என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆயுள் தண்டனை"

    • வழக்கு தென்காசியில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
    • இன்று இந்த வழக்கில் நீதிபதி எஸ்.மனோஜ் குமார் தீர்ப்பு அளித்தார்.

    தென்காசி:

    நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட காசிநாதபுரத்தில் சீவலப்பேரி சுடலை கோவிலில் சாமி கும்பிடுவதில் வரி வசூலில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக கடந்த 2015-ம் ஆண்டு மணிவேல் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் 3 பேர் ஏற்கனவே இறந்து விட்டனர். இந்த வழக்கு தென்காசியில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    இன்று இந்த வழக்கில் நீதிபதி எஸ்.மனோஜ் குமார் தீர்ப்பு அளித்தார். இந்த கொலை வக்கீல் குற்றம் சாட்டப்பட்டிருந்த விநாயகம், உலகநாதன், சிவ சுப்பிரமணியன், சுடலை, முத்துக்குமார், சுப்பிரமணியன், சந்தானம், சிவன் சேட், மாரி ராஜ், பிச்சையா, வேல் துரை, கருப்பையா, ரமேஷ், பண்டாரம், மணிவேல், கலைவாணன், முத்துராஜ் ஆகியோருக்கு கொலை குற்றத்திற்கு ஒரு ஆயுள் தண்டனை மற்றும் கொலை முயற்சிக்கு ஒரு ஆயுள் தண்டனை என இரட்டை ஆயுள் தண்டனை தனித்தனியாக அறிவித்தும் மற்ற குற்றவாளிகள் அனைவருக்கும் தலா ரூ. 41 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு வக்கீல் வேலுச்சாமி வாதாடினார்.

    • அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல், நீதிபதிகள் தள்ளிவைத்திருந்தனர்.
    • 20 ஆண்டுகளுக்கு எந்த தண்டனைக் குறைப்பும் வழங்கக் கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    சென்னை:

    சென்னை பரங்கிமலை காவலர் குடியிருப்பில் வசித்த கல்லூரி மாணவியும், அதே குடியிருப்பில் வசித்த சதீசும் காதலித்து வந்தனர். இந் நிலையில், பெற்றோர் எதிர்ப்பு காரணமாக சதீஷுடன் பேசுவதை மாணவி நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.

    கடந்த 2022 அக்டோபர் 13-ந்தேதி கல்லூரிக்கு செல்ல பரங்கிமலை ரெயில் நிலையம் வந்த மாணவியை, மின்சார ரெயிலில் தள்ளிவிட்டு கொலை செய்ததாக சதீஷ் கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கை விசாரித்த சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம், சதீஷுக்கு தூக்கு தண்டனை விதித்து கடந்த ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி தீர்ப்பளித்தது.

    மரண தண்டனையை உறுதி செய்வதற்காக வழக்கு ஐகோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதே போல சதீஷ் தரப்பிலும் மேல் முறையீடு செய்யப்பட்டது.

    இந்த வழக்கை, நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் அமர்வு விசாரித்தது. சதீஷ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், காதலித்தவள் வேறொருவரை திருமணம் செய்ய ஒப்புக்கொண்ட வேதனையில் திடீரென ஆத்திரத்தில் செய்த செயல். இது ஒரு திட்டமிட்ட செயல் அல்ல. மரண தண்டனை விதிக்கத்தக்க, இது அரிதிலும் அரிதான வழக்கல்ல என வாதிட்டார்.

    சி.பி.சி.ஐ.டி. தரப்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை குற்றவியல் வக்கீல் அசன்முகம்மது ஜின்னா, காதலித்தவள் வேறொருவரை திருமணம் செய்ய ஒத்துக்கொண்ட வேதனையில் திடீரென ஆத்திரத்தில் செய்த செயல் அல்ல. இது ஒரு திட்டமிட்ட செயல். இரண்டு நாட்களாக நோட்டமிட்டு, 3-வது நாள் ரெயில் வரும் வரை காத்திருந்து, ரெயில் அருகில் வந்தவுடன் தள்ளிவிட்டு உள்ளார் என்பதற்கு கண்காணிப்பு கேமரா காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளதால், தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

    அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல், நீதிபதிகள் தள்ளிவைத்திருந்தனர்.

    இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், சதீஷுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டனர். மேலும், 20 ஆண்டுகளுக்கு எந்த தண்டனைக் குறைப்பும் வழங்கக் கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • தேன்மொழியின் 7 வயது மகளையும் கழுத்தில் வெட்டிவிட்டு நகை, பணத்துடன் தப்பியுள்ளனர்.
    • சத்யா, தவ்லத் பேகம், ஜெயக்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே 2016ல் நகை, பணத்திற்காக தாய், மகளை கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    வசந்தா (64) மற்றும் அவரது மகள் தேன்மொழி (32) ஆகிய இருவரையும் வீட்டு வேலைக்கு வந்த சத்யா, தவ்லத் பேகம், இவர்களின் நண்பர் ஜெயக்குமார் இணைந்து கொலை செய்துள்ளனர். மேலும், தேன்மொழியின் 7 வயது மகளையும் கழுத்தில் வெட்டிவிட்டு நகை, பணத்துடன் தப்பியுள்ளனர்.

    வீட்டின் உள்ளே மயங்கிக் கிடந்த சிறுமி, மறுநாள் காலை வெளியே வந்தபோதுதான் இந்த கொலைச் சம்பவம் தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் சத்யா, தவ்லத் பேகம், ஜெயக்குமார் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கை விசாரித்து வந்த காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் தலா இரட்டை ஆயுள் தண்டனைகள் விதித்து தீர்ப்பளித்தது. மேலும், குற்றவாளிகள் மூவருக்கும் 80 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

    • சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்றார்.
    • கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி குடியேற்ற அதிகாரிகள் அவரை மீண்டும் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தனர்.

    இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 64 வயதான சுப்பிரமணியம் வேதம், தனது நண்பரைக் கொலை செய்ததாக குற்றம்சட்டப்பட்ட வழக்கில் 1980 ஆம் ஆண்டு  ஆயுள் தண்டனை பெற்றார்.

    எந்த சாட்சியமும் இல்லாத நிலையில் சந்தர்ப்ப சூழ்நிலையை அடிப்படையாக கொண்டு அவர் குற்றவாளி என கடந்த காலங்களில் 2 முறை தீர்ப்பளிக்கப்பட்டது.

    ஆனால் 43 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் குற்றவாளி அல்ல என புதிதாக சமர்ப்பிக்கப்பட்ட பாலிஸ்டிக் ஆதாரத்தால் நிரூபிக்கப்பட்டு இந்த ஆண்டு தொடக்கத்தில் புதிய தீர்ப்பு வழங்கப்பட்டது.

    கடந்த மாதம் விடுவிக்கப்பட இருந்த நிலையில், 20 வயதில் சுப்பிரமணியத்திற்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட போதைப்பொருள் விநியோகக் குற்றச்சாட்டை காரணம் காட்டி கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி குடியேற்ற அதிகாரிகள் அவரை மீண்டும் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தனர்.

    இந்தநிலையில், அமெரிக்காவில் நாடுகடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிபதி, சுப்ரமணியத்தை நாடு கடத்துவதை தற்காலிகமாக நிறுத்துமாறு உத்தரவிட்டார். 

    குடியேற்ற வழக்குகளுக்கான மேல்முறையீட்டு வாரியம், இந்த வழக்கை மறுபரிசீலனை செய்யலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் வரை அவர் நாடு கடத்தப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    சுப்ரமணியம் ஒன்பது மாத குழந்தையாக இருந்தபோது அவரது பெற்றோர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். அவரிடம் நிரந்தர அமெரிக்க குடியுரிமை இருந்தபோதிலும் அவரை நாடு கடத்தி டிரம்ப் நிர்வாகம் தீவிரம் காட்டி வருவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  

    • கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
    • போலீசார் இந்த முதல் தகவல் அறிக்கையின் நகலை கரூர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விரைவு தபால் ஆக தாக்கல் செய்துள்ளனர்.

    திருச்சி:

    கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கரூர் மேற்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் மதியழகன், த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், மாநில நிர்வாகி சி.டி.நிர்மல்குமார் மற்றும் சிலர் என குறிப்பிட்டு, அவர்கள் மீது கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த முதல் தகவல் அறிக்கையில் மத்திய அரசு புதிதாக அமலுக்கு கொண்டு வந்த பி.என்.எஸ். சட்ட பிரிவுகளான 105 (கொலைக்கு சமமான கொலைக்கான தண்டனைக்குரிய செயல்), 110 (குற்றமற்ற கொலை முயற்சி செயல்), 223 (மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அவசர மற்றும் அலட்சிய செயல்), 223 (அரசு அதிகாரியின் உத்தரவிற்கு கீழ்ப்படியாமை), டி.என்.பி.பி.டி.எல். பிரிவு 3 (பொது சொத்திற்கு சேதம் விளைவித்தல்) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    போலீசார் இந்த முதல் தகவல் அறிக்கையின் நகலை கரூர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விரைவு தபால் ஆக தாக்கல் செய்துள்ளனர். இந்த சட்டப்பிரிவின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கையில் உள்ள நபர்களுக்கு அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் முதல் இரண்டு சட்டப்பிரிவுகளுக்கு 7 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரையும், பொதுச்சொத்துகள் சேதத்திற்கு சிறைத்தண்டனை மட்டுமின்றி அவர்களிடம் இருந்து இழப்பீடு பெறுவதற்கும் பி.என்.எஸ். சட்டத்தில் இடம் இருப்பதாக சென்னை ஐகோர்ட்டு மூத்த வக்கீல் ஒருவர் கூறினார்.

    மேலும் இந்த எப்.ஐ.ஆரில் 'அதர்ஸ்' என்ற வார்த்தை இருப்பதால் போலீசார் தங்களது விசாரணையை முடித்து கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன்பாக கட்சியின் தலைவர் விஜய் பெயரையும் சேர்ப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், அப்படி சேர்க்கும்பட்சத்தில் அவருக்கும் மேற்குறிப்பிட்ட தண்டனை கிடைப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    • பொதுவாக ஐபிஎல் போட்டிகள் தொடங்கும்போது ஐபிஎல் அணி ரசிகர்களிடையே தங்கள் அணிக்காக வாக்குவாதங்கள், சண்டைகள் நடப்பது வழக்கம்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மராஜை கைது செய்தனர்.

    இந்திய கிரிக்கெட் அணிக்கு இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். முக்கியமாக அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் போன்றவர்களுக்கு ஆங்காங்கே ரசிகர்கள் மன்றங்களே  நடத்தி வருகின்றனர்.

    பொதுவாக ஐபிஎல் போட்டிகள் தொடங்கும்போது ஐபிஎல் அணி ரசிகர்களிடையே தங்கள் அணிக்காக வாக்குவாதங்கள், சண்டைகள் நடப்பது வழக்கம்.

    இதற்கிடையே கடந்த 2022 ஐபிஎல் சீசனின் போது அரியலூரை சேர்ந்த தர்மராஜ் தனது நண்பர் விக்னேஷ்வுடன் ஊருக்கு வெளியே மது அருந்த சென்றுள்ளார். இருவரும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மது அருந்திவிட்டு பேசிக் கொண்டிருந்தபோது கிரிக்கெட் குறித்து இருவருக்கும் வாக்குவாதம் எழுந்ததாக தெரிகிறது.

    இந்த வாக்குவாதத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியை தவறாக பேச, இதனால் ஆத்திரமடைந்த தர்மராஜ் அரிவாளால் விக்னேஷை வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விக்னேஷ் இறந்துள்ளார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மராஜை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு நடந்து வந்தது.

    இந்நிலையில் விக்னேஷை கொலை செய்த தர்மராஜுக்கு அரியலூர் நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனை என தீர்ப்பு வழங்கியுள்ளது.

    • முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் வாழ்க்கை பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் முற்றிலும் மாறிவிட்டது.
    • எம்.பி.யாக ரூ. 1.2 லட்சம் சம்பளம் மற்றும் பிற வசதிகளைப் பெற்று வந்தார்.

    பல்வேறு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து சிக்கிய கர்நாடக முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

    முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவின் வாழ்க்கை பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் முற்றிலும் மாறிவிட்டது.

    சிறை விதிகளின்படி, அவருக்கு மாதம் ரூ. 540 சம்பளம் பெற அனுமதிக்கப்படுகிறது. அதுவும் சிறை அதிகாரிகள் அவருக்கு ஏதாவது வேலை ஒதுக்கினால் மட்டுமே சாத்தியமாகும்.

    எம்.பி.யாக ரூ. 1.2 லட்சம் சம்பளம் மற்றும் பிற வசதிகளைப் பெற்ற அவர் ஒரு சாதாரண கைதியாக தனது நாட்களை கழிக்கிறார்.

    சிறையில் அவரது அன்றாட வேலைகள் ஒவ்வொரு நாளும் காலை 6:30 மணிக்கு தொடங்குகிறது. காலை உணவை முடித்த பிறகு, அவர் அதிகாரிகளால் ஒதுக்கப்பட்ட வேலைக்குச் செல்ல வேண்டும்.

    சிறை விதிகளின்படி, ஆரம்பத்தில் அவருக்கு பேக்கரி உதவியாளர் அல்லது எளிய தையல் போன்ற வேலை ஒதுக்கப்படும். குறைந்தபட்சம் ஒரு வருடம் இந்த வேலைகளைச் செய்த பிறகு, அவரது தகுதிகளைப் பொறுத்து நெசவு அல்லது கொல்லர் போன்ற வேலைகளுக்கு மாற அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும்.

    வாரத்தின் ஒவ்வொரு நாளும் காலை உணவு வெவ்வேறு வகையான டிஃபினுடன் வழங்கப்படுகிறது. காலை 11:30 மணி முதல் மதியம் 12 மணி வரை மதிய உணவு இடைவேளை உள்ளது. மதிய உணவு மற்றும் இரவு உணவில் சப்பாத்தி, ராகி முத்தா, சாம்பார், சாதம் மற்றும் மோர் ஆகியவை அடங்கும்.

    வாரத்தின் செவ்வாய்க்கிழமை முட்டை, மாதத்தின் முதல் மற்றும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் மட்டன், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் கோழிக்கறி வழங்கப்படும்.

    அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் வாரத்திற்கு இரண்டு முறை 10 நிமிடங்கள் தொலைபேசியில் பேச அனுமதிக்கப்படுகிறார். மேலும், வாரத்திற்கு ஒரு முறை குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களைச் சந்திக்க அவருக்கு அனுமதி வழங்கப்படுகிறது.   

    • பாழடைந்த வீட்டின் கிணற்றுக்குள் கோவிந்தசாமி பதுங்கியிருப்பது தெரியவந்தது.
    • தப்பி ஓடி பிடிபட்ட கைதி கோவிந்தசாமி, மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காடு அருகே கடந்த 2011-ம் ஆண்டு சவுமியா என்ற இளம்பெண் ஓடும் ரெயிலில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, ரெயிலில் இருந்து தள்ளி விடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தமிழகத்தின் விருத்தாசலத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    அவருக்கு கோர்ட்டு மரண தண்டனை விதித்த நிலையில், உச்சநீதிமன்றம் அதனை ஆயுள் தண்டனையாக குறைத்தது. இதனை தொடர்ந்து கோவிந்தசாமி கண்ணூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். ஒரு கை ஊனமான அவர், பாதுகாப்பான பிளாக்கில் இருந்து நேற்று காலை திடீரென மாயமானார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சிறை அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் இறங்கினர். சுமார் 3½ மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு சிறையில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டின் கிணற்றுக்குள் கோவிந்தசாமி பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.

    கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் தப்பியோடிய கைதி பிடிபட்ட நிலையில் அவர் தப்பிச் சென்றது எப்படி? என உயர் அதிகாரிகள் விசாரணையில் இறங்கினர். இதில் சிறை அறையின் 3 இரும்பு கம்பிகளை அறுத்து விட்டு கிழிந்த போர்வைகளை ஒன்றாக கயிறு போல் கட்டி 7.5 மீட்டர் உயரம் உள்ள சிறைச் சுவரை ஏறி தப்பிச் சென்றது தெரிய வந்தது.

    சிறையில் கண்காணிப்பு கேமரா இருந்தும் கோவிந்தசாமி தப்பிச் சென்றதை அதிகாரிகள் கவனிக்காமல் விட்டது எப்படி? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் பல நாட்களுக்கு முன்பிருந்தே சிறையில் இருந்து தப்பிக்க கோவிந்தசாமி திட்டமிட்டிருப்பது தெரிய வந்தது.

    இதனால் அவருக்கு சிறைக்குள் இருந்து உதவி கிடைத்ததா? என கண்ணூர் நகர போலீஸ் கமிஷனர் நிதின்ராஜ் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் 3 சிறை அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். கைதிகளை மேற்பார்வையிட தவறியதாக கோபுர அதிகாரியான துணை சிறை அதிகாரி ராஜீஸ், அறை பாதுகாப்பு பணி மற்றும் சி.சி.டி.வி. கட்டுப்பாட்டு அறை பணியில் இருந்த உதவி சிறை அதிகாரிகள் சஞ்சய், அகில் ஆகிய 3 பேரையும் சஸ்பெண்டு செய்து டி.ஐ.ஜி. ஜெயக்குமார் உத்தரவிட்டு உள்ளார்.

    இதற்கிடையில் தப்பி ஓடி பிடிபட்ட கைதி கோவிந்தசாமி, மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் பாதுகாப்பு காரணமாக கண்ணூர் மத்திய சிறையில் இருந்து திருச்சூர் விய்யூர் உயர் பாதுகாப்பு சிறைக்கு இன்று மாற்றப்பட்டார்.

    • சாந்தா குரூஸ் ஓட்டல் அறையில் சந்தியாவின் கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்து தப்பினார்.
    • தப்பி சென்றபோது விபத்தில் சிக்கி வினோத் படுகாயமடைந்தார்.

    மும்பையை சேர்ந்த வினோத் குமார் என்ற 34 வயது நபர் சந்தியா என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார்.

    சந்தியா ஜீன்ஸ், டி-சர்ட் ஆடை அணிவதும் மற்ற மற்ற ஆண்களுடன் பேசுவதும் வினோத் குமாருக்கு துண்டாக பிடிக்கவில்லை.

    இதனால் சந்தியாவுடன் அடிக்கடி வாக்குவாதம் செய்து வந்த வினோத் கடந்த 2019 அக்டோபரில் சாந்தா குரூசில் ஒரு ஓட்டல் அறையில் வைத்து சந்தியாவின் கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்து தப்பினார்.

    ஆனால் தப்பி சென்றபோது விபத்தில் சிக்கி வினோத் படுகாயமடைந்தார். சிகிச்சைக்கு பிறகு அவரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கின் விசாரணை மும்பை செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. சந்தியா ஜீன்ஸ், பேன்ட், டி-சர்ட் அணிவது, மற்றவர்களிடம் பேசுவது ஆகிவற்றால் வினோத் குமார் வெறுப்புடன் இருந்ததை சாட்சியங்கள் வெளிப்படுத்தின.

    இந்நிலையில் நேற்று விசாரணை நிறைவில் வினோத்குமார் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 

    • சாதி மாறி திருமணம் செய்துகொண்ட முருகேசன்-கண்ணகி தம்பதி 2003ல் கொலை செய்யப்பட்டனர்.
    • கண்ணகி அண்ணனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் புதுக்காலனியை சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரின் மகன் முருகேசன், தலித் சமுதாயத்தைச் சேர்ந்த இவர் பி.இ பட்டதாரி ஆவார்.

    இவர் அதே பகுதியில் வசித்த மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த துரைசாமி என்பவரின் மகள் கண்ணகி என்ற பெண்ணை காதலித்து கடந்த 2003-ம் ஆண்டு மே 5-ந்தேதி பதிவு திருமணம் செய்து கொண்டார்.

    இந்த காதல் திருமணம் குறித்து கண்ணகியின் பெற்றோருக்கு தெரியவர, கண்ணகியை மூங்கில் துறைப்பட்டில் உள்ள அவரது உறவினர் வீட்டில் முருகேசன் மறைத்து வைத்தார். ஆனால், பெண்ணின் செயலால் கவுரவம் கெட்டு விட்டது என்று 2003-ம் ஆண்டு ஜூலை 8-ந்தேதி காதல் திருமணம் செய்து கொண்ட கண்ணகி மற்றும் முருகேசனை விருத்தாசலம் வண்ணாங் குடிகாட்டில் உள்ள மயானத்திற்கு இழுத்து சென்று காது மற்றும் மூக்கில் விஷம் ஊற்றி கொலை செய்து, பின்னர் இருவரின் உடலையும் தனி தனியாக எரித்துள்ளனர்.

    இந்த விவகாரத்தில் முருகேசனின் உறவினர்கள் விருத்தாச்சலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். முதலில் வழக்கை பதிவு செய்ய காலம் தாழ்த்திய போலீசார் பின்னர் இரு குடும்பத்தினரும் சாதி மறுப்பு திருமணம் செய்த தங்களது பிள்ளைகளை கொலை செய்ததாக கொலை வழக்கு பதிவு செய்தனர். சென்னை ஐகோர்ட்டு 2004-ம் ஆண்டு இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டது.

    கடந்த 2004-ம் ஆண்டு குற்றப்பத்திரிக்கையை சி.பி.ஐ. தாக்கல் செய்த நிலையில், 2003-ல் முருகேசனின் உறவினர்கள் புகார் அளித்த போது விருத்தாச்சலம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய செல்லமுத்து, சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன் உள்ளிட்ட 15 பேரை சி.பி.ஐ. குற்றவாளிகளாக சேர்த்தது. இந்த வழக்கில் 81 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில் 36 பேர் பிறழ் சாட்சிகளாக மாறினர்.

    பின்னர் பல ஆண்டு களாக கடலூர் கோர்ட்டில் வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், கண்ணகியின் தந்தை துரைசாமி, கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டி, அய்யாச்சாமி ரங்கசாமி, கந்தவேலு ஜோதி, வெங்கடேசன், மணி, குணசேகரன், தனவேல், அஞ்சாப்புலி, ராமதாஸ், சின்னதுரை, அப்போது இன்ஸ்பெக்டராக இருந்த செல்லமுத்து, சப்-இன்ஸ்பெக்டராக இருந்த தமிழ்மாறன் உள்ளிட்ட 15 பேரில் 13 பேர் குற்றவாளி கள் என்று தீர்ப்பு வழங்கப் பட்டது.

    இதில் அய்யாச்சாமியும், குணசேகரனும் குற்றவாளி இல்லை என்று வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

    கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. மற்ற அனைவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கை சரியாக விசாரிக்காத போலீசாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில், பட்டியலின வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை வழங்கப் பட்டது.

    ஆனால் கடலூர் கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தண்டனை பெற்றவர்கள் மேல்முறை யீட்டு மனுவை தாக்கல் செய்தனர். சென்னை ஐகோர்ட்டு விசாரணை நடத்தி, 2022-ல் தீர்ப்பு வழங்கியது. அதில், கண்ணகியின் அண்ணன் மருது பாண்டிக்கு வழங்கப் பட்ட தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

    கண்ணகியின் தந்தை துரைசாமி உட்பட 12 பேருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது.

    இதில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட கண்ணகியின் உறவினரான கோ.கந்தவேல், ஜோதி, மணி ஆகியோர் தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

    இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி சுதான்சு துலியா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    இதில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 12 பேருக்கும் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. மேலும் குற்றவாளிகள் கந்தவேல், ஜோதி, மணி ஆகியோரின் மேல் முறையீட்டு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    • பாலியல் வழக்கு விசாரணையின் போது கோர்ட்டில் சாட்சியம் அளிக்க சென்னை வந்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார்.
    • பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு தற்போது 22 வயது ஆகிறது.

    சென்னை:

    சென்னையில் உள்ள ஒரு வீட்டின் முதல் மாடியில் கடந்த 2015-ம் ஆண்டு 12 வயது சிறுமியும், அவரது பெற்றோரும் வாடகைக்கு வசித்து வந்தனர். அப்போது வீட்டு உரிமையாளரின் மருமகன் அப்பாஸ் அலி (வயது 41) அந்த சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தார்.

    கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ந்தேதி அப்பாஸ் அலி, அந்த சிறுமியை சென்னையில் இருந்து கடத்தி சென்றார். சிறுமியை திண்டுக்கல்லுக்கு அழைத்து சென்று அங்கு ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். அங்கு சிறுமியை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்தார்.

    மேலும் பல்வேறு இடங்களுக்கும் சிறுமியை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். பின்னர் சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு அப்பாஸ் அலி மட்டும் சென்னை திரும்பினார்.

    இதற்கிடையே சிறுமியின் பெற்றோர் தனது மகளை காணவில்லை என்று எம்.கே.பி. நகர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் சிறுமியை தேடினார்கள். 2 நாட்களுக்கு பிறகு போலீசார் சிறுமியை கண்டுபிடித்தனர். சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் அப்பாஸ் அலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் அதன் பிறகும் அப்பாஸ் அலி, அந்த சிறுமியை தொடர்ந்து மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டார். இதனால் சிறுமியும், அவரது பெற்றோரும் அங்கிருந்து தலைமறைவானார்கள். அவர்கள் தென் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார்கள்.

    அதன்பிறகும் அப்பாஸ் அலி, சிறுமி இருக்கும் இடத்தை தேடி கண்டுபிடித்து அங்கு சென்று சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். மேலும் தன் மீதான பாலியல் வழக்கு விசாரணையின் போது கோர்ட்டில் சாட்சியம் அளிக்க சென்னை வந்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார்.

    இதையடுத்து தாயும், மகளும் அங்கிருந்து வேறொரு கிராமத்துக்கு சென்றனர். பாதுகாப்பு கருதி அங்கு தங்களின் பெயர், விவரங்களை மாற்றி வாழத் தொடங்கினார்கள். பின்னர் ஒவ்வொரு ஊராக குடிபெயந்தனர்.

    அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டு இருந்த அவர்களுக்கு உதவி செய்யவும், ஆறுதல் சொல்லவும் யாரும் இல்லை. மேலும் அந்த சிறுமி மனதளவில் பாதிக்கப்பட்டதால் பள்ளிக்கும் செல்லவில்லை. தாயும், மகளும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தனர். சுமார் 10 ஆண்டும் காலம் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தனர்.

    இது ஒருபுறம் இருக்க எம்.கே.பி. நகர் மகளிர் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் போலீசார், தாயையும், மகளையும் தேடி வந்தனர். போலீசாரின் தீவிர தேடுதல் முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது. 10 ஆண்டுகளாக அவர்களை தேடிய நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தாயும், சிறுமியும் இருக்கும் இடத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.

    பின்னர் போலீசார் அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு தற்போது 22 வயது ஆகிறது. வழக்கு விசாரணையின் போது அவர், நீதிபதியிடம் தனக்கு நடந்த கொடுமைகளை வாக்குமூலமாக அளித்தார். அப்பாஸ் அலி செய்த கொடுமையால் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டேன். என்னுடைய கல்வியும் பறிபோனது, என் வாழ்க்கையை ஒட்டு மொத்தமாக அப்பாஸ் அலி சீரழித்து விட்டார் என்று கூறி அந்த பெண் கதறி அழுதார்.

    அவரது வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த மாதம் முதல் வாரத்தில் அப்பாஸ் அலிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டார். அப்பாஸ் அலிக்கு தற்போது 51 வயது ஆகிறது. கோர்ட்டு தீர்ப்பையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    • கிறிஸ்தவ மத போதகர் கிரகாம் ஸ்டெயின்ஸ்(58), அவரது மகன்கள் பிலிப்(10) மற்றும் டிமோதி(6) ஆகிய 3 பேரை 'ஒரு கும்பல்' உயிருடன் எரித்து கொலை செய்தது.
    • முக்கிய குற்றவாளி தாரா சிங்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

    ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர் மற்றும் அவரது மகன்களை கொலை செய்த வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த நபர் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    ஒடிசா மாநிலம் கியோன்ஜர் மாவட்டத்தில் உள்ள மனோகர்பூர் கிராமத்தில் கடந்த 1999 ஜனவரி 21, ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர் கிரகாம் ஸ்டெயின்ஸ்(58), அவரது மகன்கள் பிலிப்(10) மற்றும் டிமோதி(6) ஆகிய 3 பேரை ஒரு கும்பல் உயிருடன் எரித்து கொலை செய்தது.

    சர்வதேச அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக மகேந்திர ஹெம்பிராம், தாரா சிங் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் முக்கிய குற்றவாளி தாரா சிங்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

    மற்றொரு குற்றவாளி மகேந்திர ஹெம்பிராம் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், 25 ஆண்டுகளுக்கு பிறகு நன்னடத்தை அடிப்படையில் மகேந்திர ஹெம்பிராம் தற்போது சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

    தற்போது 50 வயதாகும் மகேந்திர ஹெம்பிராம், சிறையில் இருந்து வெளிவந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "மதமாற்றம் தொடர்பான ஒரு சம்பவத்தில் பொய்யாக சிக்க வைக்கப்பட்டு 25 ஆண்டுகள் சிறையில் கழித்தேன்" என்று தெரிவித்தார்.

    விடுதலை பெற்ற மகேந்திர ஹெம்பிராம்- ஐ வலதுசாரி இந்து முன்னணி அமைப்பான விஷ்வ இந்து பரிஷத் மாலை மரியாதையுடன் 'ஜெய் ஸ்ரீ ராம்' கோஷமிட்டு உற்சாகமாக வரவேற்றது.  

     

    ×