என் மலர்
நீங்கள் தேடியது "மதுரை ஐகோர்ட்"
- எனக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.
- மனுதாரரை வருகிற 22-ந்தேதி வரை கைது செய்யக்கூடாது.
மதுரை:
நெல்லை அலவந்தான் குளம் பகுதியைச் சேர்ந்த செல்வின் அந்தோணி, தனக்கு முன் ஜாமின் வழங்கக் கோரி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நெல்லை மாவட்டம் மானூர் பகுதியைச் சேர்ந்த சிலர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தமிழக முதலமைச்சருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் வீடியோ ஒன்றை பதிவு ஏற்றம் செய்திருந்தனர். அந்த வீடியோ எனக்கும் வந்திருந்தது. இந்த சர்ச்சைக்குரிய மிரட்டல் வீடியோவை எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான் டேக் செய்து வைத்திருந்தேன். இதுகுறித்து மானூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் என்னையும் சேர்த்துள்ளனர். அந்த வீடியோவை நான் எடிட் செய்து பதிவேற்றம் செய்யவில்லை. எனக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே எனக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல்கள் எஸ்.சதீஷ், பி.மோனிடா கேத்தரின் ஆகியோர் ஆஜராகி, இந்த வீடியோ பதிவேற்றம் செய்த நடவடிக்கைக்கும் மனுதாரருக்கு எந்த தொடர்பும் இல்லை. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு மனுதாரர் வழங்குவார். மேலும் கோர்ட்டு விதிக்கும் நிபந்தனைகளுக்கும் மனுதாரர் கட்டுப்படுவார் எனவே அவருக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் என வாதாடினர்.
அதைத் தொடர்ந்து, மனுதாரரை வருகிற 22-ந்தேதி வரை கைது செய்யக்கூடாது. இந்த மனு குறித்து மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 22-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
- இடைத்தரகர்கள், சிறுநீரத்திற்கு 5 முதல் 10 லட்சம் வரை வழங்கி அவர்களை ஒப்புக்கொள்ள செய்கின்றனர்.
- தமிழக அரசு இந்த விவகாரத்தில் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
மதுரை:
பரமக்குடியை சேர்ந்த சத்தீஸ்வரன் மதுரை ஐகோர்ட்டு அமர்வில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ள சட்டவிரோத சிறுநீரக விற்பனை மோசடி மிகவும் தீவிரமானது.
பள்ளிப்பாளையத்தில் உள்ள விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் சாய ஆலைகளில் வேலை செய்யும் ஏழைத் தொழிலாளர்களை தரகர்கள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகளின் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட வலையமைப்பால் சுரண்டப்பட்டு, சிறுநீரக தானம் செய்பவர்களாக சட்டவிரோதமாகப் பயன்படுத்தி உள்ளனர்.
இடைத்தரகர்கள், சிறுநீரத்திற்கு 5 முதல் 10 லட்சம் வரை வழங்கி அவர்களை ஒப்புக்கொள்ள செய்கின்றனர். இது 1994 மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்று அறுவை சிகிச்சை சட்டத்திற்கு எதிரானது. ஆனால் தமிழக அரசு இந்த விவகாரத்தில் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும் இந்த விவகாரத்தில் அரசியல் கட்சியினரின் தொடர்பு உள்ளதால் இந்த வழக்கை மாநில காவல்துறை விசாரணை செய்தால் விசாரணை நேர்மையாக இருக்காது, எனவே இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், அருள் முருகன் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், ஏன் இதுவரை குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட வில்லை? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு அரசு தரப்பில், "இது போன்ற வழக்குகளில் புகார் அளிக்கப்பட்டால் மட்டுமே குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என நீதிமன்ற உத்தரவு உள்ளது" என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், "இந்த வழக்கில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அது தெரியவந்த பின்னர் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். வழக்கு பதிவு செய்வதில் உரிய வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்பட வேண்டும்" என குறிப்பிட்டனர்.
தொடர்ந்து, "பள்ளிப்பாளையம் கிட்னி விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக உடனடியாக வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டனர். தொடர்ந்து, ஐ.பி.எஸ். அலுவலர் தலைமையில், சிறப்பு விசாரணை குழுவை அமைப்பது தொடர்பாக டி.ஜி.பி.யிடம் விளக்கம் பெற்று நீதிமன்றத்தில் தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கை பிற்பகல் 3 மணிக்கு ஒத்திவைத்தனர்.
- பாலியல் துன்புறுத்தல்கள் குழந்தைகளை ஒட்டுமொத்தமாக பாதிக்கிறது.
- பாலியல் குற்றங்களில் இருந்து மாணவர்களை பாதுகாப்பது முக்கியமானது.
மதுரையை சேர்ந்த வெரோனிகா மேரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் பள்ளி மாணவிகளை ஆசிரியர்களே பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளன. இதனால் மாணவிகள் மனரீதியாக, உடல் ரீதியாகவும் பாதிக்கப் படுகின்றனர். இதை தடுக்க நடமாடும் மனநல ஆலோசனை மையங்கள் அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் முறையாக செயல்பட உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்வு விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், கலாசாரம், தொழில்நுட்ப மாற்றம், பொருளாதார வளர்ச்சி மற்றும் பல்வேறு காரணங்களினால் சமூகத்தில் சில தீமைகள் ஏற்படுகின்றன. இதில் கல்வி நிறுவனங்களில் நடக்கும் பாலியல் துன்புறுத்தலும் அடங்கும். இது கவனிக்கப்படாமல் உள்ளது. பாலியல் துன்புறுத்தல்கள் குழந்தைகளை ஒட்டுமொத்தமாக பாதிக்கின்றது. எனவே கடும் நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.
பள்ளிகளில் பாலியல் குற்றங்களில் இருந்து மாணவர்களை பாதுகாப்பது முக்கியமானது. பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் அளிக்க வசதியாக பாடப்புத்தகங்களில் '14417' என்ற எண் அச்சிடப்பட்டுள்ளது. இந்த எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளித்தால், அவர்களுக்கு உதவ ஒரு குழுவும் செயல்படுகிறது என சமீபத்தில் அரசு அறிவித்தது. அரசின் இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது.
அதே சமயம் பள்ளிகளில் நடமாடும் ஆலோசனை மையங்கள் செயல்படாத விவகாரத்தை அப்படியே விட்டுவிட முடியாது. புகார் அளிக்க வசதிகள் அனைத்து பள்ளிகளிலும் நடமாடும் ஆலோசனை மையங்கள் செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலித்து அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் பாலியல் குற்றங்களை தவிர்க்கும் வகையில் கொள்கைகளை உருவாக்கி அவற்றை ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
ஒவ்வொரு பள்ளியிலும் புகார் தெரிவிப்பதற்கும், தீர்வு காண்பதற்கும் உரிய நடைமுறையை ஏற்படுத்தி, அதை மாணவர்களுக்கு தெரியப்படுத்துங்கள். இதற்காக குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும். இந்த குழு மனநல ஆலோசனை மையங்களின் செயல்பாட்டை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- திருக்குறளை கற்பித்து, மாணவர்களுக்கு ஒழுக்கத்தை அறிமுகப்படுத்துவது காலத்தின் தேவை.
- 108 அதிகாரங்களை சேர்க்கும் அரசாணையை 3 மாதத்தில் நிறைவேற்ற வேண்டும்.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பாலில் இடம் பெற்றிருக்கும் 108 அதிகாரங்களில் உள்ள குறள்களை 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் படிக்க, கடந்த 2017-ம் ஆண்டில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டது. அதை கண்டிப்பாக அமல்படுத்தி, தேர்வில் இதுதொடர்பான கேள்விகள் இடம் பெறும் வகையில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாஸ்கரன், 6-ம் வகுப்பில் இருந்து பிளஸ்-2 வரையிலான வகுப்புகளில் திருக்குறளின் 108 அதிகாரங்களை சேர்க்கும் பணிகள் நடைபெறுகின்றன, திருக்குறள் சம்பந்தப்பட்ட கேள்விகளும் தேர்வில் இடம் பெற்றுள்ளன என்று தெரிவித்தார். அதுபற்றி விவரங்களையும் நீதிபதிகளிடம் சமர்ப்பித்தார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: திருக்குறள், தனிமனித மற்றும் பொது வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானது. அதனால்தான் உலக அளவில் திருக்குறள் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது. கற்பழிப்பு, பொருளாதார மோசடி, பேராசை, மதுப்பழக்கம், சகிப்பின்மை, நேர்மை இன்மை, சமத்துவம் இன்மை, பெரியவர்களுக்கு அவமரியாதை, குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, மத துவேஷம் போன்ற பல பிரச்சினைகளை தற்போது உலகம் எதிர் கொள்கிறது.
இது போன்ற தனிப்பட்ட பிரச்சினைகள் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேற்கண்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் திருக்குறள் தீர்வை வழங்கி இருக்கிறது. எனவே, சகிப்புத்தன்மையும் நல்லிணக்கமும் கொண்ட சமுதாயத்தை உருவாக்க மாணவர்களுக்கு திருக்குறளை கற்பிப்பதன் மூலம் ஒழுக்க நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துவது காலத்தின் தேவை. எனவே திருக்குறளின் அந்த 108 அதிகாரங்களை பாடத்திட்டத்தில் சேர்க்கும் அரசாணையை 3 மாதத்தில் முழுமையாக நிறைவேற்றி, அதன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- சித்தா டாக்டர்களுக்கான திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.
- அரசு சித்தா டாக்டர்களும், அனைத்து பலன்களையும் பெற தகுதியானவர்கள்.
ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, கரூர், திருச்சி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த அரசு சித்தா டாக்டர்கள் பலர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருந்ததாவது:- தமிழக சுகாதார துறையின் கீழ் மாவட்ட தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், கிராமப்புற சுகாதார நிலையங்கள், சித்தா மற்றும் ஓமியோபதி போன்ற இந்திய பாரம்பரிய மருத்துவ சிகிச்சை மையங்கள் அனைத்திலும் சித்தா டாக்டர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.
அலோபதி டாக்டர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறையை பின்பற்றித்தான் சித்தா டாக்டர்களையும் அரசு தேர்ந்தெடுத்து பணியமர்த்துகிறது. ஆனால் பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பலன்களை சித்தா டாக்டர்களுக்கு வழங்குவதில்லை. எனவே அரசாணையின்படி அலோபதி மற்றும் பல் டாக்டர்களை போல சித்தா டாக்டர்களுக்கும் பதவி உயர்வு மற்றும் பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர், அதிக எண்ணிக்கையில் உள்ள அலோபதி டாக்டர்களை போல், குறைந்த எண்ணிக்கையில் உள்ள சித்தா டாக்டர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் நடைமுறைகளை செயல்படுத்த இயலாது என்று தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது: மனுதாரர்கள் சித்த மருத்துவப்பிரிவு அரசு டாக்டர்கள்தான், அவர்களும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சையை அளிக்கின்றனர். அதனால் அவர்களும் அனைத்து பலன்களையும் பெற தகுதியானவர்கள் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.
அந்த வகையில் மனுதாரர்கள் தங்களது கோரிக்கை குறித்து ஏற்கனவே மனு அளித்துள்ளனர், அலோபதி டாக்டர்கள் பதவி உயர்வு அரசாணை நேரடியாக மனுதாரர்களுக்கு பொருந்தாது என்றாலும், இவர்களும் பலன் அடையும் வகையில் உரிய செயல்திட்டங்களை நிறைவேற்றும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.
அதனால் இதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ஒரு கூட்டத்தை கூட்டி அதில் பங்கேற்குமாறு மனுதாரர்களையும் அழைக்கலாம். உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் சித்தா டாக்டர்கள் பயன் பெறும் வகையில் உரிய செயல் திட்டத்தை 4 மாதத்தில் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
- அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.
- சாட்சிகளை கலைக்கவோ, தலைமறைவாகவோ முயற்சிக்கக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்த நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
மதுரை:
மதுரையைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரை ரூ.4 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்ததாக போதை பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கடந்த மாதம் 19-ந் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், அவர் ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர் தவறுதலாக இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார்.
அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் ஏற்கனவே இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். அவர் மீது இது தொடர்பாக மேலும் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.
விசாரணை முடிவில், மனுதாரர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும், இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் மீண்டும் ஈடுபடக்கூடாது. சாட்சிகளை கலைக்கவோ, தலைமறைவாகவோ முயற்சிக்கக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்த நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
- காலியான பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார்.
- கரூர் மாவட்ட துணை சேர்மன் பதவியை தி.மு.க.வினர் கைப்பற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை:
கரூர் மாவட்டத்தை சேர்ந்த திருவிகா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
கரூர் மாவட்டத்தில் 12 மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் உள்ளனர். 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் 9 மாவட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களாக அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றனர். மீதமுள்ள 3 இடங்களில் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றனர்.
கரூர் மாவட்டத்தின் சேர்மனாக கண்ணதாசனும், துணை சேர்மனாக தனுஷ் (எ) முத்துக்குமார் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில் 2021 ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக தனுஷ் (எ) முத்துக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியான பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார்.
பின்னர் துணை சேர்மன் பதவிக்கான தேர்தல் நடந்தது. அதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி தி.மு.க. உறுப்பினர்கள் பல்வேறு குளறுபடிகளை ஏற்படுத்தினர். இதனால் அந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் கரூர் மாவட்ட துணை சேர்மன் பதவியை தி.மு.க.வினர் கைப்பற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் முழு தேர்தலையும் வீடியோ பதிவு செய்து கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணை சேர்மன் பதவிக்கான தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதிகள், வருகிற 19-ம் தேதி கரூர் மாவட்ட பஞ்சாயத்து துணை சேர்மன் பதவிக்கான தேர்தலை நடத்தலாம். தேர்தல் முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும். தேர்தல் முடிந்த பின் வாக்குகளை எண்ணலாம்.
ஆனால் இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது. இது தொடர்பான அறிக்கையை சீலிட்ட கவரில் வருகிற 22-ந் தேதி கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரர் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதால் காவல்துறை பாதுகாப்பு வழங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளை, மனுதாரர் அணுகலாம் என உத்தரவிட்டு, விசாரணையை 22-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
- 2004-ம் ஆண்டில் சம்பந்தப்பட்ட நிலத்தை கோவிலுக்கு தானமாக வழங்கியதாக ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன.
- நிலத்தை சர்வே செய்து, சட்டப்படி ஆக்கிரமிப்பை அகற்ற 8 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மதுரை:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா நொச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த பாட்டன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
எங்கள் கிராமத்தில் அருந்ததியர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பட்டமுடையார் சாஸ்தா கருப்பசாமி கோவில் உள்ளது. எங்கள் கிராமத்தினர் பெரும்பாலானவர்கள் இங்கு வந்து வழிபடுகின்றனர். இந்த கோவிலுக்கு சொந்தமான நிலம், இதன் அருகில் உள்ளது. கோவில் திருவிழா நேரங்களில் இந்த பகுதியை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் இந்த நிலத்தின் அருகில் இலவச பட்டா மனை தனிநபருக்கு வழங்கப்பட்டு உள்ளது. தற்போது தனிநபர்கள், கோவில் நிலத்தையும் ஆக்கிரமித்து கழிப்பறை, மாட்டு கொட்டகை உள்ளிட்ட தங்களின் சொந்த நிலத்தை போல கட்டிடம் கட்டி பயன்படுத்தி வருகின்றனர். இதனால் கோவில் வழிபாடுகளுக்கு இடையூறு ஏற்படுகின்றன.
மேலும் இந்த நிலத்தின் வழியாகத்தான் இறந்தவர்களின் இறுதிச்சடங்குகள் நடத்துவதற்கு செல்லும் பாதையாகவும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். தனிநபர்களின் ஆக்கிரமிப்பு காரணமாக மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்டு ஒப்படைக்கும்படி வருவாய்த்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கிராம மக்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். எனவே ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்டு ஒப்படைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
விசாரணை முடிவில், 2004-ம் ஆண்டில் சம்பந்தப்பட்ட நிலத்தை கோவிலுக்கு தானமாக வழங்கியதாக ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன. எனவே இதன் அடிப்படையில் மனுதாரர் புகாரை தென்காசி மாவட்ட கலெக்டர் பரிசீலிக்க வேண்டும். ஆக்கிரமிப்பு இருந்தால் அனைத்து தரப்பினரும் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பி, அந்த நிலத்தை சர்வே செய்து, சட்டப்படி ஆக்கிரமிப்பை அகற்ற 8 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- கலைமாமணி விருது வழங்குவதற்கு இதுவரை வயதுவரம்போ, தகுதியோ, எந்தவித நெறிமுறையோ வகுக்கப்படவில்லை.
- கலையை பற்றி தெரியாதவர்களுக்கும் கலைமாமணி விருது வழங்கப்படுகிறது என்று நீதிபதிகள் வருத்தம் தெரிவித்திருந்தனர்.
மதுரை:
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சமுத்திரம் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழ்நாடு இயல், இசை, நாடகம் மன்றம் சார்பாக ஆண்டுதோறும் சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. கலைமாமணி விருது 5 பிரிவின் கீழ் வழங்கப்படுகிறது.
அதாவது 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு "கலை இளமணி" விருதும், 19 முதல் 35 வயது வரை "கலை வளர்மதி" விருதும், 36 முதல் 50 வயது வரை "கலை சுடர்மணி" விருதும், 51 முதல் 60 வயது வரை "கலை நன்மணி" விருதும், 61 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு "கலை முதுமணி" விருதும் வழங்கப்படுகிறது.
கலைமாமணி விருது வழங்குவதற்கு இதுவரை வயதுவரம்போ, தகுதியோ, எந்தவித நெறிமுறையோ வகுக்கப்படவில்லை. இந்த நிலையில் 2019-2020-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது 20-2-2021 அன்று வழங்கப்பட்டது. இதில் தகுதி இல்லாத பல நபர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கலைமாமணி விருது வழங்கும் விழாவில் வழங்கப்பட்ட சான்றிதழில் அந்த அமைப்பின் உறுப்பினர், செயலாளர் மற்றும் தலைவர் ஆகியோரின் கையொப்பம் இல்லாமல் அவசர கதியில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
தகுதி இல்லாத நபர்களுக்கு கலைமாமணி விருது வழங்கியதை திரும்ப பெற வலியுறுத்தி அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே தகுதியில்லாதவர்களுக்கு வழங்கிய கலைமாமணி விருதுகளை திரும்பப்பெற உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு ஏற்கனவே மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, கலையை பற்றி தெரியாதவர்களுக்கும் கலைமாமணி விருது வழங்கப்படுகிறது என்று நீதிபதிகள் வருத்தம் தெரிவித்திருந்தனர்.
பின்னர் 2019-2020-ம் ஆண்டிற்கான கலைமாமணி விருது தகுதியானவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா? என விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் இன்று வழங்கினர்.
அப்போது 2019-20 ஆம் ஆண்டு தகுதியானவர்களுக்கு தான் கலைமாமணி விருது வழங்கப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்ய வேண்டிய தேவை இருந்தால், அது தொடர்பான தேர்வு குழுவை மாற்றியமைக்கவும், விருதுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு சமமான வாய்ப்பு வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தனர்.
- சமாதான கூட்டத்தில் தீர்வு கிடைக்கவில்லை என்றால் ஆதிதிராவிட நலத்துறை இணை இயக்குனரை இணைத்து, மாவட்ட நிர்வாகம் தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும்.
- சட்ட, ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, ஜல்லிக்கட்டு போட்டியை தலைமை ஏற்று நடத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மதுரை:
மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த முனியசாமி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 1-ந்தேதி அன்று பொங்கல் திருநாளையொட்டி, மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டும் வருகிற பொங்கல் தினத்தன்று (ஜனவரி மாதம் 15-ந்தேதி) அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்க உள்ளன.
அவனியாபுரம் அம்பேத்கர்நகர் பகுதியில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவனியாபுரத்தில் பிற சமூகத்தை சேர்ந்தவர்களும் வசிக்கிறார்கள். கடந்த ஆண்டில் கோர்ட்டு உத்தரவின்பேரில் அனைத்து சமூகத்தினரையும் இணைத்து குழு அமைத்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. ஆனால் கோர்ட்டு உத்தரவின்படி அனைத்து சமூகத்தினரையும் சேர்க்காமல் குறிப்பிட்ட சமூகத்தினர் அடங்கிய குழு மட்டும் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு விழாவை நடத்தக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்த குழுவில் ஆதிதிராவிடர்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர். இது ஏற்புடையதல்ல. எனவே கடந்த ஆண்டு நடத்தப்பட்டதைப்போல கோர்ட்டு உத்தரவின்படி அனைத்து சமூகத்தினரையும் இணைத்து குழு அமைத்து வருகிற பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் விஜயகுமார் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கென அரசு பல ஏற்பாடுகள் மற்றும் செலவுகளைச் செய்கிறது. ஜல்லிக்கட்டு போட்டிக்கென நிலையான வழிகாட்டுதல்கள், நடைமுறைகள் உள்ளன.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கென பல சமூகத்தினரும், அமைப்புகளும் கமிட்டி உருவாக்குகின்றனர். பலவகை சமாதான கூட்டம் நடத்தியும் இதற்கு தீர்வு கிடைக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் தலைமையில் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
வழக்கு விசாரணையில் மனுதாரர் தரப்பில், 2022-ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவின் படி ஒருங்கிணைப்புக் குழுவில் அதிகாரிகளும், ஆலோசனைக்குழுவில் கிராமத்தில் உள்ள அனைத்து சமுதாயத்தினரையும் ஒன்றிணைத்து குழு உருவாக்கி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்த ஆண்டும் அதேபோல் குழு அமைத்து ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள் ஆலோசனை குழுவின் வேலை என்ன ஒருங்கிணைப்பு குழுவின் வேலை என்ன என கேள்வி எழுப்பினர்.
இதற்கு மனுதாரர் தரப்பில், ஆலோசனை குழுவில் கிராமத்தின் அனைத்து சமுதாய உறுப்பினர்களும் இணைந்து காளைகளை தேர்வு செய்வது, பந்தல்கால் நடுவது, விழாக்களை நடத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வர் என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு அரசு தரப்பில், இந்த ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பொருத்தவரை ஆலோசனைக்குழு என எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு கருத்துக்களையும் கேட்ட நீதிபதிகள், தங்களது உத்தரவில் அவனியாபுரத்தில் அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து, நாளை (13-ந் தேதி) மாவட்ட கலெக்டர் தலைமையில் சமாதான கூட்டம் நடத்த வேண்டும். சமாதான கூட்டத்தில் தீர்வு ஏற்பட்டால் அவனியாபுரம் அனைத்து சமுதாய கிராம மக்கள் இணைந்த ஆலோசனைக்குழுவை உருவாக்கி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தலாம்.
சமாதான கூட்டத்தில் தீர்வு கிடைக்கவில்லை என்றால் ஆதிதிராவிட நலத்துறை இணை இயக்குனரை இணைத்து, மாவட்ட நிர்வாகம் தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும்.
ஒருவேளை மதுரை அவனியாபுரம் அனைத்து சமுதாய மக்கள் இணைந்த ஜல்லிக்கட்டுக்குழு அமையப்பெற்று, நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஏதேனும் சட்ட, ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, ஜல்லிக்கட்டு போட்டியை தலைமை ஏற்று நடத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- நான் எந்த தவறும் செய்யவில்லை என்று போலீசாரிடம் கூறியும் அவர்கள் கேட்கவில்லை.
- மனுதாரரின் கணவருக்கு அரசு மருத்துவமனையில் சிறந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
மதுரை:
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த பவுசியா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நானும், எனது கணவர் முகமதுஅலி ஜின்னாவும் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வசித்து வருகிறோம். எனது கணவர் இருசக்கர வாகனத்தில் சென்று டீ வியாபாரம் செய்து வருகிறார். இதுவே எங்களது வாழ்வாதாரமாக இருந்து வருகிறது.
தினசரி வியாபாரத்துக்கு காலை 5 மணிக்கு சென்று இரவு 8 மணிக்கு வீடு திரும்புவார். ஆனால் கடந்த 8-ந் தேதி வியாபாரத்திற்காக சென்ற எனது கணவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
எனது கணவரின் நண்பர்கள் கொடுத்த தகவலின்படி எனது கணவர் பழனி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்தது. உடனே நானும் எனது குடும்பத்தாரும் பழனி போலீஸ் நிலையத்திற்கு சென்றபோது, அவரை பார்க்கவிடாமல் போலீசார் தடுத்தனர். அடுத்த நாள் அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அப்பொழுது அவர் உடம்பு முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்தது. அவரிடம் நாங்கள் பேசியபோது, டீ வியாபாரம் செய்தபோது ஒரு பெண்ணை நான் கேலி செய்ததாக கூறி அங்கிருந்தவர்கள் தன்னை தாக்கி புகார் அளித்ததால், போலீசார் கைது செய்தனர். நான் எந்த தவறும் செய்யவில்லை என்று போலீசாரிடம் கூறியும் அவர்கள் கேட்கவில்லை என்றார். தற்போது எனது கணவர் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் அவர் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
எனவே எனது கணவரின் நிலைக்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், எனது கணவருக்கு தனியார் மருத்துவமனையில் உயர் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், மனுதாரரின் கணவருக்கு அரசு மருத்துவமனையில் சிறந்த சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
- மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
- பாதிக்கப்பட்டவரின் தாய் புகாரளித்த பிறகு தான் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மதுரை:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் தாமஸ் சாமுவேல்(வயது57). இவர் பள்ளியில் படிக்கும் 5-ம் வகுப்பு மற்றும் 4-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இதை ரத்து செய்யக்கோரி அவரது மனைவி டெய்சி தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தர்மோகன் ஆகியோர் விசாரித்தனர்.
அப்போது அரசு கூடுதல் வக்கீல் திருவடிகுமார் ஆஜராகி வழக்கின் விசாரணை துரிதமாக நடந்து வருகிறது. மொத்தமுள்ள 30 சாட்சிகளில் 19 சாட்சியங்கள் மீதான விசாரணை முடிந்துள்ளது என்றார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
தலைமை ஆசிரியர் 7.5.2022-ல் குண்டர் சட்டத்தின் கீழ் கைதாகி உள்ளார். ஆனால் 5 நாட்களில் புத்தகத்தை சிறையில் வழங்கியுள்ளனர். அதை பெற்றுக் கொண்டதற்காக சம்பந்தப்பட்ட வரும் கையெழுத்திட்டுள்ளார். இந்த வழக்கை பொறுத்தவரை 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவரின் தாய் புகாரளித்த பிறகு தான் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எனவே குண்டர் சட்ட நடவடிக்கையில் எந்த சட்டவிரோதமும் இல்லை. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.






