என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "petrol bomb"

    • கொம்பையா, பாலசங்கு ஆகியோர் மீது ஏற்கனவே கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
    • முன்விரோதத்தில் ஆத்திரத்தில் இருந்த மாரியப்பன் மற்றும் அவரது கூட்டாளிகள் இந்த பெட்ரோல் குணடு வீசியது தெரியவந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள அடைச்சாணி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் ஆறுமுக செல்வம். இவரது நண்பர் மாரியப்பன்(வயது 25). இவர்கள் 2 பேரும் கூலி வேலை பார்த்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளக்கால் பொதுக்குடியில் நடந்த கோவில் திருவிழாவுக்கு சென்றனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் ஆறுமுக செல்வம் வீட்டின்மீது சிலர் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கோவில் கொடை விழா தகராறில் ஏற்பட்ட முன்விரோதத்தில் ஆத்திரத்தில் இருந்த மாரியப்பன் மற்றும் அவரது கூட்டாளிகள் இந்த பெட்ரோல் குணடு வீசியது தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில் நேற்று அதிகாலை காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த மாரியப்பன் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர்களிடம் இருந்த அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து அவர்கள் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    போலீசார் பிடியில் சிக்கியவர்கள் மாரியப்பன், அவரது கூட்டாளிகள் மேலச்செவல் கிராமத்தை சேர்ந்த கொம்பையா, பாலசங்கு, வீரவநல்லூர் அருகே உள்ள காருக்குறிச்சியை சேர்ந்த வேல்சாமி பாண்டியன், பள்ளக்கால் பொதுக்குடியை சேர்ந்த பொன்ராஜ் ஆகிய 5 பேர் என்பது தெரியவந்தது. இதில் கொம்பையா, பாலசங்கு ஆகியோர் மீது ஏற்கனவே கொலை வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

    அந்த கும்பல் ஆறுமுக செல்வத்தை தீர்த்துக்கட்டுவதற்காக சம்பவத்தன்று அரிவாளுடன் அங்கு வந்ததும், வீட்டின் வெளியே அவர் நடமாட்டம் இல்லாத காரணத்தினால் அந்த கும்பல் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு சென்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவில் திருவிழா தகராறில் ஆறுமுக செல்வம் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து மாரியப்பன் தரப்பினரை பாட்டிலால் தாக்கி உள்ளனர். அப்போது அந்த கைகலப்பு தொடர்பாக போலீசில் புகார் அளிக்க ஆழ்வார்குறிச்சி போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் மாரியப்பன் தரப்பினர் புகார் அளிக்காமல் சென்றுவிட்டனர்.

    இதனால் அவர்களால் அசம்பாவிதங்கள் ஏற்படக் கூடும் என்று போலீசார் சந்தேகித்த நிலையில், அன்றைய தினம் இரவிலேயே அந்த கும்பல் பெட்ரோல் குண்டை வீசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும், இளங்கோ தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
    • மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் திடீரென சுந்தரம் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி சென்றது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள அடைச்சாணி கிராமத்தில் யாதவர் தெருவை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 58). இவருக்கு இளங்கோ (22), தமிழன் ( 21) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

    இவர்கள் 2 பேரும் கூலி வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் அடைச்சானி அருகே உள்ள பள்ளக்கால் புதுக்குடி கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவுக்கு தனது நண்பர்களுடன் சென்றனர்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும், இளங்கோ தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தள்ளுமுள்ளு ஏற்படவே கோவிலில் நின்று கொண்டிருந்தவர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

    இந்த நிலையில் இளங்கோவன் தமிழனும் தங்களது வீட்டுக்கு வந்து விட்டனர். அன்று இரவில் சுந்தரம் குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்கி விட்ட நிலையில் நேற்று அதிகாலை 1 மணி அளவில் அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள் திடீரென சுந்தரம் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி சென்றது.

    இதில் அவர்கள் வீசிய பெட்ரோல் குண்டு சுந்தரம் வீட்டின் கதவு மீது விழுந்து தீப்பற்றி எரிந்தது. சத்தம் கேட்டு சுந்தரம் குடும்பத்தினரும், அக்கம் பக்கத்தினரும் ஓடி வந்து தீயை அணைத்தனர். அதனைத் தொடர்ந்து சுந்தரம் ஆழ்வார்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசி விட்டு சென்ற மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சம்பவத்தன்று கோவில் திருவிழாவில் தகராறு நடந்துள்ளதால் அந்த முன்விரோதத்தில் யாரேனும் பெட்ரோல் குண்டு வீசினார்களா? என்பது தொடர்பாக அதில் சம்பந்தப்பட்ட 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மர்ம நபர்கள் சேட்டு வீட்டின் கதவு மீது பெட்ரோல் குண்டை வீசி உள்ளனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே ஆனங்கூர் காட்டுவலவு பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு (42). விவசாயியான இவர் வெல்டிங் பட்டறையும் நடத்தி வருகிறார். இவரது மனைவி நிர்மலா (37). இவர்களுக்கு பிரீத்தி (19), சன்சிகா (13) என்ற 2 மகள்கள் உள்ளனர். சேட்டுவின் மூத்த மகள் பிரீத்தி கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். 2-வது மகள் சன்சிகா பெற்றோருடன் இருந்து பள்ளிக்கு சென்று வருகிறார்.

    நேற்று இரவு சேட்டு அவரது மனைவி நிர்மலா, மகள் சன்சிகா ஆகிய 3 பேரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் மர்ம நபர்கள் சேட்டு வீட்டின் கதவு மீது பெட்ரோல் குண்டை வீசி உள்ளனர். அப்போது பெட்ரோல் குண்டு வெடித்ததில் அதி பயங்கர சத்தம் கேட்டது. அப்போது தீப்பிடித்து உள் பக்க கதவு எரிந்தது. அதேபோல் வீட்டுக்குள்ளும் தீ பரவியது. இதில் வீட்டில் இருந்த பல்வேறு பொருட்கள் தீப்பிடித்து எரிந்தது. இந்த சத்தம் கேட்டு சேட்டு வெளிேய ஓடி வந்து பார்த்தார். அப்போது வீட்டு முன்பு தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவசர அவசரமாக வீட்டில் இருந்த தண்ணீரை எடுத்து ஊற்றி தீயை அணைத்தார்.

    பின்னர் வீட்டின் முன் பக்கம் உள்ள இரும்புகேட்டை திறக்க முயன்ற போது அது வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சேட்டு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் ஜேடர்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா, இன்ஸ்பெக்டர் இந்திராணி மற்றும் போலீசார் விைரந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    சேலத்தில் உள்ள தடய அறிவியல் நிபுணர் வடிவேல் தலைமையிலான குழுவினரும், கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டில் ஆய்வு நடத்தினர். இதுதொடர்பாக ஜேடர்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினார்களா? அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக வீட்டில் பெட்ரோல் குண்டு வீசினார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான பதிவுகளை வைத்து நள்ளிரவில் இந்த வழியாக வந்த நபர்கள் குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டுக்குள் சேட்டு அவரது மனைவி நிர்மலா, மகள் சன்சிகா 3 பேரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது பெட்ரோல் குண்டு வீசி அவர்களை கொல்ல திட்டமிட்டு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. சேட்டு சத்தம் கேட்டு எழுந்து வந்து தீயை அணைத்ததால் அதிர்ஷ்டவசமாக 3 பேரும் உயிர் தப்பினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கதவில் கீழ் துவாரம் வழியாக பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர்.
    • வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்ட வசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி திரு.வி.க. நகர் காமாட்சி அம்மன் நகரை சேர்ந்தவர் சுடலை முத்து. இவர் கேரள மாநிலம் கோட்டையம் பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

    கடந்த 13-ந் தேதி சுடலை முத்து மகன் மதன்குமார் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து முருகேசன் நகரில் உள்ள மதுபான கடைக்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது மதன் குமார் அவரது சக நண்பரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

    இதனைத் தொடர்ந்து மதன்குமார் தென்பாகம் போலீசாரால் கைது செய்யப்பட்டு பேரூரணி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.


    இந்நிலையில் திரு.வி.க. நகர் காமாட்சி அம்மன் நகரில் உள்ள சுடலைமுத்து வீட்டில் யாரும் இல்லாத போது சிலர் காம்பவுண்ட் சுவர் வழியாக ஏறி சென்று பெட்ரோல் கேன்களில் பெட்ரோல் கொண்டு வந்து கதவில் கீழ் துவாரம் வழியாக பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர்.

    இதுகுறித்து அருகில் உள்ளவர்கள் தொலைபேசி மூலம் சுடலைமுத்துவுக்கு தகவல் தெரிவிக்க அவர் உடனடியாக நேரில் வந்து பார்த்த போது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி இருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து தென்பாகம் போலீஸ் நிலையத்தில் சுடலை முத்து புகார் அளித்தார். சுடலைமுத்து மகன் மதன்குமார் ஏற்கனவே கைதாகி சிறையில் இருக்கும்போது சுடலைமுத்து குடும்பத்தாரை பழி வாங்க வேண்டும் என்று இதுபோன்று நடத்து இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்ட வசமாக உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • செந்தில் நகர் பகுதி பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
    • வெடிகுண்டு வீசுவதாக பேசிய வீடியோ பதிவு காட்சிகள், வாட்ஸ் அப்பில் வைரல் ஆகி வந்தது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி செந்தில் நகரில் வசிப்பவர்கள் நாகப்பட்டினம் மாவட்டம் திருமணஞ்சேரியை சேர்ந்த சந்தானகிருஷ்ணன் மகன்கள் வீரமணி(வயது 23) மற்றும் அன்புமணி(20). இவர்கள் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 18 ந்தேதி, நீலகிரி மாவட்டம் மசனகுடி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் திருமலை ராஜன் என்பவரின் மகன் பூபாலகிருஷ்ணன் கோவையில் இருந்து தாராபுரம் நோக்கி சென்ற போது அவரை வழிமறித்து, ரூ.20 ஆயிரம்,செல்போன் ஆகியவற்றை வீரமணி, அன்புமணி, மேலும் 2 கூட்டாளிகளுடன் சேர்ந்து வழிப்பறி செய்துள்ளனர்.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வந்துள்ளனர். இந்த நிலையில், செந்தில் நகர் பகுதியில் இவர்களால் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாகவும், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என செந்தில் நகர் பகுதி பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த நிலையில், புகார் அளித்தவர்களை கொலை செய்வதாகவும், போலீஸ் நிலையத்தின் மீது வெடிகுண்டு வீசுவதாகவும் இவர்கள் பேசிய வீடியோ பதிவு காட்சிகள், வாட்ஸ் அப்பில் வைரல் ஆகி வந்தது. இதையடுத்து இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் தையல் கடை மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசி சென்றதாக கூறப்படுகிறது.
    • பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக 3 பேரை பிடித்து விசாரணை

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி புதுப்பேட்டை திருவண்ணாமலை சாலை ராமர் கோவில் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 32). இவர் ஆர்.எஸ்.எஸ். இயக்க பிரமுகர். இவர் டிஜிட்டல் சேவா மையம் என்ற பெயரில் கடை நடத்தி வருகிறார்.

    இவரது கடைக்கு அருகில் வெங்கடாசலபதி என்பவர் தையல் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வெங்கடாசலபதி தனது தையல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இரவு 10.30 மணியளவில் அந்த தையல் கடை மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசி சென்றதாக கூறப்படுகிறது. நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் இது தொடர்பாக வெங்கடாசலபதிக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இது குறித்து அறிந்த ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சந்திரசேகரும் கடைக்கு சென்று பார்த்தார்.

    இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

    இது தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது தையல் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • தி.மு.க. பிரமுகர் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் எரிந்தது
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கரியான் செட்டி தெருவை சேர்ந்தவர் சங்கர். தி.மு.க தொண்டரணி நகர துணை அமைப்பாளர். இவர் பைனான்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சங்கர் குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டி ருந்தார். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம கும்பல் வீட்டின் வெளிப்புறத்தில் பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். அந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து தீ பிழம்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கர் வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த் துள்ளார். அப்போது வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த காரின் அருகில் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து சங்கர் திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த இலையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பந்தமாக திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    அவர்களை பிடிக்க தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • 75 சதவீத தீக்காயங்களுடன் கடந்த 2 வாரங்களாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் அர்ஜூனன் சிகிச்சை பெற்று வந்தார்.
    • பெட்ரோல் குண்டு வீச்சில் டாஸ்மாக் ஊழியர் சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர். ஆட்டோ டிரைவரான இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி அடிக்கடி மது குடித்தார். இதனால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.

    பள்ளத்தூரில் டாஸ்மாக் கடை இருப்பதால் தான் தனது தந்தை குடிப்பதாக கருதிய ராஜசேகரின் மகன் ராஜேஷ்(வயது23) என்பவர் கடந்த 3-ந்தேதி இரவு 10 மணியளவில் பள்ளத்தூரில் உள்ள டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டுகளை வீசினார். இந்த குண்டுகள் கடையில் வெடித்து அங்கிருந்த மதுபானங்கள், பொருட்கள் எரிந்து சேதமாகின.

    பெட்ரோல் குண்டு வீச்சின்போது கடையில் இருந்த சூப்பர்வைசர் பூமிநாதன், விற்பனையாளர் இளையான்குடி இரண்டான் குளம் கிராமத்தை சேர்ந்த அர்ஜூனன் (45) ஆகியோருக்கு தீக்காயம் ஏற்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக பள்ளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேசை கைது செய்தனர்.

    75 சதவீத தீக்காயங்களுடன் கடந்த 2 வாரங்களாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ஆபத்தான நிலையில் அர்ஜூனன் சிகிச்சை பெற்று வந்தார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

    இந்நிலையில் இன்று காலை அர்ஜூனன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பள்ளத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெட்ரோல் குண்டு வீச்சில் டாஸ்மாக் ஊழியர் சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. 

    • புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தனர்.
    • வழக்கு தொடர்பான ஆவணங்கள் ஏதாவது உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

    சேலம்:

    சேலம், அம்மாபேட்டை பகுதியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிர்வாகி ராஜன் என்பவரது வீட்டில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 25-ந் தேதி அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் அதிர்ஷ்டவசமாக யாரும் காயமின்றி தப்பினர்.

    தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் இந்த சம்பவம் குறித்து அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தனர்.

    பின்னர் பெட்ரோல் குண்டு வீசியதாக எஸ்.டி.பி.ஐ அமைப்பின் சேலம் மாவட்டத் தலைவர் சையது அலி, சேலம் கிளைத் தலைவர் காதர் உசேன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கோவை சிறையில் தற்போது அடைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில் கோர்ட் உத்தரவின் பேரில் சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி பெரியசாமி தலைமையிலான போலீசார், கிச்சிபாளையத்தில் உள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட தலைவர் சையத் அலி வீடு மற்றும் சேலம் அம்மாபேட்டையில் உள்ள சேலம் கிளை தலைவர் காதர்உசேன் ஆகியோர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

    இன்று காலை தொடங்கிய சோதனை, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வழக்கு தொடர்பான ஆவணங்கள் ஏதாவது உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் படுக்கை அறையின் ஜன்னல்கள் மற்றும் சுவர்களில் தீப்பிடித்து எரிந்தது.
    • சி.சி.டி.வி கேமிரா பதிவுகளில் மர்மநபர்கள் குறித்து ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடகரையாத்தூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வடகரையாத்தூர் பகுதியை சேர்ந்தவர் வைத்தியநாதன் (வயது 50). இவரது மனைவி பூங்கொடி (40). இவர் முன்னாள் ஊராட்சி தலைவர் ஆவார்.

    இந்நிலையில் நேற்று இரவு வைத்தியநாதன் குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில், அவரது வீட்டிற்கு பின்பக்கமாக வந்த மர்ம நபர்கள் படுக்கை அறை மற்றும் சமையல் அறை பகுதியில் பெட்ரோல் குண்டு வீசினர்.

    குண்டு வீசிய சத்தம் கேட்டு, வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து, உடனடியாக வெளியே ஓடி வந்து பார்த்தபோது, மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் படுக்கை அறையின் ஜன்னல்கள் மற்றும் சுவர்களில் தீப்பிடித்து எரிந்தது. கண்ணாடி பாட்டில்களும் சுக்கு நூறாக உடைந்து கிடந்தது.

    ஜன்னல் கதவுகள் மூடியிருந்ததால் அதிர்ஷ்டவசமாக குடும்பத்தினர் உயிர் தப்பினர். இதுகுறித்து வைத்தியநாதன் எடப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    தகவல் அறிந்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் மற்றும் டி.எஸ்.பி கலையரசன் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி கேமிரா பதிவுகளில் மர்மநபர்கள் குறித்து ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த குண்டு வீச்சு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் யார்? குண்டு வீசப்பட்டதற்கான காரணம் என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
    • தன்மீது பெட்ரோல் குண்டு வீசியதாக பொய்புகார் அளித்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் குமரபுரத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன்(வயது32).

    இவர் அன்னூரில் உள்ள பேக்கரியில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார். அந்த புகாரில், பா.ஜ.கவை சேர்ந்த மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார், மேட்டுப்பாளையம் நகர பா.ஜ.க தலைவர் உமாசங்கர் ஆகியோர் தன் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டதாக தெரிவித்தார்.

    புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், விஸ்வநாதன், தன்னை பா.ஜ.கவில் சேர்த்து கொண்டு கட்சி பொறுப்பு வழங்குமாறு, பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார், மேட்டுப்பாளையம் நகர பா.ஜ.க தலைவர் உமாசங்கரிடம் கேட்டு வந்துள்ளார்.

    ஆனால் இவரின் நடவடிக்கை பிடிக்காததால் கட்சியில் சேர்த்து கொள்ள இவர்கள் தயக்கம் காட்டி வந்தனர். இருப்பினும் விஸ்வநாதன் இவர்களை சந்தித்து தொடர்ந்து தன்னை பா.ஜ.கவில் சேர்க்க வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் சேர்த்து கொள்ளவே இல்லை.

    இதனால் அவர்கள் இருவரையும் பழிவாங்க திட்டமிட்டுள்ளார். இதற்காக சம்பவத்தன்று வீட்டில் இருந்த விஸ்வநாதன் அங்கு ஏற்கனவே தயாராக வைத்திருந்த பெட்ரோலை தன்மீது ஊற்றி தானே தீ பற்ற வைத்து கொண்டு, காழ்புணர்ச்சி காரணமாக பா.ஜ.கவை சேர்ந்த சதீஷ்குமார், உமாசங்கர் ஆகியோர் தன்மீது பெட்ரோல் குண்டு வீசியதாக பொய்புகார் அளித்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் விஸ்வநாதனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் மேட்டுப்பாளையத்தில் பெரும் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

    • கடைக்கு வந்த 2பேர் பானி பூரி சாப்பிட்டு உள்ளனர்.
    • பேக்கரிக்கு வந்து ‘மீதி சில்லறை வேண்டும்’ என்று தகராறு செய்துவிட்டு சென்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் கொடுவாயை சேர்ந்தவர் சதீஷ்குமார்(வயது 33). இவர் பெருந்தொழுவில் பேக்கரி வைத்துள்ளார். நேற்று மாலை இவரது கடைக்கு வந்த 2பேர் பானி பூரி சாப்பிட்டு உள்ளனர். அதில் உப்பு குறைவாக இருப்பதாக கூறி வாக்குவாதம் செய்துவிட்டு, பணத்தை வீசிவிட்டு சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் மீண்டும் பேக்கரிக்கு வந்து 'மீதி சில்லறை வேண்டும்' என்று தகராறு செய்துவிட்டு சென்றனர்.

    பின் மீண்டும் கடைக்கு வந்த அவர்கள் பெட்ரோல் நிரப்பிவந்த மதுபாட்டிலை பேக்கரி மீது வீசியுள்ளனர். டீ குடிக்க வந்தவர்கள் அலறி அடித்து வெளியே வந்துள்ளனர். இதற்கிடையே இருவரும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளனர். தீப்பற்றவைத்து பாட்டிலை வீசாததால் பெரும் சேதம் எதுவும் நடக்கவில்லை. அவிநாசிபாளையம் போலீசார் வழக்கு பதிந்து, பெட்ரோல் குண்டு வீசியவர்கள் யார் என்று விசாரிக்கின்றனர். அங்குள்ள 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

    ×