search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tiger"

    • காபி தோட்டம் பணிக்கு சென்ற ராதா என்ற பெண் புலி தாக்கி பரிதாபமாக இறந்தார்.
    • மக்களை அச்சுறுத்தும் புலியை பிடிக்க வனத்துறை தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள சிறந்த சுற்றுலா தலமான வயநாடு கடந்த சில ஆண்டுகளாக அச்சம் தரும் பகுதியாக மாறி உள்ளது. இங்குள்ள வன பகுதியை ஓட்டியுள்ள கிராமங்களில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்திருப்பது தான் மக்களின் அச்சத்திற்கு காரணமாக உள்ளது.

    வயநாட்டில் புலிகள் நடமாட்டம் அதிகம் என்றாலும் முன்பு அவை வனப்பகுதிக்குள் தான் இருந்தன. ஆனால் சமீப காலங்களில் இவை அடிக்கடி குடியிருப்பு மற்றும் அதனை ஓட்டியுள்ள பகுதிகளுக்கு வந்து மக்களை தாக்கி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இதுவரை 8 பேர் புலி தாக்கி இறந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    நேற்று காபி தோட்டம் பணிக்கு சென்ற ராதா என்ற பெண் புலி தாக்கி பரிதாபமாக இறந்தார். வயநாடு மாவட்டம் மானந்த வாடி அருகே உள்ள பஞ்சரக்கொல்லி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்தப் பகுதியில் யாரும் இதுவரை புலியை பார்த்தது இல்லை என்ற நிலையில் தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    இதிலும் ராதாவை தாக்கிய புலி, அவரது உடலை சிறிது தூரம் இழுத்துச் சென்று கடித்து குதறிய பிறகு தான் விட்டுச் சென்றுள்ளது. அவரது உடலை பார்த்த பிறகு தான் புலியின் தாக்குதல் பற்றி தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் வயநாடு முழுவதும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.


    பலியான ராதா வனக்காவலரின் மனைவி ஆவார். மேலும் இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மின்னுமணியின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. புலி தாக்கி பெண் இறந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடம் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் வனத்துறையை கண்டித்து போராட்டத்திலும் இறங்கினர்.

    இதனை தொடர்ந்து மக்களை அச்சுறுத்தும் புலியை பிடிக்க வனத்துறை தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளது. முதல் கட்டமாக புலியை பிடித்து மக்கள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியில் கொண்டு விட முடிவு செய்து அதற்கான முயற்சியில் வனத்துறை இறங்கி உள்ளது. இதற்காக 28 நிலையான கேமராக்கள், 4 நேரடி கேமராக்கள் வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

    தலைமை வன கால்நடை மருத்துவர் அருண் ஜக்காரியா மற்றும் வடக்கு வட்டத்தின் முதன்மை வன பாதுகாவலர் தீபா ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் புலி பாதுகாப்பு உடைகள் அணிந்து ஆயுதத்துடன் வனப்பகுதியில் ரோந்து சுற்றி வருகின்றனர்.

    2 டிரோன்கள் பயன்படுத்தியும் புலி இருப்பிடத்தை வனத்துறையினர் தேடி வருகின்றனர். இதற்கிடையில் புலியை சுட்டுப் பிடிக்கவும் தலைமை வன உயிரின காப்பாளர் பிரமோத் கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசின் ஸ்டாண்டர்ட் ஆப்ப ரேட்டிங் நடைமுறைப்படி அமைக்கப்பட்ட சிறப்புக்குழு கூடி நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்ததையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கூண்டுகள் அல்லது அமைதிப்படுத்தும் கருவிகளை கொண்டு புலியை பிடிக்க முடியாத பட்சத்தில் அதனை சுட்டுக் கொல்லலாம் என்று வன உயிரின காப்பாளர் தனது உத்தரவில் குறிப்பிட்டு உள்ளார். இதனை தொடர்ந்து இரவு முழுவதும் சிறப்பு குழுவினர் ஆயுதங்களுடன் வனப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று 2-வது நாளாக அவர்கள் புலியை தேடி வருகின்றனர்.

    • 'கோயம்புத்தூர் மாப்பிள்ளை' என்ற பிரபல இன்ஸ்டா பக்கத்தில் வெளியான வீடியோ இணையத்தில் வைரலானது.
    • பழகிருஷ்னன் வீட்டை சோதனையிட்ட வனத்துறையினர் மானின் கொம்புகளை பறிமுதல் செய்தனர்.

    கோவையில் இன்ஸ்டா பிரபலம் எடுத்த வீடியோவில் மான்கொம்பு வைத்திருந்ததாக கூறிய பாலகிருஷ்ணன் என்ற நபரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

    'கோயம்புத்தூர் மாப்பிள்ளை' என்ற பிரபல இன்ஸ்டா பக்கத்தில், தான் புலி நகம் கொண்ட செயின் அணிந்திருப்பதாக தொழிலதிபர் பாலகிருஷ்ணன் பேட்டி கொடுத்துள்ளார்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பாலகிருஷ்ணன் வீட்டை வனத்துறையினர் சோதனை செய்துள்ளனர். அப்போது அவரது வீட்டில் இருந்து புள்ளி மானின் கொம்புகள் மற்றும் பாலகிருஷ்ணன் கழுத்தில் அணிந்திருந்த புலி நகத்தை வனத்துறையினர் கைப்பற்றினர். இதனையடுத்து பாலகிருஷ்ணனை வனத்துறையினர் கைது செய்தனர்.

    • புலிகள் கூட்டமாக பூங்காவில் உள்ள ஏரியை கடக்கும் காட்சிகளை வீடியோ பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
    • வீடியோவுடன் அவரது பதிவில், இது என் வாழ்நாளில் கிடைத்த அரிதான காட்சி என குறிப்பிட்டுள்ளார்.

    சமூக வலைதளங்களில் விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் அடிக்கடி வைரலாகும். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள ரந்தம்பூர் தேசிய பூங்காவில் ரித்தி என்ற புலி மற்றும் அதன் குட்டிகள் ஏரியை கடந்து சென்ற காட்சிகள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

    பிரமிக்க வைக்கும் நிலப்பரப்பு மற்றும் பல்வேறு உயிரினங்கள் கொண்ட இந்த பூங்கா வன விலங்கு ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்த இடமாக விளங்குகிறது. குறிப்பாக இந்த பூங்காவின் முக்கிய அடையாளமாக பெங்கால் புலிகள் திகழ்கிறது. அங்கு சுற்றுலா சென்ற அகமதாபாத்தை சேர்ந்த சந்தீப் என்ற என்ஜினீயர் புலிகள் கூட்டமாக பூங்காவில் உள்ள ஏரியை கடக்கும் காட்சிகளை வீடியோ பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

    அதில், ரித்தி என்ற புலியும், அதன் குட்டிகளும் பூங்காவின் 3-வது மண்டல பகுதியில் உள்ள ராஜ்பாக் ஏரியை நீந்தி கடந்து மறுகரைக்கு செல்லும் காட்சிகள் பயனர்களை மிகவும் கவர்ந்துள்ளது. வீடியோவுடன் அவரது பதிவில், இது என் வாழ்நாளில் கிடைத்த அரிதான காட்சி என குறிப்பிட்டுள்ளார்.



    • சமீப காலங்களாக வனப்பகுதியில் இருந்து சிறுத்தை, கரடி, புலி போன்ற விலங்குகள் உணவு தேடி வனத்தை விட்டு வெளியேறி வருகின்றன.
    • வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகேயுள்ள எடக்காடு பகுதி முக்குருத்தி, அவலாஞ்சி வெளிமண்டல வனப்பகுதியில் அமைந்துள்ளது.

    இந்த பகுதி சிறுத்தை, புலி, மான், வரையாடு உள்ளிட்ட வனவிலங்குகளின் வசிப்பிடமாக இருந்து வருகிறது.

    சமீப காலங்களாக வனப்பகுதியில் இருந்து சிறுத்தை, கரடி, புலி போன்ற விலங்குகள் உணவு தேடி வனத்தை விட்டு வெளியேறி வருகின்றன.

    அவ்வாறு வரும் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வருகிறது. இந்த வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து வீடுகளில் பொருட்களை தேடுவது, வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகளை அடிப்பது, விளைநிலங்களையும் சேதப்படுத்தி வருகிறது.

    தொடர்ந்து வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு எடக்காடு அருகே உள்ள சாலையை புலி ஒன்று கடந்து சென்றது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி உள்ளது.

    சாலையை புலி கடந்து சென்ற சம்பவத்தால் அந்த வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புலிகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.
    • வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

    காதல் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல, எல்லா உயிர்களிடமும் இருக்கிறது என்பது பல சம்பவங்களில் நிரூபிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரஷியாவை சேர்ந்த ஒரு புலி தனது துணையை தேடி 200 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது.

    ரஷியாவில் சிஹோடா மலைப்பகுதியில் 2 புலிக்குட்டிகள் கடந்த 2012-ம் ஆண்டு வனத்துறையால் மீட்கப்பட்டது. அதில் ஆண் புலிக்கு போரீஸ் என்றும், பெண் புலிக்கு ஸ்வேத்லயா என்றும் பெயரிட்டு வளர்த்தனர். இந்த 2 புலிகளும் தனித்தனியாக தங்களது எல்லைகளை பகிர்ந்து வாழ வேண்டும் என்பதற்காக அவற்றை பிரித்து 200 கிலோ மீட்டர் தூரத்தில் சைதிரியா வனப்பகுதியில் போரீஸ் புலியை விட்டனர்.

    ஆனால் அந்த புலி தனது இருப்பிடத்தை நோக்கி தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருந்தது. அதே நேரம் துணையை பிரிந்த ஸ்வேத்லயா வேறு எங்கும் பயணம் செய்யாமல் விட்ட இடத்திலேயே தொடர்ந்து சுற்றியது. இந்த புலிகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் போரீஸ் புலி 3 ஆண்டுகள் பயணம் செய்து ஸ்வேத்லயா இருக்கும் வனப்பகுதிக்கு வந்து சேர்ந்தது. கடந்த 6 மாதங்களாக 2 புலிகளும் மகிழ்ச்சியாக சேர்ந்து வாழ்கின்றன. இவற்றின் வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது. 



    • குளிர்காலம் என்பது புலிகளின் இனச்சேர்க்கை காலமாகும்.
    • சில ஆண் புலிகள் பெண் புலிகளை தேடி நீண்ட பயணத்தை மேற்கொள்ளும்.

    திருப்பதி:

    மகாராஷ்டிரா மாநிலம் கின்வாட் வனபகுதியில் ஜானி என்ற 7 வயது ஆண் புலி சுற்றி திரிகிறது. இதை வனத்துறையினர் அடிக்கடி கண்காணித்து வருகின்றனர். கடந்த 30 நாட்களுக்கு முன்பு ஜானி புலி தனது துணைக்காக பெண் புலியை தேட ஆரம்பித்தது.

    அந்த புலி நேற்று வரை 300 கிலோ மீட்டர் பயணம் செய்து தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத் வனப்பகுதிக்கு வந்தது. ஆனாலும் இதுவரை ஜானி புலிக்கு துணையாக பெண் புலி கிடைக்கவில்லை. தனியாக தவித்தபடி தொடர்ந்து அதன் பயணத்தை நீடித்து வருகிறது.

    இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்:-

    குளிர்காலம் என்பது புலிகளின் இனச்சேர்க்கை காலமாகும். சில ஆண் புலிகள் பெண் புலிகளை தேடி நீண்ட பயணத்தை மேற்கொள்ளும். கிட்டத்தட்ட 100 கிலோ மீட்டருக்கு முன்பே பெண் புலிகள் சிறப்பு வாசனையை வெளியிடும். ஆண் புலிகள் வாசனை மூலம் பெண் புலியின் இருப்பிடத்தை கண்டுபிடித்து ஒன்று சேரும்.

    ஜானி புலி கடந்த 30 நாட்களாக அடர்ந்த வனப்பகுதியில் அதன் ஜோடியை தேடி அலைகிறது. அதற்கு சரியான ஜோடி கிடைக்கவில்லை. இந்த பயணத்தின் போது 4 மாடுகளை அடித்து கொன்று சாப்பிட்டது. 3 மாடுகளை வேட்டையாட முயற்சி செய்துள்ளது.

    காடுகளை ஒட்டி உள்ள கிராமப் பகுதிகளிலும் நடமாட்டம் உள்ளது. சில இடங்களில் ஜானி புலி சாலையை கடப்பதை வாகன ஓட்டிகள் பார்த்துள்ளனர்.

    இதனால் மக்களுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. துணையை தேடும் புலிகள் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்காது. ஆனாலும் பொதுமக்கள் புலியை கண்டால் தொந்தரவு செய்ய வேண்டாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகளும் நிரம்பியுள்ளன.
    • தாளவாடி, கடம்பூர் வனப்பகுதியில் யானை, புலிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    கடந்த சில நாட்களாக திம்பம், தாளவாடி, ஆசனூர், கடம்பூர் வனப்பகுதியில் மழை பரவலாக பெய்து வருவதால் வனப்பகுதியில் பசுமையான சூழ்நிலை உள்ளது. மரம், செடி, கொடிகள் பசுமையாக காட்சியளிக்கின்றன. வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகளும் நிரம்பியுள்ளன.

    இந்நிலையில் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூரில் இருந்து குத்தியாலத்தூர் செல்லும் சாலையில் வாகன ஓட்டிகள் சென்று கொண்டு இருந்தனர். அப்போது குத்தியாலத்தூரில் வனப்பகுதியில் இருந்து சாலையை கடந்து ஒரு புலி மற்றொரு வனப்பகுதிக்கு சென்றது.

    இதை கண்ட வாகன ஓட்டிகள் பீதியடைத்தனர். பின்னர் தங்களது வாகனங்களை சிறிது தூரம் முன்பே நிறுத்தி விட்டனர். அந்த புலி மெதுவாக சாவகாசமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலையில் சிறிது தூரம் நடமாடி பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

    புலி வனப்பகுதிக்குள் சென்றவுடன் வாகன ஓட்டிகள் அங்கிருந்து கிளம்பி சென்றனர். புலி சாலையை கடந்து செல்லும் காட்சியை வாகன ஓட்டி ஒருவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    தாளவாடி, கடம்பூர் வனப்பகுதியில் யானை, புலிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தற்போது குத்தியாலத்தூர் வனப்பகுதியில் புலி நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே வாகன ஓட்டிகள் இந்த பகுதியை கடந்து செல்லும் போது கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் சொல்லும் வாகன ஓட்டிகள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனத்தை நிறுத்த வேண்டாம் என்றனர்.

    • விறகு வெட்டி கொண்டு இருந்த மற்றவர்களை உஷார் படுத்த மெதுவான குரலில் ‘புலி...புலி...' என்று எச்சரித்தார்.
    • சுற்றுலா பயணிகளுக்கு இளம்பெண் லால் சாடிங்கியின் வீரத்தை அது பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

    முறத்தால் புலியை விரட்டிய வீரத் தமிழ்ப் பெண்கள் பற்றி சங்க இலக்கியங்களில் படித்து இருக்கிறோம். கோடரியால் புலியை வெட்டிச் சாய்த்த வீரப் பழங்குடியின பெண்ணை பற்றி இங்கே படிக்கப் போகிறோம்.

    வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரத்தில் ஒரு குக்கிராமத்தை சேர்ந்தவர், லால் சாடிங்கி. 26 வயதான அந்த ஏழைப் பெண், காடுகளுக்கு சென்று விறகு வெட்டி பிழைத்து வந்தார்.

    ஒருநாள் அந்தப் பெண்ணும் அதே கிராமத்தைச் சேர்ந்த சிலரும் விறகு வெட்டுவதற்காக, அருகில் இருக்கும் காட்டுக்குச் சென்றார்கள். காய்ந்த விறகுகளைத் தேடிப் பிடித்து, வெட்டிக் கொண்டு இருந்தார்கள்.

    அப்போது புதருக்கு பின்னால் இருந்து ஓர் உறுமல் சத்தம் கேட்டது. லால் சாடிங்கி திரும்பிப் பார்த்தார். எந்த அசைவும் இல்லை. அது காட்டுப்பன்றியாக இருக்கக்கூடும் என்று நினைத்துக் கொண்டார். மறுபடியும் உறுமல் சத்தம் ஓங்கிக் கேட்கவே அவர் அதிர்ந்து போனார். புதருக்குள் இருந்து வருவது புலி என்பதை உணர்ந்தார்.

    அருகில் விறகு வெட்டி கொண்டு இருந்த மற்றவர்களை உஷார் படுத்த மெதுவான குரலில் 'புலி...புலி...' என்று எச்சரித்தார். அவர்கள் காதுகளில் அது விழுந்ததாகத் தெரியவில்லை.

    புலி அதற்குள்ளாக மிக அருகில் வந்து விட்டது. எப்படி தப்பிப்பது? அந்தப் பெண்ணுக்கு வழி தெரியவில்லை. ஒரே பாய்ச்சலில் அவர் உயிரைப் பறிக்க புலிக்கு ஒரு வினாடிகூட ஆகாது. அந்த அளவில் அருகில் நெருங்கிவந்தது.

    கையில் விறகு வெட்டும் கோடரி மட்டும் அவரிடம் இருந்தது. வாழ்வா? சாவா? என்ற கேள்வி மனதில் எழுந்தது. மனதைத் தைரியப்படுத்திக் கொண்டு, ஓங்கி ஆக்ரோஷத்தில் ஒரே வெட்டாக புலியை தலையில் வெட்டிச் சாய்த்தார். நல்ல வேளையாக ஒரே வெட்டில் கதை முடிந்தது. அந்தப் பெண்ணுக்கு வாழ்வும், புலிக்கு சாவும் உறுதியானது.

    விறகு வெட்டப்போன இடத்தில் புலியை வெட்டிக்கொன்ற இளம்பெண் லால் சாடிங்கி பற்றி ஊரெல்லாம் பேசியது. அவர் வீரப் பெண்மணியாக போற்றப்பட்டார். அவர் வெட்டி சாய்த்த புலி 'மம்மி'யாக பாடம் செய்யப்பட்டு மிசோரம் தலைநகர் ஐசால், அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருக்கிறது.

    இன்னமும் அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இளம்பெண் லால் சாடிங்கியின் வீரத்தை அது பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

    அந்த வங்கப் புலியை வெட்டிச் சாய்த்த வீரப்பெண் லால் சாடிங்கி 72 வயதை எட்டி இருந்தார். சம்பவம் நடந்து 46 ஆண்டுகள் கடந்த நிலையில், சில காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் கடந்த வெள்ளிக்கிழமை மரணம் அடைந்தார்.

    புலியை அதன் வாழ்விடத்துக்கே சென்று தன்னந்தனியாக வீழ்த்திய அந்த பெண்மணிக்கு மிசோரமே வீரவணக்கம் செலுத்தியது.

    • வீடியோவை பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
    • ஒரு பயனர், துபாயில் இப்படி சுற்றித்திரிந்து எவ்வாறு பிரச்சனையில் சிக்காமல் இருக்க முடிகிறது? என கேள்வி எழுப்பி உள்ளார்.

    சமூக ஊடகங்களில் பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காகவே சிலர் வித்தியாசமான செயல்களை செய்து அதனை வீடியோவாக வெளியிடுகிறார்கள். அந்த வகையில், நாடியா கர் என்ற பெண் உலக அளவில் சமூக வலைதளங்களில் பிரபலமானவராக திகழ்கிறார். இவர் அடிக்கடி சொகுசு கார்களில் வலம் வருவது போன்ற வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர் ஆவார்.

    இவர் தற்போது வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், அவர் துபாயில் உள்ள ஒரு மிருக காட்சி சாலையில் உள்ள பூங்காவிற்குள் புலியுடன் நடந்து செல்வது போன்றும், அப்போது புலியின் கழுத்தில் சங்கிலி கட்டி இழுத்து செல்வது போன்றும் காட்சி உள்ளது. வீடியோவுடன் அவரது பதிவில், துபாயில் எனது செல்ல புலியை அழைத்து செல்வது வித்தியாசமானது என்று கூறியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் 60 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விருப்பங்களையும் பெற்றுள்ளது.

    வீடியோவை பார்த்த பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒரு பயனர், துபாயில் இப்படி சுற்றித்திரிந்து எவ்வாறு பிரச்சனையில் சிக்காமல் இருக்க முடிகிறது? என கேள்வி எழுப்பி உள்ளார். இதே போன்று பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • மகாராஷ்டிராவின் பண்டாரா-கோண்டியா நெடுஞ்சாலையில், நவேகான் நாக்சிரா சரணாலயத்தின் வழியாக NH 753 சாலையில் வேகமாக வந்த கார் ஒன்று சாலையைக் கடக்க முயன்ற புலி மீது மோதியது
    • கார் மோதியதில் காயமடைந்த புலி நொண்டியபடியே சாலையைக் கடக்க முடியாமல் நிலைதடுமாறி விழும் பரிதாபகரமான காட்சிகள் பதிவாகியுள்ளது.

    வன விலங்குகள் ஊருக்குள் வரும் வீடியோக்களும், காட்டு சாலைகளில் உலா வரும் வீடியோக்களும் இணையத்தளத்தில் அவ்வப்போது வெளியாகி நெட்டிசன்களின் கவனத்தை ஈர்ப்பது வழக்கம். சில சமயங்களில் வாகனங்களில் அந்த விலங்குகள் அடிபடும் துரஷிஷ்டவசமான சம்பவங்களும் நடந்து வருகிறது.

    அந்த வகையில் சமீபத்தில் மகாராஷ்டிராவின் பண்டாரா-கோண்டியா நெடுஞ்சாலையில், நவேகான் நாக்சிரா சரணாலயத்தின் வழியாக NH 753 சாலையில் வேகமாக வந்த கார் ஒன்று சாலையைக் கடக்க முயன்ற புலி மீது மோதி, புலி படுகாயமடைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    X தளத்தில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவில், வயது முதிர்ந்த ஆண் புலியின் மீது கார் மோதியதில் காயமடைந்த புலி நொண்டியபடியே சாலையைக் கடக்க முடியாமல் நிலைதடுமாறி விழும் பரிதாபகரமான காட்சிகள் பதிவாகியுள்ளது. காயமடைந்த புலியை மீட்டுபகுழுவினர் மீட்டு அவசர சிகிச்சைக்காக நாக்பூருக்கு கொண்டுசென்றனர். ஆனால் படுகாயமடைந்த புலி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தது. இந்த சரணாலயப் பகுதியில் 40 கிமீ மேல் செல்லக்கூடாது என்ற வேக வரம்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

    இந்நிலையில் வீடியோவைப் பார்த்த நெட்டிசன்களும் விலங்குகள் நல ஆர்வலர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். வன சாலைகளில் விலங்குகளை பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

    • லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் பகுதியில் புலி உலாவுவதாக பொதுமக்களிடையே தகவல் பரவியது.
    • புலி வேட நாய் கடந்த 2 நாட்களாக குறிஞ்சி நகர் பகுதியில் உலாவி வருகிறது.

    புதுச்சேரி:

    புலியை பார்த்து பூனை சூடுபோட்ட விடுகதை மாதிரி நாயை புலியாக மாற்ற அதை புலிபோல் பெயிண்ட் அடித்து வீதியில் உலாவவிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய சம்பவம் புதுச்சேரியில் அரங்கேறியுள்ளது.

    புதுச்சேரி லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் பகுதியில் புலி உலாவுவதாக பொதுமக்களிடையே தகவல் பரவியது.

    மலைவனப்பகுதியாக இருந்தால் புலி வரும் இங்கு எப்படி புலி வந்தது என்று பொதுமக்களிடையே கேள்வி எழுந்தது. உண்மையிலேயே புலி தான் வருகிறதா? அதனை பார்த்துவிட வேண்டும் என்று இளைஞர்கள் திட்டமிட்டனர்.

    அப்போது புலி வருகிறது என்று சிலர் அங்கு கூச்சலிட்டவாறு சென்றனர்.

    இதனை கேட்ட இளைஞர்கள் சிலர் அங்கு திரண்டு சென்றனர். அவர்கள் புலி என்று சொன்ன விலங்கை பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். ஏனென்றால் அது புலி அல்ல புலி வேஷத்தில் இருந்த நாய்.

    அந்தப் பகுதியை சேர்ந்த சில விஷமிகள் தெரு நாய் உடலில் புலியைப் போல கோடுகளை பெயிண்டில் வரைந்து நாயை வீதிகளில் உலாவ விட்டுள்ளனர்.

    இந்த புலி வேட நாய் கடந்த 2 நாட்களாக குறிஞ்சி நகர் பகுதியில் உலாவி வருகிறது. இது குறித்து லாஸ்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    நாய்க்கு புலிவேஷ மிட்ட விஷமிகள் யார்? என்று அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • கழுத்தில் கம்பி சுற்றியபடி இருந்ததால், அந்த புலி தப்பித்து செல்ல முடியாமல் தவித்தது.
    • கம்பி வேலியில் சிக்கியதில் அந்த புலிக்கு உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டிருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் சிறுத்தை, புலி, காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் நிகழ்வு தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

    அங்குள்ள மானந்தவாடி பகுதியில் புகுந்த ரேடியோ காலர் பொருத்தப்பட்ட காட்டுயானை ஒன்று சிக்கிய நிலையில், மையம்பள்ளியை சேர்ந்த அஜிஷ் என்பவர் நேற்றுமுன்தினம் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார். அந்த யானையும் ரேடியோ காலர் பொருத்திய யானை என்பது கண்டறியப்பட்டது.

    வீட்டின் காம்பவுண்ட் சுவரை உடைத்துக்கொண்டு சென்று அஜிசை காட்டு யானை கொன்ற சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் போராட்டம் நடத்தினார்கள். யானை தாக்கி பலியான ஜிசின் குடும்பத்தினருக்கு நிவாரணத்தொகை மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று கேரள மாநில அரசு அறிவித்தது.

    வயநாடு மாவட்டத்தில் காட்டுயானைகள் அட்டகாசத்தை தடுக்கவும், அஜிசை கொன்ற யானையை பிடிக்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு கடிதமும் எழுதினார்.

    இந்நிலையில் கண்ணூர் கோட்டியூர் பன்னியமலை பகுதியில் விவசாய நிலத்தில் இருந்த கம்பி வேலியில் இன்று புலி ஒன்று சிக்கியது. அதனை தொழிலாளி ஒருவர் பார்த்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். கழுத்தில் கம்பி சுற்றியபடி இருந்ததால், அந்த புலி தப்பித்து செல்ல முடியாமல் தவித்தது. சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், அந்த புலியை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    கம்பி வேலியில் சிக்கியதில் அந்த புலிக்கு உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் புலியை அமைதிப்படுத்தி மீட்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

    ×