search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "actresses"

    • கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக சாரல் திருவிழா எதுவும் நடத்தப்படாமல் இருந்தது.
    • குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் இன்று மாலை 4 மணி அளவில் சாரல் திருவிழா கோலாகலமாக தொடங்குகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் 3 ஆண்டுகளுக்கு பின்பு அரசு சார்பில் குற்றால சாரல் திருவிழா இந்த ஆண்டு நடத்தப்படுகிறது.

    சீசன் களை கட்டியது

    கடந்த 25 நாட்களுக்கு மேலாக குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக சீசன் களை கட்டியது. இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது

    கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக சாரல் திருவிழா எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு அதுபோன்ற பாதிப்புகள் எதுவும் இல்லாததால் குற்றால சாரல் திருவிழா நடத்துவதற்கு சுற்றுலாப்பயணிகள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன.

    மாவட்டத்தில் முதல்முறை

    அதனை ஏற்று மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசுக்கு சாரல் திருவிழா நடத்த அனுமதி வேண்டி அதற்கான கோப்புகளை அனுப்பி இருந்தது. அரசும் உடனடியாக அதற்கு செவிசாய்த்து ஆகஸ்ட் 5-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை சாரல் திருவிழா நடத்த அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து தென்காசி மாவட்டம் புதியதாக உதயம் ஆகிய பின்பு சாரல் திருவிழா முதன்முதலில் நடத்தப்பட இருக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் குற்றாலம் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அமைச்சர்கள் பங்கேற்பு

    குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் இன்று மாலை 4 மணி அளவில் கோலாகலமாக சாரல் திருவிழா தொடங்குகிறது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்குகிறார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன் வரவேற்று பேசுகிறார்.


    வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்கள். முடிவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுரேஷ் நன்றி கூறுகிறார்.

    நடிகர், நடிகைகளின் நிகழ்ச்சிகள்

    அதனைத்தொடர்ந்து திரைப்பட நகைச்சுவை நடிகர் சூரி, நடிகை ரம்யா பாண்டியன் ஆகியோர் கலந்து கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. பொள்ளாச்சி மகேந்திரன் குழுவினரின் ஜிக்காட்டம் நிகழ்ச்சி, மும்பை நரேஷ் பிள்ளைவழங்கும் நாட்டிய நிகழ்ச்சி, விக்கிரமசிங்கபுரம் கல்ப வர்ஷா குழுவினரின் பரத நாட்டியமும் நடைபெறுகிறது.

    புத்தகத்திருவிழா

    மேலும் குற்றாலம் பராசக்தி பெண்கள் கல்லூரி வளாகத்தில் புத்தக திருவிழாவையும் அமைச்சர்கள் தொடங்கி வைக்கின்றனர். இரவில் பேராசிரியர் ராமச்சந்திரன் குழுவினரின் சிறப்பு பட்டிமன்றமும் முதல் நாள் நிகழ்ச்சியாக நடத்தப்பட இருக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

    தென்காசி தனி மாவட்டமாக உதயம் ஆகிய பின்பு நடத்தப்படும் முதல் குற்றால சாரல் திருவிழா என்பதால் மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் என பலரும் நன்கொடைகளை வழங்கி சாரல் திருவிழா சிறப்பாக நடத்திட துணை புரிந்துள்ளனர். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×