என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kushboo"

    • இனி நடிக்க மாட்டேன் என கூறியது தான் எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது
    • ஒரு கலைஞர் தனது படம் கடைசி என்று கூறக்கூடாது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த பா.ஜ.க. மாநிலத் துணைத்தலைவரும், நடிகையுமான குஷ்பு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- தேர்தல் பிரசாரம் மேற்கொள்வீர்களா?

    பதில்: இன்னும் நேரம் உள்ளது. கண்டிப்பாக பிரசாரம் மேற்கொள்வேன்.

    கேள்வி:- சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடுவீர்களா?

    பதில்: தலைமை அறிவித்தால் கண்டிப்பாக போட்டியிடுவேன்.

    கேள்வி:- தமிழகத்தில் என்.டி.ஏ. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

    பதில்: பீகாரில் பா.ஜ.க. தனித்து வெற்றி பெற்று ஆட்சி பிடித்ததுபோல், தமிழகத்திலும் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்.

    கேள்வி:- ஆட்சியில் பா.ஜ.க. பங்கேற்குமா?

    பதில்: பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் தமிழக தேர்தல் பார்வையாளர் ஆகியோர் முடிவு செய்வார்கள்.

    கேள்வி:- தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு பா.ஜ.க. அழுத்தம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். அதற்கு என்ன பொருள்?

    பதில்: அவரது கூட்டத்தில் பேசியதை நானும் கேட்டேன். என்ன அழுத்தம் என்று எனக்கு புரியவில்லை. அவர் திரைப்படத்தில் இனி நடிக்க மாட்டேன் என கூறியது தான் எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. ஒரு கலைஞர் தனது படம் கடைசி என்று கூறக்கூடாது.

    கேள்வி:- தேசிய திரைப்பட விருதும், தமிழக திரைப்பட விருதும் தேர்வு செய்வதில் பாரபட்சம் காட்டுகிறார்கள் என இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். அதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

    பதில்: என்ன என்று அவரைத்தான் கேட்க வேண்டும் எனக்கு எதுவும் தெரியாது என்றார்.

    • வீராப்பில் வார்த்தைகளைப் பார்த்துப் பேச வேண்டாம்.
    • தங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட விசில் சின்னத்தை அறிமுகம் செய்தார்.

    தவெக தலைவர் விஜய் தலைமையில் நேற்று சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் அக்கட்சியின் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    தங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட விசில் சின்னத்தை அறிமுகம் செய்த விஜய் வழக்கம்போல் எழுச்சியுரை ஆற்றினார். குறிப்பாக அதிமுக  குறித்து முதல் முறையாக விஜய் விமர்சித்தார்.

     அக்கூட்டத்தில் பேசிய விஜய், "தமிழ்நாட்டு மக்கள் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றி மாற்றி வாக்களித்து தற்போது அழுத்தத்தில் இருக்கிறார்கள். தீய சக்தி தி.மு.க., ஊழல் சக்தி அ.தி.மு.க. இனி தமிழ்நாட்டை ஆளவே கூடாது" என்று அதிமுகவை முதல்முறையாக கடுமையாக தாக்கி பேசினார்.

    இதற்கு அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

    இந்நிலையில் அதிமுக இடம்பெற்ற என்டிஏ கூட்டணியின் பாஜகவை சேர்ந்த குஷ்பு விஜய் பேச்சுக்கு பதிலளித்துள்ளார்.

    குஷ்பு கூறியதாவது, "மேடையில் இருக்கும்போது விசில் சத்தம் கேட்டு, வீராப்பில் வார்த்தைகளைப் பார்த்துப் பேச வேண்டாம். தம்பி அரசியலுக்கு புதுசு, திருந்திவிடுவார்.

    அதிமுகவினர் அரசியலுக்கு நேற்று வந்தவர்கள் கிடையாது. அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, இபிஎஸ் என வேர் ஊன்றி இருக்கும் ஒரு கட்சி, சரணடைய வேண்டிய அவசியம் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.   

    • படத்திற்கான அனைத்து சான்றிதழ்களையும் பெற்றபின்தான் ரிலீஸ் தேதியை அறிவிக்கவேண்டும்.
    • முழுக்க முழுக்க திமுகவைதானே குறைக்கூறினார்.

    சென்னை விமான நிலையத்தில் பா.ஜ.க. நிர்வாகி குஷ்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஜன நாயகன் தணிக்கை விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 

    "பராசக்தியை ரெட் ஜெயண்ட் ஃபிலிம்ஸ் ரிலீஸ் செய்துள்ளது. மத்திய அரசு தடைசெய்யவேண்டும் என்றால், ரெட் ஜெயண்ட் படத்திற்குத்தான் தடைவிதித்திருக்க வேண்டும். ஏனெனில் எங்களுக்கு எதிரி திமுகதான். ஜன நாயகன் குறித்து பேசுபவர்கள் மூளையில் இருக்கும் அறிவைப் பயன்படுத்தமாட்டார்களா? குழந்தை அழுதால்கூட மோடியை காரணம் கூறுபவர்களை என்ன சொல்வது என்று தெரியவில்லை.

    படத்திற்கான அனைத்து சான்றிதழ்களையும் பெற்றபின்தான் ரிலீஸ் தேதியை அறிவிக்கவேண்டும். அதுதான் அடிப்படை விதி. இது தயாரிப்பாளர்களின் தவறு. பின்னர் மத்திய தணிக்கை வாரியத்தை தவறு கூறாதீர்கள். கிறிஸ்துமஸ், புத்தாண்டு என விடுமுறை நாட்கள் இடையில் இருந்துள்ளன. எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு, அவர்கள் 24 மணிநேரமும் உங்களுக்காக வேலைசெய்ய வேண்டுமா? ஒரு ரசிகையாக எனக்கும் ஜனநாயகன் ரிலீஸ் ஆகாதது குறித்து வருத்தம் உள்ளது. ஆனால் விதிமுறைகள் எப்பொழுதும் மாறாது. இது அனைத்து படங்களுக்கும் பொருந்தும். குறைக்கூறுவதற்கு முன் யோசியுங்கள். " என தெரிவித்தார். 

    தொடர்ந்து சிபிஐ விசாரணைக்கு நாளை விஜய் ஆஜராவது குறித்த கேள்விக்கு, 

    கரூர் பிரச்சனை எழுந்தபோது முதலில் சிபிஐ விசாரணை கோரியது யார்? நாங்கள் கேட்டோமா? முதலில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்டது விஜய்தான். அவர்மீது தவறு இல்லை இல்லையா? முழுக்க முழுக்க திமுகவைதானே குறைக்கூறினார். அவர் கேட்டார்; விசாரணை நடக்கிறது; அவர் ஆஜராகிவிட்டு வருவார். என தெரிவித்தார். 


    • ஜன நாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததற்கு பாஜக தான் காரணமா?
    • கூட்டணிக்கு விஜயை இழுக்கவே பாஜக இவ்வாறு செய்கிறது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது.

    விஜய் நடிப்பில் நாளை வெளியாக இருந்த படம் 'ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை. இதையடுத்து தயாரிப்பு நிறுவனமான கே.வி.என்.நிறுவனம் படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக அறிவித்தது. இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்களுக்கும் ஏமாற்றம் ஏற்பட்டது.

    ஜன நாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததற்கு பாஜக தான் காரணம் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. கூட்டணிக்கு விஜயை இழுக்கவே பாஜக இவ்வாறு செய்கிறது என்று விமர்சங்கள் எழுந்துள்ளது.

    இந்நிலையில், புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக நிர்வாகி குஷ்பூ, "விஜய் மிகப்பெரிய நடிகர் என்பதால் அவரை பார்க்க கூட்டம் வரதான் செய்யும். ஆனால் அதெல்லாம் தேர்தலில் ஓட்டாக மாறுமா? என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். NDA கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதால் மேலும் பல கட்சிகள் கூட்டணிக்கு வரும்" என்று தெரிவித்தார்.

    • மக்கள் யாருக்கும் இன்று பாஜகவை தாண்டி வேறு எந்தக் கட்சிமீதும் நம்பிக்கை வரவில்லை.
    • எல்லா சலுகைகளும் தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட்டுள்ளது

    புதுச்சேரியில் இன்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பங்கேற்ற பாஜக அனைத்து பிரிவுகளின் மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, தமிழ்நாடு மாநில துணைத் தலைவர் குஷ்பு சுந்தர், தமிழ்நாடு அனைத்துப் பிரிவுகளின் மாநில அமைப்பாளர் ராகவன் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில் பேசிய குஷ்பு,

    "இந்தியா இன்று பொருளாதாரத்தில் 4வது இடத்தில் உள்ளது என்றால், அதற்கு பிரதமர் மோடிதான் காரணம். மக்கள் அவர்மீது வைத்துள்ள நம்பிக்கைதான் காரணம். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி என்ன செய்துக் கொண்டிருக்கிறார்? காலையில் எழுந்தால் ராகுல் காந்தியின் முதல்வேலை இன்று மோடியை எவ்வாறு திட்டுவது? தவறுகள் இல்லையென்றாலும் அவறேக் கூறுவது. வாக்குத்திருட்டு என்று கூறுகிறார். காங்கிரஸ் வெற்றிப் பெற்றால், வாக்குத்திருட்டு இல்லையா? அப்போது மட்டும் ஈவிஎம் சரியாக இருக்கிறதா? கொஞ்சம் வளருங்கள். சின்னக்குழந்தை மாதிரி பேசாதீர்கள். உலகத்தை கவனியுங்கள்.

    மக்கள் யாருக்கும் இன்று பாஜகவை தாண்டி வேறு எந்தக் கட்சிமீதும் நம்பிக்கை வரவில்லை. குறிப்பாக தமிழ்நாட்டில் யாருக்கும் இல்லை. அடுத்தமுறையும் திமுக வந்துவிடும் என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். எப்படி வரும்? எது கேட்டாலும் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை எனக்கூறுவது. எல்லா சலுகைகளும் தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. திமுக பாஜகவின் எதிரி மட்டும் கிடையாது. மக்களின் எதிரி, இந்த நாட்டின் எதிரி, சனாதனத்தின் எதிரி, இந்து மக்களுடைய எதிரி, ஏன் கடவுளுக்கே எதிரி". எனப் பேசியுள்ளார். 

    • கே.பாலச்சந்தரின் கவிதாலயா தயாரிப்பில் இப்படம் வெளியானது.
    • குஷ்பு, ரேகா, ராதா ரவி, ஜனகராஜ், நிழல்கள் ரவி, மனோரமா ஆகியோரும் நடித்துள்ளனர்.

    தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'நாயகன்', 'வேட்டையாடு விளையாடு', 'ஆளவந்தான்', விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்', விஜய்யின் 'கில்லி', 'சச்சின்', சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', தனுசின் 'யாரடி நீ மோகினி', சேரனின் 'ஆட்டோகிராஃப்' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.

    மீண்டும் வெளியாகும் படங்கள் வரிசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சுரேஷ் கிருஷ்ணாவுடன் முதன்முதலில் இணைந்து பணியாற்றிய திரைப்படமான அண்ணாமலை விரைவில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

    ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளை ஒட்டி, டிசம்பர் 12-ந்தேதி முதல் இந்தப் படம் மீண்டும் திரைக்கு வரவுள்ளது.

    அதிரடியான இப்படத்தில் ரஜினிகாந்த், ஒரு சாதாரண பால் வியாபாரியான அண்ணாமலையாக நடிக்கிறார், அவர் தனது பணக்கார நண்பர் அசோக்கால் (சரத் பாபு) ஏமாற்றப்படுகிறார். அண்ணாமலையின் வீடு இடிக்கப்பட்டு, அவரது குடும்பம் (கால்நடைகள் உட்பட) வெளியேற்றப்படும்போது பழிவாங்க சபதம் செய்கிறார். இதன் விளைவாக, அசோக்கை எதிர்த்து அண்ணாமலையின் போராட்டம் தொடங்குகிறது.

    அண்ணாமலையின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் மற்றும் சுரேஷ் கிருஷ்ணா இருவர் கூட்டணியில் வீரா (1994), பாஷா (1995), மற்றும் பாபா (2002) ஆகிய படங்கள் எடுக்கப்பட்டது.

    கே.பாலச்சந்தரின் கவிதாலயா தயாரிப்பில் வெளியான அண்ணாமலை படத்தில் குஷ்பு, ரேகா, ராதா ரவி, ஜனகராஜ், நிழல்கள் ரவி, மனோரமா ஆகியோரும் நடித்துள்ளனர். தேவா இசையமைப்பில் வெளியான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. 

    • தனது நிலைப்பாட்டில் நின்று அதற்குப் பதிலடி கொடுத்த இளம் கவுரி கிஷனுக்கு பாராட்டுகள்.
    • அதே ஆண்கள், பெண்கள், நடிகர்கள், தங்கள் குடும்பங்களில் உள்ள பெண்களைப் பற்றி அதே கேள்வியைக் கேட்டால் சரியா?

    அபின் ஹரிஹரன் இயக்கி ஆதித்யா மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன் ஆகியோர் நடித்துள்ள 'அதர்ஸ்' படம் இன்று முதல் திரைக்கு வருகிறது. சென்னையில் கடந்த வாரம் நடந்த பட விழாவில், ஆதித்யா மாதவனிடம் 'பாடல் காட்சியில் கதாநாயகி கவுரி கிஷனை தூக்கி ஆடினீர்களே... வெயிட்டாக இருந்தாரா? எவ்வளவு எடை இருந்தார்? என்று வேடிக்கையாக கேட்கப்பட்டது. இதையடுத்து யூ-டியூப் சேனல் பேட்டி ஒன்றில் பேசிய கவுரி கிஷன், இந்த கேள்வி குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார்.

    இதற்கிடையில் நேற்று நடந்த ஒரு விழாவில் பேசிய கவுரி கிஷனிடம் இதுபற்றி கேட்கப்பட்டது. அப்போது கவுரி கிஷன் 'இதுபோன்ற கேள்விகள் அபத்தமானது. இது டைரக்டரின் தேர்வு. நீங்கள் யார் கேள்வி கேட்பதற்கு?', என்று ஆவேசப்பட்டார். இதையடுத்து பத்திரிகையாளர்களுக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.

    அப்போது கவுரி கிஷன், ''இத்தனை ஆண்கள் உள்ள இடத்தில் ஒரு பெண்ணான என்னை 'டார்கெட்' செய்து கேள்வி கேட்கிறீர்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் தனி உடலமைப்பு இருக்கும். அதற்காக என் உடல் எடை குறித்து கதாநாயகனிடம் கேட்கலாமா... இது உருவக்கேலி செய்வது போலத்தான். என் எடையை தெரிந்துகொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்?'', என்று ஆதங்கப்பட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் படக்குழுவினர் கேட்டுக்கொண்டதால் அவர் அமைதியானார். இது படவிழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இச்சம்பவம் தொடர்பான வீடியோ வைரலான நிலையில் திரை பிரபலங்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் நடிகை கவுரி கிஷனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், நடிகையும், பா.ஜ.க. மாநில துணை தலைவியுமான குஷ்பு, கவுரி கிஷனுக்கு ஆதரவாக எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    * பத்திரிகைத்துறை தனது தளத்தை இழந்துவிட்டது.

    * பத்திரிகையாளர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் பத்திரிகைத்துறையை சாக்கடைக்கு எடுத்துச் செல்கிறார்கள்.

    * ஒரு பெண்ணின் எடை எவ்வளவு என்பது அவர்களின் வேலை இல்லை. அதைப் பற்றி ஹீரோவிடம் கேட்பது?? என்ன ஒரு அவமானம்!

    * தனது நிலைப்பாட்டில் நின்று அதற்குப் பதிலடி கொடுத்த இளம் கவுரி கிஷனுக்கு பாராட்டுகள்.

    * அதே ஆண்கள், பெண்கள், நடிகர்கள், தங்கள் குடும்பங்களில் உள்ள பெண்களைப் பற்றி அதே கேள்வியைக் கேட்டால் சரியா?

    * மரியாதை ஒருபோதும் ஒரு வழி போக்குவரத்து அல்ல. மதிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் மரியாதை கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார். 



    • மக்களிடம் போய் சேரும்போது தி.மு.க.வோட ஸ்டிக்கரை ஒட்டி, அவங்க திட்டங்கள் மாதிரி கொண்டு போயிடறாங்க.
    • இன்னைக்கு தமிழ் நாட்டுல சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா இருக்கு.

    தமிழக பா.ஜ.க. துணைத் தலைவர் குஷ்பு அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் விவசாயிகளுக்கான திட்டங்கள், பெண்களுக்கான திட்டங்கள், மாணவர்களுக்கான திட்டங்கள் என பல்வேறு தரப்பு மக்களுக்கான நல்ல திட்டங்கள் பிரதமர் மோடி தலைமையில் கொண்டு வரப்பட்டிருக்கு. இந்தத் திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதே எங்கள் பணி.

    ஆனா அது மக்களிடம் போய் சேரும்போது தி.மு.க.வோட ஸ்டிக்கரை ஒட்டி, அவங்க திட்டங்கள் மாதிரி கொண்டு போயிடறாங்க. பொதுமக்களிடம் போய் சேர வேண்டிய நல்ல திட்டங்களின் சலுகைகளை, தி.மு.க.வினர் நடுவில் எடுத்துக்கறதுனால, சாதாரண மக்களிடம் அதுபோய் சேர்வது இல்லை அதனால நாங்க மக்களை சந்திச்சுப் பேசப் போறோம்.

    இன்னைக்கு தமிழ் நாட்டுல சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா இருக்கு. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்துல அத்தனை பேர் இறந்து போனாங்க. அந்த வழக்கு என்னாச்சு? அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் விவகாரம் என்னாச்சு?

    எங்க பார்த்தாலும் செயின் பறிப்பு, கொலை, கொள்ளை. காவல் துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இது எதற்குமே பதில் இல்லை. இது எல்லாமே மூடி மறைக்கப்படுது. தி.மு.க.வின் அந்த முகத்திரையைக் கிழிச்சு மக்களிடம் அம்பலப்படுத்துவோம். மக்களுக்குப் பயனளிக்காமல், தினமும் பயத்துடன் வாழக்கூடிய சூழலை உருவாக்கி வைத்திருக்கிற தி.மு.க.வைப் பற்றிய உண்மைகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதும் எங்கள் பணிதான்.

    இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.

    • விஜய் பா.ஜ.க.வை கொள்கை எதிரி என்று கூறினாலும் அவர் எப்போதும் என் தம்பிதான்.
    • தி.மு.க. ஆட்சியில் எத்தகைய தவறுகள் நடக்கிறது என்பது விஜய்க்கு நன்றாக தெரியும்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் பட்டியல் நேற்று வெளியானது. இதில் நடிகை குஷ்புவுக்கு துணை தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. துணை தலைவராக நியமிக்கப்பட்டு உள்ள குஷ்பு கூறியதாவது:-

    இந்தப் பதவி நான் எதிர்பாராதது. எதிர்பாராத மகிழ்ச்சியை கொடுத்து உள்ளது. இதற்காக கட்சிக்கு எனது இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பா.ஜ.க.வை பொறுத்தவரை முன்பு சரியான பதவி தரப்படவில்லை என்று சொல்வது ஏற்புடையதல்ல. நான் பா.ஜ.க.வில் இணைந்த உடனேயே சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் பொறுப்பு வழங்கப்பட்டது. அதன் பிறகு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார்கள்.அதன்பிறகும் தேசிய செயற்குழு உறுப்பினர், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் என்ற பதவிகளை எல்லாம் வழங்கினார்கள்.

    என்னைப் பொருத்தவரை பா.ஜ.க.வில் கொடுக்கும் பொறுப்பில் இருந்து தனது வேலையை அமைதியாக செய்தாலே போதும் கட்சித் தலைமை மகுடம் சூட்டி மகிழும்.

    தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இனி மாநில தலைவர் முறையான பயிற்சிகளையும் வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்குவார். அதன்படி மக்களிடம் கட்சியை வளர்க்கவும் பிரதமர் மோடி செயல்படுத்தியுள்ள நல்ல திட்டங்கள் பற்றியும், விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் முன்னேற்றத்திற்கும் பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள திட்டங்கள் பற்றியும் மக்களிடம் எடுத்துச் சொல்வோம்.

    முன்பெல்லாம் வறுமை, ஊழல் மலிந்த தேசமாகவே இந்தியாவை மற்ற நாடுகள் பார்த்தன. ஆனால் இப்போது இந்தியாவின் வளர்ச்சியையும், கட்டமைப்பையும் ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்க்கின்றன.உலக அளவில் முதலாவது 5 நாடுகளில் ஒன்றாக இந்தியா வளர்ந்துள்ளது.

    பிரதமர் மோடியை பார்த்து இப்படி ஒரு தலைவரை பார்த்தது இல்லை என்று உலக நாடுகள் எல்லாம் வியக்கின்றன. பிரதமர் மோடி பற்றி நான் தமிழகம் முழுவதும் சென்று பேசுவேன்.

    தமிழ்நாட்டில் மக்களின் வாழ்வாதாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இதற்காக பிரதமர் மோடி நிறைய செய்து இருக்கிறார். இதுபற்றி அனைத்து தொகுதிகளுக்கும் சென்று பேசுவேன்.

    நடிகர் விஜய் பா.ஜ.க.வை கொள்கை எதிரி என்று கூறினாலும் அவர் எப்போதும் என் தம்பிதான். அரசியல் ரீதியாக அவர் வேறு இடத்தில் இருந்தாலும் அவருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வரும் தேர்தலில் அவர் வெற்றி பெறுவாரா? என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள்.

    அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்து இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த கூட்டணிக்கு மேலும் கட்சிகள் வருவது பற்றி அ.தி.மு.க.-பா.ஜ.க. மேலிட தலைவர்கள் பேசி முடிவு செய்வார்கள். மற்றபடி கூட்டணி விவகாரங்கள் பற்றி நான் மேலிட அனுமதி இல்லாமல் பேச இயலாது.

    என்றாலும் தம்பி என்ற முறையில் விஜய்க்கு அழைப்பு விடுக்கிறேன். விஜய் கட்சியின் முக்கிய குறிக்கோளே தி.மு.க.வை வருகிற தேர்தலில் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான்.

    இதே கொள்கையுடன்தான் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியும் இருக்கிறது. நீங்கள் தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்று நினைத்தால் நாம் அனைவரும் ஒரே அணியில் கைகோர்க்க வேண்டும்.

    தி.மு.க. ஆட்சியில் எத்தகைய தவறுகள் நடக்கிறது என்பது விஜய்க்கு நன்றாக தெரியும். தி.மு.க. அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியை தழுவி இருப்பதும் தெரியும். எனவே அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணிக்கு விஜய் வருவதுதான் சரியான முடிவாக இருக்கும் என்பது எனது கருத்தாகும்.

    இந்த தேர்தலில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் வரும். ஆனால் இப்போதும் முதல்வர் கண்ணை கட்டிக்கொண்டு சுற்றி இருப்பவர்கள் சொல்லிக் கொடுப்பதை கேட்டு எல்லாம் நன்றாக நடக்கிறது என்று பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த 4 ஆண்டுகளில் திமுக செய்த சாதனைகள் என்ன? தினமும் கொலை, கொள்ளை, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள், போதை பழக்கங்கள் அதிகரிப்பு என்று தமிழகம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

    பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பது போதும் எங்கள் வெற்றிக்கு என்று தி.மு.க.வினர் கூறுகிறார்கள். ஆனால் பெண்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சிக்கு வரும்போது அனைத்து பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால் சொன்னபடி செய்தார் களா? பலருக்கு அந்த பணம் கிடைக்கவில்லை.

    இப்போது கணக்கெடுக்கும் போது தான் கள நிலவரம் கலவரமாக இருக்கிறதே என்று கலங்கி போய் இருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் கணக்கெடுப்பதை ஆட்சிக்கு வந்ததும் முறையாக கணக் கெடுத்து எல்லா பெண்களுக்கும் வழங்கி இருக்கலாமே. ஏன் செய்யவில்லை? இதுதான் தி.மு.க.வின் தேர்தல் ஏமாற்று வேலை. ஆனால் இந்த முறை மக்கள் ஏமாற மாட்டார்கள்

    இவ்வாறு அவர் கூறினார்.

    • துணைத் தலைவர்களாக 14 பேரை நியமனம் செய்து மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவிப்பு.
    • பாஜக மாநில பொருளாளராக சேகர், இணைப் பொருளாளராக சிவசுப்பிரமணியம் நியமனம்.

    தமிழக பாஜக மாநில துணைத் தலைவர்களாக 14 பேரை நியமனம் செய்து மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.

    அதன்படி, தமிழக பாஜக துணைத்தலைவராக (தென்சென்னை) நடிகை குஷ்பு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    மாநில துணைத்தலைவர்களாக சர்கவரத்தி, துரைசாமி, ராமலிங்கம், கரு. நாகராஜன், சசிகலா புஷ்பா கனகசபாபதி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும், பாஜக மாநில துணைத் தலைவர்களாக டால்பின் ஸ்ரீதர், சம்பத், பால் கனகராஜ், ஜெயபிரகாஷ், வெங்கடேசன் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    பாஜக மாநில பொதுச் செயலாளர்களாக பால கணபதி, ஸ்ரீநிவாசன், முருகானந்தம், கார்த்தியாயினி, ஏ.பி. முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    பாஜக மாநில பொருளாளராக சேகர், இணைப் பொருளாளராக சிவசுப்பிரமணியம் நியமனம் செய்து நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.

    • மற்றவர்களை விட பா.ஜ.க. கட்சியினருக்கு கடவுள் நம்பிக்கை கொஞ்சம் அதிகம்.
    • பா.ஜ.க.வை எதிர்ப்பது போல் தமிழகத்தின் கலாச்சாரத்தை எதிர்க்கிறீர்கள்.

    சென்னை:

    மதுரையில் நாளை இந்து முன்னணி சார்பில் நடத்தப்படும் பிரமாண்டமான முருகர் மாநாட்டுக்கு பா.ஜ.க. உள்ளிட்ட இந்து அமைப்புகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.

    மாநாடு நாளை நடைபெற உள்ள நிலையில் மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடு காட்சி அரங்குகளை பார்ப்பதற்கு இப்போதே ஏராளமானவர்கள் திரண்டு வருகிறார்கள். அதேநேரம் இந்த மாநாடு அரசியல் ரீதியாகவும் விமர்சிக்கப்படுகிறது. தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் பா.ஜ.க. அரசியல் ஆதாயத்திற்காக மதத்தை பயன்படுத்துவதாக விமர்சனம் செய்து வருகின்றன.

    இதுதொடர்பாக பா.ஜ.கவை சேர்ந்த நடிகை குஷ்பு கூறியதாவது:-

    நாளை நடைபெறும் முருகர் மாநாட்டில் பல லட்சம் மக்கள் பங்கேற்பார்கள் என்பது இதை விமர்சிப்ப ர்களுக்கும் தெரியும். முதலில் கடவுளை அரசியல் கட்சிகளின் பட்டியலில் சேர்ப்பது தவறு. மேலும் இந்த முருகர் மாநாட்டை நடத்துவது பா.ஜ.க. அல்ல. இந்து முன்னணி அமைப்புதான் நடத்துகிறது.

    மற்றவர்களை விட பா.ஜ.க. கட்சியினருக்கு கடவுள் நம்பிக்கை கொஞ்சம் அதிகம். எனவே தான் இந்த மாநாட்டிற்கு ஆதரவாக இருக்கிறோம் .அதை வைத்து பா.ஜ.க. மீது களங்கம் கற்பிக்க முயன்றால் அதன் எதிர்வினை அவர்களுக்கு தான் பாதகமாக இருக்கும். முதலில் தி.மு.க.வினர் தங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா? இல்லையா? என்பதை தெளிவுபடுத்தட்டும்.

    இந்துக்களின் கடவுள் நம்பிக்கையை கொச்சைப்படுத்துகிற தி.மு.க.வை சேர்ந்த குடும்பத்தினர் தான் கோபுரங்கள் முன்பு நின்று கொண்டும் குங்குமம் திருநீறு அணிந்தும் போட்டோக்களுக்கு போஸ் கொடுப்பதை பார்க்கிறோம். ஆக உங்களிடம் இரண்டு முகம் இருக்கிறது. கடவுள் நம்பிக்கை இல்லை என்றால் உங்கள் குடும்பத்தினரையும் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கக்கூடாது. கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்லி விட்டு நாங்களும் முருகர் மாநாடு நடத்தினோம் என்று சொல்லுவது ஏன்? பொங்கல் நேரங்களில் பொங்கல் வைத்து வழிபடவும் செய்கிறார்கள்.

    இப்படி கடவுள் பெயரைச் சொல்லியே இத்தனை ஆண்டுகளாக நாடகம் போட்டு வருகிறார்கள். முருகன் என்றால் அழகு. முருகன் தமிழ் கடவுள். என்று தமிழ் மக்கள் பெருமைப்படுகிறார்கள். முருகரை வணங்குவது தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் தானே? பஞ்சாப்புக்கு சென்றால் சீக்கியர்களுக்கு பொற்கோவில் அடையாளமாக இருக்கிறது.

    ஆந்திராவுக்கு சென்றால் திருப்பதி பாலாஜி அடையாளமாக இருக்கிறார். அதே போல் தமிழகத்தில் உள்ளவர்களுக்கு அறுபடை முருகன் அடையாளமாக திகழ்கிறார். அப்படிப்பட்ட தமிழர்களின் அடையாளத்தை கொச்சைப்படுத்தவும் சிறுமைப்படுத்தவும் அரசியல் கலந்து நாசப்படுத்தவும் முயற்சிக்கிறது தி.மு.க.

    பா.ஜ.க.வை எதிர்ப்பது போல் தமிழகத்தின் கலாச்சாரத்தை எதிர்க்கிறீர்கள். முருகர் என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம்.

    சாதியை வைத்தும் ஓட்டுக்காக மதத்தை வைத்தும் அரசியல் செய்து வரும் தி.மு.க.வினர் இப்போது தங்கள் அரசியலுக்காக மக்களின் நம்பிக்கையையும் உடைக்க பார்க்கிறார்கள். தி.மு.க.வினரின் விமர்சனம் பா.ஜ.க.வுக்கு எதிரானது அல்ல. மக்கள் நம்பிக்கைக்கு எதிரானது. இதை தமிழக மக்கள் உணர்வார்கள்.

    கடவுள் நம்பிக்கை கொண்ட மக்கள் ஒன்று திரண்டு தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்து வதிலும் பலப்படுத்துவதிலும் உங்களுக்கு என்ன பிரச்சனை?

    தி.மு.க.வினர் இரண்டு முகங்களோடு ஓட்டு வங்கி அரசியலுக்காக நடத்தும் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் ரசிக்க மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • சுந்தர்.சி எப்படிப்பட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும்.
    • நயன்தாரா கடந்த காலத்தில் நடித்த ஒரு கதாபாத்திரத்தில் மீண்டும் நடித்து வருகிறார்.

    நயன்தாரா 'மூக்குத்தி அம்மன் 2-'ம் பாகத்தில் நடித்து வருகிறார். சுந்தர்.சி இயக்குகிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பில் உதவி இயக்குனர் ஒருவர் நயன்தாராவிடம் அவர் நடிக்க வேண்டிய காட்சிகளை விளக்கி சொன்னதாகவும் அப்போது நயன்தாரா இடைமறித்து உதவி இயக்குனரிடம் சில கேள்விகளை கேட்டதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தகவல் பரவியது.

    இந்த மோதலை தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும், நயன்தாராவுக்கு பதில் தமன்னாவை நடிக்க வைக்க யோசனை நடப்பதாகவும் பேசப்பட்டது. இதற்கு படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான குஷ்பு விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் குஷ்பு வெளியிட்ட அறிக்கையில், "சுந்தர்.சியின் நலம் விரும்பிகளுக்கு தெரிவிப்பது, மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து தேவையற்ற வதந்திகள் பரவி வருகின்றன. அது உண்மையல்ல.

    படப்பிடிப்பு திட்டமிட்டபடி சுமூகமாக நடந்து வருகிறது. சுந்தர்.சி எப்படிப்பட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். நயன்தாரா திறமையான நடிகை. அதை அவரே நிரூபித்து இருக்கிறார்.

    நயன்தாரா கடந்த காலத்தில் நடித்த ஒரு கதாபாத்திரத்தில் மீண்டும் நடித்து வருகிறார். தற்போது பரவும் வதந்திகள் திருஷ்டி எடுத்த மாதிரி. நடப்பதெல்லாம் நல்லதுக்கே. உங்களின் ஆசிர்வாதம், அன்பை நம்புகிறோம். அடுத்த வெற்றிப்படத்துக்கு காத்திருங்கள்'' என்று கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×