search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madras HC"

    • வாக்காளர்களுக்கு வினியோகிக்க பணம் கொண்டு சென்றது சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றம்.
    • வருகிற 24-ந்தேதிக்குள் பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அன்றைய தினத்திற்கு தள்ளிவைத்தனர்.

    சென்னை:

    தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் போது, நெல்லை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்களிடம் இருந்து ரூ.4 கோடியும், நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் அலுவலகத்தில் இருந்து ரூ.28 லட்சத்து 51 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த பணம் பறிமுதல் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி நெல்லை தொகுதி சுயேட்சை வேட்பாளர் ராகவன், சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 'வாக்காளர்களுக்கு வினியோகிக்க பணம் கொண்டு சென்றது சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றம். எனவே இது தொடர்பாக புகார் அளித்தும் அமலாக்கத்துறை இதுவரை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வக்கீல், தேர்தலின் போது பணம் பறிமுதல் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு, சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்டத்தில் பட்டியலிடப்பட்ட குற்றமாக கருத முடியாது.

    இருப்பினும், இது சம்பந்தமாக அமலாக்கத்துறையின் விளக்கத்தை பெற்று தெரிவிப்பதாக கூறினார். இதையடுத்து, இந்த மனுவுக்கு வருகிற 24-ந்தேதிக்குள் பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அன்றைய தினத்திற்கு தள்ளிவைத்தனர்.

    • ஜெயங்கொண்டம் அடுத்த மீன்சுருட்டியில் ராஜாகண்ணுவின் உடல் வீசப்பட்டதாக சிபிசிஐடி போலீசார் அறிக்கை தாக்கல் செய்தனர்.
    • கம்மாபுரத்தில் போலீஸ் துன்புறுத்தலில் உயிரிழந்த ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி நடத்திய சட்டப் போராட்டத்தை தழுவி ‘ஜெய்பீம்’ திரைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம், கம்மாபுரம் ஒன்றியத்தில் உள்ளது முதனை கிராமம். இங்கு குரும்பர் எனும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 4 குடும்பங்கள் வசித்து வந்தன. இவர்கள் 1993-ம் ஆண்டு நெல் அறுவடைப் பணிக்காக பக்கத்து கிராமங்களுக்கு சென்று வந்த நிலையில், கோபாலபுரத்தில் ஒரு வீட்டில் 40 சவரன் நகை காணாமல் போனது. இதுகுறித்து விசாரிப்பதற்காக முதனை கிராமத்திற்கு வந்த போலீசார், அங்கிருந்த மக்களை மிரட்டியுள்ளனர்.

    ராஜாகண்ணு என்பவரை கைது செய்த போலீசார் அவரை நிர்வாணப்படுத்தி கடுமையாக தாக்கினர். காவல்நிலையம் சென்ற ராஜாகண்ணுவின் மனைவி இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரை அங்கிருந்து மிரட்டி போலீசார் அனுப்பிய நிலையில், மறுநாள் ராஜாகண்ணு தப்பித்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து பல கட்ட போராட்டங்கள் நடத்த நிலையில் ராஜாகண்ணுவை கண்டுபிடிக்க முடியாததால் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினர். சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில், 3 ஆண்டுகள் கழித்து 1996-ம் ஆண்டு இடைக்கால தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 2 லட்சத்து 65 ஆயிரம் உதவித் தொகையும், 3 சென்ட் பட்டா நிலமும் வழங்க உத்தரவிடப்பட்டு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.

    ஜெயங்கொண்டம் அடுத்த மீன்சுருட்டியில் ராஜாகண்ணுவின் உடல் வீசப்பட்டதாக சிபிசிஐடி போலீசார் அறிக்கை தாக்கல் செய்தனர். இதனையடுத்து ராஜாகண்ணு காணாமல் போன வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. பொய் சாட்சி கூறிய மருத்துவர் ராமச்சந்திரன், ஓய்வு பெற்ற டிஎஸ்பி, ஆய்வாளர் மற்றும் காவல் நிலையத்தில் இருந்த உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 12 பேரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதையடுத்து 13 ஆண்டுகளுக்குப் பின்பு வழக்கில் தீர்ப்பு வெளியான நிலையில், 5 காவலர்களுக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மருத்துவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

    இந்நிலையில், பொது சட்டப்படி இறுதி இழப்பீடு வழங்கக்கோரி ராஜாகண்ணுவின் உறவினர் தொடர்ந்த வழக்கில், போலீசாரின் அத்துமீறலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி இழப்பீடு வழங்குவது குறித்த நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    1993-ல் கடலூர் கம்மாபுரத்தில் போலீஸ் துன்புறுத்தலில் உயிரிழந்த ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி நடத்திய சட்டப் போராட்டத்தை தழுவி 'ஜெய்பீம்' திரைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • ஆணையம் சேகரித்த ஆதாரங்களில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிட்டது.
    • வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ் பாபு ஆகியோர் தீர்ப்பு அளித்தனர்.

    சென்னை:

    2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க., ஆட்சி காலத்தில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது.

    இந்த புதிய தலைமைச் செயலகத்தை கட்டியதில் நடந்த முறைகேடு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி ஆர்.ரகுபதி ஆணையத்தை கலைத்த சென்னை ஐகோர்ட்டு, ஆணையம் சேகரித்த ஆதாரங்களில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிட்டது.

    அதன் அடிப்படையில் அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் தாக்கல் செய்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு அந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், இந்த மேல்முறையீட்டு வழக்கை திரும்ப பெறுவதாக அரசு தரப்பில் முறையிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., ஜெயவர்தன் மனுத்தாக்கல் செய்தார்.

    அதில், இந்த வழக்கில் தன்னை ஒரு மனுதாரராக சேர்த்து விசாரிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ் பாபு ஆகியோர் இன்று காலையில் தீர்ப்பு அளித்தனர்.

    அதில், இந்த மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்து நடத்தும் படி அரசுக்கு இந்த ஐகோர்ட்டு நிர்பந்தம் செய்ய முடியாது. எனவே, மேல்முறையீட்டு வழக்கை திரும்ப பெற அரசுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதேநேரம், வழக்கை திரும்ப பெற அனுமதிக்கக் கூடாது என்று ஜெயவர்தன் மனு மீது உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது. தள்ளுபடி செய்கிறோம் என்று கூறியுள்ளனர்.

    • தமிழகத்தை பொறுத்தவரை மத்திய அரசு பாரபட்சமாக செயல்பட்டு வருகிறது.
    • திருச்சியில் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

    திருச்சி:

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறது. அத்தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளராக துரை வைகோ களமிறங்கியுள்ளார். இதையடுத்து ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னத்தை பெற அக்கட்சி முயற்சித்தது. ஆனால் தலைமை தேர்தல் ஆணையம் ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்கவில்லை. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், பாராளுமன்ற தேர்தலில் ம.தி.மு.க.விற்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது. ம.தி.மு.க. 2010-ம் ஆண்டு அங்கீகாரத்தை இழந்து விட்டது. வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் இந்த வழக்கில் தீர்வு காண இயலாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், திருச்சியில் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * பம்பரம் சின்னத்தை தர முடியாது என தேர்தல் ஆணையம் கூறிவிட்டது.

    * மேல்முறையீட்டுக்கு செல்லாம்... ஆனால் பிரசாரம் காரணமாக செல்லவில்லை.

    * இருக்கும் சின்னங்களில் ஒன்றை தேர்வு செய்வோம்.

    * சின்னம் கிடைக்காததால் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை.

    * வேட்பாளர் யார், அவரின் சின்னம் என்ன என்பதை தெரிந்து கொண்டு வாக்களியுங்கள்.

    * தேர்ந்தெடுக்கும் புதிய சின்னத்தை மக்களிடம் விரைவில் கொண்டு செல்வோம்.

    * தமிழகத்தை பொறுத்தவரை மத்திய அரசு பாரபட்சமாக செயல்பட்டு வருகிறது.

    * திருச்சியில் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

    * சின்னம் குறித்து நாளை தெரியப்படுத்துவோம்.

    இவ்வாறு துரை வைகோ கூறினார்.

    • அதிமுக கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதால் பிரச்சனை ஏற்படுவதாக பொதுமக்களோ அல்லது கட்சியின் தொண்டர்களோ புகார் அளிக்கவில்லை.
    • மேல்முறையீட்டு மனு மீது எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவு.

    சென்னை :

    அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு தடை விதிக்க கோரி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்திற்கு நிரந்தர தடை விதித்து கடந்த 18 ஆம் தேதி உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மேல் முறையீட்டு மனுவில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா? இல்லையா? இதுகுறித்து நிலுவையில் உள்ள பிரதான வழக்கில் தான் முடிவு செய்ய முடியும் என உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 42 ஆண்டுகளாக அதிமுகவின் அடிப்படை தொண்டர், முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த தனக்கு, கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதித்தது ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதிமுக கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதால் பிரச்சனை ஏற்படுவதாக பொதுமக்களோ அல்லது கட்சியின் தொண்டர்களோ புகார் அளிக்கவில்லை. அப்படி இருக்கையில் எடப்பாடி பழனிசாமி தனிப்பட்ட முறையில் மனுத்தாக்கல் செய்ததாக தனது மேல் முறையீட்டு மனுவில் ஓபிஎஸ் கூறியிருந்தார். மேலும், அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் முழுமையாக அங்கீகரிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டுமெனவும் மேல்முறையீட்டு மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் ஆர். சுப்ரமணியன் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வில் வரும் திங்கட்கிழமை (மார்ச்-25) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது.

    அதன்படி, இன்று ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த தனி நீதிபதி விதித்த தடையை விலக்க இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் தேர்தல் முடிந்த பிறகு வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் என்றும் மேல்முறையீட்டு மனு மீது எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணை ஜூன் மாதம் 10-ந்தேதிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    • பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஓ.பி.எஸ். பாரதிய ஜனதா கூட்டணியில் இருக்கிறாரா? இல்லையா என்பது இன்னும் முடிவாகவில்லை.
    • நிலுவையில் உள்ள வழக்கை காரணம் காட்டி நான்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என ஓ.பி.எஸ். கூறி வருகிறார்.

    சென்னை:

    கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழுவில் முன்னாள் முதலமைச்சரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி ஒருமன தாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

    இதனை எதிர்த்து ஓ.பி.எஸ். ஏறாத நீதிமன்றம் இல்லை. ஆனால் எங்கும் ஓ.பி.எஸ்.க்கு தீர்ப்பு சாதகமாக வரவில்லை. இதனால் அரசியல் ரீதியாக அ.தி.மு.க.வுக்கு பல்வேறு வகையில் அழுத்தம் கொடுத்து வந்தார். இன்னும் நான் தான் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்றும் கூறி வருகிறார்.

    அ.தி.மு.க.வின் சின்னத்தை பயன்படுத்துவது அ.தி.மு.க. கரை வேட்டியை உடுத்துவது, காரில் அ.தி.மு.க. கொடியை பறக்க விடுவது போன்று அவரது ஆதரவாளர்கள் இருந்தனர்.

    இதுபோன்ற செயல்கள் அ.தி.மு.க.வினரை ஆத்திரமடைய செய்ததால் அ.தி. மு.க. தொடர்பான எதையும் ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த கூடாது என்று ஐகோர்ட்டில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அ.தி.மு.க. கட்சி பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடைக்கால தடை விதித்தனர்.


    இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்திருந்தனர். இதை அடுத்து பிரதான மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு வந்த போது இருதரப்பு வாதங்களுக்கு பின் வழக்கின் தீர்ப்பு நாளை அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஓ.பி.எஸ். பாரதிய ஜனதா கூட்டணியில் இருக்கிறாரா? இல்லையா என்பது இன்னும் முடிவாகவில்லை.

    ஆனால் அதற்கு முன்பே செல்லும் இடமெல்லாம் பாராளுமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என்றும் கூறி வந்தார்.

    இந்த நிலையில்தான் இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில் தங்கள் தரப்புக்கு இரட்டை இலை சின்னம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

    அதுமட்டுமின்றி பாராளுமன்ற தேர்தலில் படிவம் 'ஏ' மற்றும் 'பி' படிவத்தில் கையெழுத்திட இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

    அப்படி கொடுக்க முடியாத பட்சத்தில் இரு தரப்புக்கும் வேறு சின்னத்தை ஒதுக்க வேண்டும்.

    அ.தி.மு.க. (ஓ.பி.எஸ்.) தொண்டர் மீட்பு குழுவுக்கு பொதுசின்னம் தர வேண்டும் என்று அதில் வலியுறுத்தி உள்ளார்.

    இதனால் இரட்டை இலை சின்னம் முடங்கும் அபாயம் இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இதுவரை பா.ஜனதா கூட்டணியில் எத்தனை தொகுதியில் போட்டியிடுவோம் என்று ஓ.பி.எஸ். இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

    இந்த சூழலில் தேர்தல் ஆணையத்தில் உள்ள ஓ.பி.எஸ். கடிதத்தின் மீது என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்று அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

    ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் தற்காலிகமாக ஒதுக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு அதை பதிவு செய்து கொண்டது.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்பதை அங்கீகரித்து அவருக்கு மீட்டிங் அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. எனவே இப்போது வரை அ.தி.மு.க. கொடி, சின்னம் என அனைத்தும் எடப்பாடி பழனிசாமி வசம்தான் உள்ளன.

    நிலுவையில் உள்ள வழக்கை காரணம் காட்டி நான்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என ஓ.பி.எஸ். கூறி வருகிறார். இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டில் நாளை இது தொடர்பான வழக்கில் தீர்ப்பு வர உள்ளது.

    இதில் ஓ.பி.எஸ்.க்கு எதிராக தீர்ப்பு அமையும் பட்சத்தில் அதை காரணம் காட்டி தேர்தல் ஆணையம் செயல்படும். எனவே இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. ஓ.பி.எஸ். மனு நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது என்றனர்.

    பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களிடம் விருப்ப மனு வாங்கி உள்ள நிலையில் பா.ஜனதா கூட்டணியில் இருக்கிறாரா? அல்லது ஆதரவு தெரிவிப்பாரா? என்பது நாளை தெரிந்துவிடும். அதற்கேற்பதான் தேர்தல் கமிஷனில் முடிவும் அமையும்.

    • சட்டசபை செயலகமும் பொன்முடி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த திருக்கோவிலூர் தொகுதியை காலியிடமாக அரசிதழில் வெளியிட்டது.
    • ராகுல் காந்தி விவகாரத்தில் என்ன மாதிரியான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதோ அதே போல் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

    சென்னை:

    உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி கடந்த 2006-2011-ம் ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்டிருந்த வழக்கில் விழுப்புரம் சிறப்பு கோர்ட்டு பொன்முடியையும், அவரது மனைவி விசாலாட்சியையும் விடுதலை செய்து 2016-ம் ஆண்டு தீர்ப்பு கூறி இருந்தது.

    இந்த தீர்ப்பை சென்னை ஐகோர்ட்டு மறுபடியும் விசாரித்து சிறப்பு கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்து அதன் பிறகு பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது.

    இதனால் பொன்முடி அமைச்சர் பதவியையும் எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார்.

    சட்டசபை செயலகமும் பொன்முடி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த திருக்கோவிலூர் தொகுதியை காலியிடமாக அரசிதழில் வெளியிட்டது.


    இந்த நிலையில் பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததில், குற்றவாளி என தீர்மானித்த ஐகோர்ட்டின் உத்தரவை நிறுத்தி வைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர். அவரது தண்டனைக்கு தடையும் விதிக்கப்பட்டது.


    இந்த தீர்ப்பு வந்த நாளில் இருந்து பொன்முடி மறுபடியும் எம்.எல்.ஏ.ஆகி விட்டதாகவும், ராகுல்காந்தி விஷயத்தில் கடைபிடிக்கப்பட்டது பொன்முடிக்கும் பொருந்தும் என்று தி.மு.க. வழக்கறிஞர் வில்சன் எம்.பி. கருத்து தெரிவித்தார்.

    சபாநாயகர் அப்பாவு கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் நகல் கிடைத்தவுடன் ராகுல் காந்தி விவகாரத்தில் என்ன மாதிரியான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதோ அதே போல் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்த நிலையில் தீர்ப்பின் நகல் வெளியானது. இதனால் பொன்முடி மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் ஆகிறார்.

    மேலும், தீர்ப்பு நகல் சட்டப்பேரவை செயலாளரிடம் கிடைத்தவுடன் திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பு திரும்ப பெறப்படும்.

    • மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எம்.எஸ் ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
    • செந்தில் பாலாஜி மனுவுக்கு ஏப்ரல் 25-ந்தேதிக்குள் பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்குகள் சென்னை எம்.பி.- எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணையில் உள்ளன. இந்த வழக்கில், சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்தது. இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது.

    இந்த நிலையில், தனக்கு எதிராக சிறப்பு கோர்ட்டில் நிலுவையில் உள்ள மோசடி வழக்கு விசாரணை முடியும் வரை, சட்டவிரோத பணபரிமாற்ற தடைச்சட்ட வழக்கை விசாரிக்கக்கூடாது. அந்த வழக்கை தள்ளிவைக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.அல்லி தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜி மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எம்.எஸ் ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது அமலாக்கத்துறை வழக்கு ஆரம்ப நிலையில் உள்ளதால் எந்த நிவாரணமும் வழங்க முடியாது எனக்கூறி அமலாக்கத்துறை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்தனர். செந்தில் பாலாஜி மனுவுக்கு ஏப்ரல் 25-ந்தேதிக்குள் பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.

    • இளைஞர் ஒருவர், தனது மொபைலில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு
    • ஒரு தனி நீதிபதி எவ்வாறு இத்தகைய கருத்தைக் கூற முடியும். இது கொடுமையானது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்

    குழந்தைகள் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பதிவிறக்கம் செய்து பார்ப்பது தவறில்லை, எனக் கூறிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    சென்னையை அடுத்த அம்பத்தூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது மொபைலில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக அம்பத்தூர் காவல்நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அந்த இளைஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்ப்பது என்பது சட்டப்படி குற்றமல்ல. அந்த படங்களை மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது தான் குற்றம் எனக்கூறி, இளைஞர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவை எதிர்த்து, குழந்தைகள் உரிமைக்கான அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

    இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, ‛‛குழந்தைகள் ஆபாச படங்களை தனிப்பட்ட முறையில் பதிவிறக்கம் செய்து பார்ப்பது தவறில்லை, என்றுக் கூறிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிக்கு கண்டனம் தெரிவித்தார்.

    மேலும், ஒரு தனி நீதிபதி எவ்வாறு இத்தகைய கருத்தைக் கூற முடியும். இது கொடுமையானது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட மனுதாரருக்கும், பதில் மனுதாரருக்கும் பதில் அளிக்க அவகாசம் வழங்கிய நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணை 4 வார காலத்திற்கு பின்னர் மீண்டும் விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்துள்ளது.

    • ஐகோர்ட் உத்தரவை அமல்படுத்தாததை அடுத்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
    • 2010-ம் ஆண்டு ஆகஸ்டு 30-ந்தேதி முதல் அம்பத்தூர் தாசில்தாராக பதவி வகித்த 16 பேருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

    சென்னை:

    சென்னை அம்பத்தூரில் உள்ள மோலி அலெக்சாண்டர் என்பவரது நிலத்துக்கு பட்டா வழங்கும் படி, அம்பத்தூர் வட்டாட்சியருக்கு கடந்த 2010-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை அமல்படுத்தாததை அடுத்து கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு மேலாக ஐகோர்ட் உத்தரவு அதிகாரிகளால் வேண்டுமென்று அவமதிக்கப்பட்டுள்ளதாக கூறி, 2010-ம் ஆண்டு ஆகஸ்டு 30-ந்தேதி முதல் அம்பத்தூர் தாசில்தாராக பதவி வகித்த 16 பேருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

    இதனை எதிர்த்து மேல்முறையீடு மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் தாசில்தார்களுக்கு விதிக்கப்பட்ட ஒரு மாத சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

    • வக்கீல் அஜ்மல் கான் ஆஜராகி பாராளுமன்ற தேர்தல் தேதி எப்பொழுது வேண்டுமானாலும் அறிவிக்கலாம் என்பதால் வைகோவின் விண்ணப்பத்தை விரைந்து பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
    • தேர்தல் ஆணையம் தரப்பில் வக்கீல் நிரஞ்சன் ராஜகோபாலன் ஆஜராகி, மனு தொடர்பாக பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என கோரினார்.

    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், ம.தி.மு.க. சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்துள்ள மனுவில், "1996-ம் ஆண்டு முதல் சட்டமன்றம், மக்களவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் ம.தி.மு.க. போட்டியிட்டு வருகிறது.

    இந்த தேர்தல்களில் எங்கள் கட்சிக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டது.

    கடந்த 2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 5.99 சதவீத வாக்குகள் பெற்ற நிலையில், 5.98 சதவீத வாக்குகள் பெற்று உள்ளதாக கூறி, எங்கள் கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.

    அதன்பின் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பி உள்ளேன்.

    பம்பரம் சின்னம் பொது சின்னம் இல்லை. வேறு எந்த கட்சியும் அந்த சின்னத்தை கேட்கவில்லை. எங்கள் மனுவை பரிசீலித்து, பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் ஜி.அருள்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வைகோ தரப்பில் மூத்த வக்கீல் அஜ்மல் கான் ஆஜராகி பாராளுமன்ற தேர்தல் தேதி எப்பொழுது வேண்டுமானாலும் அறிவிக்கலாம் என்பதால் வைகோவின் விண்ணப்பத்தை விரைந்து பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

    தேர்தல் ஆணையம் தரப்பில் வக்கீல் நிரஞ்சன் ராஜகோபாலன் ஆஜராகி, மனு தொடர்பாக பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என கோரினார்.

    இதையடுத்து, ம.தி.மு.க. மனுவுக்கு பதில் அளிக்கும் படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், பதிவு செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத கட்சி வேட்பாளர்களுக்கு பொதுச்சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பான பிரிவின் கீழ் விண்ணப்பிக்க மதிமுகவுக்கு அனுமதி அளித்தனர்.

    மேலும், அந்த விண்ணப்பத்தை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை மார்ச் 7-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

    • ஏ.வி.ராஜூவிடம் இருந்து ரூ.1 கோடியே 10 லட்சத்தை மான நஷ்ட ஈடாக கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வெங்கடாசலம் வழக்கு தொடர்ந்தார்.
    • வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    சென்னை:

    அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாசலத்தையும், நடிகை திரிஷாவையும் தொடர்புபடுத்தி அ.தி.மு.க.வில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட சேலம் மாவட்ட நிர்வாகி ஏ.வி.ராஜூ சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இதையடுத்து, ஏ.வி.ராஜூவிடம் இருந்து ரூ.1 கோடியே 10 லட்சத்தை மான நஷ்ட ஈடாக கேட்டும், தன்னைப் பற்றி மேலும் அவதூறாக பேச அவருக்கு தடை விதிக்கவேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் வெங்கடாசலம் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கிற்கு பதில் அளிக்கும்படி ஏ.வி.ராஜூவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும், வெங்கடாசலம் குறித்து அவதூறாக பேசவும் அவருக்கு இடைக்கால தடை விதித்தார்.

    ×