என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    காங்கிரசை இழிவுபடுத்தும்  போக்கு தொடர்வது நல்லதல்ல- மாணிக்கம் தாகூர் எம்.பி. பரபரப்பு அறிக்கை
    X

    காங்கிரசை இழிவுபடுத்தும் போக்கு தொடர்வது நல்லதல்ல- மாணிக்கம் தாகூர் எம்.பி. பரபரப்பு அறிக்கை

    • கூட்டணியில் எந்தக் கட்சிக்கு தலைமை தாங்கும் தகுதி உள்ளது என்பது போன்ற கேள்விகளை அவர் எழுப்பி உள்ளார்.
    • தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் ஏற்கனவே வலியுறுத்தி வருகிறார்.

    சென்னை:

    தமிழ்நாட்டை போலவே புதுவையிலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள மனஸ்தாபங்கள் பிரச்சனையை உருவாக்கி உள்ளது.

    புதுவையை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிதான் கூட்டணி கட்சிகள் கூட்டத்தை கூட்டி தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களை பேசும்.

    ஆனால் இந்த முறை கடந்தசில தினங்களுக்கு முன்பு தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் தலைமையில் கூட்டணி கட்சிகள் கூட்டம் கூட்டப்பட்டது. அந்த கூட்டத்துக்கு காங்கிரசுக்கு அழைப்பு விடுக்கவில்லை.

    இதனால் புதுவையில் கூட்டணிக்கு தலைமை தாங்குவது யார் என்பதில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தி.மு.க. செயல்பாட்டுக்கு நாராயணசாமி தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

    புதுச்சேரி அரசியல் களத்தில் கூட்டணி குறித்த விவாதங்கள் சூடுபிடித்து உள்ள நிலையில், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளத்தில் எழுப்பி உள்ள கேள்விகள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 2014 லோக்சபா தேர்தல் முடிவுகளைச் சுட்டிக்காட்டி, கூட்டணியில் எந்தக் கட்சிக்கு தலைமை தாங்கும் தகுதி உள்ளது என்பது போன்ற கேள்விகளை அவர் எழுப்பி உள்ளார்.

    அவரது எக்ஸ் தள பதிவில், "கூட்டணியில் 8 சதவீதம் வாக்கு வைத்து உள்ள கட்சி தலைமை தாங்குமா அல்லது 26 சதவீதம் உள்ள கட்சி தலைமை தாங்குமா? ஏன் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை இழிவாக பேச வேண்டும்? தொடரும் இந்த முறை நல்லது இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், 2014-ம் ஆண்டு புதுச்சேரி லோக்சபா தேர்தலில், அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஆர். ராதா கிருஷ்ணன், இந்திய தேசிய காங்கிரஸின் வேட்பாளர் வி.நாராயணசாமியை தோற்கடித்து வெற்றி பெற்றார். ராதாகிருஷ்ணன் 2,55,826 வாக்குகளைப் பெற்று, 34.57 சதவீதம் வாக்கு சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்தார்.

    அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நாராயணசாமி 1,94,972 வாக்குகளைப் பெற்று (26.35 சதவீதம்) 2-ம் இடத்தைப் பிடித்தார். அ.தி.மு.க. வேட்பாளர் எம்.வி.ஓமலிங்கம் 1,32,657 வாக்குகளுடன் (17.93 சதவீதம்) மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

    தி.மு.க. வேட்பாளர் ஏ.எம்.எச். நஸீம் 60,580 வாக்குகளைப் பெற்று (8.19 சதவீதம்) நான்காம் இடத்தைப் பிடித்தார். இந்த புள்ளி விவரங்களை பதிவு செய்து மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    வருகிற சட்டமன்றத் தேர்தல்களில், அதிக வாக்கு வங்கியைக் கொண்ட காங்கிரஸ் கட்சியை விட, குறைந்த வாக்கு வங்கியைக் கொண்ட தி.மு.க கூட்டணியில் தலைமை வகிக்க முயற்சிப்பதாக மறைமுகமாக அவர் சாடியுள்ளார்.

    காங்கிரஸ் கட்சியை கூட்டணியில் இழிவாகப் பேசும் போக்கு தொடர்வது நல்லதல்ல என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.

    தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் ஏற்கனவே வலியுறுத்தி வருகிறார். இந்தநிலையில், புதுச்சேரியில் கூட்டணி தலைமை குறித்த மாணிக்கம் தாகூரின் கருத்து, புதுச்சேரி மற்றும் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×