என் மலர்
நீங்கள் தேடியது "former MLA"
- 2012 இல் புதுக்கோட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு கார்த்திக் தொண்டைமான் வென்றார்.
- 2016 மற்றும் 2021 தேர்தல்களில் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு அவர் தோல்வியை தழுவினார்.
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக் தொண்டைமான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.
2012 ஆம் ஆண்டு புதுக்கோட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு கார்த்திக் தொண்டைமான் வென்றார். அதன் பின்னர் 2016 மற்றும் 2021 தேர்தல்களில் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு அவர் தோல்வியை தழுவினார்.
திமுகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கார்த்திக் தொண்டைமான், "அதிமுக மதவாத சக்திகளுக்கு துணை போகிறது. அதிமுக போகும் போக்கே சரியில்லை. தமிழ்நாட்டில் மதவாத சக்திகள் தலைதூக்க கூடாது என்ற காரணத்திற்காக திமுகவில் இணைந்தேன்" என்று தெரிவித்தார்.
- அ.தி.மு.க. பொதுக்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 12-ந் தேதி பண்ருட்டிக்கு வந்தார்.
- சத்யா பன்னீர்செல்வம் கணவர் மீது ஏற்கனவே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி பஸ் நிலையம் அருகே உள்ள காமராஜர் நகரில் வசித்து வருபவர் சத்யா பன்னீர்செல்வம். இவர் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2021 வரை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்து வந்தார். இவரது கணவர் பன்னீர்செல்வம். இவர் முன்னாள் நகர்மன்ற தலைவர் ஆவார்.
கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சத்யா பன்னீர்செல்வம் அ.தி.மு.க. சார்பில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை். இதனால் சத்யா பன்னீர்செல்வமும் அவரது கணவர் பன்னீர்செல்வமும் அ.தி.மு.க.வில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தனர்.
பின்னர் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்து கொள்ளுமாறு தலைமை அலுவலகத்துக்கு மனு அளித்தனர். இதனை தொடர்ந்து சத்யா பன்னீர்செல்வத்தையும், அவரது கணவர் பன்னீர்செல்வத்தையும் அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வில் இணைத்து உத்தரவிட்டார். மேலும் சத்யா பன்னீர்செல்வத்திற்கு அ.தி.மு.க. மகளிர் அணி துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 12-ந் தேதி பண்ருட்டிக்கு வந்தார். அவருக்கு சத்யா பன்னீர்செல்வம் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் 6 பேர் கொண்ட குழுவினர் இன்று காலை 6.30 மணிக்கு பண்ருட்டி காமராஜர் நகரில் உள்ள சத்யா பன்னீர்செல்வம் வீட்டிற்கு சென்றனர்.
அங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தகவலை அறிந்ததும் சத்யா பன்னீர்செல்வம் வீட்டு முன் அ.தி.மு.க. தொண்டர்கள் குவிந்தனர். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சத்யா பன்னீர் செல்வம் கணவர் பன்னீர்செல்வம் மீது ஏற்கனவே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் மீண்டும் அங்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருவது பண்ருட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தென்காசி மாவட்டத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான டன் கனிம வளங்கள் கனரக வாகனங்கள் மூலம் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
- குறிப்பிட்ட அளவு அனுமதி பெற்றுக்கொண்டு அதிக அளவிலான கனிம வளங்கள் கடத்தப்படுவதால் அரசுக்கு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.
கடையம்:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தென்காசி, அம்பை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்ப தாவது:-
தென்காசி மாவட்டத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான டன் கனிம வளங்கள் கனரக வாகனங்கள் மூலம் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இதனால் தமிழகத்தின் கனிம வளங்கள் முற்றிலும் அழிந்து விடும் அபாயம் உள்ளது. மேலும் இந்த கனரக வாகனங்களால் பொதுமக்களும், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளும் சாலையில் செல்ல அச்சப்படும் அளவிற்கு அதிக பாரத்து டனும், அதி வேகத்துடனும் சென்று வருகிறது.
குறிப்பிட்ட அளவு அனுமதி பெற்றுக்கொண்டு அதிக அளவிலான கனிம வளங்கள் கடத்தப்படுவதால் அரசுக்கு பலகோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இதனை தடுக்க வலியுறுத்தி தென்காசி மாவட்ட கனிம வளம இயக்கம் சார்பில் வருகிற 13-ந்தேதி புளியரையில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம்.
இதுதொடர்பாக ஒரு மாதத்திற்கு முன்பாகவே முறைப்படி தெரிவித்தி ருக்கிறோம். அதற்கான ஏற்பாடுகளிலும நாங்கள் ஈடுபட்டு வருகிறோம்.
ஆனால் போராட்டத்தை தடுக்கும் விதமாக காவல்துறையினர், ஆர்.டி.ஓ. மூலமாக எங்கள் நிர்வாகிகள் சிலருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இது ஜனநாயகத்திற்கு எதிரானதாகும். எனவே எங்கள் போராட்டத்திற்கு உரிய அனுமதி வழங்கவும், கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- திருமண மண்டபம் பைனான்ஸ் உள்ளிட்ட தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார்.
- வீட்டில் இருந்த பணம் மற்றும் ஆவணங்களை வருமானவரி துறையினர் எடுத்துச் சென்றனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ். இவருடைய உறவினர் நவீன் குமார் (வயது 42).
இவர் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி எதிரே உள்ள காந்திபேட்டை திருநாத முதலியார் தெருவில் வசித்து வருகிறார்.
திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் டிஜிட்டல் ஸ்டுடியோ பேனர் கடை வைத்துள்ளார். மேலும் திருமண மண்டபம் பைனான்ஸ் உள்ளிட்ட தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று இரவு வருமானவரி துறை அதிகாரிகள் நவீன் குமார் வீட்டிற்குள் அதிரடியாக புகுந்தனர். அங்கிருந்த ஆவணங்களை கைப்பற்றி விசாரித்தனர்.
மேலும் நவீன் குமார் வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.40 லட்சம் வரை பணம் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்த பணம் மற்றும் ஆவணங்களை வருமானவரி துறையினர் எடுத்துச் சென்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பணம் யாருடையது என்பது குறித்து வருமான வரி துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் திருப்பத்தூர் சுற்றுலா மாளிகையில் 10-க்கும் மேற்பட்ட வருமானவரி துறையினர் முகாமிட்டு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளராகவும் பணியாற்றி வந்தார்.
- அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினர் இரங்கல்.
அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ்.அன்பழகன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
கடந்த 2001- 2006 வரையில் திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ். அன்பழகன். இவர் எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளராகவும் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஏ.கே.எஸ் அன்பழகன் இன்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
- கட்சி வேறுபாடுகளின்றி அனைவரிடமும் பழகும் குணம் கொண்டவர்.
- தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் அளவற்ற பாசம் கொண்டு பழகியவர்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
பத்மநாபபுரம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேலாயுதம் மறைவெய்திய செய்தி அறிந்து மிகுந்த வருத்த முற்றேன்.
மாற்றுக் கொள்கைகள் கொண்டவராக இருந்தாலும், கட்சி வேறுபாடுகளின்றி அனைவரிடமும் பழகும் குணம் கொண்டவர்; பழகு தற்கினிய உள்ளம் கொண்டவர் அவர்.
தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் அளவற்ற பாசம் கொண்டு பழகியவர். அவரது இல்ல நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்று வாழ்த்திய நினைவுகள் என் நெஞ்சில் நிழலாடுகிறது.
அன்னாரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- பணம் கேட்டு கடத்தியதாகவும், ரூ.1.50 கோடி பறித்து கொண்ட தாகவும் புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஈஸ்வரன் புகார் அளித்தார்.
- கைது செய்யப்பட்ட தர்மலிங்கமும், கர்ணனும் அண்ணன் தம்பிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதி அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. ஈஸ்வரன்(46). புஞ்சைபுளியம்பட்டி அருகே புஜங்கனூரியில் பெற்றோருடன் வசித்து வருகிறார்.
கடந்த மாதம் 24-ந் தேதி 6 பேர் கொண்ட கும்பல் தன்னை பணம் கேட்டு கடத்தியதாகவும், ரூ.1.50 கோடி பறித்து கொண்ட தாகவும் புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஈஸ்வரன் புகார் அளித்தார்.
இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசார ணையில் சத்தியமங்கலம் அடுத்த அரியப்பம் பாளையம் பகுதியை சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க. நிர்வாகி மிலிட்டரி சரவணன் இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.
ஈஸ்வரன் எம்.எல்.ஏ.வாக இருந்த போது அவருக்கு உதவியாளராக சரவணன் இருந்துள்ளார். அவர் தூண்டுதல் பெயரில் மோகன் உள்பட 6 பேர் ஈஸ்வரனை கடத்தி அடித்து உதைத்து பணம் பறித்துள்ளனர். அவர்கள் அனை வரும் தலை மறைவாகி விட்டனர். கடத்தல் கும்பலை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இதற்கிடையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை சேர்ந்த பிரைட் பாலு (45), சத்தியமங்கலம் செண்பகப் புதுரை சேர்ந்த சீனிவாசன் (45) ஆகிய 2 பேரையும் கோவை கலெக்டர் அலுவலகம் அருகே போலீசார் கைது செய்தார்கள். அவர்களிடமிருந்து ரூ.4 லட்சம் மீட்கப்பட்டது.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கோவை தொண்டா முத்தூரை சேர்ந்த தர்மலிங்கம் (47), சத்திய மங்கலம் அருகே உள்ள உக்கிரம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த கர்ணன் (42) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.4.50 லட்சம் மீட்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட தர்மலிங்கமும், கர்ணனும் அண்ணன் தம்பிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட சரவணன் மற்றும் மோகன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகின்றனர்.
இவர்களை பிடிக்க போலீசார் தீரும் காட்டி வருகின்றனர். சரவணன் பிடிபட்டால் தான் எதற்காக கடத்தல் சம்பவம் நடைபெற்றது என உண்மையான நிலவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
- ரெட்டியார்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 350-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.
- சப்-இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் 2 தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.
நெல்லை:
நெல்லையை அடுத்த ரெட்டியார்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் சுமார் 350-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் இருந்த பழமையான கட்டிடம் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு கருதி சமீபத்தில் கலெக்டரின் உத்தரவின் காரணமாக இடித்து அகற்றப்பட்டது.
தற்போது அந்த இடத்தை சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் அமைக்க பள்ளி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அதில் பாதி இடம் அங்கு உள்ள கோவில் நிர்வாகத்தினர் கொடுத்தது. அதனை திருப்பித் தரும்படி அந்த இடத்தின் முன்னாள் உரிமையாளர்கள் கேட்டனர்.
இது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பள்ளி நிர்வாகம் சார்பில் பெருமாள்புரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சப்-இன்ஸ்பெக்டர் அருணாச்சலம் அங்கு வந்து 2 தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். அங்கு முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் வந்து பள்ளி நிர்வாகம் மற்றும் ஊர் மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
பள்ளிக்கு கொடுத்த இடத்தை மீண்டும் கேட்பது நியாயம் இல்லை. அந்த இடத்தில் காம்பவுண்டு சுவர் கட்டி மாணவ மாணவிகள் விளையாடுவதற்கு விளையாட்டு மைதானம் அமைக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இதுதொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள பேசி முடிக்கப்பட்டது.
மதுரை:
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள டி.கிருஷ்ணாபுரத்தில் கட்டபொம்மன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது முன்னாள் எம்.எல்.ஏ. கதிரவன் தலைமையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் அங்குள்ள மாரியம்மன் கோவில் முன்பு பார்வர்டு பிளாக் கட்சி கொடியை ஏற்றினர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
இது குறித்து துள்ளுக்குட்டி நாயக்கனூர் கிராம நிர்வாக அதிகாரி ரகுபதி எம்.கல்லுப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
எவ்வித அனுமதியும் பெறாமல் கட்சிக்கொடியை ஏற்றியதாக முன்னாள் எம்.எல்.ஏ. கதிரவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் காசி, பாஸ்கரபாண்டி உள்ளிட்ட 26 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் கிருஷ்ணாபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தில் இருந்து சென்னைக்கு 274 கி.மீ. தூரத்திற்கு ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது.
அதற்கான நில அளவீடு பணி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடந்தது. அப்போது எதிர்ப்பு தெரிவித்த நில உரிமையாளர்கள் மற்றும் நடிகர் மன்சூர் அலிகான், சமூக ஆர்வலர் பியூஷ்மானூஸ், மாணவி வளர்மதி, அரசியல் கட்சி பிரமுகர்கள் முத்துக்குமார், மாரிமுத்து உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே 8 வழி சாலைக்கு எதிராக பாதிக்கப்படும் நில உரிமையாளர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டது. மேலும் மத்திய அரசு சார்பில் சுற்று சூழல் அனுமதி பெற்ற பிறகே 8 வழி சாலைக்கான பணிகள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
8 வழி சாலை திட்டத்திற்கு தடை விதிக்ககோரி தொடரப்பட்ட வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தது. மேலும் அதனை எதிர்த்து போராடிய போது மனித உரிமை மீறலுக்கு ஆளான சேலம் முத்துக்குமார், சேலம் சூரியகவுண்டர் காடு மாரியப்பன், கிருஷ்ணகிரி அத்திப்பாடி மல்லிகா, சவுந்தர் ஆகியோருக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கையும் நீதிபதிகள் நேற்று விசாரித்தனர்.
அப்போது இந்த திட்டத்திற்கு எதிராக போராடிய பொதுமக்களை கைது செய்த போலீசாரின் செயலுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்ததுடன் இந்த மக்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ஏன் ரத்து செய்யக்கூடாது என்றும் கேள்வி எழுப்பினர். பின்னர் இந்த திட்டத்திற்கு எதிராக போராடிய பொது மக்களை கைது செய்த போது மனித உரிமை மீறப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க உத்தரவிட்டுள்ளனர். இதனால் விரைவில் இது குறித்து சி.பி.சி.ஐ.டி.போலீசார் விசாரணையை தொடங்க உள்ளனர்.
சேலம்-சென்னை 8 வழிசாலைக்கு எதிராக திருவண்ணாமலையில் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. டில்லிபாபு தன்னை தாக்கியது தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்திற்கு புகார் கொடுத்தார்.
அந்த புகாரில் செங்கம் கரியமங்கலம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த ஜூன் மாதம் 26-ந் தேதி எனது நண்பர்களுடன் சாப்பிட்டு கொண்டிருந்தேன். அப்போது செங்கம் டி.எஸ்.பி.யாக இருந்த சுந்தரமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமச்சந்திரன் மற்றும் முத்து குமாரசாமி ஆகியோர் என்னை புதுப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
மேலும் 8 வழி சாலைக்கு எதிராக போராடியதாக கூறி என்னை தாக்கியதுடன் தகாத வார்த்தைகளால் திட்டி சித்ரவதை செய்தனர். என் மீது பொய் வழக்கும் போட்டனர். அவர்கள் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தார்.
இந்த நிலையில் டி.எஸ்.பி. சுந்தரமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமச்சந்திரன் மற்றும் முத்துகுமாரசாமி ஆகிய 3 பேரும் டிசம்பர் மாதம் 12-ந் தேதி மாநில மனித உரிமை ஆணையம் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. #Greenwayroad
காரைக்குடி அருகே உள்ள கோவிலூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான ரசாயன ஆலை உள்ளது. இந்த ஆலையில் இருந்து வெளிவரும் கழிவுநீரால் அந்த பகுதியில் குடிநீர் மற்றும் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், ஆலையில் இருந்து வெளியேறும் புகையினால் பல்வேறு வியாதிகள் பரவி வருவதாக கூறி அந்த ஆலையை மூட வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களை அந்த பகுதி மக்கள் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் இந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக அந்த போராட்டக்குழு சார்பில் நேற்று அந்த ஆலை முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்தனர். ஆனால் போலீசார், இந்த முற்றுகை போராட்டத்திற்கு அனுமதி மறுத்தனர். அனுமதி மறுக்கப்பட்டதால் முற்றுகை போராட்டம் கோவிலூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டமாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டதால் அதற்கு போலீசார் அனுமதி வழங்கினர். இதையடுத்து காரைக்குடி மற்றும் கோவிலூரில் உள்ள ஆலை முன்பு ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.
மேலும் காரைக்குடியில் இருந்து புறப்பட்டு சென்ற பஸ்கள் மற்றும் வாகனங்கள் கழனிவாசல் வழியாக பேயன்பட்டி பைபாஸ் சாலையில் திருப்பி விடப்பட்டது. இந்த போராட்டத்தில் அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டால் அதை தடுக்கும் வகையில் போலீசார் தரப்பில் வஜ்ரா வாகனம், தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் தயார் நிலையில் இருந்தன.
ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. காமினி மேற்பார்வையில் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளத்துரை, சிவகங்கை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜானகிராமன் உள்பட 8 துணை சூப்பிரண்டுகள், 36 இன்ஸ்பெக்டர்கள், 136 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 1300 போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
ஆலையை மூடக்கோரி நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ. கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் காந்திய தொண்டர் மன்ற ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பழ.கருப்பையா, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் கே.எம்.சரீப், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில துணைச்செயலாளர் பி.எல்.ராமச்சந்திரன், பாட்டாளி மக்கள் கட்சி மாநில பொருளாளர் திலகபாமா ஆகியோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் சங்கராபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாங்குடி, முன்னாள் கவுன்சிலர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் அழகப்பன், காரைக்குடி நகர காங்கிரஸ் தலைவர் பாண்டிமெய்யப்பன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் சகுபர்சாதிக், அழகன் அறக்கட்டளை தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டம் நடந்துகொண்டிருக்கும்போது முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா தலைமையில் சென்ற ஒரு பகுதியினர் அந்த ஆலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தபோவதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா, போலீசார் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பழ.கருப்பையா, காந்திய தொண்டர் மன்ற நிர்வாகி விஜயராகவன், நாம் தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாயல்ராம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் வேணுகோபால், தாலுகா செயலாளர் தட்சணாமூர்த்தி உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.






