search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nitin gadkari"

    • நாக்பூர் தொகுதிக்காக தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டு இருக்கிறது.
    • நிதின் கட்கரி தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    மத்திய அமைச்சரும், நாக்பூர் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான நிதின் கட்கரி நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்காக தனது சொந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். நாக்பூர் தொகுதிக்காக மட்டுமே இந்த தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    வரவிருக்கும் தேர்தலில் வெற்றி பெற்றால், தனது தொகுதி மக்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்பதை நிதின் கட்கரி தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதுதவிர கடந்த பத்து ஆண்டுகளில் அவர் செய்த பணி குறித்த தகவல்களையும் அதில் சேர்த்துள்ளார்.

    அந்த வகையில், மூன்றாவது முறை வெற்றி பெறும் பட்சத்தில் நாக்பூரை சுத்தமாகவும், அழகாகவும் மாற்றுவது தொடர்பான பணிகளில் ஈடுபடுவதாக அவர் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டில் சுகாதாரம், வளர்ச்சி உள்ளிட்ட பிரிவுகளில் நாக்பூரை முதல் ஐந்து நகரங்களில் ஒன்றாக மாற்றுவதாக தெரிவித்துள்ளார்.

    மேலும், மத்திய மற்றும் மாநில அரசுகளின் உதவியோடு சேரிகளை ஒழுங்குப்படுத்தி, புதிய வீடுகளை கட்டித் தருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். இது தொடர்பான பணிகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் அதிக பூங்காக்கள் அமைக்கப்படும், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பூங்காக்கள் புதுப்பிக்கப்படும்.

    நாக்பூரில் மட்டும் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். 2029 ஆம் ஆண்டிற்குள் விதர்பா பகுதியில் ஐந்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும். 2070 ஆம் ஆண்டு வரை தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என நிதின் கட்கரி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக குறிப்பிட்டுள்ளார். 

    • மத்திய மந்திரியாக இருக்கும் நிதின் கட்கரி பெயர் பா.ஜனதாவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம் பெறவில்லை.
    • பா.ஜனதா அவமதித்தால் எங்களுடன் வந்து விடுங்கள் என உத்தவ் தாக்கரே ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் நிதின் கட்கரி. இவர் மத்திய மந்திரியாக உள்ளார். தனது மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர்.

    பா.ஜனதா முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் மூத்த தலைவர்கள் பலரது பெயர் இடம் பெற்றிருந்தது. ஆனால், நிதின் கட்கரி பெயர் இடம் பெறவில்லை. அவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படுவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அவர் அவமதிக்கப்படுகிறார் என மகாராஷ்டிர மாநிலத்தின் எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.

    இது தொடர்பாக சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே, அவமதிக்கப்பட்டால் எங்களுடைய கூட்டணிக்கு வந்துவிடுங்கள் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

    இது தொடர்பாக உத்தவ் தாக்கரே கூறுகையில், "நீங்கள் பா.ஜனதா கட்சியால் அவமதிக்கப்பட்டால் மகா விகாஷ் அகாதி (உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ்) கூட்டணிக்கு வந்து விடுங்கள். இதை இரண்டு நாட்களுக்கு முன்னதாக நிதின் கட்காரியிடம் சொன்னேன். தற்போதும் சொல்கிறேன்.

    உங்களுடைய வெற்றியை நாங்கள் உறுதி செய்வோம். நாங்கள் அரசு அமைத்த பிறகு எங்களது அரசாங்கத்தில் உங்களுக்கு மந்திரி பதவி வழங்குவோம். அது அதிகாரமிக்க பதவியாக இருக்கும்" என்றார்.

    உத்தவ் தாக்கரே இவ்வாறு கூறியிருந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில துணை முதல்வராக இருக்கும் தேவேந்திர பட்னாவிஸ் "தெருவில் நிற்கும் ஒருவர் மற்றொருவரை பார்த்து நான் உன்னை அமெரிக்க ஜனாதிபதியாக்குகிறேன் என்று சொல்வது போல் உள்ளது" என கிண்டல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சாலை, ஏழை மக்கள், குடிநீர் குறித்து நிதின் கட்கரி பேட்டி அளித்துள்ளார்.
    • பேட்டியின் ஒரு பகுதியை மட்டும் எடுத்து வெளியிட்டதாக கட்கரி குற்றச்சாட்டு.

    மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரியாக நிதின் கட்கரி உள்ளார். இவர் ஒரு பேட்டியில் "கிராமங்கள், ஏழைகள், தொழிலாளர்கள், விவசாயிகள் மகிழ்ச்சியாக இல்லை. கிராமங்களில் சிறந்த சாலைகள் இல்லை. குடிக்க சுத்தமான குடிநீர் இல்லை, நல்ல மருத்துவமனைகள் இல்லை. நல்ல பள்ளிக்கூடம் இல்லை" எனக் குறிப்பிடுவது போன்ற வீடியோவை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

    இது நிதின் கட்கரிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் வீடியோ தனது பேட்டியின் ஒரு பகுதி. அப்படி இருந்த நிலை மாற்றப்பட்டு தங்களது ஆட்சி காலத்தில் சிறந்த சேவையை செய்துள்ளோம் எனத் தெரிவித்திருந்தேன்.

    அந்த பேட்டியை திரித்து, சிதைத்து தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் காங்கிரஸ் வீடியோ வெளியிட்டுள்ளது. இன்னும் 24 மணி நேரத்திற்குள் காங்கிரஸ் இந்த வீடியோவை நீக்க வேண்டும். மூன்று நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நோட்டீஸ் கிடைத்த 24 மணி நேரம், மூன்று நாட்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் அக்கட்சியின் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோருக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    • தங்களுடைய சித்தாந்தத்தின் அடிப்படையில் உறுதியாக இருக்கும் மக்கள் இருக்கிறார்கள்.
    • ஆனால், அதுபோன்று இருக்கும் நபர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது.

    மும்பையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களுடைய முன்மாதிரியான பங்களிப்பிற்காக விருது வழங்கும் விழா லோக்மாத் மீடியா குழுவினரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் மத்திய அமைச்சர் நிதிக் கட்கரி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    எந்த கட்சியின் ஆட்சியாக இருந்தாலும் நன்றாக வேலை செய்யும் நபருக்கு ஒருபோதும் மரியாதை கிடைக்காது. அதேபோல் மோசமாக வேலை செய்யும் நபர் ஒருபோதும் தண்டிக்கப்படமாட்டார் (யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை). எப்போதும் நகைச்சுவைக்காக இதை நான் கூறுவதுண்டு.

    நம்முடைய விவாதம், ஆலோசனை, மாறுபட்ட கருத்துகள் பிரச்சினை இல்லை. நம்முடைய பிரச்சினை ஐடியா குறைபாடுதான்.

    தங்களுடைய சித்தாந்தத்தின் அடிப்படையில் உறுதியாக இருக்கும் மக்கள் இருக்கிறார்கள். ஆனால், அதுபோன்று இருக்கும் நபர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது. இப்படி நடைபெற்று வருவது, ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.

    பிரபலம் மற்றும் புகழ் அவசியம்தான். ஆனால், பாராளுமன்றத்தில் அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை விட, அவர்களுடைய தொகுதி மக்களுக்கு அவர்கள் எப்படி பணியாற்றினார்கள் என்பது முக்கியமானது.

    நீண்ட காலத்திற்குப் பிறகு நமது ஜனநாயகம் மிகவும் வலுப்பெறப் போகிறது என்பதை இன்று உணர்கிறேன். நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் மரியாதையையும் உயர்த்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.

    இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

    லாலு பிரசாத்தின் பேச்சுத்திறமையை வெகுவாக பாராட்டிய அவர், முன்னாள் பாதுகாப்பு மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸிடம் இருந்து நடத்தை, எளிமை, ஆளுமை ஆகியவை குறித்து அதிக அளவில் கற்றுக் கொண்டேன். வாஜ்பாய்க்கு பிறகு தன்னை மிகவும் கவர்ந்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் எனத் தெரிவித்துள்ளார்.

    • நெடுஞ்சாலைகளில் சரியான தூரத்திற்கு வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள், தரத்தில் சமரசம் செய்யாமல் கட்டுமான செலவைக் குறைக்க வேண்டும்.

    புதுடெல்லி:

    மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி கூறியதாவது:-

    தற்போது நெடுஞ்சாலை கட்டணங்கள் சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்பட்டு வருகிறது. இனி சுங்கச்சாவடிகளுக்கு பதில் ஜி.பி.எஸ். தொழில்நுட்பம் மூலம் நெடுஞ்சாலை கட்டணங்கள் வசூலிக்கும் புதிய முறை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

    போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், நெடுஞ்சாலைகளில் சரியான தூரத்திற்கு வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், வாகனங்களை நிறுத்தாமல் தானியங்கி முறையில் கட்டணத்தை வசூலிக்கும் வகையில் நவீன கேமராக்களை (ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரீடர் கேமரா) அமைக்கும் திட்டமும் ஆய்வு செய்யப்பட்டது.

    கடந்த 2018-19-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கான சராசரி காத்திருப்பு நேரம் 8 நிமிடங்கள் என்று இருந்தது.

    பின்னர் 2020-21 மற்றும் 2021-22-ம் ஆண்டுகளில் 'பாஸ்டேக்' முறை அமல்படுத்தப்பட்ட பின்னர் வாகனங்களின் காத்திருப்பு நேரம் 47 வினாடிகளாக குறைக்கப்பட்டது. இருப்பினும் 'பீக் ஹவர்ஸ்' சமயங்களில் சுங்கச்சாவடிகளில் இன்னும் சில தாமதங்கள் உள்ளன.

    நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள், தரத்தில் சமரசம் செய்யாமல் கட்டுமான செலவைக் குறைக்க வேண்டும்.

    மேற்கண்டவாறு மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறினார்.

    • கடந்த ஆண்டில் நாடுமுழுவதும் 1.6 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர்.
    • அதிக விபத்துகள் நடந்த மாநிலங்களில் உ.பி. முதலிடத்திலும், தமிழகம் 2வது இடத்திலும் உள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் சாலை விபத்துக்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அவர் கூறியது வருமாறு:

    கடந்த ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் 1,68,491 பேர் உயிரிழந்துள்ளனர். இது 2021ல் 1,53,972 ஆகவும், 2020ல் 1,38,383 ஆகவும் இருந்தது.

    அதேபோல், 2022-ம் ஆண்டில் 4,61,312 சாலை விபத்துகள் நடந்துள்ளன. 2021ல் 4,12,432 சாலை விபத்துகளும், 2020ல் 3,72,181 சாலை விபத்துகளும் நடந்துள்ளன.

    கடந்த ஆண்டு அதிகபட்சமாக உ.பி.யில் 22,595 சாலை விபத்துகள் நடந்தன. இதையடுத்து தமிழகத்தில் 17,884, மகாராஷ்டிராவில் 15,224, ம.பி.யில் 13,427, கர்நாடகாவில் 11,702, டெல்லியில் 1,461 சாலை விபத்துகள் நடந்தன.

    அதி வேகமாக கார் ஓட்டுதல், மொபைல் போன் பயன்படுத்துதல், போதையில் வாகனத்தை இயக்குதல், தவறான பாதையிலும், ஒழுங்கீனமாகவும் வாகனங்களை இயக்குதல், சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரிவதைக் கண்டுகொள்ளாது இருத்தல், ஹெல்மெட், சீட் பெல்ட் போன்ற பாதுகாப்பு கவசங்களை அணியாமல் இருத்தல், வாகனங்களின் மோசமான நிலைமை, மோசமான வானிலை மற்றும் சாலை, வாகனம் இயக்குபவர்கள், சாலையில் நடந்து சென்றவர்களின் தவறு காரணமாக சாலை விபத்துகள் நடந்தன என தெரிவித்துள்ளார்.

    • ஏக்நாத் ஷிண்டே உத்தவ் தாக்கரேயிடம் இருந்து சிவசேனா கட்சியை கைப்பற்றிக் கொண்டார்
    • பாலாசாகேப் தாக்கரே உருவாக்கி உத்தவ் தாக்கரேயிடம் ஒப்படைத்ததுதான் உண்மையான சிவசேனா- சுலே

    மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி மோதல் ஏற்பட்டு சரத் பவார்- அஜித் பவார் இடையே போட்டி நிலவி வருகிறது. அதற்கு முன்னதாக சிவசேனா கட்சியை உத்தவ் தாக்கரேயிடம் இருந்து, ஏக்நாத் ஷிண்டே கைப்பற்றிக் கொண்டார்.

    அம்மாநிலத்தில் பா.ஜனதா- சிவசேனா- தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யும், சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சுலே கூறியதாவது:-

    என்னைப் பொறுத்தவரையில் பா.ஜனதா கட்சியில் உண்மை பேசும் ஒரே நபர் நிதின் கட்கரிதான். அதேபோல் மகாராஷ்டிராவில் ஒரேயொரு சிவசேனாதான். அது மறைந்த பாலாசாகேப் தாக்கரேவால் உருவாக்கப்பட்டது. அவர் உயிரோடு இருக்கும்போது உத்தவ் தாக்கரேயிடம் பொறுப்பை ஒப்படைத்தார். தற்போது அதன் நகல் உள்ளது. ஆனால் மக்களுக்கு தங்கத்திற்கும், வெண்கலத்திற்கும் இடையிலான வேறுபாடு தெரியும்.

    இவ்வாறு தெரிவித்தார்.

    ஒரு பேட்டியின்போது உண்மையான சிவசேனா குறித்து நிதின் கட்கரி கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக சுப்ரியா சுலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    • புது டெல்லியில் ஒரு சந்திப்பில் நிதின் கட்கரி உரையாற்றினார்
    • சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அந்நிறுவனங்கள் விலையை ஏற்றுகின்றன

    இந்தியாவின் ஆளும் பா.ஜ.க. அரசாங்கத்தின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருப்பவர் நிதின் கட்கரி (66).

    இந்திய தலைநகர் புது டெல்லியில், "க்ரிசில் இந்தியா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் கான்க்லேவ் 2023" எனும் இந்தியாவின் உள்கட்டமைப்பில் பங்கு பெறும் நிறுவனங்களுக்கான ஒரு சந்திப்பில் அவர் உரையாற்றினார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது;

    அரசாங்கம் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதை ஊக்குவித்தாலும் உள்கட்டமைப்பு அமைப்பதில் பங்கு பெறும் நிறுவனங்கள் தற்போதைய தொழில்நுட்பங்களுக்கு மாற தயங்குகின்றன. இதனால் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனது திட்டங்களுக்கு டிபிஆர் எனும் 'விரிவான திட்ட அறிக்கைகள்' (Detailed Project Reports) தயாரிக்க மிகுந்த சிரமங்களை சந்திக்கின்றன. இது மட்டுமின்றி சிமெண்ட் மற்றும் எக்கு தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களுக்குள் 'ரகசிய கூட்டமைப்பு' ஒன்றை உருவாக்கி விலை குறையாமல் பார்த்து கொள்கின்றன. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அந்நிறுவனங்கள் விலையை ஏற்றுவதையும் வழக்கமாக கொண்டுள்ளன. நிலையின்றி அடிக்கடி உயரும் விலையினால் டிபிஆர் உருவாக்குவது மிக கடினமாக உள்ளது. எங்குமே ஒரு முழுமையான டிபிஆர் உருவாக்கப்படுவதில்லை. தயாரிக்கப்படும் திட்ட அறிக்கைகளிலும் பல தவறுகள் இடம்பெறுகின்றன. சரக்கு போக்குவரத்திற்கான செலவினங்கள் இந்தியாவில் 14லிருந்து 16 சதவீதம் உள்ளது. ஆனால் சீனாவில் 8லிருந்து 10 சதவீத அளவிலேயே உள்ளது. இதனால் திட்டங்களுக்கான செலவுகள் வரையறுக்கப்பட்டதை விட அதிகமாகி விடுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மழை சேதத்தால் நெடுஞ்சாலைகளில் குண்டு-குழிகள் உருவாவதால் அது குறித்து கவனம் செலுத்தப்படும்.
    • தேசிய நெடுஞ்சாலைகளில் தண்ணீர் தேங்குவது குறித்து புகார்கள் வருகின்றன.

    புதுடெல்லி:

    டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி கூறியதாவது:-

    இந்த ஆண்டு இறுதிக்குள், நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளை குண்டு-குழி இல்லாதது ஆக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான கொள்கை உருவாக்கப்படுகிறது.

    நெடுஞ்சாலைகளில் பள்ளங்கள் உருவாவதை தவிர்க்கும் வகையில், ஒப்பந்ததாரர்களின் செயல்திறன் அடிப்படையிலும், குறுகிய கால அளவிலும் ஒப்பந்தங்கள் அளிப்பதில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் உறுதியாக உள்ளது.

    கட்டி, இயக்கி, மாற்றம் செய்யும் முறையில் நெடுஞ்சாலைகள் நன்றாக பராமரிக்கப்படுவதால் அந்த முறை விரும்பப்படுகிறது. மழை சேதத்தால் நெடுஞ்சாலைகளில் குண்டு-குழிகள் உருவாவதால் அது குறித்து கவனம் செலுத்தப்படும்.

    தேசிய நெடுஞ்சாலைகளில் தண்ணீர் தேங்குவது குறித்து புகார்கள் வருகின்றன. அதுதொடர்பாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    நகராட்சி கழிவுகள் போன்றவற்றை சாலை கட்டுமானத்தில் பயன்படுத்துவது தொடர்பாக மற்றொரு தேசிய கொள்கையை உருவாக்குவது குறித்தும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. கழிவுகளே தற்போது பெரும் பிரச்சினையாக உள்ள சூழலில், இது எல்லோருக்கும் நன்மை பயப்பதாக அமையும். வரும் 2070-ம் ஆண்டு பூஜ்ஜிய கார்பன் வெளியேற்றம் என்ற பிரதமர் மோடியின் இலக்கை நனவாக்கவும் இது உதவும்.

    பிரதமர் மோடி துவங்கியுள்ள 'தூய்மையே சேவை' திட்டத்தின்கீழ் பல்வேறு பசுமை முயற்சிகளை நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டீசல் எரிபொருளுக்கு எதிரானவன் அல்ல, டீசல் வாகனங்களுக்கு நாங்கள் எந்த வரியும் விதிக்கப்போவதில்லை.
    • மாசுபாட்டைக் குறைக்க மாற்று எரிபொருளில் கவனம் செலுத்துவதே சிறந்த வழி என்பதை தொழில்துறைக்கு பரிந்துரைக்கிறேன்.

    புதுடெல்லி:

    டெல்லியில் கடந்த 12-ந்தேதி நடைபெற்ற மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் ஆண்டு கூட்டத்தில் மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் "காற்று மாசினை குறைக்கும் வகையில் டீசல் என்ஜின் வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்க மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை விடுத்துள்ளேன்" என கூறினார். இது சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து டீசல் வாகனங்களுக்கு கூடுதல் வரிவிதிக்கும் திட்டம் அரசிடம் இல்லை என நிதின் கட்காரி விளக்கமளித்தார்.

    இந்த நிலையில் டெல்லியில் தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த நிதின் கட்காரி இந்த விவகாரம் குறித்து மீண்டும் விளக்கமளித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், "நான் டீசல் எரிபொருளுக்கு எதிரானவன் அல்ல, டீசல் வாகனங்களுக்கு நாங்கள் எந்த வரியும் விதிக்கப்போவதில்லை. மாசுபாட்டின் பார்வையில், டீசல் மிகவும் ஆபத்தானது. அது உண்மையில் நாட்டில் சுகாதார பிரச்சினையை ஏற்படுத்துகிறது. எனவே மாசுபாட்டைக் குறைக்க மாற்று எரிபொருளில் கவனம் செலுத்துவதே சிறந்த வழி என்பதை தொழில்துறைக்கு பரிந்துரைக்கிறேன்" என கூறினார். 

    • டீசல் வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
    • மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி பரிந்துரை செய்துள்ளார்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் இந்த வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்பட்டது.

    இந்நிலையில், மாசு வரி என்ற பெயரில் டீசல் வாகனங்களுக்கு கூடுதல் ஜி.எஸ்.டி. வரி விதிக்க மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி விளக்கம் அளித்துள்ளார்.

    • கடந்த 2021-ம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்தது.
    • கடந்த ஆண்டு ஜூலை மாதம் டெண்டர் விடுவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

    சென்னை:

    சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரை உயர்மட்ட பறக்கும் சாலை அமைக்கும் திட்டம் கடந்த 2009-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், முதலமைச்சர் கருணாநிதி ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது.

    கனரக வாகனங்கள் இந்த சாலையை பயன்படுத்தி விரைவாக துறைமுகத்திற்கு சென்று வர இத்திட்டம் தொடங்கப்பட்டது. இதன்மூலம் சென்னை நகரின் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று கருதப்பட்டது.

    இந்தநிலையில் 2011-ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் இப்பணிகள் கிடப்பில் போடப்பட்டன. கூவம் ஆற்றில் தூண்கள் அமைப்பதால் சுற்றுச்சூழல் பிரச்சினை ஏற்படும் எனக்கூறி ஜெயலலிதா இந்த திட்டத்தை முடக்கினார். பின்னர் 10 ஆண்டுகளாக பணிகள் நடைபெறாமல் இருந்தது.

    கடந்த 2021-ம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்தது. இதையடுத்து மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் மீண்டும் புத்துயிர் பெற்றது.

    இத்திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட முயற்சிகளால் உயர்மட்ட சாலை அமைக்க தமிழ்நாடு அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுக கழகம், இந்திய கடற்படை ஆகியவற்றிக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் டெண்டர் விடுவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஆனால் பணிகள் மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டதால் தாமதமானது. பின்னர் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் டெண்டர் கோரப்பட்டது. இத்திட்டம் முதலில் ரூ.3,204 கோடியில் செயல்படுத்த முன்மொழியப்பட்டது. ஆனால் உயர்த்தப்பட்ட மேம்பாலம் இரண்டு நிலைகளாக (டபுள் டெக்கர்) மறுவடிவமைப்பு செய்யப்பட்டதால் பின்னர் ரூ.5,721.33 கோடியாக மாற்றப்பட்டது. மேம்பால பணிகள் 4 பகுதிகளாக பிரித்து செயல்படுத்தப்படுகிறது. மேம்பாலத்தின் மொத்த நீளம் 20.565 கி.மீ. ஆகும். இந்த சாலைக்கு சுற்றுச்சூழல், ரெயில்வே துறை, கடலோர ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றிடம் இருந்து அனுமதி பெறப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான உயர்மட்ட வழித்தடத்தின் ஒரு பகுதி இரட்டை தளமாக அமைக்கும் பணி ஒரு மாதத்தில் தொடங்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் அரசு மேற்கொண்டுள்ள திட்டங்களை ஆய்வு செய்த மத்திய மந்திரி கட்கரி, அனைத்து நெடுஞ்சாலைப் பணிகளும் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

    இதுகுறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூறுகையில், மேம்பாலம் கட்டுவதற்கான ஒப்பந்ததாரர் இறுதி செய்யப்பட்டுள்ளார். ஆனால் இன்னும் வங்கி உத்தரவாதத்தை சமர்ப்பிக்காததால் பணிக்கான உத்தரவு இன்னும் வழங்கப்படவில்லை. உத்தரவாதத்தை சமர்ப்பித்ததும், வேலை தொடங்கும் என்று தெரிவித்துள்ளது.

    மேம்பாலத்தின் ஒரு பகுதி டபுள் டெக்கராக இருக்கும். துறைமுகத்தை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மேலே இருக்கும் பாலத்தை பயன்படுத்தும் வகையில் அமைக்கப்படவுள்ளது.

    மேல் பாலத்தில் மற்ற வாகனங்கள் உள்ளே நுழையவோ வெளியேறவோ வழிகள் இருக்காது.

    முன்னதாக, நுழைவு மற்றும் வெளியேறும் பாதைகள் துறைமுகம் மற்றும் பாலத்தின் முடிவில் மட்டுமே இருக்கும்படி முன்மொழியப்பட்டது. இப்போது, 13 பகுதிகளில் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் வழிகள் வகுக்கப்பட்டுள்ளது.

    இந்த மேம்பாலம் துறைமுக வளாகத்தில் தொடங்கி, கோயம்பேடு வரை கூவம் ஆற்றின் கரையில் தொடரும். தொடர்ந்து மதுரவாயல் வரை தற்போதைய பூந்தமல்லி நெடுஞ்சாலையுடன் இணைக்கப்பட்டு மேம்பாலம் அமைய உள்ளது. சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், அமைந்தகரை, நுங்கம்பாக்கம், அரும்பாக்கம் வழியாக மேம்பாலம் செல்லும். மேம்பாலத்திற்கான நிலத்தை அரசு ஏற்கனவே கையகப்படுத்தியுள்ளது.

    சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திடம் இருந்து இதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த பறக்கும் சாலை திட்டம் முடிவுக்கு வரும்போது சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையே போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

    ×