search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kanamalay"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒரு வாரமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வருகிறது.
    • வானிலை மையம் சிகப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வருகிறது.

    கடந்த 15-ந் தேதி முதல் நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மேலும் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிக கனமழை பெய்யும் என வானிலை மையம் சிகப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தென்காசி மாவட்டத்திற்கு வருகிற 21, 22-ந் தேதிகளில் ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை, தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகள் மட்டுமின்றி அணைப்பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    இன்று காலை வரை அதிகபட்சமாக கொடுமுடியாறில் 45 மில்லி மீட்டரும், கடம்பூரில் 43 மில்லி மீட்டரும்,பாபநாசத்தில் 38 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. இதேபோல் சேர்வலாறு, மணிமுத்தாறு, களக்காடு, தென்காசி, ஆய்க்குடி, ராதா புரம், கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, நம்பி ஆறு, அடவிநயினார், கயத்தாறு, கழுகுமலை, கோவில்பட்டி, எட்டயபுரம், காடல்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மழை பெய்தது.

    தொடர்ந்து நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே மணிமுத்தாறு, தலையணை, மாஞ்சோலை, நம்பிகோவில், பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த தடை மறு உத்தரவு வரும்வரை தொடரும்.

    தாமிரபரணி ஆறு, கடனாநதி, சிற்றாறு, நம்பி ஆறு, அனுமன் நதி உள்ளிட்ட ஆறுகள், ஏரிகள், குளங்கள், நீர்நிலைகள் மற்றும் தற்காலிக நீர்நிலைகளுக்குள் செல்ல வேண்டாம். மேலும் கால்நடைகளையும், வாகனங்களையும் அங்கு கொண்டு செல்ல வேண்டாம் என நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார்.

    மேலும் கடற்கரை யோரங்களில் அலையின் சீற்றம் அதிகம் இருக்கும் என்பதால் அங்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண் டுள்ளார்.

    கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே பேரிடர் மீட்புபடையினர் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். அவர்கள் ஆயுதப்படை மைதானத்தில் முகாமிட்டு உள்ளனர்.

    வருவாய் துறையினரும் தயார் நிலையில் இருக்கவும், நீர் நிலைகள், குளங்கள், தாமிரபரணி ஆறு ஆகியவற்கை கண்காணிக்க வும் நெல்லை, தூத்துக்குடி கலெக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    நெல்லை மாவட்டத்தில் மின்சாரம் துண்டிக்கப் பட்டாலோ, மின்வயர்கள் அறுந்து கிடந்தாலோ உடனடி யாக மின்வாரியத்துக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட பேரிடர் மேலாண்மை உதவி மையத்தையும், தீயணைப்பு மையத்தையும் தொடர்பு கொள்ளவும் கேட்டுக் கொள்ளபட்டுள்ளது.

    குற்றாலம் மெயினருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள அருவிகளிலும், அணைக்கட்டு பகுதிகளிலும் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை மறு உத்தரவு வரும் வரை தொடரும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும் தென்காசி மாவட்டத்தில் கனமழை மற்றும் அதீத கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கை யுடனும், பாதுகப்புடனும் இருக்கவும் கலெக்டர் கமல் கிஷோர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    மழையினால் பாதிப்பு ஏற்பட்டால் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்1077, 04633-290 548 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
    • குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. நெல்லை சந்திப்பு, டவுன், வண்ணார்பேட்டை, பேட்டை, சமாதானபுரம், கே.டி.சி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் விடிய விடிய மழை பெய்தது.

    மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக குற்றாலம் மெயினருவியில் இரவில் அதிக அளவு தண்ணீர் வரத்து ஏற்பட்டது. இதனால் இரவில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவிகளில் மிதமான தண்ணீர் விழுந்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கழுகுமலை, கோவில்பட்டி, கடம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. ஓட்டப்பிடாரத்தில் நேற்று மாலையில் கனமழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 17 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    தூத்துக்குடியில் பெய்த மழையால் உப்பளங்களில் தண்ணீர் தேங்கியது. மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரையிலான தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலை கிராமங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி

    களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.இதனால் அணைக்கரை தரைப்பாலம் மூழ்கியது.

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மூணாம்சேத்தி கிராமத்தை சேர்ந்த தொழிலாளி சந்திரசேகர் நேற்று இரவு குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது பெய்த கனமழையால் மேற்கூரையின் சிமெண்ட் காரை பெயர்ந்து விழுந்ததில் சந்திரசேகர் பலத்த காயம் அடைந்தார்.

    திருச்சி மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. மாலையில் வானம் மப்பும் மந்தார முமாக காணப்பட்டது. பின்னர் இரவில் மழை பெய்யத் தொடங்கியது. திருச்சி மாநகரில் விடிய விடிய சாரல் மழை பெய்தது.

    தஞ்சை, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுக்கூர், திருவோணம், பேராவூரணி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நாகை, வேதாரண்யம், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விடிய விடிய மழை வெளுத்து வாங்கியது. தொடர்ந்து இன்று காலையிலும் மழை இடைவிடாமல் பெய்தது.

    தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் மழையால் மூலவைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்ந்தது. நேற்று 105 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 113.16 அடியாக உயர்ந்துள்ளது.

    ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் ராமேசுவரம் கோவில், அப்துல்கலாம் மணி மண்டபம், பஸ் நிலையம் மற்றும் முக்கிய சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது.

    ராமேசுவரத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மதுரை பெரியார் பஸ் நிலையம், சிம்மக்கல், கோரிப்பாலையம், புதூர், ஒத்தக்கடை, திருப்பரங்குன்றம், அவனியாபுரம், வில்லாபுரம் ஆகிய பகுதிகளில் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.

    சேலம் ஆத்தூர், நத்தக்கரை, சங்ககிரி, கரியகோவில், மேட்டூர், தம்மம்பட்டி, கெங்கவல்லி உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழை பெய்தது. கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் கிராமத்தில் உள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரச மரம் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் வேருடன் சாய்ந்தது. புதுச்சேரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இன்று காலை முதல் சாரல் மழைபெய்து வருகிறது.

    ×