என் மலர்
நீங்கள் தேடியது "Delta districts"
- மேகதாது பகுதி இரண்டு மலைகளுக்கு நடுவில் உள்ளது.
- தமிழக மலைப்பகுதியில் பெய்யும் மழை நீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூருக்கு நேரடியாக வருகிறது.
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உற்பத்தியாகும் காவிரி ஆறு அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி ஆகிய அணைகளை நிரப்புகிறது. பின்னர் அங்கிருந்து திறக்கப்படும் உபரிநீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு ஒகேனக்கல் வழியாக தமிழகத்துக்குள் நுழைகிறது. பின்னர் அங்கிருந்து பயணிக்கும் காவிரி ஆறு மேட்டூர் அணையை வந்தடைகிறது.
மேட்டூர் அணை மூலம் தமிழகத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், கரூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நாகை, கடலூர், மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
இதற்காக ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் இருப்பை பொறுத்து மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக விளைச்சல் நடைபெறும். இது தவிர பல்வேறு கூட்டு குடிநீர் திட்டப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உற்பத்தியாகும் காவிரி ஆறு மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் கடலில் கலக்கிறது.
இதற்கிடையே தமிழக-கர்நாடகா இடையே நீர்பங்கீடு பிரச்சனை சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. மழைக்காலங்களில் உபரிநீரை காவிரியில் திறந்து விட்டு தமிழகத்துக்கான பங்கீட்டை அளவுக்கு அதிகமாக வழங்கி விட்டதாக ஒவ்வொரு முறையும் கர்நாடக அரசு கூறி வருகிறது.
இந்த நிலையில் பெங்களூரு மாநகரின் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காக காவிரி ஆற்றின் குறுக்கே ராம்நகர் மாவட்டம் மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு புதிய அணையை கட்ட 2018-ம் ஆண்டு மத்திய நீர்வள ஆணையத்திடம் விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்தது. இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.14 ஆயிரத்து 500 கோடியாகும். மேலும் இந்த அணைக்காக 4,716 ஹெக்டேர் காடுகளும், 280 ஹெக்டேர் வருவாய் நிலங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர மேகதாது அணையில் 67 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கவும், இதன் மூலம் பாசனம் மற்றும் குடிநீர், 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவும் முடிவு செய்துள்ளனர்.
கர்நாடகாவின் மேதாது திட்டத்துக்கு தமிழக அரசு மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேற்று நீதி பதி தீர்ப்பு வழங்கினார்.
அதில் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்தால், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து சட்டப்படியான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு முன்னெடுக்கலாம், எனவே கர்நாடக அரசு கடந்த 2018-ம் ஆண்டு சமர்பித்த விரிவான திட்ட அறிக்கையை நிராகரித்து திருப்பி அனுப்ப மத்திய நீர்வள ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரிய தமிழ்நாடு அரசு உள்ளிட்ட மனுக்கள் உரிய நேரத்துக்கு முன்பே தாக்கல் செய்துள்ளதை கருத்தில் கொண்டு மனுக்கள் முடித்து வைத்து தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று அந்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது. இந்த தீர்ப்புக்கு கர்நாடக அரசு வரவேற்று உள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே. சிவகுமார் கூறும்போது, மேகதாது திட்டம் கர்நாடகாவை விட தமிழ்நாட்டிற்கு அதிக நன்மை பயக்கும். கடினமான காலங்களில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட இந்த திட்டம் உதவும். எனவே இந்த தீர்ப்பு தமிழ்நாட்டிற்கு கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும் என விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இதுகுறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாவது:-
1924-ம் ஆண்டில் அப்போதைய சென்னை மாநில அரசுக்கும் மைசூர் அரசுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி கர்நாடகம் 5 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கரில் மட்டுமே காவிரியில் விவசாயம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. தமிழகத்தில் 30 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்ய அந்த ஒப்பந்தம் அனுமதி வழங்கியது.
அதேபோன்று 400, 500 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு கிடைத்தது. மேலும் அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் மேட்டூரில் தமிழக அரசும், கிருஷ்ணராஜ சாகரில் கர்நாடக அரசும் அணைகளை கட்டிக் கொண்டது.
அதன்படி 50 ஆண்டுகள் நமக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் தண்ணீர் கிடைத்தது. அதன் பின்னர் 1974 முதல் 78 வரை தமிழக அரசியல்வாதிகள் தூங்கிக் கொண்டிருந்ததால் கர்நாடகம் கபினி, ஹேரங்கி, ஹேமாவதி, ராம தீர்த்தம், லட்சுமண தீர்த்தம் ஆகிய 5 அணைகளை கட்டி இன்றைக்கு 28 லட்சம் ஏக்கரில் விவசாயம் செய்கிறது.
நமது சாகுபடி பரப்பளவு சுருங்கியது. பின்னர் தமிழகத்தில் ஏற்பட்ட வறட்சி காரணமாக விவசாயிகளும், தமிழக அரசும் விழித்துக் கொண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த காரணத்தினால் 2007-ல் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.
அதன் பின்னர் 2018 உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் தமிழகத்துக்கு காவிரியில் 2.5 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என தீர்ப்பளித்தது. ஆனால் தண்ணீர் அவர்கள் முறையாக திறப்பதில்லை.
தற்போது மேகதாதுவில் அணை கட்டினால் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும். அதன் மூலம் பெட்ரோல், டீசல், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை இங்கு செயல்படுத்துவதற்கு மத்திய அரசுக்கு வசதியாக இருக்கும்.
மேகதாது பகுதி இரண்டு மலைகளுக்கு நடுவில் உள்ளது. இந்த மலையின் ஒரு பகுதி கர்நாடகத்திலும் இன்னொரு பகுதி தமிழகத்திலும் உள்ளது. அதன் நீர் வழித்தடம் கர்நாடகாவில் உள்ளது.
தற்போது தமிழக மலைப்பகுதியில் பெய்யும் மழை நீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூருக்கு நேரடியாக வருகிறது. மேகதாதுவில் அணை கட்டும் போது அந்த நீர் நமக்கு வராது.
அதுமட்டுமல்லாமல் காவிரியில் நமக்கு கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதே அளவாக உள்ளது. தற்போது மேகதாது அணை அந்த வழித்தடத்தில் கட்டப்படுவதால் நமக்கு வரும் தண்ணீரின் அளவும் தெரியாமல் போய்விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:-
பாராளுமன்றத்தில் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவோடு காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இது உச்சநீதிமன்றத்துக்கு இணையான அதிகாரம் உடையது. இதற்கு முன்பு தமிழகம் மற்றும் கர்நாடகா அரசுகள் காவிரிநீர் தொடர்பான பிரச்சனை வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து காவிரி நடுவர் மன்றத்தில் முறையிடுங்கள் என கூறியது வரலாறு. அப்படி இருக்கையில் தற்போது மேகதாது அணை கட்ட திட்ட அறிக்கைக்கு கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதிக்க மறுத்தது அரசியல் சட்ட சாசனத்தை மீறும் செயலாகும்.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் இதுவரை எந்த பதிலும் அளிக்காமல் மவுனமாக உள்ளார். மேகதாதுவில் அணை கட்டினால் சென்னை உள்பட 22 மாவட்டங்களில் குடிநீர் ஆதாரம் பறிபோகும். 25 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாலைவனமாகி விடும். டெல்டா விவசாயிகள் அகதிகளாக வெளியேறும் சூழ்நிலை உருவாகும்.
எனவே தமிழக முதலமைச்சர் உடனடியாக அமைச்சரவை கூட்டத்தை கூட்டி மேகதாது விவகாரம் தொடர்பாக உறுதியான முடிவை எடுக்க வேண்டும். இந்த பிரச்சனையில் தமிழக அரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய போகிறதா? சட்டப்படி என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம் ? என்பதை உடனே தெளிவுப்படுத்த வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் கர்நாடக அரசை மேகதாதுவில் அணை கட்ட விடக்கூடாது. அதனை தடுத்து தமிழகத்தின் உரிமையை மீட்க உறுதியான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கனமழை காரணமாக குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது.
- தொடர் மழையால் பல்வேறு பகுதிகளில் 40 நாட்களே ஆன இளம் சம்பா இளம் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.
திருவாரூர்:
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது.
திருவாரூர் நகரத்துக்குட்பட்ட அழகிரி காலனி பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் கனமழை காரணமாக குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. மேலும் இங்குள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர். மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் வீட்டுக்குள் புகுந்த மழைநீருடன் கழிவு நீரும் கலந்து வந்துள்ளது. இந்த தண்ணீரை பொதுமக்கள் வாளிகளை கொண்டு அகற்றி வருகின்றனர்.
மேலும் மழைநீர் புகுந்ததால் வீடுகளில் இருந்த மின்சாதன பொருட்கள் உள்பட அனைத்து பொருட்களும் பழுதாகி விட்டன. இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், பருவமழை காலங்களில் இது போல் பலமுறை மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. நாங்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் இந்த முறையும் தண்ணீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இனியாவது அதிகாரிகள் வீடுகளுக்குள் மழைநீர் புகாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மழை நீரை வடிய வைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் தொடர் மழையால் நன்னிலம், பூந்தோட்டம், முடிகொண்டான், கொல்லுமாங்குடி, குடவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 40 நாட்களே ஆன இளம் சம்பா இளம் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.

ஒரு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் செலவிட்டு சாகுபடி செய்துள்ள நிலையில் வயலில் மழைநீர் தேங்கியதால் பயிர்கள் அழுக தொடங்கி விட்டன. இந்த ஆண்டு சம்பா சாகுபடி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
எனவே உடனடியாக வேளாண்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட விவசாய நிலத்திற்கு நேரடியாக சென்று மழை நீரை வடிய வைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும், மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே புதுத்துறை கன்னி கோவில் தெருவை சேர்ந்த தாமஸ் என்பவரது தொகுப்பு வீடு தொடர் மழை காரணமாக நேற்று இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த தாமஸ்சின் மகள் சுவேதா (வயது 15), மகன் சந்தோஷ்குமார் (19) ஆகிய இருவரும் காயம் அடை ந்தனர். இதில் சுவேதாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டதால், அவர் சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே விழுதியூர் ஊராட்சி ஆதிதிராவிடர் தெருவில் சுமார் 70 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் கனமழை காரணமாக குடியிருப்புகளை சுற்றி மழைநீர் வடியாமல் குளம் போல் தேங்கி கிடக்கிறது. கழிவுநீரும் கலந்துள்ளதால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் இருப்பதாகவும், விஷ பூச்சிகள், பாம்புகள் வீடுகளுக்குள் புகுந்து விடுவதாகவும் இப்பகுதி மக்கள் அச்சத்துடன் தெரிவித்தனர்.
மேலும் பால், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடப்பதாக வேதனையுடன் கூறினர். மேலும் மழையினால் இங்கு 2 குடிசை வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைநீர் வடிய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் தஞ்சை மாவட்டம் பூதலூர் பகுதியில் 13 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. தற்போது இந்த குறுவை நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்தன. ஆனால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும் வயலில் பயிர்கள் சாய்ந்து விட்டதால் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் கடன் வாங்கி பயிர் செய்த நெல் அறுவடை செய்ய முடியாமல் போனதால் கண்ணீரில் தவிக்கின்றனர். எனவே தமிழக அரசு ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
- அவ்வப்போது மழையும் பெய்ததாலும் குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.
- கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிக பரப்பளவில் நடவு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சாவூா்:
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு வழக்கம்போல் குறுவை சாகுபடிக்காக வழக்கமான தேதியில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது.
மேட்டூர் அணை திறந்ததும், குறுவை சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்ள ஏதுவாக தமிழக அரசால் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டமும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, எந்திரம் மூலம் நடவு செய்யும் விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியமாக ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் வழங்குவதாக அறிவித்தனர். மேலும், குறுவை சாகுபடிக்கு தேவையான நெல் விதைகள், உரங்கள் ஆகியவற்றை போதிய அளவு இருப்பு வைத்து தனியார் உரக்கடைகள் மற்றும் வேளாண்மை துறையின் கிடங்குகளில் வைத்து விவசாயிகளுக்கு விற்பனை செய்து வந்தனர்.
இந்த நிலையில் வேளாண்மை துறையின் மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழாண்டு 1 லட்சத்து 93 ஆயிரத்து 771 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, வேளாண் அலுவலர்கள் விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வந்தனர். இதை தொடர்ந்து, கடந்த மாதம் (ஜூலை) 31-ந்தேதி வரை தஞ்சாவூர் மாவட்ட த்தில் குறுவை பருவத்தில் இலக்கை மிஞ்சி 1 லட்சத்து 95 ஆயிரத்து 130 ஏக்கரில் நடவு செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு 1 லட்சத்து 52 ஆயிரத்து 646 ஏக்கரில் குறுவை நெல் நடவு செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு 42 ஆயிரத்து 484 ஏக்கர் கூடுதல் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. மேலும், டெல்டாவின் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் கடந்த ஆண்டை விட நிகழாண்டு கூடுதல் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது:- டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக உரிய நேரத்தில் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டதாலும், அவ்வப்போது மழையும் பெய்ததாலும் குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். மேலும், குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டதும், விவசாயிகளுக்கு ஊக்கம் அளித்தது. சாகுபடிக்கு தேவையான பயிர் கடனும் கூட்டுறவு சங்கத்தால் வழங்கப்படுவதால், கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிக பரப்பளவில் நடவு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர் என்றனர்.
இதுகுறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் கூறும்போது:- டெல்டா மாவட்டங்களில் ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும் என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டதால், விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உரங்கள் உள்ளிட்ட இடு பொருட்களை பற்றாக்குறை இல்லாமல் வெளியில் இருந்து கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வினியோகம் செய்தோம்.
அதன்படி, இந்த ஆண்டு இலக்கை தாண்டி சாகுபடியை விவசாயிகள் செய்துள்ளனர். அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை அவ்வப்போது வழங்கி வருகிறோம் என்றனர்.
- மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
- நேற்று மாலை முதல் இரவு வரை கனமழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் உள்ள வயல்களில் சம்பா, தாளடி பயிர்கள் மூழ்கி உள்ளன.
தஞ்சாவூர்:
தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது 2 முதல் 4 மணி நேரம் தொடர் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை சுமார் 5 மணி நேரம் விடாது 177 மி.மீ கனமழை பெய்தது.
இந்நிலையில் நேற்றும் மாலை 1 மணி நேரம் கனமழை பெய்தது. தற்போது குறுவை அறுவடை பணிகள் முடிந்து சம்பா, தாளடி நடவுப் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர்
இந்நிலையில் இந்த கனமழையால் தஞ்சை மாவட்டம் முழுவதும் சுமார் 1000 ஏக்கரில் சம்பா, தாளடி இளம் நாற்றுகள் முற்றிலும் மூழ்கி கிடக்கிறது. முறையாக தூர்வாரப்படாததால் வடிகால் வாய்க்கால்களில் தண்ணீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் இந்த பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
மாவட்டத்தில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்த நிலையில் மதியம் முதல் சுமார் 2 மணி நேரம் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் தியாகராஜர் கோவிலின் கிழக்கு கோபுர வாசல் வழியாக மழைநீர் கோவிலுக்குள் புகுந்து குளம் போல் தேங்கியது.
இதைப்போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளான மன்னார்குடி, நன்னிலம், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகள் உள்ள குடியிருப்புகள் மற்றும் வயல்களில் மழைநீர் சூழ்ந்தது. மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சம்பா, தாளடி, இளம் நாற்றுகள் மூழ்கி கிடப்பதால் விவசாயிகள் தண்ணீரை வடிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை முதல் இரவு வரை கனமழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் உள்ள வயல்களில் சம்பா, தாளடி பயிர்கள் மூழ்கி உள்ளன.
ஆனால், போர் செட் மூலமும், மேட்டு பகுதிகளில் சம்பா, தாளடி சாகுபடி செய்த விவசாயிகளும் இந்த மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் கடல் சீற்றம் காரணமாக வேதாரண்யம், கோடிக்கரை, கீச்சாங்குப்பம் உள்ளிட்ட 14-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் 4 நாட்களுக்கும் மேலாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.
விடிய விடிய மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சீர்காழி, கொள்ளிடம் பகுதிகளில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீர்காழி நகரின் தாழ்வான பகுதியிலுள்ள 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தது
சீர்காழி வ.உ.சி நகரில் ரவி என்பவரின் கூரை வீடு இடிந்து விழுந்தது. சில இடங்களில் சாலை மற்றும் தெருக்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.
திருமுல்லைவாசல், தொடுவாய் உள்ளிட்ட 4-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக மீன் பிடிக்க செல்லவில்லை.
கொள்ளிடம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக வடிகால் வாய்க்கால்களின் மூலம் மழைநீர் கடலில் சென்று கலப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது
மாவட்டம் முழுவதும் 12 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி, இளம் நாற்றுகள் வயல்களில் மழைநீரில் மூழ்கி கிடப்பதாகவும் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யாமல் இருந்தால் இந்த பயிர்களை காப்பாற்ற இயலும் என்றும், ஆனால் தாழ்வான பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் உள்ள வயல்களில் மூழ்கி உள்ள பயிர்களை காப்பாற்றுவது சற்று கடினம் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
டெல்டா மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் சுமார் 7 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி, இளம்நாற்றுகள் மூழ்கி உள்ளன.
ஏற்கனவே குறுவை அறுவடை நேரத்தில் பெய்த மைழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூடுதல் ஈரப்பதம் காரணமாக நெல்லை விற்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்த சம்பா, தாளடி, இளம்நாற்றுகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தொடர் மழை காரணமாக நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும், தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.
- டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதால் சம்பா, தாளடி இளம் பயிர்கள் மூழ்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
- குறுவை அறுவடை இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதால் ஏற்கனவே அறுவடை செய்யப்பட்ட நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
தஞ்சாவூர்:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்ய தொடங்கியது.
தஞ்சை மாவட்டத்தில் இரவில் விட்டு விட்டு மழை பெய்தது. ஆனால் அதிகாலை 4 மணியில் இருந்து இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. தஞ்சை, வல்லம், பாபநாசம், பேராவூரணி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து 6 மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டி வருகிறது.
திருவாரூர் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. திருவாரூரில் பெய்து வரும் கனமழையால் நகரில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க நகராட்சி, பேரூராட்சி ஊழியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கனமழையால் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.
இது தவிர டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதால் சம்பா, தாளடி இளம் பயிர்கள் மூழ்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் குறுவை அறுவடை இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதால் ஏற்கனவே அறுவடை செய்யப்பட்ட நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
தொடர் மழையால் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் தஞ்சை, நாகை மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. 6 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
நாகை மாவட்டத்தில் வேதாரண்யம், கோடியக்கரை, ஆறுக்காட்டுத்துறை, புஷ்பவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. அவர்கள் இன்று 4-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேப்போல் மயிலாடுதுறை மாவட்டத்திலும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. 3 மாவட்டங்களிலும் சேர்த்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த 2 நாட்களாக டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
- தென்காசி மாவட்டத்திலும் விட்டு விட்டு பெய்த சாரல் மழையால் குளிர்ச்சியான காற்று வீசியது.
தஞ்சாவூர்:
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள் உள்பட 11 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி கடந்த 2 நாட்களாக டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தஞ்சையில் நேற்று காலை 6 மணி முதல் தொடர்ந்து விட்டு, விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. அவ்வப்போது மழை கொட்டி தீர்த்தது. மதியம் 3 மணி வரையிலும் இந்த மழை நீடித்தது.
இதேபோல் தஞ்சை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. அவ்வப்போது பலத்த மழையும், லேசான தூறலுமாக மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதேபோல் நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களிலும் நேற்று காலை முதல் மாலை வரையில் மழை பெய்தது. இடையிடையே கனமழையும் பெய்தது.
இந்த கனமழை காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான நெற்பயிர்கள் வயல்களில் சாய்ந்தன. சில இடங்களில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது.
கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. விளைந்த நெல்லை அறுவடை செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் பரிதவித்து வருகிறார்கள்.
நேற்று பெய்த கனமழை காரணமாக நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 10.30 மணி முதல் சாரல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை அவ்வப்போது விட்டு, விட்டு பெய்து கொண்டிருந்தது. இதனால் ரம்மியமான சூழல் நிலவியது.
இதேபோல் தென்காசி மாவட்டத்திலும் விட்டு, விட்டு பெய்த சாரல் மழையால் குளிர்ச்சியான காற்று வீசியது. குளுகுளு சீசன் நிலவியது. மொத்தத்தில் வெயில் தலை காட்டவில்லை.
இதேபோல தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது. இதனால் இதமான சூழல் நிலவியது. வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை தொடர்ந்து, நேற்று 3-வது நாளாக விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அதேபோன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் நேற்று 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
ராமேசுவரம் பகுதியில் விடிய விடிய மழை பெய்தது.
- அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும்.
- தனியாரிடமிருந்து பெறப்படும் அறுவடை எந்திரங்களுக்கான வாடகையில் மானியம் வழங்க வேண்டும்.
தஞ்சாவூா்:
தமிழ்நாட்டின் உணவு தேவையை பூர்த்தி செய்வதில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் முதன்மையானதாக விளங்குகிறது.
விவசாயிகள் நிறைந்த டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் விளைவிக்கப்படுகிறது. பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். தற்போது டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் 3.47 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. திருவாரூர் மாவட்டத்தில் 3.75 லட்சம் ஏக்கரிலும், நாகை மாவட்டத்தில் 1.67 லட்சம் ஏக்கரிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 1.80 லட்சம் ஏக்கர் என மொத்தம் 10.69 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது 20 சதவீதம் அளவுக்கு அதாவது 2.20 லட்சம் ஏக்கரில் அறுவடை பணிகள் முடிவடைந்துள்ளது.
4 மாவட்டங்களிலும் சேர்த்து 1269 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் தினமும் 40 கிலோ எடை கொண்ட 1000 மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்படுகிறது.
இன்று காலை நிலவரப்படி தஞ்சை மாவட்டத்தில் 2 லட்சத்து 95 ஆயிரத்து 478 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று வரை 2 லட்சத்து 96 ஆயிரத்து 935 மெட்ரிக் டன் நெல்லும், நாகை மாவட்டத்தில் 97 ஆயிரத்து 979 மெட்ரிக் டன் நெல்லும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 396 மெட்ரிக் டன் நெல்லும் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன.
இந்த நிலையில் முப்போகம் சாகுபடியில் விவசாயிகளின் தேவை என்ன? அரசு அறுவடை எந்திரத்தை அதிகப்படுத்துவதின் பயன் குறித்தும், நெல் கொள்முதல் நிலையங்களில் கூடுதலாக செய்ய வேண்டியது என்ன? என்பது குறித்தும் 4 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க நிர்வாகிகள் கருத்துக்கள் விவரம் வருமாறு:-
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தஞ்சை மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன்:
நெற்பயிர் அறுவடை நேரத்தில் மழை பெய்தால் கொள்முதல் நிலையங்களில் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும். தினமும் ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் 1000 மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்படுகிறது. அப்படி கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனுக்குடன் இயக்கம் செய்ய வேண்டும்.
பல கொள்முதல் நிலையங்களில் நெல்கள் திறந்தவெளியில் கொட்டி வைக்கப்படுகிறது. இதனால் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. தமிழ்நாடு அரசு அறிவித்தபடி செமி குடோன்களை உடனடியாக திறக்க வேண்டும். விவசாயிகளின் தேவைக்கேற்ப கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்.
தற்போது சம்பா நெற்பயிர் அறுவடை முடிந்த பிறகு மராமத்து பணிகள் உடனுக்குடன் தொடங்கி முடிக்க வேண்டும். வயல்களில் மழை நீர் வடிகால் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
உர தட்டுப்பாட்டை போக்கி மானிய விலையில் உரங்கள் வழங்க வேண்டும். நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும். அதாவது நெல் குவிண்டாலுக்கு ரூ.3200 வரையாவது வழங்க வேண்டும்.
நெல் மணிகளை காய வைக்க போதிய இடம் இல்லாததால் பல விவசாயிகள் சாலையில் கொட்டி வைக்கும் நிலை உள்ளது. இதனை தவிர்க்க அந்தந்த வயல்களிலே உலர் களம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றார்.
கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் கோவிந்தராஜ்:
டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அமைச்சர்கள் குழுவினர் ஆய்வு செய்து சென்ற 24 மணி நேரத்திற்குள் இழப்பீடு தொகை அறிவித்த முதல்-அமைச்சருக்கு முதலில் நன்றி. விவசாயிகளுக்கு குறுவை, சம்பா தொகுப்பு திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்து சாகுபடி செய்கிறோம். இதனால் நெல் குவிண்டாலுக்கு ரூ.4500 வரை வழங்க வேண்டும். அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளுக்கு தடையின்றி பயிர் கடன் வழங்க வேண்டும்.
இதற்கு முன்னர்போல் வயல்வெளிகளுக்கே சென்று விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய வேண்டும். நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் மீண்டும் அமல்படுத்த வேண்டும். இதுபோன்ற கோரிக்கைகளை நிறைவேற்றினால் விவசாயிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்றார்.
மயிலாடுதுறை விவசாயி அன்பழகன்:
மயிலாடுதுறை மாவட்டத்தில் எப்போதும் மழையின் அளவு அதிகமாகவே இருக்கும். கடந்த ஆண்டு சீர்காழியில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்தது. இப்படி இயற்கை சீற்ற பாதிப்பு அதிகமாக உள்ளதால் அனைத்து வயல்வெளிகளிலும் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். கொள்முதல் நிலையங்களில் உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்து இயக்கம் செய்ய வேண்டும். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் மேட்டூர் அணை முன்கூட்டியோ அல்லது குறிப்பிட்ட ஜூன் 12-ந் தேதியோ திறக்க வேண்டும். அதில் தாமதப்படுத்த கூடாது. விவசாயிகளின் நிலையை உணர்ந்து மானிய விலையில் உரங்கள் வழங்குவதை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் துரைராஜ்:
தற்போது மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை அமைச்சர்கள் குழு ஆய்வு நடத்தி உடனுக்குடன் இழப்பீடும் அறிவிக்கப்பட்டது. இதேபோல் வரும் பருவத்திலும் ஒருவேளை மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டால் உடனுக்குடன் கணக்கீடு செய்து உடனே இழப்பீடு வழங்க வேண்டும்.
அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும். அதோடு நெற்மணிகள் நிறம் மாறி இருந்தாலும் கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க தார்பாய்கள், சாக்கு, சணல் போன்றவற்றை போதுமான அளவிற்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு மையங்களுக்கும் போதுமான அளவிற்கு லாரிகளை அனுப்பி வைக்க வேண்டும்.
திருவாரூர் மாவட்டத்தில் பெரும்பாலோனோர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது கொள்முதல் நிலையங்களில் தினமும் 1000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுவதை 1500 மூட்டைகள் கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும். கூடுதல் அறுவடை எந்திரங்களுக்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். இதேப்போல் தனியாரிடமிருந்து பெறப்படும் அறுவடை எந்திரங்களுக்கான வாடகையில் மானியம் வழங்க வேண்டும். தற்போது உள்ள கொள்முதல் நிலையங்களிலும் சேர்த்து தேவைப்படும் இடத்திலும் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
நாகை மாவட்டத்தை பொறுத்தவரை கடற்கரை நிறைந்த பகுதியாகும். இருந்தாலும் மீன்பிடி தொழில் எவ்வளவு அதிகமாக உள்ளதோ அந்த அளவுக்கு விவசாயமும் நிறைந்து காணப்படுகிறது. மாவட்டத்தில் மழை அளவு அதிகம் இருக்கும் என்பதால் ஈரமான நெல்லை உலர்த்த அந்தந்த வயல்களில் உலர்களம் அமைத்து கொடுக்க வேண்டும். தற்போது அரசு அறுவடை எந்திரத்துக்கு 50 சதவீத மானியத்தில் வாடகை கொடுக்கும் என அறிவித்துள்ளது. இந்த நடைமுறை அடுத்து வரும் அனைத்து பருவத்துக்கும் தொடர வேண்டும். விவசாயிகளுக்கு தடையின்றி பயிர் கடன் வழங்க வேண்டும் என்று நாகை விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
- நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு பணியை ஆரம்பித்தனர்.
- மத்திய குழுவிடம், விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
வேதாரண்யம்:
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த 1-ந் தேதி முதல் 4-ந்தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் பலத்த மழை பெய்தது.
பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாரான சுமார் 2.10 லட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் பாரம் தாங்காமல் சாய்ந்தது. மேலும் வயல்களில் தேங்கிய தண்ணீரால் நெற்பயிர் அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதேபோல் உளுந்து, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களும் சேதமாகின.
திடீர் கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதங்களை பார்வையிட அமைச்சர்கள் குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார்.
அதன்படி கடந்த 5-ந்தேதி வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் தலைமையில் உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இரு குழுக்களாக பிரிந்து சென்று தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களிலும் பயிர் சேதங்களை ஆய்வு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து 6-ந்தேதி பயிர் சேத விவரங்கள் குறித்த அறிக்கையினை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சமர்ப்பித்தனர். இதையடுத்து 33 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம், சேதமடைந்த இளம்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.3 ஆயிரம், உளுந்து விவசாயம் செய்ய 50 சதவீதம் மானியத்தில் ஒரு ஏக்கருக்கு 8 கிலோ பயறு விதைகள் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவர் கடிதம் எழுதினார். அதில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 22 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அதனை ஏற்று ஈரப்பத தளர்வு அறிவிப்பது தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய குழுவை தமிழகத்துக்கு மத்திய அரசு அனுப்பி வைத்தது. அதன்படி சென்னையில் உள்ள தரக்கட்டுப்பாட்டு மையத்தின் தொழில்நுட்ப அதிகாரி யூனுஸ், பெங்களூருவில் உள்ள தரக்கட்டுப்பாட்டு மையத்தின் தொழில்நுட்ப அதிகாரிகள் பிரபாகரன், போயோ ஆகியோர் அடங்கிய மத்திய குழு இன்று டெல்டா மாவட்டங்களில் தங்களது ஆய்வை தொடங்கினர்.
முதற்கட்டமாக இன்று நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு பணியை ஆரம்பித்தனர். அங்கு கொள்முதலுக்காக வைக்கப்பட்டிருந்த நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்தனர்.
மேலும் நெல்லின் மாதிரிகளை ஆய்வுக்காக சேகரித்து கொண்டனர். கொள்முதல் செய்யப்படும் விதம், நாள்தோறும் எவ்வளவு அளவு கொள்முதல் செய்யப்படுகிறது போன்ற பல்வேறு விவரங்களை பணியாளர்களிடம் கேட்டறிந்தனர்.
அப்போது அங்கு திரண்ட விவசாயிகள், தங்கள் நிலங்களில் சேதமடைந்த அழுகிய நெற்பயிரை கையில் எடுத்து வந்து மத்திய குழுவினரிடம் காண்பித்தனர். அதனையும் புகைப்படம் எடுத்துக்கொண்ட அதிகாரிகள் மாதிரிக்காகவும் கொண்டு சென்றனர்.
அப்போது மத்திய குழுவிடம், விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். அதில் பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதமாகியது. அதோடு நெல்லின் ஈரப்பதமும் அதிகரித்துள்ளது.
தற்போது 19 சதவீதம் வரையிலான நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் மழையால் ஈரப்பதம் அதைவிட அதிகரித்துள்ளது. எனவே 22 சதவீதம் வரையிலான ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.
கொள்முதல் நிலையங்களில் தினமும் 1000 மூட்டை கொள்முதல் செய்யப்படுவதை அதிகரிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மனுவை வாங்கி மத்திய அரசிடம் பேசி பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய குழுவினர் தெரிவித்தனர்.
இதையடுத்து மத்திய குழுவினர் திருக்குவளை தாலுகா கச்சநகரம் கொள்முதல் நிலையத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர். தொடர்ந்து வலிவலம் உள்ளிட்ட பல்வேறு கொள்முதல் நிலையங்களில் ஆய்வு நடத்த உள்ளனர்.
நாளை (9-ந்தேதி) திருவாரூர், தஞ்சை மாவட்டத்தில் ஆய்வு செய்ய உள்ளனர். ஆய்வுகள் அனைத்தையும் முடித்து கொண்டு சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுகின்றனர். அதன்பின்னர் வருகிற 13-ந்தேதி டெல்லியில் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்கிறார்கள். அதன்பின்னரே நெல்லின் ஈரப்பத தளர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- காவிரி டெல்டா மாவட்டங்களில் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் வேகப்படுத்தப்பட்டு உள்ளது.
- நாகை, திருவாரூர் என ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வு செய்த பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 11-ந்தேதி சேலம் மாவட்டத்திற்கு செல்கிறார்.
சென்னை:
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வருகிற 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று தண்ணீர் திறக்க உள்ளார்.
இதையொட்டி காவிரி டெல்டா மாவட்டங்களில் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் வேகப்படுத்தப்பட்டு உள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, உள்ளிட்ட மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி தொடங்க உள்ள நிலையில் கடைமடை பகுதிகள் வரை தண்ணீர் சென்றடைய வேண்டும் என்பதற்காக தூர்வாரும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.
இந்த பணிகளை பார்வையிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 8-ந்தேதி இரவு சென்னையில் இருந்து புறப்பட்டு 9-ந் தேதி தஞ்சாவூர் சென்று டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்கிறார். நாகை,திருவாரூர் என ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வு செய்த பிறகு 11-ந்தேதி சேலம் மாவட்டத்திற்கு செல்கிறார். அங்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று 1 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். 12-ந் தேதி மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார்.
- விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
- விருந்தினர் மாளிகையில் அமைச்சர்கள் மற்றும் ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.
தஞ்சாவூர்:
தமிழகத்திற்கு முதலீடுகளை கொண்டு வரும் நோக்கில் மேற்கொண்ட ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அடுத்தடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.
அவ்வகையில், இன்று டெல்டா மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வுப்பணியை தொடங்கினார். காவிரி டெல்டா பாசன கால்வாய், நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்கிறார். முதலில் தஞ்சை மாவட்டம் முதலை முத்துவாரி பகுதியில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார். மேலும் விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். வரைபடம், புகைப்படங்கள் மூலம் தூர்வாரும் பணிகள் குறித்து முதல்வருக்கு அதிகாரிகள் விளக்கினர். அதன்பின்னர் தஞ்சை அரசு விருந்தினர் மாளிகையில் அமைச்சர்கள் மற்றும் ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, உள்ளிட்ட மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி தொடங்க உள்ள நிலையில் கடைமடை பகுதிகள் வரை தண்ணீர் சென்றடைய வேண்டும் என்பதற்காக தூர்வாரும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை அவர் ஆய்வு செய்கிறார்.
நாகை, திருவாரூர் என ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வு செய்த பிறகு 11-ந்தேதி சேலம் மாவட்டத்திற்கு செல்கிறார். அங்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று 1 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடுகிறார்.
முதல்வரின் வருகையை முன்னிட்டு திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- மேட்டூர் அணையில் இருந்து போதிய தண்ணீர் திறக்க முடியாத காரணத்தால் டெல்டா மாவட்டம் முழுவதும் பயிரிடப்பட்டிருந்த குறுவை பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்துவிட்டது.
- குறுவை சாகுபடியில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு எவ்வளவு தொகை நிவாரணமாக அறிவிக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டது.
சென்னை:
ஒவ்வொரு ஆண்டும் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது போல் இந்த ஆண்டும் ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த தண்ணீரை நம்பி காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாயிகள் குறுவை நெல் விதைத்தனர். சுமார் 5 லட்சம் ஏக்கர் அளவுக்கு குறுவை நெல் பயிரிடப்பட்டிருந்த நிலையில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக சாகுபடிக்கு தேவையான நீர் கடைமடை வரை சென்றடையவில்லை.
குறிப்பாக நாகை மாவட்டத்தில் 62 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி நேரடி விதைப்பு செய்யப்பட்ட நிலையில் விவசாயிகள் ஆற்றுப்பாசனத்தை முழுவதுமாக நம்பி இருந்தனர். ஆனால் பாசன நீர் கிடைக்காமல் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் கருகியது. கர்நாடக மாநில அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு போதிய தண்ணீர் திறந்துவிடப்படாததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது.
இதனால் மேட்டூர் அணையில் இருந்து போதிய தண்ணீர் திறக்க முடியாத காரணத்தால் டெல்டா மாவட்டம் முழுவதும் பயிரிடப்பட்டிருந்த குறுவை பயிர்கள் தண்ணீரின்றி காய்ந்துவிட்டது.
இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் வேளாண்மைத் துறை ஆணையர் சுப்பிரமணியன் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் குறுவை சாகுபடி செய்யப்பட்ட இடங்களில் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது தண்ணீர் இன்றி கருகிய நெற்பயிர்களை பார்வையிட்டு சேத மதிப்புகளை கணக்கிட்டனா். அங்குள்ள விவசாயிகள், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்க முன்வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதுமட்டுமின்றி சம்பா சாகுபடிக்கு தயாராகும் வகையில் சம்பா தொகுப்பு திட்டம் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் குறுவை பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கேற்ப விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, வேளாண்துறை செயலாளர் சமயமூர்த்தி, வேளாண்துறை கமிஷனர் சுப்பிரமணியன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் குறுவை சாகுபடியில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு எவ்வளவு தொகை நிவாரணமாக அறிவிக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டது.
இதுகுறித்து உயர் அதிகாரி கூறுகையில், விவசாயிகளுக்கு நெற்பயிர்களுக்கான இழப்பீடு எவ்வளவு என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்து அறிவிப்பார் என்று தெரிவித்தார்.
- கடந்த சில நாட்களாக 5000 கனஅடி நீரை கர்நாடக அரசு திறந்துவிட்டது. பின்னர் அதையும் குறைத்தது.
- 161 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதால் தங்களால் தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடகம் மறுத்து வருகிறது.
சென்னை:
காவிரி நீர் பிரச்சினையில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்து விடாமல் கர்நாடக அரசு தொடர்ந்து பிடிவாதம் செய்து வருகிறது.
இதன் காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட குறுவை நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி காய்ந்துவிட்டது.
காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு கர்நாடக அரசு ஜூன் மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை தரவேண்டிய நீரில் மூன்றில் ஒரு பங்கை கூட தராத நிலையில் இதுகுறித்து காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்சநீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையிட்டது. இதில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை பின்பற்ற வேண்டும் என்று கர்நாடகா அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
அதன்படி தமிழகத்திற்கு காவிரியில் 5000 கன அடிநீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு ஆகியவை முதலில் உத்தரவிட்டன. அதற்கு கர்நாடகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் கடந்த சில நாட்களாக 5000 கனஅடி நீரை கர்நாடக அரசு திறந்துவிட்டது. பின்னர் அதையும் குறைத்தது.
இந்நிலையில் காவிரி ஒழுங்காற்று குழு, அடுத்த 15 தினங்களுக்கு தொடர்ந்து 3000 கன அடி நீர் வீதம் தமிழகத்திற்கு காவிரியில் நீர் திறக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து பெங்களூருவில் பந்த் நடந்தது. மேலும் மாநிலம் தழுவிய அளவில் இன்று கர்நாடகத்தில் பந்த் நடந்து வருகிறது.
தமிழகத்திற்கு 3000 கனஅடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்ட நிலையில் அதனை பின்பற்ற கர்நாடகா அரசு பிடிவாதமாக மறுப்பு தெரிவித்து வருகிறது. 161 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதால் தங்களால் தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடகம் மறுத்து வருகிறது.
இந்நிலையில் இன்று மதியம் 2 மணியளவில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் கூட்டப்பட்டது.
இதில் தமிழகம் சார்பில் நீர் வளத்துறை செயலாளர் (பொறுப்பு) டாக்டர் மணிவாசன், காவிரி தொழில் நுட்ப குழு தலைவர் எல்.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். வினாடிக்கு 12,500 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட் டால்தான் நெற் பயிர்களை காப்பாற்ற முடியும் என்று வலியுறுத்தினார்கள்.
ஆனால் இதற்கு கர்நாடகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பெங்களூரில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் சூழலில் எங்களுக்கே தண்ணீர் போதாது என்று கூறினார்கள்.
கர்நாடகாவின் இந்த பிடிவாதம் காரணமாக இந்த ஆண்டு டெல்டா மாவட்டத்தில் ஒருபோக சாகுபடிக்கு உலை வைத்துவிடும் என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.






