விசாரணை கைதி உயிரிழந்த விவகாரம்: உடுமலை வனவர்-வனக்காவலர் 'சஸ்பெண்டு'

கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து இரவு மாரி முத்துவின் உடலை பெற்றுக்கொண்டனர்.சம்பவம் தொடர்பாக, வனத்துறையினர் மற்றும் அதிகாரிகள் துறை ரீதியான விசாரணை நடத்தினர்.
உயிரிழந்த மாரிமுத்து.
உயிரிழந்த மாரிமுத்து.
Published on

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மேல்குருமலை பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது 58). இவர் புலிப்பல் வைத்திருந்ததாக கூறி, கடந்த 29-ந்தேதி உடுமலை வனத்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் வனத்துறை அலுவலகத்தில் உள்ள குளியலறையில் மாரிமுத்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என வனத்துறையினர் தெரிவித்தனர். தகவல் அறிந்த மாரிமுத்துவின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் அங்கு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வனத்துறையினர் விசாரணை என்ற பெயரில் அடித்து துன்புறுத்தியதால் மாரிமுத்து உயிரிழந்தார் என்று குற்றம் சாட்டினர். போலீசார், வருவாய் துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தி பிரேத பரிசோதனைக்காக மாரிமுத்து உடலை திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

நேற்று காலை உடுமலை மாஜிஸ்திரேட்டு நித்யகலா முன்னிலையில் மருத்துவர் குழுவினர் பிரேத பரிசோதனை நடத்தினர். பிரேத பரிசோதனை முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டது. உடுமலை ஆர்.டி.ஓ., குமார், டி.எஸ்.பி., நமசிவாயம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மருத்துவமனை வளாகத்தில் மாரிமுத்துவின் உறவினர்கள் திரண்டிருந்தனர். அவரது குடும்பத்தினர் அடையாளம் உறுதிப்படுத்திய பின் உடல் பிரேத பரிசோதனை நடந்தது.

பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் அங்கு திரண்டிருந்த மாரிமுத்துவின் உறவினர்கள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் பிரேத பரிசோதனை கூடம் முன் அமர்ந்து உடலை வாங்க மறுத்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மாரிமுத்துவின் உறவினர்கள், பிரேத பரிசோதனை வீடியோ பதிவுகளை வழங்க வேண்டும். இந்த வழக்கை வன்கொடுமை சட்டத்தில் சேர்க்க வேண்டும். சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்த வேண்டும் என தர்ணாவில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து இரவு மாரி முத்துவின் உடலை பெற்றுக்கொண்டனர்.

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக, வனத்துறையினர் மற்றும் அதிகாரிகள் துறை ரீதியான விசாரணை நடத்தினர். இதையடுத்து ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை வனச்சரக வனவர் நிமல் குமார், வனக்காவலர் செந்தில்குமார் ஆகியோரை சஸ்பெண்டு செய்து திருப்பூர் மாவட்ட வன அலுவலர் ராஜேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com