என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karnataka HC"

    • 15-ந்தேதிக்கு பிறகு பைக் டாக்ஸிகளுக்கு அனுமதி இல்லை என்று ஐகோர்ட் ஏற்கனவே கூறிவிட்டது.
    • இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் விசாரணையை வருகிற 24-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

    கர்நாடகத்தில் பைக் டாக்ஸி சேவைக்கு போக்குவரத்துத்துறை தடை விதித்தது. இதையடுத்து பைக் டாக்ஸி நிறுவனங்கள் சார்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, பைக் டாக்ஸிக்கு அரசு விதித்த தடை செல்லுபடியாகும் என்று உத்தரவிட்டது. மேலும் 15-ந் தேதிக்கு பிறகு பைக் டாக்ஸிகளுக்கு அனுமதி இல்லை என்று ஐகோர்ட் ஏற்கனவே கூறிவிட்டது.

    இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று பொறுப்பு தலைமை நீதிபதி காமேஸ்வர்ராவ்-நீதிபதி சி.எம்.ஜோஷி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சசிகிரண்ஷெட்டி, 'கர்நாடகத்தில் 4, 3 சக்கர வாகனங்கள் உரிய அனுமதி பெற்று வாடகை அடிப்படையில் டாக்ஸி சேவையை வழங்குகின்றன. ஆனால் இரண்டு சக்கர வாகனங்களை வாடகை வாகனங்களாக மாற்றுவது என்பது சாத்தியமில்லை. இத்தகைய பைக் டாக்ஸிக்கு நாட்டில் 8 மாநிலங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது' என்றார்.

    மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல், 'நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பைக் டாக்ஸி சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடகத்தில் மட்டும் அதற்கு விதிமுறைகளை அரசு வகுக்கவில்லை. இரண்டு சக்கர வாகனங்கள், பெரிய வாகனங்களை விட சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக உள்ளது. இதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் கேடும் குறைவாக இருக்கும். அதனால் இரண்டு சக்கர வாகனங்களை வாடகை அடிப்படையில் பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும். மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்தால் போதும். பதிவெண் பலகைகளின் நிறத்தை பசுமை நிறத்திற்கு மாற்றினால் போதுமானது' என்று வாதிட்டார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் விசாரணையை வருகிற 24-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். இதுகுறித்து மத்திய-மாநில அரசுகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும் போக்குவரத்துறையின் உத்தரவுக்கு தடைவிதிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது. எனவே நாளை மறுநாள் 16-ந்தேதி முதல் கர்நாடகத்தில் பைக் டாக்ஸி சேவை நிறுத்தப்பட உள்ளது.

    • மாநில ஆளும் கட்சியாக பா.ஜ.க. இருந்த போது வருமான வரித்துறை சோதனை நடந்தது
    • 2019 செப்டம்பர் மாதம் சிவகுமார் கைது செய்யப்பட்டார்

    கடந்த மே மாதம் முதல், முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோரை உள்ளடக்கிய காங்கிரஸ் கட்சியின் ஆட்சி கர்நாடகத்தில் நடைபெற்று வருகிறது.

    கடந்த 2017 ஆகஸ்ட் மாதம், பா.ஜ.க.வின் பசவராஜ் பொம்மை முதல்வராக இருந்த போது, இந்திய வருமான வரித்துறை தற்போதைய துணை முதல்வர் டி.கே. சிவகுமாருக்கு தொடர்புடைய புது டெல்லி உட்பட பல இடங்களில் சோதனை நடத்தியது. அதில் ரூ.8 கோடிக்கும் அதிகமாக பணம் கிடைத்ததாகவும் அவரது இல்லத்தில் ரூ.41 லட்சம் கிடைத்ததாகவும் அறிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவுக்கான நீதிமன்றத்தில் அவர் மீது வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு பிரிவில் பதிவு செய்யப்பட்டது. சிவகுமார் மீது உடனடியாக அமலாக்கத்துறையும் (ED) வழக்கு பதிவு செய்தது.

    2019 செப்டம்பர் மாதம் சிவகுமார் கைது செய்யப்பட்டார். பிறகு அவர் ஜாமீனில் வெளிவந்தார்.

    தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக வழக்கு மத்திய புலனாய்வு துறைக்கு (CBI) மாற்றப்பட்டது.

    இதை எதிர்த்து சிவகுமார் தரப்பில் கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் வழக்கை தள்ளுபடி செய்ய கோரியும் விசாரணைக்கு தடை கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    கடந்த ஏப்ரலில் இதன் மீது தீர்ப்பளித்த நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்ய மறுத்தாலும், விசாரணையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க கோரி உத்தரவிட்டார்.

    இதை எதிர்த்து சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதில் தலையிட மறுத்த உச்ச நீதிமன்றம், வழக்கை விரைந்து முடிக்குமாறு கர்நாடகா உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

    இந்நிலையில் இன்று, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி சிவகுமார் தாக்கல் செய்திருந்த மனுவை கர்நாடகா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் இத்தீர்ப்பை அளித்த நீதிபதி கே. நடராஜன், வழக்கை விரைந்து நடத்தி 3 மாதங்களுக்குள் இறுதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளார்.

    இந்த நிகழ்வை டிகே சிவகுமாருக்கு ஏற்பட்ட பின்னடைவாக பார்க்கும் அரசியல் விமர்சகர்கள், அவரது துணை முதல்வர் பதவிக்கு சிக்கல் வருவதற்கு அதிகம் வாய்ப்புண்டு எனவும் கருத்து தெரிவித்தனர். காங்கிரஸ் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கி இந்தியாவின் 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தல் பிரச்சாரங்களில் காங்கிரசுக்கு எதிராக பா.ஜ.கவும் அதன் கூட்டணி கட்சிகளும் இந்த தீர்ப்பை பயன்படுத்தலாம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    முதல் தகவல் அறிக்கையில் சிவகுமார் குடும்பத்தினருக்கு 2013 ஏப்ரலில் சுமார் ரூ.34 கோடி அளவில் இருந்த சொத்து மதிப்பு 2018ல் சுமார் ரூ.163 கோடியாக உயர்ந்ததாகவும் இது அவர்களது வருமானத்திற்கும் அதிகமானது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

    • மனு மீதான விசாரணை நீதிபதி நாகபிரசன்னா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
    • பெண் தரப்பில் ஆஜரான வக்கீல் கூறுகையில், முதல் கணவர் இறந்ததால் பெண் மறுமணம் செய்துள்ளார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டம் ஒசப்பேட்டேயை சேர்ந்தவர் ராஜா உசேன். திருமணமான இவர் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்தநிலையில் ராஜா உசேன் தன்னிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக ஒரு பெண் போலீசில் புகார் அளித்திருந்தார்.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ராஜா உசேன், தன் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    அந்த மனுவில் தனது மனைவிக்கு ஏற்கனவே 8 முறை திருமணமாகி உள்ளதாக கூறி அதிர்ச்சி தகவலை தெரிவித்து இருந்தார். மேலும் ஏற்கனவே 8 பேரை திருமணம் செய்து என்னை மோசடி செய்ததுடன், தன் மீது பொய்யான வரதட்சணை புகார் கொடுத்துள்ளதாகவும், அந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணை நீதிபதி நாகபிரசன்னா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பெண் தரப்பில் ஆஜரான வக்கீல் கூறுகையில், முதல் கணவர் இறந்ததால் பெண் மறுமணம் செய்துள்ளார். அவர் 8 திருமணங்கள் செய்யவில்லை. 4 பேரை மட்டுமே திருமணம் செய்துள்ளார். ஆனால் ராஜா உசேன், தனது மனைவி 8 பேரை திருமணம் செய்ததாக பொய்யான தகவலை பதிவு செய்துள்ளார். இதனால் பெண்ணுக்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. எனவே ராஜா உசேன் மீது மானநஷ்ட வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம் என்றார்.

    இதற்கு மறுப்பு தெரிவித்த ராஜா உசேன் தரப்பு வக்கீல், அந்த பெண் 8 பேரை திருமணம் செய்ததற்கான சாட்சிகள் எங்களிடம் உள்ளது. இதுவரை 5 போ் கோர்ட்டில் ஆஜராகி உள்ளனர். இன்னும் 3 பேர் மட்டும் ஆஜராக வேண்டி உள்ளது. அவர்கள் சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் பெண் தரப்பில் வேண்டுமென்றே பொய்யான தகவல்களை முன் வைக்கப்படுகிறது.

    இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று கூறினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நாகபிரசன்னா, ராஜா உசேன் தரப்பில் கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி கூறினார். மேலும் வழக்கு விசாரணையை வருகிற 27-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • விலை உயர்ந்த பொருட்கள் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
    • ஜெயலலிதாவின் விலை உயர்ந்த பொருட்கள் விரைவில் ஏலம் விடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு கடந்த 2014-ம் ஆண்டு பெங்களூரு தனிக்கோர்ட்டு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அவர்கள் இதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் அவர்கள் 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

    இதை எதிர்த்து கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. கடந்த 2017-ம் ஆண்டு கர்நாடக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து, தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.

    சுப்ரீம் கோர்ட்டில் இந்த தீர்ப்பு வந்தபோது, ஜெயலலிதா அதற்கு முன்பே மரணம் அடைந்துவிட்டதால், அவரது பெயர் தீர்ப்பில் இருந்து நீக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து சசிகலா உள்பட 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்தனர். முன்னதாக சொத்து குவிப்பு புகாரை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் ஜெயலலிதா வீட்டில் சோதனையிட்டு, தங்க-வைர நகைகள், விலை உயர்ந்த பட்டு புடவைகள், செருப்புகள், கம்ப்யூட்டர்கள் உள்பட பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இந்த விலை உயர்ந்த பொருட்கள் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஜெயலலிதா உள்ளிட்டோரின் பொருட்களை ஏலம் விடுவதற்காக மாநில சிறப்பு வக்கீல் கிரண் ஜவலியை அரசு சிறப்பு வக்கீலாக நியமனம் செய்து உத்தரவிட்டார். இதன் மூலம், ஜெயலலிதாவின் விலை உயர்ந்த பொருட்கள் விரைவில் ஏலம் விடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், ஜெயலலிதா சொத்து வழக்கு தொடர்பாக கர்நாடகா சிறப்பு நீதிமன்றத்தில் ஜெ.தீபா மனு தாக்கல் செய்துள்ளார். தீபா தரப்பு வழக்கறிஞர் சத்யகுமார் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கர்நாடக கருவூலத்தில் உள்ள கோடிக்கணக்கு மதிப்பிலான ஜெயலலிதாவின் சொத்துகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், ஜெயலலிதாவின் வாரிசாக தன்னை ஏற்றுக் கொண்டு ஏற்கனவே பல்வேறு சொத்துக்களை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியிருப்பதாகவும், இந்த கருவூலத்தில் உள்ள கோடிக்கணக்கான சொத்துக்களையும் என்னிடம் தரவேண்டும் எனவும் வாரிசு என சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் நகலை மனுவோடு இணைத்து தீபா தாக்கல் செய்துள்ளார்.

    இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று இறுதி தீர்ப்பு வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். அதில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் கருவூலத்தில் உள்ள ஜெயலலிதாவின் சொத்துக்களை தீபாவிடம் ஒப்படைக்க முடியாது என மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். ஏதேனும் மேல்முறையீடு செய்யவேண்டும் என விரும்பினால் உச்சநீதிமன்றத்தை நாடலாம் என தீபாவுக்கு நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்.

    • ஒரு பெண் தாக்கல் செய்ததால் மட்டுமே இந்த இடமாற்ற மனுவை ஏற்க முடியாது என்றும், உண்மைகளின் சமநிலையான மதிப்பீடு தேவை என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.
    • வழக்கை மாற்றினால் பிரதிவாதி-கணவர் அதிக சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று கண்டறிந்து நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

    கர்நாடகா மாநிலத்தில் பெண் தொடர்ந்த விவாகரத்து வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணையின்போது, சமூகத்தில் பாலின நடுநிலையின் அவசியத்தை வலியுறுத்தி, விவாகரத்து வழக்கை மாற்றக் கோரிய மனைவியின் மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் (HC) நிராகரித்துள்ளது.

    ஒரு பெண் தாக்கல் செய்ததால் மட்டுமே இந்த இடமாற்ற மனுவை ஏற்க முடியாது என்றும், உண்மைகளின் சமநிலையான மதிப்பீடு தேவை என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது.

    நீதிபதி சிலாகூர் சுமலதாவின் ஒற்றை நீதிபதி அமர்வு இதுகுறித்து கூறுகையில், " உண்மையில், பெரும்பாலான சூழ்நிலைகளில் பெண்கள் முதன்மையாக பாதிக்கப்பட்டவர்கள் தான். ஆனால் அதற்காக பெண்களின் கொடுமையால் ஆண்கள் பாதிக்கப்படுவதில்லை என்று அர்த்தமல்ல. எனவே, சமூகத்தில் பாலின-நடுநிலை அவசியம் உள்ளது."

    விவாகரத்து மனுவை, சிக்கமகளூரு மாவட்டம், நரசிம்மராஜபுராவில் உள்ள மூத்த சிவில் நீதிபதி நீதிமன்றத்திலிருந்து, சிவமோகா மாவட்டம், ஹோசனகராவில் உள்ள மூத்த சிவில் நீதிபதி நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு மனுதாரர் மனைவி கோரினார்.

    அந்த மனுவில், "நீதிமன்ற விசாரணைகளில் தவறாமல் கலந்துகொள்வதற்காக தனது வீட்டிலிருந்து நரசிம்மராஜபுரத்திற்கு 130 கிலோமீட்டர் தூரம் வருவதற்கு பல சிரமங்களை எதிர்க்கொள்ள வேண்டி இருப்பதாக" குறிப்பிட்டிருந்தார்.

    இந்த மனுவை எதிர்த்த கணவர்," தான் ஒன்பது மற்றும் ஏழு வயதுடைய இரண்டு மைனர் குழந்தைகளையும் தன்னுடன் வைத்து வளர்த்து வருகிறேன்.

    வழக்கை மாற்றுவது தனக்கு கூடுதல் சுமைகளை ஏற்படுத்தும் என்றும், இது குழந்தைகளின் வழக்கத்தை சீர்குலைக்கும் என்றும், அன்றாடப் பொறுப்புகளை நிர்வகிப்பதில் தனது சிரமங்கள் அதிகரிக்கும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

    தந்தையின் பராமரிப்பில் இருந்த குழந்தைகளின் நலன் உட்பட ஒட்டுமொத்த சூழ்நிலைகளையும் நீதிமன்றம் மதிப்பிட்ட நிலையில், "மாற்று மனுவை ஒரு பெண் தாக்கல் செய்வதால் மட்டுமே, கோரப்பட்டபடி வழக்கை மாற்ற முடியாது" என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

    "பிரதிவாதி- கணவர் குழந்தைகளை கவனித்துக்கொள்வதாலும், குழந்தைகள் அவரது பாதுகாப்பு இருப்பதாலும், நீதிமன்றத்தில் ஆஜராவதில் கணவர் எதிர்கொள்ளும் சிரமம் மனுதாரர் மனைவியை விட அதிகமாக இருக்கும்" என்று கூறி கணவருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.

    மேலும், "சமத்துவம் அதன் உண்மையான அர்த்தத்தில் இருக்க வேண்டும், இரு பாலினத்தையும் பாதிக்கக்கூடாது. பெண்களைப் பாதுகாப்பதற்கான நமது முயற்சிகள் எவ்வளவு பாராட்டத்தக்கதாக இருந்தாலும், நமது சமூகத்தில் ஆண்கள் எதிர்கொள்ளும் சவால்களை நாம் கவனிக்காமல் விடக்கூடாது," என்று நீதிமன்றம் குறிப்பிட்டதது.

    இதன் விளைவாக, வழக்கை மாற்றினால் பிரதிவாதி-கணவர் அதிக சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று கண்டறிந்து நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

    ×