

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை குண்டு வெடித்தது. இதில் 9 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய கர்நாடகா அரசு தனிப்படைகள் அமைத்துள்ளது. தனிப்படைகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன. குண்டு வைத்ததாக சந்தேகப்படும் நபரின் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு, அதன் அடிப்படையில் குற்றவாளியை தீவிரமாக தேடிவருகிறது.
குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய யாரும் தப்ப முடியாது என சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார். மேலும், இதை அரசியலாக்கக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.
கர்நாடக மாநில போலீசாரின் தனிப்படை விசாரணை நடத்தி வரும் நிலையில், பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கை மத்திய உள்துறை அமைச்சகம் என்.ஐ.ஏ.-யிடம் ஒப்படைத்துள்ளது. என்.ஐ.ஏ. குண்டு வெடிப்பு தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இதுவரை நடைபெற்றுள்ள விசாரணைகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் கர்நாடகா மாநில அரசால் அமைக்கப்பட்டுள்ள தனிப்படை என்.ஐ.ஏ.-யிடம் ஒப்படைக்கும்.