search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "school students"

    • பாட்டுப்பாடியும், கூச்சலிட்டும் ரகளையில் ஈடுபட்டனர்.
    • வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    திருவொற்றியூர்:

    சென்னையில் ரூட்டு தல தகராறில் கல்லூரி மாணவர்களிடைய பஸ், ரெயில்களில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இதேபோல் காலை மற்றும் மாலை நேரங்களில் கல்லூரி, பள்ளி மாணவர்களும் ஆபத்தான நிலையில் பஸ்களில் தொங்கிய படி சாகச பயணம் செய்து வருகிறார்கள்.

    இதனை கண்டிக்கும் டிரைவர், கண்டக்டரிடம் மோதலில் ஈடுபட்டு தாக்குல் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது.

    இந்த நிலையில் வேப்பேரியில் உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் கோயம்பேட்டில் இருந்து திருவொற்றியூர் நோக்கி சென்ற மாநகர பஸ்சில் (தடம் எண் 159ஏ) கும்பலாக ஏறினர். அவர்கள் பஸ்சுக்குள் செல்லாமல் படிக்கட்டிலும், ஜன்னல் கம்பியிலும் தொங்கியபடி பயணம் செய்தனர்.

    சில மாணவர்கள் பசின் மேற்கூரையின் மீது ஏறி நின்று ஆட்டம் போட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் பஸ்சை நிறுத்தினார். ஆனால் மாணவர்கள் பஸ்சில் இருந்து இறங்க மறுத்து தொடர்ந்து பாட்டுப்பாடியும், கூச்சலிட்டும் ரகளையில் ஈடுபட்டனர்.

    டிரைவரும், கண்டக்டரும் மாணவர்களை எச்சரித்தும் கேட்டகாமல் தொடர்ந்து அட்டகாசம் செய்தனர். பஸ் நடுரோட்டில் நின்றதால் அப்பகுதியில் கடும்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட நேரத்திற்கு பின்னர் மாணவர்கள் பஸ்சில் இருந்து இறங்கியதும் மீண்டும் பஸ் புறப்பட்டு சென்றது.

    இந்த பஸ் புரசைவாக்கத்தில் பஸ் சென்று கொண்டிருந்த போது பள்ளி மாணவர்கள் மேற்கூரை மீது ஏறி அட்டகாசம் செய்து உள்ளனர். இதனை அவ்வழியே சென்ற ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவிவருகிறது.

    புரசைவாக்கம் பகுதியில் ஏராளமான தனியார் மற்றும் அரசு பள்ளிகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள அனைத்து பஸ்நிலையங்களிலும் காலை மற்றும் மாலை நேரங்களிலும் பள்ளி மாணவர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பயணிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

    எனவே இந்த இருவேளைகளிலும் பள்ளி அருகே உள்ள பஸ்நிறுத்தங்களில் போலீசார் கண்காணிபில் ஈடுபட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • சாதி கலவரத்தைத் தூண்டக்கூடிய அளவிற்கு ஏற்பட்ட மோதல், மிக மிக வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
    • முதல்வர் உடனடியாக இதில் கவனம் செலுத்தி இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்று தேமுதிக சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்

    திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே கடந்த ஆண்டு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பள்ளி மாணவனையும் அவரது தங்கையையும் வீடு புகுந்து சக மாணவர்கள் வெட்டிய சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விட பல்வேறு துறைகளில் முன்னேறிய மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கும் நிலையில் பள்ளி மாணவர்களிடையே சாதி மோதலும் வன்முறையும் தலைதூக்கியிருப்பது ஆபத்து வாய்ந்தது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது போன்ற மோதல்களை தடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்த்ரு தலைமையில் குழு அமைக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

    மேற்குறிப்பிட்ட சம்பவம் நடைபெற்ற சில மாதங்களிலேயே திருநெல்வேலியில் பள்ளி மாணவர்களிடையே சாதி மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் காயமடைந்த இரு மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுதொடர்பாக தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் கூறியிருப்பதாவது,

    திருநெல்வேலியில் மாணவர்களிடையே சாதி கலவரத்தைத் தூண்டக்கூடிய அளவிற்கு ஏற்பட்ட மோதல், மிக மிக வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது போன்ற நிகழ்வு அதே பள்ளிகூடத்தில் ஏற்கனவே நிகழ்ந்ததுள்ளது. இன்றைக்கு மாணவர்களிடையே காணப்படும் சாதி மோதல் என்பது தொடர்கதையாக மாறினால், அவர்களின் எதிர்காலமும் வருங்கால சமுதாயமும் பாதிக்கூடிய வகையில் அமைய வாய்ப்பு இருக்கிறது.

    மாணவர்களுக்குள் எந்தப் பாகுபாடும் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான், ஒரே மாதிரியான சீருடைகள் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் எத்தனை மாற்றங்களைக் கொண்டு வந்தாலும், எத்தனை பாரதியார், பெரியார் வந்தாலும், சாதிகள் இல்லை என்று சொன்னாலும், இந்த சாதி வெறி என்பது. இளம் வயதிலேயே, அதுவும் பள்ளிக்கூடங்களிலிருந்து தொடங்குவது, எதிர்காலத் தமிழகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறக்கூடும். எனவே முதல்வர் உடனடியாக இதில் கவனம் செலுத்தி இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்று தேமுதிக சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம். என்று கூறியுள்ளார்.

    • முதல் மாற்றமாக தேர்வுக்கான பாடங்களில் எண்ணிக்கை 6-ல் இருந்து 10-ஆக மாற்றப்பட்டுள்ளது.
    • ஒவ்வொரு மாணவரும் குறைந்த பட்சம் 3 மொழிகளில் பாடங்களை கற்ற வேண்டும்.

    தேசிய கல்விக் கொள்கை 2020-ன் கீழ் உத்திரபிரதேசத்தில் 9, 10- ம் வகுப்பு பாடத்திட்டங்களில் 2025-26-ம் ஆண்டு முதல் சில மாற்றங்களை அந்த மாநில அரசு கொண்டு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அந்த வகையில் முதல் மாற்றமாக தேர்வுக்கான பாடங்களில் எண்ணிக்கை 6-ல் இருந்து 10-ஆக மாற்றப்பட்டுள்ளது.

    இதில் ஒவ்வொரு மாணவரும் குறைந்தபட்சம் 3 மொழிகளில் பாடங்களை கற்ற வேண்டும் என அமல்படுத்தப்பட்டுள்ளது.

    வாரியத்துடன் தொடர்புடைய 27 பள்ளிகளில் 9, 10-ம் வகுப்புகளில் படிக்கும் 50 லட்சம் மாணவர்களுக்கு இந்த திட்டம் படிபடியாக செயல்படுத்த அனைத்து பங்குதாரர்களிடம் வாரியம் ஜூன் 29-ந் தேதிக்குள் ஆலோசனைகளை நடத்த கோரிக்கை விடுத்துள்ளது.

    அதிகாரிகளின் அறிக்கைப்படி, 2025-26 முதல் 9-ம் வகுப்பிலும், 2026-27 முதல் 10-ம் வகுப்பிலும் மும்மொழி கொள்கை நடைமுறைப்படுத்தப்படும். இந்த கொள்கையில் கீழ், அனைத்து மாணவர்களுக்கும் ஹிந்தி கட்டாயமாக இருக்கும்.

    கூடுதலாக, மாணவர்கள் சமஸ்கிருதம், குஜராத்தி, உருது, பஞ்சாபி, பெங்காலி, மராத்தி, அஸ்ஸாமி, ஒரியா, கன்னடம், காஷ்மீரி, சிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், நேபாளி, பாலி, அரபு, பாரசீகம் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் இரண்டு மொழிகளைத் தேர்வு செய்வார்கள்.

    கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களும் கட்டாயப் பாடங்களாக இருக்கும் என்று உத்தரப் பிரதேச வாரியச் செயலர் திவ்யகாந்த் சுக்லா தெரிவித்தார்.

    வீட்டு அறிவியல், மானுடவியல், வணிகம், என்சிசி, கணினி, வேளாண்மை அல்லது சுற்றுச்சூழல் அறிவியல் ஆகியவற்றிலிருந்து ஒரு பாடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கலைக் கல்வித் துறையில் ஓவியம், இசை, பாடுதல் அல்லது இசை வாசித்தல் ஆகியவை அடங்கும்.

    உடற்கல்வி மற்றும் சுகாதாரக் கல்வியில் நீதிநெறி கதைகள், யோகா, விளையாட்டு மற்றும் உடற்கல்வி மற்றும் சமூகப் பயனுள்ள உற்பத்திப் பணிகள் ஆகியவை அடங்கும். தொழிற்கல்விக்கு, மாணவர்கள் 31 பாடங்களில் இருந்து தேர்வு செய்யலாம்.

    30 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வும், உடற்கல்வி, கலை, தொழிற்கல்வி ஆகிய பாடங்களில் 70 மதிப்பெண்களுக்கு உள்மதிப்பீடும் நடத்தப்படும். மற்ற பாடங்களுக்கு 80 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வும், 20 மதிப்பெண்களுக்கு உள்மதிப்பீடும் இருக்கும்.

    உயர்நிலைப் பள்ளி மதிப்பெண் பட்டியலின் மொத்த மதிப்பெண்கள், முந்தைய 600 மதிப்பெண்களிலிருந்து இப்போது 1,000 ஆக இருக்கும். ஒவ்வொரு பாடத்திற்கும் 100 மதிப்பெண்கள், இறுதித் தேர்வுக்கு 80 மதிப்பெண்கள் மற்றும் உள் மதிப்பீட்டிற்கு 20 மதிப்பெண்கள்.

    புதிய பாடத்திட்ட மாற்றங்களுடன் தர நிர்ணய முறை அறிமுகப்படுத்தப்படும். மேலும் வினாத்தாள் வடிவமும் மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் வரும் 6-ம் தேதி விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
    • மாணவர்கள் பழைய பஸ் பாஸ் மூலம் பயணம் செய்யலாம்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    பள்ளிகள் திறக்கும் நாளிலேயே இலவச நோட்டு, பாடப்புத்தகங்களை வழங்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

    இதற்கிடையே, கோடை விடுமுறை முடிந்து அடுத்த மாதம் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அன்றைய தினமே மாணவர்கள் அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கலாமா அல்லது புதிய பாஸ் தரும் வரை டிக்கெட் எடுக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது.

    இதுகுறித்து போக்குவரத்து கழகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், அரசு பஸ்களில் மாணவர்களிடம் பஸ் பாஸ் கேட்க மாட்டோம். பழைய பஸ் பாஸ் மூலம் பயணிக்கலாம். அவர்கள் சீருடை அணிந்து இருந்தாலே இலவசமாக பயணிக்கலாம். இந்த ஆண்டு மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதற்காக கல்வித்துறையில் இருந்து மாணவர்களின் விவரங்கள் பெற்று, ஆன்லைன் மூலம் புதிய பாஸ் விரைந்து வழங்கப்படும் என தெரிவித்தார்.

    • தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மூலம் 4 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
    • கோடை விடுமுறைக்கு பின்னா் பள்ளிகள் ஜூன் மாதம் 2-வது வாரத்தில் திறப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின்னா் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்காக அச்சடிக்கப்பட்ட விலையில்லா பாடநூல்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

    இதேபோன்று தமிழ்நாடு காகித நிறுவனம் மூலம் நோட்டு புத்தகங்களும் முழுமையாக மாவட்ட வாரியாக அனுப்பப்பட்டு உள்ளன. இந்த நிலையில் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்ட பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் மாவட்ட கிடங்குகளில் இருக்கும் நிலையில் அவை பள்ளிகளுக்கு வழங்கும் பணிகளைத் தொடங்க கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.

    இது குறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது:-

    தமிழகத்தில் மாநில அரசின் பாடத்திட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு வழங்குவதற்காக 2 கோடியே 68 லட்சம் விலையில்லா பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. மேலும், மாணவா்களுக்கு விற்பனை செய்ய ஒரு கோடியே 32 லட்சம் பாடப்புத்தகங்கள் என தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மூலம் 4 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

    கோடை விடுமுறைக்கு பின்னா் பள்ளிகள் ஜூன் மாதம் 2-வது வாரத்தில் திறப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பை அரசு வெளியிடும். பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் 1 முதல் 7-ம் வகுப்பு வரை உள்ள மாணவா்களுக்கு முதல் பருவத்துக்கான பாட நூல்களையும், 8 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையில் படிக்கும் மாணவர் களுக்கான முழுமையான பாடநூல்களையும் வழங்க தயாா் நிலையில் இருக்கு மாறும், மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்ட பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் மாவட்ட கிடங்குகளில் இருக்கும் நிலையில் அவை பள்ளிகளுக்கு வழங்கும் பணிகளைத் தொடங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவா்கள் தெரிவித்தனா்.

    • சம்பவத்தன்று ஆசிரியர் வழக்கம் போல தகாத வார்த்தைகளால் மாணவர்களிடம் பேசி உள்ளார்.
    • அடுத்தடுத்து செருப்பு பறந்து வந்ததால் ஆசிரியர் அங்கிருந்து பைக்கில் தப்பி ஓடினார்.

    சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் மாவட்டத்தில் உள்ள பாலிபட்டா தொடக்கப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் தினமும் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்ததாக புகார் எழுந்தது. இதனால் அவர் மாணவர்களுக்கு பாடம் நடத்தாமல் தரையில் படுத்து தூங்கியதாகவும், மாணவர்கள் ஏதாவது சந்தேகம் கேட்டால் அவர்களை திட்டியதாகவும் கூறப்படுகிறது.


    ஆசிரியரின் இந்த நடத்தையால் மாணவர்கள் ஆவேசம் அடைந்தனர். சம்பவத்தன்று ஆசிரியர் வழக்கம் போல தகாத வார்த்தைகளால் மாணவர்களிடம் பேசி உள்ளார். இதனால் கோபம் அடைந்த மாணவர்கள் செருப்புகளை எடுத்து ஆசிரியரை தாக்க தொடங்கினர். உடனே அந்த ஆசிரியர் மோட்டார் சைக்கிளில் பள்ளியில் இருந்து தப்பி ஓட முயன்றார். அப்போதும் அவரை மாணவர்கள் துரத்தி சென்று அவர் மீது செருப்புகளை வீசி தாக்கி உள்ளனர்.

    அடுத்தடுத்து செருப்பு பறந்து வந்ததால் ஆசிரியர் அங்கிருந்து பைக்கில் தப்பி ஓடினார். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி 22 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்தது. இதைத்தொடர்ந்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • காலை உணவு, ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    • உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க வேளாண் துறையுடன் இணைந்து ஆயிரத்து 660 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதைப் போல் இலங்கையில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.

    ஆரோக்கியமான சுறு சுறுப்பான தலைமுறை என்ற திட்டத்தின் கீழ், இலங்கையில் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

    காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை அளிக்கப்படும் காலை உணவு, ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த திட்டத்தில் நாடு முழுவதும் உள்ள 1 முதல் 5-ம் வகுப்புகள் வரை படிக்கும் 9 ஆயிரத்து 134 பள்ளிகளில் 16 லட்சம் மாணவ மாணவிகள் பயன் அடைவர்.

    இந்தத் திட்டத்தை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தொடங்கி வைத்தார். அவர் ஒரு பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கு காலை உணவை வழங்கினார். மாணவர்களிடையே உள்ள ஊட்டச்சத்து குறைபாடு களை நிவர்த்தி செய்யவும், தினசரி வருகை விகிதத்தை அதிகரிக்கவும், ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறை பழக்கங்களை வளர்க்கவும், கல்வியில் செயல் திறனை உயர்த்தவும் பள்ளி உணவுத் திட்டம் பயன்படும் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

    இந்தத் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க வேளாண் துறையுடன் இணைந்து ஆயிரத்து 660 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    • தலைமை ஆசிரியர் ரவி தலைமையில் மகிழம், நெட்டிலிங்கம், வில்வம், அந்திமந்தாரை, பன்னீர் புஷ்பம், நாகலிங்கம் போன்ற மரங்களை நட்டனர்.
    • பருவநிலை மாறுபாடு காலநிலை மாற்றம் போன்றவற்றை குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைகிறது.

    பெருந்துறை:

    பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 வேளாண்மை மாணவர்கள் பள்ளி நினைவை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிளஸ்-2 பொதுத்தேர்வு தேர்வு முடிந்ததும், ஏதாவது ஒரு பொது இடத்தில் ஒன்றுகூடி மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். கடந்த 13 ஆண்டுகளாக இது தொடர்ந்து வருகிறது.

    இந்த ஆண்டு பிளஸ்-2 வகுப்பில் விவசாய பாடத்தை விருப்பப்பாடமாக படித்த மாணவர்கள் மற்றும் தேசிய பசுமைப்படை மாணவர்கள், பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஒன்று கூடி தலைமை ஆசிரியர் ரவி தலைமையில் மகிழம், நெட்டிலிங்கம், வில்வம், அந்திமந்தாரை, பன்னீர் புஷ்பம், நாகலிங்கம் போன்ற மரங்களை நட்டனர்.

    விழாவிற்கான மரக்கன்றுகளை பெருந்துறை ரோட்டரி கிளப் வழங்கியது. இவ்வாறு மரங்களை நடுவது மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தும் விதமாக அமைகிறது.

    பருவநிலை மாறுபாடு காலநிலை மாற்றம் போன்றவற்றை குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைகிறது. விழாவிற்கான ஏற்பாட்டினை வேளாண் ஆசிரியர் கந்தன் செய்திருந்தார். 

    • மாணவர்களை கடத்தப் பட்டதை அந்த மாகாண கவர்னர் உபாசானி உறுதிப்படுத்தினார்.
    • பயங்கரவாதிகள் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

    அபுஜா:

    ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பல்வேறு ஆயுதக்குழுவினர் செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் அந்நாட்டின் வடக்கு நகரமான குரிகாவில் உள்ள பள்ளிக்கு துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் சிலர் வந்தனர். அவர்கள் துப்பாக்கி முனையில் 280-க்கும் மேற்பட்ட மாணவர்களை கடத்தி சென்றனர். மாணவர்களை மீட்க உள்ளூர் மக்கள் பயங்கரவாதிகளுடன் போராடியுள்ளனர்.

    ஆனால் அவர்களை துப்பாக்கியைக் காட்டி பயங்கரவாதிகள் மிரட்டினர். இதில் ஒருவர் சுடப்பட்டதாகவும் தெரிகிறது. மாணவர்களை கடத்தப் பட்டதை அந்த மாகாண கவர்னர் உபாசானி உறுதிப்படுத்தினார். கடந்த ஜனவரி மாதம் இப்பள்ளியின் முதல்வரைக் கொன்றதாகவும், அவரது மனைவியைப் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

    இச்சம்பவத்துக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை. இதுகுறித்து நைஜீரியா அதிபர்போலா டினுபு கூறும்போது, கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்கும் நட வடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். அவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர் என்றார். பயங்கரவாதிகள் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்கள் கேட்கும் தொகையை கொடுத்த பிறகு கடத்தியவர்களை விடுவிக்கிறார்கள்.

    கடந்த 2014-ம் ஆண்டு நைஜீரியாவின் வடக்கு மாகாணமான போா்னோவின் சிபோக் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பித்தக்கது.

    • பெண் கல்விதான் சமூகத்தில் ஒடுக்கப்பட்டு இருக்கும் அவர்களுக்கு சமூக விடுதலையை அளிக்கும்
    • பரிசு பொருட்களாக சமையல் குக்கர், ஹாட் பாக்ஸ் ஆகியவை வழங்கப்பட்டது.

    நேற்று (பிப் 18) புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டிணத்தில் உள்ள அரசு பெண்கள் உயர் நிலைப் பள்ளிக்கு தனது நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து சுமார் 44 லட்சம் செலவில் பள்ளிக் கட்டிடங்கள் கட்டும் அடிக்கல் நாட்டும் நிகழ்விற்கு திமுக எம்.பி எம்.எம். அப்துல்லா சென்றிருந்தார்.

    அன்று பள்ளியின் ஆண்டு விழாவும் நடைபெற்றதால், தலைமை ஆசிரியரின் கோரிக்கையின்படி மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய எம்.எம். அப்துல்லா, "சிறுபான்மைச் சமூகத்தில் இருந்தும் மீனவ சமூகத்தில் இருந்தும் பெருவாரியான குழந்தைகள் படிக்கும் பள்ளி அது.. எனவே அதை மனதில் வைத்து "பெண் கல்விதான் சமூகத்தில் ஒடுக்கப்பட்டு இருக்கும் அவர்களுக்கு சமூக விடுதலையை அளிக்கும் என்று கூறி படித்து நீங்கள் எல்லாம் பெரும் பெரும் பொறுப்புகளுக்கு வர வேண்டும்" என பேசினார்

    பின்பு தலைமை ஆசிரியரின் கோரிக்கையின்படி, கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நானூறு மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 15 மாணவியருக்கு பரிசு பொருட்களை வழங்கினார். பரிசு பொருட்களாக சமையல் குக்கர், ஹாட் பாக்ஸ் ஆகியவை வழங்கப்பட்டது.

    பரிசு பொருட்களை வழங்கிய பிறகு மீண்டும் மாணவர்களிடம் பேசிய அப்துல்லா, "சற்று முன்னர்தான் உங்களிடம் படிப்பு ஒன்றுதான் பெண்ணடிமைத் தனத்தில் இருந்து உங்களை விடுதலை செய்யும்.. அடுப்படி மறந்து நீங்கள் எல்லாம் பெரிய பெரிய அதிகாரிகளாக வர வேண்டும் எனப் பேசினேன்.. ஆனால் என் கையாலேயே பரிசு பொருட்களாக சட்டி பானைகளை உங்களுக்கு வழங்க வைத்து விட்டார்கள்.

    அப்போதே மாட்டேன் என்று மறுத்தால் மேடை நாகரீகமாக இருக்காது.. எனவே அந்தப் பரிசுகளைக் குடுத்து நானும் அவர்களின் தப்புக்கு துணை போனேன்! அதற்கு பிராயச் சித்தமாக உங்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் பரிசாகத் தருகிறேன்.. வந்து பெற்றுக் கொள்ளுங்கள்" என அறிவித்தேன். பெற்றுக் கொண்ட அந்தக் குழந்தைகளும் நானும் மகிழ்வோடு விழா முடிந்து திரும்பினோம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    • ஆலப்புழா மாவட்டம் களவூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
    • பள்ளி மாணவ-மாணவிகள் தங்களின் படைப்பாற்றல் மற்றும் தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் தாங்களாகவோ வாழ்த்து அட்டைகளை உருவாக்கினர்.

    திருவனந்தபுரம்:

    2024 ஆங்கில புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் 6 நாட்களே உள்ளன. புதிதாக பிறக்கும் புத்தாண்டு மகிழ்ச்சியான ஆண்டாக இருக்க வேண்டுமென்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

    புத்தாண்டு வாழ்த்துக்களை பெரும்பாலானோர் பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாகவே ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வது சமீபகால வழக்கமாக இருந்து வருகிறது. இதற்காக பலரும் தற்போதே தயாராகி வருகின்றனர்.

    இந்நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவ-மாணவிகள், அம்மாநில கல்வித்துறை மந்திரி சிவன்குட்டிக்கு புத்தாண்டு வாழ்த்து அட்டைகளை தாங்களே தயாரித்து அனுப்பி வைத்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

    ஆலப்புழா மாவட்டம் களவூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு களவூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் ஏராளமானோர் படித்து வருகின்றனர். அந்த பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் கேரள மாநில கல்வித்துறை மந்திரி சிவன்குட்டிக்கு வாழ்த்து அட்டைகளை அனுப்பி புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க முடிவு செய்தனர்.

    அதன்படி அந்த பள்ளி மாணவ-மாணவிகள் தங்களின் படைப்பாற்றல் மற்றும் தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் தாங்களாகவோ வாழ்த்து அட்டைகளை உருவாக்கினர். மாணவ-மாணவிகளின் அந்த படைப்புகள் கைவி னைப் பொருட்கள், ஓவியங்கள் என பல விதங்களில் இருந்தன.

    மாணவ-மாணவிகள் தங்களின் படைப்புகளை தபால் சேவை மூலம் கல்வித்துறை மந்திரியின் அலுவலகத்திற்கு அனுப்பி அவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

    • பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள்.
    • மாவட்ட சமூக நலத்துறை இணை இயக்குனர் சீனிவாஸ் உண்டு உறைவிட பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா எலவள்ளி கிராமத்தில் மத்திய அரசுக்கு சொந்தமான மொரார்ஜி தேசாய் உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள். அங்கு பாரதம்மா என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். வார்டனாக மஞ்சுநாத் என்பவர் உள்ளார்.

    இந்த நிலையில் தலைமை ஆசிரியை பாரதம்மா, ஆசிரியர் முனியப்பா மற்றும் வார்டன் மஞ்சுநாத் ஆகியோர் மாணவ-மாணவிகளை அடித்து துன்புறுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே தலைமை ஆசிரியை பாரதம்மா அந்த பள்ளியில் உள்ள கழிவறை தொட்டியை (செப்டிக் டேங்க்) சில மாணவர்களை கட்டாயப்படுத்தி வைத்து சுத்தம் செய்ய வைத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

    இதுதொடர்பான வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும், மாவட்ட சமூக நலத்துறை இணை இயக்குனர் சீனிவாஸ் உண்டு உறைவிட பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் கோலார் மாவட்ட கலெக்டர் அக்ரம் பாஷா அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இந்த நிலையில், மாணவர்களை அடித்து துன்புறுத்தியதாகவும், மாணவர்களை வைத்து கழிவறை தொட்டியை சுத்தம் செய்ய வைத்ததாகவும் மொரார்ஜி தேசாய் உண்டு உறைவிட பள்ளியின் தலைமை ஆசிரியை பாரதம்மா, வார்டன் மஞ்சுநாத், சமூக அறிவியல் ஆசிரியர் அபிஷேக், ஓவிய ஆசிரியர் முனியப்பா ஆகிய 4 பேரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் அக்ரம் பாஷா உத்தரவிட்டுள்ளார். மேலும் தற்காலிக ஆசிரியர் மரேஷ், ஒப்பந்த பணியாளர் கலாவதி ஆகிய இருவரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.

    சஸ்பெண்டு செய்யப்பட்ட 4 பேர் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் பற்றி தாலுகா சமூக நல அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில், மஸ்தி போலீசார் கழிவறை தொட்டியை சுத்தம் செய்ய மாணவர்களை ஈடுபடுத்தியதற்காக சஸ்பெண்டு செய்யப்பட்ட தலைமை ஆசிரியை பாரதம்மா, ஆசிரியர்கள் முனியப்பா, அபிஷேக் ஆகியோர் மீது எஸ்.சி., எஸ்.டி சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதில் தலைமை ஆசிரியை பாரதம்மா, ஆசிரியர் முனியப்பா ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×