search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nia"

    • அப்துல் ரகுமான், முஜிபுா் ரகுமான் இருவரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனா்.
    • பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    பூந்தமல்லி:

    பயங்கரவாத அமைப்புகளுக்கு இளைஞர்களை சேர்த்தது தொடர்பாக சென்னை, தஞ்சை, ஈரோடு உள்ளிட்ட 10 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். தஞ்சாவூரில் 'ஹிஷாப் உத்தகீர்' என்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துடன் தொடா்புடையவா்கள் என கருதப்படும் 4 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 5 மணி நேரத்திற்கு மேலாக சோதனை செய்து செல்போன்கள், ஹாா்ட் டிஸ்க்குகள், பென் டிரைவ்கள், சில புத்தகங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினா்.இதைத்தொடா்ந்து அப்துல் ரகுமான் (வயது 22), முஜிபுா் ரகுமான் (46), ஆகிய இருவரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனா்.

    பின்னர் பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டி, நேற்று முன்தினம் இரவு சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதியின் வீட்டிற்கு சென்று நீதிபதி இளவழகன் முன்பு கைது செய்யபட்ட 2 பேரையும் ஆஜர்படுத்தினர். இதையடுத்து ஜூலை 5-ந்தேதி வரை அவர்களை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • தேசிய புலனாய்வு முகமை டி.எஸ்.பி. குமரன் தலைமையிலான என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
    • புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியில் வசித்து வரும் அப்துல்கான் என்பவரது வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    சென்னை:

    நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்களை கண்டுபிடித்து கைது செய்ய மாநில போலீசாரும் பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் தமிழகத்திலும் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    இந்த நிலையில் தடை செய்யப்பட்ட 'ஹிஸ்ப் உத் தக்ரீர்' என்கிற பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக யூடியூப்பில் பிரசாரம் செய்து ஆட்களை திரட்டியதாக சென்னையில் கடந்த மே மாதம் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சென்னை மாநகர காவல்துறை சார்பில் சமூக வலைதளங்களை கண்காணிப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீசார் சமூக வலைதளங்களை கண்காணித்தபோதுதான் சென்னையில் ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த சிலர் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக ஹமீது உசேன் என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் யூடியூப் சேனல் வழியாக தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவாக பேசியது தெரிய வந்ததை தொடர்ந்து சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர்.

    இது தொடர்பாக ஹமீது உசேனின் தந்தை அகமது மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான் ஆகியோரும் அவர்களுக்கு உடந்தையாக, இருந்த மேலும் 3 பேரும் கைதானார்கள்.

    சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் சென்னையை சேர்ந்த இவர்கள் அனைவரும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஆட்களை திரட்டியது அம்பலமானது.

    கடந்த மாதம் 26-ந்தேதி சென்னை போலீசார் இந்த நடவடிக்கைகளை எடுத்திருந்த நிலையில் ஒரு மாதத்துக்கு பிறகு என்.ஐ.ஏ. என்று அழைக்கப்படும் தேசிய புலனாய்வு முகமை பிரிவு அதிகாரிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர்.

    இதுதொடர்பாக சென்னை உள்பட 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    சென்னையில் ராயப்பேட்டை, முடிச்சூர் ஆகிய 2 இடங்களில் இன்று காலை 5.30 மணியில் இருந்து போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர் மின் வாரிய காலனியில் கபீர் அகமது என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    தேசிய புலனாய்வு முகமை டி.எஸ்.பி. குமரன் தலைமையிலான என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். இதுபோன்று தமிழகத்தில் மற்ற மாவட்டங்களிலும் என்.ஐ.ஏ. சோதனை நடத்தி வருகிறது.

    தஞ்சை குழந்தையம்மாள் நகரில் உள்ள அகமது என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ. துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் தலைமையில் 4 அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    தஞ்சாவூர் மாவட்டம் மானாங்கோரையில் ஷேக் அலாவுதீன் என்பவரது வீட்டிலும், சாலியமங்கலத்தில் அப்துல்காதர், முஜிபுர் ரஹ்மான், காதர் மைதீன் ஆகிய 3 பேர் வீடுகளிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 5 வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

    தஞ்சை மாவட்டம் சாலியமங்கலத்தை சேர்ந்த அப்துல் காதர் வீட்டில் சோதனை நடைபெற்றது. அப்போது அங்கு அப்துல் காதரின் மகன் அப்துல் ரஹ்மான் இல்லாததால் அவரது செல்போன் சிக்னல் மூலம் அவர் இருப்பிடத்தை கண்டறிந்தனர்.

    அவர் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் இருப்பதை அறிந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டார்கள். அப்துல் ரஹ்மானிடமும் விசாரணை நடத்தினர். பின்பு அவரை தஞ்சைக்கு அழைத்து சென்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியில் வசித்து வரும் அப்துல்கான் என்பவரது வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    ஈரோடு பெரியார் நகர் கருப்பண்ணசாமி வீதியில் முகமது இசாக் என்பவர் வீட்டில் கொச்சியில் இருந்து வந்திருந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

    ஈரோடு பூந்துறை ரோடு, அசோக் நகர் 6-வது வீதியை சேர்ந்த சர்புதீன் என்பவர் வீட்டிலும் இன்று காலை சென்னையில் இருந்து வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் இந்த என்.ஐ.ஏ. சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சோதனை நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.


    • 9 பேர் உயிரிழந்த நிலையில், 38 பேர் காயமுற்றனர்.
    • உயிர்தப்பியவர்கள் சோகத்தில் இருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர்.

    ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் பக்தர்கள் பயணம் செய்த பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியவர்கள் சோகத்தில் இருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர்.

    உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் டெல்லி என பல மாநிலங்களை சேர்ந்த பயணிகள் சிவகோரியில் இருந்து காத்ராவுக்கு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது பேருந்தை வழிமறித்த பயங்கரவாதிகள், சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 9 பேர் உயிரிழந்த நிலையில், 38 பேர் காயமுற்றனர்.

     


    இந்த நிலையில், தாக்குதலில் உயிர் பிழைத்தவர்கள் அங்கு என்ன நடந்தது என்பதை அதிர்ச்சியுடன் கூறியுள்ளனர். உத்தர பிரதேசத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் வெர்மா கூறும் போது, "பயங்கரவாதியை பார்த்ததும், நான் தப்பிக்கப் போவதில்லை என்றே நினைத்தேன். இதைத் தொடர்ந்து பேருந்து ஓட்டுநரின் தலை ஸ்டீரிங் வீல் மீது சாய்ந்ததை பார்த்தேன். இதன் பிறகு பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்துவிட்டது," என்றார்.

    உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் தேவி பிரசாத், "பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்த போதிலும், பயங்கரவாதிகள் தொடர்ச்சியாக ஐந்து நிமிடங்களுக்கு துப்பாக்கி சூடு நடத்தினர். நாங்கள் எந்தவித அசைவும் இன்றி தரையிலேயே படுத்துக் கொண்டோம். அவர்கள் அங்கிருந்து கிளம்பும் வரை நாங்கள் உயிரிழந்தவர்களாக நினைத்துக் கொண்டோம்," என்று தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து உள்ளூர்வாசிகள் காயமுற்றவர்களை மீட்டு, உயிரிழந்த சடலங்களை பள்ளத்தாக்கில் இருந்து சாலைக்கு கொண்டுவந்தனர். இவர்களை தொடர்ந்து காவல் துறை, பாதுகாப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    பேருந்தின் பின் இருக்கையில் அமர்ந்து இருந்த ராஜத் ராம் வெர்மா, "முதலில் பேருந்தில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டது என்று நினைத்தேன். பிறகு, திடீரென பயங்கரவாதிகள் தாக்கியதாக யாரோ அழுதார்கள். உடனே என் மனைவி மற்றும் மகனை பேருந்து இருக்கையின் கீழ் மறைந்து கொள்ள செய்தேன். மறைந்து கொள்வதற்குள் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததால், என் மகனை என்னால் பிடிக்க முடியாமல் போனது. பிறகு மகன் குறித்து கேட்ட போது, அவன் உயிரிழந்துவிட்டதாக என் மனைவி தெரிவித்தார்," என்றார்.

    பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதில் உயிரிழந்தவர்களில் ராஜத் வெர்மாவின் 14 வயது மகன் அனுராக் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • தாக்குதலில் காயமடைந்த 33 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    காஷ்மீரில் உள்ள சிவகோரி கோவிலுக்கு பக்தர்கள் சிலர் ஒரு பேருந்தில் நேற்று மாலை சென்று கொண்டிருந்தனர். ரியாசி மாவட்டம் தெரியத் கிராமம் அருகே வந்து கொண்டிருந்தபோது, திடீரென பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது டிரைவர் நிலைத்தடுமாறியதில் அந்த பேருந்து, பெரிய பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த சம்பவத்தில் முதலில் 10 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த தாக்குதலில் காயமடைந்த 33 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    பக்தர்கள் சென்ற பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணையை மேற்கொண்டுள்ளது.

    சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்துள்ள என்ஐஏ குழுவினர் மற்றும் தடயவியல் குழுவினர் தாக்குதல் நடந்த இடத்தில் ஆதாரங்களை தேடி வருகின்றனர். மேலும் தடயங்களை சேகரித்தனர்.

    • பெங்களூரு உணவக குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் ஒருவரை என்.ஐ.ஏ. கைதுசெய்தது.
    • இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பெங்களூரு:

    பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபே என்ற உணவகத்தில் கடந்த மார்ச் ஒன்றாம் தேதி குண்டு வெடித்தது. இதில் 9 பேர் காயம் அடைந்தனர்.

    குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைதுசெய்ய கர்நாடகா அரசு இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு குண்டு வைத்ததாக சந்தேகப்படும் நபரின் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு, அதன் அடிப்படையில் குற்றவாளியை தீவிரமாக தேடினர். இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், பெங்களூரு உணவக குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் ஒருவரை என்.ஐ.ஏ. கைது செய்தது. இந்த வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் சோயப் அகமது மிர்சா என்ற சோட்டுவை கைதுசெய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

    • சென்னை சைபர் கிரைம் போலீசார் மத்திய பிரதேசத்தில் உள்ள போலீசாருக்கும், என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.
    • கொலை மிரட்டல் வந்ததை தொடர்ந்து பிரதமர் மோடிக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

    தற்போது 6-வது கட்டத்துக்கான தேர்தல் பிரசாரம் அனல் பறக்கும் வகையில் உள்ளது. இன்று மாலை 6 மணியுடன் 6-வது கட்டத்துக்கான தேர்தல் பிரசாரம் நிறைவு பெற இருக்கிறது.

    அடுத்து 7-வது கட்டத்துக்கான தேர்தல் ஜூன் 1-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் தீவிரமாகி வருகிறது. பிரதமர் மோடி இன்று 6-வது மற்றும் 7-வது கட்ட பிரசாரத்துக்காக பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலத்துக்கு செல்கிறார்.

    இந்த இரு மாநிலங்களிலும் 3 வாகன பேரணிகளில் பங்கேற்று அவர் பொதுக்கூட்டங்களில் பேச இருக்கிறார். இதைத் தொடர்ந்து நாளை முதல் உத்தரபிரதேசத்தில் பிரசாரத்தை தீவிரப்படுத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு திடீரென கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. மத்திய பிரதேசத்தில் இருந்து சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்துக்கு போனில் பேசிய மர்ம நபர் இந்த கொலை மிரட்டலை விடுத்துள்ளார்.

    புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகம் தென்மாநிலங்களுக்கு தலைமை அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. பலத்த பாதுகாப்புடன் இந்த அலுவலகம் இயங்கி வருகிறது. 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் இந்த அலுவலகத்தில் காவலுக்கு இருக்கிறார்கள்.

    நேற்றிரவு 9.30 மணிக்கு அந்த அலுவலகத்துக்கு போன் வந்தது. போனில் பேசிய நபர் இந்தியில் பேசினார். தான் யார் என்பதை தெரிவிக்காத அவர் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசினார்.

    அவர் கூறுகையில், "மோடி இப்போது வட மாநிலங்களில் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார். அவர் பிரசாரத்துக்காக வாகன பேரணியில் வரும்போது அவரை கொலை செய்ய நாங்கள் திட்டமிட்டு இருக்கிறோம்" என்று கூறினார். இவ்வாறு சொல்லி விட்டு அடுத்த வினாடியே அந்த மர்ம நபர் தொலைபேசி இணைப்பை துண்டித்து விட்டார்.

    பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த தகவல் வந்ததும் புரசைவாக்கம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பரபரப்பு அடைந்தனர். இதுதொடர்பாக தங்களது உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் என்.ஐ.ஏ. சார்பில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரை அழைத்து இது தொடர்பாக விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் கீழ் இயங்கும் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார்? என்று தெரியவில்லை. முதல்கட்ட விசாரணையில் அவர் மத்திய பிரதேசத்தில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் இருந்து பேசி இருப்பதை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்து உள்ளனர்.

    இது தொடர்பாக சென்னை சைபர் கிரைம் போலீசார் மத்திய பிரதேசத்தில் உள்ள போலீசாருக்கும், என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மத்திய பிரதேச போலீசாரும், என்.ஐ.ஏ. அதிகாரிகளும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    மத்திய பிரதேசத்தில் இருந்து பேசிய நபரை கண்டுபிடிக்க அவரது தொலைபேசி அழைப்பு வந்த இணைப்பை வைத்து அந்த சிக்னல் மூலம் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. அவர் பயன்படுத்திய சிம்கார்டு பற்றியும் தீவிர ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    கொலை மிரட்டல் வந்ததை தொடர்ந்து பிரதமர் மோடிக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அவரது வாகன பேரணி நாட்களில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள பாதுகாப்பு படையினர் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    • தடை செய்யப்பட்ட அமைப்பிடம் இருந்து நிதி பெற்றதாக கவர்னருக்கு புகார் வந்துள்ளது.
    • பா.ஜனதாவின் கட்டளையின்படி மேலும் ஒரு சதி- ஆம் ஆத்மி

    டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமின் கிடைக்காமல் உள்ளார்.

    இந்த நிலையில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் (Sikhs for Justice) இடம் இருந்து அரசியல் நிதி பெற்றதாக வந்துள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் என்ஐஏ விசாரணைக்கு டெல்லி மாநில துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்துள்ளார்.

    இது பா.ஜனதாவின் உத்தரவு அடிப்படையில் கெஜ்ரிவாலுக்கு எதிரான சதி என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

    கவர்னர் மாளிகை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், "கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி தேவேந்திர பால் புல்லர் விடுதலையை எளிதாக்குவதற்கான காலிஸ்தான் குரூப்பிடம் இருந்து 16 மில்லியன் அமெரிக்க டாலர் பெற்றதாக, கவர்னருக்கு புகார் வந்துள்ளது. புகார்தாரரால் சமர்ப்பிக்கப்பட்ட மின்னணு ஆதாரங்களுக்கு தடயவியல் பரிசோதனை உட்பட விசாரணை தேவைப்படுகிறது" என அதில் கூறப்பட்டுள்ளது.

    டெல்லியில் 1993-ம் ஆண்டு நடைபெற்ற குண்டு வெடிப்பில் 9 பேர் கொல்லப்பட்டனர். இந்த குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் தேவேந்திர பால் புல்லர். இவருக்கு தண்டனை வழங்கப்பட்டு அமிர்தசரஸ் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    தடா நீதிமன்றம் இவருக்கு 2001-ம் ஆண்டு மரண தண்டனை வழங்கியது. அதை உச்சநீதிமன்றம் வாழ்நாள் சிறைத்தண்டனையாக குறைத்தது.

    • முசாவிர் ஹூசைன் ஷாஜிப், அப்துல் மதின் தாஹா ஆகிய 2 பேரை என்.ஐ.ஏ கைது செய்தது.
    • திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜ் மற்றும் பழைய கட்டிடம் ஒன்றிற்கு அழைத்து சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் கடந்த மாதம் குண்டு வெடித்தது. இதில் 9 பேர் காயம் அடைந்தனர். குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய கர்நாடகா அரசு இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு குண்டு வைத்ததாக சந்தேகப்படும் நபரின் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு, அதன் அடிப்படையில் குற்றவாளியை தீவிரமாக தேடிவந்தனர்.

    இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். குண்டுவெடிப்புக்கு பிறகு மேற்கு வங்கத்தில் தலைமறைவாக இருந்த முசாவிர் ஹூசைன் ஷாஜிப், அப்துல் மதின் தாஹா ஆகிய 2 பேரை என்.ஐ.ஏ கைது செய்தது.

    இந்நிலையில் இவ்வழக்கில் கைதான அப்துல் மதின் தாஹா என்பவரை சென்னை திருவல்லிக்கேணிக்கு அழைத்து வந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜ் மற்றும் பழைய கட்டிடம் ஒன்றிற்கு அழைத்து சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பாஜக அரசு சிபிஐ, அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, வருமானவரித்துறை உள்ளிட்டவற்றை தவறாக பயன்படுத்தி வருகிறது
    • நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து விசாரணை அமைப்புகள் செயல்படுகிறது

    சிபிஐ, அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, வருமானவரித்துறை ஆகிய 4 மத்திய அமைப்புகளின் இயக்குநர்களை மாற்ற வேண்டும் எனக்கோரி மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் 5 எம்.பிக்கள் உள்ளடக்கிய 10 பேர் கொண்ட குழு தேர்தல் ஆணையத்தின் தலைமையகத்திற்கு வெளியே தர்ணா நடத்தினர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

    திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைவர் டெரெக் ஓ பிரையன் தலைமையில் டோலா சென், சாகரிகா கோஷ், சாகேத் கோகலே, சாந்தனு சென் ஆகிய எம்.பி.க்கள் குழு போராட்டத்தில் ஈடுபட்டது.

    பாஜக அரசு சிபிஐ, அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, வருமானவரித்துறை உள்ளிட்டவற்றை தவறாக பயன்படுத்தி வருகிறது என்ற தங்களது புகாரை தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் காங்கிரஸ் அளித்துள்ளது.

    நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து விசாரணை அமைப்புகள் செயல்படுகிறது. குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மத்திய விசாரணை அமைப்புகளை பாஜக பயன்படுத்துகிறது என்று போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் குற்றம் சாட்டினர்.  

    • என்ஐஏ அதிகாரிகள் ஏன் நள்ளிரவில் சோதனை நடத்தினார்கள்?
    • பா.ஜனதா என்ன நினைக்கிறது?. அவர்கள் ஒவ்வொரு பூத் ஏஜென்டையும் கைது செய்ய விரும்புகிறார்களா?

    மேற்கு வங்காளத்தின் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டு பூபதிநகர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த வழக்கை என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது. என்ஐஏ குழு இன்று காலை சோதனை நடத்தியபோது பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர்.

    இதில் அதிகாரி ஒருவர் காயம் அடைந்தார். இருந்தபோதிலும் பாலை சரண் மெய்தி மற்றும் மனோப்ரதா ஜனா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐந்து இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, உள்ளூர் மக்கள் அவர்களை தாக்க தொடங்கினர். உள்ளூர் காவல் நிலையத்தில் என்ஐஏ புகார் அளித்துள்ளனர்.

    இந்த நிலையில் என்ஐஏ பா.ஜனதாவுக்காக வேலை செய்வதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து மம்தா பானர்ஜி கூறியதாவது:-

    என்ஐஏ அதிகாரிகள் ஏன் நள்ளிரவில் சோதனை நடத்தினார்கள்? அவர்களுக்கு போலீஸ் அனுமதி கொடுத்தது யார்? நள்ளிரவில் வேறு யாராவது அந்த இடத்திற்குச் சென்றிருந்தால், உள்ளூர்வாசிகள் எப்படி கையாண்டு இருப்பார்கள். தேர்தலுக்கு முன்னதாக அவர்கள் ஏன் கைது செய்தார்கள்?.

    பா.ஜனதா என்ன நினைக்கிறது?. அவர்கள் ஒவ்வொரு பூத் ஏஜென்டையும் கைது செய்ய விரும்புகிறார்களா? என்ஐஏ-யின் உரிமை என்ன? பா.ஜனதாவுக்கு ஆதரவாக அனைத்தையும் செய்து வருகிறது. இந்த பா.ஜனதாவின் மோசமான அரசியலுக்கு எதிராக ஒட்டுமொத்த உலகமும் போராட வேண்டும் என நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

    இவ்வாறு பா.ஜனதா தெரிவித்துள்ளது.

    • பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் மார்ச் 1-ந்தேதி குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது.
    • பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அளிக்கப்படும் - என்.ஐ.ஏ

    பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் மார்ச் 1-ந்தேதி நடைபெற்ற குண்டுவெடிப்பு குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். அவர்களுடன் இணைந்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

    பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக துப்பு கொடுப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை அளிக்கப்படும் என என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், மூன்று மாநிலங்களில் நடத்திய சோதனையின் எதிரொலியாக பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான முசாமில் செரிப் ஹுசைன் கைது செய்யப்பட்டார் என என்.ஐ.ஏ. தெரிவித்துள்ளது.

    இதனிடையே கடந்த வாரம் ஷிவமோகா பகுதியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சோதனை நடத்தியதில் 2 இளைஞர்களை கைது செய்தனர்.

    இந்நிலையில் அவர்களின் செல்போன்கள் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது பாஜக நிர்வாகியான சாய் பிரசாத் என்பவர் உடன் இருவரும் அடிக்கடி தொடர்பில் இருந்து வந்தது தெரிய வந்துள்ளது.

    இதனையடுத்து, பெங்களூரு ராமேஸ்வரம் கபே உணவக குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக பாஜக நிர்வாகி சாய் பிரசாத் என்பவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை, சிவமொக்கா, பெங்களூரு நகரங்களில் பல்வேறு இடங்களில் 2 நாட்களுக்கு முன்பு அதிரடி சோதனை நடத்தினர்.
    • முக்கிய குற்றவாளிகள் 2 பேரும் பல்வேறு தோற்றங்களில் இருக்கும் புகைப்படங்களை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

    பெங்களூரு:

    பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த 1-ந்தேதி 2 குண்டுகள் வெடித்தன. இதில் ஊழியர்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமேஸ்வரம் கபே ஓட்டலில் சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளியை சேர்ந்த முசபீர் உசேன் சாஜீப் என்பவர் தான் குண்டு வைத்ததாக கருதப்படுகிறது. இவர், அப்துல் மதீன் அகமது தாகா என்பவருடன் குண்டுவெடிப்பு நிகழ்த்துவதற்கு முன்பு 2 மாதங்கள் சென்னையில் தங்கி இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை, சிவமொக்கா, பெங்களூரு நகரங்களில் பல்வேறு இடங்களில் 2 நாட்களுக்கு முன்பு அதிரடி சோதனை நடத்தினர். குண்டுவெடிப்பு சம்பவத்தில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளுக்கு உதவியதாக கூறி நேற்று முன்தினம் முஜாமில் ஷெரீப் என்பவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.

    முஜாமில் ஷெரீப் கடந்த 16 ஆண்டுகளாக பெங்களூருவில் வசித்து வருகிறார். பசவேஸ்வரா நகர் பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்த அவர், கடந்த ஓராண்டுக்கு முன்பு வேறு ஓட்டலுக்கு வேலைக்கு சென்றார்.

    முஜாமில் ஷெரீப், ஓட்டலில் வேலை செய்தபடி குண்டுவெடிப்புக்கு தேவையான பொருட்களை கூரியர் மூலம் சப்ளை செய்து உதவி வந்தது விசாரணையில் தெரிந்தது.

    இந்த நிலையில் பெங்களூரு ஓட்டல் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையதாக தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளிகளான முசபீர் உசேன் சாஜீப், அப்துல் மதீன் அகமது தாகா ஆகிய 2 பேரின் புகைப்படங்களையும் என்.ஐ.ஏ. நேற்று வெளியிட்டுள்ளது. அதாவது, முக்கிய குற்றவாளிகள் 2 பேரும் பல்வேறு தோற்றங்களில் இருக்கும் புகைப்படங்களை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

    அத்துடன், அவர்கள் 2 பேரும் தங்களை பற்றிய விவரங்களை மறைத்து போலியான பெயர்களுடன் சாதாரண மக்கள் போன்று வசித்து வந்ததாகவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இருவரையும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்து அவர்களை பற்றிய துப்பு கொடுப்பவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதம் மொத்தம் ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் என்.ஐ.ஏ. அறிவித்துள்ளது. மேலும் அவர்கள் 2 பேரையும் தேடும் பணியை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். கைதான முஜாமில் ஷெரீப் அளிக்கும் தகவல் அடிப்படையில் 2 பேரையும் பிடிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    ×