search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gaja cyclone relief"

    மாநில பேரிடர் நிவாரண நிதியில் போதுமான நிதி இருந்தும், தமிழகத்திற்கு கஜா புயல் நிவாரணத்திற்கு மத்திய அரசு தரவில்லை என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. #GajaCycloneRelief #HCMaduraiBench
    மதுரை:

    கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடு கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மேலூரை சேர்ந்த வக்கீல் ஸ்டாலின் உள்பட 3 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு, கஜா புயல் பாதிப்பை பார்வையிட்ட மத்திய குழு, இறுதி அறிக்கையை எப்போது சமர்ப்பிக்கும்? என்று கேள்வி எழுப்பியது.

    இந்த வழக்குகள் நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு கேட்ட கூடுதல் விவரங்கள் 16-ந் தேதியே கொடுக்கப்பட்டு விட்டதாக தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, தமிழக அரசு அளித்த விவரங்கள் அடிப்படையில் எடுக்கப்பட உள்ள நடவடிக்கை பற்றி 19-ந் தேதி பதில் அளிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


    இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசிடம் நிதியிருந்தும் கஜா புயல் நிவாரண நிதியை தரவில்லை என தமிழக அரசு சார்பில் குற்றம்சாட்டப்பட்டது. மாநில பேரிடர் நிவாரண நிதியில் போதுமான நிதி இருந்தும் மத்திய அரசு தரவில்லை என தமிழக அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.

    மத்தியக் குழு அளிக்கும் இறுதி அறிக்கையின் அடிப்படையிலேயே தமிழகத்திற்கு நிதி வழங்க முடியும் என மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இறுதி அறிக்கை தயாரிக்கவே தமிழக அரசிடம் சந்தேகங்கள் கேட்கப்பட்டதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

    இதையடுத்து எப்போது இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்பது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். #GajaCycloneRelief #HCMaduraiBench
    கஜா புயலால் வீட்டை இழந்தவர்களில் 50 பேருக்கு வீடு கட்டித் தருவதாக லாரன்ஸ் அறிவித்துள்ள நிலையில், ரூ.10 லட்சம் செலவில் சமூக சேவகருக்கு வீடு கட்டி தருவதாக லாரன்ஸ் அறிவித்துள்ளார். #GajaCyclone #RaghavaLawrence
    நடிகரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் கஜா புயலால் வீடு இழந்தவர்களில் 50 பேருக்கு தனது சொந்த செலவில் வீடு கட்டித்தரப்போவதாக அறிவித்தார். அதற்கான பயனாளிகளை தேர்வு செய்யும் பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

    முதல் கட்டமாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களை வைத்து ஒரு வயதான பெண்மணிக்கும், சமூக சேவகர் ஆலங்குடி கணேசனுக்கும் வீடு கட்டி தர இருக்கிறார். ஆலங்குடி கணேசனுக்கு 10 லட்ச ரூபாய் செலவில் லாரன்ஸ் கட்டித்தரும் வீட்டுக்கான பூமி பூஜை இன்று காலை நடைபெற்றது.

    இதுகுறித்து ராகவா லாரன்ஸ் கூறியதாவது:-

    ஏழையின் இதயத்தில் இரக்கம் அதிகமாக இருக்கும் என்பார்கள். வாழ்ந்தாலும் உள்ளத்தால் உயர்ந்த இடத்தை எட்டிப் பிடித்தவர் ஆலங்குடி 515 கணேசன். அனாதையாக பிறந்தவர் யாரும் இல்லை.



    ஆனால் யாரும் அனாதையாக இறக்கக் கூடாது என்கிற உயர்ந்த சிந்தனையால் ஏறக்குறைய 500 அனாதை சடலங்களை அந்தந்த மத முறைப்படி ஈமக்கிரியை செய்து தகனம் மற்றும் அடக்கம் செய்தவர். இலவச ஆம்புலன்ஸ் சேவை மற்றும் யாருக்காவது ஏதாவது ஒன்று என்றால் ஓடோடி வந்து உதவி செய்பவர் கணேசன்.

    கேரள வெள்ள நிவாரணத்திற்கு மக்களிடம் நிதி திரட்டி அனுப்பி வைத்தவர் இவர். வீட்டையும் இரக்கமில்லாமல் கஜா காவு வாங்கி விட அதையும் பொருட்படுத்தாமல் கஜாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யப் போய்விட்டார்.

    எல்லா வசதிகளுடன் அவரை வாழ வைத்து பார்க்க வேண்டும். வீட்டுக்கு அவர் போனால் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று பாத்திரங்கள் கட்டில் பீரோ மின் விசிறி ஏ.சி. என்று வாழ வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அவரை என் அப்பா இடத்தில் பார்க்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #RaghavaLawrence #GajaCyclone #GajaCycloneRelief

    கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள 50 பேருக்கு வீடுகட்டி தருவதாக கூறியுள்ள லாரன்ஸ், வீடுகட்டிய பின் புயல் பாதித்த விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்குவேன் என்றார். #RaghavaLawrence #GajaCyclone
    கஜா புயலால் வீடு இழந்தவர்களுக்கு 50 வீடுகள் கட்டி தருவதாக அறிவித்த லாரன்ஸ் அதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். ஆலங்குடி பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட ராகவா லாரன்ஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    வளமாக வாழ்ந்தவர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டு நிவாரணம் கிடைக்குமா என்று சாலையில் நிற்பது வேதனை அளிக்கிறது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட 50 பேருக்கு வீடு கட்டிக்கொடுக்க திட்டமிட்டுள்ளேன். அதன் ஒரு பகுதியாக சமூகசேவகர் கணேசன் இல்லத்துக்குச் சென்று அவரைப் பார்த்தேன். அவரிடம் பணத்தை கொடுக்கவில்லை.

    ஆனால், வீடு கட்ட திட்டம் வரையப்பட்டு வருகிறது. இதைப்பார்த்து பலரும் முன்வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும். நான் வாழ்வது ரசிகர்கள் கொடுத்த பணத்தில்தான், தற்போது அவர்கள் துன்பமான நிலையில் இருக்கிறார்கள். என்னிடம் இருப்பதில் ஒரு பகுதியை அவர்களுக்குக் கொடுக்க நினைக்கிறேன்.



    அரசியலுக்கு வரத் தனித் தகுதிகள் வேண்டும் என்று நினைக்கிறேன். நான் படிக்கவில்லை. மேலும், அரசியலுக்கு வர என்னிடம் தகுதி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அதனால், நான் அரசியலுக்கு வரமாட்டேன். நான் ஆன்மீகவாதி. அதனால், தற்போது அரசியலில் இருப்பவர்களுக்கு அந்தத் தகுதி உள்ளதா என்பதைப் பற்றி கூற விருப்பம் இல்லை.

    திரைப்படத்துறையில் இருப்பவர்கள் ஏதேனும் ஒரு வகையில் உதவிகள் செய்து கொண்டுதான் உள்ளனர். அடுத்தகட்டமாக மரக்கன்றுகள் வழங்க ஆலோசனை செய்கின்றேன். இந்தப் புயல் பாதிப்பால் விவசாயிகள் மனமுடைந்து விடாமல், மீண்டும் மரங்களை வளர்க்க முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #RaghavaLawrence #GajaCyclone #GajaCycloneRelief

    தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கஜா புயல் நிவாரணத்திற்காக தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கியுள்ளார். #CycloneGaja #CycloneGajaRelief #TNGovernor #BanwarilalPurohit
    சென்னை:

    கஜா புயல் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களை புரட்டிப்போட்டது. லட்சக்கணக்கான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஆயிரக்கணக்கான வீடுகள் முற்றிலும் சேதமடைந்தது. குறிப்பாக மின்சார கம்பங்கள், துணைமின் நிலையங்கள், மின்மாற்றிகள் அதிக அளவில் சேதமடைந்தது.

    போர்க்கால அடிப்படையில் மறுசீரமைப்புப் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது. சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சேதம் என தமிழக அரசு கணக்கிட்டுள்ளது.


    அத்துடன் கஜா புயல் பாதிப்பிற்கு தாராளமாக நிவாரணம் வழங்கலாம் என்று முதல்வர் குறிப்பிட்டிருந்தார். அதிமுக மற்றும் திமுக கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் தங்களது ஒருமாத சம்பளத்தை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அளித்தனர்.

    தனியார் நிறுவனங்களும், பிரமுகர்களும் நிவாரண நிதி அளித்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது ஒரு மாத சம்பளத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். #CycloneGaja #CycloneGajaRelief #TNGovernor #BanwarilalPurohit
    கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களுக்கு உதவும் வகையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ரூ.25 லட்சம் மதிப்பிலான நன்கொடை வழங்கப்படுகிறது. #GajaCycloneRelief #ProducersCouncil
    கஜா புயலால் புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சினிமா நட்சத்திரங்கள், பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் களத்தில் இறங்கி உதவி செய்து வருகின்றனர். 



    அந்த வகையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ரூ.25 லட்சம் மதிப்பிலான நன்கொடை வழங்கப்படுகிறது. சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண நிதியாக ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்களை வழங்க தீர்மானிக்கப்பட்டது. அதன் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் சேர்ந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ.25 லட்சம் நிவாரண நிதியாக நன்கொடை அளிக்க முடிவெடுத்துள்ளனர். மேலும், திரைப்படக் கூட்டமைப்பிலிருந்து பலரும் நன்கொடை அளித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #GajaCycloneRelief #ProducersCouncil #SaveDelta

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் வகையில் வாட்டர் பில்டருடன் செல்வதாக நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். #GajaCycloneRelief #Kasthuri
    நடிகை கஸ்தூரி கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்களுடன் கிளம்பினார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறி இருப்பதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை அள்ளிக்கொடுக்கும் உயர்ந்த உள்ளங்களை வாழ்த்துகிறேன். என்னால் முடிந்த அளவில் நிவாரண பொருட்களை எடுத்துக் கொண்டு நேரடியாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்ல உள்ளேன். டெல்டா மாவட்டங்களின் தற்போதைய அத்தியாவசிய தேவை குடிநீர்.

    உணவு பொருட்கள், மருத்துவ உதவி போன்றவை பலதரப்புகளிருந்து வந்துகொண்டிருக்கும் வேளையில், குடிநீர் பற்றாக்குறை பூதாகரமாக தலையெடுத்துள்ளது. நாட்கள் செல்ல செல்லச், சுத்தமான பாதுகாப்பான குடிநீர் மிக பெரிய தேவையாக இருக்கும். இதற்கு அத்தியாவசியமான 1000 நீர் சுத்திகரிப்பு கருவிகளை வழங்க இருக்கிறோம்.



    1000 குடும்பத்திற்கு தேவையான அதிநவீன குடிநீர் சுத்திகரிப்பான்கள், போர்வைகள், கொசுமருந்து, காய்ச்சல் நிவாரணி மாத்திரைகள், சானிடரி நாப்கின்கள் அடங்கிய லாரியை அனுப்புகிறோம். இந்த குடிநீர் சுத்திகரிப்பான்கள் பேரிடர் காலத்தில் பயன்படுத்த மிகவும் உகந்தவை. எங்கும் எடுத்து செல்லலாம், சுலபமாக பயன்படுத்தலாம், எத்தனை மாசுபட்ட தண்ணீரையும் தெளிந்த பாதுகாப்பான சுத்தமான குடிநீராக மாற்றிவிடும். கொதிக்கவைக்க அவசியமில்லை.

    பிளாஸ்டிக் பாட்டில்களையும், கேன்களையும் நாடவேண்டியதில்லை, இரண்டு வருடங்களுக்கு குறையாமல் செலவில்லாமல் குடிநீரை சுத்தப்படுத்திக் கொள்ளலாம். இது வெளிநாட்டில் மட்டுமே இப்போதைக்கு கிடைக்கிறது, இங்கு நம் பயன்பாட்டிற்காக ஆயிரம் சுத்திகரிப்பான்களை உடனடியாக தயாரித்து அனுப்பியிருக்கும் சென்னை ராமா குடிநீர் சுத்திகரிப்பான் நிறுவனத்திற்கு நன்றி. முதல் கட்டமாக 1000 பில்டர்கள் வழங்குகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCycloneRelief #Kasthuri

    தி.மு.க. பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கஜா புயல் நிவாரண நிதியாக தங்களது ஒரு மாத ஊதியத்தை அளித்துள்ளனர் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். #DMK #MKStalin #GajaCycloneRelief
    திருச்சி:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.க.வினர் நிவாரண உதவிகளை வழங்கவேண்டும் என்று நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    நிவாரண பொருட்களை சேகரித்து திருச்சியில் உள்ள தி.மு.க. அலுவலகமான கலைஞர் அறிவாலயத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமாறும் அவர் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திருச்சி கலைஞர் அறிவாலயத்திற்கு நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தனர்.

    இன்று அதனை புயல் பாதித்த டெல்டா மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் நிவாரண பொருட்களை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

    இதில் ரூ.4 கோடி மதிப்புள்ள 400 டன் அரிசி, பருப்பு, ரவை, கோதுமை மற்றும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு தேவையான பல்வேறு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக சென்று ஆய்வு செய்தேன். பாதிப்புகள் குறித்து அறிந்ததும் அவர்களுக்கு உதவுவதற்காக தி.மு.க. சார்பில் நிவாரண பொருட்கள் சேகரித்து திருச்சி கலைஞர் அறிவாலயத்திற்கு அனுப்பி வைக்கும்படி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை கேட்டுக்கொண்டேன்.

    அவர்களும் தேவையான நிவாரண பொருட்களை திருச்சிக்கு அனுப்பி வைத்தனர். சென்னை வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் ரூ.70 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இன்று அந்த பொருட்கள் அனைத்தும் புயல் பாதித்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

    இந்த பணியில் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அவர்களுக்கு நன்றியும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்களும் தொடர்ந்து பொய்யான தகவல்களை கூறி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கில் மட்டுமே பாதிப்பு ஏற்பட்ட முதல் நாளே நான் அங்கு சென்று பார்வையிட்டு உதவிகளை செய்ய உத்தரவிட்டேன். ஆனால் முதல்வர் மக்களை உடனடியாக சந்திக்கவில்லை. 7 நாட்களுக்கு பிறகு ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார்.




    அதையும் பாதியிலேயே முடித்து விட்டு திரும்பி விட்டார். அமைச்சர்கள் அனைவரும் சாலை வழியாக செல்லும்போது முதல்வர் மட்டும் செல்லாதது ஏன்? எந்த மாநில முதல்வரும் தமிழக முதல்வர் போல் செய்தது இல்லை. இன்று பிரதமரை சந்தித்து பேசி இருக்கிறார். இதிலும் அவர் சரியாக செயல்படவில்லை.

    பிரதமரை சந்திப்பதற்கு முன்பு கஜா புயல் பாதிக்கப்பட்ட மாவட் டங்களில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள், அனைத்து தரப்பினரையும் அழைத்து ஆலோசனை செய்து முழுமையான விபரங்களை திரட்டிய பின்னரே சென்று பேசியிருக்க வேண்டும். அதே எதிர்க்கட்சியினரையும் அழைத்து ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும்.

    ரூ.15 ஆயிரம் கோடி நிவாரண நிதி கேட்டிருப்பதாக கூறுகிறார்கள். முதல் கட்டமாக ரூ.1,500 கோடி இடைக்கால நிவாரண நிதியாக வழங்கவேண்டும் என கேட்டிருக்கிறார்கள். இதையாவது அவர்கள் சரியாக செயல்பட்டு பெற்றுத்தர வேண்டும்.

    ஏற்கனே தானே, வர்தா, ஒக்கி ஆகிய புயல் பாதிப்புகளுக்கு மத்திய அரசு சரியான நிதியை தரவில்லை. தமிழக அரசு ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 573 கோடி நிதி கேட்டது. ஆனால் மத்திய அரசு அப்போது ரூ.2 ஆயிரத்து 12 கோடியை மட்டுமே வழங்கியது.

    இப்போது எந்த அளவிற்கு நிதியை வழங்குவார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. மத்திய அரசு மத்திய கஜா புயல் பாதிப்பு குறித்து அறிந்த உடனேயே நிதி ஒதுக்கியிருக்க வேண்டும். மாநில அரசு அறிக்கை கொடுத்த பிறகுதான் நிதி வழங்கவேண்டும் என்று நினைப்பது சரியில்லை.

    இதற்கு முன்பு தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் இருந்த போது இதுபோன்ற பேரிடர் காலங்களில் மத்திய அரசிடம் போதிய நிதியை பெற்றுத்தரவில்லை என்று கூறுவது தவறு. பழைய பல்லவியையே பாடிக் கொண்டிருக்க கூடாது. இப்படி கூறுவது போதிய நிதியை பெற்றுத்தர போவதில்லை என்பதை காட்டுகிறது.

    பா.ஜ..க.வுடன் அ.தி.மு.க. அரசு இணக்கமாக இருக்கும்போது, போதிய நிவாரண நிதியை பெற்றுத்தருவதில் ஏன் தாமதம் ஏற்படுகிறது? தி.மு.க. பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கஜா புயல் நிவாரண நிதியாக தங்களது ஒரு மாத ஊதியத்தை அளித்துள்ளனர்.

    நிவாரண பணிகளை மேற்கொள்ள அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட தயாராக உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #MKStalin #GajaCycloneRelief
    கஜா புயல் பாதிப்பு பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டது கண்துடைப்பு பயணம் என விமர்சனம் செய்த மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார். #EdappadiPalaniswami #MKStalin
    சென்னை:

    கஜா புயல் பாதிப்புக்கு நிவாரண உதவி கேட்டு பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்தார். அப்போது, கஜா புயலால் ஏற்பட்ட சேத விவரங்களை பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி எடுத்து கூறினார். சேதங்களை விரிவாக பட்டியலிட்டு 40 பக்கம் கொண்ட மனுவையும் பிரதமர் மோடியிடம் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.


    பிரதமர் மோடியை சந்தித்த பின் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் கஜா புயலினால் கடும் சேதம் அடைந்துள்ளது. அதற்குத் தற்காலிக சீரமைப்புக்காக உடனடியாக 1500 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்க வேண்டுமென்று பாரதப் பிரதமரிடத்திலே வலியுறுத்தி உள்ளேன். நிரந்தர சீரமைப்புக்காக 15000 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்க வேண்டுமென்றும் பிரதமரிடத்திலே கேட்டுக் கொண்டுள்ளேன்.

    கஜா புயலால் சேதமடைந்த பகுதிகளை உடனடியாக மத்தியக் குழு பார்வையிட்டு சேத விவரங்களை கணக்கிட்டு நிவாரணத்தை அளிக்க வேண்டுமென்று பாரதப் பிரதமரிடத்தில் கேட்டுக் கொண்டுள்ளேன். பிரதமர் உடனடியாக மத்தியக் குழுவை அனுப்பி வைத்து, விரைவில் சேதம் அடைந்த பகுதிகளை பார்வையிட அனுப்பிவைப்பதாக கூறி உள்ளார்.

    எங்களைப் பொறுத்த வரைக்கும் தமிழகத்தில் கஜா புயல் வருவதற்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கை நாங்கள் எடுத்தோம். கிட்டத்தட்ட 82,000 நபர்களை முகாம்களில் தங்கவைத்து பாதுகாத்ததன் விளைவாக, கஜா புயலின்போது பொது மக்களுடைய பாதிப்பு குறைக்கப்பட்டிருக்கின்றன.

    கஜா புயலினால் பாதிக்கப்பட்டவுடனேயே அதிகாரிகளை அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பி வைத்து சேத மதிப்பீடுகளை கணக்கிட்டு அதை தற்போது பிரதமரிடத்தில் அளித்துள்ளேன். தமிழ்நாடு அரசு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டிருக்கிறது. அதற்காகத்தான், முதற்கட்டமாக தமிழ்நாடு அரசால் 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்தப் பணிகளெல்லாம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

    இதுவரை பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் 12, இந்த கஜா புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63, சேதம் அடைந்த குடிசை வீடுகள் 2,78, 824, ஓட்டு வீடுகள் 62,996, மொத்தம் புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள் 3,41,820. கால்நடைகள் உயிரிழப்பைப் பொறுத்த வரைக்கும் ஆடு, மாடுகள் 12,298, பறவைகள் 92,507, மொத்தம் 1,04,805. சாலை ஓரங்கள் மற்றும் வீடு ஓரமாக இருந்த சேதமடைந்த மரங்கள் 11,32,686, இதுவரை அகற்றப்பட்ட மரங்கள் 7,27,399. மீட்பு முகாம்களின் எண்ணிக்கை தற்போது 556 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    அதில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை 3,78,019. இதுவரை கணக்கிட்டுப்படி சாய்ந்த, ஒடிந்த மின்கம்பங்கள் 1,03,508, இதில் 40 சதவீதம் சீரமைக்கப்பட்டுவிட்டன. 886 மின்மாற்றிகள் வீழ்ந்து சேதமடைந்துள்ளன, இதில் 40 சதவீதம் தற்போது சீரமைக்கப்பட்டுவிட்டன.

    பழுதடைந்த துணை மின்நிலையங்கள் 181, இதுவரை 147 துணை மின் நிலையங்கள் சீரமைப்பட்டுள்ளன. துண்டிக்கப்பட்ட மின்இணைப்புகள் 53,21,506, இதுவரை, இதில் 40,04,452 சீரமைக்கப்பட்டுள்ளன. சீரமைக்கின்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மின்துறை பணியாளர்கள் 22163. குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்ட 184 நகராட்சி பகுதிகள் சீரமைக்கப்பட்டு விட்டன.

    உயிரிழந்த குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டு நான் நேரில் சென்று பல குடும்பங்களுக்கு வழங்கியிருக்கிறேன். படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 1 லட்சம் வழங்குவதாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சாதாரண காயமடைந்தவர்களுக்கு 25,000 ரூபாயும், உயிரிழந்த 231 பசு மற்றும் எருமை மாடுகளுக்கு தலா 30,000 ரூபாய், காளை மாடுகளுக்கு தலா 25,000 ரூபாய், ஆடுகளுக்கு தலா 3,000 ரூபாய், முழுவதும் சேதமடைந்த குடிசை ஒன்றிற்கு 10,000 ரூபாய், பகுதி சேதடைந்த குடிசை ஒன்றிற்கு 4,100 ரூபாய், முழுவதும் சேதம் அடைந்த குடிசைகள், வீடுகளுக்கு பதிலாக, தகுதி வாய்ந்த நபர்களுக்கு புதிதாக வீடு கட்ட உரிய நிதியை அரசு வழங்கும்.

    ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 கிலோ அரிசி, 1 வேட்டி, 1 சேலை மற்றும் 1 லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு கூடுதலாக 1 வேட்டி, 1 சேலை, கூடுதலாக 4 லிட்டர் மண்ணெண்ணெயும் வழங்கப்படும்.

    முகாமில் தங்கியுள்ள குடும்பங்களுக்கு உடனடியாக வாழ்வாதார நிவாரணமாக குடும்பம் ஒன்றிற்கு தலா 5000 ரூபாயும், துணிமணிகள், பாத்திரம், பண்டங்கள் ஆகியவை வாங்க குடும்பத்திற்கு தலா 3,800 ரூபாயும் வழங்கப்படுகிறது. முகாமில் தங்கியுள்ள பெரியோர்கள், தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆவின் நிறுவனம் மூலம் பால் வழங்கப்பட்டு வருகிறது.

    இதுவரை கிராமப் புறங்களிலுள்ள குடும்பங்களுக்கு 2018 டிசம்பர் மாதத்திற்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை முன்னதாகவே சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளில் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுமார் 175 தென்னை மரங்கள் நடப்பட்டுள்ள ஹெக்டேர் ஒன்றுக்கு 1,92,500 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும், தென்னை மறுசாகுபடி செய்வதற்கு 1 ஹெக்டேருக்கு 72,100 ரூபாய் வழங்கப்படும். இதன் மூலமாக நிவாரணம் மற்றும் மறுசாகுபடி தென்னை விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 2,64,600 ரூபாய் பெறுவர்.

    கேள்வி:- பாதிப்படைந்த பகுதிகளை பார்வையிட நீங்கள் ஏன் சாலை மார்க்கமாக செல்லவில்லை?


    பதில்:- சாலை மார்க்கமாக சென்ற ஸ்டாலின் எத்தனை இடங்களைப் பார்வையிட்டார்? இன்றைக்கு நான்கு மாவட்டம் முழுவதும் பாதிப்பு அடைந்திருக்கிறது. அதை எப்படி நடந்து போய் பார்ப்பீர்கள்.

    நான் வந்து ஹெலிகாப்டர் மூலம் செல்கின்ற போது எல்லா புகைப்படத்தையும் எடுத்து வைத்திருக்கின்றேன். ஒவ்வொரு பகுதியிலும் என்னென்ன மரங்கள் சாய்ந்திருக்கிறது. எவ்வளவு வாழை மரங்கள் சாய்ந்திருக்கிறது. எவ்வளவு தென்னை மரங்கள் சாய்ந்திருக்கிறது. தாழ்வாக பறந்து எல்லாவற்றையும் பார்வையிட்டோம்.

    வெறுமென பார்வையிட செல்லவில்லை. முழு சேதம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். அங்கே என்ன பாதிக்கப்பட்டு இருக்கிறது. அதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகதான், நேரடியாக சென்றோம். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் தொடர்பான புகைப்படங்களை பிரதமரிடத்தில் அளித்திருக்கிறேன். இது எல்லாம் நாங்கள் போய் எடுத்த படங்கள். அவர் எந்தெந்த இடத்திற்கு போனார். மூன்று இடங்களுக்கு போய் பாதியிலே திரும்பி வந்துவிட்டார். வெறுமென இரண்டு மூன்று இடங்களுக்கு சென்று பார்வையிட்டு வந்தால், நிவாரணம் வழங்க முடியாது. உண்மை நிலவரங்களை தெரிந்து கொள்ள முடியாது.

    ஆகவே, இது தவறான செய்தி. நான் ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன். ஒரே தொகுதியில் இருந்து வந்திருக்கிறேன். மாறி மாறி நிற்கவில்லை. ஆகவே, மக்களுடைய உணர்வுகளை நன்கு உணர்ந்தவன். நன்றாக உணர்ந்த காரணத்தினால் தான், இதுவரை எந்த ஒரு அரசாங்கமும் செய்ய முடியாததை, புயல் வருவதற்கு முன்கூட்டியே மக்களை முகாம்களில் தங்க வைத்து பாதுகாக்கப்பட்டு இருக்கிறது. இதுவரைக்கும் யாரும் இதுபோல் செய்யவில்லை.

    இன்றைக்கு லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. இதையெல்லாம் நாங்கள் அப்புறப்படுத்தி கொண்டு இருக்கின்றோம். கடந்த காலத்தில் எல்லாம் புயலால் இவ்வளவு சேதம் அடைந்தது கிடையாது. ஆனால் எதிர்கட்சிகள் எல்லாம் சாலைகளில் போகிறார்கள், பார்க்கிறார்கள், வந்து விடுகிறார்கள். அவர்களது வேலை அதோடு முடிந்து விட்டது.

    ஆனால் அரசாங்கம் அப்படியல்ல. எல்லா பகுதி மக்களுக்கும் தங்குவதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். உணவு கொடுக்க வேண்டும், தண்ணீர் கொடுக்க வேண்டும், மருத்துவ வசதி கொடுக்க வேண்டும், சாலைகளில் உள்ள மரங்கள் அகற்றப்பட வேண்டும், அதற்கு தக்க பணியாளர்களை நியமிக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் கணக்கிட்டால் தான் எத்தனை பணியாளர்களை அனுப்பி வைக்க முடியும் என்பது தெரியும்.

    சேதம் அளவை கணக்கிட்டால் தான் எத்தனை பணியாளர்களை அனுப்ப வேண்டும் என்பது தெரியும். இந்த இரண்டு நாட்கள் கணக்கிடும் போது தான், மின்கம்பங்கள் சாய்ந்தது முதலில் 50 ஆயிரம் என்று சொன்னார்கள், பின்னர் 80 ஆயிரம் என்று சொன்னார்கள், இப்போது 1 லட்சத்து 3 ஆயிரம் ஆகி விட்டது. அதற்கு தக்கவாறு ஆங்காங்கே இருக்கின்ற நம்முடைய மின்சார ஊழியர்களையும் எல்லாம் அனுப்பி வைத்தோம். அதுமட்டுமல்லாமல், பக்கத்து மாநிலத்திலிருந்து மின் ஊழியர்களை வரவழைத்து, அந்தப் பணிகளில் ஈடுபடுத்தினோம்.

    இரவு பகல் பாராமல், மழையை கூட பொருட்படுத்தாமல் நம்முடைய மின்சார ஊழியர்கள் அந்த மின்கம்பங்களை நட்டு அதற்கு மின் இணைப்பு கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.

    அந்த ஊழியர்களின் சிரமத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும். ஆகவே, அரசு ஊழியர்கள் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக மின்சார ஊழியர்கள் தங்கள் உயிரையே பணயம் வைத்து இந்தப் பணியில் ஈடுபட்டு கொண்டு இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் கொச்சைப்படுத்த வேண்டாம்.

    கேள்வி :- புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள நமக்கு எவ்வளவு பணம் தேவைப்படுகிறது?

    பதில்:- நாங்கள் 15 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டிருக்கிறோம். மத்திய அரசிடமிருந்து நிரந்தர சீரமைப்பிற்காக 15 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டிருக்கிறோம். முதற்கட்டமாக, தமிழ்நாடு அரசு 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. முதல் கட்டமாக தற்காலிக பணி சீரமைப்புக்கு பிரதமரிடம் 1500 கோடி ரூபாயை கேட்டு இருக்கின்றோம். அவர்களும் வழங்குவதாக தெரிவித்து இருக்கிறார்கள். அதோடு மத்திய குழுவையும் விரைந்து அனுப்புவதாக தெரிவித்துள்ளார்.

    ஒவ்வொரு ஊராட்சி பகுதிகளுக்கும் கோட்டாட்சியர் அந்தஸ்தில் உள்ளவர்களையும் அனுப்பி வைத்திருக்கிறோம். வேகமாக துரிதமாக நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களுக்கு இயல்பு நிலை திரும்புவதற்கு உண்டான அனைத்து நடவடிக்கைகளையும் அம்மாவின் அரசு எடுத்து வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    இந்த சந்திப்பின்போது பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை, அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். #GajaCyclone #EdappadiPalaniswami #MKStalin 
    கஜா புயலுக்கு மத்திய அரசு தரும் தொகை, யானை பசிக்கு சோளப்பொறி போன்று தான் அமையும் என்று வைகோ தெரிவித்துள்ளார். #MDMK #Vaiko #GajaCyclone #CentralGovt
    தஞ்சாவூர்:

    தஞ்சையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சிக்கு வந்த ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ, இன்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சோழவள நாடு என்று பெயர் பெற்ற டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்று, மக்களுக்கு எதிரான திட்டங்களை கொண்டு வந்து அவர்களை உயிரோடு சாகடித்து விட்டனர்.

    மேலும் தற்போது வீசிய கஜா புயலுக்கு 50-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் பலியாகி உள்ளது. பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்கள் அழிந்து விட்டது. வாழை, கரும்பு, பயிர்கள் போன்றவை நாசமாகி விட்டன.

    புயல் பாதிப்புகளுக்காக தமிழக அரசு உடனே ரூ.1000 கோடி ஒதுக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் பிரதமரை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிவாரண தொகையாக ரூ.13 ஆயிரம் கோடி கேட்க உள்ளார். ஆனால் இதில் 4 சதவீதம் கூட மத்திய அரசிடம் இருந்து வராது. அவர்கள் தரும் நிதி, யானை பசிக்கு சோளப் பொறி போன்று அமையும்.

    தமிழகத்தில் உள்ள அதிகாரிகள் இந்திய அளவில் சிறப்பாக செயல்படும் அதிகாரிகள் என்று பெயர் பெற்றவர்கள். அதை நிரூபித்து விட்டார்கள். அனைத்து மாவட்ட கலெக்டர்களும் சிறப்பாக செயல்பட்டார்கள். மேலும் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் உதயகுமார் ஆகியோரை பாராட்டியே ஆக வேண்டும்.


    மின்வாரிய ஊழியர்கள், காவல் துறையினர் இரவு- பகல் பாராமல் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கஜா புயலில் அ.தி.மு.க. அரசு சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் முதல்வர் செய்த தவறு, புயல் வந்த 8 மணி நேரத்தில் களத்தில் நின்று பணியாற்றிருக்க வேண்டும். அதை அவர் செய்யவில்லை.

    தொடர்ந்து விவசாய கடன், கல்விக்கடன், வணிக கடன்களின் வட்டிகளை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். 5 ஆண்டுகளுக்கு பிறகே கடனை திரும்ப வசூல் செய்ய வேண்டும். மேலும் அரசு அளிக்கும் நிவாரண தொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும்.

    தொடர்ந்து தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது. மோடி பிரதமராக இருப்பதற்கே தகுதி இல்லாதவர் போன்று செயல்படுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார். #MDMK #Vaiko #GajaCyclone #CentralGovt
    கஜா புயல் நிவாரணத்துக்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என்று உள்துறை அமைச்சகத்திடம் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #GajaCyclone #GajaCycloneRelief #HomeMinistry
    புதுடெல்லி:

    தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை சமீபத்தில் தாக்கிய கஜா புயல் வரலாறு காணாத வகையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். உயிர் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. புயல் நிவாரணத்துக்கு மாநில அரசு 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது.



    இந்நிலையில், ‘கஜா’ புயல் பாதிப்பு குறித்து விளக்கவும், சேத மதிப்பு தொடர்பான விவரங்களை பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு தேவையான நிதியை பெற்று வருவதற்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார். அவருடன் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் சென்றனர்.

    இன்று காலை பிரதமர் மோடியை தமிழக முதல்வர் சந்திக்க உள்ள நிலையில், கஜா புயல் சேத விவரம் மற்றும் தேவைப்படும் நிவாரணம் தொடர்பான தமிழக அரசின் சார்பில் உள்துறை அமைச்சகத்திடம் அறிக்கை  அளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது.

    அதில், கஜா புயல் நிவாரணத்துக்கு தமிழக அரசு 14 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டிருப்பதாகவும், இடைக்கால நிவாரணமாக 1500 கோடி ரூபாய் ஒதுக்கும்படி கோரிக்கை வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. #GajaCyclone #GajaCycloneRelief #HomeMinistry
    கஜா புயல் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மக்களுக்கு உதவும் வகையில் விஜய் நிவாரண பொருட்களை தனது ரசிகர் மன்றம் மூலம் வழங்கி வருகிறார். #GajaCycloneRelief #Vijay
    கஜா புயலால் பாதிக்கப் பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு திரை உலகினர் நிவாரண உதவிகளை அனுப்பி வருகிறார்கள்.

    நடிகர் விஜய்யும் புயல் பாதித்த மக்களுக்கு ஓசையில்லாமல் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.

    நேற்று காலை ரூ.5 லட்சத்துக்கான நிவாரண பொருட்கள், மெழுகுவர்த்தி, பால், வேட்டி சேலை போன்ற பொருட்களை அனுப்பி வைத்துள்ளார். இவற்றை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு அனுப்பி அவர்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வினியோகம் செய்ய அறிவுறுத்தி உள்ளார்.

    மேலும் புயலால் பாதிக்கப் பட்ட 7 மாவட்டங்களில் உள்ள மக்கள் இயக்கத் தலைவர்களின் வங்கி கணக்குகளுக்கும், விஜய் ஓசையில்லாமல் பணம் அனுப்பி உள்ளார்.

    இதுகுறித்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூறியதாவது:-

    தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் எடுத்துக் கொண்டிருக்கிறோம்.



    நேற்று காலை விஜய் தொடர்பு கொண்டு, ரூ.5 லட்சத்திற்கான நிவாரணப் பொருட்கள் மெழுகுவத்தி, பால், வேட்டி, சேலை உள்ளிட்ட பொருட்கள் அனுப்பி வைக்கப்படும்.

    அதை மக்களுக்குக் கொடுத்து உதவுங்கள் என்று தெரிவித்தார். இன்று காலை யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், என் வங்கிக் கணக்கில் ரூ.4.50 லட்சம் பணம் வந்திருந்தது. யாரிடமிருந்து வந்திருக்கிறது என்று பார்த்தோம். அது, சென்னையிலிருந்து விஜய் என்ற பெயரில் தளபதியிடமிருந்து அனுப்பி வைக்கப்பட்ட பணம்.

    இதுபற்றி மக்கள் இயக்கம் தலைமைக்குத் தொடர்புகொண்டு கேட்டபோது, நாகை மாவட்ட புயல் நிவாரண நிதிக்காக அனுப்பிவைக்கப்பட்ட பணம். அதை மக்களுக்கு உதவுகின்ற வகையில் செலவு செய்யுமாறு விஜய் அனுப்பி வைத்திருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டது.

    இதுபோல, மதுரை மாவட்ட மக்கள் இயக்கத் தலைவர் தங்கபாண்டியனின் வங்கிக்கணக்கிலும் ரூ.2 லட்சம் அனுப்பப்பட்டிருக்கிறது. விஜய் அனுப்பிவைத்திருக்கும் பணத்தை குடிசை வீடுகளை இழந்த மக்களுக்குப் பிரித்துக் கொடுத்து, மீதமுள்ள பணத்தை பல்வேறு பொருள்களாக மக்கள் பயனடையச் செய்வோம்.

    இவ்வாறு தெரிவித்தனர். #GajaCycloneRelief #Vijay

    கனடாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள இசை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் நிதியை முழுமையாக கஜா புயல் நிவாரணத்திற்காக வழங்கவுள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்துள்ளார். #ARRahman #GajaCycloneRelief
    கஜா புயல் பாதிப்பால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

    திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் டெல்டா மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். நடிகர் சிவக்குமார் குடும்பம் ரூ.50 லட்சம் நிதி அறிவித்துள்ளது. ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிவாரணமும், விஜய் சேதுபதி ரூ.25 லட்சம் நிவாரணமும் வழங்கியுள்ளனர்.

    விஜய், சிவகார்த்திகேயன், ஜி.விபிரகாஷ் குமார், வைரமுத்து உள்ளிட்ட பலரும் டெல்டா மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் நிவாரண உதவியை அறிவித்துள்ளார். இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,


    கனடாவில் உள்ள துரந்தோவில் டிசம்பர் 24-ஆம் தேதி தான் நடத்தும் இசை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் நிதியை முழுமையாக கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்குவேன் என்று அறிவித்துள்ளார். #ARRahman #GajaCycloneRelief

    ×