என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New Year Celebration"

    • மருத்துவர் அறையில் வெளிநாட்டு மதுபாட்டில்கள், அருகில் அசைவ உணவுகள், நொறுக்கு தீனியுடன் மது விருந்து நடந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
    • இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை தலைமை மருத்துவர் மீனாட்சி விசாரணைக்கு உத்தரவிட்டார்.

    சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே செம்பனூர் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. கல்லல் மற்றும் அதனை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இங்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். பிரசவம் மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு, புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு என இரண்டு கட்டிடத்தில் இந்த மருத்துவமனை இயங்கி வருகிறது. வட்டார மருத்துவ அலுவலர் உட்பட நான்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில் புத்தாண்டு நள்ளிரவு நடந்த விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வந்த நபர் அவசர சிகிச்சை பகுதிக்கு சென்று பார்த்தபோது மருத்துவர் இல்லை என்றதும் உள்ளே மருத்துவர் அறையில் மருத்துவர் உள்ளாரா? என பார்க்கச் சென்றுள்ளார். அப்போது மருத்துவர் அறையில் வெளிநாட்டு மதுபாட்டில்கள், அருகில் அசைவ உணவுகள், நொறுக்கு தீனியுடன் மது விருந்து நடந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனை அந்த நபர் வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.

    இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட சுகாதாரத்துறை தலைமை மருத்துவர் மீனாட்சி விசாரணைக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து விசாரணை முடிந்த நிலையில் செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 31-ந் தேதி பணியில் இருந்த மருத்துவர்கள் சசிகாந்த், கவுசிக், நவின்குமார், மணிரத்னம் ஆகிய நான்கு மருத்துவர்களும் மற்றும் மருந்தாளுநர் கமலக்கண்ணன் ஆகிய 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    அது மட்டும் அல்லாமல் அன்று பணியில் இருந்த செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தலைமை மருத்துவர் மீனாட்சி தெரிவித்துள்ளார்.

    ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்கு வரும் பெண்கள், குழந்தை பிறந்த பின்பு இந்த வளாகத்தில் தான் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சி.சி.டி.வி. கேமராக்கள் இயங்கவில்லை என்றால் பிறக்கும் குழந்தைகளை யாராவது திருடி சென்றால் கூட கண்டுபிடிக்க முடியாத சூழல் உள்ளது. எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    • இளம்பெண்கள் அதிக மதுபோதையில் சாலைகளில் தடுமாறி விழுவதும், மயக்க நிலையில் இருப்பதும் பதிவாகியுள்ளது.
    • இந்திய நகரங்களின் இரவு நேரக் கலாச்சாரம் குறித்து காரசாரமான விவாதம் நடந்து வருகிறது.

    புத்தாண்டு கொண்டாட்டத்துடன் 2026 ஆண்டு ஆண்டு நேற்று இனிதே தொடங்கியது. டிசம்பர் 31 இரவில் புத்தாண்டை வரவேற்க இந்தியாவெங்கும் பலர் வீதிகளில் திரண்டனர்.

    அதே சமயம் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இளைஞர்கள், பாட்டு, கச்சேரி, பார்ட்டி என அன்றைய இரவு புத்தாண்டை கொண்டாடித் தீர்த்தனர்.

    அந்த வகையில் நாடு முழுவதிலுமிருந்து வந்து, இளைஞர்கள் அதிகம் பணியாற்றும் கர்நாடக தலைநகர் பெங்களூருவிலும் இரவில் கொண்டாட்டம் களைகட்டியது.

    ஆனால் பல இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் அன்றைய இரவு மது மற்றும் போதையின் பிடியில் வீதிகளில் தள்ளாடிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    இளைஞர்கள் மத்தியில் வளர்த்து வரும் போதைக் கலாச்சாரம் குறித்த கவலையை இவை ஏற்படுத்தி உள்ளன. பலரும் இந்த வீடியோக்களை தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    இந்த வீடியோக்களில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் அதிக மதுபோதையில் சாலைகளில் தடுமாறி விழுவதும், சிலர் மயக்க நிலையில் இருப்பதும் பதிவாகியுள்ளது. 

    குறிப்பாக, பெங்களூருவின் புகழ்பெற்ற எம்.ஜி. சாலைமற்றும் இந்திரா நகர் பகுதிகளில் இதுபோன்ற காட்சிகள் அதிகமாகக் காணப்பட்டன. அதேபோல டெல்லி அருகே உள்ள குரேகானிலும் இதுபோன்ற காட்சிகள் பதிவாகி உள்ளன.

    இந்த வீடியோக்கள் பகிரப்பட்டு, இந்திய நகரங்களின் இரவு நேரக் கலாச்சாரம் குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.  

    • பக்தர்கள் வருகையால் வாகன நெருக்கடியால் சாலை இருபுறம் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் திருச்செந்தூர் நகரத்திற்குள் இருந்து கோவிலுக்கு செல்ல பல மணி நேரம் ஆகிறது.
    • தெருக்களில் பக்தர்கள் வந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தியதால் பொதுமக்கள் அவசர தேவைக்கு வெளியே வர சிரமப்பட்டனர்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கார், வேன், பஸ் மற்றும் ரெயில் மூலம் வந்து கோவிலில் குவிந்தனர்.

    தற்போது ஐயப்ப பக்தர்கள் சீசன் என்பதாலும், மார்கழி மாதம் என்பதாலும் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வந்தும், அலகு குத்தி வந்தும் அதிகாலையில் இருந்தே கடல் மற்றும் நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இன்று கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 5மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 6 மணிக்கு காலசந்தி, 7.30 மணிக்கு உச்சி கால அபிஷேகம், 9 மணிக்கு உச்சிகால தீபாராதனை நடந்தது.

    இன்று பிரதோஷம் என்பதால் மதியம் 2.30 மணிக்கு அபிஷேகம் நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 7.30 மணிக்கு ஏகாந்தம், 8 மணிக்கு பள்ளியறை பூஜை நடக்கிறது.

    பக்தர்கள் வருகையால் வாகன நெருக்கடியால் சாலை இருபுறம் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் திருச்செந்தூர் நகரத்திற்குள் இருந்து கோவிலுக்கு செல்ல பல மணி நேரம் ஆகிறது.

    தெருக்களில் பக்தர்கள் வந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தியதால் பொதுமக்கள் அவசர தேவைக்கு வெளியே வர சிரமப்பட்டனர்.

    பொதுவாக முக்கிய நாட்களில் பக்தர்கள் வாகனங்களை நகரப் பகுதியில் வராமல் ஊருக்கு வெளியே தற்காலிக வாகன நிறுத்தத்தில் நிற்க ஏற்பாடுகள் செய்து உள்ளூர் பொதுமக்களுக்கு சிரமம் இல்லாமல் இருக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • இந்தப் புத்தாண்டு எப்படி இருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்கள்.
    • பலர் தமிழக வெற்றிக்கழக கொடிகளோடு திரண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டதையும் காண முடிந்தது.

    சென்னை மாநகரப் பகுதிகளில் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களும், இளம் பெண்களும் புது வருடம் பிறந்தவுடன் மிகுந்த உற்சாகத்தோடு ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

    இளம் பெண்களும், இளைஞர்களும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது அவர்களிடம் நள்ளிரவில் பத்திரிகையாளர்கள் இந்தப் புத்தாண்டு எப்படி இருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்கள்.

     

    இதற்கு பதிலளித்த இளம்பெண்கள் பலர் புத்தாண்டில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வர வேண்டும். தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஓட்டு போடுங்கள் என்று கூறினார்கள்.

    பலர் தமிழக வெற்றிக்கழக கொடிகளோடு திரண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டதையும் காண முடிந்தது.

    • பழனி முருகன் கோவிலில் அடுத்த மாதம் 1-ந்தேதி தைப்பூச திருவிழா என்பதால் தற்போதே பாதயாத்திரை பக்தர்கள் பழனி நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
    • மலைக்கோவிலின் வெளிப்பிரகாரம் மற்றும் பொது, சிறப்பு, கட்டண தரிசன வழிகளிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் இருந்தது.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றதாகும். இங்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். வாரவிடுமுறை, விசேஷ நாட்களில் பக்தர்கள் வருகை இருமடங்காக இருக்கும். அதன்படி ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    அதிகாலை முதலே அடிவாரம், மலைக்கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அரையாண்டு விடுமுறை என்பதாலும் ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் பழனிக்கு வந்தனர். பழனி முருகன் கோவிலில் அடுத்த மாதம் 1-ந்தேதி தைப்பூச திருவிழா என்பதால் தற்போதே பாதயாத்திரை பக்தர்கள் பழனி நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

    அதன்படி மதுரை, திருச்சி என பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாகவும், அலகு குத்தியும் பழனி அடிவார பகுதியில் கிரிவலம் வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டத்தால் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவில் செல்வதற்கான படிப்பாதை, யானைப்பாதை மற்றும் மின்இழுவை ரெயில்நிலையம், ரோப்கார் நிலையத்தில் கூட்டம் அதிகளவில் இருந்தது.

    கூட்டம் காரணமாக அடிவாரத்தில் இருந்து பக்தர்கள் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக மலைக்கோவில் செல்லவும், தரிசனம் முடிந்து திரும்பும் பக்தர்கள் படிப்பாதை வழியாக வரவும் ஒருவழிப்பாதை அமல்படுத்தப்பட்டது. அதோடு கூட்டம் அலைகடலென இருந்ததால் பக்தர்கள் பகுதி, பகுதியாக அனுப்பப்பட்டனர்.

    மேலும் மலைக்கோவிலின் வெளிப்பிரகாரம் மற்றும் பொது, சிறப்பு, கட்டண தரிசன வழிகளிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் இருந்தது. பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்ததால் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பழனி மட்டுமின்றி திருஆவினன்குடி கோவில், பெரியநாயகி அம்மன் கோவில், பெரியாவுடையார் கோவிலிலும் புத்தாண்டையொட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    புத்தாண்டை முன்னிட்டு பழனியில் தரிசனம் செய்ய வெளியூர்களில் இருந்து கார், வேன், பஸ்களில் பக்தர்கள் வந்தனர். இதனால் அடிவாரம், குளத்துரோடு, கிரிவீதிகள், சன்னதிவீதி, பூங்காரோடு ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுற்றுலா பஸ் நிலையம் வாகனங்களால் நிரம்பி வழிந்தது. அதேபோல் பழனியில் தரிசனம் முடித்த பின்பு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பஸ்நிலையத்தில் குவிந்ததால் அங்கும் கூட்டம் இருந்தது.

    • படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் கோலாகலமாக நடந்து முடிந்தது.
    • ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

    ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.

    விஜய் நடிப்பில் வெளியாக உள்ள 'ஜன நாயகன்' தான் விஜயின் கடைசி படம் என்று கூறப்படுவதால் இப்படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. அண்மையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் கோலாகலமாக நடந்து முடிந்தது.

    இதனை தொடர்ந்து, ஆங்கில புத்தாண்டையொட்டி 'ஜன நாயகன்' படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள போஸ்டரில், 'நல்லா இருப்போம்... நல்லா இருப்போம்... எல்லோரும் நல்லா இருப்போம்...' என்று வரிகளுடன் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். 



    • இந்த 2026ஆம் ஆண்டு, தமிழகத் தேர்தல் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம் என்பதை மக்கள் நிரூபிக்கப் போவது நிச்சயம்.
    • வளமான, நலமான, பலமான தமிழகம் ஒளிரப் போகிறது.

    ஒவ்வொரு வருடமும் ஜனவரி 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டு நிறைவடைந்து 2026-ம் ஆண்டு பிறந்துள்ளது.

    புத்தாண்டு தினத்தை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டின. தலைநகர் டெல்லி முதல் சென்னை வரை கொண்டாட்டங்களில் மக்கள் மூழ்கினர்.

    புத்தாண்டையொட்டி இந்தியாவில் உள்ள வழிபாட்டு தலங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகாலையில் இருந்து வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    மேலும், ஆங்கில புத்தாண்டையொட்டி மக்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

    தமிழக அரசியலின் நேர்மைமிகு நம்பிக்கை ஒளியாய், நாளைய தலைமுறைகளின் தலைசிறந்த வழியாய் நாமே மாறுவோம்.

    புதிதாகப் பிறக்கும் இந்த 2026ஆம் ஆண்டு, தமிழகத் தேர்தல் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம் என்பதை மக்கள் நிரூபிக்கப் போவது நிச்சயம்.

    வாகை சூடும் வரலாறு திரும்பப் போகிறது.

    வளமான, நலமான, பலமான தமிழகம் ஒளிரப் போகிறது.

    மக்களுடன் மக்களாக இணைந்து

    அதை நம் தமிழக வெற்றிக் கழகம்தான் நிகழ்த்திக் காட்டப் போகிறது.

    வெற்றிச் சரித்திரம் படைக்கப் போகும் அந்த உறுதியை மனதிலும் செயலிலும் ஏற்று

    இப்புத்தாண்டை வரவேற்போம்.

    அனைவருக்கும் ஒளிமிக்க ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார். 



    • புத்தாண்டு தினத்தை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டின.
    • புத்தாண்டையொட்டி இந்தியாவில் உள்ள வழிபாட்டு தலங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன.

    சென்னை:

    நாடு முழுவதும் கொண்டாட்டத்துடன் புத்தாண்டை மக்கள் வரவேற்றனர்.

    தமிழகத்தில் சென்னை உட்பட பல இடங்களில் மக்கள் புதிய ஆண்டை வரவேற்றனர். ஒவ்வொரு வருடமும் ஜனவரி 1-ம் தேதி ஆங்கில புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டு நிறைவடைந்து 2026-ம் ஆண்டு பிறந்துள்ளது.

    புத்தாண்டு தினத்தை அடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாட்டங்கள் களைகட்டின. தலைநகர் டெல்லி முதல் சென்னை வரை கொண்டாட்டங்களில் மக்கள் மூழ்கினர்.


    சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஆட்டம், பாட்டத்துடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.

    புத்தாண்டையொட்டி இந்தியாவில் உள்ள வழிபாட்டு தலங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அதிகாலையில் இருந்து வழிபாட்டுத் தலங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    'மாலைமலர்' சார்பில் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    • மெரினா கடற்கரையில் புத்தாண்டையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டு உள்ளன.
    • புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று மாலை முதல் நாளை வரையில் பொதுமக்கள் கடலில் இறங்கவோ, குளிக்கவோ தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    2025-ம் ஆண்டு இன்று இரவுடன் விடைபெற்று நள்ளிரவு 12 மணிக்கு 2026-ம் ஆண்டு பிறக்கிறது.

    இதையொட்டி தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இன்று இரவு களைகட்டி காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு உள்ளன.

    குறிப்பாக சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகளிலும் இன்று இரவு புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    நட்சத்திர விடுதிகள் மற்றும் பண்ணை வீடுகளில் புத்தாண்டையொட்டி ஆட்டம், பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத் துக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இன்று பிற்பகலில் இருந்தே இளைஞர்கள் அதற்கு தயாரானார்கள்.

    மெரினா கடற்கரையில் புத்தாண்டையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டு உள்ளன. இன்று இரவு 9 மணியில் இருந்து மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் எந்தவித வாகனங்களுக்கும் அனுமதி அளிக்கப்படாது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    நள்ளிரவு 12 மணியளவில் புத்தாண்டு பிறந்ததும் மெரினாவில் கூடியிருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஹேப்பி நியூ இயர் என உற்சாக குரல் எழுப்பி புத்தாண்டை வரவேற்கிறார்கள்.

    இந்த கொண்டாட்டத்தின்போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்காக சென்னை மாநகர் முழுவதும் 19 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    அனைத்து கடற்கரை பகுதிகள், கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் அனைத்திலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன.

    நீலாங்கரை, துரைப்பாக்கம், மதுரவாயல் பை பாஸ் சாலை மற்றும் ஜி.எஸ்.டி. ரோடு ஆகிய பகுதிகளிலும், தாம்பரம் ஆவடி, செங்குன்றம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் பைக்ரேசை கட்டுப் படுத்துவதற்காக 30 தனிப்படைகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இன்று இரவு 9 மணிக்கு பிறகு சென்னை மாநகரில் உள்ள 30 மேம்பாலங்கள் முழுமையாக மூடப்படுகிறது.

    சென்னையில் உள்ள 100-க்கும் மேற்பட்ட முக்கிய கோவில்கள், தேவாலயங்கள், இதர வழிபாட்டு தலங்கள், பொது இடங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று மாலை முதல் நாளை வரையில் பொதுமக்கள் கடலில் இறங்கவோ, குளிக்கவோ தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்காக மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தற்காலிக காவல் உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

    மெரினாவில் மணல் பரப்பில் இறங்குவதற்கு கூட இன்று இரவு போலீசார் அனுமதிக்க மாட்டார்கள். இதைத் தாண்டி யாராவது கடற்கரை மணல் பகுதிக்குள் நுழைவதை தடுப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    மெரினா, சாந்தோம் பகுதி மற்றும் காமராஜர் சாலையிலும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு உரிய அறிவுரைகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட இருக்கிறது. முக்கிய இடங்களில் டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு குற்றத் தடுப்பு நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட உள்ளன. மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் நன்கு நீச்சல் தெரிந்த வீரர்களையும் தயார் நிலையில் பணியமர்த்த உள்ளனர். கடலில் யாரும் மூழ்கிடாமல் உயிரிழப்பை தடுப்பதற்காக இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    அவசர மருத்துவ உதவிக்காக மெரினாவில் முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களின் அருகில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மருத்துவ குழுவினருடன் தயார் நிலையில் நிறுத்தி வைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் பாலியல் சீண்டல் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்கு சாதாரண உடைகளில் போலீசார் கண்காணிக்க உள்ளனர்.

    புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது தனியார் இடங்களில் கஞ்சா, அபின் உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்படுத்துவதற்கும் போலீசார் முழுமையாக தடை விதித்து உள்ளார்கள். இது தொடர்பாக சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து இருப்பவர்களிடம் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள். இந்த கூட்டத்தில் போதை பொருட்களை யாராவது பயன் படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த தடையை மீறி யாராவது போதைப் பொருட்களை பயன்படுத்தினால் அதுபற்றி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் போலீஸ் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் புத்தாண்டு கொண்டாட் டத்தின்போது நடைபெறும் மது விருந்துகளை இரவு 1 மணிக்குள் முடித்து விட வேண்டும் என்றும், போதையில் மோட்டார் சைக்கிள்கள், கார்களை பொதுமக்கள் ஓட்டக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை மீறி யாராவது போதையில் வாகனங்களை ஓட்டினால் அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசு வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இப்படி சென்னை, கோவை, திருச்சி மதுரை, நெல்லை, கன்னியாகுமரி என அனைத்து முக்கிய மாநகர பகுதிகளிலும் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளன. தமிழகம் முழு வதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்புக்காக உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

    • அதிகம் விற்பனையாகக் கூடிய டாஸ்மாக் கடைகளில் ஒரு வாரத்திற்கான சரக்கு இருப்பு வைக்கப்படுகிறது.
    • தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு ரூ.150 கோடி மது விற்பனையாகும்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டம் இன்று இரவு தொடங்குகிறது.

    நாளை (1-ந்தேதி) அரசு விடுமுறை என்பதால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபானங்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன. அதிகம் விற்பனையாகக் கூடிய டாஸ்மாக் கடைகளில் ஒரு வாரத்திற்கான சரக்கு இருப்பு வைக்கப்படுகிறது.

    சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகள், ஓட்டல்களில் உள்ள பார்களில் மது விற்பனை அமோகமாக நடைபெறும் என்பதால் அனைத்து வகையான சரக்குகளும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதனை ஒட்டிய புறநகர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தை விட விற்பனை களை கட்டும் என்பதால் எல்லா கடைகளிலும் குறைந்த ரக மது பானங்கள் குவிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி வரை கடைகள் செயல்படும் என்பதால் அதற்கு முன்பே மதுபானங்களை மொத்தமாக வாங்கி செல்ல குடிமகன்கள் முடிவு செய்துள்ளனர். தற்போது குளிர் அதிகமாக இருப்பதால் பிராந்தி, விஸ்கி, ரம் வகைகள் அதிகளவில் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நாளை புத்தாண்டு விற்பனை அனல் பறக்கக்கூடும். பகல் 12 மணி முதல் இரவு வரை மதுக்கூடங்கள் நிரம்பி இருக்கும். சரக்கு இல்லை என்று சொல்லாத அளவிற்கு போதுமான அளவு எல்லா கடைகளிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு ரூ.150 கோடி மது விற்பனையாகும். புத்தாண்டில் கூடுதலாக ரூ.100 கோடிக்கு மது விற்பனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • வண்ணார்பேட்டையில் 2 ஓட்டல்கள், சந்திப்பு பகுதியில் 2 ஓட்டல்களில் புத்தாண்டையொட்டி நள்ளிரவு கொண்டாட்டங்கள் நடக்கும்.
    • அதிக வழக்குகளில் கைதாகி தற்போது வெளியில் சுற்றித் திரியும் நபர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

    நெல்லை:

    ஆங்கில புத்தாண்டு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. புத்தாண்டு கொண்டாட்டத்தில் எந்தவித அசம்பாவிதங்களும் நிகழாதவாறு தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    நெல்லை மாநகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் இன்று இரவில் இருந்து நாளை மறுநாள் அதிகாலை வரையிலும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு, வாகன சோதனை நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    நெல்லை மாநகர பகுதியில் சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட உள்ளனர். நாளை காலை முதல் 1-ந்தேதி இரவு வரையிலும் போலீஸ் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும். விடிய விடிய வாகன சோதனை நடத்தப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம், கே.டி.சி.நகர் மேம்பாலம், சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் உள்ளிட்ட இடங்களிலும் இளைஞர்கள் ரேஸ் செல்வதை தடுக்க ரோந்து நடத்தப்பட உள்ளது.

    நெல்லை மாநகரில் வண்ணார்பேட்டையில் 2 ஓட்டல்கள், சந்திப்பு பகுதியில் 2 ஓட்டல்களில் புத்தாண்டையொட்டி நள்ளிரவு கொண்டாட்டங்கள் நடக்கும். இதனால் அங்கும் சோதனை நடத்தப்பட உள்ளது.

    இதேபோல் மாவட்ட எல்லைகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உத்தரவிட்டுள்ளது. அனைத்து வாகனங்களும் தீவிரமாக பரிசோதனை செய்து அனுப்பிட வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார். புறநகர் பகுதிகளில் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் கூடங்குளம் அணுமின் நிலையம், காவல்கிணறு இஸ்ரோ ஆராய்ச்சி மையம் மற்றும் முக்கிய வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாநகரில் புத்தாண்டையொட்டி முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்கள், அதிக வழக்குகளில் கைதாகி தற்போது வெளியில் சுற்றித் திரியும் நபர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதில் பாளையங்கோட்டை போலீஸ் நிலையம் உள்பட சில போலீஸ் நிலையங்களில் ரவுடிகள் பட்டியலில் உள்ள ரவுடிகள் 10 பேர் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

    அதேநேரம் மாவட்டத்தில் இதுவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். சுமார் 1,345 பேர் ரவுடிகள் பட்டியலில் உள்ள நிலையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவின்பேரில், அவர்களை அந்தந்த உட்கோட்டத்தில் உள்ள துணை போலீஸ் சூப்பிரண்டுகளின் மேற்பார்வையில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் எனவும், அந்த ரவுடிகளால் அச்சுறுத்தல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கும் என புகார்கள் வந்தால் உடனடியாக அவர்களை கைது செய்திடவும் போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.

    • புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட வெளிமாநில சுற்றுலா பயணிகள் கடந்த ஒரு வாரமாக புதுச்சேரிக்கு படையெடுத்து வருகிறார்கள்.
    • புதுவை எல்லைகளில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படும்.

    புதுச்சேரி:

    நாளை மறுநாள் புத்தாண்டு பிறக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் வெகு விமர்சையாக நடைபெறும். புத்தாண்டை கொண்டாட வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு திரளுவார்கள்.

    அதுபோல் இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டமும் புதுச்சேரியில் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. புத்தாண்டை கொண்டாடப்படும் கடற்கரை சாலையில் அரசு சுற்றுலா துறை சார்பில் இசை நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.

    புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட வெளிமாநில சுற்றுலா பயணிகள் கடந்த ஒரு வாரமாக புதுச்சேரிக்கு படையெடுத்து வருகிறார்கள். இதனால் புதுச்சேரியில் தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் அறைகள் நிரம்பி வழிகின்றன. புதுச்சேரியில் உள்ள விடுதிகள் அனைத்தும் நிரம்பி விட்டதால் சுற்றுலா பயணிகள் புதுச்சேரி அருகே கோட்டக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் விடுதிகளை நோக்கி செல்கின்றனர்.

    புதுச்சேரி நகர் முழுவதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுவதால் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது.

    இந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து புதுச்சேரி போலீஸ் டி.ஐ.ஜி. சத்திய சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரியில் புத்தாண்டை பொதுமக்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில் காவல்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. புத்தாண்டை தினத்தன்று 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். புதுச்சேரி முழுவதும் போக்குவ ரத்து போலீசார் குவிக்கப் பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    புதுவை எல்லைகளில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படும்.

    புதுச்சேரியில் மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை கண்காணிக்க 50 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் சீருடையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி பணியில் ஈடுபடுவார்கள். மேலும் மதுகுடித்திருப்பதை கண்டறியும் கருவி (பிரீத் அனலைசர்) சோதனை மேற்கொள்வார்கள். இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணிக்கக்கூடாது. அதிக வேகத்தில் செல்லக்கூடாது இருசக்கர வாகனங்களில் சாகசங்கள் செய்யக்கூடாது அதிக இரைச்சல் எழுப்பக்கூடாது. இதனை இன்டர்செப்டர் வாகனம் மூலமாக கண்கா ணிக்கப்படும். இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×