search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Governor House"

    • ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகல் 3.30 மணியளவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
    • பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் ஈடுபட்ட பிரபல ரவுடி வினோத் கைது செய்யப்பட்டார்.

    ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து ஆளுநர் மாளிகை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது:-

    ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். எனினும் உஷாராக இருந்த காவலர்கள் தடுத்ததால், இரண்டு பெட்ரோல் குண்டுகளை ராஜ் பவனுக்குள் வீசி விட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பினர்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • பெட்ரோல் குண்டு வீசும்போது ஆளுநரே வெளியேறு என வினோத் கோஷம்.
    • பிடிப்பட்ட வினோத் ஏற்கனவே பாஜக அலுவலகம் மீது குண்டு வீசியவர் என தகவல்.

    சென்னை, கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. பாதுகாப்பு மிகுந்த ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இருசக்கர வாகனத்தில் வந்து ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டை வீசிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    பெட்ரோல் குண்டு வீசும்போது ஆளுநரே வெளியேறு என வினோத் கோஷமிட்டதாக தகவல் வெளியானது. பிடிப்பட்ட வினோத்திடம் இருந்து மேலும் 3 பெட்ரோல் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரவுடி கடுக்காக வினோத் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

    பிடிப்பட்ட வினோத் கடந்த 2022ல் தி.நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசியதாக கைது செய்யப்பட்டார்.

    மேலும், கமலாலயம் மீது குண்டு வீச சொன்னதே அண்ணாமலை தான் என வினோத் அப்போது வாக்குமூலம் அளித்திருந்தார்.

    அண்ணாமலை, தனக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் பதிவை போலீசாரிடம் வினோத் ஒப்படைத்திருந்தார்.

    மேலும், 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும் நீட் தேர்வு விலக்கு மசோதாவை நிறைவேற்றிட வேண்டும் என்று வினோத் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து, ஆளுநர் மாளிகை முன் கூடுதல் தடுப்பு வேலிகளை அமைத்து போலீசார் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • போலீசார் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
    • மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்திற்கு காவிரி நீரை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் அக்கட்சியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து வேல்முருகனை கைது செய்த போலீசார் அங்கிருந்த அனைவரையும் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த 870 பேர் மீது கிண்டி போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

    • rbvisit.rajbhavan-maharashtra.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.
    • காலை 6 மணி முதல் 8.30 மணி வரையில் அனுமதி வழங்கப்படுகிறது.

    மும்பை :

    மும்பை மலபார்ஹில் பகுதியில் மராட்டிய கவர்னரின் அதிகாரப்பூர்வ இல்லமான ராஜ்பவன் என்ற கவர்னர் மாளிகை உள்ளது. இந்த மாளிகையில் பருவமழை காரணமாக கடந்த ஜூன் மாதம் முதல் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது 4 மாத பருவமழை முடிவுக்கு வருவதை தொடர்ந்து மீண்டும் கவர்னர் மாளிகைக்கு சுற்றுலா பயணிகளுக்கு வருகை தர அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து கவர்னர் மாளிகை செய்தி தொடர்பாளர் கூறியதாவது:-

    பருவமழை காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அது நீக்கப்பட்டு உள்ளது. எனவே வருகிற 1-ந் தேதி முதல் பயணிகள் வருகை தரலாம்.

    கவர்னர் மாளிகையைில் சுற்றுலா செல்ல விரும்புவர்கள் rbvisit.rajbhavan-maharashtra.gov.in என்ற இணையதளத்தில் கட்டாயம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். வாரத்தின் திங்கட்கிழமைகள் மற்றும் அரசு விடுமுறை நாட்களை தவிர அனைத்து நாட்களிலும் காலை 6 மணி முதல் 8.30 மணி வரையில் அனுமதி வழங்கப்படுகிறது. இதைத்தவிர தீபாவளி பண்டிகையையொட்டி வருகிற 22-ந்தேதி முதல் 28-ந்ததேதி வரை கவர்னர் மாளிகைக்கு விடுமுறை வழங்கப்பட்டு உள்ளதால் அன்றைய தினங்களில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி கிடையாது.

    கவர்னர் மாளிகையில் சூரிய உதயம், தேவி கோவில், பதுங்கு குழிகள், புரட்சியாளர்களின் கேலரி, தர்பார் அரங்கு, ஜல் விகார் மற்றும் மராட்டிய மாநிலத்தின் உருவாக்கத்தின் நினைவகம் போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் அமைச்சர்களுக்கும், கவர்னருக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #GovernorHouse #Bombthreat

    ஆலந்தூர்:

    கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சில தினங்களுக்கு முன்பு மர்ம கடிதம் ஒன்று வந்தது.

    அந்த கடிதத்தில் அனுப்பியவரின் பெயர் இல்லை. அதில் கவர்னர் மாளிகையை குண்டு வைத்து தகர்ப்போம். உங்களை சுற்றிவரும் தமிழக அமைச்சர்களை சுட்டுக் கொல்வோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    கடிதத்தை பிரித்து பார்த்த கவர்னர் மாளிகை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி உடனடியாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அடையாறு துணை கமி‌ஷனர் சஷாங் சாய் இதுபற்றி உரிய விசாரணை நடத்த உத்தர விட்டார்.


    இதனைதொடர்ந்து கிண்டி போலீசார் மிரட்டல் கடிதம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர். கடிதத்தில் பெயர், முகவரி உள்ளிட்ட எதுவும் இடம் பெறாததால் அதனை எழுதியது யார் என்பது தெரியவில்லை.

    இருப்பினும் கடிதம் எங்கிருந்து அனுப்பப்பட்டுள்ளது என்பதுபற்றி கடிதத்தில் உள்ள முத்திரையை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மிரட்டல் கடிதத்தை அனுப்பிய மர்ம நபரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கிண்டி உதவி கமி‌ஷனர் சுப்ராயன், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வை பிடிக்காத நபர்தான் இந்த கடிதத்தை அனுப்பி இருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் மிரட்டல் ஆசாமி பிடிபட்டால் தான் கடிதத்தின் முழு பின்னணி தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    மிரட்டல் காரணமாக கவர்னர் மாளிகையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கிண்டி மற்றும் கோட்டூர்புரம் போலீசார் கவர்னர் மாளிகையை சுற்றியுள்ள பகுதியில் ரோந்து பணியையும் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    தேர்தல் நேரத்தில் அமைச்சர்களுக்கும், கவர்னருக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #GovernorHouse #Bombthreat

    கிண்டியில் கவர்னர் மாளிகைக்குள் ஏறிக்குதித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு உயர் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. அனுமதி இல்லாமல் யாரும் உள்ளே செல்ல முடியாது.

    இந்த நிலையில் நேற்று மாலை வாலிபர் ஒருவர் கவர்னர் மாளிகை காம்பவுண்டு சுவரை ஏறிக் குதித்து புகுந்தார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    அவர் வந்தவாசியை சேர்ந்த செல்வராஜ் என்பது தெரிந்தது. மேலும் அவர் மது போதையில் இருந்தார்.

    செல்வராஜிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொடநாடு விவகாரம் தொடர்பாக கவர்னர் மாளிகை முன்பு 24ந் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #KodanadIssue #DMK #MKStalin

    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கொடநாடு விவகாரத்தில் ஒரு கொலை நடந்துள்ளது. மூன்று பேர் விபத்தில் கொல்லப்பட்டுள்ளார்கள். ஒருவர் மீது கொலை முயற்சி செய்யப்பட்டு தப்பி உள்ளார். ஒருவர் தற்கொலை செய்துள்ளார். இந்த விவகாரத்தில் நேரடியாகத் தொடர்புடைய சயன், மனோஜ் ஆகிய இருவரும் ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜ் சொல்லித்தான் கொள்ளை சம்பவத்தில் இறங்கியதாகச் சொல்கிறார்கள்.

    எடப்பாடி பழனிசாமிக்காகத்தான் இதனை நான் செய்கிறேன் என்று கனகராஜ் தன்னிடம் சொன்னதாக சயன், மனோஜ் ஆகிய இருவரும் சொல்கிறார்கள். 2 ஆயிரம் கோடி ரூபாய் பணம் இருந்ததாகவும் சில ஆவணங்களை எடுக்க வேண்டும் என்றும் அதற்காக 5 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டது என்றும் சயன் சொல்லி இருக்கிறார்.

    இந்த விவகாரம் முடிந்த பிறகு கனகராஜ் மர்மமான முறையில் விபத்துக்குள்ளாகிறார். சயன் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவரது மனைவியும், மகளும் இறக்கிறார்கள். சயன் உயிர் தப்புகிறார். கொடநாடு பங்களாவின் சிசிடிவி ஆபரேட்டர் தினேஷ் குமார் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொள்கிறார்.

    இந்த கொலை, கொள்ளை, தற்கொலை, விபத்துகள் அனைத்துமே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டாக வைக்கப்படுகிறது.

    கடந்த இரண்டு வாரங்களாக இந்த விவகாரம் மீடியாக்களில் கண்கூசும் அளவுக்குப் போய்க்கொண்டு இருக்கிறது. ஆனால் நேரடியாக இதற்கு முதல்- அமைச்சர் இதுவரை பதில் சொல்லவில்லை. சுற்றி வளைத்து ஏதேதோ பேசுகிறார்.

    இப்பிரச்சினை குறித்து நான், கடந்த 14-1-2019 அன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து, “பத்திரிக்கையாளர் மாத்யூ வெளியிட்ட கொடநாடு நிகழ்வுகள் குறித்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மீது அரசியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நேர்மையான விசாரணை நடைபெற முதல்வர் பதவியிலிருந்து விலகிட அறிவுறுத்தவும் நேர்மையான ஐ.ஜி. தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக்குழுவை ஏற்படுத்தி மேல் விசாரணை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்”என்று கோரிக்கை மனு அளித்தேன். ஆனால், இன்று வரை அக்கோரிக்கை மனுமீது எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

    எனவே, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக முதல்வர் பதவியிலிருந்து விலகிட வேண்டு மென்றும்; தமிழக ஆளுநர் முதல்வர் மீது அரசியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நேர்மையான ஐ.ஜி. தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக்குழுவை ஏற்படுத்தி மேல் விசாரணை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி, வருகின்ற 24-1-2019 (வியாழக்கிழமை) அன்று காலை 10.00 மணியளவில், சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன், எம்.எல்.ஏ., சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன், எம்.எல்.ஏ., சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே. சேகர் பாபு, எம்.எல்.ஏ., சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம், எம்.எல்.ஏ., ஆகியோர் தலைமையில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #KodanadIssue #DMK #MKStalin

    கவர்னர் மாளிகைக்குள் இன்று முதல் பிளாஸ்டிக் பைகள் கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. #PlasticBagBan #Governor #BanwarilalPurohit
    சென்னை:

    சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பார்வையாளர்களுக்காக புகைப்பட அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அரங்கத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று திறந்துவைத்து, அங்கு இடம்பெற்றுள்ள புகைப்படங்களை பார்வையிட்டார்.

    இதனைத்தொடர்ந்து, கவர்னர் மாளிகை வளாகத்தை பிளாஸ்டிக் பைகள் இல்லா வளாகமாக மாற்றும் நோக்கத்தில் ‘பிளாஸ்டிக்கை தவிர்த்து புற்றுநோயை தடுப்போம்’ என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கரை கவர்னர் வெளியிட்டார். கவர்னர் மாளிகையில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு துணிப்பை மற்றும் ஸ்டிக்கர் வழங்கப்பட்டது.

    கவர்னர் மாளிகைக்குள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பிளாஸ்டிக் பைகள் கொண்டுவருவதற்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

    முன்னதாக, கவர்னர் மாளிகையில் உள்ள பணியாளர்களுக்கு சிறப்பு கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் 79 நபர்களுக்கு இலவச கண் கண்ணாடிகளை கவர்னர் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சிகளில் கவர்னரின் கூடுதல் தலைமை செயலாளர் ஆர்.ராஜகோபால் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
    மனைவியை மீட்டு தரக்கோரி கவர்னர் மாளிகை முன்பு தாயுடன் கணவர் போராட்டம் ஈடுபட்டார். தகவல் அறிந்த பெரியக்கடை போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    புதுச்சேரி:

    முதலியார்பேட்டை விடுதலை நகரை சேர்ந்தவர் செந்தில்குமரன் (வயது 34). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கும், திருவண்ணாமலை மாவட்டம் போளூரை சேர்ந்த மீனாட்சி (25) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இதற்கிடையே செந்தில்குமரனின் தாய் சத்யா பெயரில் உள்ள வீட்டை தனது பெயரில் எழுதி தருமாறு மீனாட்சி, செந்தில் குமரனிடம் வலியுறுத்தி வந்தார். ஆனால் செந்தில்குமரன் இதற்கு மறுப்பு தெரிவித்து வந்தார்.

    இதனால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று மீனாட்சியின் பெற்றோர் காரில் வந்து மீனாட்சி மற்றும் அவரது குழந்தையை தங்களது வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டனர்.

    இதையடுத்து செந்தில் குமரன் தனது மனைவி மற்றும் குழந்தையை கடத்தி சென்றுவிட்டதாகவும், குழந்தையை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று காலை செந்தில்குமரன், தனது தாய் சத்யாவுடன் கவர்னர் மாளிகை வாயில் முன்பு அமர்ந்து குழந்தையை மீட்டு தரக்கோரி தர்ணாவில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த பெரியக்கடை போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தர்ணா போராட்டத்தை கைவிட்டு செல்லும்படி அறிவுறுத்தினர்.

    ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர். இதையடுத்து செந்தில்குமரன் மற்றும் அவரது தாயை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர். ஆனாலும் செந்தில்குமரனும், அவரது தாய் சத்யாவும் தொடர்ந்து பாரதி பூங்காவில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையை பொதுமக்கள் தினமும் சுற்றி பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் உள்ள கவர்னர் மாளிகையும் தற்போது முக்கிய சுற்றுலா தலமாக மாறியுள்ளது.

    சென்னை கிண்டியில் பல ஏக்கர் பரப்பளவில் உள்ள சோலையின் நடுவே கவர்னர் மாளிகை அமைந்துள்ளது. இதில் பாரம்பரிய கட்டிடங்கள், பூங்கா, புல்வெளி, சுற்றித்திரியும் மான்கள் என பார்த்து மகிழ பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.

    முன்பு கவர்னர் மாளிகையை பொதுமக்கள், உரிய அனுமதி பெற்று வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பார்க்கலாம். தற்போது இந்த விதிமுறை தளர்த்தப்பட்டுள்ளது.

    தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்ட பிறகு கவர்னர் மாளிகையை தினமும் பொதுமக்கள் சுற்றிப்பார்க்க அனுமதி அளித்துள்ளார். முன்பு மாலையில் ஒரு முறை தான் கவர்னர் மாளிகையை பொதுமக்கள் பார்க்க அனுமதி வழங்கப்பட்டது.

    இப்போது மாலை 4.30 மணிமுதல் 5.30 மணி வரை ஒரு முறையும் தொடர்ந்து 5.30 முதல் 6.30 மணி வரை மற்றொரு முறையும் பொது மக்கள் கவர்னர் மாளிகையை சுற்றிப்பார்க்கலாம்.

    கவர்னர் மாளிகையை சுற்றிப்பார்க்க வருபவர்கள் முன்னதாகவே, ஆன்லைன் மூலம் தாங்கள் வரும் தேதி, நேரம் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். கவர்னர் மாளிகையை சுற்றிப்பார்க்க 2 பேட்டரி கார்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரே நேரத்தில் 20 பேர் கவர்னர் மாளிகையை சுற்றிப்பார்க்கலாம். 2 ஷிப்ட் பார்க்க ஏற்பாடு செய்திருப்பதால் தினமும் 40 பேர் கவர்னர் மாளிகையை பார்த்துவரலாம்.

    பேட்டரி காரில் செல்பவர்கள் ஒரு மணிநேரம் கவர்னர் மாளிகையை பார்க்கலாம். அவர்கள் அமைச்சர்கள் பதவி ஏற்கும் தர்பார்ஹால், பரந்த புல்வெளி, பிரதமர், ஜனாதிபதி தங்கும் பாரம்பரிய மாளிகை, ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய ‘போலோ’ விளையாட்டு மைதானம், பூங்கா, இங்குள்ள புல்வெளி, மரங்கள் நிறைந்த சோலையில் ஓடித்திரியும் மான்கள் ஆகியவற்றை பார்த்து மகிழலாம்.

    கவர்னர் மாளிகையை காணவரும் பொதுமக்களை தினமும் கவர்னர் சந்தித்து தேனீர் விருந்து கொடுத்து வாழ்த்து சான்றிதழ்களையும் வழங்கி வருகிறார்.

    கவர்னர் மாளிகையை சுற்றிப்பார்க்க முன்பதிவு செய்பவர்கள் தலா ரூ.25 கட்டணம் செலுத்த வேண்டும். இது பேட்டரிகார் பராமரிப்புக்காக பயன்படுத்தப்படுகிறது. கவர்னர் உத்தரவுப்படி பொதுமக்கள் தினமும் 2 மணிநேரம் கவர்னர் மாளிகையின் அனைத்து பகுதிகளையும் சுற்றிப்பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை கூடுதல் தலைமை செயலாளர் ராஜகோபால் செய்துள்ளார். கவர்னர் மாளிகையை சுற்றிப் பார்க்கும் பொதுமக்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

    சுற்றுலா பயணிகளும் பெருமளவில் வருகின்றனர். எனவே முன்பதிவு செய்யாமல் நேரில் வருபவர்களையும் கவர்னர் மாளிகையை சுற்றிப்பார்க்க அனுமதிப்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. #Tamilnews

    பொது இடங்களில் சி.சி.டி.வி. திட்டத்துக்கு அனுமதி வழங்க மறுக்கும் டெல்லி கவர்னர் மாளிகைக்கு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் வரும் திங்கட்கிழமை பேரணியாக செல்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. #ArvindKejriwal #CCTVCamera #Kejriwal #AAPMLAs
    புதுடெல்லி:

    பெண்களின் பாதுகாப்பு கருதி டெல்லி முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த ஆளும் ஆம் ஆத்மி அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் இதற்கு கவர்னர் அனில் பைஜால் ஒத்துழைப்பு வழங்காமல் காலம்தாழ்த்தி வருகிறார். 

    இந்நிலையில், பொது இடங்களில் சி.சி.டி.வி. திட்டத்துக்கு அனுமதி வழங்க மறுக்கும் டெல்லி கவர்னர் மாளிகைக்கு வரும் திங்கட்கிழமை ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் பேரணியாக செல்லப் போவதாக டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா இன்று அறிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக, டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டெல்லி துணை முதல் மந்திரி மணிஷ் சிசோடியா, ‘டெல்லி முழுவதும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் திட்டம் தொடர்பான முதல்கட்ட பணிகள் கடந்த மூன்றாண்டுகளாக நடைபெற்று வருகின்றன.

    இதற்கான டெண்டரும் விடப்பட்ட பின்னர் தற்போது இந்த திட்டத்தில் ஓட்டை கண்டிபிடித்து முடக்கிப்போட முயற்சித்து வருகிறார். இதுதொடர்பாக, கவர்னர் அனில் பைஜாலை சந்தித்து வலியுறுத்துவதற்காக வரும் திங்கட்கிழமை மாலை 3 மணியளவில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் மாளிகைக்கு பேரணியாக செல்கின்றனர்.

    இந்த தகவல் கடிதம் மூலம் கவர்னருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டார். #ArvindKejriwal #CCTVCamera #Kejriwal #AAPMLAs
    ×