என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 17 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்
- பெற்றோர் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் மாணவ, மாணவிகளை சிகிச்சைக்காக சேர்த்தனர்.
- 3 மாணவர்கள் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பாலக்கோடு:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கண்சால் பைல் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலை பள்ளியில் 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
நேற்று மதியம் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்ட மாணவிகள் சிலருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி முடிந்து வீட்டிற்க்கு சென்ற 17 மாணவ, மாணவிகளுக்கு இரவு திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.
அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் உடனடியாக பாலக்கோடு அரசு மருத்துவமனையில் மாணவ, மாணவிகளை சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் மூன்று மாணவர்கள் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி. அன்பழகன் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவ, மாணவிகளின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும் மருத்துவர்களிடம் உரிய சிகிச்சை அளிக்க வலியுறுத்தினார்.
இதுகுறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






