனும் வாழத் தகுதியற்ற மாநிலமாக தமிழ் நாடு மாறிவிட்டதற்கு மற்றும் ஒரு சம்பவம் சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் நடந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

    அப்பாவி பெண்களை 'சார்'-களுக்கு இரையாக்கும் ஒருசில திமுக நிர்வாகிகளின் லீலைகள் ஒருபுறம் தொடர்ந்தாலும், மறுபுறம் கல்வியைக் கற்பிக்கும் ஒருசில ஆசிரியர்கள் தங்கள் வரம்புகளை மீறி உளவியல் ரீதியாக பெண்களை, குறிப்பாக உடன் பணியாற்றும் ஆசிரியைகளையும், மாணவிகளையும் தகாத வார்த்தைகளில் பேசுவதும், வரம்பு மீறிய செயல்களில் ஈடுபடுவதும் இப்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    'சென்னை பல் மருத்துவக் கல்லூரியில்' பணிபுரியும் ஒரு துறையின் தலைவர், உடன் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் கல்வி கற்கும் மாணவிகளிடம் ஆபாச வார்த்தைகளைப் பேசுவது; உடல் உருவ அமைப்பை கேலி செய்வது; அவர்களை வீடியோ படங்கள் எடுப்பது; பேசுவதை ரெக்கார்டு செய்வது போன்ற தகாத செயல்களில் ஈடுபட்டு வருவதால், அக்கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியைகளும், மாணவிகளும் தினம் தினம் மன உளைச்சலைச் சந்தித்து அவதியுற்று வருகின்றனர்.

    ஒரு துறையின் தலைவர் இவ்வாறு நடந்துகொள்வதை கண்டித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டியும், பாதிக்கப்பட்ட பெண்கள் கடந்த 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதமே கல்லூரி நிர்வாகத்திடம், தகாத செயல்களில் ஈடுபடும் பேராசிரியரைப் பற்றி புகார் அளித்தும், பல் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை; அவரது செயல்களைக் கண்டிக்கவும் இல்லை. இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட ஒரு பேராசிரியை இந்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக நாளிதழ்களில் செய்திகள் வந்துள்ளன.

    பெண்கள் பணிபுரியும் இடங்களில் `விசாகா கமிட்டி' அமைக்கப்பட வேண்டும் என்ற வழிகாட்டுதல் என்ன ஆனது? மாணவிகள் புகார் கொடுத்தும் ஒருவருட காலமாக

    ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு எந்த அரசியல் தலைவரின் தலையீடு, யாருடைய அழுத்தம்? போன்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

    ஏற்கெனவே, அண்ணா பல்கலைக்கழக பாலியல் புகாரில் `விசாகா கமிட்டி' பற்றி அமைச்சர் ஒரு பதிலும், காவல் ஆணையாளர் ஒரு பதிலும் கூறி இருந்தது அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்த நிலையில், தற்போது, விடியா ஸ்டாலின் மாடல் அரசு இந்தப் பல் மருத்துவக் கல்லூரிக்கு `விசாகா கமிட்டி' குறித்து என்ன பதில் அளிக்கப் போகிறது? இந்நிகழ்வு, இந்த விடியா திமுக அரசின் கையாலாகாத்தனத்தை வெட்ட வெளிச்சமாகக் காட்டுகிறது.

    மாதா, பிதா, குரு, தெய்வம் என்று ஆசிரியரை தெய்வமாக வணங்கும் வழியில், 'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்' எனும் பாரதியின் வரிகள் நமக்கு நினைவுக்கு வருகின்றன.

    ஆனால் இன்று, பெண்களை இழிவுபடுத்துவது மட்டுமல்லாமல், 'பல சார்களுக்கு இரையாக்கும் நிகழ்வுகளும்' அன்றாடம் நடந்த வண்ணம் இருந்தாலும், இதைப்பற்றி எந்தக் கவலையும் இன்றி தினம் தினம் மக்களை ஏமாற்றும் விளம்பர மாடல் முதலமைச்சரின் நிர்வாகச் சீர்கேட்டால் இன்று தமிழ் நாடு, பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாகத் திகழ்கிறது.

    பெண் பிள்ளைகளை பள்ளிக்கும், கல்லூரிக்கும் அனுப்புவதற்கே பெற்றோர்கள் அஞ்சி நடுங்கும் நிலை இந்த நீர்வாகச் சீர்கேடான ஆட்சியில் ஏற்பட்டுள்ளது கொடுமையிலும் கொடுமை. இதற்கொரு முடிவு கட்டும்வரை நாங்கள் ஓயமாட்டோம்.

    "வேலியே பயிரை மேய்வது போல்" இன்று கல்வியை கற்றுக்கொடுக்கும் கல்வி வளாகங்களிலேயே பாலியல் வன்கொடுமைகளும், பெண்களுக்கு எதிரான குற்றங்களும் நடைபெறுவதற்கு, எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    நிர்வாகத் திறமையற்ற பொம்மை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இனியாவது பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதுடன், தமிழ் நாட்டில் எந்த இடத்தில் பெண்கள் பாதிக்கப்பட்டாலும்,

    மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தயங்காது என்று எச்சரிக்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சப்-இன்ஸ்பெக்டர் வீரணன், போலீஸ்காரர் கண்ணன் ஆகியோர் சரண்யாவிற்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது.
    • பாலியல் தொல்லை தொடர்பாக சரண்யா மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னியிடம் புகார் செய்தார்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஆவியூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் வீரணன், போலீஸ்காரர் கண்ணன் ஆகியோர் பணிபுரிகின்றனர். அங்கு வரவேற்பாளராக பெண் போலீஸ் சரண்யா (வயது 28) என்பவர் பணியில் சேர்ந்துள்ளார்.

    இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் வீரணன், போலீஸ்காரர் கண்ணன் ஆகியோர் சரண்யாவிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னியிடம் புகார் செய்தார்.

    அதன்பேரில் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரனுக்கு டி.ஐ.ஜி. உத்தரவிட்டார். டி.ஐ.ஜி. உத்தரவின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் வீரணன் மற்றும் போலீஸ்காரர் கண்ணன் ஆகிய இருவரும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அவர்களின் மீது விசாகா கமிட்டி விசாரணை நடைபெற்று வருவதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் தெரிவித்துள்ளார்.

    • மயக்கவியல் துறை துணை பேராசிரியர் செய்யது தாகிர் உசேன், தங்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதாக 41 பெண்கள் வாய்மொழியாக புகார் தெரிவித்தனர்.
    • விசாகா கமிட்டியின் அறிக்கை முடிவு மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பப்பட்டது.

    மதுரை:

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மயக்கவியல் துறை பேராசிரியராக பணியாற்றி வந்த செய்யது தாகிர் உசேன் என்பவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

    இந்த நடவடிக்கை குறித்து, மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் ரத்தினவேல் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மயக்கவியல் துறை துணை பேராசிரியர் செய்யது தாகிர் உசேன், தங்களை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதாக 41 பெண்கள் வாய்மொழியாக புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக விசாகா கமிட்டி அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.

    ராஜாஜி அரசு மருத்துவமனை துணை முதல்வர் டாக்டர் தனலட்சுமி தலைமையிலான விசாகா குழுவினர், இந்த விசாரணையை நடத்தினர்.

    கடந்த 10-ந் தேதி விசாரணை தொடங்கி 12-ந் தேதி வரை நடந்தது. புகார் கூறியவர்களில் 21 மருத்துவ மாணவிகள், ஒரு செவிலியர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அவர்கள், விசாகா கமிட்டி முன்பாக விசாரணைக்கு ஆஜரானபோது, ஒருவித அச்சத்தோடு இருந்தனர். செய்யது தாகிர் உசேன் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்ததாகவும், கேலியான பெயரை கூறி அழைத்ததாகவும், ஆபரேசன் தியேட்டருக்கு செல்லவே தயக்கமாக இருந்ததாகவும் விசாரணையின்போது, பெரும்பாலானவர்கள் கூறினர்.

    விசாகா கமிட்டியின் அறிக்கை முடிவு மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பப்பட்டது.

    ராஜாஜி அரசு மருத்துவமனையில் 62 சதவீதம் பெண் பணியாளர்கள் உள்ளனர். செய்யது தாகிர் உசேன் மீது 2019-ம் ஆண்டு முதல் பல்வேறு புகார்கள் வந்தன. ஆனால் எழுத்துப்பூர்வமாக கிடைக்கவில்லை. ஆனால் தற்போது 23 மாணவிகள் கைப்பட எழுதி புகார் அளித்துள்ளனர்.

    அதன் அடிப்படையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். எங்களுக்கு பழிவாங்கும் நோக்கம் இல்லை. பழிவாங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக செய்யது தாகிர் உசேன் கூறும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. இதுவரை எழுத்துப்பூர்வமாக அளித்த அனைத்து புகார்கள் மீதும் விசாரணை நடத்தப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையிலான போக்சோ-2012 சட்டம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் வினீத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷாங் சாய் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பள்ளிகளில் பாலியல் குற்றங்கள் நிகழ்ந்தால் உடனடியாக காவல்துறைக்கு அச்சமில்லாமல் தகவல் தெரிவிக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் அதனை மறைக்க கூடாது. 

    அதேபோல் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி மற்றும் புகார் தெரிவிப்பதற்கான தொடர்பு எண்களை அச்சிட வேண்டும், விசாகாகமிட்டி அமைக்கப்படாத பள்ளிகளில் உடனடியாக அவற்றை அமைத்திட வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
    பாலியல் புகார்கள் பற்றி விசாரிக்க கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாகா குழுவை வேறு அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.
    சென்னை:

    பாலியல் புகார்கள் பற்றி விசாரிக்க கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாகா குழுவை மாற்றியமைக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    காவல்துறையில் பெண் காவலர்கள், பெண் அதிகாரிகள் அளிக்கும் பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க, கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையில், கூடுதல் டி.ஜி.பி. அருணாச்சலம், டி.ஐ.ஜி. தேன்மொழி, மூத்த நிர்வாக அதிகாரி ரமேஷ் பாபு மற்றும் ஓய்வுபெற்ற எஸ்.பி. சரஸ்வதி அடங்கிய குழுவை அமைத்து கடந்த 17-ந்தேதி தமிழக டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

    இந்த குழு சட்டப்படி அமைக்கப்படவில்லை எனக்கூறி, சென்னை சூளை மேட்டைச் சேர்ந்த வக்கீல் பிரேம் ஆனந்த் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.

    சட்டப்படி விசாகா குழுவில் ஒரு தலைமை அதிகாரியும் குறைந்தது மூன்று உறுப்பினர்களும் இடம்பெற்றிருக்க வேண்டும். அவர்களில் ஒருவர் பெண்கள் அமைப்பு அல்லது தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளாக இருக்க வேண்டும்.

    ஆனால் டி.ஜி.பி. அமைத்துள்ள இந்த குழுவில் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த உறுப்பினர்கள் யாரும் இடம் பெறவில்லை. மேலும் இந்த குழு உயர் அதிகாரிகளை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.

    மேலும் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் சட்டவிதிகளை பின்பற்றி, விசாகா குழுக்களை அமைக்க உள்துறை செயலாளர், டி.ஜி.பி. உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும் என்றும், அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் மற்றும் அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுத்துறை செயலாளர்களுக்கும், டி.ஜி.பி.க்கும் உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கூறியிருந்தார்.

    இந்த மனு தலைமை நீதிபதி தஹிலரமானி, நீதிபதி எம்.துரைசாமி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை வேறு அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. #tamilnews
    பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவர் ஐ.ஜி. மீது பாலியல் புகார் கூறியது தொடர்பாக விசாகா கமிட்டி இருவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. #Vishakacommittee
    சென்னை:

    சென்னையில் பணியாற்றும் பெண் போலீஸ் சூப்பிரண்டு ஒருவர் தனது மேல் அதிகாரியான ஐ.ஜி. மீது பாலியல் புகார் தெரிவித்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புகாருக்குள்ளாகி இருக்கும் ஐ.ஜி. சென்னையில் துணை கமி‌ஷனராகவும், வெளிமாவட்டங்களில் டி.ஐ.ஜி.யாகவும் பணியாற்றியவர். போலீஸ் துறையில் நியாயமான அதிகாரி என்றும் பெயர் எடுத்தவர். இதனால் அவர் மீது கூறப்பட்டுள்ள பாலியல் புகார் உயர் போலீஸ் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பான பேச்சாக மாறியுள்ளது.

    காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள் மற்றும் அரசு பெண் ஊழியர்கள் ஆகியோருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசாகா கமிட்டிக்கு சில நாட்களுக்கு முன்னர்தான் புதிதாக நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர்.

    கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையிலான இந்த கமிட்டியில் கூடுதல் டி.ஜி.பி. அருணாசலம், டி.ஐ.ஜி. தேன்மொழி, ஓய்வு பெற்ற கூடுதல் சூப்பிரண்டு சரஸ்வதி, டி.ஜி.பி. அலுவலக மூத்த நிர்வாக அதிகாரி ரமேஷ் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.


    இந்த கமிட்டியின் முதல் கூட்டம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மாநில குற்ற ஆவண காப்பக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. காலை 11.30 மணி அளவில் கூடிய இந்த கூட்டத்துக்கு கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமை தாங்கினார். கமிட்டியில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் ஐ.ஜி. மீது பெண் போலீஸ் சூப்பிரண்டு கூறி இருக்கும் பாலியல் குற்றச்சாட்டு குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    புகார் கூறி இருக்கும் பெண் அதிகாரிக்கும், புகாருக்குள்ளான போலீஸ் ஐ.ஜி.க்கும் விரைவில் சம்மன் அனுப்பி அவர்களிடம் விசாரணை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    விசாகா கமிட்டியின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தபடுபவர்கள் மீதான குற்றச்சாட்டில் உண்மை இருந்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது.

    இதன் மூலம் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பெண் போலீஸ் அதிகாரி மீதான பாலியல் புகார் பற்றி உரிய முறையில் பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்படும் என்று கமிட்டி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். எனவே ஐ.ஜி. மீதான பாலியல் விவகாரத்தில் விசாகா கமிட்டி எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? என்பது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இன்றைய கூட்டம் முடிந்த பின்னர் விரைவில் மீண்டும் விசாகா கமிட்டி கூட உள்ளது. அப்போது முதலில் பெண் போலீஸ் சூப்பிரண்டை வரவழைத்து விசாரணை நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விசாரணையில் அவர் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஐ.ஜி.யிடமும் விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. #Vishakacommittee
    ×