search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இலங்கை கடற்படை கைது செய்த 15 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள்- மத்திய மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
    X

    இலங்கை கடற்படை கைது செய்த 15 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள்- மத்திய மந்திரிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

    • தமிழ்நாட்டில் உள்ள மீனவ சமூகத்தினரிடையே மன உளைச்சலையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
    • இந்திய-இலங்கைக் கடல் எல்லையை ஒட்டிய பகுதிகளில் மீன்பிடித் தொழிலை நம்பியே பல்லாயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் அடங்கியுள்ளது.

    சென்னை:

    தமிழக மீனவர்கள் 15 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடத் தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுக்க வேண்டுமென்று கோரி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு இன்று (திங்கட்கிழமை) கடிதம் எழுதியுள்ளார்.

    தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 மீனவர்கள் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் 9-7-2023 அன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். அதோடு அவர்களது மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் தமிழ்நாட்டில் உள்ள மீனவ சமூகத்தினரிடையே மன உளைச்சலையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்திய-இலங்கைக் கடல் எல்லையை ஒட்டிய பகுதிகளில் மீன்பிடித் தொழிலை நம்பியே பல்லாயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் அடங்கியுள்ளது.

    இதை தாங்கள் (மத்திய மந்திரி ஜெய்சங்கர்) நன்கு அறிவீர்கள். மீனவர்கள் தங்களது குடும்பத்தையும், சமூகத்தையும் பராமரிக்க மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியுள்ளனர்.

    ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இலங்கைக் கடற்படையினரால் இதுபோன்று கைது செய்யப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவது மீனவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் ஆழ்ந்த வேதனையிலும், நிச்சயமற்ற தன்மையிலும் ஆழ்த்தியுள்ளது.

    இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நமது மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து மீன்பிடிப் படகுகளைத் திரும்ப ஒப்படைக்கவும் மத்திய அரசு, இலங்கை அதிகாரிகளுடன் தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    தற்போது இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் சுமூகமான நட்புறவு பேணப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தூதரக நடவடிக்கைகள் மூலமாகத்தான் மீனவர்களின் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்திடவும், சுமூகத் தீர்வினை எய்திடவும் இயலும்.

    எனவே இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இருந்து சாதகமான பதிலை எதிர்பார்க்கிறேன்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×