என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MHA"

    • பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் அதிகமானோர் உயிரிழந்தது கரூரில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது.
    • இதனை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    புதுடெல்லி:

    கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்தார். பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியது.

    இதனை தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கரூரில் கூட்ட நெரிசலில் நிகழ்ந்த உயிரிழப்பு தொடர்பாக தமிழக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது.

    விபத்துக்கான சூழ்நிலை மற்றும் எடுக்கப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி தமிழக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

    • ஆயுதப்படைகள் சிறப்பு சட்டம் மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சல பிரதேசத்தில் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
    • அக்டோபர் 1, 2025 முதல் 6 மாத காலத்திற்கு இந்தச் சட்டம் நடைமுறையில் இருக்கும்.

    புதுடெல்லி:

    வடகிழக்கு மாநிலங்களில் பயங்கரவாதிகள், உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளதால் அங்கு மத்திய அரசின் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டம் நடைமுறையில் உள்ளது. இந்தச் சட்டம் மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம் மாநிலங்களில் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

    பதற்றம் மிகுந்த பகுதிகளாக அறிவிக்கப்படும் இடங்களில் நீதிமன்றம் அனுமதியின்றி தேடுதல், கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறப்பு அதிகாரங்கள் இந்த ஆயுதப்படைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டம் மேலும் 6 மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    நம்சாய் மாவட்டத்தில் உள்ள திராப், சாங்லாங், லாங்டிங் மாவட்டங்கள், நம்சாய் மாவட்டத்தில் நம்சாய், மகாதேவ்பூர், சௌகாம் ஆகிய காவல் நிலையங்களின் அதிகார வரம்புக்குள் வரும் பகுதிகளில் இந்தச் சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அக்டோபர் 1, 2025 முதல் 6 மாத காலத்திற்கு இந்தச் சட்டம் நடைமுறையில் இருக்கும், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமையை மீண்டும் ஆய்வு செய்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த நீட்டிப்பு, மார்ச் 31, 2026 வரை அமலில் இருக்கும் என்று கூறி உள்ளது.

    • இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.
    • இலங்கை தமிழர்கள் இனி சட்டவிரோத குடியேறிகள் அல்ல.

    புதுடெல்லி:

    போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையை விட்டு வெளியேறி இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளில் தஞ்சம் புகுந்தவர்களில் பெரும்பான்மையோர் தமிழ் பேசும் இனத்தைச் சேர்ந்தவர்கள்.

    இலங்கை தமிழர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். இலங்கை தமிழர்கள் சுதந்திரமாக இந்தியாவில் வாழ வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்நிலையில், 2015 ஜனவரி 9-ம் தேதிக்கு முன்பு உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்து, அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் சட்டப் பூர்வமாக தங்குவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    இலங்கை தமிழர்கள் இனி சட்டவிரோத குடியேறிகள் அல்ல. சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் உள்ள தண்டனை விதிகளில் இருந்தும் இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது.

    • தமிழகத்திற்கு வெள்ளத்தடுப்பு திட்டத்திற்காக முதல் தவணையாக இதே தொகை வழங்கப்பட்டுள்ளது.
    • ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு 493.60 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    மிச்சாங் புயல் மழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக சென்னையில் மக்களின் இயல்பு வாழ்க்கை 2 நாட்கள் முடங்கும் வகையில் மழை பாதிப்பு ஏற்பட்டது.

    லட்சக்கணக்கான வீடுகள் இன்னும் தண்ணீருக்குள் உள்ளன. 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் நேரடியாக பாதிப்பை சந்தித்துள்ளனர். 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கி பழுதடைந்துள்ளன.

    பால், குடிநீர் பற்றாக் குறையால் மக்களிடம் கடும் தவிப்பு நிலவுகிறது. வாகனப் போக்குவரத்து இன்று முதல் 90 சதவீதம் இயங்கத் தொடங்கியுள்ளது.

    பாதிப்படைந்த பல பகுதிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று நிவாரண உதவிகளை மக்களுக்கு வழங்கினார். வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை மீட்க அரசு எந்திரம் முடுக்கி விடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தமிழ்நாட்டில் புயல் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை சீர் செய்ய இடைக்கால நிவாரணமாக ரூ.5060 கோடி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்.

    அதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மிக அதிகமான மழை பெய்ததாகவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

    சாலைகள், பாலங்கள், பொது கட்டிடங்கள் என பல்வேறு உட்கட்டமைப்புகள் சேதம் அடைந்துள்ளதாகவும், லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

    எனவே தமிழ்நாட்டிற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5060 கோடி தொகையை உடனே வழங்க வேண்டும் என்று அதில் உதவி கேட்டிருந்தார்.

    இந்த கடிதத்தை டி.ஆர்.பாலு எம்.பி. இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வழங்கினார். அப்போது பிரதமர் மோடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு புயல் சேத விவரங்களை கேட்டறிந்தார்.

    இதைத்தொடர்ந்து தமிழகத்துக்கு முதல் கட்டமாக ரூ.450 கோடி வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டார்.

    மாநில பேரிடர் நிவாரண நிதியின் 2-வது தவணையில் மத்திய அரசின் பங்கான ரூ.450 கோடியை முன்கூட்டியே மத்திய அரசு விடுவித்துள்ளது.

    இதுதொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா எக்ஸ் வலைதளத்தில் கூறி இருப்பதாவது:-

    மிச்சாங் புயலால் தமிழ்நாடு, ஆந்திரா பாதிக்கப்பட்டுள்ளன. பாதிப்புகள் வேறுபட்டாலும் இரு மாநிலங்களிலும் பல பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன. பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாநில அரசுகளுக்கு உதவ பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். மாநில பேரிடர் நிவாரண நிதியின் 2-வது தவணை தொகையை முன்கூட்டியே வழங்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழகத்துக்கு ரூ.450 கோடியும், ஆந்திராவுக்கு ரூ.493.60 கோடியும் வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த இரு மாநிலங்களுக்கும் ஏற்கனவே முதல் தவணை தொகை வழங்கப்பட்டு உள்ளது. புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வர நான் பிரார்த்திக்கிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் நாங்கள் உங்களுடன் நிற்கிறோம்.

    விரைவில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இதேபோல் முதல் முறையாக சென்னைக்கு ஒருங்கிணைந்த நகர்ப்புற வெள்ள தடுப்பு திட்டத்திற்கு ரூ.561.29 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அமித்ஷா தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    சென்னை கடந்த 8 ஆண்டுகளில் 3-வது பெரிய வெள்ளத்தை எதிர் கொண்டு உள்ளது. அதிக மழைப்பொழிவு ஏற்பட்டு, திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    நகர்ப்புற வெள்ள தடுப்பு திட்டத்திற்கு தேசிய பேரிடர் தடுப்பு நிதியத்தின் கீழ் சென்னைக்கு ஒருங்கிணைந்த நகர்ப்புற வெள்ள நடவடிக்கைகளுக்கு ரூ.561.29 கோடி ஒதுக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

    இதில் மத்திய அரசு உதவியாக ரூ.500 கோடி வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் சென்னை மழை வெள்ளத்தை சமாளிக்க கூடியதாக மாற உதவும். நகர்ப்புற வெள்ளத் தடுப்பு முயற்சியில் இது முதன்மையானது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    மாநில பேரிடர் நிதியின் கீழ் ரூ.450 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை நகர்புற வெள்ள தடுப்பு நிதியாக ரூ.561.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் மத்திய அரசு ரூ.1011.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குண்டு வெடிப்பில் 9 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை.
    • கர்நாடகா அரசு தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தது.

    பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை குண்டு வெடித்தது. இதில் 9 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய கர்நாடகா அரசு தனிப்படைகள் அமைத்துள்ளது. தனிப்படைகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன. குண்டு வைத்ததாக சந்தேகப்படும் நபரின் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு, அதன் அடிப்படையில் குற்றவாளியை தீவிரமாக தேடிவருகிறது.

    குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய யாரும் தப்ப முடியாது என சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார். மேலும், இதை அரசியலாக்கக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.

    கர்நாடக மாநில போலீசாரின் தனிப்படை விசாரணை நடத்தி வரும் நிலையில், பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கை மத்திய உள்துறை அமைச்சகம் என்.ஐ.ஏ.-யிடம் ஒப்படைத்துள்ளது. என்.ஐ.ஏ. குண்டு வெடிப்பு தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து இதுவரை நடைபெற்றுள்ள விசாரணைகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் கர்நாடகா மாநில அரசால் அமைக்கப்பட்டுள்ள தனிப்படை என்.ஐ.ஏ.-யிடம் ஒப்படைக்கும்.

    • நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு சவால் விடும் வகையில்,
    • செயல்படுவது கண்டறியப்பட்டால், சட்டப்பூர்வ கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்- அமித் ஷா

    ஜம்மு-காஷ்மீரில் இயங்கி வந்த ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி (தீவிரவாத குற்றச்செயல் நடவடிக்கை குற்றச்சாட்டில் ஜெயிலில் இருக்கும் யாசின் மாலிக் தலைமையில் இயங்கி வந்த அமைப்பு), காஷ்மீர் மக்கள் விடுதலை லீக் மற்றும் இந்த அமைப்பில் இருந்து பிரிந்து செயல்படும் நான்கு அமைப்புகள் ஆகியவற்றை தடை செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

    மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, "நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு சவால் விடும் வகையில் செயல்படுவது கண்டறியப்பட்டால், சட்டப்பூர்வ கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்" எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், "ஜம்மு-காஷ்மீர் மக்கள் லீக் (முக்தார் அகமகது வாஜா), ஜம்மு-காஷ்மீர் மக்கள் லீக் (பாஷீர் அகமது டோட்டா), ஜம்மு-காஷ்மீர் மக்கள் லீக் (குலாம் முகமது கான்), யாகூப் ஷேக் தலைமையிலான ஜம்மு-காஷ்மீர் மக்கள் லீக் (அஜிஸ் ஷேக்) ஆகிய அமைப்புகளுக்கு தனித்தனியாக தடை செய்யப்பட்டதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    மேலும், முகமது யாசின் மாலிக் தலைமையிலான ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணி சட்டவிரோதமான அமைப்பு என மேலும் ஐந்து வருடத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என அமித் தெரிவித்துள்ளார்.

    பயங்கரவாதம் மூலம் ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாதத்தை ஊக்குவித்த காரணத்திற்கான ஜம்மு-காஷ்மீர் மக்கள் விடுதலை லீக் அமைப்புக்கு ஐந்து வருட தடைவிதிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்களையும், அமைப்புகளையும் மோடி அரசு காப்பாற்றாது" எனத் தெரிவித்துள்ளார்.

    • பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதால் மத்திய அரசு இந்த நடவடிக்கை.
    • பயங்கரவாத அமைப்புகளில் சேர இளைஞர்களை ஊக்கப்படுத்தியது.

    ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதால் மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் இதனை பயங்கரவாத அமைப்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. சமூக வலைதளங்கள் மூலமாக பயங்கரவாதத்தை பரப்பியது தெரியவந்ததால் ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்புக்கு மத்திய உள்துறை தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்படுகிறது. இந்த அமைப்பு பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளது."

    "பயங்கரவாத அமைப்புகளில் சேர இளைஞர்களை ஊக்கப்படுத்துவது மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டுவதில் இந்த அமைப்பு ஈடுபட்டது. இந்த அமைப்பு தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. பயங்கரவாத சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கி நாட்டை பாதுகாப்பதில் மோடி அரசு உறுதியாக உள்ளது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஏற்கனவே பல்வேறு உலக நாடுகள் ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்பை தடை செய்திருந்த நிலையில் தற்போது இந்தியாவிலும் இந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்பிற்கு ஆள் சேர்த்ததாக தமிழகத்தை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

    தமிழகத்தை சேர்ந்த 10 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்திருந்த நிலையில் ஹிஸ்ப் உத் தஹிரிர் அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • விசாரணைக் கைதிகள் குற்றத்திற்கான தண்டனையில் பாதியளவு அனுபவித்திருந்தால் ஜாமின் வழங்க வேண்டும்.
    • தொடர்புடைய நீதிமன்றத்தில் சிறை அதிகாரிகள் கைதிகளை விடுவிக்க அணுக வேண்டும்.

    மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படாத குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட விசாரணைக் கைதி, அந்தக் குற்றத்திற்காக குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச சிறைத் தண்டனையில் பாதியை ஏற்கனவே அனுபவித்திருந்தால், அவரை விடுவிக்க வேண்டும் என்பதை அனைத்து மாநிலங்களும் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதனால் சிறைகளில் கூட்ட நெரிசல் குறையும் எனத் தெரிவித்துள்ளது.

    அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் சிறைச்சாலை இயக்குநர் ஜெனரல்களுக்கு அனுப்பிய கடிதத்தில், பாரதீய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023 (BNSS) இன் பிரிவு 479-ன் விதிகளின் கீழ், அத்தகைய தகுதியுள்ள கைதிகளை விடுவிக்க சிறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    BNSS-ன் பிரிவு 479, ஒரு நபர் எந்தவொரு சட்டத்தின் கீழும் ஒரு குற்றத்தின் விசாரணை அல்லது விசாரணையின் போது (அந்தச் சட்டத்தின் கீழ் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றமாக குறிப்பிடப்படாத குற்றமாக இருக்கும் பட்சததில்) அந்தக் குற்றத்திற்காகக் குறிப்பிடப்பட்ட அதிகபட்ச சிறைத்தண்டனைக் காலத்தில் பாதி காலம் வரை காவலில் வைக்கப்பட்டிருந்தால், அவர் நீதிமன்றத்தால் ஜாமினில் விடுவிக்கப்படுவார் என்று கூறுகிறது.

    முதல் முறை குற்றவாளிகள் விஷயத்தில், அந்த குற்றத்திற்காக விதிக்கப்பட்ட அதிகபட்ச சிறைத்தண்டனைக் காலத்தில் மூன்றில் ஒரு பங்கு வரை காவலில் இருந்திருந்தால், அத்தகைய கைதிகள் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்படுவார்கள்.

    மேலும், BNSS-ன் பிரிவு 479 (3) மேற்கூறிய விசாரணைக் கைதிகளை ஜாமினில்/பிணையில் விடுவிப்பதற்காக சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்ய சிறை கண்காணிப்பாளருக்கு ஒரு குறிப்பிட்ட பொறுப்பை வழங்குகிறது.

    இந்த விவகாரம் தொடர்பாக அக்டோபர் 16, 2024 அன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒரு ஆலோசனையை வெளியிட்டதாகவும், தகுதியுள்ள அனைத்து கைதிகளுக்கும் BNSS-ன் பிரிவு 479-ன் விதிகளின் பலனை வழங்கவும், அதன்படி அவர்களின் ஜாமின் விண்ணப்பங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் கேட்டுக் கொண்டதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ×