search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "prisoner's death"

    கடலூர் மத்திய சிறையில் கைதி மரணமடைந்தது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் அவரது மனைவி புகார் அளித்துள்ளார்.
    கடலூர்:

    விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள குயிலாபாளையத்தை சேர்ந்தவர் ஏழுமலை என்ற மைக்கேல் (வயது 36). ரவுடியான இவர் தாதா மணிகண்டனின் தம்பி ஆவார்.

    கடந்த 15-ந் தேதி மோட்டார் சைக்கிளில் சென்ற போது ஆரோவில் சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து போலீசார் ஏழுமலையை கைது செய்தனர்.

    பின்னர் அவரை கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். திடீரென்று அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனடியாக அவரை கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் ஏழுமலை இறந்த தகவல் குறித்து குயிலாபாளையத்தில் உள்ள அவரது மனைவி மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    மர்மமான முறையில் இறந்துபோன ஏழுமலையின் உடல் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. ஏழுமலை இறந்து 3 நாட்கள் ஆகியும் நேற்று மாலை வரை கடலூர் ஆஸ்பத்திரிக்கு அவரது மனைவி மற்றும் உறவினர்கள் யாரும் வரவில்லை.

    இதனால் ஏழுமலையின் உடலை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே ஏழுமலையின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது மனைவி கோமதி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார்.

    இந்த மனு விசாரணைக்கு வந்து தீர்ப்பு வந்த பிறகுதான் ஏழுமலையின் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து ஏழுமலையின் உடல் வைக்கப்பட்டுள்ள பிரேத பரிசோதனை கூடம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று 4 நாட்களாகியும் ஏழுமலையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை. இதனை தொடர்ந்து போலீசார் இரவும்-பகலும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கடலூர் ஜெயிலில் மர்மமாக இறந்த கைதி ஏழுமலையின் மனைவி கோமதி இன்று குடும்பத்தினருடன் கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.

    பின்னர் அவர் கலெக்டரின் உதவியாளரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த டிசம்பர் மாதம் நாங்கள் அனைவரும் திருப்பதி கோவிலுக்கு சென்றுவிட்டு எங்கள் வீட்டுக்கு வந்தோம். நாங்கள் காரில் இருந்து இறங்குவதற்குள் 2 டாடா சுமோவில் வந்த பத்துக்கும் மேற்பட்ட போலீசார் இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையில் எனது கணவரை அடித்தனர்.

    அப்போது நான் தடுக்க சென்ற போது என்னையும், என் பிள்ளைகளையும் கீழே தள்ளிவிட்டு அடித்தனர். பின்னர் எனது கணவரை அடித்து இழுத்துச் சென்றனர். அதன்பிறகு என் கணவருக்கு என்ன ஆனது என்று தெரியாமல் வக்கீல் மூலமாக ஆரோவில் போலீஸ் நிலையத்தில் விசாரித்தபோது போலீசார் சரியான முறையில் எங்களுக்கு பதில் தரவில்லை.

    மேலும் இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு புகார் செய்தோம். இந்த நிலையில் காவல்துறையினர் என் கணவரை தாக்கி அடித்து கை மற்றும் கால் உடைத்து உடல் முழுவதும் காயத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

    ஆனால் உடலில் காயம் ஏற்படுத்திய போலீசார் என் கணவரை மருத்துவமனையில் சேர்க்காமல் வானூர் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்று காவலில் அடைக்க முற்பட்டுள்ளனர். ஆனால் நீதிமன்றத்தில் நீதிபதி இல்லாத காரணத்தினால் செஞ்சி நீதித்துறை நடுவரிடம் என் கணவரை அழைத்து சென்று காவலில் அடைக்க அனுமதி கேட்டுள்ளனர். அப்போது என் கணவர் நடந்தவற்றை அனைத்தும் நீதிபதியிடம் கூறி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு அனுமதி கேட்டு உள்ளார். ஆனால் காவல்துறையினர் செஞ்சி நீதிமன்ற நடுவரிடம் பொய்யான காரணங்களைக் கூறி கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்க அனுமதி வாங்கி விட்டனர்.

    என் கணவருக்கு எந்தவித சிகிச்சையும் செய்யாமல் காவல்துறையினரே உடைக்கப்பட்ட கை மற்றும் காலுக்கு கட்டு கட்டி எவ்வித சிகிச்சையும் அளிக்காமல் கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். அப்போது மத்திய சிறை நிர்வாகம் எங்களுக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறி உள்ளனர்.

    ஆனால் ஆரோவில் இன்ஸ்பெக்டர் மத்திய சிறை காவலர்களிடம் சண்டை போட்டு சட்டத்திற்கு புறம்பாக மத்திய சிறை காவலர்களை மிரட்டி சிறையில் அடைத்து உள்ளது.

    இந்த நிலையில் போதிய சிகிச்சையை காவலர்கள் கொடுக்காததால் என் கணவர் கடந்த 17-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை கடலூர் மத்திய சிறைச்சாலையில் இறந்துவிட்டதாக எனக்கு தகவல் சொன்னார்கள்.

    காவல்துறையினர் என் கணவரை கொலை செய்யும் நோக்கத்தோடு அடித்து கை கால்களை உடைத்து காயங்கள் ஏற்படுத்தி கொலை செய்த மேற்கண்ட காவல்துறையினர் மீது தகுந்த விசாரணை செய்து கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

    மேலும் என் கணவர் இழந்ததால் நான் என் பிள்ளைகளும் நடுத்தெருவில் நிற்கின்றோம். எனவே மேற்கண்ட காவலர்களிடமிருந்து அரசிடமிருந்து என்னுடைய குடும்பத்திற்கு 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது அப்போது வக்கீல்கள் சுந்தர், திருமேனி, வினோத்குமார் மற்றும் அவரது உறவினர்கள் உடன் இருந்தனர். #tamilnews
    ×