என் மலர்
நீங்கள் தேடியது "Marxist"
- மார்க்சின் சிந்தனை இந்தியாவை சிதைத்துள்ளது என்று ஆளுநர் ஆர்.என். ரவி பேசினார்.
- ஆர்.என்.ரவி காரல் மார்க்சை அவதூறு செய்வது அவரது அறியாமையையே காட்டுகிறது.
காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்தில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, "கார்ல் மார்க்ஸ் இந்தியாவின் சமூக கோட்பாடுகளை சிதைக்க வேண்டும் என கட்டுரை எழுதியுள்ளார். அவரின் சிந்தனை இந்தியாவை சிதைத்துள்ளது. இதனால், இன்று மார்க்ஸின் தத்துவம் புறந்தள்ளப்பட்டுள்ளது. நமது பேராசிரியர்கள் எப்போதும் ஐரோப்பியர்களை உயர்த்தி பேசுகிறார்கள். அது வேதனையாக உள்ளது" என்று விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், மார்க்ஸ் குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் விமர்சனத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மார்க்ஸ் மட்டுமல்ல; எந்தவொரு மாமனிதரையும் யாரும் விமர்சிக்கலாம் என்பதே மார்க்சியர்களின் நிலைபாடு. ஆனால், அதற்கு விமர்சிக்கப்படுபவர்கள் குறித்து முழுமையாக உள்வாங்கிக் கொண்டு உண்மைகளின் அடிப்படையில் விமர்சிக்க வேண்டும். சில பேர்களை மட்டும் தெரிந்து கொண்டு அவற்றின் மீது தான் கரை கண்டவர் போல, வரலாற்று அறிஞர்கள் திடுக்கிடும் வகையில் அவதூறுகளை அள்ளிவீசுவதில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு டாக்டர் பட்டமே வழங்கலாம்.
வள்ளலார், ஐயா வைகுண்டர், திருவள்ளுவர், தமிழ்நாட்டின் பெயர் என்று எல்லாவற்றிலும் கரை கண்டவர் போல வாய்க்கு வந்ததை பேசி வாங்கிக் கட்டிக் கொண்ட ஆளுநர் ஆர்.என். ரவி இப்போது தோழர் காரல் மார்க்ஸ் மற்றும் மார்க்சியர்கள் மீது ஆளுநர் மாளிகைக்குள் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவதூறு மழை பொழிந்திருக்கிறார்.
1853ல் தி நியூயார்க் டெய்லி ட்ரிபியூன் என்ற பத்திரிகையில் பிரிட்டிஷ் காலனி நாடாக இருந்த இந்தியாவைப் பற்றி தோழர் காரல் மார்க்ஸ் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். அந்த கட்டுரைகளில் இந்தியாவில் அப்போது நிலவி வந்த சுயதேவை பூர்த்தி கிராமங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்ததை சுட்டிக்காட்டி ஆங்கிலேயர்கள் தங்களது சுரண்டும் நோக்கிலிருந்து அதை மாற்றியதை அதன் மூலமாக உற்பத்தி சக்திகள் வளர்ச்சியடைந்ததை குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். அதே சமயம், ஆங்கிலேயர்கள் இந்தியாவின் தொழில்களை அழித்ததையும், இங்கிருந்த செல்வங்களை கொள்ளையடித்துக் கொண்டு சென்றதையும், கந்துவட்டி வரிவிதிப்பு முறைகளையும் கடுமையாகச் சாடியிருக்கிறார். அவர் எப்போதும் ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தியிருந்ததையும், சுரண்டிக் கொழுத்ததையும் ஆதரித்து எழுதவில்லை. ஆனால், அன்னை நாடு அடிமைப்பட்டுக் கிடந்த போதும் ஆங்கிலேயர்களின் அடிவருடிகளாக இருக்க அவதாரம் எடுத்தது போல் செயல்பட்ட ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தின் பிரதிநிதியான ஆர்.என்.ரவி காலனியாதிக்கத்தை கடுமையாக எதிர்த்த காரல் மார்க்சை அவதூறு செய்வது கடும் கண்டனத்திற்குரியது.
அதேபோன்று, மார்க்சியர்கள் இந்தியாவின் நாகரீகத்தைப் பற்றி பெருமைப்படவில்லை, சிறுமைப்படுத்தினார்கள் என்று கண்ணீர் சிந்தியிருக்கிறார். இந்த கூட்டம் தான் தமிழ்நாட்டில் கீழடியின் தொன்மையை மறுத்து இன்று வரை அட்டூழியம் செய்து கொண்டிருக்கிறது. மனிதனை மனிதன் அடிமைப்படுத்துவதை நியாயப்படுத்தியிருக்கும் ஸ்மிருதியை உருவாக்கிய மனுவை பகவான் என்று கொண்டாடும் கூட்டம் இது. நால் வர்ணமும், தீண்டாமையும் அறிவும் ஒருசாராருக்கே உரியது என்ற அடிமுட்டாள் தனத்தையும் கொண்டாடுவதை நாகரீகம் என்றால் அதற்கு எதிரானவர்கள் மார்க்சியர்கள்.
ஒருபக்கம் பெண்ணை தெய்வம் என்று போற்றுவது போல் நடிப்பதும் மறுபக்கம் பெண் என்றாலே சபல புத்திக்காரி, குழந்தையாய் இருக்கும் போது தகப்பனின் கண்காணிப்பில் இருக்க வேண்டும்; திருமணத்திற்குப் பிறகு கணவனின் கண்காணிப்பில் இருக்க வேண்டும்; வயதான பிறகு மகனின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் மூடத்தனத்தை விதைக்கும் ஸ்மிருதியை நாகரீகம் என்று ஒரு கூட்டம் கொண்டாடும் என்றால் அதை எதிர்த்து நிற்பது மார்க்சியர்களின் கடமை. குழந்தை திருமணம், கைம்பெண் மறுமண மறுப்பு, உடன்கட்டை ஏறுதல் இவற்றையெல்லாம் நாகரீகம் என்று சொன்னால் அதை வேரோடும், வேரடி மண்ணோடும் அழித்தொழிப்பது தான் மார்க்சியர்களின் தலையாய கடமை.
பாரம்பரியத்தின் மகத்தான முற்போக்கு விழுமியங்களை கொண்டாடி குதூகலிக்கும் அதே நேரத்தில், மனித மாண்புகளை சிதைப்பவை புதியதோ, பழையதோ தொன்மையானதோ, நவீன காலத்ததோ அதை எதிர்த்து சமர் புரிவதை சபதமாக ஏற்றிருக்கிறோம். எந்த ஞானமும் இல்லாமல் ஆர்.என்.ரவி தோழர் காரல் மார்க்சையும், மார்க்சியத்தையும் அவதூறு செய்வது அவரது அறியாமையையே காட்டுகிறது.
ஆளுநர் தகுதிக்கே பொருத்தமற்றவர் என்கிற காரணத்தினால்தான் நாகலாந்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டார். ஆளுநர் ஆகிவிட்டதாலேயே அனைத்து துறையிலும் வல்லுநர் என கருதிக்கொண்டு உயரத்திற்கு பொருத்தமின்றி ஆர்.என்.ரவி குதித்ததால் தமிழ், தமிழ்நாடு உள்ளிட்ட அம்சங்களில் அறிவுத் தளத்தில் அடி வாங்கியது போல தமிழக மக்கள் உரிய முறையில் திருப்பிக் கொடுப்பார்கள். ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டு திருந்துகிற ஆள் இல்லை. பட்டுக்கொண்டே இருப்பேன், என்ன பந்தயம் கட்டுகிறாய் என்று கேட்கும் ஆர்.என்.ரவியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. இனியேனும் தன் உயரத்திற்கு தகுந்தார் போல் குதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவுறுத்துகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அதிகார பீடத்தில் உள்ளவர்கள் நில வணிகர்கள் என்பதால் மோசடிகள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.
- விடுதலைக்கு பிறகு மாநில அரசிடம் இருந்த மொத்த அரசு புறம்போக்கு நிலங்கள், தற்போதுள்ள நிலங்கள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செய்லாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோவில் சொத்து அபகரிப்பு வழக்கில் பா.ஜனதா எம்.எல்.ஏ. மற்றும் அவனது மகன் உள்ளிட்டோரிடம் விசாரணை செய்ய போலீஸ்துறை தயக்கம் காட்டுகிறது. தற்போது பத்திர பதிவுத் துறையில் கடந்த 3 ஆண்டில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் மாயமாகி உள்ளது.
இதனை அதிகார பின்புலம் இல்லாமல் செய்திட முடியாது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் ஆவணங்களை அரசு மீட்டெடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
நில மோசடியில் பொதுமக்கள் அளித்த புகார்கள் மீது அரசின் நடவடிக்கை விவரத்தை வெளியிட வேண்டும். அதிகார பீடத்தில் உள்ளவர்கள் நில வணிகர்கள் என்பதால் மோசடிகள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.
எனவே மாநில முதல்வர் 2011 முதல் 2023 வரையில் பத்திரப்பதிவு துறையில் நடந்துள்ள மோசடிகள் குறித்தும், விடுதலைக்கு பிறகு மாநில அரசிடம் இருந்த மொத்த அரசு புறம்போக்கு நிலங்கள், தற்போதுள்ள நிலங்கள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
நடுத்தர மக்களின் சொத்துக்கள் பாதுகாக்க நிலமோசடிக்கு எதிரான உறுதியாக போராட மாநில மக்கள் முன் வரவேண்டும். வரும் 11-ந் தேதி காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட்டு அரசியல் தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் பங்கேற்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு ராஜாங்கம் அறிக்கையில் கூறியுள்ளார்.
- மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சாரம் ஜீவானந்தம் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
- பாலஸ்தீனத்தில் நடந்து வரும் போரை இந்திய அரசு தலையிட்டு நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
புதுச்சேரி:
பாலஸ்தீனத்தில் நடைபெற்று வரும் போரை நிறுத்த இந்திய அரசை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சாரம் ஜீவானந்தம் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம் தலைமை வகித்தார். மூத்த தலைவர் முருகன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன், சீனிவாசன், கொளஞ்சி யப்பன், பிரபுராஜ், கலியமூர்த்தி, சத்தியா, விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சங்கர், வாலிபர், மாதர் மாணவர் சங்க தலைவர்கள் ஆனந்த், இளவரசி, பிரவீன்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக நெல்லித்தோப்பு சுப்பையா சிலை அருகிலிருந்து ஊர்வ லமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாலஸ்தீனத்தில் நடந்து வரும் போரை இந்திய அரசு தலையிட்டு நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
- அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் பாஜக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்.
- தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என திமுக தலைமைக் கழகம் என அறிவிப்பு.
மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் போராட்டத்தில் திமுக பங்கேற்கும் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
மாநில உரிமைகள் காத்திட மத்திய பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் சார்பில் வரும் 8ம் தேதி போராட்டம் நடத்த உள்ளது.
அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் பாஜக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
- இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஆனி ராஜா இடது சாரி ஜனநாயக முன்னணி சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
- இந்த விவகாரம் தொடர்பாக அவர்கள் அவ்வப்போது தங்களது எதிர்ப்பு கருத்தை தெரிவித்தபடி உள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 29-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேசிய அளவில் இருக்கும் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்றிருந்தாலும், கேரள மாநிலத்தில் அந்த கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன.
வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளரான டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜாவும் போட்டியிடுகிறார்கள். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே வயநாடு தொகுதியில் ஆனி ராஜா போட்டியிடப் போவதாகவும், ஆகவே அந்த தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடக்கூடாது எனவும் இந்திய கம்யூனிஸ்டு கோரிககை வைத்தது.
ஆனால் காங்கிரஸ் கட்சி சார்பில் வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் இந்த நடவடிக்கை கம்யூனிஸ்டு கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அவர்கள் அவ்வப்போது தங்களது எதிர்ப்பு கருத்தை தெரிவித்தபடி உள்ளனர்.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கேரள மாநில செயலாளர் கோவிந்தனும் வயநாடு தொகுதி வேட்பாளராக ராகுல்காந்தியை காங்கிரஸ் நிறுத்தியிருப்பதற்கு தனது கண்டன கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஆனி ராஜா இடது சாரி ஜனநாயக முன்னணி சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார். ஆனால் காங்கிரஸ் கட்சி இந்திய கூட்டணியின் ஆதரவுடன் ராகுல்காந்தியை வேட்பாளராக முன்னிறுத்துவது வெட்கக் கேடானது.
அவர் இந்திய கூட்டணி வேட்பாளராக ஏன் முன்னிறுத்தப்படுகிறார்? இந்தியா என்ற முத்திரையை பயன்படுத்தி கேரளாவில் போட்டியிட வேண்டிய அவசியமில்லை. கேரளாவில் பரதிய ஜனதா கட்சி எந்த இடத்திலும் வெற்றி பெறாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் அமர்நாத் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் ஆறுமுகம் கண்டன உரையாற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் மாதவன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சுப்புராயன், கருப்பையன், பாஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நடந்து வருகிறது.
கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி அமைந்த பிறகு அந்த கட்சி தொண்டர்களுக்கும் பாரதிய ஜனதா கட்சியினருக்கும் அரசியல் மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக 2 கட்சியை சேர்ந்தவர்களும் படுகொலை செய்யப்படும் செயல்களும் அரங்கேறி உள்ளது.
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் சொந்த ஊரான பினராய் மற்றும் கண்ணூரிலும் அதிகளவு அரசியல் கொலைகள் நடந்துள்ளது.
இந்த நிலையில் கண்ணூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொண்டர் பாபு மற்றும் பாரதிய ஜனதா கட்சி தொண்டர் சமேஜ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.

இதனால் கண்ணூரில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. இந்த கொலைகள் காரணமாக பதட்டமான சூழ்நிலையும் நிலவி வருகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டர் பாபு கொலையை தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டதாக அந்த கட்சியைச் சேர்ந்த 500 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதேபோல பாபு கொலை தொடர்பாக 4 பேர் மீதும் பாரதிய ஜனதா தொண்டர் சமேஜ் கொலை தொடர்பாக 6 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா நேரடியாகவும் விசாரணை நடத்தி வருகிறார்.
இதற்கிடையே அரசியல் கட்சி தொண்டர்கள் 2 பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டது, அதனால் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பதட்டமான சூழ்நிலை குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் கேரள கவர்னர் சதாசிவம் அறிக்கை கேட்டுள்ளார்.
ஏற்கனவே 6 மாதத்திற்கு முன்பு இதேபோல அரசியல் கொலைகள் தொடர்ந்து நடைபெற்றபோது கேரள அரசிடம் கவர்னர் அறிக்கை கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. #KeralaCM #PinarayiVijayan #Governor #Sathasivam






