என் மலர்
நீங்கள் தேடியது "உள்துறை அமைச்சகம்"
- த.வெ.க. தலைவர் விஜய்க்கு மத்திய அரசின் 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
- த.வெ.க. பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் மீது செருப்பு வீசப்பட்டது.
நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகர்கள், பிரபலங்களுக்கு உளவுத் துறையின் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு 'ஒய்', 'இசட்' எனப் பல்வேறு பிரிவுகளின்கீழ் பாதுகாப்பு வழங்குகிறது.
அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் முதல் த.வெ.க. தலைவர் விஜய்க்கு மத்திய அரசின் 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற த.வெ.க. பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் மீது செருப்பு வீசப்பட்டது.
இதுதொடர்பாக புகார் எழுந்த நிலையில், விஜயின் பாதுகாப்பு அதிகாரிகளிடம் உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது.
கரூர் பிரசார கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு இருந்ததா? என அவரது பாதுகாப்பு அதிகாரிகளிடம் உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது.
பாதுகாப்பு அதிகாரிகள் அளிக்கும் பதிலின் அடிப்படையில் மேலும் பாதுகாப்பு அதிகரிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
- பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் அதிகமானோர் உயிரிழந்தது கரூரில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.
- இதனை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
புதுடெல்லி:
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்தார். பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியது.
இதனை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கரூரில் கூட்ட நெரிசலில் நிகழ்ந்த உயிரிழப்பு தொடர்பாக தமிழக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது.
விபத்துக்கான சூழ்நிலை மற்றும் எடுக்கப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி தமிழக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
- ஆயுதப்படைகள் சிறப்பு சட்டம் மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சல பிரதேசத்தில் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
- அக்டோபர் 1, 2025 முதல் 6 மாத காலத்திற்கு இந்தச் சட்டம் நடைமுறையில் இருக்கும்.
புதுடெல்லி:
வடகிழக்கு மாநிலங்களில் பயங்கரவாதிகள், உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளதால் அங்கு மத்திய அரசின் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டம் நடைமுறையில் உள்ளது. இந்தச் சட்டம் மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம் மாநிலங்களில் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
பதற்றம் மிகுந்த பகுதிகளாக அறிவிக்கப்படும் இடங்களில் நீதிமன்றம் அனுமதியின்றி தேடுதல், கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறப்பு அதிகாரங்கள் இந்த ஆயுதப்படைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டம் மேலும் 6 மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நம்சாய் மாவட்டத்தில் உள்ள திராப், சாங்லாங், லாங்டிங் மாவட்டங்கள், நம்சாய் மாவட்டத்தில் நம்சாய், மகாதேவ்பூர், சௌகாம் ஆகிய காவல் நிலையங்களின் அதிகார வரம்புக்குள் வரும் பகுதிகளில் இந்தச் சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 1, 2025 முதல் 6 மாத காலத்திற்கு இந்தச் சட்டம் நடைமுறையில் இருக்கும், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமையை மீண்டும் ஆய்வு செய்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த நீட்டிப்பு, மார்ச் 31, 2026 வரை அமலில் இருக்கும் என்று கூறி உள்ளது.
- லடாக்கில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
- லே நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு தீ வைத்து அதன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
யூனியன் பிரதேசமாக உள்ள லடாக்கிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்கவேண்டும், அரசியலமைப்பின் 6-வது அட்டவணையில் சேர்க்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய அரசு சார்பில் அடுத்த மாதம் 6-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, லடாக்கில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நேற்று காலை முழு அடைப்பு போராட்டம் நடந்தது. அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். போலீசாரின் வாகனங்களுக்கு தீவைத்தனர்.
மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் லே நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு தீ வைத்து அதன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
இதனிடையே, போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதனையடுத்து போராட்டத்தைக் கட்டுப்படுத்த லேவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், லடாக்கில் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேற்று மாலை 4 மணியில் இருந்து அங்கு எந்த வன்முறை சம்பவமும் நிகழவில்லை என்றும் வன்முறையைத் தூண்டும் விதமான பழைய வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் எனவும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
- இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.
- இலங்கை தமிழர்கள் இனி சட்டவிரோத குடியேறிகள் அல்ல.
புதுடெல்லி:
போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை விட்டு வெளியேறி இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் தஞ்சம் புகுந்தவர்களில் பெரும்பான்மையோர் தமிழ் பேசும் இனத்தைச் சேர்ந்தவர்கள்.
இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். இலங்கை தமிழர்கள் சுதந்திரமாக இந்தியாவில் வாழ வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், 2015 ஜனவரி 9-ம் தேதிக்கு முன்பு உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்து, அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் சட்டப் பூர்வமாக தங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை தமிழர்கள் இனி சட்டவிரோத குடியேறிகள் அல்ல. சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் உள்ள தண்டனை விதிகளில் இருந்தும் இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது.
- நாங்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து வான்வழித் தாக்குதல் மற்றும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் மூலம் அவர்களுக்கு பதிலடி கொடுத்தோம்.
- பயங்கரவாதிகளை தங்கள் கண்களில் வைத்திருப்பவர்கள் எல்லா இடங்களிலும் பயங்கரவாதிகளை மட்டுமே பார்ப்பார்கள்
இன்று நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தின்போது மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார்.
அவர் பேசியதாவது, முதலில், நான் காஷ்மீரைப் பற்றிப் பேசுகிறேன். அண்டை நாட்டிலிருந்து பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் நுழைந்தனர். அவர்கள் இங்கு குண்டுவெடிப்புகளையும் கொலைகளையும் அரங்கேற்றினர். எந்த கவலையும் இல்லாமல் ஒரு பண்டிகையைக் கூட காஷ்மீர் மக்கள் கொண்டாட முடியவில்லை.
இந்த விவகாரத்தில் முந்தைய மத்திய அரசு நெகிழ்வான அணுகுமுறையைக் கொண்டிருந்தது. அவர்கள் அமைதியாக இருந்தனர், பேசுவதற்கு பயந்தனர். அவர்கள் தங்கள் வாக்கு வங்கியைப் பற்றி கவலைப்பட்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, பயங்கரவாதத்திற்கு எதிராக நாங்கள் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையைக் காட்டினோம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகும் உரி மற்றும் புல்வாமாவில் தாக்குதல்கள் நடந்தன. 10 நாட்களுக்குள், நாங்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து வான்வழித் தாக்குதல் மற்றும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் மூலம் அவர்களுக்கு பதிலடி கொடுத்தோம்.

எங்களின் பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கை அங்கிருந்து தொடங்கியது. காஷ்மீரில் பிரிவினைவாதத்திற்கான அடிப்படையாக பிரிவு 370 இருந்தது. ஆனால் பிரிவு 370 ஆகஸ்ட் 5, 2019 அன்று எங்கள் அரசால் நீக்கப்பட்டது.
இந்த நடவடிக்கை ஜம்மு-காஷ்மீரை இந்தியாவின் பிற பகுதிகளுடன் முழுமையாக ஒருங்கிணைப்பதை உறுதி செய்தது. தற்போதைய நிர்வாகம் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், எந்தவொரு அச்சுறுத்தல்களிலிருந்தும் நாட்டைப் பாதுகாப்பதற்கும் உறுதிபூண்டுள்ளது.
நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் எல்லைகளை வலுப்படுத்த உயர்ந்த தியாகத்தைச் செய்த ஆயிரக்கணக்கான மாநில காவல்துறை மற்றும் மத்திய துணை ராணுவப் படை வீரர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அமித்ஷா "தான் பயங்கரவாதிகளை தூரத்திலிருந்து கூட பார்க்கிறேன்" என்று ஒருவர் (ராகுல் காந்தி காஷ்மீரில் பாரத் ஜோடோ யாத்திரையின்போது) கூறினார். பயங்கரவாதிகளை தங்கள் கண்களில் வைத்திருப்பவர்கள் எல்லா இடங்களிலும் பயங்கரவாதிகளை மட்டுமே பார்ப்பார்கள் என்று விமர்சித்தார். மேலும் நக்சல் பிரச்சனை குறித்து பேசிய அமித் ஷா, இடதுசாரி பயங்கரவாதம், மார்ச் 31, 2026க்குள் முடிவுக்கு வரும் என்றும் தெரிவித்தார்.
போதைப்பொருள், சைபர் குற்றம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்கள் மற்றும் ஹவாலா போன்ற மாநிலங்களுக்கிடையேயான மற்றும் வெளிநாட்டில் இருந்து நடக்கும் குற்றங்களை தடுக்க உள்துறை அமைச்சகத்தில் (அதிகார வரம்பில்) பல மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டியது அவசியம் என்றும் அமித் ஷா பேசினார்.
- நீட் விலக்கு மசோதா நிறைவேற்றி அதற்கு ஒப்புதல் பெற கவர்னர் மூலம் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது.
- ஜனாதிபதி அளித்த பதிலில், நீட் விலக்கு மசோதா உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டு உள்ளது என கூறப்பட்டிருந்தது.
சென்னை:
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது.
இதுதொடர்பாக ஏற்கனவே சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மத்திய உள்துறை அமைச்சகத்தால் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் மீண்டும் சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றி அதற்கு ஒப்புதல் பெற கவர்னர் மூலம் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது.
இதையடுத்து மதுரை எம்.பி. வெங்கடேசன் கடந்த ஜனவரி மாதம் நீட் விலக்கு மசோதாவுக்கு ஜனாதிபதி உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கடிதம் அனுப்பி இருந்தார்.
அந்த கடிதத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு உள்துறை அமைச்சகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்கு ஜனாதிபதி உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
இதற்கு ஜனாதிபதி அளித்த பதிலில், நீட் விலக்கு மசோதா உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டு உள்ளது என கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் எம்.பி.யின் கடிதத்தின் நிலையை அறிய தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கஜேந்திரபாபு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஒரு மனு செய்திருந்தார். அதற்கு அளிக்கப்பட்டுள்ள பதிலில் ஜனாதிபதி செயலகத்தால் அனுப்பப்பட்ட கடிதம் உள்துறை அமைச்சகத்தில் பெறப்படவில்லை என்று அவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட தகவல் தொடர்புகள் எப்படி காணாமல் போனது என்று கேள்வி எழுப்பியுள்ள கஜேந்திரபாபு இதுதொடர்பாக புதிய விண்ணப்பத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அனுப்பி உள்ளார்.
- கடந்த இரண்டு வாரங்களில் சந்தேகத்திற்குரிய கிளர்ச்சிக்குழுவால் பலர் படுகொலை.
- கூட்டத்தில் பங்கேற்க எம்.எல்.ஏ.-க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையிலான மோதல் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. இதனால் மணிப்பூரில் ஆங்காங்கே மோதல் வெடித்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் பள்ளத்தாக்கைச் சேர்ந்த கிராம பாதுகாப்புக்கு குழு இன்று மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள கங்லா கோட்டையில் மிகப்பெரிய கூட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. இதனால் நேற்று இரவு முதல் இதுவரை இல்லாத அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளத்தாக்கின் கிராம பாதுகாப்பு குழுவான அரம்பை டெங்கோல் (AT) என்ற குழு இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டத்திற்கு எம்.எல்.ஏ.-க்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில் மணிப்பூர் வன்முறையில் தலைவர்கள் நிலை என்ன? என்பது தெளிவாக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
கடந்த இரண்டு வாரங்களில் நான்கு மரம் வெட்டுபவர்கள், கிராம பாதுகாப்பு தன்னார்வலர்கள், இரண்டு போலீஸ் கமாண்டோஸ் ஆகியோர் சந்தேகத்திற்குரிய கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில்தான் இந்த கூட்டத்தை நடத்த முன்வந்துள்ளது.
இதனால் மத்திய அமைச்சகம் மூன்று பேர் கொண்ட சிறப்பு குழுவை மணிப்பூருக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த குழு நேற்று இரவு மணிப்பூர் வந்துள்ள நிலையில் அரம்பை டெங்கோல் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
கங்லா கோட்டை பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மத்திய மற்றும் மாநில பாதுகாப்புப்படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே நாகா பழங்குடியின தலைவர்கள் உள்பட 35 எம்.எல்.ஏ.க்கள் 25 குகி கிளர்ச்சி குழுக்களுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டுள்ளளது. எங்களது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றால், மக்களுடன் ஆலோசித்து, அதன்படி தலைவர்கள் தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள் எனத் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் சொல்லும் நடவடிக்கை, அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமா செய்து பா.ஜனதா அரசை கவிழ்ப்பது எனத் தகவல் தெரிவிக்கிறது. மணிப்பூர் சட்டசபை 60 எம்.எல்.ஏ.க்களை கொண்டதாகும்.
குகி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக பாதுகாப்புப்படை முழு அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். முத்தரப்பு ஒப்பந்தம் முற்றிலும் ரத்து செய்யப்பட வேண்டும் என எம்.எல்.ஏ.க்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
- குண்டு வெடிப்பில் 9 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை.
- கர்நாடகா அரசு தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தது.
பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை குண்டு வெடித்தது. இதில் 9 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய கர்நாடகா அரசு தனிப்படைகள் அமைத்துள்ளது. தனிப்படைகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன. குண்டு வைத்ததாக சந்தேகப்படும் நபரின் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு, அதன் அடிப்படையில் குற்றவாளியை தீவிரமாக தேடிவருகிறது.
குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய யாரும் தப்ப முடியாது என சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார். மேலும், இதை அரசியலாக்கக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.

கர்நாடக மாநில போலீசாரின் தனிப்படை விசாரணை நடத்தி வரும் நிலையில், பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கை மத்திய உள்துறை அமைச்சகம் என்.ஐ.ஏ.-யிடம் ஒப்படைத்துள்ளது. என்.ஐ.ஏ. குண்டு வெடிப்பு தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இதுவரை நடைபெற்றுள்ள விசாரணைகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் கர்நாடகா மாநில அரசால் அமைக்கப்பட்டுள்ள தனிப்படை என்.ஐ.ஏ.-யிடம் ஒப்படைக்கும்.
- டெல்லியின் நார்த் பிளாக்கில் மத்திய உள்துறை அமைச்சகம் செயல்பட்டு வருகிறது.
- உள்துறை அமைச்சகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியின் நார்த் பிளாக்கில் மத்திய உள்துறை அமைச்சகம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், உள்துறை அமைச்சகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதில் டெல்லியின் நார்த் பிளாக் பகுதியில் வெடிகுண்டு வெடிக்கும் என மெயில் மூலம் மிரட்டல் வந்துள்ளது.
இதையடுத்து, போலீசார் அங்கு தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தீயணைப்பு படையினரும் அங்கு வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.
உள்துறை அமைச்சகம் அமைந்துள்ள நார்த் பிளாக்கில் வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
#WATCH | A bomb threat mail was received from the Police Control Room at the North Block, New Delhi area. Two fire tenders have been sent to the spot. Further details awaited: Delhi Fire Service pic.twitter.com/LG4GpZ0cgS
— ANI (@ANI) May 22, 2024
- 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
- கடந்த டிசம்பர் மாதம் புதிய சட்டங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டன.
ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றான புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்தன.
இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி.), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி.), இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய ஆங்கிலேயர் கால சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த புதிய சட்டங்களுக்கான மசோத்தள் நிறைவேற்றப்பட்டன. இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கிய பிறகு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் புதிய சட்டங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டன.
புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்ததை அடுத்து நாடு முழுக்க சுமார் 5.65 லட்சம் போலீசார், சிறை, தடயவியல், நீதித் துறையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் என 40 லட்சம் பேருக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. அதிகாரிகளை புதிய சட்டங்களுக்கு தயார்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரம் காட்டி வருகிறது.
- 3 புதிய குற்றவியல் சட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.
- 25 குற்றங்களுக்கு குறைந்தபட்ச தண்டனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
ஆங்கிலேயர்கள் இந்தியாவில் ஆட்சி செய்த போது குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை கொடுப்பதற்காக 3 விதமான சட்டங்களை இயற்றி அமல்படுத்தி இருந்தனர்.
இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய ஆதாரச்சட்டம் ஆகிய பெயர்களில் அந்த சட்டங்கள் ஆங்கிலேயர்கள் காலத்தில் நடைமுறையில் இருந்தன. 1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்து ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறி சென்ற பிறகும் அவர்கள் இயற்றிய சட்டங்கள்தான் அமலில் இருந்தன.
பிரதமர் மோடி மத்தியில் ஆட்சி பொறுப்பு ஏற்றதும் நமது நாட்டின் குற்றவியல் நடைமுறைகளில் அதிரடி மாற்றங்களை செய்ய முடிவு செய்தார். ஆங்கிலேயர் காலத்து குற்றவியல் சட்டங்களுக்கு விடை கொடுத்து விட்டு தற்போதைய காலத்துக்கு ஏற்ப 3 புதிய குற்றவியல் சட்டங்களை கொண்டு வர தீர்மானித்தார்.
குறிப்பாக முக்கிய குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்கவும், போலீஸ் நிலையங்களை அணுகுவதற்கு எளிதான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் புதிய சட்டங்களில் வழிவகை செய்ய அறிவுறுத்தினார். அதன்படி 3 புதிய குற்றவியல் சட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த 3 சட்டங்களுக்கும் பாரதிய நியாய சம்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

புதிய சட்டங்கள் குறித்து சுமார் 3,200 பேரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு சீரமைப்பு பணிகள் நடந்தன. நிபுணர்கள் கருத்துபடி இந்திய தண்டனை சட்டத்தில் இருந்த 511 பிரிவுகள் பாரதிய நியாய சம்ஹிதா சட்டமாக மாற்றப்பட்டு குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி புதிய சட்டத்தில் 358 பிரிவுகள் மட்டுமே இருக்கும்.
என்றாலும் இதில் 21 புதிய குற்றங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 41 குற்றங்களுக்கு தண்டனை அதிகமாக்கப்பட்டுள்ளது. 82 குற்றங்களுக்கு அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 25 குற்றங்களுக்கு குறைந்தபட்ச தண்டனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
6 குற்றங்களுக்கு சமுதாய பணி செய்யும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 19 பிரிவுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன.
குற்றவியல் நடைமுறை சட்டத்தில் 484 பிரிவுகள் இருந்தன. அது தற்போது 531 பிரிவுகளுடன் பாரதிய நாகரிக் சுரக்ஷா என்று மாறியுள்ளது. 177 பிரிவுகளில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 9 கூடுதல் பிரிவுகள், 39 துணை பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. 14 சட்டப் பிரிவுகள் அகற்றப்பட்டுள்ளன.
அதுபோல இந்திய ஆதார சட்டம் 166 பிரிவுகளுடன் இருந்தது. தற்போது அது பாரதிய சாக்ஷிய அதினியம் என்ற பெயரில் 170 பிரிவுகளை கொண்டு இருக்கும். இந்த மாற்றங்களை நடைமுறைப்படுத்த நாடு முழுவதும் சுமார் 40 லட்சம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 650-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள சுமார் 16 ஆயிரம் போலீஸ் நிலையங்களில் இந்த புதிய சட்டங்கள் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டங்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். இதையடுத்து இந்த 3 புதிய குற்றவியல் சட்டங்களும் இன்று (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வந்து உள்ளன.
புதிய குற்றவியல் சட்டங்களின்படி, குற்ற வழக்குகளில் நீதிமன்ற விசாரணை நிறைவடைந்த நாளில் இருந்து 45 நாட்களுக்குள் தீா்ப்பு வழங்கப்பட வேண்டும். இதேபோல அந்த வழக்குகளில் முதல் நீதி மன்ற விசாரணை நடைபெற்ற நாளில் இருந்து 60 நாட்களுக்குள் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய வேண்டும்.
இந்தச் சட்டங்களின்படி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களின் வாக்குமூலத்தை அவா்களின் பாதுகாவலர்கள் முன்னிலையில் பெண் காவல் துறை அதிகாரி பெறுவாா். அந்தப் பெண்களிடம் மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனை அறிக்கைகள் ஒரு வாரத்துக்குள் வழங்கப்பட வேண்டும்.
மேலும், குழந்தை விற்பனை கொடிய குற்றமாக்கப்பட்டு, 18 வயதுக்குட்பட்ட சிறாரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் சிறைத் தண்டனை விதிக்க வழி வகுக்கப்பட்டுள்ளது.
பூஜ்ஜிய முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆா்.), காவல் துறையிடம் இணைய வழியில் புகாா்களைப் பதிவு செய்தல், குறுந்தகவல் போன்ற மின்னணு வழிகளில் அழைப்பாணைகள் அனுப்புதல், அனைத்து கொடிய குற்றங்களிலும் குற்றம் நடைபெற்ற இடங்களை கட்டாயம் காணொலி வழியில் பதிவு செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய நவீன நீதி அமைப்பை இந்தப் புதிய சட்டங்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் என்று கூறப்படுகிறது.
இதில் பூஜ்ஜிய முதல் தகவல் அறிக்கை மூலம், ஒரு குற்ற நிகழ்வு எங்கு நடைபெற்றதோ, அந்த இடத்தின் காவல் நிலையம் மட்டு மில்லாமல், எந்தவொரு காவல் நிலையத்திலும் வழக்குப் பதிவு செய்ய முடியும்.
புதிய சட்டங்களின் கீழ், பாதிக்கப்பட்டவா்கள் அல்லது புகாா்தாரா்கள் முதல் தகவல் அறிக்கையின் (எப்.ஐ.ஆா்.) இலவச நகலைப் பெறுவா். இது சட்ட நடவடிக்கையில் அவா்களின் பங்களிப்பை உறுதி செய்யும். அதேபோல ஏதேனும் வழக்கில் ஒரு நபா் கைது செய்யப்பட்டால், அவா் தனது நிலைமை பற்றி தனக்கு நெருங்கியவா்களுக்கு தகவல் தெரிவிக்க உரிமை உண்டு. இது அவருக்கான உடனடி ஆதரவையும் உதவியையும் உறுதி செய்யும்.
கைது விவரங்கள் காவல் நிலையங்கள் மற்றும் மாவட்டத் தலைமையகங்களுக்கு எளிதில் கிடைக்கும். அதேபோல, குற்றம்சாட்டப்பட்டவா் மற்றும் பாதிக்கப்பட்டவா் 14 நாட்களுக்குள் எப்.ஐ.ஆா். காவல் அறிக்கை, குற்றப்பத்திரிகை, வாக்குமூலங்கள் மற்றும் பிற ஆவணங்களின் நகல்களைப் பெற உரிமை உண்டு. இதன்மூலம், கைது செய்யப்பட்ட நபரின் குடும்பத்தினா் மற்றும் நண்பா்கள் முக்கியமான தகவல்களை எளிதாகப் பெறுவா்.
கொடூரமான குற்றங்கள் தொடா்பான வழக்கையும் அதன் விசாரணையையும் வலுப்படுத்த, தடயவியல் நிபுணா்கள் குற்றம் நடந்த இடங்களுக்குச் சென்று சாட்சியங்களைச் சேகரிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் சாட்சியங்கள் சிதைக்கப்படுவதைத் தடுக்க, குற்றம் நடந்த இடங்களில் சாட்சியங்களைச் சேகரிக்கும் நடைமுறை முழுவதும் கட்டாயமாக வீடியோ பதிவாக்க வேண்டும்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு முன்னுரிமை அளித்து, முதல் தகவல் அறிக்கை பதிவான இரண்டு மாதங்களுக்குள் விசாரணை முடிக்கப்படுவதை உறுதி செய்ய புதிய சட்டங்கள் வலியுறுத்துகின்றன. வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்த 90 நாட்களுக்குள் தங்கள் வழக்கின் முன்னேற்றம் குறித்த தொடா்ச்சியான அறிவிப்புகளைப் பெற பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்டவா்களுக்கு அனைத்து மருத்துவமனைகளிலும் இலவச முதலுதவி அல்லது மருத்துவ சிகிச்சைக்கு புதிய சட்டங்கள் உத்தரவாதம் அளிக்கின்றன. சவாலான காலங்களில் பாதிக்கப்பட்டவா்களின் நல்வாழ்வு மற்றும் மீட்புக்கு முன்னுரிமை அளித்து, அத்தியாவசிய மருத்துவ சேவை உடனடியாக கிடைப்பதை இது உறுதி செய்யும்.
பெண்களுக்கு எதிரான சில குற்றங்களுக்காக பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் நடைமுறை முடிந்தவரை ஒரு பெண் மாஜிஸ்திரேட்டால் மேற்கொள்ளப்பட வேண்டும். அவா் இல்லாத சூழலில் நோ்மையை உறுதிசெய்ய ஒரு பெண்ணின் முன்னிலையில் ஆண் மாஜிஸ்திரேட் அந்த நடைமுறையை மேற் கொண்டு, பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவான சூழலை உருவாக்கவேண்டும்.
பாலியல் வன்கொடுமை தொடா்பான குற்ற விசாரணையில் பாதிக்கப்பட்டவருக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குவதற்கும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம் ஆடியோ-வீடியோ முறையில் காவல்துறை மூலம் பதிவு செய்யப்படும்.
நீதிமன்ற அழைப்பாணைகள் இனிமேல் மின்னணு முறையில் வழங்கப்படலாம். வழக்கு விசாரணைகளில் தேவையற்ற காலதாமதத்தைத் தவிா்க்கவும் சரியான நேரத்தில் நீதி வழங்கப்படுவதை உறுதிசெய்யவும் அதிகபட்சம் 2 ஒத்திவைப்புகளை மட்டுமே நீதிமன்றங்கள் அனுமதிக்கும்.
சாட்சிகளின் பாதுகாப்பையும் ஒத்துழைப்பையும் உறுதி செய்வதற்கும் சட்ட நடவடிக்கைகளின் நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் சாட்சி பாதுகாப்பு திட்டத்தை அனைத்து மாநில அரசுகளும் செயல்படுத்த புதிய சட்டங்கள் கட்டாயப்படுத்துகின்றன.
சமத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில், 'பாலினம்' என்பதன் வரையறை இப்போது மாற்றுப் பாலினத்தவரையும் உள்ளடக்குகிறது.
சட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்துதல், ஆவணங்களை குறைத்தல் மற்றும் வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் இடையே முழுமையான தகவல் தொடா்புகளை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றுக்கு மேற்கண்ட நடைமுறைகள் வழிவகுக்கும்.






