என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madras HC"

    • டியூட் பட விவகாரத்தில் இளையராஜாவுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டது
    • டைட்டில் கார்டில் இளையராஜாவுக்கு நன்றி தெரிவிக்கப்படும்.

    நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்த 'டியூட்' திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்த 'கருத்த மச்சான்', '100 வருஷம்' ஆகிய பாடல்கள் அனுமதியில்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் இளையராஜா வழக்கு தொடர்ந்து இருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில், இந்த பாடல்கள் மீதான உரிமையை எக்கோ நிறுவனத்திடம் இருந்து சோனி நிறுவனம் பெற்றுள்ளது. சோனி நிறுவனத்திடம் இருந்து தாங்கள் அனுமதி பெற்றோம் என்று கூறப்பட்டது.

    அதற்கு இளையராஜா தரப்பு, ''படம் வெளியானதும் தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது" என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து, நீதிபதிகள், இளையராஜா பாடல்களின் புனிதத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 'கருத்த மச்சான்' பாடலை நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணையில் டியூட் பட விவகாரத்தில் இளையராஜாவுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டது என்றும் டைட்டில் கார்டில் நன்றி தெரிவிக்கப்படும் என மைத்திரி மூவி மேக்கர் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் பதில் அளித்தது.

    இரு தரப்பினரும் சமரசத்திற்கு ஒப்புக்கொண்டதால், வழக்கை முடித்து வைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

    • 30 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பாடல்கள் தற்போது ‘டிரெண்ட்' ஆகியுள்ளது.
    • முன்கூட்டியே வழக்கு தொடராமல், படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியான பின்னர் தொடர்வது ஏன்?'' என்று கேள்வி எழுப்பினார்.

    நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்த 'டியூட்' திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்த 'கருத்த மச்சான்', '100 வருஷம்' ஆகிய பாடல்கள் அனுமதியில்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் இளையராஜா வழக்கு தொடர்ந்து இருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில், இந்த பாடல்கள் மீதான உரிமையை எக்கோ நிறுவனத்திடம் இருந்து சோனி நிறுவனம் பெற்றுள்ளது. சோனி நிறுவனத்திடம் இருந்து தாங்கள் அனுமதி பெற்றோம் என்று கூறப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளையராஜா தரப்பு வக்கீல், ''இந்த விவகாரத்தில் எக்கோ நிறுவனத்துக்கு எதிராக இந்த ஐகோர்ட் தடை விதித்துள்ளது'' என்று கூறினார். உடனே நீதிபதி, ''30 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பாடல்கள் தற்போது 'டிரெண்ட்' ஆகியுள்ளது. இதனால் இளையராஜாவுக்கு என்ன பாதிப்பு? அதுமட்டுமல்ல முன்கூட்டியே வழக்கு தொடராமல், படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியான பின்னர் தொடர்வது ஏன்?'' என்று கேள்வி எழுப்பினார்.

    அதற்கு இளையராஜா தரப்பு, ''படம் வெளியானதும் தயாரிப்பு நிறுவனத்துக்கு இளையராஜா தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், அதுபோல யாரும் இல்லை என்று நோட்டீஸ் கடிதம் திரும்ப வந்துவிட்டது'' என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து இவ்வழக்கில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இளையராஜா பாடல்களின் புனிதத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் 'கருத்த மச்சான்' பாடலை நீக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

    இதனிடையே, 'கருத்த மச்சான்' பாடலை 'டியூட்' படத்தில் இருந்து நீக்க 7 நாள் அவகாசம் தேவை என்ற தயாரிப்பு நிறுவனத்தின் கோரிக்கையே நீதிபதி நிராகரித்தார்.

    இசையமைப்பாளர் இளையராஜா மனுவுக்கு பதிலளிக்க தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஜனவரி 7-ந்தேதிக்கு ஒத்திவைத்தார். 

    • வழக்கு விசாரணையின் போது, புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    • சென்னை ஐகோர்ட்டில் ராஜசேகரன் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.

    சென்னை:

    2011-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை நடநத அ.தி.மு.க. ஆட்சி காலத்தில், தமிழகத்தில் திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ராமநாதபுரம், திண்டுக்கல், நாகப்பட்டினம், விருதுநகர், திருப்பூர், கிருஷ்ணகிரி, நீலகிரி ஆகிய 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி கட்டிடங்கள் கட்டப்பட்டன.

    முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் கட்டப்பட்ட இந்த மருத்துவ கல்லூரிகள், தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டப்படவில்லை. மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என்று திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை சேர்ந்த என்.ராஜசேகரன் என்பவர் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்திருந்தார்.

    2021-ம் ஆண்டு ஜூலை மாதம் அளிக்கப்பட்ட இந்த புகாரின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த ஐகோர்ட், வழக்கை முடித்து வைத்திருந்தது.

    இந்த சூழ்நிலையில், புகார் அளித்து 5 ஆண்டுகள் கடந்தும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால் தனது புகார் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் ராஜசேகரன் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், தனது புகார் குறித்து விசாரணையை தொடங்கி உள்ளதாக கூறிய லஞ்ச ஒழிப்புத்துறை, எந்த முடிவையும் எட்டவில்லை என்பதால், தமிழக காவல்துறையினர் மீது நம்பிக்கை இழந்து விட்டேன்.

    மேலும், மத்திய அரசின் 60 சதவீத நிதி பங்களிப்புடன் 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளதால், இந்த விவகாரம் குறித்து சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும் என்றும் சி.பி.ஐ. உள்ளிட்ட மத்திய புலன் விசாரணை அமைப்புகள் விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த அனுமதியை திரும்பப் பெற்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இது நீதி பரிபாலனத்தில் குறுக்கிடுவது போல் உள்ளது.

    சி.பி.ஐ. உள்ளிட்ட அமைப்புகள் விசாரணைக்கான அனுமதியை திரும்ப பெற்ற அரசாணையை ரத்து செய்து, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நான் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கும்படி சி.பி.ஐ.க்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

    இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • அவசர கதியில், எந்த ஒரு அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, கரூர் சம்பவம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் வன்முறை தொடர்பாக சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார். சிறிது நேரத்தில் அந்த பதிவை அகற்றிவிட்டார். ஆனால், இந்த பதிவின் அடிப்படையில் அவர் மீது சென்னை சைபர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ஆதவ் அர்ஜூனா மனு தாக்கல் செய்துள்ளார். அதில், எக்ஸ் தளத்தில் போடப்பட்ட பதிவை உடனடியாக நீக்கி விட்டேன். அந்த பதிவு போட்டதில் எனக்கு எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை. ஆனால், எனக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகாரை முழுமையாக கவனிக்காமல், அவசர கதியில், எந்த ஒரு அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கை ரத்து செய்யவேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, அந்த வழக்கை ரத்து செய்யவேண்டும்'' என்று கூறியுள்ளார்.

    இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

    • சமூக வலைத்தளங்களில் யாரையும் விட்டுவைக்காமல் விமர்சனம் செய்கின்றனர்.
    • சமூக வலைதள விமர்சனங்களை புறக்கணிக்கவேண்டும்.

    தனக்கு எதிராக அவதூறு கருத்துக்கள் தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரியும், சமூக வலைதளங்களில் உள்ள வீடியோக்களை நீக்கக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மனுத்தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி என்.செந்தில்குமார் முன் நடைபெற்றது.

    அப்போது மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் கிரிசில்டா மீது தான் வைத்திருந்த நம்பிக்கையை தவறாக பயன்படுத்தி தன்னை ஏமாற்றிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஜாய் கிரிசில்டாவின் பேட்டி காரணமாக தனது 2 குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால் தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிக்க அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

    இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதி செந்தில்குமார், இருவருக்கும் இடையிலான உறவு குறித்து எந்த மறுப்பும் தெரிவிக்காத நிலையில், இடைக்கால தடை உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது. சமூக வலைத்தளங்களில் யாரையும் விட்டுவைக்காமல் விமர்சனம் செய்கின்றனர். உத்தரவுகளை பிறப்பித்தற்காக நீதிபதிகளும் விமர்சிக்கப்படுகின்றனர். சமூக வலைதள விமர்சனங்களை புறக்கணிக்கவேண்டும் எனக் கூறி, மனுவுக்கு அக்டோபர் 22-ந்தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று ஜாய் கிரிசில்டாவுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.

    முன்னதாக, கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கில் த.வெ.க. தலைவர் விஜயை நீதிமன்றம் விமர்சித்தது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் விமர்சனத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. 

    • கூட்டு முயற்சியில் அனைவரது யோசனைகள், ஆலோசனைகளையும் வரவேற்கிறேன்.
    • ஒவ்வொரு உயிரும் விலை மதிப்பில்லாதது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கரூர் துயரம் குறித்து மாண்பமை உயர்நீதிமன்றம் கூறியுள்ள கருத்துகள், வழிகாட்டுதல்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு மிகத் தீவிரமாக கவனத்தில் கொண்டு செயலாற்றி வருகிறது.

    கரூரில் நடந்த துயரத்தால் நாம் அனைவருமே நெஞ்சம் கலங்கிப் போயிருக்கிறோம். தம் அன்புக்குரியோரை இழந்து தவிக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் கண்ணீரையும் கண்டு தவிக்கிறேன்.

    மாண்பமை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) தனது விசாரணையைத் தொடங்கும். இதன் மூலம், முழு உண்மையையும் வெளிக்கொண்டு வருவோம் என்று மாநிலத்தின் முதலமைச்சராக மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். அனைத்து மட்டங்களிலும் பொறுப்பு உறுதிசெய்யப்படும்.

    பலவற்றிலும் இந்தியாவுக்கே முன்னோடியான தமிழ்நாடு, கூட்ட நெரிசல் விபத்துகளைத் தவிர்ப்பதிலும் நாட்டுக்கு வழிகாட்டும். மாநிலம் முழுவதும் துறைசார் வல்லுநர்கள், அரசியல் கட்சியினர், செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என அனைவரோடும் கலந்தாலோசித்து ஒரு முழுமையான 'நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) வடிவமைப்போம். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவும் பின்பற்றத்தக்க மாடலாக இது அமையும்.

    துடைக்க முடியாத இந்தத் துயரச் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் நோக்கோடு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் ஒரு நீண்டகாலத் தீர்வை நோக்கிப் பயணிப்போம். இந்தக் கூட்டு முயற்சியில் அனைவரது யோசனைகள், ஆலோசனைகளையும் வரவேற்கிறேன். ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பில்லாதது. நம் மக்களின் இன்னுயிரைக் காக்கவும், இனி இப்படி ஒரு பெருந்துயரம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் எங்குமே நிகழாமல் தடுக்கவும் ஒன்றிணைவோம்! என்று கூறியுள்ளார். 



    • சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
    • இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு குழந்தைகளை அழைத்து வருவதை போலீசார் தடுக்க வேண்டும்.

    சென்னை:

    கரூர் துயரம் போல் மீண்டும் ஒரு சம்பவம் நடைபெறாமல் தடுக்கும் வகையில், அரசியல் கட்சிகளின் 'ரோடு ஷோ' போன்ற நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளின் 'ரோடு ஷோ' நிகழ்ச்சிக்கும் வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி, சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கரூர் சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், த.வெ.க. தலைவர் விஜய், குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கப்படவில்லை. அவர் 7 மணி நேரம் தாமதமாக வந்ததால்தான் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக நியாயமான விசாரணை நடத்தப்படவேண்டும்.

    இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் நடக்காதபடி, அனைத்து அரசியல் கட்சிகளின் 'ரோடு ஷோ' நிகழ்ச்சிகளுக்கும் வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்க வேண்டும். நெறிமுறைகளை மீறும் பட்சத்தில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட கட்சி தலைவர், ரோடு ஷோவில் பேசுவோர் மீதும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

    இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு குழந்தைகளை அழைத்து வருவதை போலீசார் தடுக்க வேண்டும். பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்கும் வரை எந்த கட்சிக்கும் 'ரோடு ஷோ' நடத்த அனுமதி வழங்கக்கூடாது என காவல் துறையினருக்கு உத்தரவிட வேண்டும். கரூர் துயர சம்பவத்துக்கு பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இந்த மனு நீதிபதி என்.செந்தில் குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது.

    • பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்தாண்டு ஜூலை 5-ம் தேதி கொல்லப்பட்டார்.
    • இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்தாண்டு ஜூலை 5-ம் தேதி தனது வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த வழக்கை செம்பியம் காவல் துறையினர் நியாயமாக விசாரிக்கவில்லை எனக்கூறி, விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றக் கோரி பகுஜன் சமாஜ் கட்சி மாநில பொது செயலாளரும், ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரரும் கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், காவல்துறை நியாயமான முறையில் விசாரணை மேற்கொண்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியே காவல்துறையின் விசாரணை திருப்தி அளிப்பதாக தெரிவித்துள்ளார். இது அரசியல் கொலை இல்லை. இந்த வழக்கில் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால், இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கைது செய்யப்பட்டவர்களிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே காவல்துறை அவசர கதியில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியிடம் மேற்கொண்ட சாட்சி விசாரணையின் அடிப்படையில், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் விசாரணை மேற்கொள்ள காவல்துறை தவறிவிட்டது என வாதிட்டார்.

    அதன்பின், கொலையை நேரில் பார்த்த சாட்சியான ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் வீரமணி முன்னிலையில் கைது செய்யப்பட்டவர்களின் அடையாள அணிவகுப்பு ஏன் நடத்தவில்லை என காவல்துறை தரப்புக்கு கடும் அதிருப்தியை தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார்.

    இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றம் செய்து ஐகோர்ட்டு நீதிபதி பரபரப்பு உத்தரவை பிறப்பித்தார்.

    இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தநிலையில், ஐகோர்ட் நீதிபதி இதற்கான உத்தரவை பிறப்பித்தார். அதில், "ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுகின்றேன். இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் காவல்துறை சி.பி.ஐ. யிடம் உடனே ஒப்படைக்க வேண்டும். அது கிடைக்கப்பெற்று நாளில் இருந்து 6 மாதத்திற்குள் வழக்கை விசாரித்து குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

    • பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கட்சி விதியை மாற்ற முடியாது என வாதிடப்பட்டது.
    • சூரியமூர்த்தி தரப்பில், கட்சி விதிப்படி சூரியமூர்த்தி, கட்சியின் உறுப்பினராக தொடர்கிறார்.

    சென்னை:

    கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கை நிராகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, கடந்த ஜூலை மாதம் சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த வழக்கை நீதிபதி பி.பி.பாலாஜி விசாரித்தார். விசாரணையின் போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில், 2018-ம் ஆண்டிலிருந்து சூர்ய மூர்த்தி கட்சியின் உறுப்பினராக இல்லை. கட்சியில் உறுப்பினராக இல்லாத ஒருவர் கட்சி விவகாரம் குறித்து கேள்வி எழுப்ப முடியாது. கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரை எதிர்த்து சூர்ய மூர்த்தி போட்டியிட்டதாக வாதிடப்பட்டது.

    சூரியமூர்த்தி தரப்பில், கட்சி விதிப்படி சூரியமூர்த்தி, கட்சியின் உறுப்பினராக தொடர்கிறார். பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆரின் விருப்பத்தை மீறி கட்சி விதியில் மாற்றம் செய்யப்பட்டது. பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கட்சி விதியை மாற்ற முடியாது என வாதிடப்பட்டது.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார்.

    இன்று, இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி பாலாஜி, எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை ஏற்று, சூரிய மூர்த்தியின் வழக்கை நிராகரிக்க மறுத்த உரிமையியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

    அதேபோல, சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி தாக்கல் செய்திருந்த வழக்கையும் நிராகரித்து உத்தரவிட்டுள்ளார்.

    • மனுதாரரின் மகன் நீட் தேர்வுக்காக படித்துக்கொண்டிருக்கிறார்.
    • மனைவிக்கு அதிக அளவில் அசையா சொத்து, வருமானம் உள்ளது.

    சென்னையை சேர்ந்த டாக்டர் தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். இதனிடையே இத்தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த சென்னை குடும்ப நல நீதிமன்றம், டாக்டர், தன் மனைவிக்கு மாதம் ரூ.30 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்குமாறு உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் டாக்டர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.பி.பாலாஜி, மனுதாரர் தன் மனைவிக்கு ரூ.30 ஆயிரம் ஜீவனாம்சம் தர வேண்டும் என குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மனுதாரரின் மகன் நீட் தேர்வுக்காக படித்துக்கொண்டிருக்கிறார்.

    அவரது படிப்புக்கான செலவாக 2.77 லட்சம் ரூபாயை தர மனுதாரர் சம்மதித்துள்ளார். அதே நேரம் அவரது மனைவிக்கு அதிக அளவில் அசையா சொத்து, வருமானம் உள்ளது. அவர் ஸ்கேன் சென்டர் நடத்தி வருகிறார் என மனுதாரர் தரப்பில், அது தொடர்பான சான்றுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. எனவே, மனுதாரர், தன் மனைவிக்கு ஜீவனாம்சம் தர தேவையில்லை என உத்தரவிடப்பட்டுள்ளது. 

    • உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ள சூரியமூர்த்தி, அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினரே இல்லை.
    • உறுப்பினராக இல்லாத சூரிய மூர்த்தி, கட்சி செயல்பாடு குறித்து கேள்வி எழுப்ப முடியாது.

    சென்னை:

    கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யபட்டார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்தது உள்ளிட்ட பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து, அ.தி.மு.க. உறுப்பினர் எனக் கூறி, திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி, உரிமையியல் வழக்கை சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவில், பொதுச்செயலாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் எடப்பாடி பழனிசாமி அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த வழக்கை நிராகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து கடந்த ஜூலை மாதம் சென்னை சிட்டி சிவில் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

    இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்துள்ளார்.

    இந்த மனு நீதிபதி பி.பி.பாலாஜி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது எடப்பாடி பழனிசாமி சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் விஜய் நாராயண் வக்கீல் நர்மதா சம்பத் உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ள சூரியமூர்த்தி, அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினரே இல்லை. உறுப்பினராக இல்லாத சூரிய மூர்த்தி, கட்சி செயல்பாடு குறித்து கேள்வி எழுப்ப முடியாது. எனவே, கீழ் கோர்ட்டு உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

    இதனையடுத்து, கீழ் கோர்ட்டு உத்தரவுக்கும், அங்கு நடைபெறும் வழக்கின் விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்த நீதிபதி மனு குறித்து சூர்ய மூர்த்தி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 3-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.

    • 5 பேர் கொண்ட வக்கீல்கள் குழு இந்த விவகாரத்தில் உண்மை தன்மை கண்டறிவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
    • பாதிக்கப்பட்ட கவின் இல்லத்திற்கு சென்ற அந்த குழுவினர், சம்பவம் தொடர்பாக கவின் பெற்றோர் மற்றும் சகோதரரிடம் கேட்டறிந்தனர்.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த ஐ.டி. ஊழியரான கவின் (வயது 27) என்ற வாலிபர் கடந்த மாதம் 27-ந்தேதி பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் காதல் விவகாரத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் கே.டி.சி.நகர் பகுதியை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், அவரது மகன் சுர்ஜித் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி. விசாரித்து வருகிறது.

    இந்த கொலை வழக்கு தொடர்பாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளத்தில் பரவி வரும் சூழலில் சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்களான சுரேஷ், தமிழ்வாணன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட வக்கீல்கள் குழு இந்த விவகாரத்தில் உண்மை தன்மை கண்டறிவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

    அதன்படி நேற்று அந்த குழு நெல்லைக்கு வந்தது. தொடர்ந்து கவின் கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டதுடன் இந்த வழக்கை விசாரித்த நெல்லை மாநகர போலீசார், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தரப்பிற்கு உதவிய வழக்கறிஞர்கள் உள்ளிட்டோரிடம் நேரில் தகவல்களை திரட்டினர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட கவின் இல்லத்திற்கு சென்ற அந்த குழுவினர், சம்பவம் தொடர்பாக கவின் பெற்றோர் மற்றும் சகோதரரிடம் கேட்டறிந்தனர்.

    தொடர்ந்து இன்று 2-வது நாளாக நெல்லை மாவட்ட கலெக்டர், ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள், சி.பி.சி.ஐ.டி. போலீசார் உள்ளிட்டவர்களிடமும் தகவல் திரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்தவர்கள், சமூக அக்கறையுடன் செயல்பட்டவர்கள் போன்ற பலரிடமும் தகவல்களை திரட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், தொடர்ந்து சேகரிக்கப்படும் தகவல்கள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டு பொதுவெளியில் அறிக்கையாக சமர்ப்பிக்கப்படும் எனவும் அந்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    மேலும் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை அரசுக்கும் சமர்ப்பித்து ஆணவ படுகொலைக்கு எதிரான சட்டம் இயற்றுவதற்கு வலியுறுத்தப்படும் என அந்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    ×