search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police officer"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெற்றோர் மருத்துவமனை நிர்வாகத்திடம் தனது மகனின் விருப்பதை தெரிவித்தனர்.
    • சிறப்பு விருந்தினர் சிறுவனுக்கு போலீசார் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் கித்வாய் மருத்துவமனையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மல்லிகார்ஜுன் (வயது 10) என்ற சிறுவன் தனது பெற்றோரிடம் போலீஸ் அதிகாரியாக விரும்புவதாக கூறினான்.

    இது பற்றி பெற்றோர் மருத்துவமனை நிர்வாகத்திடம் தனது மகனின் விருப்பதை தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம், பெங்களூரு நிவாரண அமைப்பு இணைந்து பெங்களூரு வடக்குப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர் சைதுலு அதாவத்திடம் உதவி கேட்டனர்.

    அதன்படி அவர் சிறுவனுக்கு உதவி செய்தார். நேற்று மல்லிகார்ஜூன் போலீஸ் சீருடை அணிந்து போலீஸ் ஜீப்பில் துணை கமிஷனர் அலுவலகம் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது.

    சிறப்பு விருந்தினர் சிறுவனுக்கு போலீசார் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். மேலும் போலீஸ் அணிவகுப்பு மரியாதை காட்டப்பட்டது. போலீஸ் சீருடையில் இடுப்பில் கை துப்பாக்கி, கையில் போலீஸ் லத்தியுடன் அவரை போலீஸ் துணை கமிஷனர் அமரும் நாற்காலியில் அமர வைத்தனர். அப்போது சிறுவன் மல்லிகார்ஜுன் நான் வளர்ந்ததும் டிசிபி ஆகுவேன்' என துணை கமிஷனர் சைதுலு அதாவத்திடம் விருப்பம் தெரிவித்தான். பின்னர் அலுவலகத்தில் இருந்த ஆயுதங்களை தொட்டு பார்த்து அவற்றின் தகவல்களைப் பெற்றான். மேலும் கைதிகள் அடைக்கப்பட்டு இருக்கும் அறைக்கு சென்று பார்த்தான்.

    • காவல் அதிகாரிகளின் பதவி உயர்வை தேவையின்றி தாமதப்படுத்துவது கண்டிக்கத்தக்கது.
    • உரிய காலத்தில் பதவி உயர்வு வழங்கினால் தான் உற்சாகத்துடன் பணி செய்வார்கள்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகக் காவல்துறையில் உதவி ஆய்வாளர் நிலையில் தொடங்கி கூடுதல் கண்காணிபாளர் நிலை வரையிலான அதிகாரிகளின் பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கப்பட்டு பல மாதங்களாகியும், அதற்கு அரசு ஒப்புதல் அளிக்காத தால் 400-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கடுமையான மன உளைச்சலும், மனச்சோர்வும் அடைந்துள்ளனர். காவல் அதிகாரிகளின் பதவி உயர்வை தேவை யின்றி தாமதப்படுத்துவது கண்டிக்கத்தக்கது.

    உதவி ஆய்வாளர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை. 15 ஆண்டுகளுக்கு முன் வருவாய்த்துறையில் உதவியாளராக பணியில் சேர்ந்த பலர் வட்ட ஆட்சியராகவும், தலைமை செயலகத்தில் தட்டச்சராக பணியில் சேர்ந்தவர்கள் நிர்வாக அலுவலராகவும் பதவி உயர்வு பெற்று விட்டனர். ஆனால், காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தவர்கள் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னும் அதே நிலையில் தொடர்கின்றனர். இது மிகப்பெரிய அநீதி ஆகும்.

    காவல்துறையின் இதயமாக திகழ்பவர்கள் துணை கண்காணிப்பாளர் நிலை முதல் உதவி ஆய்வாளர் நிலை வரை உள்ள அதிகாரிகள் தான். அவர்கள்தான் வழக்கு விசாரணைகளை முன்னெடுப்பவர்கள்.

    அவர்களுக்கு உரிய காலத்தில் பதவி உயர்வு வழங்கினால் தான் உற்சாகத்துடன் பணி செய்வார்கள்.

    எனவே, மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஜெயிலின் மையப்பகுதியில் கோபுரம் 10 ஏ பிளாக்கில் உள்ள 6-வது அறையில் சோதனை மேற்கொண்டனர்.
    • விரைவில் வெளியே சென்று ஐ.எஸ். அமைப்பிற்கான பணியை மேற்கொள்ள போகிறேன்.

    கோவை:

    ஈரோட்டை சேர்ந்தவர் ஆசிப் என்ற ஆசிப் முஸ்தகீன் (வயது 30). இவர் ஐ.எஸ். அமைப்பின் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார்.

    இவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கண்காணித்து விசாரணை நடத்தினர். பின்னர் ஆசிப்பை ஈரோடு வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஈரோடு வடக்கு போலீசார் ஆசிப் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    சம்பவத்தன்று ஜெயில் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் ஜெயில் அலுவலர் சிவராசன் தலைமையில் போலீசார் ஜெயிலில் திடீர் சோதனை மேற்கொண்டனர். ஜெயிலின் மையப்பகுதியில் கோபுரம் 10 ஏ பிளாக்கில் உள்ள 6-வது அறையில் சோதனை மேற்கொண்டனர். அங்கு அடைக்கப்பட்டு இருந்த ஆசிப், போலீசாரை சோதனை செய்யவிடாமல் தடுத்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அறை முழுவதும் சோதனை செய்தனர்.

    ஆசிப்பின் ஜீன்ஸ் பேண்ட் பாக்கெட்டில் ஒரு துண்டுச்சீட்டு இருந்தது. அதில் கருப்பு மையால் ஐ.எஸ். அமைப்பின் கொடி வரையப்பட்டு இருந்தது. அந்த கொடியை ஆசிப்பே வரைந்து வைத்திருந்தார். இதனை போலீசார் கைப்பற்றினர்.

    அப்போது ஆசிப் உங்கள் நாட்டு தேசிய கொடியை நீங்கள் வைத்துள்ளீர்கள். எனக்கு விருப்பமான கொடியை நான் வைத்து உள்ளேன். இதனை எதற்காக எடுத்து செல்கிறீர்கள், கொடியை திருப்பி தரவில்லை என்றால் கட்டாயம் இதற்கு பதில் சொல்ல நேரிடும் என மிரட்டல் விடுத்தார். விரைவில் வெளியே சென்று ஐ.எஸ். அமைப்பிற்கான பணியை மேற்கொள்ள போகிறேன். அப்போது நீங்களும் இருக்க மாட்டீர்கள். இந்த ஜெயிலும் இருக்காது என கொலை மிரட்டல் விடுத்தார்.

    இதுகுறித்து ஜெயில் அலுவலர் சிவராசன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ஆசிப் மீது அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல், உபா உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக இன்று போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மீண்டும் ஜெயிலில் அடைக்க திட்டமிட்டு உள்ளனர்.

    • காவல் துறை தலைமை இயக்குநரின் பரிந்துரைக்கேற்ப கீழ்கண்ட காவல் அதிகாரிகள், ஆளுநர்களுக்கு முதலமைச்சரின் பதக்கம் வழங்கப்படுகிறது.
    • விருதுகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் சுதந்திரதின விழாவில் வழங்கப்படும்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    "தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9.5.2022 அன்று சட்டப்பேரவையில் உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கையிலன் போது "சமூகத்தில் போதைப் பொருளை ஒழிப்பதற்காக கடுமையாகவும், உண்மையாகவும் உழைக்கும் அதிகாரிகள், காவலர்களை ஊக்குவிப்பதற்கென முதலமைச்சரின் பதக்கம் புதிதாக வழங்கப்படும் என அறிவித்தார்.

    அதனை தொடர்ந்து அரசாணை 3.8.2022 அன்று வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக காவல் துறை தலைமை இயக்குநரின் பரிந்துரைக்கேற்ப கீழ்கண்ட காவல் அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் பதக்கம் வழங்கப்படுகிறது.

    வெ.பத்ரிநாராயணன் (காவல் கண்காணிப்பாளர், கோவை மாவட்டம்), டோங்கரே பிரவின் உமேஷ் (காவல் கண்காணிப்பாளர், தேனி மாவட்டம்), மா. குணசேகரன், (காவல் துணை கண்காணிப்பாளர், இருப்பு பாதை, சேலம் உட்கோட்டம்), சு.முருகன் (காவல் சார்பு ஆய்வாளர், நாமக்கல் மாவட்டம்), இரா.குமார், (முதல் நிலை காவலர்-1380, நாமக்கல் மாவட்டம்)

    போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தலை ஒழிப்பதில் அஸ்ரா கர்க், (காவல் துறைத் தலைவர், தென் மண்டலம், மதுரை) சீரிய பணியை அங்கீகரித்து  ரொக்கப் பரிசு இல்லாமல், இந்த "சிறப்பு பதக்கம்" தனி நேர்வாக வழங்கப்படுகிறது.

    அஸ்ரா கர்க்கின் தனிப்பட்ட முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்பு மிகுந்த கண்காணிப்பின் மூலம் போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டத்தின் கீழ் குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

    மூத்த அதிகாரிகளுக்கு அவர் பயிற்சி அளித்துள்ளார் மற்றும் 2022-2023-ல் 1843 நபர்கள் பிணைக்கப்பட்டு உள்ளனர். இது சமூகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்கியது.

    விருதுகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் சுதந்திரதின விழாவில் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அடிக்கப்பட்ட திருமண பத்திரிகையிலும் மும்மதங்களை சேர்ந்த குருமார்களின் பெயர்களும் அச்சிடப்பட்டுள்ளது.
    • போலீஸ் அதிகாரி ஒருவர் மதங்களைக் கடந்து மகளின் திருமணத்தை நடத்த வேண்டும் என்று முனைப்பு காட்டியிருப்பது, போலீஸ்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக உள்ளது.

    கோவை:

    கோவையில் மும்மதங்களைச் சேர்ந்த குருமார்கள் முன்னிலையில் தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்கும் போலீஸ் டி.எஸ்.பி. வீட்டு திருமண அழைப்பிதழ் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

    கோவை மாவட்ட குற்ற ஆவண காப்பக டி.எஸ்.பி.யாக பணியாற்றி வருபவர் வெற்றிச்செல்வன்.

    இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்.ஐ.சி எனப்படும் மதம் சார்ந்த பிரச்சனைகளை கண்காணிக்கும் சிறப்பு நுண்ணறிவுப் பிரிவில் பணியாற்றி வந்தார்.

    அப்போது அவர் மதம் சார்ந்த பிரச்சினைகளை சிறப்பாக கையாண்டு சுமூகமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். பல பிரச்சினைகளின் போது துரிதமாக செயல்பட்டு கலவரங்களை தடுத்தும், கட்டுப்படுத்தியும் உள்ளார். இதற்காக அவர் ஜனாதிபதி விருது மற்றும் அண்ணா விருதையும் பெற்றுள்ளார்.

    இவருக்கு நிஷாந்தினி என்ற மகள் உள்ளார். இவர் பி.எச்.டி படித்து வருகிறார். இந்நிலையில் வெற்றி செல்வன், தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க அவர் முடிவு செய்தார்.

    அதன்படி நெல்லையை சேர்ந்த சுதர்சன் என்பவரை தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க பேசி முடித்தார். எம்மதமும் சம்மதம் என்ற எண்ணத்தில் இருக்கும் வெற்றி செல்வன் தனது மகளின் திருமணத்தையும் மதத்தை கடந்து இந்து, கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மத குருமார்கள் முன்னிலையில் நடத்த முடிவெடுத்தார்.

    அதன்படி பேரூர் ஆதீனம் சாந்தலிங்க அடிகளார், கவுமார மடாலயம் குருமகா சந்நிதானம் ராமானந்த குமரகுருபர சுவாமிகள், காமாட்சி புரி ஆதீனம் ஞானகசாக்தஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள், கோவை கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்வினாஸ் மற்றும் போத்தனூர் இமாம் மஸ்ஜிதே இப்ராஹிம் சுன்னத் ஜமாஅத் தலைவர் மவுளவி அல்லாஜ் அப்துல் ரஹீம் இம்தாதி பாகவி ஆகியோருக்கு தனது மகள் திருமணத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார்.

    இது தொடர்பாக அடிக்கப்பட்ட திருமண பத்திரிகையிலும் மும்மதங்களை சேர்ந்த குருமார்களின் பெயர்களும் அச்சிடப்பட்டுள்ளது.

    மேலும் திருமண பத்திரிக்கையில்,

    "உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன

    மடந்தையொடு எம்மிடை நட்பு."

    என்ற திருக்குறளும் அச்சிடப்பட்டுள்ளது.

    தற்போது இந்த திருமண பத்திரிக்கை சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

    போலீஸ் அதிகாரி ஒருவர் மதங்களைக் கடந்து மகளின் திருமணத்தை நடத்த வேண்டும் என்று முனைப்பு காட்டியிருப்பது, போலீஸ்துறை வரலாற்றிலேயே முதல் முறையாக உள்ளது. இந்நிலையில் இவரின் மத நல்லினக்கத்திற்கு பொதுமக்கள் மற்றும் சக போலீசார் வரவேற்பையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

    இந்த திருமண நிகழ்ச்சி நாளை (புதன்கிழமை) மற்றும் 25-ந் தேதி (வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்களில் கோவை மாவட்டம் சூலூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. தமிழக போலீஸ் டி.ஜி.பி.க்கள் ஏ.கே.விஸ்வநாதன், சீமா அகர்வால், கூடுதல் டி.ஜி.பி அமல்ராஜ் மற்றும் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

    • மணமக்களின் பெற்றோர் இந்த திருமணத்தை யூத முறைப்படி நடத்த முடிவு செய்தனர்.
    • இறுதியில் ஹீப்ரு பாடல்கள் படியும், நடனமாடியும் இந்த விழா நடந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஏராளமான யூத ஆலயங்கள் உள்ளன. மேலும் இங்கு யூத இனத்தை சேர்ந்தவர்களும் வசித்து வந்தனர். தற்போது இந்த ஆலயங்கள் அனைத்தும் காட்சிகூடங்களாக மாறிவிட்டன. இதனால் இங்கு திருமணம் போன்ற சடங்குகள் இப்போது நடப்பதில்லை.

    இந்நிலையில் கொச்சியை சேர்ந்த முன்னாள் போலீஸ் அதிகாரியின் மகள் மஞ்சுஷா மரியம் இம்மானுவேலுக்கும், அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானி ரிச்சர்ட்டு ரோவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    மணமக்களின் பெற்றோர் இந்த திருமணத்தை யூத முறைப்படி நடத்த முடிவு செய்தனர். தற்போது யூத ஆலயங்களில் இந்த திருமணம் நடப்பதில்லை என்பதால் கொச்சியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் யூத ஆலயம் போன்ற கூடாரம் அமைக்கப்பட்டது.

    அந்த கூடாரத்தில் யூத முறைப்படி இந்த திருமணம் நடைபெற்றது. இதனை நடத்தி கொடுக்க இஸ்ரேலை சேர்ந்த மதகுரு வந்திருந்தார். அவர் முன்னிலையில் முதலில் மணமக்கள் மோதிரம் மாற்றி திருமண ஒப்பந்தம் செய்து கொண்டனர். அடுத்து கெதுபா படித்து, கண்ணாடியை உடைத்து திருமண பந்தத்தில் இணைந்தனர். இறுதியில் ஹீப்ரு பாடல்கள் படியும், நடனமாடியும் இந்த விழா நடந்தது.

    இதில் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதுபற்றி விருந்துக்கு வந்தவர்கள் கூறும்போது, கடந்த 2008-ம் ஆண்டு இங்கு யூத முறைப்படி திருமணம் நடந்தது. அதன்பின்பு 15 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் அதுபோன்ற திருமணம் நடந்துள்ளது, என்றனர்.

    • நாகமலை புதுக்கோட்டை முன்னாள் போலீஸ் அதிகாரி வசந்தி மீண்டும் கைது செய்யப்பட்டார்.
    • போலீஸ் அதிகாரி வசந்தியை தனிப்படை போலீசார் தரதரவென இழுத்து சென்றனர்.

    மதுரை

    மதுரை நாகமலை புதுக்கோட்டையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக வசந்தி வேலை பார்த்தார். அவர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த டெய்லரிடம் ரூ.10 லட்சத்தை பறித்ததாக தெரிகிறது.

    இது குறித்து பாதிக்கப்பட்டவர், எஸ்.பி. அலுவலகத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் வசந்தி ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. அவரை போலீசார் கைது செய்வதில் மும்முரம் காட்டினர்.

    இதனை தொடர்ந்து வசந்தி தலைமறைவாகி விட்டார். அவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். கோத்தகிரி ஓட்டலில் வசந்தி பதுங்கியிருந்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    அப்போது அவர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இதன் அடிப்படையில் கோர்ட்டு ஜாமீனில் விடுதலை செய்தது. இந்த நிலையில் வசந்தி சாட்சிகளை மிரட்டிய தாக குற்றச்சாட்டு வெளி யானது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்த நிலையில் வசந்தி இன்று காலை வீட்டில் இருந்து வெளியே வந்தார். அவரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் இருந்து வசந்தி தப்பிக்க முயன்றார். போலீசார் குண்டு கட்டாக வசந்தியை தூக்கி தரதரவென இழுத்துச் சென்று வேனில் ஏற்றி அழைத்து சென்றனர்.

    இது குறித்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வட்டாரத்தில் கேட்டபோது, வசந்தி சாட்சி களை மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். முன்னாள் போலீஸ் அதிகாரி வசந்தியை தனிப்படை போலீசார் தரதரவென இழுத்து சென்று கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சங்கரன்கோவிலை அடுத்த திருவேங்கடம் அருகே உள்ள ஆலடிப் பட்டியை சேர்ந்தவர் ராமர், விவசாயி.
    • கணேசை அவதூறாக பேசிய காளிராஜ் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலை அடுத்த திருவேங்கடம் அருகே உள்ள ஆலடிப் பட்டியை சேர்ந்தவர் ராமர், விவசாயி.

    இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த காளிராஜ் (வயது28) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த காளிராஜ், ராமரை தாக்கி உள்ளார்.இது தொடர்பாக தகவலறிந்த சங்கரன்கோவில் போலீஸ் ஏட்டு கணேஷ், காவலர் மணிராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு காளிராஜிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது கணேசை அவதூறாக பேசிய காளிராஜ் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

    இது தொடர்பாக ஏட்டு கணேஷ் சங்கரன்கோவில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிராஜை கைது செய்தனர்.

    • கஞ்சா சாகுபடிக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
    • ஒரு சில விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் ஊடுபயிராக கஞ்சாவை பயிரிட்டு வருவதாக டி.ஐ.ஜி. ஹரிகிருஷ்ணா தெரிவித்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், குண்டூர், அனக்கா பள்ளி, அல்லூரி சீதாராம ராஜூ, பார்வதிபுரம் மான்யம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கஞ்சா செடிகள் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி கஞ்சாவை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    மொத்தம் 7,500 ஏக்கரில் பயிரிடப்பட்ட 10 ஆயிரத்து 424 கிலோ கஞ்சா, 133 கிலோ எடையுள்ள திரவ எண்ணெயாக தயார் செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. இது சம்பந்தமாக 929 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை தீயிட்டு எரிக்க போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    அதன்படி விசாகப்பட்டினம் டி.ஐ.ஜி ஹரி கிருஷ்ணா தலைமையில் குண்டூர் அருகே உள்ள மைதானத்தில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை கீழே கொட்டி அதன் மீது கட்டைகளை அடுக்கி போலீசார் தீயிட்டு எரித்தனர். தீயிட்டு எரிக்கப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.240 கோடி என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இது குறித்து டி.ஐ.ஜி. ஹரிகிருஷ்ணா கூறுகையில்:-

    கஞ்சா சாகுபடிக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஒரு சில விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் ஊடுபயிராக கஞ்சாவை பயிரிட்டு வருவதாக தெரிவித்தார். 

    • படிப்பில் மட்டுமல்லாது ஒழுக்கத்திலும் மேன்மையானவர்களாய் திகழ வேண்டும். சிந்தனைகள் சிதறும் போதே ஒழுங்கீனம் மேலோங்குகிறது.
    • பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் மாணவிகள் ஈடுபட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் ஜெய்வாபாய் மாதிரி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடைபெற்றது. பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் மாணவிகள் ஈடுபட்டனர்.

    முகாம் நிறைவு நாளன்று கொங்கு நகர் சரக உதவி ஆணையர் அனில்குமார் பேசியதாவது: -

    ஆசியாவில் அதிக எண்ணிக்கையிலான மாணவிகள் படிக்கும் முதன்மை பள்ளியில் நீங்கள் படிக்கிறீர்கள் என்பதே பெருமைப்பட வேண்டிய விஷயம். படிப்பில் மட்டுமல்லாது ஒழுக்கத்திலும் மேன்மையானவர்களாய் திகழ வேண்டும். சிந்தனைகள் சிதறும் போதே ஒழுங்கீனம் மேலோங்குகிறது.

    இதற்கு முக்கிய கருவியாக இருக்கும் மொபைல் போன் பயன்பாட்டை தவிர்த்தல் நல்லது. தேவையறிந்து பயன்படுத்துவது நல்லது. பாதுகாப்பு மிக அவசியம். இடர்பான சூழ்நிலையிலும் தைரியமாக இருக்க வேண்டும். எங்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

    • மூதாட்டி ஒருவர் சாலையை கடக்க முடியாமல் சாலையின் நடுவில் அமர்ந்து விட்டார்.
    • திருப்பூர் கொங்குநகர் போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார் ஜீப்பில் ரோந்து வந்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரின் முக்கிய சாலையாக குமரன் ரோடு விளங்கி வருகிறது. எப்போதும் வாகன நெரிசல் நிறைந்து காணப்படும் இந்த சாலையில் சம்பவத்தன்று இரவு 9.30 மணி அளவில் 75 வயது மூதாட்டி ஒருவர் நடக்க முடியாமல் கந்தலான ஆடையோடு சாலையை கடக்க முடியாமல் சாலையின் நடுவில் அமர்ந்து விட்டார். சாலையின் நடுவில் நடக்க முடியாமல் தவித்த அந்த மூதாட்டியை யாரும் கண்டுகொள்ளவில்லை.அப்போது அந்த வழியாக திருப்பூர் கொங்குநகர் போலீஸ் உதவி கமிஷனர் அனில்குமார் ஜீப்பில் ரோந்து வந்தார். சாலையின் நடுவில் திக்குதெரியாமல் போராடிய அந்த மூதாட்டியை பார்த்ததும் உடனே வாகனத்தில் இருந்து இறங்கிய அவர், அந்த மூதாட்டியிடம் விசாரித்தார். ஆதரவற்ற நிலையில் வீதிவீதியாக சுற்றித்திரிவதாக தெரிவித்தார். குளிரால் நடுங்கிய அவருக்கு உடனடியாக டீ வாங்கிக்கொடுத்து அங்கிருந்து உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்துச்சென்றார்.

    கந்தலான ஆடையுடன் இருப்பதை பார்த்து புதிய ஆடையை வாங்கி அணிய வைத்ததுடன், சால்வையால் உடலை போர்த்தி பாதுகாப்பாக வைத்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் உதவியோடு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மூதாட்டியை அனுப்பி வைத்தார். அத்துடன் இருந்துவிடாமல் உதவி கமிஷனர் அனில்குமார், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று மூதாட்டிக்கு அளிக்கும் சிகிச்சையை கேட்டறிந்தார். பின்னர் அரசு மருத்துவமனையில் செயல்படும், ஆதரவற்றவர்களை கவனிக்கும் சிறப்பு பிரிவில் அந்த மூதாட்டியை சேர்க்க பரிந்துரை செய்தார். அங்கு அந்த மூதாட்டியை பராமரித்து வருகிறார்கள். போலீஸ் அதிகாரியின் கருணை மிகுந்த, மனிதாபிமான செயலை பார்த்து பொதுமக்கள் பாராட்டினார்கள். 

    குட்கா முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்ட காலக்கட்டத்தில் பணியில் இருந்த 3 உயர் போலீஸ் அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. #CBI #GutkaScam
    சென்னை:

    செங்குன்றம் அருகே உள்ள குடோனில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சி.பி.ஐ. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

    குடோன் அதிபர் மாதவராவ் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    குடோனில் கைப்பற்றப்பட்ட டைரியில் இடம்பெற்றிருந்த பெயர்களின் அடிப்படையில் சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு தகவல்களை திரட்டி வருகிறார்கள். இது தொடர்பாக டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் கமி‌ஷனர் ஜார்ஜ் உள்ளிட்டோரின் வீடுகளிலும் சோதனை நடத்தி விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா ஆகியோருக்கு சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்தும் விசாரணை நடத்தப்பட்டது.

    அதேபோல குட்கா முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்ட காலக்கட்டத்தில் பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகள் அனைவரிடமும் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்தனர்.



    இதன்படி துணை கமி‌ஷனர்கள், உதவி கமி‌ஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் ஆகியோரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டது.

    இந்த நிலையில் நேற்றும் 3 உயர் போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    குட்கா முறைகேடு குற்றச்சாட்டு கூறப்பட்டபோது, வடசென்னை பகுதியில் பணியாற்றிய 3 போலீஸ் அதிகாரிகளிடமும் சி.பி.ஐ. அலுவலகத்தில் வைத்து பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இந்த 3 போலீஸ் அதிகாரிகளில் 2 பேர் தற்போது ஐ.ஜி. அந்தஸ்தில் சென்னையில் பணிபுரிந்து வருகிறார்கள். டி.ஐ.ஜி.யாக இருக்கும் ஒரு போலீஸ் அதிகாரி வெளிமாவட்டத்தில் பணியில் உள்ளார். சி.பி.ஐ. விசாரணைக்கு சென்றதாக கூறப்படும் தகவலை சென்னை போலீஸ் அதிகாரிகள் 2 பேரும் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. #CBI #GutkaScam
    ×