search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Divorce case"

    • ஒரு பெண் தாக்கல் செய்ததால் மட்டுமே இந்த இடமாற்ற மனுவை ஏற்க முடியாது என்றும், உண்மைகளின் சமநிலையான மதிப்பீடு தேவை என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.
    • வழக்கை மாற்றினால் பிரதிவாதி-கணவர் அதிக சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று கண்டறிந்து நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

    கர்நாடகா மாநிலத்தில் பெண் தொடர்ந்த விவாகரத்து வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணையின்போது, சமூகத்தில் பாலின நடுநிலையின் அவசியத்தை வலியுறுத்தி, விவாகரத்து வழக்கை மாற்றக் கோரிய மனைவியின் மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் (HC) நிராகரித்துள்ளது.

    ஒரு பெண் தாக்கல் செய்ததால் மட்டுமே இந்த இடமாற்ற மனுவை ஏற்க முடியாது என்றும், உண்மைகளின் சமநிலையான மதிப்பீடு தேவை என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.

    நீதிபதி சிலாகூர் சுமலதாவின் ஒற்றை நீதிபதி அமர்வு இதுகுறித்து கூறுகையில், " உண்மையில், பெரும்பாலான சூழ்நிலைகளில் பெண்கள் முதன்மையாக பாதிக்கப்பட்டவர்கள் தான். ஆனால் அதற்காக பெண்களின் கொடுமையால் ஆண்கள் பாதிக்கப்படுவதில்லை என்று அர்த்தமல்ல. எனவே, சமூகத்தில் பாலின-நடுநிலை அவசியம் உள்ளது."

    விவாகரத்து மனுவை, சிக்கமகளூரு மாவட்டம், நரசிம்மராஜபுராவில் உள்ள மூத்த சிவில் நீதிபதி நீதிமன்றத்திலிருந்து, சிவமோகா மாவட்டம், ஹோசனகராவில் உள்ள மூத்த சிவில் நீதிபதி நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு மனுதாரர் மனைவி கோரினார்.

    அந்த மனுவில், "நீதிமன்ற விசாரணைகளில் தவறாமல் கலந்துகொள்வதற்காக தனது வீட்டிலிருந்து நரசிம்மராஜபுரத்திற்கு 130 கிலோமீட்டர் தூரம் வருவதற்கு பல சிரமங்களை எதிர்க்கொள்ள வேண்டி இருப்பதாக" குறிப்பிட்டிருந்தார்.

    இந்த மனுவை எதிர்த்த கணவர்," தான் ஒன்பது மற்றும் ஏழு வயதுடைய இரண்டு மைனர் குழந்தைகளையும் தன்னுடன் வைத்து வளர்த்து வருகிறேன்.

    வழக்கை மாற்றுவது தனக்கு கூடுதல் சுமைகளை ஏற்படுத்தும் என்றும், இது குழந்தைகளின் வழக்கத்தை சீர்குலைக்கும் என்றும், அன்றாடப் பொறுப்புகளை நிர்வகிப்பதில் தனது சிரமங்கள் அதிகரிக்கும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

    தந்தையின் பராமரிப்பில் இருந்த குழந்தைகளின் நலன் உட்பட ஒட்டுமொத்த சூழ்நிலைகளையும் நீதிமன்றம் மதிப்பிட்ட நிலையில், "மாற்று மனுவை ஒரு பெண் தாக்கல் செய்வதால் மட்டுமே, கோரப்பட்டபடி வழக்கை மாற்ற முடியாது" என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

    "பிரதிவாதி- கணவர் குழந்தைகளை கவனித்துக்கொள்வதாலும், குழந்தைகள் அவரது பாதுகாப்பு இருப்பதாலும், நீதிமன்றத்தில் ஆஜராவதில் கணவர் எதிர்கொள்ளும் சிரமம் மனுதாரர் மனைவியை விட அதிகமாக இருக்கும்" என்று கூறி கணவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.

    மேலும், "சமத்துவம் அதன் உண்மையான அர்த்தத்தில் இருக்க வேண்டும், இரு பாலினத்தையும் பாதிக்கக்கூடாது. பெண்களைப் பாதுகாப்பதற்கான நமது முயற்சிகள் எவ்வளவு பாராட்டத்தக்கதாக இருந்தாலும், நமது சமூகத்தில் ஆண்கள் எதிர்கொள்ளும் சவால்களை நாம் கவனிக்காமல் விடக்கூடாது," என்று நீதிமன்றம் குறிப்பிட்டதது.

    இதன் விளைவாக, வழக்கை மாற்றினால் பிரதிவாதி-கணவர் அதிக சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று கண்டறிந்து நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

    • ஜீவனாம்சமாக ரூ.2 லட்சம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
    • நாணய மூட்டைகளை நோட்டாக மாற்ற நீதிபதி உத்தரவு.

    கோவை:

    கோவையை சேர்ந்த ஒரு தம்பதியர் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு மாவட்ட குடும்ப நல கோர்ட்டில் நடந்து வந்தது.

    தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் முடிவில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சமாக ரூ.2 லட்சம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

    பின்னர் அந்த நபர் உடனடியாக காருக்கு சென்று அங்கு பத்திரமாக வைத்திருந்த நாணய மூட்டைகளை எடுத்து வந்தார்.

    அப்போது அவர் விவாகரத்து பெற்ற மனைவிக்கு தர வேண்டிய ஜீவனாம்ச பணத்தில் ரூ.80 ஆயிரம் பணத்தை ஒரு ரூபாய், 2 ரூபாய் மற்றும் 5 ரூபாய் நாணயங்களாக மாற்றி சுமார் 20 மூட்டைகளில் கட்டிவந்து கோர்ட்டில் ஒப்படைத்தார். இதனை பார்த்து நீதிமன்ற ஊழியர்கள் திடுக்கிட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணும் அதிர்ச்சிக்குள்ளானார்.

    பின்னர் நாணய மூட்டைகளை நோட்டாக மாற்றி கொண்டு வர வேண்டும் என்று நீதிபதி அறிவுறுத்தியதுடன் வழக்கை ஒத்தி வைத்தார். தொடர்ந்து அந்த நபர் மூட்டையில் கொண்டு வந்திருந்த நாணயங்களை மீண்டும் காரில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்றார்.

    • கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் இருந்து எப்போது நாம் விலகினோமோ அப்போது இருந்தே விவாகரத்தும் அதிகரிக்க தொடங்கி விட்டது.
    • கடந்த 10 ஆண்டுகளை ஒப்பிடுகையில் விவாகரத்து வழக்குகள் 3 மடங்கு அதிகரித்திருப்பது புள்ளிவிவரங்கள் மூலம் தெரிகிறது.

    சென்னை:

    பணத்தை வாரி இறைத்து ஜாதகம், ஜோதிடம் என பொருத்தம் பார்த்து, குடும்ப உறுப்பினர்கள் மூலம் தீர விசாரித்து நடத்தப்படும் திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் இளம்ஜோடிகளில் சிலர், தேனிலவுக்கு செல்லும் இடத்தில் கூட பரஸ்பர புரிதல் இல்லாமல் சண்டையோடு பிரிந்து செல்வதும் அரங்கேறி வருகிறது. காதல் திருமணம் செய்தவர்களிலும் சிலர் பிரிந்து விடுகிறார்கள்.

    ஒளிவு மறைவு இல்லாத கணவன்-மனைவி என்ற புனிதமான உறவுக்குள் தனி உரிமை எனும் புது கலாசாரத்தை புகுத்தி விவாகரத்தில் கொண்டுபோய் நிறுத்தும் அளவுக்கு பல தம்பதியர் வந்து விட்டதும் வேதனைக்குரிய விஷயம்.

    கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் இருந்து எப்போது நாம் விலகினோமோ அப்போது இருந்தே விவாகரத்தும் அதிகரிக்க தொடங்கி விட்டது.

    தமிழகத்தில் விவாகரத்து கோரி கோர்ட்டை நாடுவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அதுவும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் போன்ற நகரங்களில் செயல்படும் குடும்பநல கோர்ட்டுகளில் விவாகரத்து வழக்குகள் எகிறிக் கொண்டே இருக்கிறது.

    இதன் காரணமாக கோர்ட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய கட்டாய சூழலும் ஏற்பட்டு உள்ளது. அந்த அடிப்படையில்தான் சென்னையில் ஏற்கனவே இருந்து வந்த குடும்ப நல கோர்ட்டுகளின் எண்ணிக்கை 4-ல் இருந்து 8 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இருந்தாலும் குடும்பநல கோர்ட்டுகளில் கூட்டம் குறைந்தபாடில்லை.

    தமிழகத்தில் உள்ள 40 குடும்ப நல கோர்ட்டுகளில் இந்த ஆண்டு (2024) வரை விவாகரத்து, ஜீவனாம்சம் கோருதல், ஒன்றாக சேர்த்து வைக்க கோருதல், பரஸ்பர விவாகரத்து என 33 ஆயிரத்து 213 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 17 ஆயிரத்து 638 வழக்குகள் இந்த ஆண்டு தாக்கல் ஆனவை.

    மொத்தம் நிலுவையில் உள்ள வழக்குகளில், இந்த ஆண்டு மட்டும் 19 ஆயிரத்து 240 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளன.

    கடந்த 10 ஆண்டுகளை ஒப்பிடுகையில் விவாகரத்து வழக்குகள் 3 மடங்கு அதிகரித்திருப்பது புள்ளிவிவரங்கள் மூலம் தெரிகிறது.

    சென்னையை பொறுத்தமட்டில் கடந்த 2014-ம் ஆண்டு 2 ஆயிரத்துக்கும் குறைவான விவாகரத்து வழக்குகளே தாக்கல் ஆகின.

    ஆனால், தற்போது (2024) 5 ஆயிரத்து 500-க்கும் அதிகமான விவாகரத்து வழக்குகள் தாக்கலாகி உள்ளன.

    விவாகரத்து கோரி கோர்ட்டை நாடுவோரில் இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம்தான் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில் சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழகம் 6-வது இடத்தில் இருக்கிறது.

    2-வது இடத்தில் கர்நாடகாவும், 3-வது இடத்தில் உத்தரபிரதேசமும் உள்ளது. மேற்குவங்காளம் 4-வது இடத்திலும், டெல்லி 5-வது இடத்திலும் இருக்கிறது.

    இந்தியாவில் விவாகரத்து கோருவோரில் 25 முதல் 35 வயதுடையோர் 50 சதவீதமும், 18 முதல் 25 வயதுடையோர் 35 சதவீதமும், 35 வயதுக்கு மேல் 15 சதவீதமும் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

    விவாகரத்து கோரி வழக்கு தொடரும் தம்பதியரை மீண்டும் பரஸ்பர புரிதலுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்பதுதான் குடும்பநல கோர்ட்டின் முக்கிய நோக்கம். தவிர்க்க முடியாத சூழலில் தான் விவாகரத்து என்ற நிலைக்கு செல்ல வேண்டும் என்பதுதான் இந்த கோர்ட்டின் மையக்கருத்து.

    இந்த அடிப்படையில் தான் நன்கு பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள் மூலம் விவாகரத்து கோரி வரும் தம்பதியருக்கு கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது. ஆனாலும், இருதரப்பும் சமரசத்துக்கு இடம் கொடுக்காமல் இளம் வயதிலேயே வாழ்க்கையை தொலைத்து வருவது கவலை அளிப்பதாகவே உள்ளது.

    படிப்பு, சம்பாத்தியம், யாருடைய துணையும் இன்றி வாழ முடியும் என்ற இளம்பெண்களின் அசட்டு தைரியம் திருமணம் எனும் ஆயிரம் காலத்து பயிர் முளையிலேயே கருகும் அபாயத்தை உருவாக்கி விட்டது.

    வாழ்க்கை வாழ்வதற்கே. சண்டை சச்சரவு எதுவானாலும் விவாகரத்து தீர்வு இல்லை என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். அப்போது தான் விவாகரத்து எனும் நோயை விரட்ட முடியும்.

    • இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
    • வெளிநாட்டில் வசிக்கும் தம்பதியை நேரில்தான் ஆஜராக வேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது.

    சென்னை:

    அமெரிக்காவில் வாழும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தம்பதிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இவர்கள் விசா பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதால், காணொலி காட்சி வாயிலாக விசாரணைக்கு ஆஜராகினர். ஆனால், அவர்கள், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து காணொலியில் ஆஜராகவில்லை என்று கூறி, அவர்களது வாக்குமூலத்தை பதிவு செய்ய குடும்பநல கோர்ட்டு மறுத்துவிட்டது.

    இதை எதிர்த்து மனைவி தரப்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.நிர்மல்குமார், "குற்றவியல் வழக்குகளில்தான் விசாரணைக்கு நேரில் ஆஜராவது கட்டாயமாகும். இதுபோன்ற விவாகரத்து வழக்கில் காணொலி வாயிலாக ஆஜராக வாய்ப்பு அளிக்க வேண்டும். வெளிநாட்டில் வசிக்கும் தம்பதியை நேரில்தான் ஆஜராக வேண்டும் என்று கட்டாயப்படுத்தக்கூடாது. அமெரிக்காவில் வசிக்கும் தம்பதியிடம் காணொலி காட்சி வாயிலாக விசாரிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.

    • கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
    • பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த அகில்ராஜை போலீசார் கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரா பகுதியைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா (வயது 26).

    இவரது கணவர் அகில்ராஜ். இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதனால் 2 பேரும் பிரிந்து வாழ்ந்தனர். இந்த நிலையில் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தனர். கொட்டாரக்கரா ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு விசாரணைக்காக அகில்ராஜ் மற்றும் ஐஸ்வர்யா ஆஜரானார்கள்.

    அதன்பிறகு ஐஸ்வர்யா கோர்ட்டில் இருந்து ஸ்கூட்டரில், வீட்டுக்குப் புறப்பட்டார். அப்போது பின் தொடர்ந்த அகில்ராஜ், தனது மோட்டார் சைக்கிளால், ஸ்கூட்டரை இடித்துள்ளார்.

    இதனால் ஐஸ்வர்யா தனது வாகனத்தை நிறுத்தி விட்டு கீழே இறங்கினார். அப்போது அவர் மீது பெப்பர் ஸ்பிரேயை பயன்படுத்தி பெட்ரோலை அகில்ராஜ் ஊற்றியுள்ளார். பின்னர் அவர் மீது லைட்டரை பற்ற வைத்து நெருப்பை வீசினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஐஸ்வர்யா, அபயக்குரல் எழுப்பியவாறு சாலையில் ஓடினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர்,விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். இருப்பினும் தோள் மற்றும் கழுத்து பகுதியில் ஐஸ்வர்யாவுக்கு தீக்காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து அகில்ராஜை கைது செய்தனர். சம்பவ இடத்தில் இருந்து பெட்ரோல் பாட்டில் மற்றும் பொருட்களை போலீசார் கைப்பற்றினர்.

    ஜீவனாம்சம் வழக்கில் கணவர் ரூ.25 ஆயிரத்தை சில்லரையாக மூட்டையில் கட்டி நீதிமன்றத்திற்கு வந்து மனைவியிடம் வழங்கினார். அதை ஏற்க அவரது மனைவி மறுத்து விட்டார். #Divorcecase
    சண்டிகார்:

    பஞ்சாப்-அரியானா மாநில ஐகோர்ட்டில் வக்கீலாக பணிபுரிபவருக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறார்கள். இருவரும் விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

    இந்த நிலையில் வக்கீலின் மனைவி ஜீவனாம்சம் கேட்டு மனுதாக்கல் செய்து இருந்தார். இதையடுத்து மனைவிக்கு மாதம் ரூ.25 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து வக்கீல் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், மாதம் ரூ.25 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்ற கீழ்க்கோர்ட்டு உத்தரவை உறுதி செய்ததுடன், ஏற்கனவே வழங்காமல் இருந்த 2 மாதத்துக்கான ஜீவனாம்சத்தையும் சேர்த்து மொத்தம் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    இதையடுத்து வக்கீல் ரூ.25 ஆயிரத்தை சில்லரையாக மூட்டையில் கட்டி கோர்ட்டுக்கு வந்து மனைவியிடம் வழங்கினார். அதை ஏற்க அவரது மனைவி மறுத்து விட்டார். தனக்கு அவசரமாக பணம் தேவைப்படும் நிலையில் இப்படி சில்லரையாக தருவதும் ஒரு வகையில் கொடுமைதான், சில்லரையை வங்கியில் வாங்க மறுக்கிறார்கள் என்றார்.

    உடனே வக்கீல் இந்த சில்லரைகளை எனது ஜூனியர்களை விட்டு எண்ணித் தரச்சொல்கிறேன். பின்னர் அதை ரூபாய் நோட்டுகளாக மாற்றித் தருகிறேன் என்றார். #Divorcecase
    விவாகரத்து வழக்கில் கோர்ட்டில் ஆஜரான மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    தேனி:

    தேனி பாரஸ்ட் ரோடு 5-வது தெருவை சேர்ந்த துரைப்பாண்டி மகள் ராஜபாலா (வயது27). இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் திருவேங்கடம் பிள்ளைமார் தெருவை சேர்ந்த திருப்பதிராஜ் (36) என்பவருக்கும் கடந்த 7.9.2014-ந் தேதி திருமணம் நடந்தது.

    திருமணத்தின்போது 28 பவுன் நகை, ரொக்க பணம் மற்றும் சீர்வரிசைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. திருமணமான சில மாதங்களிலேயே அவர் அணிந்த அனைத்து நகைகளையும் திருப்பதி ராஜ் குடும்பத்தினர் பறித்து வைத்துக்கொண்டனர். மேலும் கூடுதல் நகை வாங்கி வரச்சொல்லி கொடுமைப்படுத்தி வந்தனர்.

    இதனால் ராஜபாலா தனது கணவரை விட்டு பிரிந்து தேனியில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு வந்து விட்டார். இதனையடுத்து சங்கரன்கோவில் சப்-கோர்ட்டில் விவாகரத்து கேட்டு கணவர் திருப்பதிராஜ் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த விசாரணையில் ராஜபாலா மற்றும் அவரது தந்தை ஆஜராகி கணவருக்கு எதிராக சாட்சியம் அளித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த திருப்பதிராஜ் குடும்பத்தினர் துரைப்பாண்டி வீட்டிற்கு வந்து இனிமேல் கோர்ட்டில் ஆஜராக வந்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டி சென்றனர். இது குறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் புகார் அளிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் தேனி அனைத்து மகளிர் போலீசார் கொலை மிரட்டல் விடுத்த கணவர் திருப்பதிராஜ், மாமியார் சுப்புலட்சுமி, நாத்தனார் கனகவள்ளி உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    ×