search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ஒதப்பை தரைப்பாலத்தில் 2-வது நாளாக போக்குவரத்து நிறுத்தம்
    X

    கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ஒதப்பை தரைப்பாலத்தில் 2-வது நாளாக போக்குவரத்து நிறுத்தம்

    • அணையின் பாதுகாப்பு கருதி கடந்த 9 -ந்தேதி பூண்டி ஏரியில் இருந்து மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
    • ஊத்துக்கோட்டை திருவள்ளூர் இடையே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரி முழுவதுமாக நிரம்பினால் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

    அப்படி திறந்து விடப்படும் தண்ணீர் ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, மெய்யூர், அணைக்கட்டு, ஜனப்பம் சத்திரம் வழியாக பாய்ந்து எண்ணூர் பகுதியில் வங்கக் கடலில் கலக்கிறது.

    இந்தநிலையில் வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக பூண்டி ஏரி நீர் பிடிப்பு பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் ஏரிக்கு நீர்வரத்து அதிகமாகியது.

    மேலும் பள்ளிப்பட்டு அருகே உள்ள அம்மப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட தண்ணீரும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரும் பூண்டி ஏரிக்கு வந்தது.

    இதனால் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடு என்று உயர்ந்தது. அணையின் பாதுகாப்பு கருதி கடந்த 9 -ந்தேதி பூண்டி ஏரியில் இருந்து மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று காலை ஏரியில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தரைப்பாலத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தரைப்பாலம் வழியாக வாகன போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

    பொது மக்கள் தரைப் பாலத்தை கடப்பதை தடுக்க இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் இடையே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மாற்று மார்க்கத்தில் இயக்கப்படுகின்றன.

    ஊத்துக்கோட்டையில் இருந்து திருவள்ளூருக்கு செல்லும் வாகனங்கள் சீத்தஞ்சேரி, வெங்கல், தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலை வழியாக இயக்கப்படுகின்றன. அதேபோல் இதே மார்க்கத்தில் திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டைக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

    இதனால் ஊத்துக்கோட்டை திருவள்ளூர் இடையே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட் டுள்ளது. தொடர்ந்து கொசஸ்தலை ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்வதால் இன்று 2-வது நாளாக ஒதப்பை தரைப்பாலத்தில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×