என் மலர்
நீங்கள் தேடியது "விவாகரத்து வழக்கு"
- சட்டப்படி விவாகரத்து செய்யாமல் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளாதீர்கள்.
- ஒருவர் செய்வது குற்றம் என அறிந்தாலும், பாதிக்கப்பட்டவர் புகார் அளித்தால் மட்டுமே, சட்டம் தலையிடும்.
தமிழ் திரையுலகில் நீண்ட நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிசில்டா வழக்கில் இன்று முக்கிய திருப்பம் அரங்கேறியுள்ளது. இதுவரை தன்மீது ஜாய் கிரிசில்டா கூறிய எந்த குற்றச்சாட்டுக்கும் விளக்கமளிக்காத ரங்கராஜ், சமீபத்தில் மகளிர் ஆணையம் நடத்திய விசாரணையில் தான்தான் ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு தந்தை என ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் ஜாய் கிரிசில்டாவை திருமணம் செய்துக் கொண்டதையும் ஒப்புக் கொண்டுள்ளார். இதனிடையே மாதம்பட்டி ரங்கராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் மற்றும் மகளிர் குற்றத் தடுப்பு துணை ஆணையருக்கு மகளிர் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. குழந்தைக்கு தந்தை தான் என ஒப்புக்கொண்டதால் டிஎன்ஏ பரிசோதனை தேவையில்லை எனவும், அவர்மீது நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உரிமையியல் நீதிமன்றத்தை ஜாய் கிரிசில்டா நாடும் வரையில், அவருக்கு தற்போது பிறந்துள்ள குழந்தைக்கான பராமரிப்பு செலவை மாதம்பட்டி ரங்கராஜ், மறுப்பு தெரிவிக்காமல் ஏற்கவேண்டும் எனவும் மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இவ்விவகாரத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் கைது செய்யப்படுவாரா என இணையவாசிகள் விவாதம் நடத்தி வருகின்றனர். இப்படி இவர்கள் சொல்வதுபோல மாதம்பட்டி ரங்கராஜை கைது செய்ய இயலுமா? இந்திய சட்டங்கள் என்ன கூறுகின்றன என்பது குறித்து காண்போம்.
இந்தியச் சட்டப்படி கணவர் விவாகரத்துப் பெறாமல் இரண்டாவது திருமணம் செய்தால், அவர்மீது வழக்குப்பதிவு செய்து, அபராதம் விதித்து, சிறை தண்டனையும் விதிக்கலாம். ஆனால் அதற்கு கணவரின் திருமணத்தால் பாதிக்கப்பட்ட முதல் மனைவி புகார் அளிக்கவேண்டும். பாதிக்கப்பட்டவர் புகார் அளித்தால் மட்டுமே, சட்டம் தலையிடும். மற்றப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது. மற்றொன்று முதல் மனைவியுடன் விவாகரத்து வாங்கவில்லை என்பதை அறிந்தே, இரண்டாவது திருமணம் செய்துகொண்டால், அப்பெண்ணிண் குற்றச்சாட்டு எடுபடாது. ஆனால் ரங்கராஜின் வழக்கில் மகளிர் ஆணையம் தற்போது உறுதியான நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்துள்ளதால் கைது செய்யப்படலாம் என சிலர் கூறிவருகின்றனர். மற்றொன்று ஜாய் கிரிசில்டா கோரிய பராமரிப்பு தொகை... தனக்கும், தனது குழந்தைக்கும் மாதந்தோறும் ரூ.6.50 லட்சம் பராமரிப்புத் தொகை வழங்கக் கோரி ரங்கராஜுக்கு ஜாய் கிரிசில்டா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சமீபத்தில் அவருக்கு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. இந்நிலையில் சட்டப்படி திருமணம் செய்யாவிட்டாலும், பராமரிப்புத்தொகை நிச்சயம் வழங்கப்பட வழிவகை உள்ளது. இதுபோன்ற பல வழக்குகளில் நீதிமன்றங்கள் இரண்டாவது மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டுள்ளது. முதல் மனைவி தடுத்தாலும் போதிய காரணங்கள் இருந்தால் வழங்கலாம். காரணம் கணவரின் தவறு என்பதால் முதல் மனைவி தடுத்தாலும் ஜீவனாம்சம் வழங்கலாம்.

இரண்டாவது மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன
இவர்கள் வழக்கு எப்படி இருந்தாலும், சட்டங்கள் என்ன சொன்னாலும் பெண்கள் மனதில் நிறுத்திக் கொள்ளவேண்டியது ஒன்றுதான். திருமணம் முடிந்திருந்தால், விவாகரத்து செய்யாமல் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளாதீர்கள். அதுபோல நீங்கள் திருமணம் செய்ய உள்ளவர், ஏற்கனவே திருமணம் ஆனவர் எனில், அவருடைய விவாகரத்தை உறுதிசெய்து பின்னர் ஒரு உறவுக்குள் செல்லுங்கள். உங்கள் தரப்பில் உணர்ச்சி ரீதியான நியாயங்கள் முன்வைக்கப்பட்டாலும், சட்டத்தின்படியே அரசு செயல்பட இயலும். படிப்பறிவு இருந்தாலும், நடைமுறையை அறிந்திருந்தாலும் உறவுகளுக்குள் செல்லும்போது சில முடிவுகளை எடுப்பது சிக்கலான ஒன்றுதான். ஆனால் எப்போதும் இந்த சமூகம் பெண்களையே குறைக்கூறும். அதனால் உங்கள் நலனுக்காக எந்த முடிவையும் எமோஷனலாக எடுக்காமல், நடைமுறையோடு ஒப்பிட்டு, ஆராய்ந்து எடுங்கள்.
- ஜி.வி.பிரகாஷ் குமார், சைந்தவி இருவரும் விவாகரத்து கோரி சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
- ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவி இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவர், கடந்த 2013-ம் ஆண்டு தனது பள்ளித்தோழியும், தமிழ் சினிமா பின்னணிப் பாடகியுமான சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆன்வி என்ற பெண் குழந்தை உள்ளது.
இதனிடையே ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி இருவரும் பிரிந்து வாழ முடிவு எடுத்து இருப்பதாக கடந்தாண்டு மே மாதம் அறிவிப்பு வெளியிட்டனர்.
இதையடுத்து ஜி.வி.பிரகாஷ் குமார், சைந்தவி இருவரும் பரஸ்பரம் பிரிவதாக விவாகரத்து கோரி சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு குடும்பநல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணைக்கு ஆஜரான ஜி.வி.பிரகாஷ், சைந்தவி நேரில் ஆஜராகி இருவரும் மனமுவந்து பிரிவதாக தெரிவித்தனர்.
இந்தநிலையில் விவாகரத்து வழக்கு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவி இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.
வழக்கு விசாரணையின்போது, குழந்தையை சைந்தவி கவனித்துக்கொள்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என ஜி.வி.பிரகாஷ் நீதிபதி முன் தெரிவித்தார்.
இதையடுத்து ஜி.வி.பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கில் அடுத்த மாதம் 30-ந்தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்து வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.
- கணவரின் பெற்றோர் தான் தன்னை கொடுமைப்படுத்துகின்றனர்.
- எனது மனைவி, நான் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்படுகிறார்.
மும்பை:
புனேயை சேர்ந்த ஒருவருக்கு கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது. எனினும் அடுத்த ஆண்டு கணவன், மனைவி பிரிந்து தனியாக வசிக்க தொடங்கினர். 2015-ம் ஆண்டு பெண்ணின் கணவர் விவாகரத்து கேட்டு புனே குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில், மனைவி தன்னை பல வகைகளில் சித்ரவதை செய்வதாக கூறியிருந்தார்.
வழக்கை விசாரித்த குடும்ப நலக்கோர்ட்டு கணவருக்கு பெண்ணிடம் இருந்து விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது.
இதை எதிர்த்து பெண் மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். மனுவில், "கணவரின் பெற்றோர் தான் தன்னை கொடுமைப்படுத்துகின்றனர். எனினும் நான் எனது கணவரை நேசிக்கிறேன். அவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன். இதனால் குடும்ப நலக்கோர்ட்டு வழங்கிய விவாகரத்தை ரத்து செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தார். மேலும் நாங்கள் ஒன்றுசேர்ந்து வாழும் காலம் கனியும் வரை கணவர் பராமரிப்பு தொகையாக மாதந்தோறும் ரூ.1 லட்சம் தர உத்தரவிட வேண்டும்" எனவும் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ரேவதி மோகிதே, நீலா கோகலே அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
மனைவியின் குற்றச்சாட்டுக்கு ஐகோர்ட்டில் பதிலளித்த கணவர், "எனது மனைவி என்னுடன் உறவு கொள்ள மறுக்கிறார், நான் வேறு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகப்படுகிறார். குடும்பத்தினர், நண்பர்கள், சக ஊழியர்கள் முன்னிலையில் என்னை அவமானப்படுத்தி துன்புறுத்துகிறார். இவ்வாறு பல வகைகளில் தன்னை சித்ரவதை செய்கிறார். மேலும் அவர் தான் என்னை கைவிட்டு விட்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றார். எனவே குடும்ப நலக்கோர்ட்டு தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும்" என்று கூறினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், புனே குடும்ப நல கோர்ட்டின் விவாகரத்து உத்தரவை ரத்து செய்ய மறுத்தனர். மேலும் பெண்ணின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இது தொடர்பாக நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், "கணவருடன் உறவுக்கு மறுப்பது, வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்படுவது சித்ரவதையாக தான் கருத முடியும். மனுதாரரான பெண் கணவரின் சக ஊழியர்கள் மத்தியில் நடந்து கொண்ட விதம் அவருக்கு நிச்சயம் மனவேதனையை ஏற்படுத்தி இருக்கும். மேலும் அவரது நண்பர்கள் முன்னிலையில் ஆணுக்கு அவமானம் விளைவிப்பதும் அவருக்கு இழைக்கும் கொடுமை. கணவரின் மாற்றுத்திறனாளி சகோதரியிடம் அக்கறையின்மை மற்றும் அலட்சியமாக நடந்து கொண்டதும் அவருக்கும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் வேதனையை ஏற்படுத்தும். எனவே இந்த தம்பதியரின் திருமண உறவை குடும்ப நலக்கோர்ட்டு ரத்து செய்வதை உறுதி செய்கிறோம்" என்று கூறினர்.
- கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
- பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த அகில்ராஜை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரா பகுதியைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா (வயது 26).
இவரது கணவர் அகில்ராஜ். இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் 2 பேரும் பிரிந்து வாழ்ந்தனர். இந்த நிலையில் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர். கொட்டாரக்கரா ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு விசாரணைக்காக அகில்ராஜ் மற்றும் ஐஸ்வர்யா ஆஜரானார்கள்.
அதன்பிறகு ஐஸ்வர்யா கோர்ட்டில் இருந்து ஸ்கூட்டரில், வீட்டுக்குப் புறப்பட்டார். அப்போது பின் தொடர்ந்த அகில்ராஜ், தனது மோட்டார் சைக்கிளால், ஸ்கூட்டரை இடித்துள்ளார்.
இதனால் ஐஸ்வர்யா தனது வாகனத்தை நிறுத்தி விட்டு கீழே இறங்கினார். அப்போது அவர் மீது பெப்பர் ஸ்பிரேயை பயன்படுத்தி பெட்ரோலை அகில்ராஜ் ஊற்றியுள்ளார். பின்னர் அவர் மீது லைட்டரை பற்ற வைத்து நெருப்பை வீசினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஐஸ்வர்யா, அபயக்குரல் எழுப்பியவாறு சாலையில் ஓடினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர்,விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். இருப்பினும் தோள் மற்றும் கழுத்து பகுதியில் ஐஸ்வர்யாவுக்கு தீக்காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து அகில்ராஜை கைது செய்தனர். சம்பவ இடத்தில் இருந்து பெட்ரோல் பாட்டில் மற்றும் பொருட்களை போலீசார் கைப்பற்றினர்.
- திருமணத்துக்கு பின் தேவி அடுத்தடுத்து 4 முறை கர்ப்பம் அடைந்துள்ளார்.
- நீ எனக்கு குழந்தை. நான் உனக்கு குழந்தை என்று கூறிய குமாரின் நல்ல மனதில் உறவினர்கள் யாரோ விஷத்தை ஏற்றியுள்ளனர்.
சென்னை:
நெல்லையைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி தேவி. (இருவரது பெயரும் மாற்றப்பட்டுள்ளது). இவர்களுக்கு கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில் தேவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு நெல்லை குடும்பநல கோர்ட்டில் குமார் வழக்கு தொடர்ந்தார்.
அதில், ''திருமணத்துக்கு முன்பே தேவிக்கு புற்றுநோய் இருந்தது. அதை மறைத்து என்னை திருமணம் செய்து கொண்டார். அதுமட்டுமல்ல, புற்றுநோய் பாதிப்பினால், அவரது கர்ப்பப்பையும் அகற்றப்பட்டு விட்டது. இதுபோன்ற செயல்கள் எல்லாம் என்னை கொடுமை செய்வதாகும். எனவே, எனக்கு விவகாரத்து வழங்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
ஆனால், இந்த காரணத்துக்கு எல்லாம் விவாகரத்து வழங்க முடியாது என்று நெல்லை கோர்ட்டு தீர்ப்பு அளித்ததால், அதை எதிர்த்து ஐகோர்ட்டில் அவர் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் ஆர்.எம்.டி. டீக்காராமன், பி.பி.பாலாஜி ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
திருமணத்துக்கு பின் தேவி அடுத்தடுத்து 4 முறை கர்ப்பம் அடைந்துள்ளார். ஆனால், 4 முறையும் கரு கலைந்தது. இதனால் ஆஸ்பத்திரிக்கு சென்று பரிசோதித்த பின்னர்தான், அவர் புற்றுநோய் தாக்கி 3-வது கட்டத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உயிரை காப்பாற்ற கர்ப்பப்பை அகற்றப்பட்டுள்ளது.
இவை எல்லாம் மனவேதனை தரும் கொடுமையாகும். அதே நேரம், இந்த காரணத்துக்காக விவாகரத்து வேண்டும் என்று குமார் கூறுவதை ஏற்க முடியாது. இவையெல்லாம் தேவி கணவனுக்கு கொடுத்த கொடுமை என்று சொல்ல முடியாது. 'எல்லாம் விதி' என்றுதான் சொல்ல வேண்டும்.
நீ எனக்கு குழந்தை. நான் உனக்கு குழந்தை என்று கூறிய குமாரின் நல்ல மனதில் உறவினர்கள் யாரோ விஷத்தை ஏற்றியுள்ளனர். அதனால், இப்போது அவர் விவாகரத்து கேட்கிறார்.
கடவுளால் காப்பாற்றப்பட்ட தேவியை அவரது கணவனிடம் இருந்து பிரிக்க நாங்கள் விரும்பவில்லை. அதனால், இவர்களுக்கு விவாகரத்து வழங்க முடியாது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
- உமர் அப்துல்லாவின் மேல்முறையீட்டு மனுவை, டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி.
- 6 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி பாயல் அப்துல்லாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா தாக்கல் செய்த விவாகரத்து மனு தொடர்பாக அவரது மனைவி பாயல் அப்துல்லாவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பிரிந்து சென்ற மனைவியிடமிருந்து விவாகரத்து கோரிய வழக்கில், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் மேல்முறையீட்டு மனுவை, டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உமர் அப்துல்லா உச்ச நீதிமன்றத்தை அணுகினார்.
நீதிபதிகள் சுதன்ஷு துலியா மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனு மீது 6 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி பாயல் அப்துல்லாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அப்துல்லா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், கடந்த 15 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதால் அவர்களது திருமணம் முறிந்துவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
திருமணங்களை கலைக்க கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்ட அரசியலமைப்பின் 142 வது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டை அவர் கோரினார்.
உமர் மற்றும் பாயல் அப்துல்லா செப்டம்பர் 1, 1994 இல் திருமணம் செய்து கொண்டனர். மேலும் 2009 முதல் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தங்கள் இரு மகன்களின் பாதுகாப்பில் உள்ளனர்.
முன்னதாக, மேலும் அவரது மனைவிக்கு மாதம் 1.5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும், அவரது இரு மகன்களுக்கும் தலா 60,000 ரூபாய் வழங்கவும் தேசிய மாநாட்டிற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
- இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
- வெளிநாட்டில் வசிக்கும் தம்பதியை நேரில்தான் ஆஜராக வேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது.
சென்னை:
அமெரிக்காவில் வாழும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தம்பதிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இவர்கள் விசா பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதால், காணொலி காட்சி வாயிலாக விசாரணைக்கு ஆஜராகினர். ஆனால், அவர்கள், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து காணொலியில் ஆஜராகவில்லை என்று கூறி, அவர்களது வாக்குமூலத்தை பதிவு செய்ய குடும்பநல கோர்ட்டு மறுத்துவிட்டது.
இதை எதிர்த்து மனைவி தரப்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார், "குற்றவியல் வழக்குகளில்தான் விசாரணைக்கு நேரில் ஆஜராவது கட்டாயமாகும். இதுபோன்ற விவாகரத்து வழக்கில் காணொலி வாயிலாக ஆஜராக வாய்ப்பு அளிக்க வேண்டும். வெளிநாட்டில் வசிக்கும் தம்பதியை நேரில்தான் ஆஜராக வேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது. அமெரிக்காவில் வசிக்கும் தம்பதியிடம் காணொலி காட்சி வாயிலாக விசாரிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.
- கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் இருந்து எப்போது நாம் விலகினோமோ அப்போது இருந்தே விவாகரத்தும் அதிகரிக்க தொடங்கி விட்டது.
- கடந்த 10 ஆண்டுகளை ஒப்பிடுகையில் விவாகரத்து வழக்குகள் 3 மடங்கு அதிகரித்திருப்பது புள்ளிவிவரங்கள் மூலம் தெரிகிறது.
சென்னை:
பணத்தை வாரி இறைத்து ஜாதகம், ஜோதிடம் என பொருத்தம் பார்த்து, குடும்ப உறுப்பினர்கள் மூலம் தீர விசாரித்து நடத்தப்படும் திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் இளம்ஜோடிகளில் சிலர், தேனிலவுக்கு செல்லும் இடத்தில் கூட பரஸ்பர புரிதல் இல்லாமல் சண்டையோடு பிரிந்து செல்வதும் அரங்கேறி வருகிறது. காதல் திருமணம் செய்தவர்களிலும் சிலர் பிரிந்து விடுகிறார்கள்.
ஒளிவு மறைவு இல்லாத கணவன்-மனைவி என்ற புனிதமான உறவுக்குள் தனி உரிமை எனும் புது கலாசாரத்தை புகுத்தி விவாகரத்தில் கொண்டுபோய் நிறுத்தும் அளவுக்கு பல தம்பதியர் வந்து விட்டதும் வேதனைக்குரிய விஷயம்.
கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் இருந்து எப்போது நாம் விலகினோமோ அப்போது இருந்தே விவாகரத்தும் அதிகரிக்க தொடங்கி விட்டது.
தமிழகத்தில் விவாகரத்து கோரி கோர்ட்டை நாடுவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அதுவும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் போன்ற நகரங்களில் செயல்படும் குடும்பநல கோர்ட்டுகளில் விவாகரத்து வழக்குகள் எகிறிக் கொண்டே இருக்கிறது.
இதன் காரணமாக கோர்ட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய கட்டாய சூழலும் ஏற்பட்டு உள்ளது. அந்த அடிப்படையில்தான் சென்னையில் ஏற்கனவே இருந்து வந்த குடும்ப நல கோர்ட்டுகளின் எண்ணிக்கை 4-ல் இருந்து 8 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இருந்தாலும் குடும்பநல கோர்ட்டுகளில் கூட்டம் குறைந்தபாடில்லை.
தமிழகத்தில் உள்ள 40 குடும்ப நல கோர்ட்டுகளில் இந்த ஆண்டு (2024) வரை விவாகரத்து, ஜீவனாம்சம் கோருதல், ஒன்றாக சேர்த்து வைக்க கோருதல், பரஸ்பர விவாகரத்து என 33 ஆயிரத்து 213 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 17 ஆயிரத்து 638 வழக்குகள் இந்த ஆண்டு தாக்கல் ஆனவை.
மொத்தம் நிலுவையில் உள்ள வழக்குகளில், இந்த ஆண்டு மட்டும் 19 ஆயிரத்து 240 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளன.
கடந்த 10 ஆண்டுகளை ஒப்பிடுகையில் விவாகரத்து வழக்குகள் 3 மடங்கு அதிகரித்திருப்பது புள்ளிவிவரங்கள் மூலம் தெரிகிறது.
சென்னையை பொறுத்தமட்டில் கடந்த 2014-ம் ஆண்டு 2 ஆயிரத்துக்கும் குறைவான விவாகரத்து வழக்குகளே தாக்கல் ஆகின.
ஆனால், தற்போது (2024) 5 ஆயிரத்து 500-க்கும் அதிகமான விவாகரத்து வழக்குகள் தாக்கலாகி உள்ளன.
விவாகரத்து கோரி கோர்ட்டை நாடுவோரில் இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம்தான் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழகம் 6-வது இடத்தில் இருக்கிறது.
2-வது இடத்தில் கர்நாடகாவும், 3-வது இடத்தில் உத்தரபிரதேசமும் உள்ளது. மேற்குவங்காளம் 4-வது இடத்திலும், டெல்லி 5-வது இடத்திலும் இருக்கிறது.
இந்தியாவில் விவாகரத்து கோருவோரில் 25 முதல் 35 வயதுடையோர் 50 சதவீதமும், 18 முதல் 25 வயதுடையோர் 35 சதவீதமும், 35 வயதுக்கு மேல் 15 சதவீதமும் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
விவாகரத்து கோரி வழக்கு தொடரும் தம்பதியரை மீண்டும் பரஸ்பர புரிதலுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்பதுதான் குடும்பநல கோர்ட்டின் முக்கிய நோக்கம். தவிர்க்க முடியாத சூழலில் தான் விவாகரத்து என்ற நிலைக்கு செல்ல வேண்டும் என்பதுதான் இந்த கோர்ட்டின் மையக்கருத்து.
இந்த அடிப்படையில் தான் நன்கு பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள் மூலம் விவாகரத்து கோரி வரும் தம்பதியருக்கு கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது. ஆனாலும், இருதரப்பும் சமரசத்துக்கு இடம் கொடுக்காமல் இளம் வயதிலேயே வாழ்க்கையை தொலைத்து வருவது கவலை அளிப்பதாகவே உள்ளது.
படிப்பு, சம்பாத்தியம், யாருடைய துணையும் இன்றி வாழ முடியும் என்ற இளம்பெண்களின் அசட்டு தைரியம் திருமணம் எனும் ஆயிரம் காலத்து பயிர் முளையிலேயே கருகும் அபாயத்தை உருவாக்கி விட்டது.
வாழ்க்கை வாழ்வதற்கே. சண்டை சச்சரவு எதுவானாலும் விவாகரத்து தீர்வு இல்லை என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். அப்போது தான் விவாகரத்து எனும் நோயை விரட்ட முடியும்.
- ஜீவனாம்சமாக ரூ.2 லட்சம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
- நாணய மூட்டைகளை நோட்டாக மாற்ற நீதிபதி உத்தரவு.
கோவை:
கோவையை சேர்ந்த ஒரு தம்பதியர் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு மாவட்ட குடும்ப நல கோர்ட்டில் நடந்து வந்தது.
தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் முடிவில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சமாக ரூ.2 லட்சம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
பின்னர் அந்த நபர் உடனடியாக காருக்கு சென்று அங்கு பத்திரமாக வைத்திருந்த நாணய மூட்டைகளை எடுத்து வந்தார்.
அப்போது அவர் விவாகரத்து பெற்ற மனைவிக்கு தர வேண்டிய ஜீவனாம்ச பணத்தில் ரூ.80 ஆயிரம் பணத்தை ஒரு ரூபாய், 2 ரூபாய் மற்றும் 5 ரூபாய் நாணயங்களாக மாற்றி சுமார் 20 மூட்டைகளில் கட்டிவந்து கோர்ட்டில் ஒப்படைத்தார். இதனை பார்த்து நீதிமன்ற ஊழியர்கள் திடுக்கிட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணும் அதிர்ச்சிக்குள்ளானார்.
பின்னர் நாணய மூட்டைகளை நோட்டாக மாற்றி கொண்டு வர வேண்டும் என்று நீதிபதி அறிவுறுத்தியதுடன் வழக்கை ஒத்தி வைத்தார். தொடர்ந்து அந்த நபர் மூட்டையில் கொண்டு வந்திருந்த நாணயங்களை மீண்டும் காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்றார்.
- மனைவிக்கு மொத்தம் ரூ.73 லட்சம் ஜீவனாம்சமாக அளிக்க கணவர் ஒப்புக்கொண்டார்.
- மகளுக்கு தனது கல்வியை தொடர அடிப்படை உரிமை உள்ளது.
புதுடெல்லி:
விவாகரத்து வழக்கு ஒன்றில், கடந்த நவம்பர் 28-ந் தேதி, கணவன்-மனைவி இடையே தீர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதில், அவர்களுடைய மகளும் கையெழுத்திட்டுள்ளார். அப்பெண் அயர்லாந்தில் படித்து வருகிறார்.
தீர்வு ஒப்பந்தத்தின்படி, மனைவிக்கு மொத்தம் ரூ.73 லட்சம் ஜீவனாம்சமாக அளிக்க கணவர் ஒப்புக்கொண்டார். அதில், ரூ.43 லட்சத்தை மகள் தனது படிப்பு செலவுக்கு வைத்துக்கொள்ளலாம் என்று கூறியிருந்தார்.
ஆனால், அந்த பணத்தை ஏற்றுக்கொள்ள மகள் மறுத்து விட்டார். ஆனால், பணத்தை திரும்பப்பெற அவருடைய தந்தை மறுத்து விட்டார்.
இதற்கிடையே, இந்த விவாகரத்து வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜால் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-
மகள் என்ற முறையில், அந்த பெண் தனது கல்விச்செலவுக்கு பெற்றோரிடம் இருந்து பணம் பெற சட்டப்பூர்வ உரிமையும், இழக்க முடியாத உரிமையும் உண்டு. மகளுக்கு தனது கல்வியை தொடர அடிப்படை உரிமை உள்ளது. அதற்காக தங்களது நிதி ஆதாரத்தில் இருந்து போதிய நிதியை அளிக்க பெற்றோரை கட்டாயப்படுத்த முடியும்.
அந்த பெண், தனது கண்ணியத்தை காக்க பணத்தை வைத்துக்கொள்ள விரும்பாமல், திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு கூறிவிட்டார். அந்த பணத்தை பெற மகளுக்கு சட்டப்பூர்வ உரிமை உள்ளது.
ஜீவனாம்சமாக மனைவி ரூ.30 லட்சம் பெற்றிருப்பதாலும், இந்த ஜோடி கடந்த 26 ஆண்டுகளாக பிரிந்து வாழ்வதை ஒப்புக்கொண்டதாலும் அவர்களுக்கு பரஸ்பர சம்மதத்தின்பேரில் விவாகரத்து வழங்குவதை தவிர்க்க முடியாது.
மேலும், அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவின்கீழ் சுப்ரீம் கோர்ட்டுக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி, பரஸ்பர சம்மதத்தின்பேரில், இருவருக்கும் விவாகரத்து அளிக்கிறோம்.
தீர்வு ஒப்பந்தத்தின்படி, இருவரும் ஒருவர் மீது ஒருவர் கோர்ட்டு வழக்கு தொடரக்கூடாது. ஏதேனும் வழக்கு நிலுவையில் இருந்தால், அது முடித்து வைக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில், இருதரப்பினரும் எந்த உரிமையும் கோரக்கூடாது. தீர்வு ஒப்பந்தத்தின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
- ஒரு பெண் தாக்கல் செய்ததால் மட்டுமே இந்த இடமாற்ற மனுவை ஏற்க முடியாது என்றும், உண்மைகளின் சமநிலையான மதிப்பீடு தேவை என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.
- வழக்கை மாற்றினால் பிரதிவாதி-கணவர் அதிக சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று கண்டறிந்து நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.
கர்நாடகா மாநிலத்தில் பெண் தொடர்ந்த விவாகரத்து வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணையின்போது, சமூகத்தில் பாலின நடுநிலையின் அவசியத்தை வலியுறுத்தி, விவாகரத்து வழக்கை மாற்றக் கோரிய மனைவியின் மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் (HC) நிராகரித்துள்ளது.
ஒரு பெண் தாக்கல் செய்ததால் மட்டுமே இந்த இடமாற்ற மனுவை ஏற்க முடியாது என்றும், உண்மைகளின் சமநிலையான மதிப்பீடு தேவை என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.
நீதிபதி சிலாகூர் சுமலதாவின் ஒற்றை நீதிபதி அமர்வு இதுகுறித்து கூறுகையில், " உண்மையில், பெரும்பாலான சூழ்நிலைகளில் பெண்கள் முதன்மையாக பாதிக்கப்பட்டவர்கள் தான். ஆனால் அதற்காக பெண்களின் கொடுமையால் ஆண்கள் பாதிக்கப்படுவதில்லை என்று அர்த்தமல்ல. எனவே, சமூகத்தில் பாலின-நடுநிலை அவசியம் உள்ளது."
விவாகரத்து மனுவை, சிக்கமகளூரு மாவட்டம், நரசிம்மராஜபுராவில் உள்ள மூத்த சிவில் நீதிபதி நீதிமன்றத்திலிருந்து, சிவமோகா மாவட்டம், ஹோசனகராவில் உள்ள மூத்த சிவில் நீதிபதி நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு மனுதாரர் மனைவி கோரினார்.
அந்த மனுவில், "நீதிமன்ற விசாரணைகளில் தவறாமல் கலந்துகொள்வதற்காக தனது வீட்டிலிருந்து நரசிம்மராஜபுரத்திற்கு 130 கிலோமீட்டர் தூரம் வருவதற்கு பல சிரமங்களை எதிர்க்கொள்ள வேண்டி இருப்பதாக" குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை எதிர்த்த கணவர்," தான் ஒன்பது மற்றும் ஏழு வயதுடைய இரண்டு மைனர் குழந்தைகளையும் தன்னுடன் வைத்து வளர்த்து வருகிறேன்.
வழக்கை மாற்றுவது தனக்கு கூடுதல் சுமைகளை ஏற்படுத்தும் என்றும், இது குழந்தைகளின் வழக்கத்தை சீர்குலைக்கும் என்றும், அன்றாடப் பொறுப்புகளை நிர்வகிப்பதில் தனது சிரமங்கள் அதிகரிக்கும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
தந்தையின் பராமரிப்பில் இருந்த குழந்தைகளின் நலன் உட்பட ஒட்டுமொத்த சூழ்நிலைகளையும் நீதிமன்றம் மதிப்பிட்ட நிலையில், "மாற்று மனுவை ஒரு பெண் தாக்கல் செய்வதால் மட்டுமே, கோரப்பட்டபடி வழக்கை மாற்ற முடியாது" என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
"பிரதிவாதி- கணவர் குழந்தைகளை கவனித்துக்கொள்வதாலும், குழந்தைகள் அவரது பாதுகாப்பு இருப்பதாலும், நீதிமன்றத்தில் ஆஜராவதில் கணவர் எதிர்கொள்ளும் சிரமம் மனுதாரர் மனைவியை விட அதிகமாக இருக்கும்" என்று கூறி கணவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.
மேலும், "சமத்துவம் அதன் உண்மையான அர்த்தத்தில் இருக்க வேண்டும், இரு பாலினத்தையும் பாதிக்கக்கூடாது. பெண்களைப் பாதுகாப்பதற்கான நமது முயற்சிகள் எவ்வளவு பாராட்டத்தக்கதாக இருந்தாலும், நமது சமூகத்தில் ஆண்கள் எதிர்கொள்ளும் சவால்களை நாம் கவனிக்காமல் விடக்கூடாது," என்று நீதிமன்றம் குறிப்பிட்டதது.
இதன் விளைவாக, வழக்கை மாற்றினால் பிரதிவாதி-கணவர் அதிக சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று கண்டறிந்து நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.






