search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "french"

    • புதுச்சேரி என்றதும் அடுத்த வினாடி நம் மனக்கண்ணில் தோன்றுபவர் மணக்குள விநாயகர்.
    • 600 ஆண்டு கால குறிப்புகளை மணக்குள விநாயகர் பற்றிய வரலாறு கொண்டுள்ளது.

    தமிழ்நாட்டில் விநாயகர் கோவில் என்றதும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் எப்படி நினைவுக்கு வருகிறார்களே.... அது போல புதுச்சேரி என்றதும் அடுத்த வினாடி நம் மனக்கண்ணில் தோன்றுபவர் மணக்குள விநாயகர். புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து 4 கி.மீ. தூரத்தில் நகரின் நாயகனாக இவர் அருள்பாலித்து வருகிறார்.

    இவர் இத்தலத்துக்கு எப்படி வந்தார்? இவரை பிரதிஷ்டை செய்தது யார்? என்பன போன்ற எந்த விவரங்களும் யாருக்கும் தெரியாது. பழமையான விநாயகர் தலங்களை ஆய்வு செய்தால், அந்த தலங்கள் புராண நிகழ்வுகளுடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்பு கொண்டிருப்பதை அறியலாம். சில தலங்களில் விநாயகரின் பெயரே அவர் அந்த தலத்தில் எழுந்தருளியதற்கான காரணத்தை வெளிப்படுத்துவதாக இருக்கும்.

    நாடெங்கும் இப்படி விநாயகர் அவதார சிறப்பையும், அவரது வீர, தீர செயல்களை உணர்த்தும் பழமை சிறப்பையும் கொண்டுள்ள தலங்கள் ஏராளம் உள்ளன. ஆனால் இத்தகைய புராண பின்புலம் எதுவும் புதுச்சேரி மணக்குள விநாயகருக்கு இல்லை.

    என்றாலும் மணக்குள விநாயகர் இன்று உலகம் முழுவதும் அறியப்படும் விநாயகராக இருப்பதற்கு அவரது அருளாற்றலே காரணமாகும்.

    கடந்த 600 ஆண்டுகளில் மணக்குள விநாயகர் எப்படி இருந்தார் என்பதற்கு ஆதாரமான குறிப்புகள் ஏராளம் உள்ளன. அதற்கு முந்தைய கால கட்ட வரலாற்றில் இந்த விநாயகரை பற்றிய எந்த ஒரு குறிப்பும் இல்லை.

    எனவே இந்த விநாயகர் இத்தலத்துக்கு வந்த மூலக்கதை யாருக்குமே தெரியாது. ஆதிகாலத்தில் இந்த விநாயகரை மணல் குளம் கரையில் உள்ள அரச மரத்தடியில் மகரிஷி ஒருவர் பிரதிஷ்டை செய்திருக்கலாம் என்றும், அப்போது இந்த விநாயகருக்கு வேறு பெயர் இருந்திருக்கலாம் என்கிறார்கள்.

    புதுச்சேரியில் வசித்து வந்த தொள்ளைக்காது சித்தர்தான்,இந்த விநாயகரை ஸ்தாபித்து இருப்பார் என்று சிலர் எழுதியுள்ளனர். எதையும் உறுதிபடுத்த இயலவில்லை. எனவே கடந்த 600 ஆண்டு கால குறிப்புகளை கொண்டே மணக்குள விநாயகர் பற்றிய வரலாறு பலராலும் எழுதப்பட்டுள்ளது. அந்த வரலாறுகளை சற்று ஆய்வு செய்தால் மணக்குள விநாயகரின் மகிமை நம்மை சிலிர்க்க வைக்கிறது.

    புதுச்சேரியில் மிகச் சரியாக 349 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1666-ம் ஆண்டு பிரெஞ்சு நாட்டவர்களின் ஆதிக்கம் ஏற்பட்டது. அதற்கும் சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பே அதாவது 1400-களில் புதுச்சேரியில் இந்த விநாயகர் பெரும்பாலான மக்களால் விரும்பி வழிப்படும் ஒருவராக இருந்தார்.

    அந்த கால கட்டத்தில் தற்போது ஆலயம் உள்ள இடம் மிகப்பெரிய குளமாக இருந்தது. அந்த குளம் நல்ல மணல் உள்ள குளம். எனவே புதுச்சேரி மக்கள் அந்த குளத்தை மணல் குளம் என்று அழைத்து வந்தனர்.

    அந்த குளக்கரையில்தான் நம்ம விநாயகர் வீற்றிருந்தார். அக்காலத்தில் புதுச்சேரி பணக்காரர்கள் மிகுந்த அழகான ஊராக இருந்தது.

    மணல் குளம் பகுதியில் கைக்கோளர் என்ற செங்குந்த முதலியார்களும், சேட செட்டியார் என்ற தேவாங்கச் செட்டியார்களும் அதிக அளவில் வசித்து வந்தனர். நெசவுத் தொழிலே அவர்களது முக்கிய தொழிலாக இருந்தது. இதனால் விநாயகர் இருந்த தெரு நெசவாளர் தெரு என்றழைக்கப்பட்டது.

    அவர்கள் தினமும் காலையில் மணல் குளத்தில் நீராடி, அரச மரத்தடியில் இருந்த விநாயகரை வணங்கி விட்டு, அதன் பிறகு நெசவுத் தொழிலை தொடங்குவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். விநாயகர் சிலை இருந்த அரச மரத்தடியில் ஒரு நாகச் சிலையும் இருந்தது. அதையும் மணல்குளம் பகுதி மக்கள் வழிபட தவறுவது இல்லை.

    விநாயகருக்கு மணல்குளம் தண்ணீரை எடுத்து வந்துதான் அபிஷேகம் செய்தனர். இதனால் அந்த விநாயகருக்கு இருந்த மூலப்பெயர் மறைந்து `மணல்குளத்து விநாயகர்' என்ற பெயர் ஏற்பட்டது.

    பிறகு அது மணற்குளத்து விநாயகர் என்று மாறியது. கால ஓட்டத்தில் அந்த பெயரும் மருவி `மணக்குள விநாயகர்' என்ற பெயர் உருவெடுத்து அதுவே நிலைத்து விட்டது.

    நாளடைவில் மணல் குளம் தூர்ந்து போனது. மெல்ல, மெல்ல குளம் மறைந்து நந்தவனமாக மாறியது. இதனால் நெசவாளர்கள் மணக்குள விநாயகருக்கு கருவறை, அர்த்த மண்டபம் கட்டி சிறிய கோவிலாக மாற்றி வழிபட்டு வந்தனர்.

    பிரெஞ்சுக்காரர்கள் வருகைக்குப் பிறகு அந்த நந்தவனப் பகுதி கட்டிடங்களாக மாறியது.

    அறிவியல் மாற்றங்களுக்கு ஏற்ப புதுச்சேரி மாறினாலும், நம்ம மணக்குள விநாயகர் மட்டும் மாறவே இல்லை. எத்தனையோ சோதனைகள் செய்யப்பட்டாலும் தான் அமர்ந்த இடத்தில் பிடிவாதமாக அவர் வீற்றிருந்து அருள் பாலித்து வருகிறார்.

    கடலில் வீசப்பட்டாலும் கரை திரும்பிய அற்புதம்

    சென்னையில் கால் ஊன்றிய ஆங்கிலேயர்கள் தற்போது கோட்டை (தலைமை செயலகம்) உள்ள பகுதியை வெள்ளையர் பூமி என்றும் வடசென்னையை கருப்பர் பூமி என்றும் பிரித்து ஆட்சி செய்தனர். அது போலவே புதுச்சேரியில் கால் ஊன்றிய பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரி நடுவே ஓடிய உப்பனாற்றுக் கால்வாய்க்கு கிழக்கே உள்ள பகுதியை வெள்ளை நகரம் என்றும், உப்பனாற்றுக் கால்வாய்க்கு மேற்கே இருந்த பகுதியை கறுப்பர் நகரம் என்றும் பிரித்து இருந்தனர்.

    கிழக்குப் பகுதியில் கடற்கரையோரம் இருந்த தமிழர்கள், தெலுங்கர்கள், இஸ்லாமியர்களை அடித்து விரட்டி விட்டு தங்களுக்கென பெரிய, பெரிய பங்களாக்களை கட்டிக் கொண்டனர். பிறகு 1988-ல் அவர்கள் கோட்டை ஒன்றை உருவாக்கினார்கள்.

    அந்த கோட்டைக்குட்பட்ட ஒரு பகுதியாக மணக்குள விநாயகர் ஆலயமும் இருந்தது. தினமும் காலையில் தமிழர்கள் கூட்டம், கூட்டமாக வந்து விநாயகரை வணங்கிச் சென்றது பிரெஞ்சுக்காரர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

    குறிப்பாக திருவிழா நாட்களில் மேள, தாளம் முழங்க விநாயகர் வழிபாடு நடந்ததை அவர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. தங்களிடம் அடிமையாக இருப்பவர்கள், தங்கள் பகுதிக்குள் வந்து கொண்டாட்டம் செய்வதா என்று ஆவேசமானார்கள்.

    எல்லாவற்றுக்கும் இந்த விநாயகர்தானே காரணம்..... அவரை இல்லாமல் செய்து விட்டால், தமிழர்கள் யாரும் கொட்டு அடித்தப்படி இப்பகுதிக்கு வர மாட்டார்கள் அல்லவா என்று யோசித்தனர். அப்போது கவர்னரின் உதவியாளராக ஓர்லையான் என்பவர் இருந்தார்.

    இவர் தமிழர்களுக்கு எதிராகவே எல்லாவற்றையும் செய்து வந்தார். விநாயகர் இருந்த நெசவாளர் தெரு பெயரை மாற்றி தன் பெயரை சூட்டி ஓர்லையான் தெரு என்று வைத்தவர். அப்படிப்பட்ட இவர் ஆட்களை வைத்து விநாயகர் சிலையை பெயர்த்து எறிந்து கடலில் தூக்கி வீசினார்.

    மறுநாள் காலை ஓர்லையானுக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் கடும் அதிர்ச்சி காத்திருந்தது. கடலில் வீசப்பட்ட மணக்குள விநாயகர் மீண்டும் கரை திரும்பி, அதே இடத்தில் `ஜம்' மென்று உட்கார்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருந்தார்.

    பிரெஞ்சுக்காரர்கள் விடவில்லை. மீண்டும் ஒரு தடவை மணக்குள விநாயகரை பெயர்த்து எடுத்துச் சென்று கடலில் வீசி எறிந்தனர். இந்த முறையும் நம்ம விநாயகர் கரை திரும்பி விட்டார்.

    உடனே பிரெஞ்சுக்காரர்கள் இதில் ஏதோ சதி நடப்பதாக நினைத்தனர். மூன்றாவது தடவை பிரெஞ்சு உயர் அதிகாரி ஒருவர் முன்னிலையில் விநாயகர் சிலை பெயர்த்து எடுக்கப்பட்டு, யாருக்கும் தெரியாமல் மிக, மிக ரகசியமாக பிரெஞ்சுக்காரர்கள் மூலம், சிலை நடுக்கடலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    நடுக்கடலில் மணக்குள விநாயகரை வீசி விட்டு அப்பாடா..... என்று கரை திரும்பினார்கள். இனி பூஜை, கொண்டாட்டம் வழிபாடு எதுவும் இருக்காது என்று மகிழ்ச்சியுடன் இருந்தனர்.

    விடிந்தது. பிரெஞ்சுக்காரர்கள் ஆர்வமுடன் பார்த்தனர். தமிழர்கள் ஆவேசத்தில் ஆர்ப்பாட்டம் செய்வார்கள் என்று எண்ணி காவல் படைகளை தயாராக வைத்திருந்தனர். ஆனால் நடந்ததோ வேறு.

    வழக்கம் போல மணக்குள விநாயகர் தன் இடத்தில் கம்பீரமாக வீற்றிருந்தார். அவருக்கு தினமும் காலையில் நடக்கும் அர்ச்சனை, ஆராதனை விமரிசையாக நடந்து கொண்டிருந்தது. முன்பை விட அதிகப்படியான பக்தர்கள் வந்து, விநாயகரை வழிபட்டு சென்று கொணடிருந்தனர்.

    பிரெஞ்சுக்காரர்களுக்கு தாங்க முடியாத அதிர்ச்சி ஏற்பட்டது. எப்படி மணக்குள விநாயகர் கரை திரும்பினார் என்று யோசித்து, யோசித்து தவித்துப் போனார்கள்.

    உண்மையில் மணக்குள விநாயகர் எப்படி கரை திரும்பினார்?

    கடலில் வீசப்பட்ட பிறகு விநாயகர் சிலை மிதந்தபடி வந்து கரை ஒதுங்கியதாகவும், அதை பக்தர்கள் எடுத்து வந்து அதே இடத்தில் வைத்து வழிபட்டதாகவும் சொல்கிறார்கள்.

    மற்றொரு சாரார், மணக்குள விநாயகர் கடலில் வீசப்பட்டதும் தன் ஆத்மார்த்த பக்தர் ஒருவர் கனவில் தோன்றி கடலோரத்தில் குறிப்பிட்ட இடத்தை கூறி, அங்கு தான் இருப்பதாகவும், தன்னை தனது மணல்குளம் கோவிலுக்கு எடுத்துச் செல்லும்படி கூறியதாகவும் அதன்படி அந்த பக்தர் மணக்குள விநாயகரை மீட்டு பழைய இடத்தில் பிரதிஷ்டை செய்ததாகவும் சொல்கிறார்கள்.

    எப்படியோ.... மணக்குள விநாயகர் தான் ஒரு சக்தி வாய்ந்த கடவுள் என்பதை பிரெஞ்சுக்காரர்களுக்கு புத்தியில் நன்கு உறைக்கும்படி கரை மீண்டு வந்து உணர்த்தி விட்டார். அதன்பிறகு மணக்குள விநாயகர் மீது பிரெஞ்சுக்காரர்களுக்கு பயம் வந்து விட்டது. பணிவு வந்து விட்டது.

    மணக்குள விநாயகர் அதே இடத்தில் இருந்து விட்டுப் போகட்டும் என்று விட்டு விட்டார்கள். என்றாலும் இடையிடையே மணக்குள விநாயகருக்கு தொந்தரவு கொடுக்கத்தான் செய்தனர்.

    • உலக அமைதி மற்றும் ஸ்திரதன்மையையே இந்தியாவும் பிரான்சும் விரும்புகின்றன.
    • எனது முதல் பயணமாக இந்தியாவைத் தேர்ந்தெடுக்க விரும்பினேன்.

    பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி கேத்தரின் கொலோனா, 3 நாட்கள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை அவர் சந்தித்தார். அப்போது இருதரப்பு நலன், மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

    இந்தியாவுடனான நட்பு மற்றும் ஒத்துழைப்பு தொடர்பாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அனுப்பியிருந்த செய்தியை, பிரதமர் மோடியிடம் வெளியுறவுத்துறை மந்திரி கேத்தரின் எடுத்துரைத்தார். பாரிஸ் மற்றும் ஜெர்மனியில் அதிபர் மேக்ரோனுடன் நடந்த சந்திப்புகளை பிரதமர் மோடி அப்போது நினைவு கூர்ந்ததாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்த கேத்தரின்,  பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது பேசிய ஜெய்சங்கர் இந்தோ-பசிபிக் பிராந்திய வளர்ச்சிக்கு இணைந்து பணியாற்ற இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறினார். 


    பின்னர் பேசிய பிரான்ஸ் வெளியுறவுத்துறை மந்திரி கூறியுள்ளதாவது: ஒரு மந்திரியாக இந்தியா வருவது இதுவே முதன்முறை, எனது முதல் பயணமாக இந்தியாவை தேர்வு செய்தேன்.  இந்தியாவின் பாதுகாப்பு கூட்டாளிகளில் பிரான்ஸ் முதலிடத்தில் இருக்கிறது. பாதுகாப்புத் துறையில், வேறு எந்த நாடும் வழங்காத அளவிற்கு நவீன தொழில் நுட்பத்தை இந்தியாவுடன் பகிந்து கொள்வதை நினைத்து பிரான்ஸ் பெருமை கொள்கிறது. உலக அமைதி மற்றும் ஸ்திர தன்மையையே இந்தியாவும் பிரான்சும் விரும்புகின்றன. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

    பாரீஸின் பிக்சரெஸ்கியூ கிராமத்தில் பூச்சிகள் அதிகம் சப்தமிடுவதால் தொந்தரவாக இருப்பதாக மேயரிடம் சுற்றுலா பயணிகள் புகார் அளிக்க, அது எங்கள் பகுதியின் சங்கீதம் என மேயர் உருக்கமாக பதிலளித்துள்ளார். #Paris #Cicadas
    பாரீஸ்:

    உலகின் மிக அழகிய நகரங்களில் ஒன்றான பாரீஸ் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றுலா பயணிகள் வந்துசெல்கின்றனர். அவ்வாறு பிக்சரெஸ்கியூ எனும் கிராமத்துக்கு வந்த சுற்றுலா பயணிகள், மேயரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அந்த புகாரில் அப்பகுதியில் சுற்றித்திரியும் குறிப்பிட்ட வண்டு இன பூச்சிகள் அதிகம் சப்தமிடுவதால் தொந்தரவாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

    வண்டுகள் காலையிலும், மாலையிலும் தொடர்ந்து சப்தமிட்டு தொந்தரவு செய்வதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வானொலி மூலம் பதிலளித்த அப்பகுதி மேயர் ஜியார்ஜஸ் ஃபெர்ரேரோ, இந்த சப்தம் புதிதாக வந்த சுற்றுலா பயணிகளுக்கு தொந்தரவாக இருக்கலாம், ஆனால் இது இப்பகுதி மக்களின் சங்கீதம் என அவர்கள் உணரவில்லை என தெரிவித்துள்ளார்.

    மேலும், சுற்றுலா பயணிகள் சில பூச்சி மருந்துகள் கொண்டு அவற்றை அகற்ற முயற்சிப்பதாகவும், அது மிகவும் முட்டாள்தனமான விஷயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த சப்தத்தை புதிதாக இங்கு வருபவர்கள் எதிர்த்தாலும் பரவாயில்லை ஆனால், ப்ரெஞ்சின் பூர்வீக குடிமக்களும் இதனை தொந்தரவாக எண்ணுகிறார்கள் என மனவருத்தத்துடன் தெரிவித்துள்ளார். #Paris #Cicadas
    ×