என் மலர்
நீங்கள் தேடியது "CPIM"
- பாஜகவுடன் தான் தொகுதி பங்கீடு குறித்து பேசுவோம் என்று சொல்கிறார்கள்.
- மோடியா இந்த லேடியா என்று கேட்ட ஜெயலலிதாவின் தொண்டர்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாநிலச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கூட்டணிக்கு தலைமை அதிமுக தான் என்று எடப்பாடி கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் அக்கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் எல்லாம் பாஜகவுடன் தான் தொகுதி பங்கீடு குறித்து பேசுவோம் என்று சொல்கிறார்கள். இதை பாஜகவும் மறுக்கவில்லை.
போற போக்கை பார்த்தால் அதிமுகவுக்கே பாஜக தான் தொகுதியை ஒதுக்கித் தரும் போலிருக்கிறது. மோடியா இந்த லேடியா என்று கேட்ட ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக NDA கூட்டணியில் உள்ள டிடிவி தினகரன், அமமுக கட்சிக்கு தகுதியான தொகுதிகளை முறையில் பாஜக மூலம் முயற்சி செய்வோம்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா தனது முதல் போட்டியில் தோற்றது.
- அதன்பின் தொடர்ந்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது- எம்.ஏ. பேபி
கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பினராயி விஜயன் தலைமையிலான LDF-க்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மேயர் பதவியை பாஜக கைப்பற்றியுள்ளது. இது வரவிருக்கின்ற சட்டசபை தேர்தலிலும் தொடரும் என பாஜக சொல்கிறது.
இந்த நிலையில் இந்த தோல்வி தற்காலிகமானது. பினராயி விஜயன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எம்.ஏ. பேபி கூறியதாவது:-
கடந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா தனது முதல் போட்டியில் சவுதி அரேபியாவுக்கு எதிராக தோல்வியை சந்தித்தது. ஆனால், அதன்பின் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆகவே, எங்களுடைய உள்ளாட்சி தேர்தல் பின்னடைவு இதேபோல் சென்று கொண்டிருக்கிறது.
டெல்லியில் இருந்து வந்த காங்கிரஸ் தலைவர் (மணிசங்கர் அய்யர்) பினராயி விஜயன் மீண்டும் ஆட்சி அமைப்பார் என்று கூறியுள்ளார். பொதுவாக மக்களின் நினைப்பதை அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு எம்.ஏ. பேபி தெரிவித்துள்ளார்.
- கார்ப்பரேட் வரிகள் உயர்த்தப்படவில்லை.
- கூடுதல் வருமான வரிச் சலுகைகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.
ஒன்றிய அரசின் 2026-27 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை எரியும் பொருளாதார பிரச்சனைகள் எதற்குமே தீர்வு காண்பதாக அமையவில்லை என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "வளர்ச்சி, மக்களின் எதிர்பார்ப்புகள், அனைவருக்குமான பயன் என்பதை மூன்று குறிக்கோள்கள் என நிதிநிலை அறிக்கை உரையை நிதியமைச்சர் துவங்கினாலும் அது உண்மையில் கார்ப்பரேட் வளர்ச்சி, செல்வந்தர்களின் எதிர்பார்ப்புகள், பெரும்பான்மை மக்களிடமிருந்து பறிப்பு என்பதாகவே அமைந்திருக்கிறது.
கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான, செல்வக்குவிப்பிற்கு வழிவகுக்கிற இன்னொரு நிதிநிலை அறிக்கையாகவே இது அமைந்திருக்கிறது. ஆகவே, எளிய நடுத்தர மக்களின் நலனுக்கோ, சிறு தொழில்களை நெருக்கடியிலிருந்து மீட்கவோ, கிராமப்புற மக்களின் மேம்பாட்டிற்கோ இந்த நிதிநிலை அறிக்கை உருப்படியான முன்மொழிவுகள் எதையும் உள்ளடக்கியதாக இல்லை.
நிதிநிலை அறிக்கையின் மிக முக்கியமான பகுதியாக திகழும் வருமான வரி திரட்டல் வர்க்க பாரபட்சத்தை வெளிப்படுத்துகிறது. இந்தியாவின் 10 சதவிகித மேல் தட்டு மக்கள் 65 சதவிகித செல்வத்தை வைத்துள்ள நிலையிலும் செல்வ வரி போன்ற ஆலோசனைகளை கருத்தில் கொள்ளவில்லை. கார்ப்பரேட் வரிகள் உயர்த்தப்படவில்லை. மறுபுறம் மத்தியதர ஊழியர்களின் எதிர்பார்ப்பான கூடுதல் வருமான வரிச் சலுகைகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. வருமான வரிகளின் பங்கு கார்ப்பரேட் வரிகளை விட மொத்த வரி வசூலில் அதிகமாக உள்ளது. ஜிஎஸ்டி வரிச் சலுகைகள் அறிவித்ததாக இந்த அரசு பறைசாற்றி கொண்டாலும் வருவாய் திரட்டலில் பெருமளவு மறைமுக வரிகள் வாயிலாகவே வசூலிக்கப்படுவது சாதாரண மக்கள் மீதே சுமைகளை ஏற்றுவதாக உள்ளது.
கிராமப்புற மக்களுக்கு இந்தநிதிநிலை அறிக்கை வஞ்சனை இழைத்துள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தை ஒழித்து, 100 வேலை நாட்களாக இருந்ததை 125 நாட்களாக உயர்த்தப்படுவதாக படாடோபமாக அறிவித்தாலும், அதற்கான ஒதுக்கீடு மிகக் குறைவாக உள்ளது. ஆண்டிற்கு 125 வேலை நாட்களை சராசரி நாட்கூலி ரூ 355 என்பதை கொண்டு கணக்கிட்டால் 9 கோடி பயனாளிகளுக்கு ரூ 4 லட்சம் கோடி ஒதுக்கப்பட வேண்டும். ஆனால் வி பி ஜி ராம் ஜி திட்டத்திற்கு ரூ 95692 கோடிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. நான்கில் ஒரு பங்கு கூட இல்லை எனும் போது அரசின் பொய்மைகள் அம்பலம் ஆகியுள்ளன. கிராமப்புற மேம்பாட்டிற்கு ரூ 8000 கோடி அதாவது 4 சதவிகிதம் மட்டுமே கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது பணவீக்கத்தோடு ஒப்பிடும்போது அதிகரிப்பல்ல, உண்மை மதிப்பில் வெட்டே ஆகும். கடந்தாண்டு நிதிநிலை அறிக்கை மதிப்பீடுகளை விட கிராம சாலைகள் மேம்பாடு, கிராமப்புற மக்கள் வாழ்வாதார மேம்பாடு ஆகியவற்றுக்கான திருத்திய மதிப்பீடுகள் குறைவாக உள்ளன. நிதிநிலை அறிக்கையில் குறைவாக ஒதுக்கப்படும் தொகைகள் கூட இன்னும் குறைவாகவே மக்களுக்கு போய்ச் செல்கின்றன.
அமெரிக்காவின் 50 சதவிகித இறக்குமதி வரிகளும், அச்சுறுத்தப்படும் 500 சதவிகித உத்தேச வரிகளும் இந்திய நாட்டின் சிறுதொழில்களை கடுமையாக பாதித்துள்ள நிலையில் அவற்றின் மீட்சிக்கான நம்பிக்கையான அறிவிப்புகள் எதுவும் இல்லை. சிறு நடுத்தர தொழில் வளர்ச்சி நிதியத்திற்கு 10000 கோடி, சுயசார்பு இந்தியா நிதியத்திற்கு ரூ 2000 கோடி என்ற அறிவிப்புகள் எல்லாம் யானை பசிக்கு சோளப் பொரி போன்றதே ஆகும்.
இந்திய நாட்டின் பெரும் பிரச்சனையாக உள்ள வேலையின்மைக்கு நிதிநிலை அறிக்கை உரிய கவனம் எதுவும் செலுத்தவில்லை. 15-29 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மத்தியில் 14 சதவிகித வேலையின்மை நிலவுகிற சூழலில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டமும், வேலை வாய்ப்பு ஊக்கத்தொகை திட்டமும் கார்ப்பரேட்டுகளுக்கு பயனளித்துள்ளனவே தவிர, வேலை வாய்ப்புகளில் பிரதிபலிக்கவில்லை. ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கான பொது முதலீடுகள் தனியார் முதலீடுகளை ஊக்குவித்து வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்கிற சூத்திரமும் நடைமுறையில் பொய்த்து போய் உள்ளது. கல்வி, சுகாதார ஒதுக்கீடுகளிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்போடு ஒப்பிடும் போது குறிப்பிடத்தக்க உயர்வும் இல்லை.
பொதுத்துறை பங்கு விற்பனைக்கு 80000 கோடி ரூபாய் இலக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசின் பங்குகளை 51 சதவிகிதத்திற்கும் கீழே 26 சதவிகிதம் வரை கூட குறைக்கலாம் என்பதும் அபாயகரமான முன்மொழிவு. அரசு உடமை என்பதிலிருந்து அரசின் கட்டுப்பாடு என்பதாக தரம் இறக்குவது எதிர்காலத்தில் முழுமையாக தனியார்கள் வசம் ஒப்படைப்பதற்கான திட்டமே தவிர வேறொன்றுமில்லை. இத்தகைய முன்மொழிவு இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதி ஏற்பாடுகள் மீதும் கடும் பாதிப்பினை ஏற்படுத்தும்.
தமிழ்நாட்டின் நீண்ட கால கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. ரயில்வே திட்டங்களில் வஞ்சனை தொடர்ந்து உள்ளது. அரிய வகை கனிம வளங்கள் பற்றிய அறிவிப்பு கார்ப்பரேட் சுரண்டலுக்கான வழி ஏற்படுத்திக் கொடுப்பதே ஆகும். கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. கீழடிக்கான எந்த நிதி ஒதுக்கீடும் இல்லை. மாநிலங்களுக்கான நிதி பங்கீட்டில் உயர்வு வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, எந்த வகையிலும் தேசத்தின் நலனுக்கோ, மக்களின் வாழ்வுக்கோ, தமிழ்நாட்டின் உரிமைக்கோ உதவாத இந்த நிதிநிலை அறிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு குழு வன்மையாக கண்டிக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கையை எதிர்த்து மக்கள் அனைவரும் கண்டன குரல் எழுப்பிட முன்வருமாறு அனைத்து பகுதி மக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பிளவுப்படுத்தும் அரசியல் கேரளாவை மோசமான சூழ்நிலைக்கு தள்ளிவிடும்.
- மதக் கலவரத்தைத் தூண்டுவதற்கு ஒரு பொறிக்காகக் காத்திருப்பவர்களின் கைகளில், எரியும் தீப்பந்தம் வழங்கப்படுகிறது.
கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, வாக்குகளுக்காக ஆர்.எஸ்.எஸ். பாணியில் பிளவுப்படுத்தும் அரசியலை பின்பற்றுவதாக காங்கிரஸ் தலைவரும், அம்மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான வி.டி. சதீசன் குற்றம்சாட்டியுள்ளார்.
வாக்குகளை பெறுவதற்காக மக்களை பிளவுப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ். வழியான அதே பாதையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பயணம் செய்து கொண்டிருக்கிறது. முதலமைச்சர் பினராயி விஜயன் இதற்கு அதரவு தெரிவித்து வருகிறார்.
இது தொடர்பாக வி.டி. சதீசன் கூறியதாவது:-
UDF ஆட்சிக்கு வந்தால் வகுப்புவாத கலவரங்கள் வெடிக்கும் என்று சி.பி.எம். தலைவர் ஏ.கே. பாலன் கூறிய கருத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் ஆதரிக்கிறார். அதேவேளையில் மலப்புரம் மாவட்ட பஞ்சாயத்து மற்றும் காசர்கோடு நகராட்சிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் மதத்தை பற்றி அமைச்சர் சஜி செரியன் குறிப்பிடுகிறார். கேரள மாநில சட்டசபை வரலாற்றில் இதுபோன்று எந்த உறுப்பினரும் வகுப்புவாதம் குறித்து கருத்து தெரிவித்ததில்லை. வெற்றி பெற்றவர்களின் மதத்தை பார்க்குமாறு மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பிளவுப்படுத்தும் அரசியல் கேரளாவை மோசமான சூழ்நிலைக்கு தள்ளிவிடும். மாநிலத்தின் முக்கிய மதிப்பை அழித்துவிடும். மதக் கலவரத்தைத் தூண்டுவதற்கு ஒரு பொறிக்காகக் காத்திருப்பவர்களின் கைகளில், எரியும் தீப்பந்தம் வழங்கப்படுகிறது. பினராயி விஜயனும் தானும் ஒரு நாள் நினைவுகளாகிவிடுவார்கள், ஆனால் கேரளா தொடர்ந்து நிலைத்திருக்கும்.
சிபிஐ(எம்) கட்சி கேரளாவின் அடித்தளங்களையே எரித்துக்கொண்டிருக்கிறது. இது மாநிலத்தின் எதிர்காலத்திற்கு எதிரான ஒரு கொடூரச் செயலாகும். வரும் தலைமுறைகளுக்கு இதுபோன்ற அநீதியை இழைத்துவிடாதீர்கள்.
இவ்வாறு சதீசன் தெரிவித்தார்.
- 2014 இல் மோடி அவர்கள் எவ்வளவோ வாக்குறுதிகளை வாரி வழங்கினார்.
- தேர்தல் தொடர்பான அவருடைய வாக்குறுதிகள் வெளிப்படுத்துகின்றன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலத் தலைவர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
2014 இல் மோடி அவர்கள் எவ்வளவோ வாக்குறுதிகளை வாரி வழங்கினார். அதில் முக்கியமானது "ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவேன்" என்றது.
ஆட்சியைப் பிடிக்க ஆயிரம் பொய் சொல்லலாம் என்ற மோடியின் தந்திரத்தை எடப்பாடி பழனிச்சாமியும் பின்பற்றத் தொடங்கிவிட்டார் என்பதை தான் தேர்தல் தொடர்பான அவருடைய வாக்குறுதிகள் வெளிப்படுத்துகின்றன.
தமிழக மக்களே, எடப்பாடி பழனிசாமி இப்போது மோடியுடன் சேர்ந்து வருகிறார் உஷார்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சட்டங்கள் என்பவை நாட்டையும் மக்களையும் முன்னேற்றுவதற்கானதாக இருக்க வேண்டும்
- கார்ப்பரேட்களுக்கு ஆதரவாகச் சட்டங்களை இயற்றுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காகவே மக்கள் விரோதச் சட்டங்களை நிறைவேற்றுவது வன்மையான கண்டனத்திற்குரியது. சட்டங்கள் என்பவை நாட்டையும் மக்களையும் முன்னேற்றுவதற்கானதாக இருக்க வேண்டுமே தவிர, கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சாதகமாக இருக்கக் கூடாது.
அணுசக்தித் துறையில் தனியாரை அனுமதிப்பது என்பது மக்களுக்கும் நாட்டிற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். நாடாளுமன்ற ஜனநாயகத்தையும், தங்களுக்குள்ள பெரும்பான்மையையும் பயன்படுத்தி கார்ப்பரேட்களுக்கு ஆதரவாகச் சட்டங்களை இயற்றும் ஒன்றிய அரசின் இந்த அணுகுமுறை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்துள்ளார்.
- மார்க்சின் சிந்தனை இந்தியாவை சிதைத்துள்ளது என்று ஆளுநர் ஆர்.என். ரவி பேசினார்.
- ஆர்.என்.ரவி காரல் மார்க்சை அவதூறு செய்வது அவரது அறியாமையையே காட்டுகிறது.
காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்தில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, "கார்ல் மார்க்ஸ் இந்தியாவின் சமூக கோட்பாடுகளை சிதைக்க வேண்டும் என கட்டுரை எழுதியுள்ளார். அவரின் சிந்தனை இந்தியாவை சிதைத்துள்ளது. இதனால், இன்று மார்க்ஸின் தத்துவம் புறந்தள்ளப்பட்டுள்ளது. நமது பேராசிரியர்கள் எப்போதும் ஐரோப்பியர்களை உயர்த்தி பேசுகிறார்கள். அது வேதனையாக உள்ளது" என்று விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், மார்க்ஸ் குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் விமர்சனத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மார்க்ஸ் மட்டுமல்ல; எந்தவொரு மாமனிதரையும் யாரும் விமர்சிக்கலாம் என்பதே மார்க்சியர்களின் நிலைபாடு. ஆனால், அதற்கு விமர்சிக்கப்படுபவர்கள் குறித்து முழுமையாக உள்வாங்கிக் கொண்டு உண்மைகளின் அடிப்படையில் விமர்சிக்க வேண்டும். சில பேர்களை மட்டும் தெரிந்து கொண்டு அவற்றின் மீது தான் கரை கண்டவர் போல, வரலாற்று அறிஞர்கள் திடுக்கிடும் வகையில் அவதூறுகளை அள்ளிவீசுவதில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு டாக்டர் பட்டமே வழங்கலாம்.
வள்ளலார், ஐயா வைகுண்டர், திருவள்ளுவர், தமிழ்நாட்டின் பெயர் என்று எல்லாவற்றிலும் கரை கண்டவர் போல வாய்க்கு வந்ததை பேசி வாங்கிக் கட்டிக் கொண்ட ஆளுநர் ஆர்.என். ரவி இப்போது தோழர் காரல் மார்க்ஸ் மற்றும் மார்க்சியர்கள் மீது ஆளுநர் மாளிகைக்குள் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவதூறு மழை பொழிந்திருக்கிறார்.
1853ல் தி நியூயார்க் டெய்லி ட்ரிபியூன் என்ற பத்திரிகையில் பிரிட்டிஷ் காலனி நாடாக இருந்த இந்தியாவைப் பற்றி தோழர் காரல் மார்க்ஸ் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். அந்த கட்டுரைகளில் இந்தியாவில் அப்போது நிலவி வந்த சுயதேவை பூர்த்தி கிராமங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்ததை சுட்டிக்காட்டி ஆங்கிலேயர்கள் தங்களது சுரண்டும் நோக்கிலிருந்து அதை மாற்றியதை அதன் மூலமாக உற்பத்தி சக்திகள் வளர்ச்சியடைந்ததை குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். அதே சமயம், ஆங்கிலேயர்கள் இந்தியாவின் தொழில்களை அழித்ததையும், இங்கிருந்த செல்வங்களை கொள்ளையடித்துக் கொண்டு சென்றதையும், கந்துவட்டி வரிவிதிப்பு முறைகளையும் கடுமையாகச் சாடியிருக்கிறார். அவர் எப்போதும் ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தியிருந்ததையும், சுரண்டிக் கொழுத்ததையும் ஆதரித்து எழுதவில்லை. ஆனால், அன்னை நாடு அடிமைப்பட்டுக் கிடந்த போதும் ஆங்கிலேயர்களின் அடிவருடிகளாக இருக்க அவதாரம் எடுத்தது போல் செயல்பட்ட ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தின் பிரதிநிதியான ஆர்.என்.ரவி காலனியாதிக்கத்தை கடுமையாக எதிர்த்த காரல் மார்க்சை அவதூறு செய்வது கடும் கண்டனத்திற்குரியது.
அதேபோன்று, மார்க்சியர்கள் இந்தியாவின் நாகரீகத்தைப் பற்றி பெருமைப்படவில்லை, சிறுமைப்படுத்தினார்கள் என்று கண்ணீர் சிந்தியிருக்கிறார். இந்த கூட்டம் தான் தமிழ்நாட்டில் கீழடியின் தொன்மையை மறுத்து இன்று வரை அட்டூழியம் செய்து கொண்டிருக்கிறது. மனிதனை மனிதன் அடிமைப்படுத்துவதை நியாயப்படுத்தியிருக்கும் ஸ்மிருதியை உருவாக்கிய மனுவை பகவான் என்று கொண்டாடும் கூட்டம் இது. நால் வர்ணமும், தீண்டாமையும் அறிவும் ஒருசாராருக்கே உரியது என்ற அடிமுட்டாள் தனத்தையும் கொண்டாடுவதை நாகரீகம் என்றால் அதற்கு எதிரானவர்கள் மார்க்சியர்கள்.
ஒருபக்கம் பெண்ணை தெய்வம் என்று போற்றுவது போல் நடிப்பதும் மறுபக்கம் பெண் என்றாலே சபல புத்திக்காரி, குழந்தையாய் இருக்கும் போது தகப்பனின் கண்காணிப்பில் இருக்க வேண்டும்; திருமணத்திற்குப் பிறகு கணவனின் கண்காணிப்பில் இருக்க வேண்டும்; வயதான பிறகு மகனின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் மூடத்தனத்தை விதைக்கும் ஸ்மிருதியை நாகரீகம் என்று ஒரு கூட்டம் கொண்டாடும் என்றால் அதை எதிர்த்து நிற்பது மார்க்சியர்களின் கடமை. குழந்தை திருமணம், கைம்பெண் மறுமண மறுப்பு, உடன்கட்டை ஏறுதல் இவற்றையெல்லாம் நாகரீகம் என்று சொன்னால் அதை வேரோடும், வேரடி மண்ணோடும் அழித்தொழிப்பது தான் மார்க்சியர்களின் தலையாய கடமை.
பாரம்பரியத்தின் மகத்தான முற்போக்கு விழுமியங்களை கொண்டாடி குதூகலிக்கும் அதே நேரத்தில், மனித மாண்புகளை சிதைப்பவை புதியதோ, பழையதோ தொன்மையானதோ, நவீன காலத்ததோ அதை எதிர்த்து சமர் புரிவதை சபதமாக ஏற்றிருக்கிறோம். எந்த ஞானமும் இல்லாமல் ஆர்.என்.ரவி தோழர் காரல் மார்க்சையும், மார்க்சியத்தையும் அவதூறு செய்வது அவரது அறியாமையையே காட்டுகிறது.
ஆளுநர் தகுதிக்கே பொருத்தமற்றவர் என்கிற காரணத்தினால்தான் நாகலாந்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டார். ஆளுநர் ஆகிவிட்டதாலேயே அனைத்து துறையிலும் வல்லுநர் என கருதிக்கொண்டு உயரத்திற்கு பொருத்தமின்றி ஆர்.என்.ரவி குதித்ததால் தமிழ், தமிழ்நாடு உள்ளிட்ட அம்சங்களில் அறிவுத் தளத்தில் அடி வாங்கியது போல தமிழக மக்கள் உரிய முறையில் திருப்பிக் கொடுப்பார்கள். ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டு திருந்துகிற ஆள் இல்லை. பட்டுக்கொண்டே இருப்பேன், என்ன பந்தயம் கட்டுகிறாய் என்று கேட்கும் ஆர்.என்.ரவியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. இனியேனும் தன் உயரத்திற்கு தகுந்தார் போல் குதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவுறுத்துகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பாஜக அரசின் இத்தகைய அறிவிப்பு மிகவும் மோசடியான ஒன்றாகும்.
- தமிழ்நாட்டிற்கு மட்டும் அனுமதி மறுத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு சிபிஎம் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிபிஎம் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மோடி தலைமையிலான பாஜக அரசு தமிழ்நாட்டின் மிக முக்கிய நகரங்களான கோவை மற்றும் மதுரை ஆகிய இரண்டு மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற முடியாது என அறிவித்திருக்கிறது. ஒன்றிய பாஜக அரசின் பாரபட்சமான இத்தகைய நடவடிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமாகும். 2017ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட தேசிய மெட்ரோ ரயில் திட்டக் கொள்கையின் படி 20 லட்சத்திற்கும் அதிகமான மக்களை கொண்ட மாநகரங்களுக்குத்தான் மெட்ரோ ரயில் திட்டத்தை வழங்க முடியும் எனவும், தமிழக நகரங்களான கோவை மற்றும் மதுரையின் மக்கள் தொகை 20 லட்சத்திற்கும் குறைவாக இருப்பதால் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற முடியாது என ஒன்றிய பாஜக அரசு மறுத்திருக்கிறது.
பாஜக அரசின் இத்தகைய அறிவிப்பு மிகவும் மோசடியான ஒன்றாகும். ஏனெனில் கடந்த 2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பைக் கொண்டே இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. கோவை மற்றும் மதுரை ஆகிய மாநகரங்களில் கடந்த 15 ஆண்டுகளில் அதிகரித்துள்ள மக்கள் தொகை மற்றும் இரண்டு மாநகராட்சிகளின் எல்லைகள் சமீபத்தில் விரிவாக்கப்பட்டிருக்கும் நிலை ஆகியவற்றையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்திருப்பது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும், பாஜக ஆளும் மாநிலங்களில் மக்கள் தொகை குறைவாக உள்ள வேறு பல நகரங்களுக்கு அனுமதி அளித்திருக்கும் நிலையில் தமிழ்நாட்டிற்கு மட்டும் அனுமதி மறுத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. இது கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கு எதிரானது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான வளர்ச்சிக்கு நிதி ஒதுக்காமல் முட்டுக்கட்டை போடுவது, தமிழ்நாட்டிற்கான ஜி.எஸ்.டி நிதி ஒதுக்கீடு விஷயத்தில் பாரபட்சம் காட்டுவது, மதுரை எய்ம்ஸ் திட்டத்தை கிடப்பில் போடுவது என தொடர்ந்து பாஜக தமிழ்நாட்டை வஞ்சித்து வருவதன் தொடர்ச்சியாகவே மெட்ரோ ரயில் திட்ட அனுமதி மறுப்பு அறிவிப்பும் உள்ளது. எனவே அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இப்பிரச்னையை அணுகுவதை கைவிட்டு, கோவை மற்றும் மதுரை ஆகிய மாநகர மக்களின் தேவை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு இவ்விரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்தை உடனடியாக துவங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஒன்றிய பாஜக அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பிரதமரின் SHRI திட்டத்தில் இணைய இருப்பதாக கேரள மாநில அமைச்சர் தெரிவித்திருந்தார்.
- இதன்மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு- பாஜக கூட்டணி வெளிப்பட்டுள்ளது என காங்கிரஸ் குற்றச்சாட்டு.
பிரதமரின் SHRI திட்டத்தில் கேரள மாநில இணைய இருப்பதாக, அம்மாநில அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்திருந்தார். ஆனால், நிலுவையில் உள்ள மத்திய அரசின் நிதியை பெறுவதற்காகத்தான் அந்த திட்டத்தில் இணைகிறோம். கேரளாவில் தற்போது உள்ள கல்விக் கொள்கையில் எந்த மாற்றமும் வராது எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு- பாஜக இடையிலான ரகசிய கூட்டணி, பிரதம்ர் SHRI திட்டத்தின் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது என கேரள மாநில காங்கிரஸ் தலைவர் சன்னி ஜோசப் குற்றம்சாட்டியுள்ளார்.
- ஜிஎஸ்டி நான்கு அடுக்கு வரி 5, 18 என்ற 2 விகிதங்களுக்குள் வந்துள்ளது.
- மக்கள் கையில் கூடுதலாக எவ்வளவு பணம் புரண்டு கொண்டிருக்கிறது?
கடந்த 22-ந் தேதி முதல் ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதனால் ஏற்கனவே இருந்த நான்கு அடுக்கு வரி 5, 18 என்ற 2 விகிதங்களுக்குள் வந்துள்ளது.
இதனால் பெரும்பாலான பொருட்களின் விலை குறைந்து உள்ளதாக பாஜகவினர் மக்களிடம் எடுத்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில், ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தால் எந்தெந்த பொருட்களின் விலை குறைந்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் பெ. சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஜி.எஸ்.டி வரிகுறைப்பினால் மக்கள் கையில் பணம் புரளும், உருளும், விலைவாசி குறையும் என்று பிரதமரும், ஒன்றிய நிதி அமைச்சரும் தம்பட்டம் அடித்தார்களே? அவர்கள் சொல்லி 10 நாட்கள் ஆகிவிட்டது.
எந்தெந்த பொருட்களின் விலை குறைந்து இருக்கிறது. மக்கள் கையில் கூடுதலாக எவ்வளவு பணம் புரண்டு கொண்டிருக்கிறது என்பதை பிஜேபி தலைவர்கள் யாராவது வெளியிடத் தயாரா?" என்று தெரிவித்துள்ளார்.
- பதவியை பயன்படுத்தி பணம் சம்பாதித்தார்கள் என்று எதிரிகளால் கூட குற்றம் சாட்ட முடியாதவர்கள்.
- தங்கள் குடும்பத்திலிருந்து தங்களுடைய பங்காக கிடைத்த சொத்துக்களை கட்சிக்கு வழங்கியவர்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
த.வெ.க. தலைவர் விஜய், "அரசியலுக்கு வந்து தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை" என்பதை ஏதோ அவர் மிகப்பெரிய தியாகம் செய்வதைப் போல ஊடகங்களும் அதை பெரிது படுத்தியுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர்கள் பல்லாண்டு காலம் முதலமைச்சராக இருந்த தோழர். இ.எம்.எஸ், தோழர் ஜோதி பாசு, தோழர் நிரூபன் சக்கரவர்த்தி, தோழர் தசரத் தேவ், தோழர் இ.கே. நாயனார், தோழர். மாணிக் சர்க்கார், தோழர் புத்ததேவ் பட்டாச்சாரியா, தோழர் வி.எஸ் அச்சுதானந்தன் இவர்கள் அனைவரும் அரசியலில் 60, 70 ஆண்டு காலத்திற்கு மேலாக மக்கள் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்கள். பதவியை பயன்படுத்தி பணம் சம்பாதித்தார்கள் என்று எதிரிகளால் கூட குற்றம் சாட்ட முடியாதவர்கள். அது மட்டுமல்லாமல் தோழர் இ.எம்.எஸ், தோழர் பி.சுந்தரைய்யா, தோழர் ஹர்கிசன்சிங் சுர்ஜித் இவர்கள் அனைவரும் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக சிறப்பாக செயல்பட்டவர்கள். தங்கள் குடும்பத்திலிருந்து தங்களுடைய பங்காக கிடைத்த சொத்துக்களை கட்சிக்கு வழங்கியவர்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
தலைவர்கள் மட்டுமல்ல, அடிப்படைக் கட்சி உறுப்பினர்கள் கூட தங்களுடைய சொத்துக்களை மக்கள் பயன்பாட்டுக்காக கட்சிக்கு கொடுத்திருக்கிறார்கள். உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்வது தான் கம்யூனிஸ்டுகளின் அரசியல். பணம் சம்பாதிக்காமல் இருப்பதல்ல! வரலாற்றை படியுங்கள் மிஸ்டர் விஜய். அதிலும் மக்கள் நலனுக்காக தியாகம் செய்வது என்றால் என்ன என்பதை அறிய கம்யூனிஸ்ட் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள் என்று கூறியுள்ளார்.
- தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5வது மாநில மாநாடு நடைபெற்றது.
- 20 சமூகப் போராளிகளுக்கு பெ.சண்முகம் நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
மயிலாடுதுறையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5வது மாநில மாநாடு நடைபெற்றது.
இம்மாநாட்டில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், சாதி ஆணவப் படுகொலைகள் மற்றும் சமூகக் கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடும் 20 சமூகப் போராளிகளுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
இந்த மாநாட்டில் உரையாற்றிய பெ.சண்முகம், "பஞ்சமி நிலம் என்று தமிழ்நாடு அரசு இதுவரை கண்டறிந்துள்ள இரண்டரை லட்சம் ஏக்கர் நிலத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பஞ்சமி நிலத்தை மீட்டு நிலமற்ற பட்டியல் சாதியினருக்கு ஒப்படைக்க வேண்டும். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்களே பஞ்சமி நிலத்தை பெருமஹத்தால் செய்து நிலமற்ற பட்டியல் சாதியினருக்கு ஒப்படைப்போம்" என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.






