என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஊட்டி அருகே புலி தாக்கி முதியவர் உயிரிழப்பு- பொதுமக்கள் சாலை மறியல்
- வனத்துறையினர் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
- இரவு நேரங்களில் தனியாக நடமாட வேண்டாம் என்றும் வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஊட்டி:
ஊட்டி அருகே உள்ள சின்ன காடிமந்து பகுதியை சேர்ந்தவர் புஷ்தாள் குட்டன்(57). இவர் இன்று காலை அப்பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றதாக தெரிகிறது.
அப்போது அங்கு மறைந்திருந்த புலி, புஷ்தாள் குட்டனை தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
வனப்பகுதிக்குள் உடலில் காயங்களுடன் கிடந்த அவரது உடலை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் ஊட்டி சுற்றுவட்டார பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து, காட்டு விலங்குகளின் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் என்றும், இரவு நேரங்களில் தனியாக நடமாட வேண்டாம் என்றும் வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையே புலி தாக்குதலை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் சோலூர் சந்திப்பு பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.






