

மேற்கு வங்க கவர்னர் சி.வி. ஆனந்த போஸ் மீது கவர்னர் மாளிகையில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். ஆனால், அந்த குற்றச்சாட்டை கவர்னர் மறுத்தார்.
இதனையடுத்து, 'கவர்னர் மாளிகை செல்வதற்கு பெண்கள் பயப்படுகின்றனர்' என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசியிருந்தார்.
மேலும், அண்மையில் நடைபெற்ற இடை தேர்தலில் வெற்றி பெற்ற 2 திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு பதிவு பிரமாணம் செய்து வைக்காமல் கவர்னர் இழுத்தடித்து வந்தார். அதனால் அந்த 2 எம்.எல்.ஏ.க்களும் இந்த விவகாரம் தொடர்பாக கவர்னரை விமர்சித்தனர்.
இந்நிலையில், மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க கவர்னர் சி.வி. ஆனந்த போஸ் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
நேற்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது, கவர்னருக்கு எதிராக அவதூறாக எந்த கருத்தையும் மம்தாவும் அவரது கட்சியினரும் தெரிவிக்க கூடாது என்று நீதிபதி கிருஷ்ணாராவ் உத்தரவிட்டார்.