search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடத்தல்"

    • மர்ம நபர்கள் அவரது குழந்தையை கடத்திச் சென்றனர்.
    • தூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நெல்லை:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா (வயது 34). கணவரை பிரிந்த இவருக்கு 3 மாத பெண் குழந்தை உள்ளது.

    சமீபத்தில் தூத்துக்குடி வி.இ. ரோட்டில் உள்ள அந்தோணியார் ஆலயம் அருகே யாசகம் எடுத்து பிழைப்பு நடத்திக் கொண்டி ருந்த சந்தியா அந்த பகுதியில் இரவில் குழந்தையுடன் தூங்கினார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் அவரது குழந்தையை கடத்திச் சென்றனர்.

    இது தொடர்பாக தூத்துக்குடி தன் பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை தேடி வந்தனர். குழந்தையை திருடிய மர்ம நபர்கள் யார் என்பதை அறிய 150-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து வந்த நிலையில் தற்போது குழந்தையை கடத்திச் சென்ற 2 நபர்களின் புகைப்படங்களை தூத்துக்குடி மாவட்ட போலீ சார் வெளியிட்டுள்ளனர்.

    போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் டவுன் உதவி போலீஸ் சூப்பிரண்டு கேல்கர் சுப்பிரமணியன் பாலச்சந்தர் தலைமையில் தென்பாகம் இன்ஸ்பெக்டர் உள்பட போலீசார் அடங்கிய தனிப்படை யினர் புகைப் படத்தை அடிப்படையாகக் கொண்டு 2 பேரையும் தேடி வருகின்றனர்.

    மேலும் புகைப்படத்தில் உள்ள நபர்களை யாரேனும் பார்த்தால் தூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • மாணவர்களை கடத்தப் பட்டதை அந்த மாகாண கவர்னர் உபாசானி உறுதிப்படுத்தினார்.
    • பயங்கரவாதிகள் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

    அபுஜா:

    ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பல்வேறு ஆயுதக்குழுவினர் செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் அந்நாட்டின் வடக்கு நகரமான குரிகாவில் உள்ள பள்ளிக்கு துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் சிலர் வந்தனர். அவர்கள் துப்பாக்கி முனையில் 280-க்கும் மேற்பட்ட மாணவர்களை கடத்தி சென்றனர். மாணவர்களை மீட்க உள்ளூர் மக்கள் பயங்கரவாதிகளுடன் போராடியுள்ளனர்.

    ஆனால் அவர்களை துப்பாக்கியைக் காட்டி பயங்கரவாதிகள் மிரட்டினர். இதில் ஒருவர் சுடப்பட்டதாகவும் தெரிகிறது. மாணவர்களை கடத்தப் பட்டதை அந்த மாகாண கவர்னர் உபாசானி உறுதிப்படுத்தினார். கடந்த ஜனவரி மாதம் இப்பள்ளியின் முதல்வரைக் கொன்றதாகவும், அவரது மனைவியைப் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

    இச்சம்பவத்துக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை. இதுகுறித்து நைஜீரியா அதிபர்போலா டினுபு கூறும்போது, கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்கும் நட வடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். அவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர் என்றார். பயங்கரவாதிகள் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்கள் கேட்கும் தொகையை கொடுத்த பிறகு கடத்தியவர்களை விடுவிக்கிறார்கள்.

    கடந்த 2014-ம் ஆண்டு நைஜீரியாவின் வடக்கு மாகாணமான போா்னோவின் சிபோக் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பித்தக்கது.

    • மோசடி நபர்கள் செல்போன் எண்ணை எப்படியோ தெரிந்து கொண்டு சம்பந்தப்பட்டவர்களை, செல்போனில் வீடியோ அழைப்பு, ஸ்கைப் செயலியில் அழைக்கின்றனர்.
    • போலீசார் யாரும் இப்படி செய்யமாட்டார்கள். பயத்தை ஏற்படுத்தி பணத்தை ஏமாற்றி பறித்து மோசடி செய்வதே இந்த கும்பலின் நோக்கம்.

    கோவை:

    தொழில்நுட்ப வசதிகள் பெருகிவிட்ட தற்போதைய காலகட்டத்தில் செல்போன் மூலம் பண பரிமாற்றம் போன்ற பல்வேறு செயல்களை மேற்கொண்டு வருகிறோம்.

    ஆன்லைன் பணபரிமாற்றமானது முன்பைக் காட்டிலும் தற்போது அதிகமாகவே காணப்படுகிறது. அதற்கு ஏற்ப தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நடக்கும் சைபர் கிரைம் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.

    இதன் மூலம் பல வகைகளில் மோசடிகள் செய்து வந்தாலும், தற்போது போலீஸ் அதிகாரிகள் எனக்கூறி மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

    இது தொடர்பாக கோவை சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-

    கோவை மாநகரில் பொருளாதார குற்றங்கள் அதிகளவில் நடைபெறுவதை போலவே அண்மைக் காலமாக ஒரே மாதிரியான நடைமுறையை பின்பற்றி பலரிடம் ஒரு கும்பல் பணம் பறித்து வருவது தெரியவந்துள்ளது.

    அதன்படி மோசடி நபர்கள் செல்போன் எண்ணை எப்படியோ தெரிந்து கொண்டு சம்பந்தப்பட்டவர்களை, செல்போனில் வீடியோ அழைப்பு, ஸ்கைப் செயலியில் அழைக்கின்றனர்.

    அப்போது தங்களை போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் அல்லது சி.பி.ஐ அதிகாரிகள் என அறிமுகப்படுத்தி கொள்ளும் மர்மநபர்கள் உங்களுக்கு வெளிநாட்டில் இருந்து ஒரு பார்சல் வந்திருப்பதாக கூறுவார்கள்.

    அந்த பார்சலில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் இருப்பதாகவும், இது தொடர்பாக உங்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டிருப்பதாகவும் கூறி போலி ஆவணத்தை காட்டுவார்கள்.

    போலீஸ் நிலையத்தில் இருந்து பேசுவதைப் போல தெரிய வேண்டும் என்பதற்காக போலியாக போலீஸ் நிலைய பின்னணியை உருவாக்கி போலீஸ் உயர் அதிகாரிகளை போல உடையணிந்து பேசுகிறார்கள்.

    போதைப் பொருள் கடத்தியதுடன், உங்களுக்கு சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும், உங்கள் மீது நடவடிக்கை எடுக்க போவதாகவும் அச்சுறுத்தி பணம் பறித்து வருகின்றனர்.

    போலீசார் யாரும் இப்படி செய்யமாட்டார்கள். பயத்தை ஏற்படுத்தி பணத்தை ஏமாற்றி பறித்து மோசடி செய்வதே இந்த கும்பலின் நோக்கம். கோவை மாநகரில் கடந்த 6 மாதங்களில் மட்டும் இதுபோல 52 புகார்கள் பதிவாகி உள்ளன. முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் என பலரையும் மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறித்துள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறும்போது, இந்த கும்பல் வடமாநிலங்களில் இருந்து செயல்பட்டு வருவதாகவும், இவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் வடமாநிலத்திற்கு செல்ல உள்ளனர்.

    மேலும் இந்த கும்பலின் மோசடியில் சிக்காமல் இருப்பது குறித்து போலீஸ் துறையின் சோஷியல் மீடியா செல் மூலம் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

    • 9 மாவட்ட செயலாளர்கள் ஒன்று சேர்ந்து நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.
    • அனைத்து மாவட்டங்களிலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் நாளை (திங்கட் கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இது தொடர்பான அறிவிப்பை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டார்.

    இதன்படி சென்னையில் 9 மாவட்ட செயலாளர்கள் ஒன்று சேர்ந்து நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் காலை 9.30 மணிக்கு நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் ஜெயக்குமார், பால கங்கா, வி.என்.ரவி, ஆதி ராஜாராம், வெங்கடேஷ் பாபு, தி.நகர் சத்யா, ஆர்.எஸ்.ராஜேஷ், அசோக், கே.பி.கந்தன் உள்ளிட்ட 9 மாவட்ட செயலாளர்கள் ஒருங்கிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறார்கள்.

    இதில் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்கிறார்கள்.

    இதே போன்று தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தங்களது மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். இதையொட்டி சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    • நாட்டுப்படகில் மாத்திரைகள் கடத்தப்பட இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
    • மாத்திரைகள் சந்தை மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    கீழக்கரை:

    ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு பல்வேறு பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க சுங்கத்துறையினர் மற்றும் கடலோர காவல் படையினர் துரித நடவடிக்கை எடுத்த போதிலும், அவ்வப்போது கடத்தல் சம்பவங்கள் அரங்கேறத்தான் செய்கிறது.

    இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல் லாணியை அடுத்த பெரிய பட்டினம் புதுமடம் புதுக்குடியிருப்பு கடற்கரை தென் கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு நாட்டுப்படகில் மாத்திரைகள் கடத்தப்பட இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் கடலோர காவல் படையினர் மற்றும் குற்றத்தடுப்பு புலனாய்வு போலீஸ் சப்-இன்ஸ்பெக் டர் அந்தோணி சகாய சேகர் மற்றும் போலீசார் பெரிய பட்டினம் கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் பதிவு செய்யப்படாத இரட்டை என்ஜின் பொருத்தப்பட்ட பைபர் படகு ஒன்று நின்று கொண்டிருந்தது. அதன் அருகில் இருந்தவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் பெரியபட்டினம் கிழக்கு தெருவை சேர்ந்த முஹம்மது மீராசா (வயது 42) என்று தெரியவந்தது. மேலும் அந்த படகை சோதனை செய்த போது அதில், சுமார் 12 பண்டல்களில் 6,84,600 வலி நிவாரணி மாத்திரைகள் இருந்ததும், அதனை இலங்கைக்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது.

    இதையடுத்து முஹம்மது மீராசாவை கைது செய்த போலீசார் 7 லட்சம் வலி நிவாரணி மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாத்திரைகள் சந்தை மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

    • கடத்தலில் ஈடுபட்ட கார்த்திக், நிர்மல்குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
    • கடத்தலில் தொடர்புடைய மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    திருத்தணி:

    திருத்தணி அருகே உள்ள அகூர் ஊராட்சி, நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடமுனி (42). தொழிலாளி. இவர் நேற்று காலை தனது தாய் லட்சுமியுடன் மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டுசென்றார். பின்னர் மாடுகளை விவசாய நிலத்தில் கட்டி விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

    நத்தம் கிராமத்தில் உள்ள கோவில் மண்டபம் அருகே வந்தபோது காரில் வந்த 4 பேர் கும்பல் திடீரென கத்தி முனையில் மிரட்டி வெங்கட முனியை காரில் கடத்தினர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் லட்சுமி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு வந்த கிராமமக்கள் கடத்தல் கும்பலை பிடிக்க முயன்றனர்.

    ஆனால் அவர்கள் கத்தியால் வெட்ட முயன்றனர். இதனால் பயந்து போன பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். பின்னர் கடத்தல் கும்பல் வெங்கடமுனியை காரில் கடத்தி சென்று விட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் திருவாலங்காடு ஒன்றியம் சந்தான கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் வெங்கடமுனியிடம் பணம் கொடுத்து ஏமாந்ததாகவும், பல முறை பணம் கேட்டு வெங்கடமுனி தராததால் கார்த்திக் தனது நண்பர்களுடன் சேர்ந்து கடத்தி ஆந்திர மாநிலத்திற்கு அழைத்து சென்று இருப்பதும் தெரிந்தது.

    இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் பின்தொடர்வதை அறிந்த கடத்தல் கும்பல் அங்கிருந்து வேலூர் பகுதிக்கு வந்து இருப்பது தெரியவந்தது. போலீசார் விரட்டிச்சென்று காரில் கடத்தப்பட்ட வெங்கடமுனியை பத்திரமாக மீட்டனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட கார்த்திக், நிர்மல்குமார் ஆகிய 2 பேரை கைது செய்தனர். கடத்தப்பட்ட வெங்கட முனியை 12 மணிநேரத்தில் போலீசார் மீட்டு உள்ளனர். இந்த கடத்தலில் தொடர்புடைய மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • துபாய் செல்லும் பயணிகளிடம் அவர்கள் அதிரடி சோதனை நடத்தினர்.
    • எங்கிருந்து யாருக்கு வைரங்கள் கடத்தி செல்கிறார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு வைரங்கள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.

    துபாய் செல்லும் பயணிகளிடம் அவர்கள் அதிரடி சோதனை நடத்தினர். சந்தேகத்திற்கு இடமாக பதிலளித்த 2 பயணிகளின் உடமைகளை சோதனையிட்டனர். அவர்கள் வைத்திருந்த ஒரு பையில் சாக்லேட் கவர்களால் சுற்றி மறைத்து வைக்கப்பட்டிருந்த வைரங்கள் இருந்தன.

    மொத்தம் 5 ஆயிரத்து 569.64 காரட் வைரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு 6.03 கோடி ஆகும். மேலும் அவர்களிடம் இருந்து 9.8 லட்சம் வெளிநாட்டு கரன்சி ரூ.1 லட்சம் இந்திய பணம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    இவர்கள் எங்கிருந்து யாருக்கு வைரங்கள் கடத்தி செல்கிறார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிவேகமாக கடலுக்குள் சென்ற அவர்கள் கடத்தல் பொருட்களுடன் வந்த நாட்டுப்படகை நெருங்கினர்.
    • கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களை இந்திய கடலோர காவல் குழும போலீசார் தேடி வருகிறார்கள்.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் இருந்து கடல் வழியாக மிக அருகாமையில் உள்ள இலங்கைக்கு அடிக்கடி தங்கம், அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான கடல் அட்டைகள் மற்றும் மஞ்சள், பீடி இலை உள்ளிட்டவை கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க இந்திய கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு வந்த போதிலும் கடத்தல்காரர்கள் ஊடுருவி விடுகிறார்கள்.

    இந்நிலையில் ராமேசுவரத்தை அடுத்த மண்டபம் அருகேயுள்ள வேதாளை கடற்கரை பகுதியான குற வன்தோப்பு கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு பொருட்கள் கடத்தப்பட இருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் உஷாரான போலீசார் அந்த இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    ஆனால் அதற்குள் கடத் தல் கும்பல் நாட்டுப்படகில் பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்றுவிட்டனர். உடனடியாக கியூ பிரிவு போலீசார் இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அதிவேகமாக கடலுக்குள் சென்ற அவர்கள் கடத்தல் பொருட்களுடன் வந்த நாட்டுப்படகை நெருங்கினர்.

    இதைப்பார்த்த படகில் இருந்தவர்கள் ஒரு சில மூட்டைகளுடன் கடலில் குதித்து தப்பினர். பின்னர் அந்த படகை பறிமுதல் செய்து இந்திய கடலோர காவல் படையினர் சோதனையிட்டனர். அப்போது அதில் 18 மூட்டைகளில் பல லட்சம் மதிப்புள்ள வலி நிவாரணி மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    படகுடன் மாத்திரை மூட்டைகளை கரைக்கு கொண்டு வந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் மாத்திரைகள் கடத்தலுக்கு பயன்படுத்தப் பட்ட நாட்டுப்படகு பாம்பனை சேர்ந்த வெனிஸ்டன் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிந்தது. இதையடுத்து தலைமறைவான படகு உரிமையாளர் மற்றும் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களை இந்திய கடலோர காவல் குழும போலீசார் தேடி வருகிறார்கள்.

    • தனிப்படை போலீசார் சரவண வேலனை கடத்தி சென்ற மர்மநபர்கள் யார், எதற்காக கடத்தினார்கள் என்று விசாரணை நடத்தினர்.
    • கைதான சரவணபாண்டியனின் சொந்த ஊர் மதுரை திருப்பரங்குன்றம். கோவை தெலுங்குபாளையத்தில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மெட்டராத்தி பகுதியை சேர்ந்தவர் சின்னச்சாமி (வயது 44). திருமணமாகாத இவருக்கு அவரது உறவினர்கள் பெண் பார்த்து வந்தனர். இந்தநிலையில் சின்னச்சாமிக்கும், பல்லடத்தை சேர்ந்த சரவண வேலன்(37) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அப்போது சரவண வேலன், நான் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறேன். எனக்கு சொந்தக்கார பெண்கள் நிறைய பேர் உள்ளனர்.

    எனவே அவர்களில் யாரையாவது பார்த்து உங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என தெரிவித்துள்ளார். இதை நம்பிய சின்னச்சாமி, சரவண வேலனுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்துள்ளார்.

    நேற்று முன்தினம் சின்னச்சாமியை தொடர்பு கொண்ட சரவணவேலன் என்னிடம் திருமணத்திற்கான பெண்களின் புகைப்படங்கள் உள்ளது. அதனை நீங்கள் பார்த்து தேர்வு செய்து கொள்ளுங்கள். பிடித்தால் உடனே திருமணத்தை நடத்தி விடலாம் என தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து சின்னச்சாமி அவரது சொந்த ஊரான குடிமங்கலத்திற்கு வருமாறு சரவண வேலனை அழைக்கவே, அவர் அங்கு சென்றுள்ளார். அவருக்காக சின்னச்சாமி குடிமங்கலத்தில் உள்ள விடுதியில் அறையும் எடுத்து கொடுத்தார்.

    அங்கு வைத்து இருவரும் பெண்ணின் புகைப்படங்களை பார்த்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடுதி அறையில் தங்கியுள்ளனர்.

    பின்னர் நேற்று காலை சின்னச்சாமி பணத்தம்பட்டியில் உள்ள அவரது தோட்டத்திற்கு சரவண வேலனை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார்.

    சிறிது தூரம் செல்லும் போது திடீரென அங்கு காரில் வந்த 3பேர் கும்பல், மோட்டார் சைக்கிளை மறித்ததுடன் சரவண வேலனை அலாக்காக தூக்கி காரில் போட்டு கடத்தி சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த சின்னச்சாமி, காரை பின்தொடர்ந்து துரத்தியுள்ளார். அப்போது 3பேரும் மோட்டார் சைக்கிளை இடித்து தள்ளி விட்டு காரில் தப்பிச்சென்றனர்.

    உடனே இது குறித்து சின்னச்சாமி குடிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். திருப்பூர் மாவட்ட எஸ்.பி., அபிஷேக் குப்தா (பொறுப்பு) உத்தரவின் பேரில் உடுமலை டி.எஸ்.பி., சுகுமாறன் மேற்பார்வையில், குடிமங்கலம் இன்ஸ்பெக்டர் ரோஸ்லின், சப்-இன்ஸ்பெக்டர் பஞ்சலிங்கம் மற்றும் போலீஸ்காரர்கள் முத்துமாணிக்கம், லிங்கேஸ்வரன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் சரவண வேலனை கடத்தி சென்ற மர்மநபர்கள் யார், எதற்காக கடத்தினார்கள் என்று விசாரணை நடத்தினர்.

    காரின் நம்பரை வைத்து விசாரணை நடத்தும் போது 3பேரும் கோவை தெலுங்கு பாளையத்தை சேர்ந்த சரவண பாண்டியன் (வயது 28), முத்துசெல்வம் (27), ரித்திக் (20) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து 3பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சரவண வேலனை கடத்தி சென்று கொலை செய்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்திய போது சரவண வேலன் கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பு தகவல் கிடைத்தது.

    கைதான சரவணபாண்டியனின் சொந்த ஊர் மதுரை திருப்பரங்குன்றம். கோவை தெலுங்குபாளையத்தில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இந்தநிலையில் சரவணபாண்டியனுக்கும், சரவண வேலனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அப்போது சரவணவேலன் தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்றும், எனக்கு கேரளா செல்ல வாடகைக்கு கார் வேண்டும் என்று கேட்டுள்ளார். உடனே சரவண பாண்டியன் கார் ஒன்றை வாடகைக்கு கொடுத்துள்ளார். அதனை வாங்கி சென்ற சரவண வேலன், செல்லாத ரூ.2ஆயிரம் நோட்டுக்களை மாற்றுவதற்காக கேரளா சென்றுள்ளார். அப்போது முறைகேடுகளில் ஈடுபட்டதாக கேரள போலீசார் சரவண வேலனை கைது செய்ததுடன், காரையும் பறிமுதல் செய்தனர். அதன்பிறகே சரவண வேலன் போலீஸ் இன்ஸ்பெக்டர் என ஏமாற்றி காரை வாடகைக்கு எடுத்து சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து சரவண பாண்டியன் ரூ.3 லட்சம் வரை பணம் செலுத்தி கேரளாவில் இருந்து காரை மீட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த சரவண வேலனிடம் பணத்தை திருப்பி தருமாறு சரவண பாண்டியன் கேட்டு வந்துள்ளார். ஆனால் அவர் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். நேற்று குடிமங்கலத்தில் இருப்பதை அறிந்த சரவண பாண்டியன் தன்னிடம் டிரைவர்களாக பணியாற்றும் முத்து செல்வம் , ரித்திக் ஆகியோரை அழைத்து கொண்டு குடிமங்கலம் சென்றதுடன் அங்கு வைத்து சரவணவேலனை காரில் கடத்தி கோவைக்கு சென்றுள்ளார். அப்போது சரவணவேலன் சத்தம் போடவே அவரது வாயை பொத்தியுள்ளனர். இதில் அவர் மூச்சுதிணறி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதனால் என்னசெய்வதென்று தெரியாமல் திகைத்த 3பேரும், கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளனர். அங்கு சரவண வேலன் மூச்சுத்திணறி இறந்துள்ளதாக டாக்டர்களிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் போலீசார் விசாரணையில் 3பேரும் சிக்கிக்கொண்டனர்.

    கொலை செய்யப்பட்ட சரவண வேலன் இது போல் பலரிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் என ஏமாற்றி பணம் பறித்துள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக சரவணவேலனை அவரது மனைவி பிரிந்து சென்றதுடன் வேறு திருமணம் செய்துள்ளார். சின்னச்சாமியிடம் திருமணத்திற்கு பெண் பார்த்து தருவதாக கூறி ரூ.1.50 வரை பணம் பறித்துள்ளார். போலீஸ் இன்ஸ்பெக்டர் என ஏமாற்றி பணம் பறித்த நபர் காரில் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சம்பவம் குறித்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது.
    • தலைமறைவான ஆசிரியர் வெங்கடேசன் ஏ.டி.எம்களில் பணம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுடன் உல்லாசமாக இருந்து வருவதாக தெரிகிறது.

    அகரம்சீகூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஆத்தூர் சாலை பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி தீபா (வயது 42) மாற்றுத்திறனாளியான இவர் பெரம்பலூர் வி. களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

    பெரம்பலூர் குரும்பலூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (44). இவரும் அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

    இவர்கள் 2 பேரையும் கடந்த 15-ந் தேதி முதல் காணவில்லை. மேலும் ஆசிரியை தீபா பயன்படுத்தி வந்த காரும் மாயமானது. அதைத்தொடர்ந்து மனைவியை காணவில்லை என தீபாவின் கணவர் பாலமுருகன் வி. களத்தூர் போலீஸ் நிலையத்திலும், கணவரை காணவில்லை என வெங்கடேசனின் மனைவி காயத்ரி பெரம்பலூர் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி கோவை பி1 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய கடைவீதி பகுதியில் மாயமான ஆசிரியை தீபாவின் கார் 2 நாட்களாக கேட்பாரற்று நின்று கொண்டிருப்பதாக வி. களத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    பின்னர் போலீசார் விரைந்து சென்று காரைத்திறந்து சோதனையிட்டனர். அப்போது அதில் ரத்தக் கறை படிந்த சுத்தியல், தீபா அணிந்திருந்த தாலி, கொலுசு, அவரின் ஏ.டி.எம். கார்டு வெங்கடேசனின் 2 செல்போன்கள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது.

    இதனிடையே ஆசிரியர் வெங்கடேசன் செல்போனில் இருந்து பாலியல் புரோக்கரான கோவை மதுக்கரை காந்தி நகரைச் சேர்ந்த மோகன் என்பவரை தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது.

    இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தீபா கதி என்ன என்பது குறித்து தனிப்படை கோவை, தேனி, நீலகிரி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. கேரளாவிற்கும் தனிப்படை விரைந்துள்ளது.

    தனிப்படை போலீசார் விசாரணையில் ஆசிரியர் வெங்கடேசன் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. தீபா என்ன ஆனார் என்பது தொடர்ந்து மர்மமாக உள்ளது. இதனிடையே கோவை, மதுரை, தேனி ஆகிய இடங்களில் ஏ.டி.எம்க.ளில் வெங்கடேசன் பணம் எடுத்த போது அங்குள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளில் ஆசிரியர் வெங்கடேசன் மட்டுமே இருப்பது பதிவாகியுள்ளது.

    வெங்கடேசன் தொடர்பு கொண்டு பேசுபவர்களின் செல்போன் எண்களை விசாரிக்கும் போது, அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் என்பது தெரிய வந்தது.

    தலைமறைவான ஆசிரியர் வெங்கடேசன் ஏ.டி.எம் களில் பணம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுடன் உல்லாசமாக இருந்து வருவதாக தெரிகிறது.

    மாயமான ஆசிரியர் வெங்கடேசன், தனது இருப்பிடத்தை போலீசர் அறிந்துவிடுவார்கள் என அவ்வப்போது சிம்கார்டுகளையும், தான் பதுங்கி இருக்கும் இடத்தையும் மாற்றி மாற்றி வருகிறார். இதனால் அவரை நெருங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதனால் தீபாவை வெங்கடேசன் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    வெங்கடேசன் சிக்கினால் மட்டுமே ஆசிரியை தீபா பற்றிய நிலை தெரியவரும் என்பதால் அவரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    • கஞ்சா, போதைப் பொருட்கள் கடத்துவது, இங்கிருந்து மருந்துகள், மஞ்சள், பீடி இலை உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் கடத்துவது நடந்து வருகிறது.
    • மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள தீவு பகுதியிலும் போலீசார் ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர்.

    தொண்டி:

    தமிழகத்தில் 180 கி.மீ. நீள கடற்கரை மாவட்டமாக ராமநாதபுரம் விளங்கி வருகிறது. இங்கு ராமநாதபுரம், ஏர்வாடி, கீழக்கரை, ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மீனவர்கள் வாரத்தில் 3 நாட்கள் கடலுக்கு சென்று வருகின்றனர்.

    அண்டை நாடான இலங்கை, ராமநாதபுரத்துக்கு கடல் வழியாக 20 மைல் தொலைவில் உள்ளது. இதன் காரணமாக கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இலங் கையில் இருந்து கஞ்சா, போதைப் பொருட்கள் கடத்துவது, இங்கிருந்து மருந்துகள், மஞ்சள், பீடி இலை உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் கடத்துவது நடந்து வருகிறது.

    இதனை தடுக்க கடலோர காவல்படையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும் இலங்கையில் இருந்து அகதிகளாகவும் இங்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கண்காணிக்கவும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம்.

    ராமநாதபுரம் மாவட்டத் தில் எஸ்.பி.பட்டனம் முதல் சாயல்குடி ரோஸ்மா நகர் வரை கடற்கரை உள்ளது. பாக் நீரினை, மன்னார் வளைகுடா பகுதிகளை உள்ளடக்கிய இந்தப்பகுதியில் அன்னிய ஊடுருவல், கடத்தல்களை தடுக்க இன்று கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் "சஜாக்" என்ற ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. கூடுதல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கனகராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் யாசர் மவுலானா, அய்யனார், முகமது தாரிக், கண்ணன் மற்றும் 60-க்கும் மேற்பட்ட கடலோர போலீசார் 4 குழுக்களாக பிரிந்து அதிவேக படகுகளில் கடலில் ரோந்து சென்று கண்காணிப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

    அப்போது கடற்கரை பகுதிகளில் புதிய நபர்கள் நடமாட்டம் குறித்து மீனவர்கள் உடனடியாக கடலோர போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. கடற்கரையில் இருந்து 7 கடல் மைல் தொலைவில் "சஜாக்" பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. மேலும் மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள தீவு பகுதியிலும் போலீசார் ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர்.

    • கைது செய்யப்பட்ட 6 பேரிடமிருந்து 20 லட்சம் ரூபாய்க்கு மேல் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
    • கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

    சேலம்:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 37). இவர் கண்ணு வலி கிழங்கு என சொல்லப்படும் செங்காந்தாள் விதை வியாபாரம் செய்து வருகிறார்.

    செங்காந்தாள் விதை கொள்முதல் செய்வதற்காக நண்பர்கள் அவினாசியை சேர்ந்த குமார், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த வாஞ்சியப்பன் (39) ஆகியோருடன் 50 லட்சம் ரூபாய் எடுத்துக்கொண்டு காரில் கடந்த செப்டம்பர் மாதம் 26-ந் தேதி காலை 4.30 மணிக்கு சேலம் இரும்பாலை அருகே வந்து கொண்டிருந்தார்.

    அப்போது மற்றொரு காரில் வந்த மர்மகும்பல் போலீஸ் என கூறி வெங்கடேஷ், அவருடன் வந்த குமார், வாஞ்சியப்பன் ஆகியோரை பணத்துடன் காரில் கடத்தியது. பின்னர் தாரமங்கலம் அருகே மாரமங்கலத்துப்பட்டி பகுதியில் இறக்கி விட்டு விட்டு கடத்தல் கும்பல் தப்பி சென்றது.

    இது குறித்து வெங்கடேஷ் இரும்பாலை போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து இந்த கடத்தலில் தொடர்புடைய 6 பேரை செப்டம்பர் மாதம் இறுதியில் போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை பிடிக்க துணை கமிஷனர் மதிவாணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை விசாரித்து வந்த நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள முத்தியால் பள்ளியை சேர்ந்த நடராஜன் (53), அவரது மனைவி சுஜாதா (45) ஆகியோரை நேற்று கைது செய்தனர் . தொடர்ந்து அவர்கள் கொடுத்த தகவல் படி சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பூசாரி வட்டம் சீனிவாசன் (44) , கீரப்பாப்பம்பாடி மகாலிங்கம் (39), மாமாங்கம் ஜெகன்மோகன் (44), தர்மபுரி மாவட்டம் அரூர் பெரியார் நகர் கோபி (38) ஆகியோரை அவரவர் வீட்டில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட 6 பேரிடமிருந்து 20 லட்சம் ரூபாய்க்கு மேல் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து 6 பேரையும் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

    ×