என் மலர்
நீங்கள் தேடியது "கைதி மரணம்"
- கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து இரவு மாரி முத்துவின் உடலை பெற்றுக்கொண்டனர்.
- சம்பவம் தொடர்பாக, வனத்துறையினர் மற்றும் அதிகாரிகள் துறை ரீதியான விசாரணை நடத்தினர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மேல்குருமலை பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது 58). இவர் புலிப்பல் வைத்திருந்ததாக கூறி, கடந்த 29-ந்தேதி உடுமலை வனத்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் வனத்துறை அலுவலகத்தில் உள்ள குளியலறையில் மாரிமுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என வனத்துறையினர் தெரிவித்தனர். தகவல் அறிந்த மாரிமுத்துவின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் அங்கு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வனத்துறையினர் விசாரணை என்ற பெயரில் அடித்து துன்புறுத்தியதால் மாரிமுத்து உயிரிழந்தார் என்று குற்றம் சாட்டினர். போலீசார், வருவாய் துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி பிரேத பரிசோதனைக்காக மாரிமுத்து உடலை திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
நேற்று காலை உடுமலை மாஜிஸ்திரேட்டு நித்யகலா முன்னிலையில் மருத்துவர் குழுவினர் பிரேத பரிசோதனை நடத்தினர். பிரேத பரிசோதனை முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டது. உடுமலை ஆர்.டி.ஓ., குமார், டி.எஸ்.பி., நமசிவாயம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மருத்துவமனை வளாகத்தில் மாரிமுத்துவின் உறவினர்கள் திரண்டிருந்தனர். அவரது குடும்பத்தினர் அடையாளம் உறுதிப்படுத்திய பின் உடல் பிரேத பரிசோதனை நடந்தது.
பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் அங்கு திரண்டிருந்த மாரிமுத்துவின் உறவினர்கள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் பிரேத பரிசோதனை கூடம் முன் அமர்ந்து உடலை வாங்க மறுத்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மாரிமுத்துவின் உறவினர்கள், பிரேத பரிசோதனை வீடியோ பதிவுகளை வழங்க வேண்டும். இந்த வழக்கை வன்கொடுமை சட்டத்தில் சேர்க்க வேண்டும். சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த வேண்டும் என தர்ணாவில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து இரவு மாரி முத்துவின் உடலை பெற்றுக்கொண்டனர்.
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக, வனத்துறையினர் மற்றும் அதிகாரிகள் துறை ரீதியான விசாரணை நடத்தினர். இதையடுத்து ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரக வனவர் நிமல் குமார், வனக்காவலர் செந்தில்குமார் ஆகியோரை சஸ்பெண்டு செய்து திருப்பூர் மாவட்ட வன அலுவலர் ராஜேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
- நெஞ்சு வலி காரணமாக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற சென்னை கைதி உயிரிழந்தார்.
- பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 43). திருவண்ணாமலையில் நடந்த திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டார். இவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கடந்த 7 மாதங்களுக்கு முன்பு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். நேற்று இரவு சரவணனுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
அவரை உடனடியாக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சரவணன் அதிகாலை பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சென்னை, நந்தனத்தை சேர்ந்தவர் கணேசன். இவரை கடந்த நவம்பர் மாதம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பணமோசடி வழக்கில் கைது செய்தனர்.
- புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை, நந்தனத்தை சேர்ந்தவர் கணேசன்(வயது56). இவரை கடந்த நவம்பர் மாதம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பணமோசடி வழக்கில் கைது செய்தனர். பின்னர் அவர் புழல் ஜெயிலில் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு கணேசனுக்கு திடீரென உடலநலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிேலயே கணேசன் மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சண்முக சுந்தரம் இறந்தார்.
- புழல் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
செங்குன்றம்:
ஆவடி அடுத்த அண்ணனூர் பகுதியைச் சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (வயது66). இவர் திருமுல்லைவாயலில் நடந்த ஒரு கொலையில் கடந்த 2022-ம் ஆண்டு முதல் ஆயுள் தண்டனை கைதியாக புழல் தண்டனை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இவருக்கு ரத்த அழுத்த நோய் இருந்தது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சண்முக சுந்தரம் இறந்தார்.
இது குறித்து புழல் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் ஜெயக்குமார் தலைமறைவாகி விட்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 60). இவர் கடந்த 2000-ம் ஆண்டு கோவில்பட்டி கிழக்கு போலீசாரால் கள்ள நோட்டு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் ஜெயக்குமார் தலைமறைவாகி விட்டார். இதனால் அவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இதையடுத்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் ஜெயக்குமாரை கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்தனர். அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு பாளை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார். அங்கு நேற்றிரவு சக கைதிகளுடன் சேர்ந்து சாப்பிட்டு விட்டு அவர் தூங்கச் சென்றுள்ளார். அப்போது நள்ளிரவில் திடீரென ஜெயக்குமாருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்தார்.
அவரை சிறைக் காவலர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஜெயக்குமார் இறந்தார். இது குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விசாரணைக் கைதி சாந்தகுமார் என்பவர் காவல்நிலையத்தில் உயிரிழப்பு.
- விசாரணையின்போது, கைதி சாந்தகுமார் உயிரிழக்கவில்லை என போலீசார் அறிவிப்பு.
திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டையில் காவல்துறை விசாரணைக் கைதி சாந்தகுமார் என்பவர் காவல்நிலையத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
பிரேத பரிசோதனையில் அவர் உடம்பில் ரத்தக்கட்டு, வீக்கம் உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், விசாரணை கைதி மரணம் தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
அதன்படி, செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணையின்போது, கைதி சாந்தகுமார் உயிரிழக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
நெஞ்சுவலி என்று கூறிய சாந்தகுமாரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர் அறிவித்தார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல்துறை மேலும் கூறியதாவது:-
பிபிஜி சங்கர் கொலையில் முக்கிய குற்றவாளியான சாந்தகுமார், கடந்த 13ம் தேதி புட்லூர் பகுதியில் கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டார்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மற்றொரு குற்றச்செயல் புரிய அவர்கள் சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது.
சாந்தகுமாரின் இறப்பின் மீது சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டு திருவள்ளூர் குற்றவியல் நடுவர் விசாரணை நடத்தி வருகிறார்.
சாந்தகுமாரின் மரணம் குறித்த விசாரணை நியாயமாக நடைபெற வேண்டி சாந்தகுமாரை விசாரித்த காவல் ஆய்வாளர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில், சாந்தகுமாருக்கு இதயத்தில் ரத்த குழாய் அடைப்பு உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
கைதி சாந்தகுமாரின் இறப்பிற்கான காரணம் பிரேத பரிசோதனையின் இறுதி அறிக்கையில் தான் தெரிய வரும்.
சாந்தகுமாரின் இறுதிச்சடங்குக்காக அவரது மனைவி மற்றும் உறவினர்கள், சாந்தகுமார் உடலை ஸ்ரீபெரும்புதூர் கொண்டு சென்றனர்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
- சிகிச்சை பெற்று வந்த யேசுதாஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
- போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கோவை:
திருநெல்வேலி மாவட்டம் கரையிருப்பு சுந்தராபுரத்தை சேர்ந்தவர் யேசுதாஸ்(வயது33).
இவர் கடந்த 2012-ம் ஆண்டு திருப்பூரில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு கோர்ட்டு இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதித்தது.
இந்த நிலையில் யேசுதாஸ் கடந்த 2023-ம் ஆண்டு முதல் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஜெயிலில் உள்ள கைதிகளுக்கு ஒவ்வொரு வேலை கொடுக்கப்படுவது வழக்கம்.
அதன்படி யேசுதாசுக்கு ஜெயிலில் உள்ள தொழிற்சாலையில் பணி ஒதுக்கப்பட்டு பணியாற்றி வந்தார்.
கடந்த 27-ந்தேதி யேசுதாஸ், தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்தார். அன்று மதியம் கழிவறைக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த காவலர்கள் கழிவறைக்கு சென்று பார்த்தனர். அப்போது அவர் அங்கு மயங்கிய நிலையில் கிடந்தார்.
அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த யேசுதாஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
யேசுதாஸ் மயங்கி விழுந்ததில், கழுத்து எலும்பில் முறிவு ஏற்பட்டு அழுத்தியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் டாக்டர்கள் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.
இருப்பினும் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயில் கைதி மரணம் அடைந்துள்ள நிலையில், பணியில் கவனக்குறைவாக இருந்ததாக கோவை மத்திய ஜெயில் துணை வார்டன் மனோரஞ்சிதம், உதவி வார்டன் விஜயராஜ், தலைமை காவலர்கள் பாபுராஜ், தினேஷ் ஆகிய 4 பேரை சஸ்பெண்டு செய்து ஜெயில் சூப்பிரண்டு செந்தில் குமார் உத்தரவிட்டுள்ளார்.
- கைதிக்கு இன்று காலை 6 மணியளவில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
- கைதிக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு குறித்து சிறை ஊழியர்கள், சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
சேலம்:
சேலம் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் வெங்கடேசன் (வயது 40).
இவர் கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி உறவினர் ஒருவரை கத்தியால் குத்தி கொல்ல முயன்றார். இது தொடர்பாக விசாரணை நடத்திய அழகாபுரம் போலீசார் அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
பின்னர் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். வெங்கடேசனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அவரை இதுவரை யாரும் ஜாமீன் எடுக்க முன் வராததால் தொடர்ந்து சேலம் மத்திய சிறையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை 6 மணியளவில் அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனை அறிந்த சிறை ஊழியர்கள், சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற அதிகாரிகள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மத்திய சிறையில் இருந்த விசாரணை கைதி இறந்ததால் விரைவில் சிறைக்கு சென்று மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த உள்ளார்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு தருமபுரி டவுன் போலீசாரால் வழிப்பறி வழக்கில் தங்கராஜி கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
- கடந்த 3-ந் தேதி மாலை தங்கராஜிக்கு திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டது.
சேலம்:
தருமபுரி டவுன் பகுதியை சேர்ந்தவர் சின்னகண்ணு. இவரது மகன் தங்கராஜி (வயது 41) .
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தருமபுரி டவுன் போலீசாரால் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 3-ந் தேதி மாலை தங்கராஜிக்கு திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டது.
இதனை கவனித்த சிறை ஊழியர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற சிறை அதிகாரிகள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தங்கராஜி இன்று காலை 6.10 மணிக்கு பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறினர். சம்பவம் குறித்து அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் சிறை கைதி இறந்ததால் ஆஸ்பத்திரிக்கு சென்று மாஜிஸ்திரேட் விசாரணை நடத்துகிறார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் இப்ராகிம் (60). இவரை போதைப் பொருள் கடத்தல் வழக்கில் போலீசார் கைது செய்து புழல் ஜெயிலில் தண்டனை கைதியாக அடைத்தனர்.
இந்த நிலையில் இப்ராகிமுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. அவருக்கு கடந்த 2 மாதமாக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இன்று காலை சிகிச்சை பலனின்றி இப்ராகிம் பரிதாபமாக இறந்தார்.
வேலூர்:
குடியாத்தம் அருகே உள்ள தட்டப்பாறை சின்னாலிபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பிரபு (வயது 30), கடந்த ஆண்டு இவரது மனைவி வள்ளியை அடித்து கொலை செய்தார்.
இந்த வழக்கில் குடியாத்தம் தாலுகா போலீசார் பிரபுவை கைது செய்ததனர்.பின்னர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஜெயிலில் அவருக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கபட்டது.
இதற்காக ஜெயில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று மாத்திரை சாப்பிட்டு வந்தார். நேற்று பிரபுவுக்கு வலிப்பு ஏற்பட்டது. அவரை சிறைதுறையினர் மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரபு பரிதாபமாக இறந்தார்.
வேலூர் ஜெயிலில் கைதிகள் பலர் உடல் நலம் பாதிக்கபட்டு வருவது தொடர்ச்சியாக நடக்கிறது. இன்று கைதி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள குயிலாபாளையத்தை சேர்ந்தவர் ஏழுமலை என்ற மைக்கேல் (வயது 36). ரவுடியான இவர் தாதா மணிகண்டனின் தம்பி ஆவார்.
கடந்த 15-ந் தேதி மோட்டார் சைக்கிளில் சென்ற போது ஆரோவில் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து போலீசார் ஏழுமலையை கைது செய்தனர்.
பின்னர் அவரை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். திடீரென்று அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனடியாக அவரை கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் ஏழுமலை இறந்த தகவல் குறித்து குயிலாபாளையத்தில் உள்ள அவரது மனைவி மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
மர்மமான முறையில் இறந்துபோன ஏழுமலையின் உடல் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. ஏழுமலை இறந்து 3 நாட்கள் ஆகியும் நேற்று மாலை வரை கடலூர் ஆஸ்பத்திரிக்கு அவரது மனைவி மற்றும் உறவினர்கள் யாரும் வரவில்லை.
இதனால் ஏழுமலையின் உடலை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே ஏழுமலையின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது மனைவி கோமதி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு விசாரணைக்கு வந்து தீர்ப்பு வந்த பிறகுதான் ஏழுமலையின் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து ஏழுமலையின் உடல் வைக்கப்பட்டுள்ள பிரேத பரிசோதனை கூடம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று 4 நாட்களாகியும் ஏழுமலையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை. இதனை தொடர்ந்து போலீசார் இரவும்-பகலும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடலூர் ஜெயிலில் மர்மமாக இறந்த கைதி ஏழுமலையின் மனைவி கோமதி இன்று குடும்பத்தினருடன் கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.
பின்னர் அவர் கலெக்டரின் உதவியாளரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த டிசம்பர் மாதம் நாங்கள் அனைவரும் திருப்பதி கோவிலுக்கு சென்றுவிட்டு எங்கள் வீட்டுக்கு வந்தோம். நாங்கள் காரில் இருந்து இறங்குவதற்குள் 2 டாடா சுமோவில் வந்த பத்துக்கும் மேற்பட்ட போலீசார் இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையில் எனது கணவரை அடித்தனர்.
அப்போது நான் தடுக்க சென்ற போது என்னையும், என் பிள்ளைகளையும் கீழே தள்ளிவிட்டு அடித்தனர். பின்னர் எனது கணவரை அடித்து இழுத்துச் சென்றனர். அதன்பிறகு என் கணவருக்கு என்ன ஆனது என்று தெரியாமல் வக்கீல் மூலமாக ஆரோவில் போலீஸ் நிலையத்தில் விசாரித்தபோது போலீசார் சரியான முறையில் எங்களுக்கு பதில் தரவில்லை.
மேலும் இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு புகார் செய்தோம். இந்த நிலையில் காவல்துறையினர் என் கணவரை தாக்கி அடித்து கை மற்றும் கால் உடைத்து உடல் முழுவதும் காயத்தை ஏற்படுத்தி உள்ளனர்.
ஆனால் உடலில் காயம் ஏற்படுத்திய போலீசார் என் கணவரை மருத்துவமனையில் சேர்க்காமல் வானூர் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்று காவலில் அடைக்க முற்பட்டுள்ளனர். ஆனால் நீதிமன்றத்தில் நீதிபதி இல்லாத காரணத்தினால் செஞ்சி நீதித்துறை நடுவரிடம் என் கணவரை அழைத்து சென்று காவலில் அடைக்க அனுமதி கேட்டுள்ளனர். அப்போது என் கணவர் நடந்தவற்றை அனைத்தும் நீதிபதியிடம் கூறி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு அனுமதி கேட்டு உள்ளார். ஆனால் காவல்துறையினர் செஞ்சி நீதிமன்ற நடுவரிடம் பொய்யான காரணங்களைக் கூறி கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்க அனுமதி வாங்கி விட்டனர்.
என் கணவருக்கு எந்தவித சிகிச்சையும் செய்யாமல் காவல்துறையினரே உடைக்கப்பட்ட கை மற்றும் காலுக்கு கட்டு கட்டி எவ்வித சிகிச்சையும் அளிக்காமல் கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். அப்போது மத்திய சிறை நிர்வாகம் எங்களுக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறி உள்ளனர்.
ஆனால் ஆரோவில் இன்ஸ்பெக்டர் மத்திய சிறை காவலர்களிடம் சண்டை போட்டு சட்டத்திற்கு புறம்பாக மத்திய சிறை காவலர்களை மிரட்டி சிறையில் அடைத்து உள்ளது.
இந்த நிலையில் போதிய சிகிச்சையை காவலர்கள் கொடுக்காததால் என் கணவர் கடந்த 17-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை கடலூர் மத்திய சிறைச்சாலையில் இறந்துவிட்டதாக எனக்கு தகவல் சொன்னார்கள்.
காவல்துறையினர் என் கணவரை கொலை செய்யும் நோக்கத்தோடு அடித்து கை கால்களை உடைத்து காயங்கள் ஏற்படுத்தி கொலை செய்த மேற்கண்ட காவல்துறையினர் மீது தகுந்த விசாரணை செய்து கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
மேலும் என் கணவர் இழந்ததால் நான் என் பிள்ளைகளும் நடுத்தெருவில் நிற்கின்றோம். எனவே மேற்கண்ட காவலர்களிடமிருந்து அரசிடமிருந்து என்னுடைய குடும்பத்திற்கு 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது அப்போது வக்கீல்கள் சுந்தர், திருமேனி, வினோத்குமார் மற்றும் அவரது உறவினர்கள் உடன் இருந்தனர். #tamilnews






