என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முருக பக்தர்கள் மாநாடு"

    • இந்து முன்னணி சார்பில் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது.
    • மாநாட்டில் நீதிமன்ற உத்தரவை மீறி மதவெறியைத் தூண்டும் வகையில் பேசப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

    மதுரை:

    இந்து முன்னணி சார்பில் கடந்த மாதம் 22-ந்தேதி மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு அனுமதி தொடர்பான மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, ''மதவெறியைத் தூண்டும் அரசியல் உரைகள் கூடாது. இதனை முன்கூட்டியே காவல்துறை உறுதி செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் மாநாட்டில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என உத்தரவிட்டிருந்தது.

    இதையடுத்து நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் நீதிமன்ற உத்தரவை மீறி மதவெறியைத் தூண்டும் வகையில் பேசப்பட்டதாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் புகார் அளித்திருந்தார்.

    இந்த நிலையில், மதுரை அண்ணாநகர் போலீசார், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் உள்ளிட்டோர் மீது மதம், இனம் குறித்து பேசி பகைமையை உருவாக்குதல், மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் பேசுதல், மத ரீதியாக புண்படுத்தி பேசுதல், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    • இந்து முன்னணி நடத்திய மாநாட்டில் நாங்கள் கலந்து கொண்டோம். அவ்வளவு தான்.
    • குடும்ப ஆட்சியை மக்கள் நிச்சயமாக விரும்பமாட்டார்கள்.

    நெல்லை:

    தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. இன்று பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் உள்ள தனது இல்லத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. அண்மையில் நடத்திய முத்தமிழ் முருகர் மாநாடு உண்மையான முருகர் மாநாடு கிடையாது. முருகருடைய அருள் எங்களுக்குத்தான் கிடைக்கும்.

    கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், கடவுளை கல்லாக நினைத்து தூக்கிப் போட்டு உடைப்பவர்கள், மற்ற மதங்களை இழிவாக பேசுபவர்கள் முருகர் மாநாடு நடத்தினால், முருகர் எப்படி அவர்கள் பக்கம் போவார்.

    மதுரையில் நாங்கள் நடத்திய முருகர் மாநாட்டில் 5 லட்சம் பேருக்கும் மேல் கலந்து கொண்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது முழுக்க முழுக்க ஒரு பக்தி மாநாடு தான். அதில் நாங்கள் யாரையும் தவறான இடத்திற்கு கொண்டு செல்லவோ, குறை சொல்லவோ இல்லை.

    அரசியல் பேசவில்லை. பிற மதங்களையோ, யாரையும் புண்படுத்தியோ பேசவில்லை. இந்த மாநாட்டில் எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கேட்கவும் இல்லை.

    இந்து முன்னணி நடத்திய மாநாட்டில் நாங்கள் கலந்து கொண்டோம். அவ்வளவு தான். இதைத் தேர்தல் பயன்பாட்டிற்காகவோ, மக்களை குழப்புவதற்காகவோ, வாக்கு வங்கியாக மாற்றவோ நாங்கள் முயற்சிக்கவில்லை.

    திருச்செந்தூர் கும்பாபிஷேகம் பக்தர்களுக்கு பொதுவானது. தி.மு.க. தனது பெயருக்காக அதனை மாற்ற பயன்படுத்துகிறது.

    அவர்கள் முதலில் ஒரு முருகன் மாநாடு நடத்தினர். அது முருகர் பக்தி மாநாடா என்று எங்களுக்குத் தெரியாது. நாங்கள் நடத்தியது முருகர் பக்தர்களுடைய மாநாடு. ஆனால் இப்போது அவர்கள் அதை திசை திருப்பி, தி.மு.க.வுக்கு சாதகமான வாக்கு வங்கியாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு நயினார் நாகேந்திரன் பதில் அளித்தார்.

    கேள்வி: 2026 சட்டமன்றத் தேர்தலிலும், 2031, 2036 தேர்தல்களிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளாரே?

    பதில்: தி.மு.க. தொடர்ந்து 2-வது முறையாக ஜெயித்ததாக வரலாறு கிடையாது. அந்த வரலாறு மாறப் போவதில்லை. அதனால் அவர்கள் சொல்வதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். குடும்ப ஆட்சியை மக்கள் நிச்சயமாக விரும்பமாட்டார்கள். அதற்கு அடுத்த தலைமுறை ஆட்களும் தயாராக இருக்கிறார்கள். அதை நிச்சயமாக யாரும் விரும்பமாட்டார்கள்.

    அ.தி.மு.க.-பா.ஜ.க கூட்டணி என்று அமித்ஷா சொன்னதில் இருந்து தி.மு.க.வினர் பயத்தில் ஒன்று சொல்லி, அதனை மாற்றி மாற்றிச் சொல்கின்றனர். அவர்களுக்கு தேர்தல் பயம், தோல்வி பயம் வந்துவிட்டது.

    கேள்வி: 2026-ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று அமித்ஷா கூறியுள்ளார். அதற்கு அ.தி.மு.க.வை சேர்ந்த வைகை செல்வன், கூட்டணி ஆட்சி அமைக்க தமிழக மக்கள் விரும்ப மாட்டார்கள் எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக என்ன கூற விரும்புகிறீர்கள்?

    பதில்: இதைப்பற்றி அமித்ஷாவும், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பழனிசாமியும் பேசுவார்கள்.

    கேள்வி: கூட்டணி ஆட்சியின்போது முதலமைச்சர் யார்? என்பது குறித்து அமித்ஷா பேசிய போது பழனிசாமியின் பெயரை சொல்லவில்லையே?

    பதில்: எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும் என்று ஏற்கனவே அமித்ஷா சொல்லிவிட்டார். இன்று பேசுவதை சொல்லக்கூடாது.

    கேள்வி: விஜய் கூட்டணிக்கு வருவாரா?

    பதில்: நல்லதே நடக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேசிய கல்விக் கொள்கையை அனைவரும் வரவேற்கிறார்கள். நாங்கள் யாருக்கும் பாகுபாடு காட்டவில்லை.
    • தி.மு.க. ஆட்சி அகற்றப்படுவது உறுதி.

    கோவை:

    கோவை பீளமேட்டில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் இன்று எமர்ஜென்சி அமுல்படுத்தப்பட்ட 50 ஆண்டு நிறைவு தின நிகழ்ச்சி நடந்தது.

    இதையொட்டி நடந்த புகைப்பட கண்காட்சியை பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இன்று இந்திய நாட்டின் வரலாற்றில் முக்கியமான நாள். 1974-ம் வருடம் ஜூன் 25-ந்தேதி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மூலம் செயல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதன் தீமைகள் மற்றும் அதனால் ஏற்பட்ட விளைவுகள் நெருக்கடியான அந்த காலகட்டத்தில் இந்திய ஜனநாயகம் எப்படி இருந்தது என்பது குறித்து இளைஞர்களிடம் எடுத்துக் கூறுவதற்காக இந்த கண்காட்சி மற்றும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

    இன்று தி.மு.க., காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. ஆனால் நெருக்கடி நிலை காலகட்டத்தில் தான் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினர் கொடுமைகளை அனுபவித்தார்கள். அரசியல் கட்சியினர் சிறைகளில் மிக மோசமாக நடத்தப்பட்டார்கள்.

    எதற்காக நாங்கள் இதைச் சொல்கிறோம். கடந்த கால வரலாற்றை மறக்கக்கூடாது. இதற்காக காங்கிரஸ் கட்சி இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை. இது போன்ற நிகழ்வுகள் இனி நடக்கக்கூடாது என்பதை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம்.

    இன்று திருப்பூரில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் நெருக்கடி நிலை உள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது. நாங்கள் கல்வியில் அரசியல் செய்யவில்லை. தேசிய கல்விக் கொள்கை நாடு முழுவதும் மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு கொண்டுவரப்பட்டது. தனது அரசின் தோல்விகளை மறைக்கவே தி.மு.க.வினர் மத்திய அரசை குறை கூறுகிறார்கள்.

    தேசிய கல்விக் கொள்கையை அனைவரும் வரவேற்கிறார்கள். நாங்கள் யாருக்கும் பாகுபாடு காட்டவில்லை.

    முருக பக்தர்கள் மாநாட்டால் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை. எங்கள் கூட்டணி நன்றாக உள்ளது.

    கூட்டணி ஆட்சி குறித்து அமித்ஷா தெளிவாக பேசி விட்டார். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அ.தி.மு.க. தான் தலைமை தாங்குகிறது. தி.மு.க. ஆட்சி அகற்றப்படுவது உறுதி.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பா.ஜ.க. தலைவர் ரமேஷ் குமார், எஸ்.ஆர். சேகர், வீர தமிழச்சி சரஸ்வதி, காளப்பட்டி மண்டல தலைவர் உமாதேவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • நடிகர் சத்யராஜுக்கு பெரியார் ஒளி விருது வழங்கப்பட்டது.
    • தமிழறிஞர் சண்முகதாசுக்கு செம்மொழி ஞாயிறு விருதும் வழங்கப்பட்டது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 2025-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி. வரவேற்று பேசினார்.

    இதில் பொதுசெயலாளர் சிந்தனை செல்வன், துணை பொதுச்செயலாளர்கள் வன்னியரசு, ஆளுர் ஷாநவாஸ், பனையூர் பாபு, மாவட்டச்செயலாளர்கள் இளங்கோ, ஜேக்கப், கரிகால்வளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    விழாவில், ஆந்திராவில் உள்ள திராவிடப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் கே.எஸ்.சலமுக்கு அம்பேத்கர் சுடர் விருது, நடிகர் சத்யராஜுக்கு பெரியார் ஒளி விருது, தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தியாகுவுக்கு மார்க்ஸ் மாமணி விருது வழங்கப்பட்டது.

    புதுச்சேரி முன்னாள் முதல்-மந்திரி வைத்திலிங்கத்துக்கு காமராசர் கதிர் விருது, பவுத்த ஆய்வறிஞர் ஜம்புலிங்கத்துக்கு அயோத்தி தாசர் ஆதவன் விருது, தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை தலைவர் காஜா முயீனுத்தீன் பாகவிக்கு காயிதேமில்லத் பிறை விருது வழங்கப்பட்டது. தமிழறிஞர் சண்முகதாசுக்கு செம்மொழி ஞாயிறு விருதும் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் பேசியதாவது:- கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்பதில் நமக்கு பிரச்சனை இல்லை. நமக்கு பிரச்சனையே சாதி ஒழிப்பு, தமிழ் தேசியம்...

    சாதி வைத்து தமிழ் தேசியம் எப்படி சாத்தியமாகும். ஆணவக் கொலை எப்படி நடக்கிறது? ஒரு தமிழனை இன்னொரு தமிழன் தான் வெட்டுகிறான். சாதி ஒழியாமல் எப்படி தமிழ் தேசியம் மலரும்? சாதி ஒழிப்பு, தமிழ் தேசியம்... அதுதான் முக்கியமான கொள்கை.

    பெரியாரிடம் ஒருவர் கேட்டார்... ஆத்திகத்துக்கும்- நாத்திகத்துக்கும் என்ன வித்தியாசம் என்று... அதற்கு பெரியார், கோவிலில் கடவுள் சிலைக்கு முன்னாடி ஒரு உண்டியல் வைக்குறீங்க இல்லையா... அதுக்கு பெயர் ஆத்திகம். அந்த கடவுளையை நம்பாமல் அந்த உண்டியலுக்கு பூட்டு போடுறீங்க இல்லையா அதுக்கு பெயர் நாத்திகம். முருகனுக்காக ஒரு மாநாடு நடத்தி இவர்களை ஏமாற்றிவிட்டோம் என்று நினைக்கிறார்கள். ஆனால், முருகன் உங்களை ஏமாற்றிவிடுவார் என்றார். 

    • நாங்களும் அந்த வழியைப் பின்பற்றி கொண்டு வருபவர்கள்தான்.
    • இருபெரும் தலைவர்களை விமர்சித்து 'முருக பக்தர்கள் மாநாடு' என்ற போர்வையில் இந்து முன்னணி வீடியோ வெளியிட்டது கடும் கண்டனத்திற்குரியது.

    சென்னை :

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பகுத்தறிவுச் சிந்தனைகளை பட்டிதொட்டியெங்கும் எடுத்துச் சென்று சமுதாயத்தில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார். தந்தை பெரியாரின் கொள்கைகளை, திராவிட சித்தாந்தத்தை முன்னிறுத்தி தேர்தலில் களம் கண்டு தமிழக அரசியலில் மிகப்பெரிய ஆட்சி மாற்றத்தை உருவாக்கிய பெருமைக்குரியவர் பேரறிஞர் அண்ணா.

    பேரறிஞர் அண்ணாவின் கொள்கைக்கு மாறான ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்றபோது அதனை எதிர்த்து பேரறிஞர் அண்ணாவின் பெயரில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தைத் தொடங்கி, கட்சியின் கொடியில் அவரது உருவத்தைப் பொரித்து, தொடர்ந்து மூன்று முறை தமிழ்நாட்டில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியினை அமைத்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரைத் தொடர்ந்து, போறிஞர் அண்ணா காட்டிய வழியில் நான்கு முறை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை அமைத்தவர் புரட்சித் தலைவி. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழக மக்களால், மக்கள் சக்தியை தன்னகத்தே கொண்ட புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி ஆகியோரால் மதிக்கப்பட்ட போற்றப்பட்ட தலைவர்கள் தந்தை பெரியார் மற்றும் போறிஞர் அண்ணா ஆகியோர். நாங்களும் அந்த வழியைப் பின்பற்றி கொண்டு வருபவர்கள்தான்.

    தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய புரட்சியை உருவாக்கிய தந்தை பெரியார் மற்றும் போறிஞர் அண்ணா ஆகிய இருபெரும் தலைவர்களை விமர்சித்து 'முருக பக்தர்கள் மாநாடு' என்ற போர்வையில் இந்து முன்னணி வீடியோ வெளியிட்டது கடும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார். 

    • இந்து முன்னணியின் செயலை அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் கண்டிக்கிறது.
    • முருக பக்தர்கள் மாநாடு என்று அழைத்துவிட்டு விரும்பத்தகாத காட்சிகளை ஒளிபரப்பி இருக்கக்கூடாது.

    மதுரையில் நடைபெற்ற முருகன் மாநாட்டில் பெரியார், அண்ணாவை விமர்சித்துள்ள நிலையில், அதில் பங்கேற்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களுக்கு தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் சேலத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * இந்து முன்னணி மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த வீடியோ தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

    * இந்து முன்னணியின் செயலை அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் கண்டிக்கிறது.

    * எங்களின் வழிகாட்டியாக உள்ள பெரியாரையும், அண்ணாவையும் இழிவு செய்வதை ஏற்க முடியாது.

    * முருக பக்தர்கள் மாநாடு என்று அழைத்துவிட்டு விரும்பத்தகாத காட்சிகளை ஒளிபரப்பி இருக்கக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. ஒருநாளும் கொள்கையையும், கட்சியின் கோட்பாடுகளையும் விட்டுக் கொடுக்காது.
    • முருகன் பக்தர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும், அ.தி.மு.க.விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

    சென்னை:

    முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி துணை தலைவருமான ஆர்.பி.உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    முருக பக்தர்கள் மாநாட்டிற்கு விடுக்கப்பட்ட அன்பான அழைப்பினை ஏற்று கலந்து கொண்டோம். முருக பக்தர்கள் என்ற அடிப்படையிலேயே தான் கலந்து கொண்டோம். அரசியல் இருக்காது என்ற நம்பிக்கையோடு தான் முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்றோம்.

    பெரியார், அண்ணா குறித்த அவதூறான வீடியோ ஒளிபரப்பப்பட்டதற்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

    அ.தி.மு.க. ஒருநாளும் கொள்கையையும், கட்சியின் கோட்பாடுகளையும் விட்டுக் கொடுக்காது. இது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். ஏன் தி.மு.க.வுக்கும் நன்றாக தெரியும். ஆனால் அ.தி.மு.க. மீது அவதூறு பரப்புவதற்கு ஏதாவது சாக்குபோக்கு கிடைக்காதா என்ற வகையில் தான் அவர்கள் அவதூறு பரப்புகிறார்கள்.

    முருகன் பக்தர்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும், அ.தி.மு.க.விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.

    • முருக பக்த மாநாட்டுத் தீர்மானங்கள் அரசியலையே பேசுகின்றன.
    • திருப்பரங்குன்றத்தை முன் வைத்து மத வெறியைத் தூண்டுகின்றன.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் இந்து சமய நம்பிக்கை உள்ள மக்களை பா.ஜ.க. தனது அரசியல் சுய லாபத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளும் சதியில் ஈடுபட்டுள்ளதை அங்கு நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் மற்றும் பேசப்பட்ட கருத்துகள் மூலம் வெள்ளிடை மலையாகத் தெரிகிறது.

    தமிழ்நாட்டில் முருகனை முன்வைத்து பாஜக, அரசியலை முன்னெடுப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு பா.ஜ.க 2020ஆம் ஆண்டில் இருந்து முருகனைப் பற்றிப் பேச ஆரம்பித்தது. அந்த ஆண்டு ஜூலையில் முருகனைப் போற்றிப் பாடும் கந்த சஷ்டிக் கவசத்தை அவமதித்ததாக இந்து அமைப்புகளும் பாஜகவும் போராட்டம் நடத்தினர்.

    அதன் தொடர்ச்சியாக வேல் யாத்திரை ஒன்றை நடத்தப் போவதாக பா.ஜ.கவின் அப்போதைய மாநிலத்தலைவர் எல்.முருகன் அறிவித்தார்.

    திருத்தணியில் இருந்து தனது வேல் யாத்திரையைத் தொடங்கிய முருகனை காவல்துறை கைது செய்தது. இதுபோல, தினமும் வேல் யாத்திரை செய்ய முருகன் முயல்வதும், கைது செய்யப்படுவதும் தொடர்ந்து நடந்தது. முடிவில் 2020 டிசம்பர் 6ஆம் தேதி திருச்செந்தூரில் நிறைவு மாநாட்டை நடத்தினர். இதில் அப்போதைய மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜுன் 10 ஆம் தேதி மதுரையில் நடந்த பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார். அப்போது, திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என தி.மு.க. அழைப்பதாகவும் ஜூன் 22ஆம் தேதி மதுரையில் நடக்கும் முருகன் மாநாட்டில் அனைவரும் திரளாகக் கலந்துகொள்ள வேண்டுமென்றும் அழைப்பு விடுத்தார்.

    இது பாஜகவின் அரசியல் அழைப்பு என்பதை மக்கள் அறிவார்கள்.

    தமிழ் கடவுள் என்று தமிழர்கள் கொண்டாடும் குன்றுதோறாடும் குமரனுக்கு ஆண்டு முழுவதும் தைபூசம், விசாகம், சூரசம்ஹாரம், கந்த சஷ்டி திருவிழா, மற்றும் பங்குனி உத்திர விழா என பல விழாக்கள் தமிழ்நாட்டில் காலம் காலமாக நடக்கின்றன.

    இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி மற்றும் பாஜகவும் முருகனுக்கு ஆபத்து என்ற பிம்பத்தைக் கட்டமைக்க விழைவதை தமிழ் மக்கள் புறந்தள்ளுவார்கள்.

    முருக பக்த மாநாட்டுத் தீர்மானங்கள் அரசியலையே பேசுகின்றன.

    திருப்பரங்குன்றத்தை முன் வைத்து மத வெறியைத் தூண்டுகின்றன.

    அறநிலையத் துறையை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றத் தீர்மானம் பாஜகவின் அரசியல் கோரிக்கையாகும்.

    சட்டமன்றத் தேர்தலுக்கு வாக்கு கேட்டு நிறைவேற்றப்பட்ட இன்னொரு தீர்மானம் மாநாட்டின் நோக்கத்தைப் புலப்படுத்துகிறது.

    முருக பக்தர்கள் மாநாட்டில் திராவிடக் கருத்தியலுக்கு எதிராகவும், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரை இழிவு படுத்தியும் காணொளி காட்சிகள் இடம் பெற்றிருந்தது கடும் கண்டனத்துக்குரியது.

    இந்த மாநாட்டில் அறிஞர் அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்று இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்ததை நியாயப்படுத்தவே முடியாது.

    மதத்தையும், அரசியலையும் இணைப்பதை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் விரும்பியதில்லை. மதம் சார்ந்த செயல்பாடுகள் எப்போதும் தேர்தலில் எதிரொலித்தது இல்லை.

    2021ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக பா.ஜ.க. முருகனை முன்னிறுத்தி வேல் யாத்திரையை நடத்தியும்கூட, 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சிக்குப் பெரிய வெற்றி கிடைக்கவில்லை. அ.தி.மு.க கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிட்ட அக்கட்சியால் நான்கு இடங்களை மட்டுமே பெற முடிந்தது. அதே நிலை தான் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் நடக்கும் என்றார்.

    • தமிழக அரசியலை பொறுத்தவரை சாமானியர்கள் இன்று உயர்ந்த பதவியில் இருக்கிறார்கள் என்றால் அதற்கு முழு முதற்காரணம் அண்ணா, பெரியார்தான்.
    • அ.தி.மு.க. தலைமை தான் தி.மு.க.விற்கு வலுவான எதிர்ப்பை கொடுக்கும்.

    சிவகாசி:

    மதுரையில் நேற்று இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில், வீடியோ படம் ஒன்று திரையிடப்பட்டது. அதில் பிள்ளையார் சிலை உடைப்பு போராட்டம் மற்றும் அண்ணா, பெரியார் போன்றோரை விமர்சிப்பது போன்ற காட்சிகளும், நாத்திக நரி, அதர்மம், போலி திராவிடம், வழிபாடு இல்லாத ஆலயமா, கட வுளை காணக்கூட நாணயமா? போன்ற வசனங்களுடன் இடம் பெற்றிருந்தன.

    அதே வேளையில் இந்த மாநாட்டில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கே.டி.ராஜேந்திரபாலாஜி, கடம்பூர் ராஜூ ஆகியோர் பங்கேற்று இருந்தனர். இந்த வீடியோ திரையில் ஒளிப ரப்பானபோது, அவர்கள் எந்தவொரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. மாநாடு நிறைவு பெற்ற நிலையில் அண்ணா, பெரியார் குறித்து முருகன் மாநாட்டில் எழுந்த விமர்சனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதுதொடர்பாக சிவகாசியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. கூட்டணிக்கு ஒரு பயத்தை, ஒரு பீதியை முருக பக்தர்கள் மாநாடு உருவாக்கியிருக்கிறது. இதனால் அவர்கள் மாநாடு குறித்து மாற்று கருத்து தான் கூறுவார்கள். முருக பக்தர்கள் மாநாடு ஆன்மீகத்தின் அடையாளமாக ஒரு எழுச்சி மாநாடாக தான் அமைந்திருந்தது. முருக பக்தர்கள் மாநாட்டில் மக்கள் குவிந்ததன் காரணமாக மக்கள் மத்தியில் ஒரு மாற்றம் வந்திருக்கிறது. ஆளுகின்ற தி.மு.க. அரசிற்கு ஏமாற்றம் கிடைத்துள்ளது.

    அ.தி.மு.க.வில் பா.ஜ.க. இருப்பதால்தான் தங்களால் அ.தி.மு.க. கூட்டணிக்கு செல்ல முடியாது என திருமாவளவன் கூறியுள்ளார். அவரது கருத்துக்கள் அவர் உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து வரக்கூடிய கருத்துக்கள். தி.மு.க. கட்சியோடு மனதளவில் உறவை முடித்துக் கொண்டார். பெயரளவில் மட்டுமே உறவு வைத்துள்ளார். திருமாவளவன் அ.தி.மு.க. கூட்டணி வருவது குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவு எடுப்பார்.

    அ.தி.மு.க. ஏற்படுத்தியுள்ள கூட்டணி வலுவான கூட்டணி. இதில் மாற்றம் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் சிறிதளவும் கிடையாது. தி.மு.க. கூட்டணியில் உள்ள வி.சி.க., ம.தி.மு.க., த.வா.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் உட்பட தி.மு.க. தலைமை மீது அதிருப்தியில் உள்ளனர்.

    தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிக சீட்டுகள் வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றார்கள் என்று சொன்னால் அங்கே பூகம்பம் வெடித்துள்ளது என்று தான் அர்த்தம். தி.மு.க. கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தி.மு.க. கூட்டணி முறியக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. முருக பக்தர்கள் மாநாட்டில் அண்ணாவை விமர்சனம் செய்யும் வகையில் வீடியோவை ஒளிபரப்பியது வருத்தமளிக்கிறது.

    மறைந்த முன்னாள் தலைவர்களை விமர்சிக்கும் வகையில், அதிலும் அண்ணா, பெரியாரை சிறுமைப்படுத்தும் வீடியோவை இந்த முருக பக்தர்கள் ஆன்மீக மாநாட்டில் இந்து முன்னணியினர் வெளியிட்டது தவறு, அதனை தவிர்த்திருக்கலாம். அறிஞர் அண்ணாவின் பேச்சு, செயல், எழுத்துக்கள் சிலரின் மனதை புண்படுத்தி இருக்கலாம். அதனுடைய வெளிப்பாடாக வீடியோ வெளியிட்டு இருக்கலாம்.

    தமிழக அரசியலை பொறுத்தவரை சாமானியர்கள் இன்று உயர்ந்த பதவியில் இருக்கிறார்கள் என்றால் அதற்கு முழு முதற்காரணம் அண்ணா, பெரியார்தான். அவர்கள் இல்லையென்றால் என்னை போன்றவர்கள் கூட அரசியலுக்கு வந்திருக்க முடியாது. அப்பேற்பட்ட தலைவர்கள் பற்றி முருகன் மாநாட்டில் திரையிடப்பட்ட வீடியோ, விமர்சனம் மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

    தமிழர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினராலும் போற்றும் கடவுள் முருகன். அதேபோல் அனைத்து மதங்களையும் மதித்து போற்றும் கட்சி அ.தி.மு.க. என்பதில் மாற்றுக்கருத்தில்லை. எந்த மதம் சார்ந்த விழாக்கள், நிகழ்ச்சிகளில் அ.தி.மு.க. தலைவர்கள் கலந்துகொள்வது பழக்கமாகவும், வழக்கமாகவும் இருக்கிறது. மாற்றுக்கருத்தையும், மாற்று மதத்தினரையும் மதிக்கக்கூடியவர்கள் அ.தி.மு.க.வினர்.

    நேற்று நடைபெற்ற முருகன் மாநாட்டில் அண்ணா குறித்த விமர்சனங்களை தவிர்த்து இருக்கலாம். அப்போது நாகரீகம் கருதி நாங்கள் எதையும் கூறவில்லை. அடித்தட்டு, உழைக்கும் மக்களுக்காகவும், அவர்கள் ஆட்சி, அதிகாரத்திற்கு வருவதற்கும் காரணமாக இருந்தவர்களை விமர்சிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. அ.தி.மு.க. எப்போதும் மக்களுக்காக உழைக்கும் கட்சி.

    ஆன்மீக திருவிழாக்கள் எதுவாக இருந்தாலும், எந்த மதத்தை சார்ந்திருந்தாலும் நாங்கள் கலந்துகொள்வோம். அதில் மிகுந்த பக்குவம் கொண்டவர் எடப்பாடி பழனிசாமி. ஒரு நிகழ்ச்சியில் நடக்கின்ற நல்ல நிகழ்வுகளைப் பற்றி பேசுவோம். அதில் நடந்த ஒரு நிகழ்வைப் பற்றி பேசி அதனுடைய ஒட்டுமொத்த மாநாட்டின் நல்ல கருத்துக்களை புறக்கணிக்க, இன்றைய அரசியல் சூழலில் மறைந்த தலைவர்களின் நல்ல நிகழ்வுகளை பற்றி பேசுவதுதான் சாலச் சிறந்தது. முன்னாள் தலைவர்களின் ஒரு போக்கு சிந்தனைகளையும் அந்த நேரத்தில் எடுத்த முடிவுகளைப் பற்றி தற்போது விமர்சனம் செய்வது தேவை யற்ற விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தி.மு.க. ஆட்சியை எதிர்க்கும் கட்சிகள், அ.தி.மு.க. தலைமையில் இணையும் காலம் விரைவில் வரும். எடப்பாடி பழனிசாமியை தொட்டுப் பார்க்கவோ, அவரது வாழ்வியல் முறையிலோ, கருத்தியல் முறையிலோ தாக்குதல் நடத்தினால் அ.தி.மு.க.வின் எதிர்தாக்குதல் கடுமையாக இருக்கும். எங்கள் வாயில் இருந்து வரக்கூடிய வார்த்தைகள் வெடிகுண்டாக வரும். தி.மு.க. ஐ.டி. பிரிவு தனது மூர்க்கத்தனமான செயல்பாடுகளை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    எடப்பாடி பழனிசாமியை அசிங்கப்படுத்த நினைத்தவர்கள் இன்று ஓரமாக ஒதுங்கி இருக்கிறார்கள். தி.மு.க. அப்படி நினைத்தால் அவர்களும் ஓரமாக ஒதுங்கி இருக்க வேண்டிய சூழல் ஏற்படும். தி.மு.க.வின் ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற எண்ணுகின்ற தலைவர்களில் ஒருவராக தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் இருக்கிறார். விஜய் அ.தி.மு.க. கூட்டணிக்கு வர வேண்டும்.

    அ.தி.மு.க. தலைமை தான் தி.மு.க.விற்கு வலுவான எதிர்ப்பை கொடுக்கும். தி.மு.க.வை வெல்ல வேண்டும் என்றால், அ.தி.மு.க.வால் மட்டுமே முடியும் என்பதால் விஜய் பக்க பலமாக, உரமாக அ.தி.மு.க.வோடும், எடப்பாடி பழனிசாமியோடும் கைகோர்ப்பதுததான் சாலச் சிறந்த முடிவு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்து சமய அறநிலையத்துறை இல்லை என்றால் தமிழ்நாட்டில் ஆலயங்களே இருந்திருக்காது.
    • தமிழ்நாட்டு வாக்காளர்களிடம் போலி வேடம் எடுபடாது.

    புதுக்கோட்டையில் கனிமவளத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * திராவிடத்திற்கு எதிரான மாநாட்டில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றது வெட்கக்கேடானது.

    * இந்து சமய அறநிலையத்துறை இல்லை என்றால் தமிழ்நாட்டில் ஆலயங்களே இருந்திருக்காது.

    * இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். சிறுபான்மையினருக்குதான் பாதுகாப்பு தேவை.

    * முருகனை தமிழ்நாட்டை விட்டு கடத்திச்செல்ல முடியாது அவர் நம்மோடுதான் இருப்பார்.

    * யார் தமிழ்நாட்டை ஆண்டால் பாதுகாப்பு என தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு தெரியும்.

    * தமிழ்நாட்டு வாக்காளர்களிடம் போலி வேடம் எடுபடாது.

    * அ.தி.மு.க. என்று பெயர் வைத்துக்கொள்ளவே தகுதியற்றவர்களாக ஆகி விட்டார்கள்.

    * திராவிடத்தை வீழ்த்துவோம் என்று சொல்லி தான் இந்த முருகன் மாநாட்டை நடத்தி இருக்கிறார்கள். அவர்கள் கட்சியின் பெயரிலேயே திராவிடம் இருப்பதை எடப்பாடி பழனிசாமி மறந்து விட்டார். மற்றவர்களும் இன்றைக்கு மறந்துவிட்டு பா.ஜ.க.வின் கொத்தடிமைகள் நாங்கள் என்பதை நிருபித்து இருக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு கிடைத்து இருக்கும் அருமையான அடிமைகள் அவர்கள்.

    * இங்கு எந்த ஒரு மத கலாச்சாரத்திற்கு நாங்கள் இங்கு இடம் கொடுக்க மாட்டோம். எல்லா மாணவர்களும் ஒன்றுதான். அவர்கள் அண்ணன் தம்பிகளாக தான் தமிழ்நாட்டின் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இருக்கிறார்கள். எல்லா மாநிலத்திலும் கலாட்டாவை உருவாக்கி, அங்கே பயங்கரவாதங்களை உருவாக்கி, சண்டை சச்சரவுகளை உருவாக்கி நுழைந்தார்கள். இங்கே அப்படி நுழைய திராவிட மாடல் அரசு பா.ஜ.க.வை எந்த காலத்திலும் அனுமதிக்காது. அடித்து விரட்டப்படுவார்கள்.

    * இங்கே எப்போதும் single engine தான். ஒரே இயக்குபவர் தான் எங்கள் தலைவர் தளபதி தான். எங்கள் தோழமை கட்சிகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.

    * சுற்றுச்சூழல் அனுமதி பெற்று விரைவில் சட்டப்படி மணல் குவாரிகள் திறக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கும், தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம்?
    • மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாடு அரசியல் மாநாடுதான்.

    சென்னையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழ்நாட்டில் 71,000 கோவில்கள் இந்து சமய அறிநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன.

    * ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கும், தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம்?

    * சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் பவன் கல்யாண் போட்டியிட்டு வெல்லட்டும். அதன்பின் பேசட்டும்.

    * பா.ஜ.க.வினருக்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுத்துவிட்டது அ.தி.மு.க.

    * பெரியார், அண்ணா மட்டுமின்றி, ஜெயலலிதா, எம்.ஜி.ஆரைதான் அண்ணாமலை வசைபாடி உள்ளார்.

    * அண்ணாவை விமர்சிக்கும் மேடையில் அ.தி.மு.க.வினர் அமர்ந்தது, அவர்களின் அடிமைத்தனத்தை காட்டுகிறது.

    * யார் பலம் வாய்ந்தவர்கள்? என நயினார் நாகேந்திரன், அண்ணாமலை இடையே போட்டி நிலவுகிறது.

    * நயினார் நாகேந்திரன் பச்சைத்துண்டுடனும், அண்ணாமலை காவி துண்டுடனும் சுற்றுகின்றனர்.

    * மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாடு அரசியல் மாநாடுதான்.

    * அறநிலையத்துறை எதற்காக உருவாக்கப்பட்டது என்பது குறித்து புத்தகம் வெளியிட உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலகின் முதல் புரட்சித்தலைவர் முருகப்பெருமான்.
    • எனது நம்பிக்கையை கொண்டாட எனக்கு உரிமை உள்ளது.

    மதுரையில் பிரமாண்டமாக முருக பக்தர்கள் மாநாடு இன்று நடைபெற்றது. மாநாட்டில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பங்கேற்று பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரைக்கும் முருகனுக்கும் நெருக்கம் அதிகம். என்னை மதுரைக்கு வரவழைத்தது முருகன். என்னை வளர்த்தது முருகன். எனக்கு துணிச்சல் தந்தது முருகன்.

    எனது நம்பிக்கையை கொண்டாட உரிமை உள்ளது. அதை நீங்கள் கேள்வி கேட்க முடியுமா? என் மதத்திற்கு மரியாதை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. அவமரியாதை செய்யாதீர்கள். இந்துக்களை சீண்டி பார்க்காதீர்கள். சாது மிரண்டால் காடு கொள்ளாது.

    உலகின் முதல் புரட்சித் தலைவர் முருகன். அவருக்காக நாம் இங்கு வந்துள்ளோம். நமது அறம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஆழமாக இருந்தது. இனியும் இருக்கும்.

    ஒருவன் இந்துவாக இருந்தாலே பிரச்சினை. மதவாதி என சொல்கிறார்கள். மாநாட்டை உ.பி.யில் நடத்தலாமே என கேட்கிறார்கள். இந்த சிந்தனை மிக மிக ஆபத்தானது.

    என் கடவுளை கேலி செய்துவிட்டு அதை மதசார்பின்மை என்கிறார்கள். அரசமைப்பு கொடுத்த கருத்து சுதந்திரத்தை பயன்படுத்தி இவ்வாறு பேசுகின்றனர்.

    முருக பக்தர்கள் ஒரு பார்வை பார்த்தாலே போதும். நம் கடவுளை திட்டும் கூட்டம் காணாமல் போகும். நம்மை காப்பாற்றும் முருகனை நாம் காப்பாற்றத் தேவையில்லை. ஆனால் நன்றியை காட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×