என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அரசு பணத்தை வாரி, வாரி இறைத்தாலும் தமிழ்நாட்டில் தி.மு.க. படுதோல்வி அடையும்- ஜெயக்குமார்
- நெல்லை மாவட்டத்தில் இரட்டைக் கொலை என சட்டம்-ஒழுங்கு சீரழிந்துள்ளது.
- தமிழ்நாடே கஞ்சா, போதைப் பொருட்கள், அடாவடித்தனங்களால் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.
சென்னை:
அரசு பணத்தை வாரி, வாரி இறைத்தாலும் தமிழ்நாட்டில் தி.மு.க. படுதோல்வி அடையும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பின், வெளியே வந்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் குழப்பமான சூழ்நிலை உள்ளது. நெருப்பில்லாமல் புகையாது. கத்தரிக்காய் மலிந்தால் கடைத்தெருவுக்கு வரும். காங்கிரஸ்-தி.மு.க. உறவு விரைவில் வெட்டா வெளிச்சம் ஆகிவிடும்.
அவர்களுக்குள் இருக்கும் நெருப்பை யார் அணைத்தாலும் சரி, அணைத்துக் கொண்டாலும் சரி எங்களை பொறுத்தவரையில், தமிழ்நாட்டில் மீண்டும் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி பெற்று, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி மலரும்.
தி.மு.க. படுதோல்வியை தமிழ்நாட்டில் அடைய போகிறது. அரசு பணத்தை வாரி வாரி இறைக்கிறார்கள். அப்படி இறைத்தாலும் வெற்றி பெற முடியாது. நெல்லை மாவட்டத்தில் இரட்டைக் கொலை என சட்டம்-ஒழுங்கு சீரழிந்துள்ளது. தமிழ்நாடே கஞ்சா, போதைப் பொருட்கள், அடாவடித்தனங்களால் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா இருப்பதால் சிறுபான்மை வாக்கு சிதறும் என்று இருந்த காலகட்டம் அப்போது வேறு. இப்போது வேறு. சிறுபான்மை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். இந்த ஆட்சியில் ஒரு நன்மையும் அவர்கள் பெறவில்லை. அவர்களுக்கு தேனும், பாலும் ஆறாக இந்த ஆட்சியில் ஓடுகிறதா? சமூக, கல்வி, பொருளாதாரத்தில் இந்த 5 ஆண்டு காலத்தில் சிறுபான்மையின மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளதா?. அதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சொல்ல சொல்லுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.






