search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Producers Council"

    வடிவேலுவின் நேசமணி கதாபாத்திரம் உலகளவில் டிரெண்டாகியிருக்கும் நிலையில், அவர் அளித்த பேட்டியில், தயாரிப்பாளர் சங்கத்தில் தன்னை அழிக்க பார்ப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
    நடிகர் வடிவேலு பிரெண்ட்ஸ் படத்தில் நடித்த நேசமணி காமெடி 2 நாட்களாக உலக அளவில் டிரெண்டிங் ஆனது. இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வடிவேலு வசனம் பரபரப்பானதால் நிருபர்கள் வடிவேலுவை தொடர்பு கொண்டு இது பற்றி கேட்டனர். இது தொடர்பாக வடிவேலு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    ‘எல்லா புகழும் இறைவனுக்கே என்று சொல்வார்கள். அதுபோல இந்த நேசமணிக்கு கிடைத்த புகழ் எல்லாமே பிரண்ட்ஸ் பட டைரக்டர் சித்திக்கையே சேரும். நேசமணி என்று ஒரு கேரக்டரை உருவாக்கியதே அவர்தான்.

    படப்பிடிப்பில் நடிக்கும்போது காமெடியில் எனக்கு தோணும் சின்னச் சின்ன ஐடியாக்களை அவரிடம் சொல்வேன். ஒருமுறைகூட மறுப்பே சொன்னது இல்லை. சந்தோ‌ஷமாக என் விருப்பத்துக்கு நடிக்கவிட்டார். அப்படி ஒரு பெருந்தன்மை கொண்ட டைரக்டர் சித்திக்.

    மேலும் கே.எஸ்.ரவிகுமார், சுந்தர்.சி, சுராஜ், வி.சேகர் ஆகியோரும் வெவ்வேறு விதமான திறமைசாலிகள். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நகைச்சுவை மன்னர்கள்.



    நான் வாழக்கூடாது, என்னை சாகடிக்கவேண்டும் என்று என்னை அழிப்பதற்கு தயாரிப்பாளர் சங்கத்தில் முடிவு செய்துவிட்டார்கள். ஏன் இப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை. அதை பற்றி நான் கவலைபடவில்லை.

    சினிமாவில் எனக்கு கிடைத்த இடைவெளி கடவுள் கொடுத்த வரப்பிரசாதம். என் மகன், மகளுக்கு திருமணம் செய்து கடமையை முடித்தேன். ஒரு வழியாக வாழ்க்கையை செட்டில் செய்துட்டேன். இனிமேல் சினிமாவில் நடிக்கிறது கடவுள் கையில் தான் இருக்கிறது.

    இம்சை அரசன் 2-ம் பாகத்தில் 3 விதமான கதாபாத்திரங்களில் நடிக்கிறேன். எனது பங்களிப்பு இல்லாமல் அந்த படத்தை எடுக்க முடியாது. மொத்த படத்தையும் நான்தான் முதுகில் சுமக்க வேண்டும்.

    ஆனால் ‘நான் சொல்கிறபடி மட்டும் நடிங்க என்று சொன்னால் என்ன அர்த்தம். நீங்க நேசமணி டிரெண்டிங்கில் இருக்கிறது என்று சொல்கிறீர்கள். டைரக்டர் என் இஷ்டத்துக்கு நடிக்கவிட்டதுதான் அதற்கு காரணம்.

    அதை புரிந்துகொள்ளாமல் இருந்தால் எப்படி? இப்போது நான் நடிக்காமல், வீட்டுலேயே இருக்க வேண்டும் என்பது தான் அவர்களின் ஆசை. அப்படியே இருந்துவிட்டு போகிறேன். மற்றபடி, நான் நேசமணி டிரெண்டிங்கில் இருக்கிறதை இன்னும் பார்க்கவில்லை.

    மோடி பதவி ஏற்கும் செய்திதான் எனக்கு தெரியும். நேசமணியை நான் இன்னும் பார்க்கவில்லை’.

    இவ்வாறு அவர் கூறினார்.



    விஷால் உள்ளிட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த பின்னர் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தனர். #Ilayaraja75 #TFPC #Vishal
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் இன்று காலை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார்.

    சுமார் அரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பு முடிந்த பின்னர் வெளியே வந்த விஷால் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விபரம் வருமாறு:-

    கேள்வி:- இந்த சந்திப்பின் நோக்கம் என்ன?

    பதில்:- இசை அமைப்பாளர் இளையராஜா பாராட்டு விழாவுக்கு அளிக்கப்பட்ட காவல்துறை பாதுகாப்புக்கு நன்றி தெரிவித்தோம். வரிவிலக்கு விவகாரத்தில் மற்ற மொழி படங்களைவிட தமிழ் மொழி படங்களுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். இனி நடைபெறும் திரைத்துறை தொடர்பான எந்த நிகழ்ச்சிக்கும் அரசு ஆதரவு கேட்டு இருக்கிறோம்.

    கே:- தயாரிப்பாளர் சங்கத்தில் பார்த்திபன் விலகல் விவகாரம் குறித்து?

    ப:- பார்த்திபன் சாரின் பெயர் சினிமா தாண்டி வரலாற்றில் பதிவான ஒரு வி‌ஷயம். அவர் செய்த முயற்சி இனி யாரும் செய்ய முடியாத சாதனை. பார்த்திபன் என்ற தனி மனிதனின் முயற்சியால் தான் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இளையராஜா பாடும் நிகழ்வு நடந்தது. அம்பானி வீட்டு திருமணத்தில் கூட இப்படி ஒரு நிகழ்வை பார்க்க முடியாது. வரலாறு காணாத சாதனை. அவரது முயற்சி எங்களுக்கு பிரமிப்பாக இருந்தது. எல்லா பெருமையும் அவரையே சாரும்.

    கே:- இளையராஜா விழாவில் பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்ட சிலர் கலந்துகொள்ளவில்லையே?

    ப:- எல்லோருக்கும் அழைப்பு விடுத்தோம். இது இளையராஜாவுக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சி. வருவதும் வராமல் இருப்பதும் அவர் அவர்கள் விருப்பம். இது பள்ளி நிகழ்ச்சி கிடையாது. கட்டாயப்படுத்தி ஒவ்வொருவராக வரவழைக்க.

    கே:- நடிகர் சங்க கட்டட பணிகள் எப்போது முடியும்?

    ப:- கிட்டத்தட்ட முடியும் நிலையில் இருக்கிறது. நிகழ்ச்சி அரங்க வேலைகள் மட்டும்தான் பாக்கி. வரும் ஜூலை மாத முதல் வாரத்தில் திறப்பு விழா நடக்கும்.



    கே:- கடந்த வாரம் வெளியான படங்கள்கூட பைரசி இணையதளங்களில் வெளியாகிவிட்டதே?

    ப:- பைரசி வி‌ஷயத்தில் நான் நம்புவது கடவுளை அல்ல. கடவுளாக நினைக்கும் தமிழக அரசை. அவர்கள் நினைத்தால் ஆபாச இணையதளங்களை தடை செய்ததுபோல ஒரே உத்தரவில் தடை செய்ய முடியும். ஒரே நாளில் பைரசியை ஒழிக்க முடியும். அரசு பேருந்துகளில் புது படங்கள் ஒளிபரப்பட்டுவது பற்றியும் அரசிடம் கூறி உள்ளோம். நாங்கள் எங்கள் முயற்சிகளை தொடர்வோம்.

    கே:- இளையராஜா நிகழ்ச்சி சங்கத்துக்கு எந்த வகையில் உதவியாக இருக்கும்?

    ப:- கண்டிப்பாக உதவியாக இருக்கும். உலகம் முழுக்க உள்ளவர்கள் வந்து ரசித்துள்ளனர். டிவி மூலமும் பார்க்க போகிறார்கள். இது அவருக்கு நாங்கள் செய்யவேண்டிய கடமை. 1000 படங்களுக்கு மேல் இசையமைத்த அந்த மாமேதைக்கு கொடுக்கப்பட்ட இந்த அங்கீகாரத்தால் அவருக்கும் மகிழ்ச்சிதான்.

    கே:- எவ்வளவு சங்கத்துக்கு நிதி கிடைக்கும் என நினைக்கிறீர்கள்?

    ப:- முறையான கணக்குகள் வந்த பிறகு வரவு செலவு அனைத்தையும் இணையத்தில் பொதுமக்கள் பார்வைக்கே வெளியிடுவோம்.

    கே:- பைரசியை ஒழிக்கவில்லை என்று வசந்த பாலன் உங்களை விமர்சித்துள்ளாரே?

    ப:- அது அவருடைய கருத்து. நாங்கள் எங்கள் முயற்சிகளை எடுத்து வருகிறோம். நான் ஒரு திருடனை பிடித்துவிட்டேன், ஆனால் விஷாலால் முடியவில்லை என்று சொன்னால் பெருமைப்படலாம். ஆனால் ஒரு ரூமில் உட்கார்ந்து கொண்டு குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. களத்துக்கு வந்து எங்களுடன் நின்று போராடுங்கள். அனைவரையும் அழைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த சந்திப்பின் போது பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் உடன் இருந்தனர். #Ilayaraja75 #TFPC #Vishal

    என் படங்களை விட கமல்ஹாசன் படங்களுக்கு நல்ல பாடல்களை கொடுத்திருக்கிறார் என்று இளையராஜா விழாவில் ரஜினி பேசிய நிலையில், ரஜினி ஆதங்கத்துக்கு இளைராஜா பதில் அளித்துள்ளார். #Ilayaraja75 #Rajinikanth #KamalHaasan
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ’இளையராஜா 75’ இசை நிகழ்ச்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 2 நாட்கள் நடந்தது.

    இந்த நிகழ்ச்சியை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். முதல் நாளான நேற்று முன்தினம் பல்வேறு திரை உலகப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

    நேற்று நடந்த விழாவில் திரையுலக பிரமுகர்களுடன் பொது மக்களும் திரளாக கலந்து கொண்டனர். அப்போது மேடை ஏறிய ரஜினிகாந்த் இளையராஜாவுடன் கலந்துரையாடினார்.

    ரஜினி பேசும்போது ‘இசை அமைப்பாளர்களுக்கு ஆண்டவன் ஆசீர்வாதமும் நம்மை இயக்கும் சக்தியும் உண்டு. அன்னக்கிளியில் தொடங்கிய அந்த அபூர்வ சக்தியை இப்போதுவரை பார்க்கிறேன்’ என்றார்.

    நிகழ்ச்சி தொகுப்பாளர் சுஹாசினி ரஜினியிடம் ’உங்களுக்குப் பிடித்த ராஜா சார் பாட்டு எது’ என்று கேட்டார்.

    அதற்கு ரஜினி, ’அவர் இசையமைத்த எல்லா பாடல்களும் எனக்கு பிடிக்கும். ஒரு ஹீரோவுக்கு முரட்டுகாளையில் வரும் ‘பொதுவாக என் மனசு தங்கம்’ பாட்டை விட வேறு என்ன வேண்டும்?

    ‘ராமன் ஆண்டாலும்’ பாட்டு இப்பவும் நினைவு இருக்கு. ’ஊரை தெரிஞ்சிக்கிட்டேன்’ மாதிரி ஒரு பாட்டு வருமா?. அவர் என்னையே பாட வைத்தார். நான் 5 வரிகள் தான் பாடினேன். அதற்கே 5 மணி நேரம் ஆனது. இருந்தாலும் அவர் கமலுக்குதான் நிறைய நல்ல பாட்டு போட்டிருக்கார்’’என்று ஆதங்கப்பட்டார்.

    இதற்கு பதில் அளித்த இளையராஜா, ‘இவருக்கு நல்ல பாட்டு போடறதா கமல் சொல்வார். நான் ஆள் பார்த்து இசை அமைத்ததில்லை. எனக்கு எல்லாரும் ஒண்ணுதான், ராமராஜன் படங்களுக்கு போடலையா, மைக் மோகன்னே மோகனுக்கு பேர் வெச்சாங்க’ என்றார். உடனே ரஜினி ‘சாமி நான் கமலுக்கும் எனக்கும் நடுவில் சொன்னேன்’ என்றார். இளையராஜா ‘இல்ல சாமி, நான் பாட்டுல வித்தியாசமே பாக்கறதில்ல’ என்று சொல்ல கைதட்டல் எழுந்தது.



    சுஹாசினி ‘ரஜினி சார் ஒரு சூப்பர் ஸ்டார், இளையராஜா ஒரு சூப்பர் ஸ்டார், 2 சூப்பர் ஸ்டார்களையும் ஒரே மேடையில்...’ என்று சொல்ல தொடங்க அவரை இடைமறித்த இளையராஜா ’ரெண்டு பேர் இல்ல. ஒரே சூப்பர் ஸ்டார் தான். மேடையில் ஏறினா ஏதாவது பேசிடறதா... சூப்பர் ஸ்டார்னா அவர் மட்டும்தான்’ என்று ரஜினியை கைகாட்டினார். ரசிகர்கள் விசில் அடித்து கைதட்டினார்கள்.

    இளையராஜா இசை நிகழ்ச்சி சரியாக 6.45 மணிக்கு தொடங்கி 12.30-க்கு முடிந்தது. 35 பாடல்கள் பாடப்பட்டன. முதல் பாடலாக குரு பிரம்மா பாடல் கோரசில் பாடப்பட்டது. அடுத்து இளையராஜா ஜனனி ஜனனி பாடலுடன் பாட தொடங்கினார். சுமார் 6 மணி நேரம் தொடர்ந்து கச்சேரி செய்தாலும் இளையராஜா முகத்தில் சின்ன சோர்வுகூட தென்படவில்லை.

    கடைசியாக முடிக்கும் போது நாயகன் படத்தில் இடம் பெற்ற தென்பாண்டி சீமையிலே பாடலுடன் கச்சேரி முடிந்தது. ‘என்றென்றும் நினைவில் நிற்கும் இந்நொடிதானே...’ என்ற வரிகளுடன் நிகழ்ச்சியை முடித்தார். 85 சதவீத இருக்கைகள் நிரம்பி வழிந்தன.

    பாடலை பாடி முடித்து இளையராஜா ரசிகர்களின் மத்தியில் பேசும்போது, ‘‘இவ்வளவு பெரிய விழாவாக இது நடைபெறும் என நான் எண்ணவில்லை. விழாவை நடத்திய தயாரிப்பாளர் சங்கத்துக்கும், அதன் தலைவர் விஷாலுக்கும் எனது பாராட்டுகள். இந்த நிகழ்ச்சி நடக்கக் கூடாது என்று நினைத்தவர்களுக்கும் ரொம்ப நன்றி.



    இந்திய நீதிமன்ற சரித்திரத்தில் ஒரு தனி மனிதனுக்கு கோர்ட்டு சான்றிதழ் கொடுத்தது என்றால் அதுக்கு காரணம் இந்த நிகழ்ச்சியை எதிர்த்து வழக்கு போட்டவர்கள் தான். விஷால் மற்றும் அவரின் அணி வென்று சங்கத்தின் வேலைகளைச் செய்தால், இவர்கள் வெளியிலிருந்து இந்த மாதிரி சங்கத்துக்கு பாராட்டுகளை வாங்கித் தருகிறார்கள்.

    சிலர் பாட்டுக்கு மியூசிக் போட்டு பெரிய ஆள் ஆவார்கள், சிலர் பாடலில் இருக்கும் குறையை கண்டுபிடித்து காட்டி பெரிய ஆள் ஆவார்கள். அந்தமாதிரிதான் அவங்க இந்தமாதிரி நிறைய கேஸ் போட்டு கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் நடையோ நடைன்னு நடக்கணும் என்று வாழ்த்துறேன்” என்றார். அப்போது குழுமியிருந்த ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

    இளையராஜாவுடன் அவரது தொடக்கத்தில் இருந்து பயணித்த பாரதிராஜா, வைரமுத்து, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.ஜானகி, கங்கை அமரன் போன்றோர் கலந்து கொள்ளாதது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. #Ilayaraja75 #Rajinikanth #KamalHaasan

    தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இளையராஜா 75 இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஜினி, எனது படங்களை விட கமல்ஹாசன் படங்களுக்கு நல்ல பாடல்களை கொடுத்திருக்கிறார் என்றார். #Ilayaraja75 #Rajinikanth
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், இளையராஜா 75வது பிறந்தநாளை முன்னிட்டு இளையராஜா 75 என்ற இசை நிகழ்ச்சி சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்தது.

    2-வது நாள் நிகழ்ச்சியாக நேற்று இளையராஜாவின் இசை கச்சேரி நடந்தது. இதில் முன்னணி பாடகர்-பாடகிகள் பங்கேற்று இளையராஜா இசையமைத்த படங்களில் இருந்து பாடல்களை பாடினார்கள். ஹங்கேரி இசை குழுவினரும் இதில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

    விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-

    இளையராஜாவுக்கு இசை அருள் இருக்கிறது. தானாக வளர்வது சுயம்பு லிங்கம். இளையராஜாவின் இசையும் சுயம்பு லிங்கம் போன்றது. அவர் இசை உலகின் சுயம்பு லிங்கம். முதல் படத்தில் இருந்து இப்போது வரை அவருடைய இசை உயிரோடு இருக்கிறது. தயாரிப்பாளர்கள் சங்கம் இளையராஜாவுக்கு 75-வது பிறந்தநாள் விழாவையும், பாராட்டு விழாவையும் நடத்தி உள்ளது.



    இதில் நானும் பங்கேற்பதில் மகிழ்ச்சி. இளையராஜாவை ‘சார்’ என்று தான் நான் அழைத்து வந்தேன். ஒருகட்டத்தில் ஆன்மிகவாதியாக பார்த்தேன். ரமண மகரிஷியை எனக்கு அறிமுகம் செய்துவைத்தது இளையராஜாதான். எப்போதும் மாலை அணிந்துகொண்டு இருக்கும் இளையராஜாவை பார்த்து நான், பின்னர் ‘சாமி’ என்று அழைக்க ஆரம்பித்தேன்.

    பாடல்களை மட்டும் வைத்து பிரபலமானவர் என்று இளையராஜாவை மதிப்பிட முடியாது. அதற்கும் மேலாக அவர் வாழ்க்கை தியாகம் நிறைந்தது. கஷ்டப்பட்ட எத்தனையோ தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்து இருக்கிறார். 1980 கால கட்டங்களில் பொங்கல், தீபாவளி பண்டிகைகளுக்கு 13, 14 படங்கள் என்று வெளியாகும். அவற்றில் 10, 12 படங்கள் இளையராஜா இசையமைத்தவைகளாகவே இருக்கும்.

    நிறைய தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களுக்கு ரீ-ரிக்கார்டிங் செய்ய இளையராஜா ஸ்டூடியோவில் வரிசையில் நிற்பார்கள். அவர் பாடல்களுக்கு இசையமைத்து ரீ-ரிக்கார்டிங் செய்துவிட்டால், அந்த படத்தின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுவிடும்.

    ஒரே நாளில் 3 படங்களுக்கு கூட தூங்காமல் ரீ-ரிக்கார்டிங் செய்திருக்கிறார். ஆனால் இப்போது ஒரு படத்துக்கு ரீ-ரிக்கார்டிங் செய்ய 30 நாட்கள் ஆகிறது. தயாரிப்பாளர்கள் கஷ்டப்படக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காக அவர் இப்படி உழைத்தார்.

    டைரக்டர்கள் கதை சொல்லும்போது சரியாக இல்லாமல் இருந்தால் அதில் சில திருத்தங்கள் சொல்வார். அதுமட்டுமின்றி தயாரிப்பாளர்களிடம் பணம் வாங்காமல் கூட இருந்திருக்கிறார். இதனால் தான் அவரின் காலில் விழுகிறார்கள். பாடல்களுக்கு 70 சதவீதம் இளையராஜாவே பல்லவி போட்டிருக்கிறார்.



    மற்ற பாடல் வரிகளிலும் அவருடைய பங்களிப்பு இருக்கிறது. சினிமா துறைக்கு பெரிய தியாகம் செய்திருக்கிறார். அவர் நீண்ட காலம் நிம்மதியாக வாழவேண்டும். ‘மன்னன்’ படத்தில் என்னையும் பாடவைத்தார். 6 வரிகள் தான். ஆனால் அதை பாட எனக்கு 6 மணி நேரம் ஆனது.

    ‘பொதுவாக என் மனசு தங்கம்...’, ‘ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும்...’, ‘ஊரை தெரிஞ்சுக்கிட்டேன்...’ என்று எனது படங்களுக்கு அவர் இசையமைத்த எத்தனையோ பாடல்கள் என் மனதில் நிற்கின்றன. ஆனாலும் எனது படங்களை விட கமல்ஹாசன் படங்களுக்கு நல்ல பாடல்களை கொடுத்திருக்கிறார். இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

    விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு மகள் ஸ்ருதியுடன் இணைந்து ‘ஹேராம்’ மற்றும் ‘சிவப்பு ரோஜாக்கள்’ பட பாடல்களை மேடையில் பாடினார்.

    விழாவில் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், டைரக்டர்கள் மணிரத்னம், ஷங்கர், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் உள்ளிட்ட நடிகர்-நடிகைகள் மற்றும் ஏ.சி.சண்முகம், ஐசரி கணேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். #Ilayaraja75 #Rajinikanth #KamalHaasan

    இளையராஜா 75 நிகழ்ச்சியை நடத்த தடையில்லை என தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Ilayaraja75 #Vishal #ProducersCouncil

    சென்னை:

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பிப்ரவரி 2, 3 தேதிகளில் இசை அமைப்பாளர் இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி அவரை கவுரவப்படுத்தும் விதமாக இசை நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி தயாரிப்பாளர்கள் ஜே.சதீஷ்குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கம் சார்பிலும் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் இளையராஜா நிகழ்ச்சிக்கான செலவு குறித்த தகவல் ஏதும் இல்லை என்று கூறிய நீதிபதிகள், இளையராஜா நிகழ்ச்சிக்கான செலவு உள்ளிட்ட நிகழ்ச்சி சம்பந்தமான கணக்குகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.



    இந்நிலையில், இளையராஜா 75 நிகழ்ச்சியை நடத்த தடையில்லை என தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

    இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், உரிய ஆதாரங்களின்றி கடைசி நேரத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இதனால் தயாரிப்பாளர்கள் சதீஷ்குமார், ராதாகிருஷ்ணன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது.

    எனவே, இளையராஜா 75 நிகழ்ச்சியை தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்த தடையில்லை. மேலும், கணக்கு வழக்குகளை மார்ச் 3 பொதுக்குழுவில் தயாரிப்பாளர் சங்கம் தாக்கல் செய்யவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. #Ilayaraja75 #Vishal #ProducersCouncil
    தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடத்தப்படும் இளையராஜா 75 இசை நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. #Ilayaraja75 #ARRahman
    இசை அமைப்பாளர் இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ் திரைப் பட தயாரிப்பாளர் சங்கம் அவருக்காக பிரம்மாண்ட மான இசை நிகழ்ச்சி வருகிற 2, 3 ஆகிய தேதிகளில் நடத்த இருக்கிறது.

    இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பவர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் முன்னிலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார்.



    2-ந் தேதி நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் மஞ்சிமா மோகன், நிக்கி கல்ராணி, சாயிஷா, யோகி பாபு, ரோபோ சங்கர், சதீஷ், கோவை சரளா, ராதா, கார்த்திகா, ஆண்ட்ரியா, தமன், விஜய் யேசுதாஸ் ஆகியோரும் பங்கேற்று நடனமாடி, பாடல்கள் பாடி, சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்த உள்ளனர். #Ilayaraja75 #ARRahman

    தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடத்தப்படும் இளையராஜா 75 இசை நிகழ்ச்சியை கவர்னர் பன்வாரிலால் புரோஹித் குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கிறார். #Ilayaraja75 #ProducersCouncil #Vishal
    இசை அமைப்பாளர் இளையராஜா இந்த ஆண்டு தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 1000 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ள இளையராஜாவை பெருமைப்படுத்த திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மாபெரும் நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டது.

    வரும் பிப்ரவரி 2, 3 தேதிகளில் நடைபெறவுள்ள ‘இளையராஜா 75’ விழாவிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த பாராட்டு விழாவிற்கான டிக்கெட் விற்பனையும் சூடுபிடித்துள்ளது.

    விழாவில் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் பங்கேற்கின்றனர். திரைத்துறையைச் சேர்ந்த முக்கிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் பங்கேற்க உள்ளனர்.

    தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், பொதுச் செயலாளர்கள் கதிரேசன் மற்றும் எஸ்.எஸ்.துரைராஜ் ஆகியோர் ராஜ்பவனிற்கு சென்று தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து விழாவை தொடங்கி வைக்குமாறு அழைப்பு விடுத்தனர்.



    அவர்களது அழைப்பினை ஏற்று வரும் பிப்ரவரி 2-ந் தேதி ‘இளையராஜா 75’ விழாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குத்துவிளக்கு ஏற்றி தொடக்கி வைக்கிறார்.

    ‘இளையராஜா 75’ என்ற விழா மலரை வெளியிட்டு சிறப்புரையாற்ற இருக்கிறார். அதைதொடர்ந்து முன்னணி நடிகைகளின் நடன நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    மறுநாள் பிப்ரவரி 3-ந் தேதி இளையராஜா நேரடி இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். #Ilayaraja75 #ProducersCouncil #Vishal #BanwarilalPurohit

    இளையராஜா 75 நிகழ்ச்சிக்கான செலவு உள்ளிட்ட கணக்குகளை தாக்கல் செய்ய தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Ilayaraja75 #Vishal #ProducersCouncil
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பிப்ரவரி 2, 3 தேதிகளில் இசை அமைப்பாளர் இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி அவரை கவுரவப்படுத்தும் விதமாக இசை நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், மனுவில் இளைராஜா நிகழ்ச்சிகான செலவு குறித்த தகவல் ஏதும் இல்லை என்று கூறிய நீதிபதிகள் நாளை மறுநாள் இளைராஜா நிகழ்ச்சிக்கான செலவு உள்ளிட்ட நிகழ்ச்சி சம்பந்தமான கணக்குகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.



    மேலும் இளைராஜா 75 இசை நிகழ்ச்சியை ஏன் ஒத்திவைக்கக் கூடாது என்றும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில், ஏற்பாடுகள் முடிந்து விட்டதால் நிகழ்ச்சியை நிறுத்த முடியாது என்று தயாரிப்பாளர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது. #Ilayaraja75 #Vishal #ProducersCouncil

    இசைக்கலைஞர்கள் உருவாக்கப்படுவதில்லை. பிறக்கிறார்கள். எனக்கு இசை பற்றி ஒன்றும் தெரியாது. அதனால்தான் தொடர்ந்து இசைத்துக் கொண்டே இருக்கிறேன் என்று கல்லூரி விழாவில் இளையராஜா பேசினார். #Ilayaraja75
    இசை அமைப்பாளர் இளையராஜா இந்த ஆண்டு தனது 75 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி பல்வேறு கல்லூரிகளுக்கு சென்று மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடல் நடத்தி வருகிறார். இந்த வரிசையில் இளையராஜாவின் பிறந்தநாள் விழா சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக நுண்கலை புலம் சார்பில் கொண்டாடப்பட்டது.

    விழாவுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் முருகேசன் தலைமை வகித்தார். விழாவில் இளையராஜா மாணவ, மாணவிகளுடன் சேர்ந்து பிறந்தநாள் கேக் வெட்டினார். அவர் பேசியதாவது:-

    ‘‘இந்த அரங்குக்கு நான் இரண்டாவது முறையாக வந்துள்ளேன். 1994-ம் ஆண்டு எனக்கு இந்த அரங்கில் தான் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அதன்பிறகு இப்போது வந்துள்ளேன். இசையும், பாடல்களும் காற்றில் பரவும் அசுத்தங்களை சுத்தம் செய்கின்றன.

    நாம் எல்லா இசைகளுக்கும் தலையாட்டுவது இல்லை. பக்குவப்பட்ட இதய குரலில் இருந்து வரும் இசைக்கு மட்டுமே தலையாட்டுகிறோம். இதனால் கவலையை சாந்தப்படுத்த முடிகிறது என்று பல்வேறு தரப்பு மக்கள் இதை என்னிடம் கூறியுள்ளனர்.

    அடிக்கிற அலைகள் ஒவ்வொன்றும் ஒரு விதம். அதேபோல் மாணவர்களும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். நீரோடைகள் செல்லும் இடங்களைப் பசுமையாக்குவது போல மாணவர்கள் தாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைய வேண்டும். சாதனை என்பது அதுவாக நடக்கக் கூடியது.


    நான் சொல்லப்படாத சாதனைகள் பல உள்ளன. இசைக்கலைஞர்கள் உருவாக்கப்படுவதில்லை. பிறக்கிறார்கள். எனக்கு இசை பற்றி ஒன்றும் தெரியாது. அதனால்தான் தொடர்ந்து இசைத்துக் கொண்டே இருக்கிறேன்’’

    இவ்வாறு கூறிவிட்டு தன் முன் இருந்த ஆர்மோனிய பெட்டி மீது சத்தியம் செய்தார்.

    துணைவேந்தர் முருகேசன் பேசுகையில், “பல்கலைக்கழக இசைத்துறையில் இளையராஜா பெயரில் இருக்கை ஒன்று அமைக்க போகிறோம். பல்கலைக்கழகத்தில் இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்தி அதில் வரும் வருமானத்தில் இருக்கை அமைக்க அனுமதி வேண்டும்.

    இந்த இருக்கையின் மூலம் இசைத் துறையில் தனித்தன்மை வகிக்கும் மாணவர்களுக்கும் அறிஞர்களுக்கும் பாராட்டு பட்டயம் வழங்கி சிறப்பிக்க திட்டமிட்டு இருக்கிறோம்” என்றார். இதனை இளையராஜா ஏற்றுக் கொண்டு, பல்கலைக்கழகத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தி தருவதாக கூறினார். #Ilayaraja75 #ProducerCouncil #Vishal

    இளையராஜா நிகழ்ச்சியில் முறைகேடு நடந்ததாக தயாரிப்பாளர்கள் கே.ராஜன், ஏ.எல். அழகப்பன் ஆகியோர் விஷால் மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். #Ilayaraja75 #Vishal
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பிப்ரவரி 2, 3 தேதிகளில் இசை அமைப்பாளர் இளையராஜாவின் பிறந்த நாளையொட்டி அவரை கவுரவப்படுத்தும் விதமாக இசை நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இந்நிலையில் தயாரிப்பாளர்கள் கே.ராஜன், ஏ.எல். அழகப்பன் இருவரும் விஷால் மீது இன்று மதியம் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதுபற்றி கே.ராஜனிடம் கேட்டபோது ‘தயாரிப்பாளர் சங்கம் மற்றும் அறக்கட்டளை நிதியில் தலைவர் விஷால் 7 கோடி வரை மோசடி செய்துள்ளார் என்று கூறி போராட்டம் நடத்தினோம். அவர் எங்களுக்கு அனுப்பி உள்ள நோட்டீசில் தான் சங்க நிதி எட்டே முக்கால் கோடியை செலவு செய்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.



    பொதுக்குழு அனுமதி இல்லாமல் சங்க நிதியை பயன்படுத்திய விஷால் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இளையராஜா இசை நிகழ்ச்சியை அவர் நடத்தக்கூடாது என்றும் கூறி இருக்கிறோம். இசை நிகழ்ச்சி என்ற பெயரில் பல்வேறு முறைகேடு நடக்கின்றன. அரசு தரப்பில் இருந்து ஒருவரை நியமித்து நடத்தப்பட வேண்டும். அப்படி நடத்தினால் அதில் இருந்து திரட்டப்படும் நிதியை கொண்டு பழைய கணக்கை காட்டக்கூடாது’ என்று கூறினார். #Ilayaraja75 #Vishal

    இளையராஜா இசை நிகழ்ச்சியை தடையின்றி நடத்துவோம் என்று கூறிய நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு மார்ச் 3-ஆம் தேதி கூடும் என்று கூறியுள்ளார். #Ilayaraja75 #Vishal #ProducersCouncil
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள 5,000 சதுர அடி கொண்ட தயாரிப்பாளர் சங்கத்தின் கிளை அலுவலகத்தை திறந்து வைத்தார்.

    அதே கட்டடத்தில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் மைக்ரோப்ளெக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட இருக்கும் தமிழ்த் திரைப்படங்களுக்கான டிஜிட்டல் மாஸ்டரிங் தொழில்நுட்பத்தை மும்பையின் பிரைம் போகஸ் நிறுவனத்துடன் இணைந்து தொடங்கி வைத்தனர்.

    இந்த ‘மைக்ரோப்ளெக்ஸ்’ வசதி ‘ஐடி’ நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தான் அமைந்திருக்கும். ஆனால் முதன்முறையாக தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு அதற்கான அலுவலகத்தில் அமைந்து இருக்கிறது. முக்கியமாக இலவசமாக கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. அதற்காக ‘மைக்ரோப்ளெக்ஸ்’ ஆல்பர்ட்டுக்கு நன்றி.



    சங்கத்திற்கு முதன்மை அலுவலகம் இருக்கிறது. அதேபோல் தி.நகரிலும் ஒரு அலுவலகம் இருக்கிறது. ஆனால் இந்த இடம் சிறு தயாரிப்பாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும். பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு, படத்தின் பிரத்யேக காட்சிகள் மற்றும் இசை வெளியீட்டு விழா ஆகியவற்றிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த அலுவலகத்திற்கு வாடகை கிடையாது.

    தயாரிப்பாளர்களாகிய நாங்கள் பல வருடங்களாக எங்களுக்கு சம்பந்தமே இல்லாத புரொஜக்டருக்கு செலவழித்து வருகிறோம். இந்த விவாதத்திற்கு இப்போது தான் ப்ரைம்போக்கஸ் மூலம் ஒரு தெளிவு கிடைத்திருக்கிறது. இந்த இரண்டு நிறுவனங்களும் அந்த தொகையைக் குறைத்து இருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு தொகையை அளித்து மாஸ்டர் யூனிட்டை அமைக்கலாமா என்ற எங்களது யோசனையை நிஜமாக்கி தந்தவர் ஆல்பர்ட்.

    மேலும் ஒரு சிறப்பம்சம் 50 ரிப்லைனிங் இருக்கைகள் கொண்ட ஒரு ப்ரீவியூ தியேட்டர் இருக்கிறது. அதை சென்சார் மற்றும் திரைப்பட வெள்ளோட்டத்திற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்கள். நான் படம் தயாரிக்கும் போது தான் ஒரு தயாரிப்பாளருடைய கஷ்டம் புரிந்தது.



    ஆனால், அவர்கள் தயாரிக்காமலே தயாரிப்பாளர்களின் கஷ்டத்தைப் புரிந்துகொண்டு இந்த சலுகையை அளித்திருக்கிறார்கள். இப்படிபட்ட நண்பர்களை இழந்து விடாமல் எல்லோரும் நேர்மையாக செயல்பட வேண்டும். அப்படி செயல்பட்டால் எந்தவிதமான தடையாக இருந்தாலும் அதை உடைத்துவிடலாம்.

    எந்த வி‌ஷயமாக இருந்தாலும் அலுவலகம் வாருங்கள் என்று சொல்வது தான் பெருமையாக இருக்கும். இனிமேல் நாங்கள் அதைக் கூறுவோம். எங்களுக்கென்று ஒரு அலுவலகம் அமைந்திருக்கிறது.

    ‘இளையராஜா 75’ விழா பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கோலாகலமாக நடைபெறும். இந்த விழாவை இசைஞானிக்காக நடத்துவதில் பெருமை அடைகிறேன். இப்படிப்பட்ட மாமனிதருக்கு விழா எடுப்பது எல்லோருடைய கடமை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சங்க துணை தலைவர் பார்த்திபன் கூறியதாவது:-

    ஒரு மனிதன் தன் வாழ்நாளில் முதன்மையாகக் கருதுவது திருமணம் தான். ஆனால் அதைவிட தலைவர் பொறுப்பில் இருக்கும் போதே சங்கத்திற்கு சிறந்ததை செய்துவிட வேண்டும் என்று செல்படுகிற விஷாலை நான் தரிசிக்கிறேன். ஆல்பர்ட் உடனும், ரஞ்சித்துடனும் அவர் பேசிக் கொண்டிருந்ததை நான் கவனித்துக் கொண்டிருந்தேன். இதைவிட தெளிவாக, சங்கத்திற்கு நன்மை செய்துவிட முடியுமா? என்று ஆச்சரியமாக இருந்தது.

    இதில் அரசியல் இல்லை. நான் யாருக்கும் விரோதி அல்ல. தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு மிகப்பெரிய தொகையை வைப்பு நிதியாக சேமித்து வைக்க நினைக்கும் விஷாலின் திட்டத்திற்கு எனது பங்களிப்பும் இருக்கும் என்பதில் மகிழ்ச்சி’.

    இவ்வாறு அவர் பேசினார்.



    விஷால் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது தயாரிப்பாளர் ஜே.சதிஷ்குமார் இளையராஜா நிகழ்ச்சிக்குத் தடைக் கேட்டு வழக்கு தொடர்ந்தது குறித்து கேட்டதற்கு ’நீதிபதிகளை தெய்வமாக மதிக்கிறோம். இந்த வழக்குகள் எல்லாம் நல்லபடியாக முடியும். 1,000 படங்களுக்கு மேல் இசையமைத்த இளையராஜா என்ற இசை மேதையைக் கொண்டாடும் நிகழ்ச்சி இது.

    ஜே.சதிஷ்குமார் எங்கள் சங்க உறுப்பினர். எனது நண்பர் தான். எந்த வி‌ஷயமாக இருந்தாலும் அவர் நேராக கேட்டு இருந்தால் சொல்லி இருப்போம். அந்த வழக்கு போட்ட செலவில் இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கி பார்த்து இருக்கலாம்.

    இளையராஜாவை கவுரவிக்கும் நிகழ்ச்சியில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு யாராலும் பூட்டு போட முடியாது. நீதிமன்றத்தில் உள்ள வழக்கினை முறையாக சந்தித்து நிச்சயமாக வெற்றி பெறுவோம். நிகழ்ச்சிக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். எந்த தடையும் ஏற்படாது.

    சங்கத்தில் நாங்கள் எந்த முறைகேடும் செய்யவில்லை. எல்லாவற்றுக்கும் கணக்கு வைத்துள்ளோம். எனக்கு மறைமுக எதிரி என்று யாரும் இல்லை.

    தயாரிப்பாளர் சங்க வைப்பு நிதி மற்றும் கணக்கு வழக்குகள் குறித்த அனைத்தையும் பொதுக்குழுக் கூட்டத்தில் சமர்ப்பிப்போம். மார்ச் 3-ந்தேதி தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார். #Ilayaraja75 #Vishal #ProducersCouncil

    ‘இளையராஜா 75’ நிகழ்ச்சிக்கு தடை கேட்டு தயாரிப்பாளர் ஒரு தொடர்ந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்ய தயாரிப்பாளர் சங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #Ilayaraja75 #ProducersCouncil
    சென்னை உயர்நீதிமன்றத்தில் திரைப்பட தயாரிப்பாளர் சதீஷ்குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக உள்ளேன். இந்த சங்கம், ‘இளையராஜா 75’ என்ற நிகழ்ச்சியை வருகிற பிப்ரவரி 2-ந் தேதி நடத்த ஏற்பாடு செய்துள்ளது. 

    இந்த நிகழ்ச்சியின் முன் ஏற்பாடு பணிகளுக்காக தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் சுமார் ரூ.1 கோடி வரை செலவு செய்துள்ளனர். இந்த நிதி எவ்வாறு திரட்டப்பட்டது? என்பது தெரியவில்லை. மேலும், இந்த நிகழ்ச்சி மூலம் சுமார் ரூ.7 கோடி நிதி திரட்டப்படும் என்று சங்கத்தின் நிர்வாகிகள் தரப்பில் கூறினாலும், அதற்கு உறுதியான திட்டம் அவர்களிடம் இல்லை.



    தற்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகளின் பதவி வருகிற ஏப்ரல் மாதம் 2-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, ‘இளையராஜா 75’ என்ற நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்றால் ரூ.7 கோடியை டெபாசிட் செய்ய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கு உத்தரவிட வேண்டும். இந்த பணத்தை டெபாசிட் செய்யாமல், இந்த நிகழ்ச்சியை நடத்த தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, விசாரணையை வருகிற 28-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். மேலும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார். #Ilayaraja75 #ProducersCouncil

    ×