search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ilayaraja75"

    என் படங்களை விட கமல்ஹாசன் படங்களுக்கு நல்ல பாடல்களை கொடுத்திருக்கிறார் என்று இளையராஜா விழாவில் ரஜினி பேசிய நிலையில், ரஜினி ஆதங்கத்துக்கு இளைராஜா பதில் அளித்துள்ளார். #Ilayaraja75 #Rajinikanth #KamalHaasan
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ’இளையராஜா 75’ இசை நிகழ்ச்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 2 நாட்கள் நடந்தது.

    இந்த நிகழ்ச்சியை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். முதல் நாளான நேற்று முன்தினம் பல்வேறு திரை உலகப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

    நேற்று நடந்த விழாவில் திரையுலக பிரமுகர்களுடன் பொது மக்களும் திரளாக கலந்து கொண்டனர். அப்போது மேடை ஏறிய ரஜினிகாந்த் இளையராஜாவுடன் கலந்துரையாடினார்.

    ரஜினி பேசும்போது ‘இசை அமைப்பாளர்களுக்கு ஆண்டவன் ஆசீர்வாதமும் நம்மை இயக்கும் சக்தியும் உண்டு. அன்னக்கிளியில் தொடங்கிய அந்த அபூர்வ சக்தியை இப்போதுவரை பார்க்கிறேன்’ என்றார்.

    நிகழ்ச்சி தொகுப்பாளர் சுஹாசினி ரஜினியிடம் ’உங்களுக்குப் பிடித்த ராஜா சார் பாட்டு எது’ என்று கேட்டார்.

    அதற்கு ரஜினி, ’அவர் இசையமைத்த எல்லா பாடல்களும் எனக்கு பிடிக்கும். ஒரு ஹீரோவுக்கு முரட்டுகாளையில் வரும் ‘பொதுவாக என் மனசு தங்கம்’ பாட்டை விட வேறு என்ன வேண்டும்?

    ‘ராமன் ஆண்டாலும்’ பாட்டு இப்பவும் நினைவு இருக்கு. ’ஊரை தெரிஞ்சிக்கிட்டேன்’ மாதிரி ஒரு பாட்டு வருமா?. அவர் என்னையே பாட வைத்தார். நான் 5 வரிகள் தான் பாடினேன். அதற்கே 5 மணி நேரம் ஆனது. இருந்தாலும் அவர் கமலுக்குதான் நிறைய நல்ல பாட்டு போட்டிருக்கார்’’என்று ஆதங்கப்பட்டார்.

    இதற்கு பதில் அளித்த இளையராஜா, ‘இவருக்கு நல்ல பாட்டு போடறதா கமல் சொல்வார். நான் ஆள் பார்த்து இசை அமைத்ததில்லை. எனக்கு எல்லாரும் ஒண்ணுதான், ராமராஜன் படங்களுக்கு போடலையா, மைக் மோகன்னே மோகனுக்கு பேர் வெச்சாங்க’ என்றார். உடனே ரஜினி ‘சாமி நான் கமலுக்கும் எனக்கும் நடுவில் சொன்னேன்’ என்றார். இளையராஜா ‘இல்ல சாமி, நான் பாட்டுல வித்தியாசமே பாக்கறதில்ல’ என்று சொல்ல கைதட்டல் எழுந்தது.



    சுஹாசினி ‘ரஜினி சார் ஒரு சூப்பர் ஸ்டார், இளையராஜா ஒரு சூப்பர் ஸ்டார், 2 சூப்பர் ஸ்டார்களையும் ஒரே மேடையில்...’ என்று சொல்ல தொடங்க அவரை இடைமறித்த இளையராஜா ’ரெண்டு பேர் இல்ல. ஒரே சூப்பர் ஸ்டார் தான். மேடையில் ஏறினா ஏதாவது பேசிடறதா... சூப்பர் ஸ்டார்னா அவர் மட்டும்தான்’ என்று ரஜினியை கைகாட்டினார். ரசிகர்கள் விசில் அடித்து கைதட்டினார்கள்.

    இளையராஜா இசை நிகழ்ச்சி சரியாக 6.45 மணிக்கு தொடங்கி 12.30-க்கு முடிந்தது. 35 பாடல்கள் பாடப்பட்டன. முதல் பாடலாக குரு பிரம்மா பாடல் கோரசில் பாடப்பட்டது. அடுத்து இளையராஜா ஜனனி ஜனனி பாடலுடன் பாட தொடங்கினார். சுமார் 6 மணி நேரம் தொடர்ந்து கச்சேரி செய்தாலும் இளையராஜா முகத்தில் சின்ன சோர்வுகூட தென்படவில்லை.

    கடைசியாக முடிக்கும் போது நாயகன் படத்தில் இடம் பெற்ற தென்பாண்டி சீமையிலே பாடலுடன் கச்சேரி முடிந்தது. ‘என்றென்றும் நினைவில் நிற்கும் இந்நொடிதானே...’ என்ற வரிகளுடன் நிகழ்ச்சியை முடித்தார். 85 சதவீத இருக்கைகள் நிரம்பி வழிந்தன.

    பாடலை பாடி முடித்து இளையராஜா ரசிகர்களின் மத்தியில் பேசும்போது, ‘‘இவ்வளவு பெரிய விழாவாக இது நடைபெறும் என நான் எண்ணவில்லை. விழாவை நடத்திய தயாரிப்பாளர் சங்கத்துக்கும், அதன் தலைவர் விஷாலுக்கும் எனது பாராட்டுகள். இந்த நிகழ்ச்சி நடக்கக் கூடாது என்று நினைத்தவர்களுக்கும் ரொம்ப நன்றி.



    இந்திய நீதிமன்ற சரித்திரத்தில் ஒரு தனி மனிதனுக்கு கோர்ட்டு சான்றிதழ் கொடுத்தது என்றால் அதுக்கு காரணம் இந்த நிகழ்ச்சியை எதிர்த்து வழக்கு போட்டவர்கள் தான். விஷால் மற்றும் அவரின் அணி வென்று சங்கத்தின் வேலைகளைச் செய்தால், இவர்கள் வெளியிலிருந்து இந்த மாதிரி சங்கத்துக்கு பாராட்டுகளை வாங்கித் தருகிறார்கள்.

    சிலர் பாட்டுக்கு மியூசிக் போட்டு பெரிய ஆள் ஆவார்கள், சிலர் பாடலில் இருக்கும் குறையை கண்டுபிடித்து காட்டி பெரிய ஆள் ஆவார்கள். அந்தமாதிரிதான் அவங்க இந்தமாதிரி நிறைய கேஸ் போட்டு கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் நடையோ நடைன்னு நடக்கணும் என்று வாழ்த்துறேன்” என்றார். அப்போது குழுமியிருந்த ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

    இளையராஜாவுடன் அவரது தொடக்கத்தில் இருந்து பயணித்த பாரதிராஜா, வைரமுத்து, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.ஜானகி, கங்கை அமரன் போன்றோர் கலந்து கொள்ளாதது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. #Ilayaraja75 #Rajinikanth #KamalHaasan

    தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இளையராஜா 75 இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஜினி, எனது படங்களை விட கமல்ஹாசன் படங்களுக்கு நல்ல பாடல்களை கொடுத்திருக்கிறார் என்றார். #Ilayaraja75 #Rajinikanth
    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், இளையராஜா 75வது பிறந்தநாளை முன்னிட்டு இளையராஜா 75 என்ற இசை நிகழ்ச்சி சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்தது.

    2-வது நாள் நிகழ்ச்சியாக நேற்று இளையராஜாவின் இசை கச்சேரி நடந்தது. இதில் முன்னணி பாடகர்-பாடகிகள் பங்கேற்று இளையராஜா இசையமைத்த படங்களில் இருந்து பாடல்களை பாடினார்கள். ஹங்கேரி இசை குழுவினரும் இதில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

    விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-

    இளையராஜாவுக்கு இசை அருள் இருக்கிறது. தானாக வளர்வது சுயம்பு லிங்கம். இளையராஜாவின் இசையும் சுயம்பு லிங்கம் போன்றது. அவர் இசை உலகின் சுயம்பு லிங்கம். முதல் படத்தில் இருந்து இப்போது வரை அவருடைய இசை உயிரோடு இருக்கிறது. தயாரிப்பாளர்கள் சங்கம் இளையராஜாவுக்கு 75-வது பிறந்தநாள் விழாவையும், பாராட்டு விழாவையும் நடத்தி உள்ளது.



    இதில் நானும் பங்கேற்பதில் மகிழ்ச்சி. இளையராஜாவை ‘சார்’ என்று தான் நான் அழைத்து வந்தேன். ஒருகட்டத்தில் ஆன்மிகவாதியாக பார்த்தேன். ரமண மகரிஷியை எனக்கு அறிமுகம் செய்துவைத்தது இளையராஜாதான். எப்போதும் மாலை அணிந்துகொண்டு இருக்கும் இளையராஜாவை பார்த்து நான், பின்னர் ‘சாமி’ என்று அழைக்க ஆரம்பித்தேன்.

    பாடல்களை மட்டும் வைத்து பிரபலமானவர் என்று இளையராஜாவை மதிப்பிட முடியாது. அதற்கும் மேலாக அவர் வாழ்க்கை தியாகம் நிறைந்தது. கஷ்டப்பட்ட எத்தனையோ தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்து இருக்கிறார். 1980 கால கட்டங்களில் பொங்கல், தீபாவளி பண்டிகைகளுக்கு 13, 14 படங்கள் என்று வெளியாகும். அவற்றில் 10, 12 படங்கள் இளையராஜா இசையமைத்தவைகளாகவே இருக்கும்.

    நிறைய தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களுக்கு ரீ-ரிக்கார்டிங் செய்ய இளையராஜா ஸ்டூடியோவில் வரிசையில் நிற்பார்கள். அவர் பாடல்களுக்கு இசையமைத்து ரீ-ரிக்கார்டிங் செய்துவிட்டால், அந்த படத்தின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுவிடும்.

    ஒரே நாளில் 3 படங்களுக்கு கூட தூங்காமல் ரீ-ரிக்கார்டிங் செய்திருக்கிறார். ஆனால் இப்போது ஒரு படத்துக்கு ரீ-ரிக்கார்டிங் செய்ய 30 நாட்கள் ஆகிறது. தயாரிப்பாளர்கள் கஷ்டப்படக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காக அவர் இப்படி உழைத்தார்.

    டைரக்டர்கள் கதை சொல்லும்போது சரியாக இல்லாமல் இருந்தால் அதில் சில திருத்தங்கள் சொல்வார். அதுமட்டுமின்றி தயாரிப்பாளர்களிடம் பணம் வாங்காமல் கூட இருந்திருக்கிறார். இதனால் தான் அவரின் காலில் விழுகிறார்கள். பாடல்களுக்கு 70 சதவீதம் இளையராஜாவே பல்லவி போட்டிருக்கிறார்.



    மற்ற பாடல் வரிகளிலும் அவருடைய பங்களிப்பு இருக்கிறது. சினிமா துறைக்கு பெரிய தியாகம் செய்திருக்கிறார். அவர் நீண்ட காலம் நிம்மதியாக வாழவேண்டும். ‘மன்னன்’ படத்தில் என்னையும் பாடவைத்தார். 6 வரிகள் தான். ஆனால் அதை பாட எனக்கு 6 மணி நேரம் ஆனது.

    ‘பொதுவாக என் மனசு தங்கம்...’, ‘ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும்...’, ‘ஊரை தெரிஞ்சுக்கிட்டேன்...’ என்று எனது படங்களுக்கு அவர் இசையமைத்த எத்தனையோ பாடல்கள் என் மனதில் நிற்கின்றன. ஆனாலும் எனது படங்களை விட கமல்ஹாசன் படங்களுக்கு நல்ல பாடல்களை கொடுத்திருக்கிறார். இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

    விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு மகள் ஸ்ருதியுடன் இணைந்து ‘ஹேராம்’ மற்றும் ‘சிவப்பு ரோஜாக்கள்’ பட பாடல்களை மேடையில் பாடினார்.

    விழாவில் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், டைரக்டர்கள் மணிரத்னம், ஷங்கர், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் உள்ளிட்ட நடிகர்-நடிகைகள் மற்றும் ஏ.சி.சண்முகம், ஐசரி கணேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். #Ilayaraja75 #Rajinikanth #KamalHaasan

    தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடத்தப்படும் இளையராஜா 75 இசை நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. #Ilayaraja75 #ARRahman
    இசை அமைப்பாளர் இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழ் திரைப் பட தயாரிப்பாளர் சங்கம் அவருக்காக பிரம்மாண்ட மான இசை நிகழ்ச்சி வருகிற 2, 3 ஆகிய தேதிகளில் நடத்த இருக்கிறது.

    இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பவர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் முன்னிலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார்.



    2-ந் தேதி நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் மஞ்சிமா மோகன், நிக்கி கல்ராணி, சாயிஷா, யோகி பாபு, ரோபோ சங்கர், சதீஷ், கோவை சரளா, ராதா, கார்த்திகா, ஆண்ட்ரியா, தமன், விஜய் யேசுதாஸ் ஆகியோரும் பங்கேற்று நடனமாடி, பாடல்கள் பாடி, சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்த உள்ளனர். #Ilayaraja75 #ARRahman

    தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடத்தப்படும் இளையராஜா 75 இசை நிகழ்ச்சியை கவர்னர் பன்வாரிலால் புரோஹித் குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கிறார். #Ilayaraja75 #ProducersCouncil #Vishal
    இசை அமைப்பாளர் இளையராஜா இந்த ஆண்டு தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 1000 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ள இளையராஜாவை பெருமைப்படுத்த திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மாபெரும் நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டது.

    வரும் பிப்ரவரி 2, 3 தேதிகளில் நடைபெறவுள்ள ‘இளையராஜா 75’ விழாவிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த பாராட்டு விழாவிற்கான டிக்கெட் விற்பனையும் சூடுபிடித்துள்ளது.

    விழாவில் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் பங்கேற்கின்றனர். திரைத்துறையைச் சேர்ந்த முக்கிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் பங்கேற்க உள்ளனர்.

    தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், பொதுச் செயலாளர்கள் கதிரேசன் மற்றும் எஸ்.எஸ்.துரைராஜ் ஆகியோர் ராஜ்பவனிற்கு சென்று தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து விழாவை தொடங்கி வைக்குமாறு அழைப்பு விடுத்தனர்.



    அவர்களது அழைப்பினை ஏற்று வரும் பிப்ரவரி 2-ந் தேதி ‘இளையராஜா 75’ விழாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குத்துவிளக்கு ஏற்றி தொடக்கி வைக்கிறார்.

    ‘இளையராஜா 75’ என்ற விழா மலரை வெளியிட்டு சிறப்புரையாற்ற இருக்கிறார். அதைதொடர்ந்து முன்னணி நடிகைகளின் நடன நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    மறுநாள் பிப்ரவரி 3-ந் தேதி இளையராஜா நேரடி இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். #Ilayaraja75 #ProducersCouncil #Vishal #BanwarilalPurohit

    ×