

விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஆவியூர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் வீரணன், போலீஸ்காரர் கண்ணன் ஆகியோர் பணிபுரிகின்றனர். அங்கு வரவேற்பாளராக பெண் போலீஸ் சரண்யா (வயது 28) என்பவர் பணியில் சேர்ந்துள்ளார்.
இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் வீரணன், போலீஸ்காரர் கண்ணன் ஆகியோர் சரண்யாவிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னியிடம் புகார் செய்தார்.
அதன்பேரில் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரனுக்கு டி.ஐ.ஜி. உத்தரவிட்டார். டி.ஐ.ஜி. உத்தரவின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் வீரணன் மற்றும் போலீஸ்காரர் கண்ணன் ஆகிய இருவரும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அவர்களின் மீது விசாகா கமிட்டி விசாரணை நடைபெற்று வருவதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் தெரிவித்துள்ளார்.