search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Banwarilal Purohit"

    தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கை நிறைந்ததாக திகழ தமிழ் புத்தாண்டு உதயமாகட்டும் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார். #BanwarilalPurohit #TamilNewYear
    சென்னை:

    தமிழ்நாடு கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    தமிழ் புத்தாண்டு தினம் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் நாளாகும். இது நமது பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தின் மேம்பட்ட நிலையின் அடையாளமாக திகழ்கிறது. தமிழ்நாட்டு மக்கள் அன்பு, இரக்கம் மற்றும் வீரம் ஒன்றிணைந்த பண்பின் அடையாளமாக விளங்குகின்றனர். நேர்மையும், ஒழுக்கமும் இவர்களை சமாதானம் மற்றும் நிறைவான வளத்தை நோக்கி வழிநடத்தி செல்கின்றன.



    மகிழ்ச்சிகரமான தமிழ் புத்தாண்டு தினத்தில் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வருடம் தமிழ்நாட்டுக்கும், அதன் மக்களுக்கும் மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கை நிறைந்ததாக திகழ இந்த நாள் உதயமாகட்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #BanwarilalPurohit #TamilNewYear
    அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாநில கல்லூரி, லயோலா கல்லூரி தேசிய தர வரிசை பட்டியலில் முதன்மை இடங்களை பிடித்திருப்பது பெருமை அளிப்பதாக கவர்னர் பன்வாரிலால் பாராட்டு தெரிவித்துள்ளார். #TNGovernor #AnnaUniversity
    சென்னை:

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    டெல்லியில் மனிதவள மேம்பாட்டு மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் இந்த ஆண்டுக்கான பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் தரப்பட்டியலை ஜனாதிபதி வெளியிட்டார். அதில், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாநில கல்லூரி, லயோலா கல்லூரி ஆகியவை பட்டியலில் முதன்மை இடங்களை பிடித்திருப்பது மிகுந்த பெருமை அளிப்பதாக உள்ளது.

    பல்கலைக்கழகங்கள் வரிசையில் அண்ணா பல்கலைக்கழகம் 7-வது இடத்தையும், பொறியியல் கல்வி நிறுவனங்கள் 9-வது இடத்தையும் பிடித்திருப்பதற்கு எவ்வளவு பாராட்டினாலும் தகும். கல்லூரிகள் வரிசையில் மாநில கல்லூரி 3-வது இடத்தையும், லயோலா கல்லூரி 6-வது இடத்தையும் பெற்றிருப்பது, உயர் கல்வியில் அவர்களின் சிறப்பான செயல்பாட்டினால் கிடைத்த இடமாகும்.

    இந்த புகழுக்கும், சாதனைக்கும் கடுமையாக உழைத்த துணைவேந்தர்கள், முதல்வர்கள், மாணவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TNGovernor #AnnaUniversity
     
    இந்திய காவல்படைக்கு வருகிற 2023-ம் ஆண்டுக்குள் 200 கப்பல்களையும், 100 விமானங்களையும் பெற்று இருக்கும் என கவர்னர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். #BanwarilalPurohit
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கடலோர காவல்படை நிலையம் அமைந்து உள்ளது. இந்த நிலையம், இந்தியாவின் 16வது கடலோர காவல்படை மாவட்ட தலைமையகமாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா நேற்று மாலை கடலோர காவல்படை அலுவலக வளாகத்தில் நடந்தது. விழாவுக்கு கடலோர காவல்படை கிழக்கு பிராந்திய கமாண்டர் பரமேஷ் தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு கடலோர காவல்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து கடலோர காவல்படை புதிய மாவட்ட தலைமையகத்தை தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:-

    இந்தியாவின் கடல்சார் பாதுகாப்புக்காக கடலோர காவல்படை 1978-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இன்று சிறந்த பாதுகாப்பு படையாக மாறி உள்ளது. இதில் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் சிறந்த தொழில்நுட்பங்கள் அடங்கிய கப்பல்கள் உள்ளன. இந்திய கடலோர காவல்படையில் கட்டமைப்பு, மனிதவளம் ஆகியவற்றின் விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கப்பட்டு உள்ளது. இந்தியா சர்வதேச கடல்வழிப்பாதையில் நடுவில் அமைந்து உள்ளது. கிழக்கு ஆசியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் கப்பல்கள் நம் கடல் பாதையை கடந்துதான் செல்ல வேண்டும். இந்தியாவின் வாணிபத்தில் 95 சதவீதம் கடல்வழியாக நடக்கிறது.

    இந்திய கடலோர காவல்படை உலகில் 4-வது பெரிய கடலோர காவல்படை ஆகும். இங்கு 139 கப்பல்களும், 62 விமானங்களும் உள்ளன. இந்த படை 2023-ம் ஆண்டில் 200 கப்பல்களையும், 100 விமானங்களையும் பெற்று இருக்கும்.

    தீவிர மீட்பு பணிக்காக அரசு தூத்துக்குடியில் உள்ள கடல்சார் மீட்பு துணை மையத்தை, கடல்சார் மீட்பு துணை மையமாக தரம் உயர்த்தி உள்ளது. நாட்டின் பலம், பாதுகாப்பு படையின் பலத்துடன் இணைக்கப்பட்டது. ஆகையால் பாதுகாப்பு படையினருக்கான தேவைகளை முன்னுரிமை அளித்து செய்வது நமது முக்கிய தேவை ஆகும். சமீபத்தில் நடந்த கஜா புயல் தாக்குதலின் போது, 74 கப்பல் மற்றும் 10 விமானங்கள் மூலம் மீனவர்கள் பாதுகாப்பாக கரைக்கு திரும்புவதற்கு நடவடிக்கை எடுத்தனர். இதனால் மீனவர்கள் இழப்பு தடுக்கப்பட்டது. புயல் தாக்கத்துக்கு பிறகு கடலோர காவல்படையினர் பாதிக்கப்பட்ட கிராமங்களில் நிவாரண பொருட்கள் கொடுத்தனர். கடலோர காவல்படை தொடங்கப்பட்ட பிறகு அவர்களின் சிறப்பான செயல்பாடுகாரணமாக இந்தியாவில் இதுவரை 9 ஆயிரத்து 193 மீனவர்கள் மீட்கப்பட்டு உள்ளனர்.

    இந்தியா மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் கடல் சூழலியலை பாதுகாக்க அண்டை நாடுகளான வங்கதேசம், மாலத்தீவு, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. இதற்காக இந்தியா, தெற்காசிய கூட்டு சுற்றுச்சூழல் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் தெற்காசிய பிராந்தியத்தில் ரசாயனம் மற்றும் எண்ணை மாசு ஏற்பட்டால், அதனை அகற்றுவதற்கு வழிவகை செய்து உள்ளது. இந்த மண்டல எண்ணெய் மாசு கட்டுப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த திட்டத்தை இந்திய கடலோர காவல்படை செயல்படுத்தி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #BanwarilalPurohit
    தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடத்தப்படும் இளையராஜா 75 இசை நிகழ்ச்சியை கவர்னர் பன்வாரிலால் புரோஹித் குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கிறார். #Ilayaraja75 #ProducersCouncil #Vishal
    இசை அமைப்பாளர் இளையராஜா இந்த ஆண்டு தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 1000 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ள இளையராஜாவை பெருமைப்படுத்த திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மாபெரும் நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டது.

    வரும் பிப்ரவரி 2, 3 தேதிகளில் நடைபெறவுள்ள ‘இளையராஜா 75’ விழாவிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த பாராட்டு விழாவிற்கான டிக்கெட் விற்பனையும் சூடுபிடித்துள்ளது.

    விழாவில் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் பங்கேற்கின்றனர். திரைத்துறையைச் சேர்ந்த முக்கிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் பங்கேற்க உள்ளனர்.

    தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், பொதுச் செயலாளர்கள் கதிரேசன் மற்றும் எஸ்.எஸ்.துரைராஜ் ஆகியோர் ராஜ்பவனிற்கு சென்று தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து விழாவை தொடங்கி வைக்குமாறு அழைப்பு விடுத்தனர்.



    அவர்களது அழைப்பினை ஏற்று வரும் பிப்ரவரி 2-ந் தேதி ‘இளையராஜா 75’ விழாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குத்துவிளக்கு ஏற்றி தொடக்கி வைக்கிறார்.

    ‘இளையராஜா 75’ என்ற விழா மலரை வெளியிட்டு சிறப்புரையாற்ற இருக்கிறார். அதைதொடர்ந்து முன்னணி நடிகைகளின் நடன நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    மறுநாள் பிப்ரவரி 3-ந் தேதி இளையராஜா நேரடி இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். #Ilayaraja75 #ProducersCouncil #Vishal #BanwarilalPurohit

    சென்னையில் சன்சாத் ரத்னா விருது வழங்கிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், எம்பிக்கள் மிகவும் எளிமையாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். #SansadRatnaAwards #BanwarilalPurohit
    சென்னை:   

    பாராளுமன்றத்தில் சிறப்பாக செயல்படும் எம்பிக்களை கவுரவிக்கும் வகையில், சென்னையைச் சேர்ந்த பிரைம் பாயின்ட் பவுண்டேசன், பிரசன்ஸ் இ மேகசின் சார்பில் ‘சன்சாத் ரத்னா விருதுகள்’ வழங்கப்படுகின்றன.

    இந்த ஆண்டுக்கான சன்சாத் ரத்னா விருது வழங்கும் விழா, சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு, சிறந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 12 பேருக்கு சன்சாத் ரத்னா விருதுகளை வழங்கினார்.

    மக்களவையின் 9 எம்பிக்கள் மற்றும் ஒரு நிலைக்குழு உறுப்பினர் மற்றும் இரண்டு ஓய்வுபெற்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆகியோர் இந்த விருதுகளை பெற்றனர். அப்போது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:

    எம்.பி.க்கள் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சொகுசு காரில் செல்ல வேண்டும் என்பது அவசியமல்ல. நான் எம்.பி.யாக இருந்தபோது, சிறிய காரில்தான் தொகுதிக்கு சென்று மக்களை சந்தித்தேன். எளிமையாக இருந்து சேவையாற்ற வேண்டும்.

    அமெரிக்காவில் செனட் உறுப்பினர்கள், சொந்த பிரச்சினைகளை பேசாமல், கொள்கைகளை உருவாக்குவது போல,  இந்தியாவிலும்  நாடாளுமன்றத்தை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்.

    அரசின் திட்டங்களை மக்களுக்குக் கொண்டு செல்ல உறுப்பினர்கள் பாடுபட வேண்டும். எம்.பி.க்கள் தங்களது தொகுதி மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என தெரிவித்தார். #SansadRatnaAwards #BanwarilalPurohit
    நமது படை வீரர்களின் சேவையைப் போற்றிடும் வகையில் கொடிநாள் நிதிக்கு தாராளமாக நிதியுதவி அளிக்க வேண்டும் என்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கூறியுள்ளார். #FlagDay #GovernorBanwarilalPurohit
    சென்னை :

    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முப்படை வீரர்களான ராணுவம், கப்பல் மற்றும் விமானப்படை ஆகியவற்றில் வலிமையுடன் பணியாற்றி வருபவர்களின் பெருமையை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 7-ந்தேதி கொடிநாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

    நமது நாட்டின் எல்லைப் பகுதிகளை எதிரிகளிடமிருந்தும். எல்லைக்குள் ஊடுருகின்றவர்களிடமிருந்தும் காத்திடும் வகையில் திறமையுடன் செயல்பட்டு வரும் முப்படை வீரர்களின் தன்னலமற்ற சேவைகளை நாம் அனைவரும் நினைவு கூறக்கூடிய அருமையான தருணமாகும்.

    வீரமான படைவீரர்களை உருவாக்குவது மட்டுமின்றி, நாட்டுக்காக பணியாற்றிடும் இப்படை வீரர்கள் பணி ஓய்வு பெற்றோர், அவர்களின் வயதானோர், இயலாதோர் ஆகியோர் பயனடையும் வகையில் சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, சமூகப்பாதுகாப்பு போன்ற புதுமையான திட்டங்களை செயல்படுத்த முக்கிய நிதி ஆதாரமே, முப்படை கொடிநாள் நிதிக்கு ஆர்வமுடன் பொதுமக்களால் கொடுக்கப்படும் நிதி உதவியே ஆகும்.

    நமது படை வீரர்களின் சேவையைப் போற்றிடும் வகையில் கொடிநாள் நிதிக்கு தாராளமாக நிதியுதவி அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #FlagDay #GovernorBanwarilalPurohit 
    தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கஜா புயல் நிவாரணத்திற்காக தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கியுள்ளார். #CycloneGaja #CycloneGajaRelief #TNGovernor #BanwarilalPurohit
    சென்னை:

    கஜா புயல் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களை புரட்டிப்போட்டது. லட்சக்கணக்கான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஆயிரக்கணக்கான வீடுகள் முற்றிலும் சேதமடைந்தது. குறிப்பாக மின்சார கம்பங்கள், துணைமின் நிலையங்கள், மின்மாற்றிகள் அதிக அளவில் சேதமடைந்தது.

    போர்க்கால அடிப்படையில் மறுசீரமைப்புப் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சேதம் என தமிழக அரசு கணக்கிட்டுள்ளது.


    அத்துடன் கஜா புயல் பாதிப்பிற்கு தாராளமாக நிவாரணம் வழங்கலாம் என்று முதல்வர் குறிப்பிட்டிருந்தார். அதிமுக மற்றும் திமுக கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் தங்களது ஒருமாத சம்பளத்தை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அளித்தனர்.

    தனியார் நிறுவனங்களும், பிரமுகர்களும் நிவாரண நிதி அளித்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது ஒரு மாத சம்பளத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். #CycloneGaja #CycloneGajaRelief #TNGovernor #BanwarilalPurohit
    தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று ஆய்வு செய்தார். #BanwarilalPurohit #GajaCyclone
    நாகை:

    கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பேரழிவை சந்தித்துள்ளன. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்கள் சென்றவண்ணம் உள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பார்வையிட்டார்.

    இந்நிலையில், புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட முடிவு செய்த ஆளுநர் பன்வாரிலால் நேற்று இரவு சென்னையில் இருந்து நாகைக்கு புறப்பட்டார். இன்று காலை நாகையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.



    பின்னர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட சென்றார். முதலில் நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் ஆளுநர் ஆய்வு செய்தார். பின்னர் மற்ற பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களையும் அவர் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். #BanwarilalPurohit #GajaCyclone
    தமிழக வரலாற்றில் பன்வாரிலால் புரோகித் போல மோசமான கவர்னரை பார்த்ததே இல்லை என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறினார். #MDMK #vaiko #Banwarilalpurohit
    சென்னை:

    ஐகோர்ட்டு நீதிபதியாக பி.புகழேந்தி இன்று பதவி ஏற்றார். இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்துக் கொண்டார். வக்கீல் சீருடையில் வந்திருந்த வைகோ, நீதிபதி புகழேந்திக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    பின்னர் நிருபர்களுக்கு வைகோ பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நீதிபதியாக புகழேந்தி பதவியேற்ற இந்த நாள் திராவிட இயக்கத்தின் சமூக நீதிக்கான நாளாகும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றமே செய்யாத நளினி, பேரறிவாளன் உள்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் நரக வேதனை அனுபவித்து வருகின்றனர். ஆனால், உயிரோடு 3 அப்பாவி மாணவிகளை எரித்துக் கொலை செய்த 3 அ.தி.மு.க.க்காரர்களை, தமிழக அரசு முன் கூட்டியே விடுதலை செய்துள்ளது.

    இந்த 3 பேரை விடுதலை செய்வதற்காகத்தான், பேரறிவாளன் உள்பட 7 பேரை முன் கூட்டியே விடுதலை செய்வதாக தமிழக அரசு இதுவரை நாடகம் ஆடியுள்ளது.

    பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி நவ.24-ம் தேதி ம.தி.மு.க. சார்பில் அறப்போராட்டம் நடைபெறும்.


    நீதிக்கு எதிராக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் செயல்படுகிறார். பிரதமர் மோடியின் ஏஜெண்டாக கவர்னர் செயல்படுகிறார். தமிழக வரலாற்றில், இப்படியொரு மோசமான கவர்னரை பார்த்ததே இல்லை.

    இவ்வாறு வைகோ கூறினார். #MDMK #vaiko #Banwarilalpurohit
    கவர்னர் மாளிகைக்குள் இன்று முதல் பிளாஸ்டிக் பைகள் கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. #PlasticBagBan #Governor #BanwarilalPurohit
    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பார்வையாளர்களுக்காக புகைப்பட அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அரங்கத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று திறந்துவைத்து, அங்கு இடம்பெற்றுள்ள புகைப்படங்களை பார்வையிட்டார்.

    இதனைத்தொடர்ந்து, கவர்னர் மாளிகை வளாகத்தை பிளாஸ்டிக் பைகள் இல்லா வளாகமாக மாற்றும் நோக்கத்தில் ‘பிளாஸ்டிக்கை தவிர்த்து புற்றுநோயை தடுப்போம்’ என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கரை கவர்னர் வெளியிட்டார். கவர்னர் மாளிகையில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு துணிப்பை மற்றும் ஸ்டிக்கர் வழங்கப்பட்டது.

    கவர்னர் மாளிகைக்குள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பிளாஸ்டிக் பைகள் கொண்டுவருவதற்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

    முன்னதாக, கவர்னர் மாளிகையில் உள்ள பணியாளர்களுக்கு சிறப்பு கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் 79 நபர்களுக்கு இலவச கண் கண்ணாடிகளை கவர்னர் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சிகளில் கவர்னரின் கூடுதல் தலைமை செயலாளர் ஆர்.ராஜகோபால் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
    நம் குடும்பங்களில் வளமும், வளர்ச்சியும் பெற்று அனுபவிக்க, நாம் வாழ்வில் புதிய சக்தி தொடங்க, வரப்போகும் விஜயதசமி வழிகாட்ட வேண்டும் என கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார். #Ayudhapooja #BanwarilalPurohit #Greeting
    சென்னை:

    கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    தீய சக்திகளை நல்ல சக்திகள் வெற்றி பெற்றதை அடையாளப்படுத்தும் நாளாக ஆயுதபூஜை தமிழ்நாடு முழுவதும் மிகுந்த உவகையோடும், மகிழ்ச்சி பெருக்கோடும் கொண்டாடப்படுகிறது. இந்த மங்களகரமான திருநாளில் தாங்கள் மேற்கொண்டுள்ள தொழிலில் மேலும் பல வெற்றிகளை குவிக்க வேண்டும் என்ற வகையில் இந்த பண்டிகையை கொண்டாடும் தமிழக மக்களுக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    நாம் உண்மையும், நற்பண்புகளும், நேர்மையும் நிலைநிறுத்தி இதுவரை இல்லாத அளவில் நம் குடும்பங்களில் வளமும், வளர்ச்சியும் பெற்று அனுபவிக்க, நாம் வாழ்வில் புதிய சக்தி தொடங்க, வரப்போகும் விஜயதசமி வழிகாட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #Ayudhapooja #BanwarilalPurohit #Greeting
    தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவி விலகும் வரை தொடர்ந்து போராடுவோம் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #BanwarilalPurohit #MKStalin #DMK
    சென்னை:

    விடுதலை பத்திரிகை சார்பில் ‘பத்திரிகை சுதந்திர பாதுகாப்பும்- பாராட்டும்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சி சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நேற்று நடைபெற்றது. விடுதலை பத்திரிகை ஆசிரியரும், திராவிடர் கழக தலைவருமான கி.வீரமணி தலைமை தாங்கினார்.

    விடுதலை பொறுப்பாசிரியர் கலி.பூங்குன்றன் வரவேற்றார். இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் (முரசொலி பத்திரிகை), இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் (ஜனசக்தி பத்திரிகை), என்.ராம் (தி இந்து), கே.ஏ.எம்.அபுபக்கர் எம்.எல்.ஏ. (மணிச்சுடர் பத்திரிகை), எம்.எச்.ஜவாஹிருல்லா (மக்கள் உரிமை பத்திரிகை), அ.குமரேசன் (தீக்கதிர் பத்திரிகை), பா.திருமாவேலன் (கலைஞர் தொலைக்காட்சி) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் நக்கீரன் கோபால் பாராட்டப்பட்டார்.

    பின்னர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-



    எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த விளம்பரம் நக்கீரன் கோபாலுக்கு கிடைக்காது. அவர் இந்த கைது நடவடிக்கையை கண்டு பயப்படவில்லை. பொடா, தடாவை பார்த்தவர். ஜெயலலிதாவையே எதிர்த்தவர் அவர். எடப்பாடி பழனிசாமியை பார்த்தா பயந்துவிடுவார்.

    கோட்டையில் இருப்பவர்கள் செய்த ஊழலை நினைத்து பயப்படுகின்றனர். கிண்டியில் உள்ளவரோ நிர்மலா தேவிக்கு பயந்து கொண்டிருக்கிறார். இப்படி நான் சொல்வதால், என் மீதும் வழக்குப்போடுவார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை.

    நிர்மலாதேவி விவகாரத்தில் கவர்னர் பெயரும் அடிபட்டது. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு கோரிக்கை வைத்தோம். உடனே கவர்னர் பன்வாரிலால் புரோகித் விசாரணை கமிஷன் வைத்தார். நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு 4 மாத காலம் ஆகிறது. அவருக்கு 8 முறை ஜாமீன் நிராகரிக்கப்பட்டுள்ளது.

    இதில் ஏதோ நடந்திருக்கிறது. அந்த உண்மையைத்தான் கோபால் எழுதினார். ஆனால் கவர்னர் விதிகளை மீறி, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இருக்கிறார்.



    பா.ஜனதாவை சேர்ந்த எச்.ராஜா நீதிமன்றத்தை அவமதித்து, காவல் துறையை கொச்சைப்படுத்தி பேசினார். அவரை கைது செய்ய இந்த அரசுக்கு ஏன் தைரியம் இல்லை. பெரியார் சிலையை அடித்து உடையுங்கள் என்று பேசிய எச்.ராஜா போலீஸ் பாதுகாப்புடன் வலம் வருகிறார். பெண் நிருபர்களை கொச்சைப்படுத்திய பா.ஜனதாவை சேர்ந்த எஸ்.வி.சேகரையும் கைது செய்யவில்லை. காரணம், ஆட்சியாளர்கள் செய்யும் ஊழல்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவிடும் என்று பயந்து கொண்டு கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.

    கவர்னரை உடனடியாக பதவி இறக்கம் செய்ய வேண்டும் என்று இங்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. அவர் பதவி விலகும் வரை தொடர்ந்து போராடுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார். #BanwarilalPurohit #MKStalin #DMK
    ×