என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pudukkottai"

    • நயினார் நாகேந்திரனின் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் நாளை நடைபெறுகிறது.
    • தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    புதுக்கோட்டை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனின் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் திருக்கோகர்ணத்தில் பாலன் நகர் அருகே பள்ளத்திவயல் பகுதியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. இதில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்று பேசுகிறார்.

    இதையொட்டி பாதுகாப்பு காரணம் கருதி நாளை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இந்தநிலையில், பா.ஜ.க. பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை கூடுதல் டி.ஜி.பி. மகேஸ்வர தயாள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. ஜோஸ் நிர்மல் குமார், புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா ஆகியோர் உடன் இருந்தனர்.

    • சமீபத்தில் மதுரையில் தென்மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகளை மத்திய மந்திரி அமித்ஷா சந்தித்து பேசினார்.
    • கூட்டணி உறுதியானதும் பிரதமர் மோடி தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

    திருச்சி:

    2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில் தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.

    ஆளுங்கட்சியான தி.மு.க. வரும் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்கும் வகையில் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது.

    தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களுக்கும் கள ஆய்வு சென்று புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் வருகிறார். மேலும் தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்து தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆலோசனைகளை வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறார்.

    அதேபோல் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கிடையே வரும் தேர்தலையொட்டி பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து, 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அமைப்போம் என்று சூளுரைத்துள்ள எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. அரசால் மக்கள் படும் அவஸ்தைகள் குறித்து பேசி வருகிறார்.

    அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.க. இந்த தேர்தலில் எப்படியாவது தமிழ்நாட்டில் தி.மு.க.வை வீழ்த்துவதுடன், வலுவாக காலூன்றும் வகையிலும் செயல்பட்டு வருகிறது. அதற்கேற்றவாறு சமீபத்தில் மதுரையில் தென்மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகளை மத்திய மந்திரி அமித்ஷா சந்தித்து பேசினார்.

    அதேபோல் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. தலைமை, மத்திய மந்திரி பியூஸ் கோயலை களம் இறக்கி உள்ளது. தமிழ்நாடு பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அவர் கடந்த வாரம் சென்னை மற்றும் புதுச்சேரிக்கு வருகை தந்து நிர்வாகிகளை முதல்கட்டமாக சந்தித்து பேசினார். அதேபோல் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி யையும் சந்தித்து தேர்தல் வியூகம் மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

    பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரின் ஆலோசனையின்படி அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் பியூஸ்கோயல் ஈடுபட்டு உள்ளார். இந்த கூட்டணியில் பிற கட்சிகளை சேர்ப்பதற்கான பணிகளும் திரைமறைவில் நடைபெற்று வருகிறது.

    அதனை மெய்ப்பிக்கும் வகையில் சமீபத்தில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியின்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய த.வெ.க., தே.மு.தி.க. கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப் பட்டது. அதேபோல் அ.ம.மு.க., ஓ.பி.எஸ்.சின் அ.தி.மு.க. தொண்டர் மீட்புக்கழகம் மற்றும் பா.ம.க.வையும் கூட்டணியில் இணைக்கும் முயற்சிகளும் நடைபெற்று வருகிறது.

    இந்த பரபரப்பான சூழலில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருகிற 4-ந்தேதி தமிழகம் வருகிறார். தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த அக்டோபர் 12-ந்தேதி மதுரையில் தொடங்கி தமிழகம் முழுவதும் மேற்கொண்டுள்ள தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற தேர்தல் பிரசார யாத்திரை நிறைவு விழா புதுக்கோட்டையில் நடைபெறுகிறது.

    இதில் உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொள்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் 4-ந்தேதி திருச்சி வருகிறார். பின்னர் இங்கிருந்து புதுக்கோட்டைக்கு சென்று நயினார் நாகேந்திரனின் தேர்தல் பிரசார யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்கிறார்.

    இதற்காக நத்தம்பண்ணை ஊராட்சி பள்ளத்திவயல் பகுதியில் 60 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு அங்கு பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் கலந்துகொள்ள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், ஐ.ஜே.கே. கட்சி தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு பா.ஜ.க. சார்பில் முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    நயினார் நாகேந்திரனின் பிரசார பயண நிறைவு விழாவுடன், தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டமாகவும் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் கலந்துகொள்கிறார்கள்.

    புதுக்கோட்டை நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு திருச்சி வரும் அமித்ஷா இரவு கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கோர்ட் மாரியாட் ஓட்டலில் தங்கி ஓய்வு எடுக்கிறார். பின்னர் மறுநாள் (5-ந்தேதி) ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். அதன் பின்னர் திருச்சியில் நடை பெறும் 'நம்ம ஊரு மோடி ஜி' பொங்கல் விழாவில் கலந்து கொள்கிறார். 1000 பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிடும் இந்த நிகழ்ச்சி மன்னார் புரம் நான்கு ரோட்டில் அமைந்து உள்ள ராணுவ மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான பந்தல்கால் நடும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டார்.

    அமித்ஷா பங்கேற்கும் இந்த பொங்கல் விழாவில் ஆயிரம் பெண்கள் பங்கேற்க உள்ளனர். இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வருகை தரும் அமித்ஷா, அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணியில் சில கட்சிகளை இணைப்பதற்கான வேலைகளை தொடங்குவார் என பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. கூட்டணியை உறுதி செய்யாமல் இருக்கும் தே.மு.தி.க., அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்கவும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஏற்கனவே பிரதமர் மோடி வருகிற 9-ந்தேதி தமிழகம் வருவதாக இருந்தது. ஆனால் கூட்டணி இன்னும் இறுதியாகாததால் அவரது வருகை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கூட்டணி உறுதியானதும் அவர் தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். அமித்ஷா வருகை தமிழக பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சியினர் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • 2012 இல் புதுக்கோட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு கார்த்திக் தொண்டைமான் வென்றார்.
    • 2016 மற்றும் 2021 தேர்தல்களில் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு அவர் தோல்வியை தழுவினார்.

    அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக் தொண்டைமான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.

    2012 ஆம் ஆண்டு புதுக்கோட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு கார்த்திக் தொண்டைமான் வென்றார். அதன் பின்னர் 2016 மற்றும் 2021 தேர்தல்களில் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு அவர் தோல்வியை தழுவினார்.

    திமுகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கார்த்திக் தொண்டைமான், "அதிமுக மதவாத சக்திகளுக்கு துணை போகிறது. அதிமுக போகும் போக்கே சரியில்லை. தமிழ்நாட்டில் மதவாத சக்திகள் தலைதூக்க கூடாது என்ற காரணத்திற்காக திமுகவில் இணைந்தேன்" என்று தெரிவித்தார்.

    • பஸ்சை ஓட்டி வந்த நபர்கள், பஸ்சில் டீசல் இல்லாததால் நிறுத்தி விட்டு சென்றுள்ளது தெரிய வந்தது.
    • கல்லூரி காவலர் கேட்டபோது, ஸ்பேர் பஸ் எடுத்து வரச் சொன்னதாக கூறிவிட்டு சென்றுள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியின் பஸ் மர்ம நபர்களால் கடத்தப்பட்டதாக காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து ஆலங்குடி போலீசார் மாவட்டம் முழுவதும் தகவல் கொடுத்து சோதனை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் ஆலங்குடியில் காணாமல் போன கல்லூரி பஸ், அறந்தாங்கி அருகே நிற்பது தெரிய வந்தது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அறந்தாங்கி போலீசார், ஆலங்குடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

    பஸ்சை ஓட்டி வந்த நபர்கள், பஸ்சில் டீசல் இல்லாததால் நிறுத்தி விட்டு சென்றுள்ளது தெரிய வந்தது.

    அறந்தாங்கி போலீசாரின் தகவலையடுத்து, ஆலங்குடி போலீசார் அறந்தாங்கி விரைந்து சென்று காணாமல் போன கல்லூரி பஸ்சை மீட்டு வந்தனர்.

    இதனை தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட அதே கல்லூரியில் படிக்கும் 4 மாணவர்கள் அங்கு நின்ற கல்லூரி பஸ்சை ஓட்டிக்கொண்டு சென்றுள்ளனர்.

    இதுகுறித்து கல்லூரி காவலர் கேட்டபோது, ஸ்பேர் பஸ் எடுத்து வரச் சொன்னதாக கூறிவிட்டு சென்றுள்ளனர்.

    பஸ் வெளியே சென்ற பிறகு தான், அந்த பஸ் அதே கல்லூரி மாணவர் மற்றும் அவரது நண்பர்களால் கடத்தப்பட்டுள்ளது தெரிந்துள்ளது.

    இந்த பஸ்சை திட்டமிட்டு கடத்தியதால் ஏதேனும் தவறான எண்ணத்தில் கடத்தி இருப்பார்களோ? என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது.

    இச்சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஆலங்குடி போலீசார் பஸ்சை கடத்திய மாணவர்கள் 4 பேரையும் தேடி வருகின்றனர். 

    • டிராக்டர்கள் அணிவகுத்து வந்ததை பலரும் வினோதமாக பார்த்தனர்.
    • கிராம உதவியாளர்கள், டிராக்டர் உரிமையாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    அறந்தாங்கி:

    அறந்தாங்கியில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து நூதன முறையில் டிராக்டர் மூலம் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

    நாகுடியிலிருந்து ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான சிவக்குமார் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியானது பெருங்காடு, மேலப்பட்டு, அறந்தாங்கி வழியாக சுமார் 15 கிலோமீட்டர் தூரம் கடந்து விக்னேஷ்வரபுரம் அரசு தொழில்நுட்பக் கல்லூரியை அடைந்தது. அப்போது வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும், கையூட்டு பெறாமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. டிராக்டர்கள் அணிவகுத்து வந்ததை பலரும் வினோதமாக பார்த்தனர்.

    இறுதியாக எவ்வாறு வாக்களிப்பது குறித்து கல்லூரி மாணவ மாணவியர்களோடு உறுதி மொழி ஏற்கப்பட்டது. பேரணியில் கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தாசில்தார் திருநாவுக்கரசு, மண்டல துணை தாசில்தார் பாலமுருகன், வருவாய் ஆய்வாளர்கள் மதியழகன், சுமந்தா, பிரகதீஸ்வரன், கிராம நிர்வாக அலுவலர்கள் சுரேஷ், ராஜா, கார்த்திகேயன், ரமேஷ், புவனேஸ்வரி, வெண்ணிலா, மோகன், பிரபாகரன், கோபிராஜ், அழகு பாண்டியன், மகேஸ்வரி, பழனியம்மாள், துரை முருகன், யோகராஜ், கோபிநாத் தனசிங், உதயகுமார் உள்ளிட்ட கிராம உதவியாளர்கள், டிராக்டர் உரிமையாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காருக்குள் கிடந்த 5 பேரும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • தற்கொலை செய்த தொழில் அதிபர் புதுக்கோட்டை சிப்காட் பகுதியில் தொழில் செய்து வந்ததாக தெரிகிறது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அருகே உள்ள நமுன சமுத்திரம் பகுதியில் நகர சிவ மடம் உள்ளது. இதன் காவலாளியாக அடைக்கலம் என்பவர் உள்ளார்.

    இந்த மடத்தில் இறந்தவர்களுக்கு ஒரு சமூகத்தைச் சேர்ந்த உறவினர்கள் இறுதி காரியங்கள் செய்து வருகின்றனர். இங்கு நேற்று மாலை டி.என். 77 எம். 1705 எண் கொண்ட ஒரு கார் வந்தது. அதில் மூன்று பெண்கள் உட்பட 5 பேர் இருந்தனர்.

    இவர்கள் நேற்று மாலை அப்பகுதியில் நடமாடியதை சிலர் பார்த்துள்ளனர். பின்னர் வெளியே சென்றுவிட்டு திரும்பினர். இன்று காலை அந்தக் கார் வெகு நேரமாகியும் அங்கிருந்து புறப்படவில்லை.

    இதனால் அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் அருகில் சென்று பார்த்தபோது 5 பேரும் பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கைகளில் சாய்ந்து கிடந்தனர். உடனே காவலாளி அடைக்கலம் நமுன சமுத்திரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். அப்போது காருக்குள் கிடந்த 5 பேரும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. தற்கொலை செய்தவர்கள் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த தொழிலதிபர் மற்றும் அவரது குடும்பத்தை சார்ந்தவர்கள்.

    தற்கொலை செய்த தொழில் அதிபர் புதுக்கோட்டை சிப்காட் பகுதியில் தொழில் செய்து வந்ததாக தெரிகிறது. சேலத்திலும் அவர்கள் தொழில் நடத்தி வந்துள்ளனர். ஆனால் பெயர் விபரங்கள் குறித்து விசாரணை நடத்து வருகிறது.

    ஒரு தாய் மகள், தந்தை மகன் மாமியார் உறவு முறையாக இருக்கலாம் என கருதப்படுகிறது. காரில் போலீசார் சோதனை போட்டனர். அப்போது அங்கு ஒரு கடிதம் சிக்கியது. அதில் கடன் தொல்லை காரணமாக 5 பேரும் தற்கொலை செய்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தடயங்களை சேகரித்தனர்.

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காருக்குள் விஷம் குடித்து பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • மந்திரி சபை மாற்றப்படுவது அதிசயமான நிகழ்வு அல்ல, வாடிக்கையான ஜனநாயக நிகழ்வுதான்.
    • முதலமைச்சர் எடுக்கின்ற நிர்வாக முடிவு, இதில் விமர்சனம் செய்வது என்னை பொறுத்தவரையில் சரியானது அல்ல.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

    முதலமைச்சரின் அதிகாரத்திற்கு உட்பட்டு உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது முதலமைச்சர் எடுக்கின்ற நிர்வாக முடிவு, இதில் விமர்சனம் செய்வது என்னை பொறுத்தவரையில் சரியானது அல்ல. ஒரு முதலமைச்சருக்கோ பிரதம மந்திரிக்கோ முழு அதிகாரம் உண்டு, யாரை வேண்டுமானாலும் அவர்கள் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளலாம்.

    மந்திரி சபை மாற்றப்படுவது அதிசயமான நிகழ்வு அல்ல, வாடிக்கையான ஜனநாயக நிகழ்வுதான். இந்திய அளவில் குடும்பங்களை மையமாக வைத்துதான் அரசியல் கட்சிகள் இயங்குகின்றன. காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் சரி மாநில கட்சிகள் பலவாக இருந்தாலும் சரி இது புரிவதில்லை. கட்சியில் இருப்பவர்கள் ஒருவரை தலைவராக ஏற்றுக் கொண்டு விட்டால் அதனை கட்சிக்கு வெளியே உள்ளவர்கள் விமர்சனம் செய்வது என்னை பொறுத்தவரையில் உகந்ததாக இருக்காது.

    செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர எந்த விதமான தடையும் கிடையாது, தண்டனை பெற்றால் மட்டுமே அமைச்சர் பதவியை ஏற்க முடியாது. அப்படி வழக்கு போட்டவர்கள் எல்லாம் அமைச்சராக முடியாது என்றால் பாஜக நினைத்தால் எல்லோர் மீதும் வழக்கு போட்டு யாரையுமே அமைச்சராக பதவி ஏற்க விடாமல் செய்துவிடும். கூட்டணி என்ற முறையில் நாங்கள் (காங்கிரஸ்) திமுகவோடு தோலோடு தோலாகதான் நிற்கின்றோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்திற்கு நல்ல அமைச்சர்களை புதுக்கோட்டை மாவட்டம் கொடுத்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
    • திருமயம் வட்ட மருத்துவமனை 10 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்படும் என முதல்வர் அறிவிப்பு

    புதுக்கோட்டை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    எந்தக் கோட்டையாக இருந்தாலும் அது ஒரு நாள் பழைய கோட்டையாக ஆகிவிடும். ஆனால் எப்போதும் புதிய- கோட்டையாகவே இருப்பது, இந்த புதுக்கோட்டை! தமிழகத்திற்கு நல்ல அமைச்சர்களைக் கொடுத்த இந்த புதுக்கோட்டை மாவட்டத்திற்கு நான் நன்றி.

    இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள, அடிக்கல் நாட்டப்பட்டுள்ள திட்டப் பணிகள் மட்டுமல்லாமல், இந்த மாவட்டத்தினுடைய மக்கள் மேலும் பயனடையும் வகையில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

    திருமயம் பகுதி மக்கள் பயன்பெறக்கூடிய வகையில், 10 கோடி ரூபாய் செலவில், கூடுதல் படுக்கைகள், நவீன அறுவை சிகிச்சை அரங்கம் போன்ற வசதிகளோடு, திருமயம் வட்ட மருத்துவமனை தரம் உயர்த்தப்படும்.

    இந்த மாவட்டத்தில் முக்கிய மீன்பிடிப்பு மையங்களாக இருந்து வரும் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதிகளில் வாழக்கூடிய மீனவ மக்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், கோட்டைப்பட்டினம் மீன் இறங்குதளம் 15 கோடி ரூபாய் செலவிலும், ஜெகதாபட்டினம் மீன் இறங்குதளம் 15 கோடி ரூபாய் செலவிலும் மேம்படுத்தப்படும். மேலும் ஜெகதாப்பட்டினத்தில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்கான ஆய்வுப் பணிகளும் மேற்கொள்ளப்படும்.

    மொத்தமாகச் சொல்வதாக இருந்தால், மாநிலம் முழுமைக்கும் என்ன தேவை, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் என்ன தேவை, ஒவ்வொரு தனிமனிதனின் தேவையும் என்ன என்பதை பார்த்துப் பார்த்துச் செய்யக்கூடிய அரசாக நம்முடைய தமிழ்நாடு அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • புதுக்கோட்டையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு துறைகளின் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
    • ரூ.81.31 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 140 திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.143.05 கோடி மதிப்பீட்டிலான 1,397 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்

    புதுக்கோட்டை:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் தொடங்கி வைத்த நலத்திட்ட பணிகள் விபரம் வருமாறு:

    ரூ.81.31 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 140 திட்டப் பணிகளை திறந்து வைத்து, ரூ.143.05 கோடி மதிப்பீட்டிலான 1,397 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.379.30 கோடி மதிப்பீட்டில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பேரூராட்சித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் மொத்தம் ரூ.81 கோடியே 31 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற 140 திட்டப் பணிகளை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.

    தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, நெடுஞ்சாலைத்துறை (நபார்டு மற்றும் கிராம சாலைகள்), சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத்துறை என மொத்தம் ரூ.143 கோடி மதிப்பீட்டில் 1,397 திட்டப் பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

    மேலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மகளிர் திட்டம்), சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை, கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட துறைகளின் சார்பில் முதலமைச்சர் பயனாளிகளுக்கு ரூ.379 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் வழங்கினார்.

    ஆகமொத்தம் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மாைல நடைபெறும் அரசு விழாவில் புதிய திட்டப் பணிகள், நலத்திட்ட உதவிகள் என சுமார் ரூ.603.66 கோடி மதிப்பிலான மக்கள்நலத் திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    பொன்னமராவதி கலவரத்துக்கு காரணமான வாட்ஸ்அப் வீடியோவை வெளியிட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். #PonnamaravathiViolence
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் இரு சமுதாயத்தினருக்கு
    இடையே கடந்த வாரம் கடுமையான மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மோதலில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தனர். 
     
    அப்போது கலைந்துசென்ற நபர்கள் திடீரென கற்களை வீசி போலீசாரை நோக்கி தாக்கினர். இதில் 2 காவலர்கள் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

    இந்நிலையில், பொன்னமராவதி கலவரத்துக்கு காரணமான வாட்ஸ்அப் வீடியோவை வெளியிட்ட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக, பட்டுக்கோட்டையை சேர்ந்த செல்வகுமார், வசந்த் ஆகிய இருவரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் செல்வகுமாரை அங்கிருந்து வரவழைத்து கைது செய்து விசாரித்து வருகின்றனர். #PonnamaravathiViolence
    புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை அடைக்க மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி உத்தரவு பிறப்பித்தார். #PonnamaravathiViolence
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியை சேர்ந்த ஒரு சமூகத்தை சேர்ந்த பொதுமக்களை பற்றி வாட்ஸ் அப்பில் அவதூறு கருத்துகளை பதிவிட்ட நபர்களை கைது செய்யக்கோரி அந்த சமுதாய பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பொன்னமராவதி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தின் மற்ற இடங்களில் போராட்டம் நீடிக்கிறது. இதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் அமைதி திரும்பும் வகையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.



    இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை அடைக்க மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி உத்தரவு பிறப்பித்தார். அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். #PonnamaravathiViolence

    புதுக்கோட்டை அருகே அவதூறாக பேசிய ஆடியோ வெளியிட்ட மர்ம நபர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு கல்வீச்சில் ஈடுபட்டனர். அவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. #PonnamaravathiViolence
    பொன்னமராவதி:

    தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியின் சுயேச்சை வேட்பாளரான செல்வராஜையும், அவர் சார்ந்த சமூகத்தையும் 2 பேர் அவதூறாக பேசும் ஆடியோ ‘வாட்ஸ்-அப்’ சமூக வலைத்தளத்தில் வெளியானது.

    இந்த ஆடியோ நேற்று முன்தினம் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் வேகமாக பரவியது. இதனால் பொன்னமராவதி அருகே கருப்புக்குடிப்பட்டியில் உள்ள ஒரு சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்தனர். அவர்கள், தங்கள் சமூகத்தை இழிவாக பேசிய 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்றுமுன்தினம் பொன்னமராவதி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க வந்தனர்.

    அப்போது நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றதால், இரவில் வாருங்கள் என்று கூறி, அவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு, அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீண்டும் பொன்னமராவதி போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அவர்களிடம் இருந்து, போலீசார் புகார் மனுவை பெற்றுக்கொண்டனர்.

    அப்போது அவர்கள், உடனடியாக அந்த 2 பேரையும் கைது செய்ய வேண்டும் என்று கூறினார்கள். அதற்கு போலீசார் உடனடியாக எப்படி கைது செய்ய முடியும் என்று கேட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், பொன்னமராவதி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    இந்நிலையில் நேற்று காலையில் மீண்டும் கருப்புக்குடிப்பட்டியை சேர்ந்த அந்த சமூக பொதுமக்கள், பொன்னமராவதி போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அப்போது அவர்கள் உடனடியாக தங்கள் சமூகத்தை இழிவாக பேசிய 2 பேரையும் கைது செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் பொன்னமராவதி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க முயற்சி செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசாரை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். இதனால் ரோடுகள் முழுவதும் கற்களாக கிடந்தன.

    இந்த கல்வீச்சில் 3 போலீசார் உள்பட 13 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 3 போலீசாருக்கும், பொன்னமராவதி போலீஸ் நிலையத்திற்கு மருத்துவ குழுவினர் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. காயமடைந்த மற்ற 10 பேர் ஆங்காங்கே உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். மேலும், கல்வீச்சில் போலீசாரின் 6 வாகனங்கள் சேதம் அடைந்தன.

    மேலும் அந்த சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள், பொன்னமராவதி சாலையில் உள்ள கடைகளின் முன்பு வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் மற்றும் சில கடைகளை அடித்து நொறுக்கினார்கள். அவர்கள் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பொன்னமராவதிக்கு வரும் சாலைகள் அனைத்திலும் பனைமரம் உள்ளிட்ட மரங்களை வெட்டிப்போட்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் பொன்னமராவதி நகரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

    தொடர்ந்து பொன்னமராவதி பகுதியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இவர்கள் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டவர்களை, கலைந்து போகச்சொல்லி ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தினர். இது குறித்து தகவல் அறிந்த திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூ, டி.ஐ.ஜி.க்கள் லலிதா லெட்சுமி, லோகநாதன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

    இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். மேலும் கருப்புக்குடிப்பட்டியில் சம்பந்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 12 பேரை அழைத்து கலெக்டர் உமா மகேஸ்வரி மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதற்கிடையே பொன்னமராவதி நகரை அமைதிப்படுத்தும் வகையில் போலீசார் அணிவகுப்பு நடத்தினார்கள்.

    வன்முறை சம்பவத்தை தொடர்ந்து பொன்னமராவதி தாலுகா முழுவதும் நேற்று மாலை 6 மணி முதல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவிட்டுள்ளார்.

    இதற்கிடையே புதுக்கோட்டையை அடுத்த கவிநாடு கண்மாய் முக்கம் அருகே குடுமியான்மலை மற்றும் இலுப்பூர் செல்லும் சாலையில் எந்திரத்தின் உதவியுடன் மரங்களை வெட்டிப்போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் மறியலில் ஈடுபட்ட சிலர் அந்த பகுதியில் நின்ற அரசு பஸ்கள் மீது கற்களை வீசினார்கள்.

    இதில் 3 அரசு பஸ்களின்கண்ணாடிகள் உடைந்தன. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் அலறி அடித்துக்கொண்டு பஸ்சை விட்டு கீழே இறங்கி ஓடினார்கள். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #PonnamaravathiViolence
    ×