search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "South West Monsoon"

    • சேலம் மாவட்டத்தில் 2 பருவ மழைகளும் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவில் பெய்து வந்தது.

    சேலம்:

    தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டி உள்ள பகுதிகளில் தென்மேற்கு பருவ மழையும், கடலோர மாவட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழையும் அதிக அளவில் பெய்யும், ஆனால் சேலம் மாவட்டத்தில் 2 பருவ மழைகளும் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவில் பெய்து வந்தது.

    தென்மேற்கு பருவ மழை

    தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை ஜுன் மாதம் 1-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை உள்ள காலம், இந்த காலங்களில் தென் மேற்கு பருவ மழை அதிக அளவில் பெய்யும், இதையொட்டி சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென் மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. ஏற்கனவே ஏரிகள் மிகவும் வறண்ட நிலையில் இருந்ததால் ஏரி, குளங்களில் மிக குறைந்த அளவே தண்ணீர் உள்ளது. இதனால் இன்னும் கூடுதலாக மழை பெய்யுமா? என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

    5 சதவீதம் குறைவு

    சேலம் மாவட்டத்தில் வழக்கமாக ஜுன் 1-ந் தேதி முதல் நேற்றைய தேதியான செப்டம்பர் 8-ந் தேதி வரை 289.1 மி.மீ. மழை பெய்யும், ஆனால் இந்தாண்டு 274.1 மி.மீ. மழை பெய்துள்ளது. இதனால் வழக்கத்தை விட 15 மில்லி மீட்டர் குறைவாக பெய்துள்ளது. இது இயல்பை விட 5 சதவீதம் குறைவாகும், இன்னும் தென் மேற்கு பருவ மழை காலம் முடிய இன்னும் 21 நாட்கள் உள்ளது. இந்த நாட்களில் கூடுதல் மழை பெய்தால் வழக்கத்தை விட மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • ராமேசுவரம் மீனவர்கள் சூறாவளி காற்று, கடல் கொந்தளிப்பு போன்ற காரணங்களால் கடந்த 2 நாட்களாக கடலுக்கு செல்லவில்லை.
    • ராமேசுவரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இன்றும் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

    ராமேசுவரம்:

    தமிழகத்தை ஒட்டியுள்ள தென் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக உள் மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ராமேசுவரம் மீனவர்கள் சூறாவளி காற்று, கடல் கொந்தளிப்பு போன்ற காரணங்களால் கடந்த 2 நாட்களாக கடலுக்கு செல்லவில்லை. இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட விசைப்படகுகள், நாட்டுப் படைகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

    3-வது நாளாக இன்றும் ராமேசுவரத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி ஆகிய கடல் பகுதிகளில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வரை கடல் காற்று வீசி வருகிறது. தனுஷ்கோடியில் வழக்கத்தை விட கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. அரிச்சல் முனை, முகுந்தராயர் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் ராட்சத அலைகள் எழும்பின.

    இதன் காரணமாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் இன்றும் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதனால் மீனவர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் என 15 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாக மீன்பிடித்தொழில் தடைபட்டுள்ளதால் ரூ.5 கோடி வரை மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    தனுஷ்கோடியில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் சாலைகளை மணல்கள் மூடின. இதனால் போக்குவரத்து தடைப்பட்டது. தனுஷ்கோடியில் இறங்கி குளிக்க வேண்டாம் என சுற்றுலா பயணிகளை கடலோர காவல் படையினர் எச்சரித்துள்ளனர். மேலும் அவர்கள் 24 மணி நேரமும் கடலோரப் பகுதிகளில் ரோந்து மேற்கொண்டு வருகின்றனர்.

    இதுகுறித்து ராமேசுவரம் மீனவர்கள் கூறுகையில், மீன்களின் இனப்பெருக்கத்தை முன்னிட்டு கடந்த 3 மாத காலமாக மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தடை முடிந்து தற்போது தான் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகிறோம். இதனிடையே இலங்கை கடற்படை தொல்லையால் முழுமை யாக மீன்பிடி தொழிலில் ஈடுபட முடிவதில்லை. தற்போது இயற்கையும் எங்களை வஞ்சித்துள்ளது. இதனால் வருமானம் இன்றி குடும்பம் நடத்தவே கஷ்டமாக உள்ளது. வானிலை மாற்றம், புயல் போன்ற காலங்களில் கடலுக்கு செல்லாதபோது மீனவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்கினால் உதவியாக இருக்கும் என்றனர்.

    • தென்மேற்கு பருவ மழையினை நம்பி நெல் சாகுபடி தொடங்கப்படும்.
    • மே மாத இறுதியில் நெல் விதை பாவி, ஜூன் முதல் வாரத்தில் நாற்று நடவு தொடங்கி விடுவது வழக்கம்.

    செங்கோட்டை:

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் மாத தொடக்கத்தில் பெய்ய ஆரம்பிக்கும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை அதற்கான அறிகுறி இல்லை. மாறாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தில் காற்று மட்டுமே வீசி வருகிறது. குற்றாலம் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இதில் செங்கோட்டை பகுதியில் மழை இல்லாததால் பெரும்பாலான குளங்கள் வறண்டுவிட்டன.

    இப்பகுதி விவசாயிகள் கார் மற்றும் பிசான சாகுபடி காலங்களில் நெல் மற்றும் மா, தென்னை, வாழை உள்ளிட்ட தோட்டப்பயிர்களும், ஏனைய காலங்களில் பூ மகசூலான அத்தியாவசிய தேவையான காய்கறிகள், உளுந்து, சோளம், பயிறு உள்ளிட்ட கோடைகால பயிர்களும் நெல்லி, புளி உள்ளிட்ட வறட்சியை தாங்கும் பயிர்களும் பயிரிடப்பட்டு வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.

    தென்மேற்கு பருவ மழையினை நம்பி நெல் சாகுபடி தொடங்கப்படும். இதற்காக மே மாத இறுதியில் நெல் விதை பாவி, ஜூன் முதல் வாரத்தில் நாற்று நடவு தொடங்கி விடுவது வழக்கம். தற்போது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தென்மேற்கு பருவமழை கண்ணாமூச்சி காண்பித்து வருவதால் குண்டாறு, மோட்டை , ஸ்ரீமூலபோரி, அடவிநயினார் அணை உள்ளிட்ட அனைத்து நீர்த்தேக்கங்களிலும் குறைந்த அளவில் தண்ணீர் காணப்படுகிறது.

    மேலும் ஆறுகள், கால்வாய்கள் ஓடைகள் அனைத்திலும் நீர் வறண்ட நிலையில் இருப்பதால் அப்பகுதியில் நிலத்தடிநீர் வெகுவாக குறைந்துள்ளது.

    தென்காசி மாவட்ட எல்லை அருகே அமைந்துள்ள கேரள மாநிலம் தென்மலை அணையிலும் நீர் மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. அங்கு தண்ணீர் குடிப்பதற்காக வந்த காட்டு மாடு ஒன்று சகதியில் சிக்கி வெளியே வரமுடியாமல் போராடிக்கொண்டிருந்தது. தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்து வந்து காட்டு மாட்டை மீட்டனர்.

    மழை இல்லாததால் செங்கோட்டை பகுதியில் ஒரு சில இடங்களை தவிர ஏனைய இடங்களில் நாற்று பாவும் பணி கூட தொடங்காத நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருவதோடு கண்ணீர் வடிக்கின்றனர்.

    மேலும் ஜூன் மாதத்தில் பாதி கழிந்துவிட்ட நிலையில் தென்மேற்கு பருவமழை உரிய முறையில் பெய்தாலும் இனி நாற்றுப்பாவினால் கூட அறுவடை காலம் தாமதமாகும் சூழ்நிலை ஏற்படும். இவ்வாறு தாமதமானால் வடகிழக்கு பருவ மழைக்காலம் தொடங்கி நன்கு விளைந்த பயிர்கள் கூட சேதமடையும் அபாயம் இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • கண்காணிக்காமல் விட்டால் டெங்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.
    • திருப்பூர் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.

    உடுமலை:

    உடுமலை பகுதியில் தென்மேற்கு பருவமழை சீசன் துவங்கியுள்ளது. சில மாதங்கள் நீடிக்கும் இந்த பருவமழை சீசனில் வீடுகள் மற்றும் பிற இடங்களில் மழை நீர் தேங்குவது வழக்கம். இதனால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து, டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்த்தாக்குதல் ஏற்படும் வாய்ப்புள்ளது.எனவே பருவமழை சீசன் துவங்கும் போது உள்ளாட்சி அமைப்புகள் சார்பில்நோய்த்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

    ஏடிஸ் கொசுக்கள் நம்மை கடிக்கும் போது டெங்கு உண்டாகிறது. இவை பெரும்பாலும் மாலை அல்லது பகலில்தான் கடிக்கும்.திடீரென கடுமையான காய்ச்சல், அதிகமான தலைவலி, கண்களுக்கு பின்புறம் வலி, கண் விழி சிவந்து, வெளிச்சத்தை பார்க்க முடியாத நிலை, கண் கூசுதல், உடலில் சிவப்புப்புள்ளிகள் தோன்றுவது டெங்கு அறிகுறிகள்.இந்தக் காய்ச்சலின்போது, எலும்பு முறிவு ஏற்பட்டதுபோல கடுமையான எலும்பு வலி ஏற்படும்.

    சுகாதாரத்துறையினர் கூறுகையில், துவக்கத்திலே கண்டறிந்து சிகிச்சை முறைகளுக்கு தயாராகினால் 7 நாட்களில் டெங்கு சரியாகிவிடும்.கண்காணிக்காமல் விட்டால் டெங்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை அழித்துவிடும். இவை ரத்தம் உறைவதற்கு உதவக்கூடியவை.ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை குறையும்போது அது நுரையீரல், வயிறு போன்ற உறுப்புகளிலும் பல் ஈறு, சிறுநீர்ப்பாதையிலும் ரத்தக் கசிவை ஏற்படுத்தக்கூடும். உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்கவில்லை என்றால் உயிரிழப்பும் ஏற்படும்.

    டெங்குவிலிருந்து தற்காத்துகொள்ள தடுப்பூசி எதுவும் இல்லை. நாம் வசிக்கும் வாழ்விடங்களில் கொசுக்களை ஒழிப்பது ஒன்றே வழி. லார்வா, கொசு வளர வாய்ப்பு இல்லாதவாறு வீடு, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும்.குடம், தண்ணீர் தொட்டிகளில் சேமித்துவைக்கும் நீரை நன்றாக கொசு புகாதபடி மூடிவைத்துப் பயன்படுத்த வேண்டும். வீட்டுக்குள் கொசு வர முடியாதபடி ஜன்னல்களில் கொசுவலை பொருத்த வேண்டும் என்றனர்.

    சில மாவட்டங்களில் டெங்கு அதிகரித்த போதும், திருப்பூர் மாவட்டத்தில் டெங்கு பாதிப்பு இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என்கிறார் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார்.அவர் மேலும் கூறுகையில், பொதுமக்கள் முடிந்தவரை குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். மருந்து, மாத்திரை எடுத்துக்கொண்ட பின்பும் 3 நாட்களுக்கு காய்ச்சல் தொடர்ந்து இருந்தால் டாக்டரை சந்தித்து, அடுத்த கட்ட பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்என்றார்.பருவமழை சீசன் துவங்கியுள்ள நிலையில் உடுமலை நகராட்சி, பேரூராட்சிகளிலும், ஒன்றிய கிராமங்களிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • 35 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
    • தென்மேற்கு பருவமழை எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

    உடுமலை:

    உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இதன் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 35 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன. தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரை மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை அணைக்கு முக்கிய நீராதாரமாக உள்ளது. ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இன்னும் தொடங்காததால் குறைந்த அளவே நீர்வரத்து உள்ளது .அணையின் நீர்மட்டம் தற்போது 63 அடி என்ற அளவிலேயே உள்ளது .ஆனால் கடந்த ஆண்டு இதே நாளில் நீர்மட்டம் 77.30 அடியாக இருந்தது.கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழை காலத்தில் அணை நிரம்பி வழிந்தது .எனவே தென்மேற்கு பருவமழை எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

    • வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவ மழை இன்னும் தொடங்காததால் இந்தநிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
    • கடந்த வருடம் இதே நாளில் கரை புரண்டு ஓடிய வைகை ஆறு தற்போது பாலைவனம் போல் காட்சியளிக்கிறது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா வருசநாடு அருகே வெள்ளிமலை வனப்பகுதியில் மூலவைகை ஆறு உற்பத்தியாகிறது. கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள 150 கிராமங்களுக்கும் முக்கிய நீர் ஆதாரமாக வைகை ஆறு விளங்குகிறது.

    கடமலைக்குண்டு, வருசநாடு, மயிலாடும்பாறை உள்ளிட்ட கிராமங்களில் வைகை ஆற்றில் உறை கிணறு அமைத்து, கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் பெரும்பாலான கிராமங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக கடமலை-மயிலை ஒன்றியத்தில் போதிய அளவில் மழை பெய்யவில்லை. இதன் காரணமாக, வைகை ஆறு வறண்ட நிலையில் காணப்படுகிறது.

    வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் தென்மேற்கு பருவ மழை இன்னும் தொடங்காததால் இந்தநிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

    வைகை ஆறு வற்றினாலும், உறை கிணறுகளில் உள்ள நீரை வைத்து கிராமங்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போதுஅதிக வெயில் காரணமாக உறை கிணறுகளில் உள்ள நீரின் மட்டமும் வெகுவாகக் குறைந்து வருகிறது.

    ஆண்டுதோறும் ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை காரணமாக வெள்ளிமலை வனப்பகுதியில் சாரல் மழை பெய்து மூல வைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்படும். ஆனால் தற்போது வழக்கத்துக்கு மாறாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

    இதனால் உறை கிணறுகளில் நீர் மட்டம் குறைந்து கடமலை-மயிலை ஒன்றியத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட ஒன்றிய மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் முன்பு அதனை தடுக்கும் வகையில் மாற்று ஏற்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடந்த வருடம் இதே நாளில் கரை புரண்டு ஓடிய வைகை ஆறு தற்போது பாலைவனம் போல் காட்சியளிக்கிறது. வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவதால் அணையின் நீர் மட்டமும் தொடர்ந்து சரிந்து வருகிறது.

    வைகை அணை நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 58.61 அடியாக உள்ளது. வரத்து இல்லை. பாசனத்துக்கு 800 மற்றும் மதுரை மாநகர குடிநீருக்கு 69 என மொத்தம் 869 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 3346 மி.கன அடியாக உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 133.25 அடியாக உள்ளது. வரத்து 136 கன அடி. திறப்பு 400 கன அடி. இருப்பு 4990 மி.கன அடி. மஞ்சளாறு அணை நீர் மட்டம் 41.80 அடி. வரத்து 16 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 83.31 அடி. திறப்பு 3 கன அடி.

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு 3 நாட்கள் தாமதமாக ஜூன் 4-ந்தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் முதல் நாளில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்.

    இந்திய வானிலை ஆய்வு மையம் தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்கும் என்பது குறித்த முன் அறிவிப்புகளை வெளியிடும். இதுவரை இந்திய வானிலை ஆய்வு மையம் இதுபற்றி தகவல் வெளியிடாத நிலையில் தனியார் வானிலை ஆய்வு மையமான ஸ்கைமெட் நிறுவனம் கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 4-ந்தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

    இந்நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஜதின்சிங் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கேரளாவில் வழக்கமாக ஜூன் 1-ந்தேதி தென்மேற்கு பருவமழை ஆரம்பமாகும். அதன் பிறகு ஜூலை மத்தியில் நாடு முழுவதும் பெய்யத் தொடங்கும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 3 நாட்கள் தாமதமாக ஜூன் 4-ந்தேதி தொடங்கும்.

    தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறி வருகிற 22-ந்தேதி அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் தென்படும். இந்திய தீபகற்ப பகுதியில் பருவமழை மெதுவாகவே தொடங்கும்.

    இந்த ஆண்டு இந்தியாவின் வடகிழக்கு, கிழக்கு மற்றும் மத்தியில் உள்ள மாநிலங்களில், தென்மாநிலங்களை விட குறைவான அளவே மழை பெய்ய வாய்ப்புள்ளது.



    இந்தியாவில் சராசரியாக பெய்யும் மழையில் 96 சதவீத அளவு மழை வடமேற்கு பகுதியில் பெய்யும். ஆந்திராவின் ராயலசீமா மற்றும் கர்நாடகாவின் உள் பகுதியில் குறைந்த அளவே மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    கேரளா மற்றும் கர்நாடகாவின் கடலோர பகுதிகளில் இந்த ஆண்டு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்யும்போது குமரி மாவட்டத்திலும் அதிக மழை பொழிவு இருக்கும். இதுபோல மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையால் குமரி மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகமாக இருக்கும்.

    மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களின் நீர் ஆதாரமாக திகழும் முல்லை பெரியாறு அணைக்கும் தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் நீர்வரத்து அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
    தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து நீடித்து வருவதால் வடகிழக்கு பருவ மழை அக்டோபர் 2-வது வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளது. #SouthWestMonsoon #NortheastMonsoon
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

    வெப்ப சலனம் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடலில் நீடிக்கும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று பல இடங்களில் மிதமானது முதல் இடியுடன் கூடிய மழை பெய்யும், கன்னியாகுமரி, காரைக்கால், நாகப்பட்டினம், விழுப்புரம், பாம்பன், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.



    சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்ப நிலை 93.2 டிகிரி ஆகவும், குறைந்தபட்ச வெப்ப நிலை 78.8 டிகிரியாகவும் இருக்கும். தென் கிழக்கு வங்கக் கடலில் நீடிக்கும் வளி மண்டல மேலடுக்கு சுழற்றி வலுபெறவில்லை. ஆனாலும் வெப்ப சலனம் காரணமாக மழை நீடிக்கிறது.

    கடந்த 24 மணி நேரத்தில் கோபியில் அதிகபட்சமாக 80 மி.மீ. மழை பெய்துள்ளது. சத்திரப்பட்டி, ஒட்டன்சத்திரத்தில் 60 மி.மீ. மழையும், உடுமலைப்பேட்டை, தாளவாடியில் 50 மி.மீ. மழையும், தாராபுரம், பொள்ளாச்சி, காங்கேயத்தில் 40 மி.மீ. மழையும், கொடைக்கானல், தென்காசி, அரவக்குறிச்சி, பேச்சிப்பாறை, ஊட்டியில் 30 மி.மீ. மழையும் பெய்துள்ளது.

    தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து நீடித்து வருகிறது. தென்மேற்கு பருவ மழை முடிவடைந்ததும் அக்டோபர் 2-வது வாரத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

    இவ்வாறு அவர்கள் கூறினர். #SouthWestMonsoon #NortheastMonsoon


    கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டதையடுத்து, மேட்டூர் அணைக்கு இன்று நீர்வரத்து ஒரு லட்சம் கன அடியை எட்டியது. #Metturdam #Cauvery
    மேட்டூர்:

    கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் மீண்டும் நிரம்பின. இதன் காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.



    நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை நீடிப்பதால் கர்நாடக அணைகளில் நீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டது. நேற்று காலை கபினி அணையில் இருந்து 80 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 63 ஆயிரம் கன அடி தண்ணீரும் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மொத்த 1.43 லட்சம் கனஅடி தண்ணீர் வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கர்நாடக அணைகளில்  தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 70,000 கன அடியில் இருந்து இன்று 1,00,000 கன அடியாக உயர்ந்துள்ளது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.80 அடியாக உள்ளது. நீர்வரத்து அதிகரித்ததையடுத்து, நீர்திறப்பு வினாடிக்கு 50 ஆயிரத்தில் இருந்து  60 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதேபோல் பவானிசாகர் அணையும் நிரம்பி வருகிறது. அணையின் நீர்மட்டம் 98.40 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6924 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. 3800 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. #Metturdam #Cauvery

    நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை இல்லாததால் அணைகளுக்கு குறைந்த அளவு தண்ணீரே வந்து கொண்டு இருக்கிறது. #NellaiRain
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இயல்பு நிலையை விட இந்த ஆண்டு 35 சதவீதம் அதிகம் மழை பெய்தது. இதனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள 11 அணைகளில் வடக்கு பச்சையாறு, நம்பியாறு அணைகளை தவிர மீதமுள்ள 9 அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இதில் சிறிய அணைகளான அடவி நயினார், கொடு முடியாறு, குண்டாறு, கருப்பாநதி, ராமநதி, கடனாநதி ஆகிய 6 அணைகள் நிரம்பி வழிந்தது. பெரிய அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு ஆகிய 3 அணைகளிலும் 75 சதவீதம் வரை தண்ணீர் நிரம்பியது.

    இதைத்தொடர்ந்து 9 அணைகளில் இருந்தும் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் நெல்லை மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரத்து 381 ஹெக்டேர் நிலத்தில் கார் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை இல்லை. இன்று காலை அடவிநயினார் அணை பகுதியில் 5 மில்லி மீட்டரும், குண்டாறு அணை பகுதியில் 7 மில்லி மீட்டர் அளவுக்கும், கருப்பாநதி அணை பகுதியில் 1 மில்லி மீட்டர் அளவுக்கும் லேசான சாரல் மழை பெய்துள்ளது. ஆனாலும் ஏற்கனவே பெய்த மழை மற்றும் சாரல் காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் தொடர்ந்து நன்றாக விழுகிறது. அணைகளுக்கு குறைந்த அளவு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1025.81 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 20 கனஅடி தண்ணீரும், கீழ் அணையில் இருந்து 1405 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று 115.40 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 122.44 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 27கன அடி தண்ணீர் மட்டுமே வருகிறது. ஆனால் அணையில் இருந்து விவசாயத்துக்கு வினாடிக்கு 375 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இன்று காலை மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 77.72 அடியாக உள்ளது.

    இது போல கடனாநதி -83.50, ராமநதி-80.75, கருப்பாநதி-71.20, குண்டாறு-36.10, கொடு முடியாறு-46, அடவி நயினார்-130.75, வடக்கு பச்சையாறு-9.50, நம்பியாறு-11.51 அடியாக நீர்மட்டம் உள்ளது. #NellaiRain
    தென்மேற்கு பருவமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் 150 குளங்கள் நிரம்பின. மேலும் 500 குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. #NellaiRain
    நெல்லை:

    தென்மேற்கு பருவமழை காரணமாக நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் 6 அணைகள் நிரம்பியுள்ளன. மழை காரணமாக தென்காசி சுற்றுபகுதியில் உள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    தென்காசி மற்றும் சுற்றுவட்டரா பகுதியில் தென்காசி சீவலப்பேரிகுளம், கீழப்புலியூர், சுந்தரபாண்டியபுரம், இலஞ்சி, கம்பிளி, ஆகிய பகுதிகளில் உள்ள பல குளங்கள் உள்ளன. இதற்கு குற்றாலம் அருவி, குண்டாறு அணை, அடவிநயினார் அணை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து பாசனம் பெற்று வருகின்றன.

    தற்போது இந்த பகுதி குளங்கள் நிரம்பியுள்ளன. மேலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் இன்னும் சில தினங்களில் அனைத்து குளங்களும் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிற்றாற்றில் மேலப்பாவூருக்கு மேற்கே உள்ள தடுப்பு அணையிலிருந்து மேலப்பாவூர் குளத்திற்கும் கீழப்பாவூர் பெரிய குளத்திற்கும் தண்ணீர் வருகிறது. இந்த இரண்டு குளங்களும் பெருகிய பின்பு மருகால் வழியாக இதனை தொடர்ந்து நாகல்குளம், கடம்பன்குளம், தன்பத்து குளம், பூலாங்குளம், சின்னபூலாங்குளம், கோயிலுற்று குளம், ஆண்டிபட்டிகுளம் ஆகிய குளங்கள் பாசன வசதி பெறுகிறது.

    மேலும் இங்கிருந்து தொட்டியான் கால்வாய் மூலம் ஆலங்குளம் தொட்டியான் குளம் உட்பட 18க்கும் மேற்பட்ட குளங்களுக்கு கீழப்பாவூர் குளத்திலிருந்து வரும் தண்ணீர் தான் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. இதன் மூலம் பலஆயிரம் ஏக்கர் நிலங்கள் நேரடியாக பாசன வசதி பெறுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏமாற்றிய தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக சிற்றாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மேலப்பாவூர்குளம் மற்றும் கீழப்பாவூர் பெரிய குளம் முழுவதும் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது.

    இதுபற்றி பொதுப்பணித்துறை அதிகாரி கூறுகையில், ‘நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 2518 குளங்கள் உள்ளன. இதில் 1221 குளங்கள் கால்வரத்து குளங்களும், 1297 குளங்கள் மானாவாரி குளங்களும் ஆகும். தற்போது தென்மேற்கு பருவமழை காரணமாக தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, சிவகிரி, களக்காடு, கடையம், அம்பை, சேரன்மகாதேவி, நெல்லை, பாளை பகுதி குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம், மணிமுத்தாறு, கடனா, ராமநதி, கருப்பாநதி, கொடுமுடியாறு, அடவிநயினார், குண்டாறு ஆகிய 8 அணைகளில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    இதன் காரணமாக தற்போது நெல்லை மாவட்டத்தில் சுமார் 150 குளங்கள் வரை நிரம்பி உள்ளது. மேலும் 500 குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பெரியகுளங்களில் 2 மாதத்திற்கு போதுமான தண்ணீரும், சிறிய குளங்களில் 1 மாதத்திற்கு போதுமான தண்ணீரும் உள்ளது‘ என்றார். #NellaiRain
    கேரளாவில் பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 3 ஆண்டுகளுக்கு பிறகு 142 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    கூடலூர்:

    கேரளாவிலும், மேற்கு தொடர்ச்சி மலையை யொட்டிய பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தீவிரமாக பெய்து வருகிறது.

    இடுக்கி மாவட்டத்திலும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் பெய்து வரும் மழையினால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் இன்று 134.40 அடியாக உயர்ந்தது. வினாடிக்கு 4394 கன அடி தண்ணீர் வருகிறது.

    அணையில் இருந்து 2300 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதில் 1600 கன அடி மின்சார உற்பத்திக்கும், 700 கன அடி இரைச்சல் பாலம் வழியாகவும் செல்கிறது. நீர் இருப்பு 5726 மி.கன அடியாக உள்ளது.

    155 அடி உயரம் உள்ள முல்லைப்பெரியாறு அணையில் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிற்கு பிறகு 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டு வருகிறது. அதன்படி முதன்முதலாக கடந்த 21.11.2014-ந் தேதி 142 அடி வரை தேக்கப்பட்டது.

    அதன்பிறகு 5.12.2015-ந் தேதி 2-வது முறையாக 142 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளாக போதிய அளவு மழை இல்லாததால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயத்திற்குகூட தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.

    தற்போது பெய்து வரும் மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதுடன் நீர்மட்டமும் கிடுகிடு என உயர்ந்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் இன்னும் ஒரு சில தினங்களில் 142 அடி வரை நீர்மட்டம் உயரும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு முல்லைப்பெரியாறு அணையை பார்வையிட்டு சென்ற மத்திய துணைக் குழுவினர் அணை பாதுகாப்பு குறித்து உறுதி செய்ததுடன் நீர்மட்டம் உயரும்போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அறிவுறுத்தி சென்றுள்ளனர். இதனால் 142 அடி உயரும் நாளை எதிர்பார்த்து விவசாயிகள் ஆவலுடன் காத்துள்ளனர்.

    பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் கூடுதல் தண்ணீரால் வைகை அணை நீர்மட்டமும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 71 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 50.62 அடியாக உள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 1957 கன அடி தண்ணீர் வருகிறது. திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்திற்காக 900 கன அடியும், மதுரை மாநகர குடிநீருக்காக 60 கன அடியும் என மொத்தம் 960 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 2076 மி.கன அடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.95 அடியாகவும், சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 121.65 அடியாகவும் உள்ளது.

    ×