என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fake Complaint"

    • நீதிமன்ற உத்தரவின்படி விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது.
    • சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கோகிலபாண்டியன் வழக்கு தொடர்ந்தார்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் மயிலாடும்பாறை அருகே நரியூத்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு கணித பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்தவர் கோகிலபாண்டியன். இதே பள்ளியில் பணியாற்றிய ஆசிரியைகள் சிலர் கோகிலபாண்டியனுக்கு எதிராக பாலியல் புகார் அளித்தனர்.

    அதன் அடிப்படையில் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 16ந் தேதி கோகிலபாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து தன்மீது முன்விரோதம் காரணமாக பாலியல் புகார் அளிக்கப்பட்டதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் கோகிலபாண்டியன் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின்படி விசாகா கமிட்டி அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது.

    இதில் சத்துணவு அமைப்பாளர் நந்தினியின் பெயரில் கோகிலபாண்டி யனுக்கு எதிராக போலியான ஆவணம் தயாரித்து ஆசிரியைகள் வனிதா, ராமலட்சுமி ஆகியோர் பொய் புகார் அளித்தது உறுதியானது. இதில் மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் பலருக்கும் தொடர்பு இருந்தது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் கோகிலபாண்டியனின் தற்காலிக பணி நீக்கம் பணிக்காலமாக கருதி அவருக்கு ஊதியம் வழங்க உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கோகிலபாண்டியன் வழக்கு தொடர்ந்தார்.

    விசாரணை முடிந்த நிலையில் ஆண்டிபட்டி நீதித்துறை நடுவர் பாசில்முகமது தீர்ப்பளித்தார். மாவட்ட கல்வி அலுவலர் மொக்கத்துரை, ஆசிரியைகள் வனிதா, ராமலட்சுமி ஆகிய 3 பேருக்கும் தலா 3½ ஆண்டுகள் சிறை தண்டனையும், மற்றொரு மாவட்ட கல்வி அலுவலர் கணேசுக்கு 1½ ஆண்டுகள் சிறை தண்டனையும் அளித்து உத்தரவிட்டார்.

    மேலும் மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்த முனியாண்டி, வட்டார கல்வி அலுவலர்கள் ஸ்ரீதேவி, ஹெலன் மெட்டில்டா ஆகிய 3 பேருக்கும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். அத்துடன் பாதிக்கப்பட்ட ஆசிரியர் கோகிலபாண்டியனுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது. ஆசிரியர் கோகிலபாண்டியன் தற்போது தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள ராஜகோபாலன்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்.

    • சாமி காவல்துறையில் 99-ம் ஆண்டு பணிக்கு சேர்ந்து கடந்த 10 வருடங்களுக்கு முன் இறந்து விட்டார்.
    • ஜான்சி முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் அவரது மகனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    நெல்லை:

    பாளை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ஜக்கம்மாதாய் என்ற ஜான்சி (வயது 38). இவரது கணவர் சாமி காவல்துறையில் 99-ம் ஆண்டு பணிக்கு சேர்ந்து கடந்த 10 வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இதனால் ஜான்சி தனது 17 வயது மகனுடன் வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று மாலை அங்குள்ள பத்திரப்பதிவு அலுவலகம் அருகே மொபட்டில் ஜான்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரது கழுத்தில் அணிந்திருந்த 13 பவுன் நகையைப் பறித்து சென்று விட்டதாக ஐகிரவுண்டு போலீசில் அவர் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ஜான்சி முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் அவரது மகனை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் தாய்-மகன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. இந்த தகராறில் ஏற்பட்ட கைகலப்பில் ஜான்சியின் கழுத்தில் காயம் ஏற்பட்டதாகவும், அந்த ஆத்திரத்தில் மகனை சிக்க வைக்க போலீசில் பொய் புகார் அளித்ததாகவும் ஜான்சி போலீசில் தெரிவித்தார்.இதையடுத்து அவரிடம் எழுதி வாங்கிக்கொண்டு போலீ சார் 2 பேரையும் எச்சரித்து அனுப்பினர்.

    ×