என் மலர்
நீங்கள் தேடியது "New Year Celebration"
- வண்ணார்பேட்டையில் 2 ஓட்டல்கள், சந்திப்பு பகுதியில் 2 ஓட்டல்களில் புத்தாண்டையொட்டி நள்ளிரவு கொண்டாட்டங்கள் நடக்கும்.
- அதிக வழக்குகளில் கைதாகி தற்போது வெளியில் சுற்றித் திரியும் நபர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
நெல்லை:
ஆங்கில புத்தாண்டு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. புத்தாண்டு கொண்டாட்டத்தில் எந்தவித அசம்பாவிதங்களும் நிகழாதவாறு தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நெல்லை மாநகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் இன்று இரவில் இருந்து நாளை மறுநாள் அதிகாலை வரையிலும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு, வாகன சோதனை நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நெல்லை மாநகர பகுதியில் சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட உள்ளனர். நாளை காலை முதல் 1-ந்தேதி இரவு வரையிலும் போலீஸ் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும். விடிய விடிய வாகன சோதனை நடத்தப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம், கே.டி.சி.நகர் மேம்பாலம், சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் உள்ளிட்ட இடங்களிலும் இளைஞர்கள் ரேஸ் செல்வதை தடுக்க ரோந்து நடத்தப்பட உள்ளது.
நெல்லை மாநகரில் வண்ணார்பேட்டையில் 2 ஓட்டல்கள், சந்திப்பு பகுதியில் 2 ஓட்டல்களில் புத்தாண்டையொட்டி நள்ளிரவு கொண்டாட்டங்கள் நடக்கும். இதனால் அங்கும் சோதனை நடத்தப்பட உள்ளது.
இதேபோல் மாவட்ட எல்லைகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உத்தரவிட்டுள்ளது. அனைத்து வாகனங்களும் தீவிரமாக பரிசோதனை செய்து அனுப்பிட வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார். புறநகர் பகுதிகளில் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கூடங்குளம் அணுமின் நிலையம், காவல்கிணறு இஸ்ரோ ஆராய்ச்சி மையம் மற்றும் முக்கிய வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாநகரில் புத்தாண்டையொட்டி முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்கள், அதிக வழக்குகளில் கைதாகி தற்போது வெளியில் சுற்றித் திரியும் நபர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதில் பாளையங்கோட்டை போலீஸ் நிலையம் உள்பட சில போலீஸ் நிலையங்களில் ரவுடிகள் பட்டியலில் உள்ள ரவுடிகள் 10 பேர் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேநேரம் மாவட்டத்தில் இதுவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். சுமார் 1,345 பேர் ரவுடிகள் பட்டியலில் உள்ள நிலையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் உத்தரவின்பேரில், அவர்களை அந்தந்த உட்கோட்டத்தில் உள்ள துணை போலீஸ் சூப்பிரண்டுகளின் மேற்பார்வையில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் எனவும், அந்த ரவுடிகளால் அச்சுறுத்தல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கும் என புகார்கள் வந்தால் உடனடியாக அவர்களை கைது செய்திடவும் போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.
- புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட வெளிமாநில சுற்றுலா பயணிகள் கடந்த ஒரு வாரமாக புதுச்சேரிக்கு படையெடுத்து வருகிறார்கள்.
- புதுவை எல்லைகளில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படும்.
புதுச்சேரி:
நாளை மறுநாள் புத்தாண்டு பிறக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் வெகு விமர்சையாக நடைபெறும். புத்தாண்டை கொண்டாட வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு திரளுவார்கள்.
அதுபோல் இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டமும் புதுச்சேரியில் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. புத்தாண்டை கொண்டாடப்படும் கடற்கரை சாலையில் அரசு சுற்றுலா துறை சார்பில் இசை நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.
புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட வெளிமாநில சுற்றுலா பயணிகள் கடந்த ஒரு வாரமாக புதுச்சேரிக்கு படையெடுத்து வருகிறார்கள். இதனால் புதுச்சேரியில் தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் அறைகள் நிரம்பி வழிகின்றன. புதுச்சேரியில் உள்ள விடுதிகள் அனைத்தும் நிரம்பி விட்டதால் சுற்றுலா பயணிகள் புதுச்சேரி அருகே கோட்டக்குப்பம் பகுதியில் உள்ள தனியார் விடுதிகளை நோக்கி செல்கின்றனர்.
புதுச்சேரி நகர் முழுவதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுவதால் போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது.
இந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து புதுச்சேரி போலீஸ் டி.ஐ.ஜி. சத்திய சுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரியில் புத்தாண்டை பொதுமக்கள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடும் வகையில் காவல்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. புத்தாண்டை தினத்தன்று 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். புதுச்சேரி முழுவதும் போக்குவ ரத்து போலீசார் குவிக்கப் பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
புதுவை எல்லைகளில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படும்.
புதுச்சேரியில் மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை கண்காணிக்க 50 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்கள் சீருடையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி பணியில் ஈடுபடுவார்கள். மேலும் மதுகுடித்திருப்பதை கண்டறியும் கருவி (பிரீத் அனலைசர்) சோதனை மேற்கொள்வார்கள். இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணிக்கக்கூடாது. அதிக வேகத்தில் செல்லக்கூடாது இருசக்கர வாகனங்களில் சாகசங்கள் செய்யக்கூடாது அதிக இரைச்சல் எழுப்பக்கூடாது. இதனை இன்டர்செப்டர் வாகனம் மூலமாக கண்கா ணிக்கப்படும். இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 240 பஸ்களும், நாளை 255 பஸ்களும் இயக்கப்படுகிறது.
- 4-ந்தேதி 765 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டம்.
சென்னை:
புத்தாண்டையொட்டி அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பாக இன்று முதல் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 240 பஸ்களும், நாளை 255 பஸ்களும் இயக்கப்படுகிறது.
கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்றும், நாளையும் 55 பஸ்களும் மாதவரத்தில் இருந்து 20 பஸ்களும் இயக்கப்பட உள்ளன.
மேலும் சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப ஜனவரி 3-ந்தேதி 525 பஸ்களும், 4-ந்தேதி 765 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் மோகன் தெரிவித்து உள்ளார்.
- வெளிமாநில சுற்றுலா பயணிகள் வாகனங்கள் நிறுத்த 8 இடங்களில் வாகன நிறுத்த வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- நகரப்பகுதியில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக 30 அரசு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் மத்திய உள்துறை இணை மந்திரி நித்தியானந்ராய் ஆகியோர் வருகையையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடு மற்றும் புத்தாண்டையொட்டி எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். இதில் புதுவை போலீஸ் டி.ஜி.பி. ஷாலினிசிங், ஐ.ஜி.அஜித் குமார்சிங்லா, டி.ஐ.ஜி.சத்திய சுந்தரம் மற்றும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள், போலீஸ் சூப்பிரண்டுகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்தவுடன். அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் காவல்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. புத்தாண்டை முன்னிட்டு சட்டம்-ஒழுங்கு போலீசார் 1,000 பேரும், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த 500 போலீசாரும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
புத்தாண்டுக்கு முந்தைய நாள் (31-ந்தேதி) ஒயிட் டவுன் பகுதிகளில் மதியம் 2 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும். வெளிமாநில சுற்றுலா பயணிகள் வாகனங்கள் நிறுத்த 8 இடங்களில் வாகன நிறுத்த வசதி (பார்க்கிங்) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நகரப்பகுதியில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக 30 அரசு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போலி மருந்து வழக்கில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். போராட்டத்தில் ஈடுபடும் ஒப்பந்த ஆசிரியர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவார்கள். எனவே அவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றார்.
- சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்படுகின்றனர்.
- ‘பைக் ரேசில் ஈடுபடுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை:
ஜனவரி 1-ந் தேதி ஆங்கில புத்தாண்டு உலகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. டிசம்பர் 31-ந் தேதி(புதன்கிழமை) நள்ளிரவு ஓட்டல்கள், கடற்கரை, ரிசார்ட்டுகளில் உற்சாகம் களைகட்டும்.
புத்தாண்டுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கடற்கரை ரிசார்ட்டுகள் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகிறது.
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள போலீசார் முடிவு செய்துள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது எந்தவொரு அசம்பாவிதமும் நடக்கவில்லை என்பதை உறுதி செய்யும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகர போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு பொறுப்பு டி.ஜி.பி. அறிவுறுத்தி உள்ளார். குறிப்பாக பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில் மிக கவனமாக செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். குறிப்பாக கடற்கரை, வழிபாட்டு தலங்களில் கூடுதல் போலீசார் பணி அமர்த்தப்பட உள்ளனர். மெரினா கடற்கரையில் மட்டும் 1,000 போலீசார் நிறுத்தப்பட உள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது கடலில் இறங்கி குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, சென்னை பெசன்ட்நகர், திருவான்மியூர், கோவளம், மாமல்லபுரம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் கடற்கரையிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்படுகின்றனர். இதுதவிர கடற்கரை ஓரத்தில் நீச்சல் வீரர்களும் பணியில் அமர்த்தப்பட உள்ளனர்.
மெரினா போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பெண்கள் மிக பாதுகாப்பாக இருக்க போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். குறிப்பாக குழந்தைகளை அழைத்து செல்வதை தவிர்க்க பெற்றோர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
'பைக் ரேஸ்' என்ற பெயரில் பந்தயம் கட்டி மோட்டார் சைக்கிள்களில் இளைஞர்கள் அதிவேகமாக சென்று, சாகசம் செய்வதை தடுக்கவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
'பைக் ரேசில் ஈடுபடுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதோடு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு போலீசார் கடும் நிபந்தனைகளுடன் கூடிய கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். குடிபோதையில் வாகனங்கள் ஓட்டுபவர்கள் கைது செய்யப்படுவார்கள்.
சாலையின் நடுவே 'கேக்' வெட்டுவது, பட்டாசு வெடிப்பது, பெண்களை மடக்கி புத்தாண்டு வாழ்த்து சொல்வது போல அவர்களுடன் கைக்குலுக்கி பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போன்ற சம்பவங்களில் யாரும் ஈடுபட கூடாது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது விபத்துகளால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படாமல் தடுக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். புத்தாண்டு தினத்தன்று முக்கியமான சாலைகளின் நடுவே இரும்பு தடுப்புகளை அமைத்து, வாகனங்கள் வேகமாக செல்வதை கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
நட்சத்திர ஓட்டல்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு போலீசார் கடந்த ஆண்டை போன்று கடும் கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளனர். நட்சத்திர ஓட்டல்களில் மது அருந்தும் இடங்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்ல கூடாது என ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை நிறைவேற்றும் வகையில் நட்சத்திர ஓட்டல்கள் செயல்பட வேண்டும் என்றும், இதை மீறினால் ஓட்டல் நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்து உள்ளனர்.
நட்சத்திர ஓட்டல்களில் ஆபாச நடனங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது. அதுமட்டுமல்லாமல் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு நள்ளிரவு எவ்வளவு நேரம் அனுமதிக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நேற்று முன்தினம் இரவு பைக் ரேசில் ஈடுபட்டதாக 24 இளைஞர்கள் பிடிபட்டனர். அவர்களது மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- டிசம்பர் மாத இறுதி முதல் ஜனவரி முதல் வாரம் வரை அறைகள் இல்லை என பல விடுதிகள் கைவிரித்து வருகின்றன.
- ஓட்டல்களில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் உணவு திருவிழா, கேளிக்கை, நடன, இசை நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
புதுச்சேரி:
புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வருவது வாடிக்கை.
கொரோனா தாக்கத்தால் 2 ஆண்டுகள் புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறாமல் போனது. கடந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தது. இருப்பினும் கொரோனா அச்சம் காரணமாக அதிகளவில் மக்கள் கூடவில்லை. இந்த ஆண்டு கொரோனா அச்சம் முற்றிலுமாக விலகி புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு புதுவை தயாராகி வருகிறது.
டிசம்பர் மாத தொடக்கத்திலிருந்தே சுற்றுலா பயணிகளின் வருகை நாளுக்கு நாள் புதுவையில் அதிகரித்து வருகிறது. கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறை விடப்பட உள்ளது. புதுவையில் தற்போது குளு, குளுவென குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுகிறது. புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஓட்டல்கள், விடுதிகளில் முன்பதிவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நட்சத்திர விடுதி முதல் சாதாரண விடுதி வரை ஆன்லைன் மூலம் வெளிமாநிலத்தினர் முன்பதிவு செய்து வருகின்றனர்.
டிசம்பர் மாத இறுதி முதல் ஜனவரி முதல் வாரம் வரை அறைகள் இல்லை என பல விடுதிகள் கைவிரித்து வருகின்றன. ஓட்டல்களில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் உணவு திருவிழா, கேளிக்கை, நடன, இசை நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளில் அனுமதி பெற வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.
பல்வேறு மைதானம், திடல்கள், கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. புதுவையில் பல்வேறு கடற்கரைகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இங்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.
கிறிஸ்துமஸ் பண்டிகை சில நாட்களே உள்ளதால் பண்டிகை பொருட்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.
மிஷன்வீதி, காந்திவீதி, நேருவீதிகளில் கிறிஸ்துமஸ் குடிலுக்கு தேவையான பொருட்கள் விற்கப்படுகிறது. இவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். மிஷன்வீதி ஜென்மராக்கினி மாதா கோவில் எதிரே குடில்களுக்கு தேவையான சொரூபங்கள் விற்பனை ஜரூராக நடக்கிறது. கிறிஸ்துமஸ் கேரல்ஸ், கலைநிகழ்ச்சிகளும் களைகட்டியுள்ளது.
தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வருகிற 24-ந் தேதி நள்ளிரவு கிறிஸ்துமஸ் திருப்பலியும், 25-ந்தேதி காலை பிரார்த்தனையும் நடக்கிறது. கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் ஸ்டார், குடில்களை அமைத்து கிறிஸ்து பிறப்பு பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட தயாராகி வருகின்றனர்.
- சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும் 450 அரசு விரைவு பஸ்களில் நாளை பயணம் செய்ய 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
- குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய எல்லா பஸ்களும் நிரம்பிவிட்டதால் 500 சிறப்பு பஸ்கள் நாளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை:
கிறிஸ்துமஸ் பண்டிகை 25-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுவதால் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் நாளை (வெள்ளிக்கிழமை) இயக்கப்படுகிறது.
பள்ளி, கல்லூரிகளுக்கு பண்டிகை விடுமுறை 9 நாட்கள் விடப்பட்டுள்ளதால் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். நீண்டதூரம் செல்லக்கூடிய அரசு விரைவு பஸ்களில் அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன.
சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும் 450 அரசு விரைவு பஸ்களில் நாளை பயணம் செய்ய 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய எல்லா பஸ்களும் நிரம்பிவிட்டதால் 500 சிறப்பு பஸ்கள் நாளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மதுரை, திருச்சி, நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பிற போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாலும், கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதாலும் ரெயில்களில் இடங்கள் நிரம்பிவிட்டதால் மக்கள் அரசு பஸ்களை நோக்கி வரக்கூடும் என்பதால் கூடுதலாக 500 பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளோம்.
நாளை பிற்பகலில் இருந்து சிறப்பு பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து புறப்படும். வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கப்படும். பொதுமக்கள் தேவையை பொறுத்து கூடுதல் பஸ்கள் இயக்க தயாராக உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- பண்டிகை காலங்களில் பொதுவாக ஆம்னி பஸ்களில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுகிறது. அதேபோல தற்போது கட்டணம் அதிகரித்துள்ளது.
- சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய ஆம்னி பஸ்களில் வழக்கத்தை விட 3 மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளது.
சென்னை:
கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை மற்றும் பள்ளி அரையாண்டு தேர்வு விடுமுறை நாளை மறுநாள் (24-ந்தேதி) முதல் விடப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) வரை அரையாண்டுத் தேர்வு நடைபெறுகிறது.
கிறிஸ்தவ பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகள், தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு இன்றுடன் தேர்வு முடிகிறது. மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் அரசு, உதவிபெறும் பள்ளி மாணவர்கள் நாளை வரை தேர்வு எழுதுகின்றனர்.
இதைத்தொடர்ந்து ஜனவரி 1-ந்தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. பள்ளிகள் மீண்டும் ஜனவரி 2-ந்தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட சொந்த ஊர் செல்பவர்கள் இன்று முதல் பயணத்தை தொடங்கி உள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் வருவதால் பெரும்பாலானவர்கள் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியூர் பயணத்தை மேற்கொள்கிறார்கள்.
பண்டிகை காலங்களில் பொதுவாக ஆம்னி பஸ்களில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படுகிறது. அதேபோல தற்போது கட்டணம் அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய ஆம்னி பஸ்களில் வழக்கத்தை விட 3 மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளது.
நாளை (23-ந்தேதி) பயணம் செய்ய ஆம்னி பஸ்களில் குறைந்த அளவில் இடங்கள் உள்ளன. ரெட் பஸ் இணையதளத்தில் ஆம்னி பஸ்களின் கட்டணம் பல்வேறு விதமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருநெல்வேலி, தூத்துக்குடிக்கு வழக்கமாக குளிர்சாதன வசதி இல்லாத இருக்கைக்கு ரூ.1000 வரை கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது ரூ.1,800 முதல் ரூ.2,300 வரை டிக்கெட் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏ.சி. செமி சிலீப்பருக்கு ரூ.2,200 வரை வசூலிக்கப்படுகிறது. ஏ.சி. படுக்கை வசதிக்கு ரூ.3000 முதல் ரூ.4,500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனி டிவி வசதி அதில் கூடுதலாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சில பஸ்களில் ரூ.3,500, ரூ.4000-மும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடிக்கு ஏசி வசதி இல்லாத இருக்கைக்கு ரூ.1,500 முதல் ரூ.2,500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நாகர்கோவிலுக்கு ஏசி படுக்கை வசதிக்கு ரூ.3,600 வரையிலும், மதுரைக்கு ஏசி படுக்கை வசதிக்கு ரூ.1,700 முதல் ரூ.3000 வரை வசூலிக்கிறார்கள்.
ஒரு சில ஆம்னி பஸ்களில் ரூ.2,400, ரூ.2,700, ரூ.2,800 என பல்வேறு விதமான கட்டணம் பெறப்படுகிறது. ஏ.சி. இருக்கைக்கு ரூ.1,200 முதல் ரூ.2,300 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏசி வசதி இல்லாத இருக்கைக்கு ரூ.1,800, ரூ.2000 கட்டணம் வசூலிக்கிறார்கள்.
பொதுமக்களின் தேவையை அறிந்து கட்டணம் அதிகளவில் வசூலிப்பதால் மக்கள் அரசு பஸ்களை நோக்கி செல்கிறார்கள். ஒரு நிலையான கட்டணத்தை வசூலிக்காமல் பண்டிகை காலத்தை மையமாக வைத்து கட்டணத்தை உயர்த்தி வருவதை அரசு தடுக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் கோரிக்கை வைக்கின்றனர்.
தற்போது ரெயில்களில் இடம் நிரம்பிவிட்டதால் வேறு வழியில்லாமல் மக்கள் ஆம்னி பஸ்களை நாடி செல்வார்கள் என்ற நோக்கத்தில் விமான கட்டணத்திற்கு இணையாக உயர்த்தி உள்ளனர்.
சனிக்கிழமையிலும் ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமைக்கு பிறகு தான் இயல்பான கட்டணத்தில் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசிக்கும் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நேற்று மதியம் முதலே சொந்த ஊருக்கு செல்ல தொடங்கினர்.
- கூடுதலாக இயக்கப்பட்ட அரசு பஸ்களிலும் பொது மக்கள் பயணம் செய்தனர். நேற்று ஆம்னி பஸ்களும் அதிக அளவில் சென்றன.
போரூர்:
கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. ஏற்கனவே பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சொந்த ஊர் செல்பவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாகவே அதிகரித்து உள்ளது.
தென் மாவட்டத்துக்கு செல்லும் அனைத்து ரெயில்களிலும் இருக்கைகள் நிரம்பி விட்டது. ஆம்னி பஸ்களில் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களை பயன்படுத்தி தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலித்து வருவதால் பெரும்பாலான மக்கள் தற்போது அரசு பஸ்களில் பயணம் செய்யவே அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக 2 நாட்களுக்கு வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் தலா 300 பஸ்கள் வீதம் கூடுதலாக 600 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்து கழகம் அறிவித்து இருந்தது.
அதன்படி நேற்று காலை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதன் காரணமாக கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சென்னை மக்கள் பெரும்பாலானோர் சொந்த ஊருக்கு படை எடுத்தனர்.
தினசரி இயக்கப்படும் 2100 பஸ்களுடன் நேற்று கூடுதலாக 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. இதன்மூலம் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். இன்று வழக்கமான பஸ்களுடன் கூடுதலாக 300 பஸ்கள் இயக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்களை இயக்கவும் தயார் நிலையில் இருப்பதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசிக்கும் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நேற்று மதியம் முதலே சொந்த ஊருக்கு செல்ல தொடங்கினர். கூடுதலாக இயக்கப்பட்ட அரசு பஸ்களிலும் பொது மக்கள் பயணம் செய்தனர். நேற்று ஆம்னி பஸ்களும் அதிக அளவில் சென்றன.
பெரும்பாலான சென்னை மக்கள் கார்கள் மற்றும் வாகனங்களில் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். இதனால் நேற்று மதியத்துக்கு பிறகு தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் பகுதிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தன. ஒரே நேரத்தில் பஸ்கள் கிளம்பியதால் இந்த பகுதிகளில் வாகனங்கள் மிகவும் ஊர்ந்தே சென்றன. இரும்புலியூரில் ராஜகரை முதல் பெருங்களத்தூர் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
செங்கல்பட்டு அடுத்த பரனூர் டோல்கேட்டில் நேற்று மாலை 4-மணியில் இருந்து சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை கொண்டாட செல்லும் பொதுமக்கள் கார், பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பயணம் செய்தனர். இதனால் பரனூர் சுங்கச்சாவடியில் விடிய விடிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில் செங்கல்பட்டு கூடுதல் எஸ்.பி.பரத் மேற்பார்வையில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் பணிபுரியும் ஊழியர்கள் கூறுகையில், நேற்று அமாவாசையையொட்டி மேல்மலையனூர் கோவிலுக்கு செல்கின்ற பக்தர்கள் ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்களை கொண்டாட தென்மாவட்டங்களுக்கு அதிகளவில் மக்கள் பயணம் மேற்கொள்வதால் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
- சென்னை மாநகரம் முழுவதும் வருகிற 31-ந்தேதி அன்று இரவு முதல் மறுநாள் வரையில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
- சென்னை மாநகரில் உள்ள 30-க்கும் மேற்பட்ட பெரிய மேம்பாலங்கள் மூடப்பட உள்ளன. சுமார் 500 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட உள்ளது.
சென்னை:
2022-ம் ஆண்டு முடிந்து 2023-ம் ஆண்டு பிறப்பதற்கு இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு சென்னை மாநகரம் தயாராகி வருகிறது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளை இந்த ஆண்டு சிறப்பாக நடத்துவதற்கு நட்சத்திர ஓட்டல் நிர்வாகிகள் தயாராகி வருகிறார்கள்.
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகளிலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் களைகட்டி உள்ளன. வருகிற 31-ந்தேதி மாலையில் தொடங்கி ஜனவரி 1-ந்தேதி அதிகாலை வரையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம்.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் தடுப்பதற்காக தேவையான முன்ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மேற்கொண்டுள்ளார்.
சென்னை மாநகரம் முழுவதும் வருகிற 31-ந்தேதி அன்று இரவு முதல் மறுநாள் வரையில் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
சென்னை மாநகரில் உள்ள 30-க்கும் மேற்பட்ட பெரிய மேம்பாலங்கள் மூடப்பட உள்ளன. சுமார் 500 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட உள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி பைக் ரேசில் ஈடுபடுபவர்களை பிடிக்க சிறப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக 30 சாலை பாதுகாப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவர்கள் மோட்டார் சைக்கிளில் ரோந்து சுற்றி வருவார்கள்.
மெரினா கடற்கரை உள்ளிட்ட அனைத்து கடற்கரை பகுதிகளிலும் போலீசார் ரோந்து சுற்றி வந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
புத்தாண்டு அன்று வாழ்த்து சொல்வதாக கூறிக்கொண்டு பெண்களிடம் பாலியல் சீண்டலில் யாராவது ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.
புத்தாண்டு அன்று பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள அந்தந்த பகுதி துணை கமிஷனர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. நட்சத்திர ஓட்டல்களில் இதற்காக தனி பாதுகாவலர்களை நியமிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நட்சத்திர ஓட்டல்களில் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
இதுதொடர்பாக கமிஷனர் சங்கர் ஜிவால் தலைமையில் நாளை மறுநாள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் நட்சத்திர ஓட்டல் நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.
நீச்சல் குளங்கள் இருக்கும் பகுதியை மூடி வைத்து தேவையான அளவுக்கு கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
- வருகிற ஜனவரி 1-ந்தேதியான புத்தாண்டு தினத்தன்று சசிகலா ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களை சந்திக்கிறார்.
- தி.நகரில் உள்ள இல்லத்தில் அன்று காலை 10 மணி அளவில் ஆதரவு நிர்வாகிகளை சந்திக்கும் சசிகலா, புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறார்.
சென்னை:
அ.தி.மு.க.வுக்கு விரைவில் தலைமை தாங்குவேன் என்று சசிகலா தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்கிறார். அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில் சசிகலாவும் தனது லெட்டர் பேடில் பொதுச்செயலாளர் என்றே குறிப்பிட்டு அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.
அதே நேரத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் நான்தான். கட்சிக்கு தலைமை தாங்குவதும் நான்தான் என்று கூறிக்கொண்டு செயல்பட்டு வருகிறார். இதனால் அ.தி.மு.க.வில் நீடிக்கும் குழப்பம் முடிவுக்கு வராமலேயே உள்ளது.
இதுதொடர்பான கேள்விக்கு சமீபத்தில் பதில் அளித்த சசிகலா, பாராளுமன்ற தேர்தலுக்குள் எல்லாம் சரியாகிவிடும். அனைவரையும் ஒருங்கிணைத்து அ.தி.மு.க. தேர்தலை சந்திக்கும் என்றும் தெரிவித்தார்.
இப்படி அ.தி.மு.க.வில் நடக்கும் பிரச்சினைகளை என்னால் தான் சரி செய்ய முடியும் என்று சசிகலா தொடர்ந்து கூறி வருகிறார். அதே நேரத்தில் அவர் தனியாக கூட்டம் எதையும் இதுவரை நடத்தியது இல்லை. மாவட்டம் வாரியாக சென்று ஆதரவாளர்களை மட்டுமே சந்தித்து உள்ளார்.
இந்த நிலையில் வருகிற ஜனவரி 1-ந்தேதியான புத்தாண்டு தினத்தன்று சசிகலா ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்களை சந்திக்கிறார். தி.நகரில் உள்ள இல்லத்தில் அன்று காலை 10 மணி அளவில் ஆதரவு நிர்வாகிகளை சந்திக்கும் சசிகலா, புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறார்.
சசிகலாவை சந்திக்க வருபவர்கள் பூங்கொத்து, பரிசு பொருட்கள் உள்ளிட்டவற்றை எடுத்து வருவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.
புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க வருபவர்கள் எதையும் எடுத்து வராமல் வாழ்த்துக்களை மட்டுமே தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆதரவாளர்கள் சந்திப்பின்போது சசிகலா பத்திரிகையாளர்களையும் சந்திக்க முடிவு செய்துள்ளார். அப்போது அ.தி.மு.க.வில் தற்போது நிலவும் பிரச்சினைகள் மற்றும் தனது எதிர்கால அரசியல் பயணம் ஆகியவை பற்றி முக்கிய முடிவுகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- புத்தாண்டு கொண்டாட்டத்துக்கும் புதுவை தயாராகி வருகிறது.
- நகர் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் உள்ள ஓட்டல், விடுதிகள், ரெஸ்டாரண்டுகளில் அனைத்து அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
ஆண்டுதோறும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறை, புத்தாண்டு, பொங்கல் என தொடர் நிகழ்வுகளும் விடுமுறையும் இருப்பது சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க செய்கிறது.
அதோடு இந்த மாதங்களில் புதுவை குளிர்பிரதேசம் போல் சில்லென்ற குளிர்ந்த காற்றுடன் வரவேற்பது சுற்றுலா பயணிகளுக்கு கூடுதல் உற்சாகத்தை தருகிறது. இதனால் புதுவை நகரமே சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகிறது.
புத்தாண்டு கொண்டாட்டத்துக்கும் புதுவை தயாராகி வருகிறது. நகர் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் உள்ள ஓட்டல், விடுதிகள், ரெஸ்டாரண்டுகளில் அனைத்து அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டு என்றாலே மது விருந்துதான். பிரெஞ்சு ஆட்சி காலத்தில் இருந்தே மது வகைகளுக்கு புகழ்பெற்ற பகுதியாக புதுவை விளங்குகிறது. விலை குறைவு மட்டுமல்லாது விதவிதமான மதுவகைகள், வெளிநாட்டு மதுபானங்கள் போன்றவை தான் மது பிரியர்களை புதுவையை நோக்கி இழுக்கிறது.
இதனை கூடுதலாக்கும் நோக்கில் இந்த முறை புத்தாண்டையொட்டி மதுபார்கள் புதுபொலிவாக மாற்றப்பட்டு வருகிறது. பார்களின் உள் அமைப்புகள் மதுபிரியர்களை கவரும் வகையில் மின்னொலியில் ஜொலிக்கின்றன.
மேலும் வெளிநாடுகளில் இருந்தும் வெளிமாநில மாநிலங்களில் இருந்தும் 50-க்கும் மேற்பட்ட புதிய மதுவகைகள் புதுவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ன.
ஜப்பானிய விஸ்கி, மெக்சிக்கோ டக்கீலா, லண்டன் ஜின், பிரான்ஸ் ஒயின், இத்தாலி பீர், அமெரிக்கன் ஓட்கா மற்றும் கோவா பென்னி என விதவிதமான மதுவகைகள் வரிசை கட்டி மதுபிரியர்களை வரவேற்க காத்திருக்கிறது.
மது வகைகளை போல புதிய சைடிஷ்களும் தயாராகியுள்ளன. கடற்கரை பகுதியாக புதுவை இருப்பதால் கடல் உணவுகள், சிக்கன், மட்டன் வகைகள் சிறப்பு சலுகைகளுடன் தயாராகி வருகிறது.
புதுவையில் 1400 வகையான மதுவகைகள் ஏற்கனவே சந்தையில் உள்ளது. அத்துடன் புத்தாண்டை குறிவைத்து 50 புதிய மதுவகைகள் களத்தில் இறங்கியுள்ளது.






