என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொசஸ்தலை ஆறு"

    • பொது மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • புழல் ஏரிக்கு விநாடிக்கு 325 கன அடி நீர்வரத்து உள்ளது.

    சென்னை புழல் ஏரியில் இருந்து விநாடிக்கு 700 கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கொசஸ்தலை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் நீர்திறக்கப்பட்டுள்ளது. புழல் ஏரிக்கு விநாடிக்கு 325 கன அடி நீர் வரத்து உள்ளது.

    3,300 டிஎம்சி கொள்ளளவு கொண்ட ஏரியில் 3,006 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. அதாவது, 21 அடி உயரம் கொண்ட ஏரியில் நீர்மட்டம் 19 அடி உள்ளது.

    • மழை மேலும் தீவிரம் அடைந்தால் அம்மப்பள்ளி அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படும்.
    • கொசஸ்தலை ஆற்றில் நீர்வரத்து, வெள்ளப்பெருக்கை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    திருத்தணி:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று இரவு தொடங்கிய மழை இன்று காலையும் நீடித்து வருகிறது.

    சென்னையில் இன்று காலை பலத்த மழை கொட்டியது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை நீடிக்கிறது. ஆந்திராவிலும் கனமழை கொட்டி வருகிறது.

    ஆந்திர பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக சித்தூர் மாவட்டம் கிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள அம்மப்பள்ளி அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்தது. இதனால் 33 அடி உயரம் உள்ள இந்த அணை முழுவதும் நிரம்பியது.

    இந்த நிலையில் மழை நீடித்து வருவதால் அம்மப்பள்ளி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து உள்ளது.

    இதையடுத்து அம்மப்பள்ளி அணையில் இருந்து 200 கன அடி உபரி நீர் 2 மதகுகள் வழியாக திறக்கப்பட்டு உள்ளது.

    இந்த தண்ணீர் தமிழக எல்லையில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் பாய்ந்து வந்து கொண்டு இருக்கிறது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    கொசஸ்தலை ஆற்றில் அதிகம் தண்ணீர் பாயும்போது திருத்தணி அருகே உள்ள சமந்தவாடா, நெடியம், கனகம்மாசத்திரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள தரைப்பாலங்கள் மூழ்கும். எனவே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள தரைப்பா லங்களை பொதுமக்கள் கடக்கும் போது பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    வழக்கமாக அம்மப்பள்ளி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் பள்ளிப்பட்டு, சமந்தவாடா, நெடியம், திருத்தணி பகுதி வழியாக கொசஸ்தலை ஆற்றில் பாய்ந்து பூண்டி ஏரிக்கு வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

    மழை மேலும் தீவிரம் அடைந்தால் அம்மப்பள்ளி அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படும் என்று தெரிகிறது. இதையடுத்து கொசஸ்தலை ஆற்றில் நீர்வரத்து, வெள்ளப்பெருக்கை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    • கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் 20 கிலோமீட்டர் சுற்றிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
    • முதியவர்கள், பெண்கள், வேலைக்கு செல்பவர்கள் என பலதரப்பட்ட மக்களும் மிகவும் அவதியுற்று வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    வடகிழக்கு பருவமழையின் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆறு, ஏரி, குளங்கள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகிறது. இந்த நிலையில் திருவள்ளூர் அருகே விடையூர்-கலியனூர் இடையே செல்லும் கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மேல்விளாகம், கலியனூர், கலியனூர் காலனி, மணவூர், நெமிலியகரம், குப்பம் கண்டிகை, இராஜபத்மாபுரம், மருதவல்லிபுரம், ஒண்டிகுடிசை, சின்னம்மாபேட்டை, ஜாகீர் மங்கலம், பழையனூர், காபுல் கண்டிகை, உள்ளிட்ட 13 கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் 20 கிலோமீட்டர் சுற்றிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

    விடையூர் கலியனூர் இணைக்கும் வகையில் கடந்த 2016- 017-ம் ஆண்டு ரூ.3 கோடி 60 லட்சம் திட்டம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வந்த மேம்பால பணி கடந்த 5 ஆண்டுகளாக பாதியில் நிறுத்தப்பட்டு கிடப்பில் போடப்பட்டு உள்ளது. தற்போது கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதால் அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர்கள் விடையூர் பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கு ஆற்றின் குறுக்கே பாதியில் நிறுத்தப்பட்டுள்ள மேம்பால ஏணியில் ஏறி ஆபத்தான முறையில் சென்று வரும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் முதியவர்கள், பெண்கள், வேலைக்கு செல்பவர்கள் என பலதரப்பட்ட மக்களும் மிகவும் அவதியுற்று வருகிறார்கள்.

    வருடா வருடம் பருவமழை காலங்களில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் 13 கிராமங்கள் துண்டிக்கப்படுவதும், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், வேலைக்குச் செல்லாமல் வீட்டில் முடங்கி வருவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இத்தகைய அவல நிலையை போக்க கிடப்பில் போடப்பட்டுள்ள மேம்பாலத்தை அரசு விரைந்து முடித்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • தமிழக ஆந்திர எல்லையில் அமைந்துள்ள பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றில் தற்போது நீர் வந்து கொண்டிருக்கிறது.
    • ஆந்திர மாநிலம் அம்மம்பள்ளி அணையில் இருந்து நேற்று இரவு 170 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

    திருவள்ளூர்:

    வங்கக்கடலில் உருவான மாண்டஸ்' புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதனால் ஆந்திராவிலும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

    இந்த நிலையில் ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில், கிருஷ்ணாபுரம் பகுதியில் அம்மம்பள்ளி அணை உள்ளது. 33 அடி ஆழம் கொண்ட இந்த அணை கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் நிரம்பியது.

    இதனையடுத்து ஆந்திர மாநில அரசு கூடுதல் நீரை வெளியேற்றுவதற்காக 170 கன அடி உபரி நீரை இரண்டு மதகுகள் வழியாக திறந்துவிட்டது.

    தமிழக ஆந்திர எல்லையில் அமைந்துள்ள பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றில் தற்போது நீர் வந்து கொண்டிருக்கிறது. எனவே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இருக்கும் தரைப்பாலங்களைக் கடக்கும்போது பாதுகாப்பாக கடக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    கொசஸ்தலை ஆற்றில் வந்து கொண்டிருக்கும் நீரானது பூண்டி நீர் தேக்கத்தை விரைவில் வந்தடையும். இதனால் திருவள்ளூர் மாவட்டம் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக பள்ளிப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள 20 கிராமங்களை சேர்ந்த கரையோர மக்களுக்கு வெள்ள அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஆந்திர மாநிலம் அம்மம்பள்ளி அணையில் இருந்து நேற்று இரவு 170 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

    பள்ளிப்பட்டு சுற்றுப்புற பகுதியான வெளியகரம், நெடியம், சாமந்த வாடா தரைப்பா லத்துக்கு மேல் தண்ணீர் செல்வதால் பாலத்தை கடக்க முயல வேண்டாம். மேலும் பாதுகாப்பு பணியில் வருவாய்த்துறை, காவல்துறை, தீயணைப்பு துறை மற்றும் பொதுப் பணித்துறை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொதுமக்கள் கொசஸ்தலை ஆற்றை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர்.
    • உயர்மட்ட மேம்பாலத்தை போர்க்கால அடிப்படையில் கட்டிக்கொடுக்க பொது மக்கள் வேண்டுகோள்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், மெய்யூர்-மொண்ணவேடு இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் ஒன்று உள்ளது. மெய்யூர், கல்பட்டு, மாளந்தூர், ஏனம்பாக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருவள்ளூர் சென்றுவர இந்தப் பாலத்தை பயன்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில், கடந்த சில நாட்களாக மாண்டஸ் புயல் காரணமாக பூண்டி நீர்த்தேக்கத்தில் தண்ணீர் இருப்பு கிடுகிடுவென உயர்ந்தது. இந்நிலையில், ஏரியின் பாதுகாப்பைக் கருதி நேற்று புழல் ஏரியிலிருந்து உபரிநீரை அதிகாரிகள் திறந்துவிட்டனர். இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெய்யூர்- மொண்ணவேடு இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் கொசஸ்தலை ஆற்றை கடந்து செல்ல முடியாமல் வாகன போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.

    மேலும், இப்பாலம் சேதமடைந்ததால் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இன்று விடியற்காலை முதல் சித்தஞ்சேரி, மயிலாப்பூர் என மாற்றுப் பாதையில் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு திருவள்ளூர் சென்று வருகின்றனர். கடந்த ஆண்டு இப்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் ஒன்று கட்ட தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால், அந்த மேம்பால பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பணி நிறைவு பெறவில்லை. இதனால் பொதுமக்கள் கொசஸ்தலை ஆற்றை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர்.

    எனவே, சேதமடைந்த இந்த தரைப்பாலத்தை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து தர வேண்டும். உயர்மட்ட மேம்பாலத்தை போர்க்கால அடிப்படையில் கட்டிக் கொடுத்து அதனை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க வேண்டும் என இப்பகுதி கிராம பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் நீர்வரத்து அதிகரித்து வருகின்றது.
    • முழு கொள்ளளவை எட்டி வருவதால் பூண்டி ஏரியிலிருந்து வினாடிக்கு 5,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    திருவள்ளூர்:

    மாண்டஸ் புயல் காரணமாக திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

    இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் நீர்வரத்து அதிகரித்து வருகின்றது.

    முழு கொள்ளளவை எட்டி வருவதால் பூண்டி ஏரியின் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. வினாடிக்கு 5,000 கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

    கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் ஆந்திர மாநிலம் அம்மாபள்ளி அணை நீர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் இருந்து வரும் நீர் பூண்டி நீர்தேக்கத்திற்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் அதிகபட்ச கொள்ளளவான 35 அடியில் தற்போது 34 அடி வரை நீர் தேங்கியுள்ளது.

    இன்று மாலை நிலவரப்படி ஆந்திர மாநிலம் அம்மாபள்ளி அணையிலிருந்து திறந்துவிடப்பட்டுள்ள நீரானது தமிழக எல்லையான பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றில் கலந்து சுற்றுப்புற பகுதியில் உள்ள மழைநீர் வரத்து வினாடிக்கு 10,000 கன அடி மற்றும் கிருஷ்ணா கால்வாய் மூலம் 610 கன அடி நீர் என மொத்தம் 10,610 கன அடி வீதம் நீர் வரத்துகொண்டு இருக்கிறது.

    இதனால் தற்போது நீர்த்தேக்கத்தில் 2,823 மில்லியன் கன அடி நீர் உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 5,000 கன அடி உபரி நீரை பொதுப்பணி அதிகாரிகள் திறந்து கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டது. கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்பட்ட நீர் அதிக அளவு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதையடுத்து, பூண்டி கிராமத்தை அடுத்த சுற்றுப்புற கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்றாம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, ஏறையூர், பீமன் தோப்பு, கொரக்கதண்டலம், சோமதேவம்பட்டு, மெய்யூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், பாண்டிக்காவனூர், ஜெகநாதபுரம், புதுக்குப்பம், கன்னிபாளையம், வன்னிபக்கம், மடியூர், சீமாவரம், வெள்ளிவாயில்சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், காரனோடை, மீஞ்சூர், எண்ணூர் பகுதிகளில் கரையோர மக்களுக்கு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பூண்டி ஏரி மற்றும் கொசஸ்தலை, ஆரணி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் யாரும் ஏரியில் குளிக்க வேண்டாம் என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • அணையின் பாதுகாப்பு கருதி கடந்த 9 -ந்தேதி பூண்டி ஏரியில் இருந்து மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
    • ஊத்துக்கோட்டை திருவள்ளூர் இடையே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரி முழுவதுமாக நிரம்பினால் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

    அப்படி திறந்து விடப்படும் தண்ணீர் ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, மெய்யூர், அணைக்கட்டு, ஜனப்பம் சத்திரம் வழியாக பாய்ந்து எண்ணூர் பகுதியில் வங்கக் கடலில் கலக்கிறது.

    இந்தநிலையில் வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக பூண்டி ஏரி நீர் பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் ஏரிக்கு நீர்வரத்து அதிகமாகியது.

    மேலும் பள்ளிப்பட்டு அருகே உள்ள அம்மப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட தண்ணீரும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரும் பூண்டி ஏரிக்கு வந்தது.

    இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடு என்று உயர்ந்தது. அணையின் பாதுகாப்பு கருதி கடந்த 9 -ந்தேதி பூண்டி ஏரியில் இருந்து மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று காலை ஏரியில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தரைப்பாலத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தரைப்பாலம் வழியாக வாகன போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

    பொது மக்கள் தரைப் பாலத்தை கடப்பதை தடுக்க இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் இடையே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மாற்று மார்க்கத்தில் இயக்கப்படுகின்றன.

    ஊத்துக்கோட்டையில் இருந்து திருவள்ளூருக்கு செல்லும் வாகனங்கள் சீத்தஞ்சேரி, வெங்கல், தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலை வழியாக இயக்கப்படுகின்றன. அதேபோல் இதே மார்க்கத்தில் திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டைக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

    இதனால் ஊத்துக்கோட்டை திருவள்ளூர் இடையே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட் டுள்ளது. தொடர்ந்து கொசஸ்தலை ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்வதால் இன்று 2-வது நாளாக ஒதப்பை தரைப்பாலத்தில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருக்கிறது.

    • ஏரியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உபரி நீரை அதிகாரிகள் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விட்டனர்.
    • ஆற்றங்கரையில் வசிக்கும் பொதுமக்களுக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்திருந்தார்.

    பெரியபாளையம்:

    மாண்டஸ் புயல் காரணமாக கனமழை பெய்தது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் நீரின் இருப்பு கிடுகிடுவென உயர்ந்தது. திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஏரியின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் ஏரியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உபரி நீரை அதிகாரிகள் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விட்டனர். எனவே, ஆற்றங்கரையில் வசிக்கும் பொது மக்களுக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும், ஆற்றில் யாரும் குளிக்க கூடாது, துணி துவைக்க கூடாது என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், வெங்கல் அருகே உள்ள குருவாயல் ஊராட்சியை சேர்ந்த ஆரிக்கம்பட்டு கிராமம், பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்த நவீன்குமார்(வயது20) என்ற வாலிபர் நேற்று மாலை தனது நண்பர்களுடன் ஆரிக்கம்பட்டு கிராமத்தில் உள்ள திருக்கண்டலம் தடுப்பணையின் மேற்பகுதிக்கு சென்றுள்ளார். பின்னர், நவீன்குமார் செல்பி எடுத்தாராம். அப்போது நவீன்குமார் திடீரென தவறி கொசஸ்தலை ஆற்று வெள்ள நீரில் விழுந்துள்ளார்.

    இதனால் செய்வது அறியாமல் நண்பர்கள் கூக்குரல் இட்டனர். ஆனால் நவீன் குமார் கண்ணிமைக்கும் நேரத்தில் வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டார். இதைக் கண்டு நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக வெங்கல் காவல் நிலைய போலீசாருக்கு கிராம மக்கள் தகவல் அளித்தனர். மேலும், ஆவடி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் அளித்தனர். 10 பேர் கொண்ட மீட்பு குழுவினர் விரைந்து வந்து ட்ரோன் கேமரா, பைபர் படகு உள்ளிட்டவைகளின் மூலம் இன்று காலை முதல் தேடி வருகின்றனர். ஆனால், நவீன்குமாரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    • ஆவடி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் மூன்று நாட்களாக நவீன் குமார் உடலை தேடி வந்தனர்.
    • வாலிபர் விழுந்த இடத்தில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் முட்செடிகளுக்கு இடையே சிக்கி இருந்த உடலை மீட்டனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், வெங்கல் அருகே உள்ள குருவாயல் ஊராட்சியை சேர்ந்த ஆரிக்கம்பட்டு கிராமம், பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்த நவீன்குமார் (வயது20) என்ற வாலிபர் கடந்த புதன்கிழமை மாலை தனது நண்பர்களுடன் ஆரிக்கம்பட்டு கிராமத்தில் உள்ள திருக்கண்டலம் தடுப்பணையின் மேற்பகுதிக்கு சென்று செல்பி எடுத்தபோது திடீரென தவறி கொசஸ்தலை ஆற்று வெள்ள நீரில் விழுந்தார்.

    உடனடியாக வெங்கல் காவல் நிலைய போலீசாருக்கு கிராமமக்கள் தகவல் அளித்தனர். மேலும், ஆவடி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் மூன்று நாட்களாக நவீன் குமார் உடலை தேடி வந்தனர். ட்ரோன் கேமரா, பைபர் படகு உள்ளிட்டவைகளின் உதவிகளுடன் தேடினர்.

    இந்நிலையில், அந்த வாலிபர் விழுந்த இடத்தில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் திருக்கண்டலம் தனியார் செங்கல் தொழிற்சாலைக்கு எதிரே ஆற்றின் நடுவில் முட்செடிகளுக்கு இடையே சிக்கி இருந்த அவரது உடலை மீட்டனர். இதன் பின்னர் வெங்கல் காவல் நிலைய போலீசார் நவீன் குமார் உடலை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

    • ஒருவார காலத்திற்குள் பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையிலும், போக்குவரத்தை மேம்படுத்தும் வகையிலும் தற்காலிக தரைபாலம் அமைத்து தரப்படும்.
    • இன்னும் ஆறு மாத காலத்திற்குள் மேம்பால பணிகள் முற்றிலும் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், வெங்கல் அருகே மெய்யூர்- மொண்ணவேடு இடையே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இருந்த தரைப்பாலம் பூண்டி ஏரியின் உபரி நீர் திறக்கப்பட்டதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அடித்துச் செல்லப்பட்டது.

    இதனால் இருபதுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல கிலோமீட்டர் சுற்றிக்கொண்டு திருவள்ளூருக்கு சென்று வருகின்றனர்.

    இதுகுறித்து மாலைமலர் நாளிதழில் படத்துடன் செய்தி நேற்று பிரசூரிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று மாலை மெய்யூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற கட்டிடம் திறப்பு விழா, இரண்டு ட்ரான்ஸ்பார்மர்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைக்கும் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு,சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜன் மேற்கண்ட நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு சேதமடைந்த தரைப்பாலத்தை பார்வையிட்டார்.

    மேலும், புதியதாக கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகளையும் ஆய்வு செய்தார்.

    பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய போது, ஒரு வார காலத்திற்குள் பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையிலும், போக்குவரத்தை மேம்படுத்தும் வகையிலும் தற்காலிக தரைபாலம் அமைத்து தரப்படும். இன்னும் ஆறு மாத காலத்திற்குள் மேம்பால பணிகள் முற்றிலும் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனையும் விரைவில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று கூறினார்.

    இந்நிகழ்ச்சியின்போது பூண்டி ஒன்றிய திமுக செயலாளர்கள் டி.கே.சந்திரசேகர், பொன்னுசாமி, திமுக இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் தில்லை குமார், ஊராட்சி மன்ற தலைவர் லாவண்யா சரத்பாபு மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கட்சியின் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் உடன் இருந்தனர்.

    • வடசென்னை அனல்மின் நிலையங்களால் மீன்வளம், கடல்வளம் குறைந்து தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
    • அனல்மின் நிலைய அதிகாரிகள் தரப்பில் மின் கோபுரம் கட்டும் பணிகள் தொடங்கப் பட வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த அத்திப் பட்டில் வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது. இரு நிலைகளில் முதல் நிலையின் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட் மின் உற்பத்தியும் 2-வது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 வீதம் 1200 என மொத்தம் நாளொன்றுக்கு 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

    இந்நிலையில் வட சென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகத்திற்காக உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்க கொசஸ்தலை ஆற்றின் எண்ணூர் கழிமுக பகுதியில் மண் கொட்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

    இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி எண்ணூர் மீனவ மக்கள் நல சங்கத்தை சேர்ந்த 8 மீனவ கிராம மக்கள், கடந்த 10 நாட்களுக்கு முன்பு படகுகளில் கருப்பு கொடி கட்டி, மின் கோபுரம் அமைக்கும் இடத்திற்கு சென்று முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது அந்த பணிகள் நிறுத்தப்பட்டு, இரு தரப்பினரிடமும் கருத்து கேட்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

    இந்த பிரச்சினை குறித்து தகவல் அறிந்த பொன்னேரி தாசில்தார் செல்வகுமார், 8 மீனவ கிராமங்களை சேர்ந்த எண்ணூர் மீனவ மக்கள் நல சங்கத்தினரையும், வடசென்னை அனல் மின் நிலைய அதிகாரிகளையும் அழைத்து பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை நடத்தினார்.

    இதில் நெட்டுக்குப்பம், தாழங்குப்பம், சிவன்படை வீதி, எண்ணூர் குப்பம், முகத்துவார குப்பம், காட்டுக்குப்பம், சின்ன குப்பம், பெரிய குப்பம் ஆகிய 8 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது வடசென்னை அனல் மின் நிலையங்களால் மீன்வளம், கடல்வளம் குறைந்து தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. தற்போது 3-வது அனல் மின் நிலையம் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளதால் மின் விநியோகம் செய்ய உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்க கொசஸ்தலை ஆற்றின் கழிமுக பகுதியில் மண், கல் உள்ளிட்டவைகளை கொட்டி பணிகள் நடப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    ஆனால், அனல் மின் நிலைய அதிகாரிகள் தரப்பில் மின் கோபுரம் கட்டும் பணிகள் தொடங்கப் பட வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது.

    இரு தரப்பு கருத்துக்களையும் விசாரித்த தாசில்தார் செல்வகுமார், இன்னும் ஓரிரு தினங்களில் தாம் நேரில் வந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்தார்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு எண்ணூர் கொசஸ்தலை ஆற்றின் ஒரு பகுதி திடீரென மஞ்சள் நிறமாக மாறியது.
    • மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கொசஸ்தலை ஆற்று தண்ணீரை எடுத்து பரிசோதனை நடத்தினர்.

    திருவொற்றியூர்:

    எண்ணூரில் கொசஸ்தலை ஆறும், கடலும் கலக்கும் முகத்துவார பகுதி உள்ளது. இங்கு ஏராளமான மீன்களும், நண்டு, இறால்களும் கிடைக்கும்.

    இதில் எண்ணூரை சுற்றி உள்ள எண்ணூர் குப்பம், சின்ன குப்பம், பெரியகுப்பம். காட்டுகுப்பம், சிவன் படை வீதி குப்பம் உள்ளிட்ட 8 மீனவ கிராம மக்கள் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு எண்ணூர் கொசஸ்தலை ஆற்றின் ஒரு பகுதி திடீரென மஞ்சள் நிறமாக மாறியது. தொழிற்சாலை கழிவு நீரை ஆற்றில் கலந்ததால் இந்த மாசு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கொசஸ்தலை ஆற்று தண்ணீரை எடுத்து பரிசோதனை நடத்தினர்.

    இதற்கிடையே நேற்று மாலை கொசஸ்தலை ஆற்றின் ஒரு பகுதியில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இதைப் பார்த்த மீனவர்கள் அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

    இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

    எண்ணூரை சுற்றி உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கொசஸ்தலை ஆற்றில் தொடர்ந்து கலக்கப்பட்டு வருவதாகவும், இதனால் மீன்கள் இறப்பதாகவும் மீனவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×